காப்பு

divider
ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில் பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன் வீன்றிய கலியன் வந்த விசனத்தால் கயிலை யேகி சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுத லுற்றேன் சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே தவமே தவமே தவக்கொழுந்தே தாண்டவசங் காராதமியே எங்களுட பவமே பவமே பலநாளுஞ் செய்த பவம றுததுன் அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய் சிவசிவசிவசிவா அரகரா அரகரா அலையிலே துயில் ஆதிவராகவா ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை சிலையிலே பொன்மகர வயிற்றினுள் செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில் முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின் உற்றதெச்சண மீதில் இருந்துதான் உலகில் சோதனை பார்த்தவர் வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே திருமொழி சீதை யாட்குச் சிவதலம் புகழ எங்கும் ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி உகபர சோதனைகள் பார்த்துத் திருமுடி சூடித் தர்மச் சீமையில் செங்கோ லேந்தி ஒருமொழி யதற்குள் ளாண்ட உவமையை உரைக்க லுற்றார்.

அகிலம் ஒன்று

divider

நூல் சுருக்கம்

சிவமே சிவமே சிவமே சிவமணியே தவமே தவமே தவமே தவப்பொருளே சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில் பாரான தெச்சணமே பரம னுறுதலத்தில் போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய் தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும் செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும் முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப் பின்னா ளிரணியனைப் பிளந்துஇரு கூறாக்கி ஈரஞ்சு சென்னி இராட்சதரை யுஞ்செயித்து வீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த் தேதுவரா தேசாதி தேசர் சென்னிகவிழ்ந் தேபணியும் தீசாதி யான துரியோதனன் முதலாய் அவ்வுகத் திலுள்ள அவ்வோரை யும்வதைத்து எவ்வுகமும் காணா(து) ஏகக்குண் டமேகி பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில் வம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி அம்பாரி மக்களுக்(கு) ஆக இரக்கமதாய் அறுகரத் தோன்வாழும் ஆழிக் கரையாண்டி நறுகரத் தோனான நாராயண மூர்த்தி உருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத் திருவெடுத்த கோலம் சிவனா ரருள்புரிய ஈச னருள்புரிய இறையோ னருள்புரிய மாய னருள்புரிய மாதும் அருள்புரிய பூமாது நாமாது புவிமாது போர்மாது நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய சரசுபதி மாதே தண்டரள மாமணியே அரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே ஈரே ழுலகும் இரட்சித்த உத்தமியே பாரேழு மளந்த பரமே சொரித்தாயே பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச் சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில் பிறந்து அறமேல் பெரிய தவம்புரிந்து சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல் இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும் மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும் தர்ம வைத்தியமாய்த் தாரணியி லுள்ளோர்க்குக் கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும் ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும் மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக் கண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும் தொண்டராய்ச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறுகளும் பண்டார வேசம் பத்தினியாள் பெற்றமக்கள் கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும் கண்டுமா பாவி கலைத்து அடித்ததுவும் சாணா ரினத்தில் சாமிவந்தா ரென்றவரை வீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும் மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத் தனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும் அன்புபார்த் தெடுத்து ஆளடிமை கொண்டதுவும் வம்பை யழித்துயுகம், வைகுண்டந் தானாக்கி எல்லா இடும்பும் இறையு மிகத்தவிர்த்துச் சொல்லொன்றால் நாதன் சீமையர சாண்டதுவும் நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும் மேலெதிரி யில்லாமல் வினையற்று ஆண்டதுவும் இன்னாள் விவரமெல்லாம் எடுத்து வியாகரரும் முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக் காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு ஒய்யார மாக உள்வினைநோய் தீருமென்று அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே பேயை யெரித்துப் புதுமைமிகச் செய்ததுவும் ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுவும் சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும் நீண்டபுகழ் தர்மம் நிறுத்தியர சாண்டதுவும் பத்தும் பெரிய பாலருக்கா கவேண்டி சத்தழியும் பாவி தடியிரும்பி லுமிருந்து படுத்தின பாட்டையெல்லாம் பாலருக்கா கப்பொறுத்து உடுத்த துணிகளைந்து ஒருதுகிலைத் தான்வருத்தித் தேவ ஸ்திரீகளையும் சேர்த்தெடுத்துப் பாலருக்காய்ப் பாவக் கலியுகத்தில் பாராத்தியங் கள்பட்டு நாலு பிறவி நானிலத்தி லேபிறந்து பாலுகுடித் தாண்டி பருவதத்தின் மேல்தாண்டி நல்லோரை யெழுப்பி நாலுவரமுங் கொடுத்துப் பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து வானம் இடியால் மலைக ளிளகிடவும் கானமது நாடாய்க் கண்டதுவுஞ் சூரியனும் தெக்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும் ஒக்கவே நாதன் உரைக்கிறா ரன்போரே

அவையடக்கம்

அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள்முன்னே மெய்யா யெழுதி விதிப்பேனா னென்பதெல்லாம் ஆனை நடைகண்ட அன்றில் நடையதொக்கும் சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பத்தியென்ன குயில்கூவக் கண்டு கூகைக் குரலாமோ மயிலாடக் கண்டு வான்கோழி யாடினதென மடந்தை தேனீக்கள் வைத்த ரசமறிந்து கடந்தை தாடேற்றும் கதைபோலே யானடியேன் நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்தபிரான் மேலோன் திருக்கதையை எழுதுவே னென்றதொக்கும் எம்பிரா னான இறையோ னருள்புரிய தம்பிரான் சொல்லத் தமியே னெழுதுகிறேன் எழுதுவே னென்றதெல்லாம் ஈசனருள் செயலால் பழுதுமிக வாராமல் பரமே ஸ்வரிகாக்க

தெய்வம் பராவல்

ஈசன் மகனே இயல்வாய்வா இக்கதைக்குத் தோச மகலச் சூழாமல் வல்வினைகள் காலக் கிரகம் காமசஞ்சல மானதுவும் வாலைக் குருவே வாரா மலேகாரும் காரு மடியேன் கௌவை வினைதீர வாரு மடியேன் மனதுள் குடிகொள்ளவே தர்ம யுகமாக்கித் தாரணியை யாளுதற்குக் கர்மக் கலியில் கடவுளார் வந்தகதை சாகா திருக்கும் தர்மஅன் புள்ளோர்முன் வாகாகத் தர்ம அம்மானை தான்வகுத்தார்.

அடியெடுத்தருளல்

வகுத்த பிரம்மனுக்கும் மாதா பிதாவதுக்கும் தொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே தோத்திர மென்று சுவாமி தனைத்தொழுது ராத்திரி தூக்கம் நான்வைத் திருக்கையிலே ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில் கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில் தெய்தியிரு பத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே சுகுதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கமதில் நாதனென் னருகில் நலமாக வந்திருந்து சீதமுட னெழுப்பிச் செப்பினார் காரணத்தை காப்பி லொருசீரு கனிவாய் மிகத்திறந்து 120 தாப்பிரிய மாகச் சாற்றினா ரெம்பெருமாள் மகனேயிவ் வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு உகமோ ரறிய உரைநீ முதற்காப்பாய் அதின்மேல் நடப்புன் உள்ளே யகமிருந்து சரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை நானுரைக்க நீயெழுதி நாடுபதி னாலறிய யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே

நூற்பயன்

வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப் பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர் கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார் மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில் என்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பாரேல் திட்டமது சொன்னோம் தீருந் திருவாணை

தெச்சணா புதுமை

நாரா யணரும் நல்லதிருச் செந்தூரில் பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண் டங்கிருந்து ஆண்டா யிரத்து அவென்ற லக்கமதில் 140 நன்றான மாசி நாளான நாளையிலே சான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில் மூன்றான சோதி உறைந்திருக்குந் தெச்சணத்தில் வந்திருந்த நற்பதியின் வளமைகே ளம்மானை மூவாதி மூவர் உறைந்திருக்குந் தெச்சணமே தேவாதி தேவர் திருக்கூட்டந் தெச்சணமே நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே அகத்தீ சுவரரும் அமர்ந்திருக்குந் தெச்சணமே மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே தாணுமால் வேதன் தாமதிக்குந் தெச்சணமே ஆணுவஞ்சேர் காளி அமர்ந்திருக்குந் தெச்சணமே தோசமிகு கர்மம் தொலைக்கின்ற தெச்சணமே நீச வினைதீர நீராடுந் தெச்சணமே மாது குமரி மகிழ்ந்திருக்குந் தெச்சணமே பாறு படவு பரிந்துநிற்குந் தெச்சணமே ஆனைப் படைகள் அலங்கரிக்குந் தெச்சணமே சேனைப் படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே ஆகமக் கூத்து ஆடுகின்ற தெச்சணமே பார்வதியாள் வந்து பரிந்திருந்த தெச்சணமே சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே தெச்சணத்தின் புதுமை செப்பத் தொலையாது அச்சமில்லாப் பூம அடவுகே ளம்மானை கச்சணி தனத்தா ளோடு கறைமிடற் றண்ண லீசர் பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத் தேவி நிச்சய மான கன்னி நிறைந்திடும் பூமி யான தெச்சாண புதுமை சொல்லிச் சீமையி னியல்புஞ் சொல்வோம்

சீமையின் இயல்பு

புன்னை மலர்க்காவில் பொறிவண் டிசைபாட அன்ன மதுகுதித்து ஆராடுஞ் சோலைகளும் கன்னல் கதலி கரும்பு பலாச்சுளையும் எந்நேர மும்பெருகி இலங்கிநிற்குஞ் சோலைகளும் எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும் பொங்கு கதிரோன் பூமேற் குடைநிழற்ற நந்தா வனம்பூத்து நகரி மணம்வீச செந்தா மரைபூத்துச் செலம் புமணம்வீச அரகரா வென்று அபயமிடு மொலியும் சிவசிவா வென்று துதிக்கின்ற பேரொலியும் முடியு மடியுமில்லா முதலோனைப் போற்றொலியும் மடியில் பணம்போட்டு மார்க்குத்தும் பேரொலியும் முத்தாலே பாண்டி முதன்மடவா ராடொலியும் மத்தாலே மோரு மடமடென்ற பேரொலியும் சமுத்திரத்து முத்து தான்கரையில் சேருவதும் குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை யிடுமொலியும் சங்கீத மேளம் தானோது மாலயமும் மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும் காரண வேதக் கல்விமொழி ஆலயமும் வாரணத்தின் மீதில் வரும்பவனி யாரபமும் மாவேறி வீதி வரும்பவனி வீதிகளும் கூரை யிலேமுத்து குலைசாய்க்கும் கன்னல்களும் பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் னளிப்பாரும் அன்னமிடுஞ் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும் சொர்ண மளித்துச் சொகுசுபெற நிற்பாரும் சிவனே சிவனேயென்று சிவகருத்தாய் நிற்பாரும் தவமே பெரிதெனவே தவநிலைகள் செய்வாரும் கோவிந்தா வென்று குருபூசை செய்வாரும் நாவிந் தையாக நால்வேதம் பார்ப்பாரும் மாரி பொழியும் மாதமொரு மூன்றுதரம் ஏரி பெருகி ஏரடிக்க மள்ளரெல்லாம் 200 நாத்து நடும்புரசி நளினமிகு சொல்லொலியும் கூத்து ஒலியும் குருபூசை தன்னொலியும் எப்பாரெல் லாம்புகழும் ஏகா பதியதுபோல் தப்பா தெச்சணத்தின் தன்மையீ தம்மானை காமனை எரித்த ஈசன் கழலிணை மறவா வண்ணம் பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரி யான சீமையின் குணமுஞ் சொல்லிச் சிறந்திடும் பூமி தன்னில் நேமவர் தர்ம ஞாய நிலைதனை நிகழ்த்து வாரே

தர்மநீதம்

ஆதிப் பொருளை அனுதினமுந் தானோதி சோதி யுடநீதம் சொல்லுவே னம்மானை தெய்ன மனுநீதம் தேசாதி ராசநீதம் மெய்யருந்தும் நீதம் விளம்புவே னம்மானை ஆயிரத்து எட்டு ஆனதிருப் பதிக்கும் வாயிதமாய்ப் பூசை வகுப்பு முடங்காது கோயில் கிணறு குளங்கரைக ளானதையும் தேய்வு வராதே சுற்றுமதில் கட்டிடுவார் எளியோர் வலியோர் என்றெண்ணிமிகப் பாராமல் களிகூர நன்றாய்க் கண்டவழக் கேயுரைப்பார் அன்ன மடம்வைத்து ஆகங் களிகூர எந்நேரம் பிச்சை இடுவா ரெளியோர்க்குப் பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்க் களிப்பாரும் எந்த இரவும் இருந்துபிச்சை யீவாரும் ஆறி லொருகடமை அசையாமல் தான்வேண்டி தேறியே சோழன் சீமையர சாண்டிருந்தான் சிவாயநம வென்ற சிவவேத மல்லாது கவாயமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள் ஆறி லொருகடமை அதுதரவே மாட்டோமென்று மாறொருவர் சொன்னால் மன்னன்மறுத் தேகேளான் பன்னிரண் டாண்டு பரிவா யிறையிறுத்தால் பின்னிரண் டாண்டு பொறுத்திறை தாருமென்பான் இவ்வகையாய்ச் சோழன் இராச்சியத்தை யாண்டிருந்தான் அவ்வகையாய்ச் சோழன் ஆண்டிருக்கும் நாளையிலே மெய்யறிவு கொண்ட மேலாம்பதத் தெளிவோன் தெய்வத் திருநிலைமை செப்புவே னம்மானை இவ்வகை யாகச் சோழன் இருந்து ராச்சியத் தையாள கவ்வைக ளில்லா வண்ணம் கலியுகம் வாழும் நாளில் செவ்வகைத் திருவே யான திருவுளக் கிருபை கூர்ந்து தெய்வமெய் நீதம் வந்த செய்தியைச் செலுத்து வாரே.

தெய்வ நீதம்

வாரம தில்லாமல் மன்னன் அதிசோழன் நீதமாய்ப் பூமி நிறுத்தியர சாளுகையில் கண்டு வேதாவும் கமலத் திருமகளும் நன்று தெய்வாரும் நாரா யணருமெச்சி அன்றந்த மாமுனிவர் அல்லோருந் தான்கூடி சென்று சிவனார் திருப்பாதந் தெண்டனிட்டுச் சாகா திருக்கும் சமூலத் திருப்பொருளே ஏகா பரனே எங்கும் நிறைந்தோனே மூலப் பொருளே முதற்பொருளே காரணரே சாலப் பொருளே தவத்தோ ரரும்பொருளே நாரணரும் வேதா நாடிப் பொரும்போரில் காரணரே நீரும் கனல்கம்ப மானோரே ஆலமு தருந்தி அரவை மிகவுரித்துக் கோலத் திருக்கழுத்தில் கோர்வையா யிட்டோனே ஆனைதனை யுரித்து அங்கமெல் லாம்புனைந்து மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே கோனேந்திர கிரியில் குடியிருக் குங்கோவே தானே யிருக்கும் தவமே தவப்பொருளே ஆதியாய் நின்ற அதியத் திருமுதலே சோதியே சோழன் சொல்நெறியைக் கேளுமையா வாடிவந்த பச்சினுக்கு வாளா லவனுடம்பைத் தேடிவந்த வேடனுக்குத் துடையரிந் தீந்தவன்காண் 260 ஆறி லொருகடமை அவன்வேண்டிட் டானெனவே மாறி யவன்புவியோர் மனதிற்கௌ வைகளில்லை கோவில் சிவாலயங்கள் குளங்கூபம் வாவிகளும் சேவித் தனுதினமும் செய்வானே தானதர்மம் ஆதலால் சோழன் அரசாளுஞ் சீமையிலே நீதமாய்த் தெய்வம் நிலைநிறுத்த வேணுமையா என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே கன்றிருந்த ஈசர் கரியமா லோடுரைப்பார் நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க வல்லவனே பூமா தேவி தனைவருத்தும் வருணன் தனையழைநீ மாதமும் மாரிபெய்ய கருணைக் குடைவிரிக்க கங்குல் தனையழையும் வாசி யதுபூவாய் வழங்க வரவழையும் தோசி மறலியையும் சொல்லி விலக்கிடுநீ குருபூசை செய்யும் கூட்டமதிற் சிவமாய் திருவீற் றிருக்கச் செய்திடுநீ கோலமது நித்திரா தேவி நித்தமந்தப் பூமியிலே மத்திபமாய்க் காக்க வையென்றா ரீசுரரும் நினைத்தோர்க் குறுதி நினைவிலறி வுதோன்ற எனைத்தோத் திரங்கள் இகழாமல் வையுமென்றார் பன்றியோ டேகடுவாய் பண்புற் றிருந்திடவும் அன்றிலோ டேகுயிலும் அன்புற் றிருந்திடவும் கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும் வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும் இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும் பட்டியும் முயலும் பண்புற் றிருந்திடவும் பசுவும் புலியுமொரு பக்கம்நீ ருண்டிடவும் கசுவுங் கரைபுரளக் கரும்புமுத் தீன்றிடவும் சாத்திர வேதம் சமயம் வழுகாமல் சூத்திர மாகத் துல்வப் படுத்திடவும் மனுவோர் தழைத்து மக்களொரு கோடிபெற்று இனிதாக நாளும் இறவா திருந்திடவும் சந்திர சூரியர்கள் தட்டுமிக மாறாமல் இந்திரரும் தேவர் இருஷிநிலை மாறாமல் தான தவங்கள் தப்பிமிகப் போகாமல் வானவர்கள் தேவர் வளமாக நின்றிடவும் ஈன மில்லாமல் இதுதெய்வ நீதமெல்லாம் மானம் நிறுத்தி வையென்றா ரீசுரரும் இப்படித் தெய்வ நீதம் ஈசுர ரிதுவே கூற சொற்படி மறவா வண்ணம் திருமரு கோனுஞ் செய்தார் அப்படித் தவறா நீதம் அம்புவி தனிலே வாழ மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுத்தார் தாமே

பெண்கள் நிலைமை

தெய்வத்திரு நிலைமை செப்பியபின் தேசமதில் நெய்நிதியப் பெண்கள் நிலைமைகே ளம்மானை கணவன் மொழியக் கலவுமொழி பேசாத துணைவி நிலைமை சொல்லுவே னம்மானை கற்கதவு போலே கற்பு மனக்கதவு தொற்கதவு ஞானத் திருவுகோ லவள்மனது அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும் முன்பான சோதி முறைபோ லுறவாடிப் போற்றியே நித்தம் பூசித் தவள்மனதில் சாற்றிய சொல்லைத் தவறா மலேமொழிவாள் அரசன் துயில ஆராட்டி ஓராட்டிக் கரமா னதுதடவிக் கால்தடவி நின்றிடுவாள் துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும் மயன்ற ஒருசாமம் மங்கை யெழுந்திருந்து முகத்து நீரிட்டு நான்முகத்தோ னையுந்தொழுது அகத்துத் தெருமுற்றம் அலங்கார மாய்ப்பெருக்கிப் பகுத்துவ மாகப் பாரிப்பார் பெண்ணார்கள் தவத்துக் கரிய தையல்நல்லார் தங்களுட மனுநீதஞ் சொல்லி வகுக்க முடியாது கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல் இனிதாக நாளும் இருக்குமந்த நாளையிலே வனியான சாதி வளமைகே ளம்மானை

சாதி வளமை

சான்றோர் முதலாய்ச் சக்கிலி யன்வரையும் உண்டான சாதி ஒக்கவொரு இனம்போல் தங்கள்தங்கள் நிலைமை தப்பிமிகப் போகாமல் திங்கள் மும்மாரி சிறந்தோங்கி யேவாழ்ந்தார் செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல் அலுவல் தினஞ்செய்து அன்புற் றிருந்தனராம் தான்பெரி தென்று தப்புமிகச் செய்யாமல் வான்பெரி தென்று மகிழ்ந்திருந்தா ரம்மானை ஒருவர்க் கொருவர் ஊழியங்கள் செய்யாமல் கருதல் சிவன்பேரில் கருத்தா யிருந்தனராம் செய்யும் வழக்குச் சிவன்பேரி லல்லாது வையம்வழக்கு வாரா தேயிருந்தார் அடிபணிய வென்று அலைச்சல்மிகச் செய்யாமல் குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தா ரம்மானை சேயினுட ஆட்டுச் செவிகேட் டிருப்பதல்லால் பேயினுட ஆட்டோர் பூதரறியா திருந்தார் இந்தப் படிமனுவோர் எல்லா மிருந்துவொரு விந்துக் கொடிபோல் வீற்றிருந்தா ரம்மானை இப்படித் தெய்வ இராச்சிய நீதமும் மற்படித் தேச மனுவுட நீதமும் நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக் கற்பு ரீசர் கண்டு மகிழ்ந்தனர்

கயிலை வளமை

முத்தான சீமை மூன்று நீதத்தோடு பத்தாசை யாகப் பண்பாய்த் தழைத்திடவே நாலான வேதம் நல்ல கலியுகமாய் மேலாம் பரமாய் விளங்கி யிருந்திடவே தேவ ருறையும் திருக்கயிலை தன்வளமை பாவலர்கள் முன்னே பாடினா ரம்மானை ஈச ருறையும் இரத்தின கிரிதனிலே வாசவனுந் தேவர் மறையோரும் வீற்றிருக்க பொன்னம் பலநாதர் பொருந்திருக்கும் மண்டபமும் கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும் வேதப் புரோகி விளங்குகின்ற மண்டபமும் சீத உமையாள் சிறந்திலங்கும் மண்டபமும் நீதத் திருமால் நிறைந்திலங்கும் மண்டபமும் சீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும் 360 ஆதவனுஞ் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும் வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும் ஆரு மறிந்து அளவிடக் கூடாத பாரு படைத்த பரமே சுரனாரை விசுவாச மேலோர் விமல னடிவணங்கி வசுவாசு தேவன் வந்து மிகவணங்கி மறைவேத சாஸ்திரங்கள் மலரோ னடிவணங்கி இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்கி எமதர்ம ராசன் எப்போதும் வந்துநிற்க பூமகளும் வேதப் புரோகிவந்து தெண்டனிட காமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர் நாமநெடி யோன்பதத்தை நாள்தோறும் போற்றிநிற்க தலைவ னிருக்கும் தங்கத் திருக்கயிலை நிலைமை யெடுத்துரைக்க நிலையாது அம்மானை ஆறு செஞ்சடை சூடிய அய்யனார் அமர்ந்து வாழுங் கயிலை வளமதைக் கூறக் கூறக் குறைவில்லை காணுமே கொன்றை சூடும் அண்டர் திருப்பதம் வாறு வாறு வகுக்க முடிந்திடா மகிழுங் குண்ட வளஞ்சொல்லி யப்புறம் வேறு வேறு விளம்பவே கேளுங்கோ மெய்யுள் ளோராகிய வேத அன்பரே

அகில வளமை

கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது அகில வளமை அருளக்கே ளம்மானை தேவாதி தேவர் திருக்கூட்ட மாயிருக்க மூவாதி மூவர் மிக்கவொரு மிக்கவொரு சிங்கா சனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே மங்காத தேவி மாதுதிரு லட்சுமியாள் ஈரே ழுலகும் இரட்சித்த வுத்தமியாள் பாரேழும் படைத்த பரமதிரு லட்சுமியாள் நன்றா யெழுந்திருந்து நாரா யணர்பதத்தைத் தெண்டனிட்டு லட்சுமியும் செப்புவா ளம்மானை தேவரீ ரென்னைத் திருக்கலியா ணமுகித்துக் கோவரி குண்டக் குடியிருப்பி லேயிருத்திப் போவது என்ன புதுமை எனக்கறிய தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள் பின்னுமந்த லட்சுமியாள் பெருமாள் தனைத்தொழுது என்றும் இருக்க இறவா திருப்போனே ஆதியால் சூட்சம் அளவெடுக்கக் கூடாத நாதியாய் நின்ற நாரா யணப்பொருளே தேவாதிக் கெல்லாம் திருமுதலாய் நின்றோனே மூவாதிக் கெல்லாம் முதன்மையாய் நின்றோனே உமக்கு எதிரி உலகமதி லுண்டோகாண் தமக்கு எதிரிவந்த தன்மை மிகவுரையும் உகத்துக் குகம்பிறந்து உலகிடத்தி லேயிருக்க அகத்துவந்த ஞாயம் அருளுவீ ரெம்பெருமாள் என்று திருவும் இதுவுரைக்க மாயவரும் நன்று நன்றென்று நாரா யணருரைப்பார்

நீடிய யுகம்

சக்தி சிவமும் தானுதித்த காலமதில் எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும் ருத்திரர் மயே சுரருதித்த நாளதிலும் பத்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும் வானோர்கள் தெய்வார் மறைவேத சாஸ்திரமும் ஈனமாய்ச் சண்டன் இவன்பிறந்த நாளதிலும் ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின் ஈதுதித்த காலம் இராச்சியமொன் றுண்டுகண்டாய் அவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து இவ்வுகத்து நாமம் என்னவிடு வோமென்று மாலும் பிரமாவும் மாயா திருப்போனும் ஆலோசித் தவர்கள் ஆகமத்தைத் தான்பார்த்து நீடிய யுகமெனவே நியமித் துறுதிகொண்டு தேடிய முப்பொருளும் செப்பினர்கா ணம்மானை அவ்வுகத்தை ஈசர் ஆர்ப்பரித்த காலமதில் இவ்வுகத்துக் காரை இருத்துவோ மென்றுசொல்லி எல்லோருங் கூடி இதமித்தா ரம்மானை அல்லோருங் கூடி ஆலோசிக்கு மளவில் தில்லையா ரீசன் திருவேள்வி தான்வளர்க்க நல்லையா வேள்வி நன்றாய் வளர்த்திடவே பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே அறந்தா னறியா அநியாயக் கேடனுமாய் பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு அண்டம் அமைய அவன்பிறந்தா னம்மானை முகங்கண் களெல்லாம் முதுகுப்பு றமேலாட நகக்கரங்கள் கோடி கால்க ளொருகோடி தவங்க ளறியாச் சண்டித் தடிமோடன் பவமே நாள்தோறும் பண்ணு மியல்புடையோன் குறோணி யவனுயரம் கோடிநாலு முழமாய் கயிலை கிடுகிடெங்கும் கால்மாறி வைக்கையிலே அகிலங் கிடுகிடெங்கும் அவனெழுந்தா லம்மானை இப்படியே குறோணி என்றவொரு அசுரன் முப்படியே நீயே யுகத்தி லிருந்தான்காண் இருந்து சிலநாள் இவன்தூங்கித் தான்விழித்து அருந்தும் பசியால் அவனெழுந்து பார்ப்பளவில் பாருகங் காணான் பலபேருடல் காணான் வாருதி நீரை வாரி விழுங்கினன்காண் கடல்நீ ரத்தனையும் கடவாய் நனையாமல் குடலெல்லா மெத்தக் கொதிக்கு தெனவெகுண்டு அகிலம் விழுங்க ஆர்ப்பரித்து நிற்பளவில் கயிலை தனைக்கண்டு கண்கள்மிகக் கொண்டாடி ஆவி யெடுத்து அவன்விழுங்கு மப்போது தாவிக் குவித்துத் தப்பினார் மாயவரும் மாயவரு மோடி மண்ணுலோகம் புகுந்து தூயவரு மங்கே சிவனை மிகநினைத்துத் தவசு இருந்தார்காண் தாமோ தரனாரும் தவசு தனிலீசன் சன்னாசி போலேவந்து ஆருநீ யிந்த ஆழ வனந்தனிலே ஏதுநீ தவசு எனைநினைந்த வாறேது என்று சன்னாசி இதுவுரைக்க மாயவரும் பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவரோடே கயிலை யெமலோகம் கறைக்கண்டர் சக்திவரை அகில மதைக்குறோணி அசுரனென்ற மாபாவி விழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பிவந்தேன் பளிங்கு மலைநாதன் பாரத்தே வாதிமுதல் பண்டுபோல் நாளும் பதியி லிருந்திடவே என்றுங் கயிலை இலங்கி இருந்திடவும் முண்டு செய்தபாவி முகமு மவனுடம்பும் துண்டா றதாகத் தொல்புவியி லிட்டிடவும் கண்டங்கண்ட மாய்ப்போடக் கடிய வரமெனக்கு தண்டமிழீர் நீரும் தரவே தவசிருந்தேன் என்று திருமால் எடுத்துரைக்க வேயீசர் மன்று தனையளந்த மாலோ டுரைக்கலுற்றார் கேளாய்நீ விட்டிணுவே கேடன் குறோணிதனைத் தூளாக்கி யாறு துண்ட மதுவாக்கி விட்டெறிந்தா லவனுதிரம் மேலு மொருயுகத்தில் கெட்டுக் கிளையாய்க் கொடிய சூரக்குலமாய்ப் பிறக்கு மவனுதிரம் பொல்லாதான் தன்னுடம்பு துண்ட மொன்றுதானும் தொல்புவியி லேகடிய குண்டோம சாலியனாய்க் குவலயத்தி லேபிறப்பான் அப்படியே குறோணி அவனுதிர மானதுவும் இப்படியே ஆறு யுகத்துக் கவனுடம்பு வந்து பிறப்பான்காண் மாற்றானா யுன்றனக்கு உகத்துக் குகமே உத்தமனாய் நீபிறந்து அகத்துக் கவன்பிறப்பு ஆறு யுகமதிலும் உண்டு மவன்சீவன் உயிரழிவு வந்தவந்நாள் பண்டு நடுக்கேட்டுப் பாவி யவனுயிரைக் கொன்றுபோட் டேநரகக் குழிதூர்க்க நாள்வருங்காண் என்று விடைகொடுத்தார் ஈசுரர்கா ணம்மானை அன்று விடைவேண்டி அதிகத் திருமாலும் குன்றுபோல் வந்த கொடிய படுபாவி குறோணி தனைச்செயிக்கக் கோபம்வெகுண் டெழுந்து சுறோணித வேதன் துடியாய் நடந்தனராம் நாகத்தணை கிடந்த நாரா யணமூர்த்தி வேகத்தால் குறோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார் வெட்டினா ராறு மிகுதுண்ட மம்மானை கெட்டி தானென்று கிருபைகூர்ந்தே தேவர் துண்டம தாறும் தொல்புவியி லேபோட்டுப் பிண்டமதைச் சுமந்து போட்டனர்கா ணம்மானை அந்தக் குறோணி அவனுதிர மானதையும் கொந்து கொந்தாகக் குளம்போலே குண்டுவெட்டி உதிரமதை விட்டு உயர்ந்தபீடம் போட்டுச் சதுர யுகமெனவே தான்வகுத்தா ரோர்பீடத்தை

சதுரயுகம் - குண்டோமசாலி பாடு

அவ்வுகத் திலேயுதிரம் அசுரக் குலமாகி முவ்வுகத்துப் பாவி முடிந்தவொரு துண்டமதைக் குண்டோம சாலி எனவே கொடியவனாய்ப் பண்டோர் குறோணி பாதகனாறு துண்டமதில் வந்துபிறந் தான்சதுர வையகத்தி லம்மானை முந்து பிறந்த முழுமோச மானதிலும் மந்து முகமாய் மாபாவி தன்னுயரம் நானூறா யிரமுழங்கள் நாடுமவன் கரங்கள் முந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே உடைதோ ளுடம்பு உருவறியா மாபாவி படைத்தோன் தனையறியான் பாரியென்று மறியான் அட்டைபோ லேசுருண்டு அம்மிபோ லேகிடப்பான் மட்டைபோ லேதிரிவான் வயிறு மிகப்பசித்தால் அன்னுகத் திலுள்ள அசுரக் குலங்களையும் தன்வயிற்றுக் கிட்டுத் தடிபோ லுருண்டிடுவான் இப்படியே நாளும் இவன்குலங்க ளானதெல்லாம் அப்படியே தின்று அவன்பசிக ளாற்றாமல் அய்யையோ வென்று அலறினன்கா ணம்மானை மெய்யை யனான விறுமா அதுகேட்டுச் சிவனைத் தொழுது செப்புவா ரம்மானை தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே எவனோ ஒருத்தன் இட்டசத்த மானதிலே தவலோக மெல்லாம் தானலைவ தேதெனவே மாய னதுகேட்க வகுப்பா ரங்கீசுரரும் ஆயனே நீயும் அறியலையோ ஞாயமது குண்டோ மசாலி கொடியமா பாவியனாய்ப் பண்டோர் குறோணி பாதகன்தன் துண்டமதாய்ப் பிறந்தா னவனும் பேருதிரந் தன்கிளையாய் இறந்தா ரவர்கள் இரையா யவன்தனக்கு ஆன பசிகள் ஆற்றாம லேயவனும் வானமது அலைய வாய்விட்டான் கண்டாயே என்று சிவனார் ஈதுரைக்க மாயவரும் அன்று மகாமாலும் அக்குண்டோ மசாலினுக்கு இரையாகத் தேவர்களை ஏற்றநாங் கிலாக்கி வரையா னதைத்தூண்டில் மறையைக் கயிறாக்கி வாயுவைத் தோணி வருணன் தனைமிதப்பாய்த் தேய மதைச்சூழத் திரைகடலைத் தான்வருத்தி ஓடையாய்ச் சதுர யுகம்வழியே தானேவி தேடரிய மாயன் திருவோணி தானேறி மூவாதி மூவர் ஓணிதனைத் தள்ளிவரக் காவாலி மாயன் கன்னியிலே தூண்டலிடச் சதுர யுகமாளும் சண்டித்தடி மோடன் எதிரே வருமாற்றில் இரையைமிகக் கண்டாவி நாடிப் பசிதீர நல்லஇரை யாகுமென்று ஓடிவந்து பாவி விழுங்கினான் தூண்டல்தனை தூண்டில் விழுங்க சுரண்டி மிகக்கொளுவி மாண்டனன் காண்பாவி வலிய மலைபோலே பாவி மடிய பரமே சுரனாரும் தாவிச் சலத்தால் சதுர யுகமழித்தார்

தேவர்கள் வேண்டுகோள்

சதுர யுகமழிய தானவர்க ளெல்லோரும் மதுர மொழியீசன் மலரடியைத் தான்பூண்டு தேவர் மறையோர் தெய்வேந் திரன்முதலாய் மூவர்களும் வந்து முதலோ னடிபணிந்து பரமனே நீரும் படைத்தயுகம் ரண்டதிலும் வரமே துங்கேட்டு வாழ்ந்தவரைக் கண்டிலமே அந்த சந்தமில்லை ஆணுவங்கள் தானுமில்லை இந்த வகைச்சாதி இல்லாம லீசுரரே பிறந்தா லவனும் பெரியோ னடிவணங்கி வரந்தா ருமென்று வாளா யுதத்தோடே வலுவும் பலமும் வாய்த்தசூ ரப்படையும் கொலுவும் பெரிய குவிந்தமதில் கோட்டைகளும் கெட்டுக் கிளைபாணி கிரண மதுவுடனே நட்டுப் பயிரால் நாளும் பசிதீர்ந்து இருந்து பொறுக்க இராச்சியமொன் றுண்டாக்கும் வருந்தி மகாதேவர் மலரோ னடிவணங்க ஆதி சிவனும் அதிகசந் தோசமதாய் வேதியரைத் தான்வருத்தி விளம்புவா ரீசுரரும்

நெடிய யுகம்

தில்லைமலாலன் மல்லோசி வாகனன் பாடு மாலும் பிரம்மாவும் வாய்த்தபர மேசுரரும் நாலு மறையோரும் நடுவர்மிகக் கூடி முன்னேயுள்ள துண்டம் ஒன்றைரண் டாக்கிவைத்துப் பின்னே படைப்புப் பிரம்மா வுருப்படைக்க சிவாயப் பொருள்தான் சீவ நிலைகொடுக்க உபாயப் பொருள்தான் உல்லாச மேகொடுக்க முண்ட மிருபேரும் உருவா யுருவெடுத்துத் தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி அப்போது மாயன் ஆதி யடிவணங்கி இப்போது ஈசுரரே இவர்களிரு பேர்க்கும் என்னபேர் தானும் இடுவோ மெனவுரைக்க வன்னப் பரமேசு வரனார் வகுக்கலுற்றார் திறந்தான் பெருகும் திருமாலே நீர்கேளும் பிறந்த அசுரருக்குப் பேரிட வேணுமென்றால் மாயனே நானுமொரு உபாயம் வகுப்பேன்காள் ஆயனே நீயும் அதுகேட்க வேணுமென்றார் அண்டபிண்டங் காணாத ஆதிகயி லாசமதில் தெண்டனிட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி இந்த முனியடுக்கல் இவர்கள்ரண்டு பேரைவிட்டு அந்த முனிதவத்தை அழிக்கவே சொல்லிடுவோம் என்று சிவமுரைக்க எல்லோருஞ் சம்மதித்து அன்று பிறந்த அசுரர்களைத் தானேவி போறாரே சூரர் பொருப்பொரு நூறானதுபோல் வாறாரே சூரர் வாய்களிரு காதவழி சூரருட கைகள் தொண்ணூற்றீ ரஞ்சதுவும் மூரர்கால் நூறு உயர்ந்தசிர சன்பதுவும் கண்களொருநூறு வெண்டரள மிருகலமே துங்கணங் களாகச் சூர ரடந்தேறி கண்கவிழ்ந்து யோகம் கருத்துருத்தாய் நிற்குகின்ற வண்கவிழ்ந்த மாமுனியை வாரி யெடுத்தவர்கள் அலைமே லெறிய ஆர்ப்பரிக்கு மவ்வளவில் கலைமேல் பரந்த கடிய முனிபகர்வான் ஏனடா என்னை இருந்த தவசழித்து வீணடா செய்தாய் விழலா யறமோடா என்னை யெடுத்து இக்கடல்மேல் போட்டாலும் உன்னை யறுக்க ஓரம்பா யுருவெடுத்துப் பங்கயக் கண்மாயன் பக்கமதில் நான்சேர்ந்து உங்க ளிருபேரை ஊடுருவ நானறுத்து இந்தக் கடலில் எடுத்துங்களை யெறிந்து உந்தனி னூரை ஒக்கக்கரிக் காடாக்கி நானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன் வானுதிரு வாணையென்று மாமுனியுஞ் சாபமிட்டான் உடனே முனியை உயர்த்தியெடுத் தேசூரர் கடல்மே லெறிந்தார் கர்ம விதிப்படியால் அந்த முனியும் அரனா ரருளாலே மந்திரபுரக் கணையாய் வாரியலைக் குள்ளிருந்தான் சுருதி முனிதனையும் தோயமதில் விட்டெறிந்து உருதிக் குடிசூரர் ஓடிவந் தேகயிலை மோச முடன்வந்த முழுநீசப் பாவியர்கள் ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிநின்றா ரம்மானை சுருதி முனியுட நிஷ்டை தொலைத்தவர் கருதிய சூரர் கயிலை மேவியே பருதி சூடும் பரமனைப் போற்றியே வருதி கேட்டு வருந்தினர் சூரரே சுருதி முனிதவத்தைத் தொலைத்தே யவன்தனையும் பொருதி கடல்மீதில் போட்டெறிந்து வந்தவர்கள் ஈசன் தனைத்தொழுது இறைஞ்சிவரங் கேட்டனராம் வாசமுள்ள ஈசன் மாதுமையைத் தானோக்கித் தூயவளே மாயவளே சூர ரிருவருக்கும் நேயமுள்ள தோர்வரங்கள் நீகொடுக்க வேணுமென்றார் வரங்கொடுக்க வென்று மறையோ னதிசயித்துச் சிரசன் பதுடைய சீர்சூரனை நோக்கி ஏதுவர முங்களுக்கு இப்போது வேணுமென்றார் தீது குடிகொண்ட சிரசன்ப தோனுரைப்பான் மாதவரே தேவர்களே மறையவரே மூவர்களே ஆதவரே யெங்களுக்கு அதிகவரம் வேணுமென்றான் அம்புவியி லுள்ள அஸ்திரங்கள் வாளாலும் தம்பிரா னானாலும் தாண்டமுடி யாதவரம் வானமிது பூமி மலைகளிது மூன்றிலுள்ள தானவராய் வாழுகின்ற தங்களா லெங்களையும் கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும் மல்லுக் குபாயமதும் வலுவும் பலமதுவும் ஏவலாய் வானோர் எமைத்தொழுது நின்றிடவும் தவறாம லிந்தவரம் தரவேணு மென்றுரைத்தான் உடனே சிவனாரும் உற்ற அசுரருக்கு அடமா யவன்கேட்ட அவ்வரங்கள் தாங்கொடுத்து நீச னிருக்க நெடிய யுகம்வகுத்துப் பாசனுக்குப் பேரு பகர்ந்தே விடைகொடுத்தார் விடைவேண்டிப் பாவி விமலன் தனைத்தொழுது மடைப்பாவி யான மல்லோசி வாகனனும் தில்லைமல் லாலனுமாய்ச் சேர்ந்தங் கிருபேரும் வல்ல சிவன்வகுத்த வையகத்தில் வந்தனராம் வந்தார் சிவன்வகுத்த வையகத்தி லம்மானை அந்த அசுரர் அவரிருக்கு மந்நாளில் உதிர மதுசூரர் ஒக்க உதித்தெழுந்து செதிர்சூரப் படையாய்ச் சேர்த்தங் கிருந்தனராம் இப்படியே சூரர் இவர்சேர்க்கை தன்னுடனே அப்படியே அந்தயுகம் ஆண்டிருந்தா ரம்மானை ஆண்டிருந்த சூரர் அவரிருக்க மேடைகளும் தாண்டிநின்ற வானத் தடாக உயரமதே சூரப் படைகள் தொழுது அடிபணிந்து பாதக ருக்குநித்தம் பணிந்தேவல் செய்திடுவார் ஊழியங்கள் செய்து உற்றயிறை யிறுத்துப் பாளையங் களாகப் பணிந்திருந்தா ரம்மானை சூரர் கொடுமுடியைச் சூட்டி யரசாண்டு பாரமுள்ள கோட்டைப் பண்ணினா ரம்மானை இப்படியே சூரர் இவர்வாழு மந்நாளில் முப்படியே சூரர் ஊழி விதிப்படியால் இறப்ப தறியாமல் எரியைமிகக் கண்டாவி உறப்பொசிக்கச் சென்ற விட்டி லிறந்தாற்போல் தம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார் மும்பிலுள்ள சூரர் முடுக்கமதைக் கண்டாவி நம்பிபத மறந்து நாம்தாம் பெரிதெனவே கெம்பினார் சூரர் கெட்டனர்கா ணம்மானை சூர ரவர்செய்த துட்டம் பொறுக்காமல் வீர முள்ளதேவர் விரைந்தே முறையமிட தேவர் முறையம் சிவனார் மிகக்கேட்டுக் காவலாய் நித்தம் கைக்குள் ளிருக்குகின்ற பெண்ணமுதைப் பார்த்துப் புகல்வாரங் கீசுரரும் கண்ணே மணியே கருத்தினுள் ளானவளே பூலோகந் தன்னிலுள்ள புருடரா யுதத்தாலும் மேலோகம் வாழும் விமலரா யுதத்தாலும் மலைமேலே வாழும் மாமுனிவர் தம்மாலும் அலையா வரங்கள் அச்சூரர்க் கேகொடுத்தோம் தரியா முடுக்கம் தான்பொறுக்காத் தேவரெல்லாம் அரியோ யெனமுறையம் அநேகம் பொறுக்கரிதே என்றீசர் சொல்ல இயல்கன்னி யேதுரைப்பாள் மலைலோகம் மேலோகம் வையமதி லாகாட்டால் அலைமேல் துயிலுமொரு ஆண்டியுண்டு கண்டீரே முன்னேயச் சூரருக்கு முற்சாப மிட்டதொரு வன்னச் சுருதிமுனி மந்திரபுரக் கணையாய் வளர்த்தங் கிருப்பான்காண் மாயருட பக்கலிலே கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந் தேயீசர் மாலை வரவழைத்து வளப்பமெல் லாமுரைக்கச் சாலப் பொருளும் சம்மதித்தாங் காரமுடன் அலையில் வளர்ந்த அதிகக் கணையெடுத்துச் சிலையேற்றி யம்பைச் சிரித்து மிகத்தொடுக்க அம்புப் பகையாலும் அதிகமால் பகையாலும் பம்பழித்துச் சூரனூர் பற்பம்போல் தானாக்கிச் சூர ரிருவருட சிரசை மிகஅறுத்து வாரிதனில் விட்டெறிந்து வாளி சுனையாடி மலரோ னடிபணிந்து வைகுண்டங் கேட்டிடவே பலமான குண்டப் பதவி மிகக்கொடுத்தார் அவ்வுகத்தை மாயன் அன்றழித்து ஈசரிடம் செவ்வாக நின்று செப்பினா ரீசருடன்

கிரேதா யுகம்

இன்னமொரு யுகத்தை இப்போ படைக்கவென்று மன்னதியத் திருமால் மனமே மிகமகிழ்ந்து சொன்னவுட னீசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே ஓரிரண்டு துண்டம் உகமாய்ப் பிறந்தழிந்து ஈரிரண்டு துண்டம் இருக்குதுகாண் மாயவரே நூல்முறையைப் பார்க்கில் நெடிய யுகங்கழிந்தால் மேலுகந்தா னிங்கே மிகுத்தகிரே தாயுகந்தான் இருக்குதுகா ணென்று ஈச ருரைத்திடவே மருக்கிதழும் வாயான் மனமகிழ்ந்து கொண்டாடி துண்டமொன்றை ரண்டாய்த் தூயவனார் தாம்வகிர்ந்து மண்டலங்கள் மெய்க்க வாணாள் கொடுத்தருளி சிங்கமுகச் சூரனெனும் திறல்சூர பற்பனெனும் வங்கணமாய்ப் பிண்டம் வகுத்தனர்கா ணம்மானை சூர னுடசிரசு தொளாயிரத்து நூறதுவும் போரக்கால் கைகள் பொருப்பெடுக்கு மாபலமும் சூரன் சுரோணிதத்தைச் சுக்கிலங்கள் தானாக்கி ஊரேநீ போவென்று உற்ற விடைகொடுத்தார் விடைவேண்டிச் சூரன் வேண்டும் படையோடே திடமாகப் பூமி செலுத்தியர சாளுகையில் வரம்வேண் டவென்று மலரோ னடிவணங்கி திறமான ஓமமிட்டுச் செப்புக் குடம்நிறுத்தி நின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல் அன்றந்தச் சூரன் அக்கினி யில்விழுந்தான் சூரபற்பன் விழவே சிங்கமுகச் சூரனவன் பாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தா னக்கினியில் ஆனதா லீசுரரும் அம்மைஉமை யுமிரங்கி ஈனமாஞ் சூரனுக்கு ஏதுவரம் வேணுமென்றார் ஈச னுரைக்க ஏற்றஅந்தச் சூரனுந்தான் பாசமுடன் செத்த பற்பனென்ற சூரனையும் எழுப்பித் தரவேணும் யாங்கள்மிகக் கேட்டவரம் மழுப்பில்லா வண்ணம் வரமருள்வீ ரென்றுரைத்தான் சூர னிவன்கேட்க சிவனா ரகமகிழ்ந்து பாரமுள்ள ஓம பற்பமதைத் தான்பிடித்துச் சிவஞான வேதம் சிந்தித்தா ரப்பொழுது பவமான சூர பற்பன் பிறந்தனனாம் இறந்து பிறந்தனற்கும் இளையோ னவன்தனக்கும் சிறந்த புகழீசர் செப்புவா ரப்பொழுது சூரரே உங்களுக்குத் தோற்றமுள்ள தோர்வரங்கள் வீரரே கேளுமென்று வேத னிவையுரைக்க அந்நாளில் சூரன் அகமகிழ்ந்து கொண்டாடி உன்னாலு மைந்துமுகம் உள்ளவர்கள் தம்மாலும் உலகமதில் பண்ணிவைத்த உற்றஆயு தத்தாலும் இலகுமன்ன ராலும் இந்திரனார் தம்மாலும் கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும் வல்லவனே நீயும் வாழுங் கயிலையதும் தேவர்தே வேந்திரனும் திருக்கன்னி மாமறையும் ஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள் முழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும் பழுதில்லா திந்தவரம் பரமனேநீர் தாருமென்றான் தாருமென்று சூரன் தாழ்மை யுடன்கேட்க ஆரு மொப்பில்லா ஆதி யகமகிழ்ந்து கேட்டவர முழுதும் கெட்டியா யுங்களுக்குத் தாட்டிமையா யிப்போ தந்தோ மெனவுரைத்தார் வரங்கொடுத் தீசர் மலைகயிலைக் கேகாமல் பரம உமையாளைப் பையஎடுத் தணைத்து அலைமே லேஆயன் அருகிலே போயிருந்து மலைமே லேசூரன் வாய்த்ததென் றவ்வரங்கள் கயிலை முழுதும் காவலிட்டுத் தேவரையும் அகில முழுதும் அடக்கியர சாண்டனனே அப்படியே சூரன் அரசாண் டிருக்கையிலே 760 முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே தேவரையும் வானவரைத் தெய்வேந் திரன்வரையும் மூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட ஈனமில்லா தாயன் எடுத்தா ரொருவேசம் ஈசனிடஞ் சென்று இயம்பினா ரெம்பெருமாள் வாசமுள்ள ஈசுரரே மாபாவிச் சூரனுக்கு ஏது வரங்கள் ஈந்திர்கா ணென்றுரைக்கத் தாது கரமணிந்த தாமன்பின் னேதுரைப்பார் வையகத் திலுள்ள வலுவாயு தத்தாலும் தெய்வலோ கத்தில் சிறந்தமன்னர் தம்மாலும் அஞ்சு முகத்தாலும் அழியா தவனுயிரும் தஞ்சமிட வானோர் தையல்தெய்வக் கன்னிமுதல் கயிலை முழுதும் கமண்டலங்க ளேழுமுதல் அகில முழுதும் அடக்கி வரங்கொடுத்தோம் என்று வேதாவும் இவையுரைக்க மாலோனும் நின்று தியங்கி நெஞ்சமது புண்ணாகிப் பேயனுக் கென்னுடைய பிறப்பைக் கொடுத்தல்லவோ தேயமதில் நானும் திரிந்தலையக் காரணந்தான் என்று திருமால் இதுசதையஞ் சொல்லியவர் இன்றந்தச் சூரர் இருவர்தமைக் கொல்லவே

கந்தன் அவதாரம்

ஆறு முகமாய் ஆய னளவிடவே கூறிடவே சத்திதனைக் கொண்டார்வே லாயுதமாய் நல்ல சிவனாரை நந்தீ சுரராக்கி வல்ல பெலமுள்ள வாய்த்ததிக் கெட்டிலுள்ளப் பாலரையும் வீரர்களாய்ப் பண்ணினா ரெம்பெருமாள் வாலமுள்ள சன்னாசி மாரைப் பெரும்படையாய்க் கந்தனெனும் நாமம் கனத்தசடை யாண்டியுமாய்க் கொந்துகொந்தாய்ப் பீற்றைக் கூறைமிக வணிந்து வேலு மிகப்பிடித்து வெண்ணீறு மேதரித்து நாலுரண்டு சிரசில் நல்லருத்தி ராச்சமிட்டுப் பத்துரண்டு காதில் பசும்பொன்னொவ்வாச் செம்பணிந்து முத்திரிக ளிட்டுக்கந்தப் பொக்கணங்கள் தோளிலிட்டுச் சன்னாசி போலே தானடந் தெம்பெருமான் நன்னாதா னாவெனவே நாலஞ்சுகவி தான்பாடி வந்து ஒருமலைமேல் வாய்த்தகூ டாரமிட்டுச் சந்து மிகச்சொல்லி தான்விட்டார் சூரனுக்கு

வீரவாகுதேவர் தாது

சூர னிடத்தில் தூதாநீ சென்றேகிப் பாரமுள்ள கயிலைச் பருவதமுந் தேவருட சிறைக ளகற்றிவானோர் தேவரையும் நீயனுப்பித் திறவா னாயாகச் சீமையர சாளுமென்று இப்படியே ஆகாட்டால் இன்றுகழித் தெட்டாம்நாள் அப்படியே உன்றனக்கும் ஆனகந்த சுவாமியர்க்கும் சண்டை அன்றென்று தரங்கூறி வாவெனவே அண்டர்பிரான் தூது அனுப்பினா ரம்மானை தூதன் மிகநடந்து சிவனே செயலெனவே காதமொன்று தான்கடந்து கண்டானே சூரனையும் கந்த சுவாமி கருத்தா யுரைத்ததெல்லாம் அந்த அசுரனுக்கு அத்தூதன் தானுரைத்தான் சூரா கேள்கந்த சுவாமியரு ளென்றுரைக்க ஏராத பாவி இகழ்த்தினா னப்போது தூதனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்துப் பாரதப் பெருவிலங்கில் பாவியைவை யென்றுரைத்தான் ஆரடா நீதான் அறியாயோ என்பலங்கள் பாரடா வுன்றன் கந்தன் படுகிறதை ஈசுரனு மென்றனுக்கு இருந்த இடமுமருளி மாயனிடம் போயலையில் வாழ்ந்ததுநீ கண்டிலையோ எமலோகம் வானம் இந்திரலோ கம்வரையும் நவகோளும் நானல்லவோ நாட்ட மறிந்திலையோ முப்பத்து முக்கோடி உற்றதே வாதிகளும் நாற்பத்துநாற் கோடிரிஷி நமக்கென்ற றிந்திலையோ அறியாத வாறோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய்ச் சிறியனென் றிராதேயென் சிரசுடம்பு கண்டிலையோ உன்னுடைய கந்தன் உயரமது நானறிவேன் என்னுடைய உயரம் இனிநீ யறிவாயே ஆனதா லென்னுடைய ஆங்கார மத்தனையும் கானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ என்று மதமாய் இவன்பேசத் தூதனுந்தான் அன்று அந்தச்சூரனுக்கு அறையாம லேதுரைப்பான் நீயோ தானெங்கள் நிமலன் தனக்கெதிரி பேயோரி நாய்நரிகள் பிய்ச்சிப் பிடுங்கியுன்னை கண்ட விடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கிக் கொண்டோடித் தின்னவே லாயுதங் கொண்டுவந்தார் தேவர் சிறையும் தெய்வமட வார்சிறையும் மூவர் சிறையும் மும்முடுக்க முந்தீர்த்து உன்னுடைய சேனை உற்றபடை யழித்து நின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி அரசாள்வா ரெங்கள் ஆறுமுக வேலவனார் துரையான கந்த சுவாமிசொல்லி யனுப்பினர்காண் என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் அன்றே மனது அளறித்துணிந் தேதுரைப்பான் ஆனா லறிவோம் ஆண்டி தனையுமிங்கே போனா லென்னோடே போருசெய்ய யேவிடுநீ சூர னிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள் தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு

சூரன்பாடு

சுவாமி மனமகிழ்ந்து சூரன் தனையறுக்கக் காமிவே லாயுதத்தைக் கையிலெடுத்தா ரம்மானை வேலா யுதமெடுத்து வேதப் படைசூழ சூலாயுதப் பெருமாள் துடியாய் நடக்கலுற்றார் கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார் வந்தார்காண் சூரன் வலுவிழந்தா னம்மானை சூர னவன்கண்டு தோசப் படையணிந்து மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான் கண்டா ரீராறு கரத்தோ னகமகிழ்ந்து பண்டார வேசம்பண்பா யெடுத்திறுக்கி முன்னே வருஞ்சூரன் முகத்தை யவர்பார்த்துப் பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார் வம்பி லிறவாதே வாழ்விழந்து போகாதே தம்பி தலைவன் தளமு மிழவாதே பற்பக் கிரீடப் பவுசு மிழவாதே அற்ப மிந்தவாழ்வு அநியாயம் விட்டுவிடு கரணமீ தில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து மரணம் வந்துசீவன் மாண்டுபோ கும்போது நன்மை யதுகூட நாடுமே யல்லாது தின்மை வராது தேவரையும் விட்டுவிடு தீட்சை யுடன்புத்தி செவ்வேநே ரிட்டுவொரு மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்கப் புத்திகெட்டப் பாவி போர்சூர னேதுரைப்பான் இரந்து திரியுகின்ற இரப்பனுக் குள்ளபுத்திப் பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு ஏற்குமோ ஞானம் இரப்போருக் கல்லாது ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை சண்டைக்கு வாவெனவே தரங்கூறித் தூதுவிட்டப் பண்டார மென்ற படைக்கார னும்நீயோ என்னுடைய சேனை எல்லாமிக அழித்து என்னையும் நாய்நரிக்கு இடுவேனென் றதும்நீயோ என்றே யச்சூரன் இயம்பி மிகநகைத்துப் பண்டார னோடே படையெடுத்தா னம்மானை சூரனுட படைகள் துண்டந்துண்ட மாய்விழவே 880 வீரர்களும் வந்து வெட்டினா ரம்மானை வெட்டிதினால் செத்தார் மிகுசூ ரக்குலங்கள் பட்டார்க ளென்று பார்சூரன் தான்கேட்டு வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே இன்றுவந்து வாய்த்துதென்று எம்பெருமா ளுமகிழ்ந்து வேலா யுதத்தை விறுமா பதஞ்சேவித்து மேலாம் பரனார் விமல னருளாலே எறிந்தார்காண் சூரன் இறந்தானே மண்மீதில் பறிந்தேவே லாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே சூரன் மடிந்து துடித்துயிர் போகுகையில் வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல் இந்நிலமேல் பாவி இறந்தாயே வம்பாலே நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல் கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல் விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே என்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால் என்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால் வேலா யுதத்தாலே வென்றுகொன்ற தல்லாது ஏலாது வுன்னாலே இளப்பமிங்கே பேசாதே என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன் கொன்றாரே சூரனுட குறவுயிரை யம்மானை சூரனைத் துணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது மூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம் தீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள் ஆதியே நாதி அனாதித் திருவுளமே சோதியே யென்னுடைய சூலசா பந்தீரும் என்று உமையாள் எடுத்து மிகவுரைக்க நன்றெனவே அந்த நாரா யணர்மகிழ்ந்து சாப மதுதீரச் சாந்தி மிகவளர்த்தார் தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து செம்மையுடன் கயிலை சென்றனள்கா ணம்மானை

இரணியன் பாடு

சத்திசா பந்தீர்த்துத் தவலோக மேயனுப்பித் 920 தத்தியாய்ச் சூரனையும் சங்காரஞ் செய்துஅந்த சூரனூர் தன்னைத் தீயோன் தனக்களித்து வீரசூ ரன்தனையும் மேலுமந் தவ்வுகத்தில் பார இரணியனாய்ப் படைத்தார்கா ணம்மானை சூர னிரணியனாய்த் தோன்றினா னவ்வுகத்தில் மாய னொருகோலம் மகவா யுருவெடுத்து வாயல் நடையில்வைத்து மாபாவிச் சூரனையும் நெஞ்சை யவர்நகத்தால் நேரேப் பிளந்துவைத்து வஞ்சக னோடே மாயன் மிகவுரைத்தார் சூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில் ஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக் கொன்னே னானென்று கூறினே னப்போது அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய் வேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே ஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல் வாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை என்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன் பத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து இத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே மாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து கொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது திகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால் பகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும் முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான் என்று இரணியனை இரணசங் காரமிட்டு அன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை அந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில் கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார் செந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை

அகிலம் இரண்டு

divider
அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்து ஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்து வேதியரும் நன்றாய் விளம்புவா ரம்மானை சூரபற்ப னென்ற சூரக்குலங் களைத்துணித்து வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில் இரணியனாய்த் தோன்றி நின்றஇ ராச்சதனைக் கொன்னு கிரேதா குவலயமும் நானழித்து முன்னு கரந்திருந்த ஆறு முகவேசம் செந்தூரு வாரி திரைமடக்கில் வாழ்ந்திரென்று வந்தோங் காணய்யா மலர்ப்பாதந் தெண்டனிட என்றேதா னாதி ஈசுரரோ டேதுரைப்பார் அன்றேதா னீசர் அருளுவா ராயருக்கு

திரேதா யுகம் - இராவணன் பாடு

முன்னே குறோணி முடிந்ததுண் டாறதிலே இன்னமூணு துண்டம் இருக்குதுகாண் மாயவரே என்றீசர் சொல்ல எல்லோருந் தான்கூடி அன்றிருந்த துண்டம் அதிலேயொரு துண்டமதை உருவாய்ப் படைத்து உயிர்க்கொடுக்கு மவ்வளவில் அருகே யிருந்த அச்சுதரு மேதுரைப்பார் முன்னே இவனும் முற்பிறப் பானதிலே என்னோடே பேசி எதிர்த்தான் காணீசுரரே ஆனதா லிப்பிறப்பு அரக்க னிவன்றனக்கு ஈனமில்லாச் சிரசு ஈரஞ் சாய்ப்படையும் பத்துச் சிரசும் பத்துரண்டு கண்காதும் தத்துவங் களோடே தான்படையு மென்றுரைத்தார் மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து வாய்சிரசு பத்தாய் வகுத்தார்கா ணம்மானை கூடப் பிறக்கக் குண்டிலிட்ட ரத்தமதை வாட அரக்கர் குலமாய்ப் பிறவிசெய்தார் அப்போ படைக்கும் அவ்வளவில் மாயவனார் மெய்ப்பான மேனிதனில் வியர்வை தனையுருட்டி விபீஷண னென்று மெய்யுருவந் தானாக்கிக் கவுசலமா யரக்கன் தம்பியெனக் கருத்தாய்க் கூடி யிருந்து அரக்கன் குறியறிந்து வேடிக்கை யாக வீற்றிரென்று தானுரைத்தார்

இராவணன் வரம் வேண்டல்

பத்துத் தலையான பாவி அரக்கனவன் மற்று நிகரொவ்வா வாய்த்தபர மேசுரரை வணங்கி வரம்வேண்ட மனதிற் பிரியமுற்று இணங்கியே ஈசர்பதம் இறைஞ்சிநின்றா னம்மானை தவத்தருமை கண்டு தலைபத் தரக்கனுக்குச் சிவத்தலைவ ரானோர் செப்புவா ரம்மானை காதுரண்டு பத்து கண்ணிருப துள்ளோனே ஏது வரம்வேணும் இப்போது சொல்லுமென்றார் அப்போது ஈசுரரை அரக்க னவன்வணங்கி இப்போது ஈசுரரே யான்கேட்கு மவ்வரங்கள் தருவோ மெனவே தந்தி முகன்பேரில் உருவா யெனக்கு உறுதிசெப்பு மென்றுரைத்தான் அப்படியே ஈசர் ஆணையிட்டுத் தான்கொடுக்க சொற்படிகேட் டேயரக்கன் சொல்லுவா னப்போது மூன்றுலோ கத்திலுள்ள முனிவர்தே வாதிகளும் வேண்டும்பல ஆயுதமும் விதம்விதமா யம்புகளும் வீரியமாய் நானிருக்கும் விண்தோயுங் கோட்டைசுற்றிச் சூரியனுஞ் சந்திரனும் சுற்றியது போய்விடவும் சிவனா ரொருகோடி செய்ய வரந்தரவும் புவனம் படைக்கும் பிரம்மா வொருகோடி உமையா ளொருகோடி உற்ற வரந்தரவும் இமையோ ரரைக்கோடி இப்படியே உள்ளவரம் மூணரைக் கோடி உள்ளவர மத்தனையும் கொடுக்கு மளவில் குன்றெடுத்தோன் தன்தேவி அலைமேல் துயிலும் அச்சுதனார் தன்தேவி சிலைவே லெடுத்துச் செயிக்கவல்லான் தன்தேவி அலங்கா ரமாகி அன்னைப் பொழுததிலே கலங்கா தான்தேவி கயிலைஉமை யாளருகே மணிமேடை தன்னில் மகிழ்ந்திருக்கு மவ்வளவில் கெணியா மலேயரக்கன் கெடுவ தறியாமல் அம்மை தனைக்கண்டு அயர்ந்து முகஞ்சோர்ந்து கர்ம விதியால் கைமறந்து நின்றனனே நின்ற உணர்வை நெடிய சிவமறிந்து அன்றந்த அரக்கனுக்கு ஆதிவரங் கொடுத்து கேட்ட வரங்கள் கெட்டியாய்த் தான்கொடுத்து நாட்ட முடன்சீதை நகையா லழிவையென்று இரக்கமில் லான்கேட்ட ஏற்றவரங்க ளெல்லாம் அரக்க னவன்றனக்கு ஆதிமிகக் கொடுத்தார் ஆதிகொடுத்த அவ்வரங்க ளத்தனையும் நீதியில் லான்வேண்டி நெடியோன் தனைவணங்கிக் கொண்டுபோ கும்போது குன்றெடுத்த மாயவனார் கண்டு மறித்துக் கௌசலமிட் டேமாயன் அரைக்கோடி வரமாய் ஆக்கிவிட்டார் மாயவரும் சரக்கோடி மூணும் தான்தோற்றுப் போயினனே ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி சீரிய சீதை யாலே சீவனுக் கிடறும் பெற்று வாரிய மூணு கோடி வரமது தோற்றுப் பின்னும் மூரியன் மூணு லோகம் முழுதுமே யடக்கி யாண்டான்

இராவணன் கொடுமை

முக்கோடி வரத்தை உச்சிக்கொண்டார் மாயவரும் அக்கரைக் கோடி அரக்கன்வரம் கொண்டேகித் தேவரையும் மூவரையும் தேவேந் திரன்வரையும் நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை வாசு அரக்கன் மணிமேடை தூராட்டால் வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாருவென்பான் வருண னவன்மேடை வந்துத்தொளி யாதிருந்தால் மரணம்வரும் வரையும் வலுவிலங்கில் வைப்பேனென்பான் சந்திரருஞ் சூரியரும் சாய்ந்துமிகப் போகாட்டால் சந்து சந்தாகச் சரத்தாலறுப் பேனென்பான் தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால் கைவரைந்து கட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான் நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும் பாலு குடஞ்சுமந்து பணிந்துமுன்னே நில்லாட்டால் அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்தரைத்து நெற்றிதனில் பொட்டிடுவேன் நிச்சயமென் பானரக்கன் வானவர்க ளெல்லாம் மலரெடுத்து என்காலில் தானமது பண்ணித் தாழ்ந்துநில்லா தேயிருந்தால் சாகும் வரைக்கும் தடியிரும்பி லிட்டவரை வேகும் படிக்கு வேள்வியதி லிட்டிடுவேன் மாமறலி மூவர் வந்தென்சொல் கேளாட்டால் காமனையும் ஈசன் கண்ணா லெரித்ததுபோல் என்னுடைய கண்ணால் இயமனையுங் காலனையும் துன்னுடைய வல்லத் தூதனையும் நானெரிப்பேன் இவ்வுகத்தி லுள்ள இராசாதி ராசரெல்லாம் முவ்வுகமுங் கப்பமிங்கே முன்னாடி தாராட்டால் நெருப்பெடுத் திட்டிடுவேன் நேரேகொண்டு வாராட்டால் எரிப்பே னொருஅம்பால் இராசாதி ராசரையும் இப்படியே பாவி இந்திரலோ கம்வரையும் அப்படியே அரக்கன் அடக்கியர சாண்டிருந்தான்

தேவர்கள் முறையம்

அப்படியே அரக்கன் ஆண்டிருக்கு மந்நாளில் முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே தேவாதி தேவர் தினமேவல் செய்திடவே மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே முறுக்கம தால்பாவி ஊழியங்கள் கொண்டதினால் பொறுக்க முகியாமல் பூலோகத் தார்களெல்லாம் தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும் அய்யா திருமாலுக்(கு) அபயம் முறையமென அபயமிடு மொலியை அச்சுதருந் தானமர்த்திக் கபயமிடும் வேதன் கயிலையது தானேகி ஆதி பரமன் அடியைமிகப் போற்றி சோதித் திருமால் சொல்லுவா ரம்மானை பத்துத் தலையுடைய பாவி யரக்கனுக்கு மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததினால் தேவரையும் மூவரையும் தேவேந்தி ரன்வரையும் நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டா னம்மானை ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட ஈனமாய்க் கேட்டு இருக்க முடியுதில்லை பள்ளி யுறக்கம் பரிவாய் வருகுதில்லை தள்ளினால் தேவரையும் தற்காப்பா ராருமில்லை என்ன வசமாய் எடுப்போஞ் சொரூபமது தன்னிகரில் லாதவனே சாற்றுவீ ரென்றனராம் மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து தூயவரு மங்கே சொல்லுவா ரம்மானை பாவி யரக்கனுக்குப் பண்டுநா மீந்தவரம் தாவிப் பறிக்கத் தானாகா தென்னாலே

இராமாவதாரம்

என்றரனார் சொல்ல எம்பெருமா ளச்சுதரும் அன்றெம் பெருமாள் ஆலோ சனையாகி என்னை மகவாய் எடுக்கத் தசரதரும் முன்னே வரங்கேட்டு உலகி லவரிருக்க அன்னுகத்தி லுள்ள அரசன் தினகரனும் பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க நெட்டையா யரசர் நெடுநாள் தவசிருக்க சட்டமதைப் பார்த்துத் தானனுப்பு மீசுரரே பின்னும் பெருமாள் பெரியோனைப் பார்த்துரைப்பார் முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும் வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்கத் தானவரே யிப்போ தான்படைக்க வேணுமென்றார் ஏவலா யென்றனுக்கு இப்பிறப் பானதிலே காவலா யென்றனுக்குக் கைக்குள்ளே நிற்பதற்குப் பள்ளிகொண்டு நானிருந்த பாம்புரா சன்தனையும் வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்கு மாசனமும் இம்மூணு வேரும் என்னோ டுடன்பிறக்கச் சம்மூலப் பொருளே தான்படையு மென்றுரைத்தார் மாய னுரைக்க மறையோ னகமகிழ்ந்து தூயவரு மந்தப் படியே தெளிந்திருக்கப் படைக்கும் பொழுதில் பரதேவ ரெல்லோரும் அடைக்கலமே மாயன் அடியெனத் தெண்டனிட்டார் தெண்டனிட்டுத் தேவரெல்லாம் செப்புவா ரம்மானை மண்டல மெங்கும் மயமாய் நிறைந்தோனே எங்களை லோகமதில் இப்போ படைப்பீரால் மங்களமா யுள்ள வலுவும் பெலமதுவும் ஆயனுக்கு நாங்கள் அடிபணிந் தேவல்செய்ய நேயனே நீரும் நெறியாய்ப் படையுமென்றார் ஈசர் மகிழ்ந்து இப்படியே தான்படைக்க வாசத் தசரதரும் வந்து தினகரரும் மகவாசை யுற்று மகாபரனைத் தானோக்கி அகப்பாச மற்று அதிகத் தவமிருந்து நாத னறிந்து நன்மறையைத் தான்பார்த்து பாத னரக்கன் பத்துச் சிரத்தானைத் தேவர் துயரமறத் திருமால் தசரதற்கு மூவ ருடன்கூடி உலகமதி லேபிறக்க அரக்கர் குலமறவே அம்மைசீதா லட்சுமியை இரக்கம்போ லுள்ள ஏற்ற தினகரற்கு மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி செகமீதில் ஞான சிருஷ்டி சிவமயமாய் இப்படியே வேதத்(து) எழுத்தின் படியாலே அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம் உடனே தசரதற்கு உற்றதிரு மாலைத் திடமாய்ப் பிறவி செய்ய எனத்துணிந்தார் அப்போது ராமர் அய்யா திருமாலை இப்போ துபடைக்க ஈசுரனார் சம்மதிக்கப் படைக்கும் பொழுது பரமசிவ னாரை நடக்குந் திருமால் நாதனைப்பார்த் தேதுரைப்பார் அவ்வுலகி லென்னை அதிகத் தசரதற்கு இவ்வுலகு விட்டங்(கு) என்னைப் பிறவிசெய்ய வந்த விபரம் வகைவகையா யீசுரரே என்றனக்குத் தானமைத்து என்னை யனுப்புமென்றார் மாய னிதுகேட்க மறையோ னகமகிழ்ந்து தூயவரு மங்கே சொல்லுகிறா ரம்மானை பரலோ கமென்ற பைம்பொன் கயிலையதில் சாலோ கந்தன்னில் தானிருந்த மாமுனிவர் துசுவீசு மாமுனியும் சுகசீல மாமுனியும் விசுவாச மாயிருந்து விசாரம திட்டனராம் வாருந் துசுவீசு மாமுனியே நீர்கேளும் நீரும் நாமுங்கூடி நீணிலத்தில் போயிருந்து நானுமொரு பெண்மதலை நல்ல மகவாகத் தானுமோ ராண்மதலை தலைவன் தனைவாங்கிச் சம்மந் தமாகித் தானிருந்து நாடாண்டு உம்மந் தமான உதவிபெற வேணுமென்று இருபேரு மிருந்து எனைநினைந்து மாமுனிவர் உருவேற்றி வேள்வி ஓம மதுவளர்க்க இந்தப் படியே இவர்களிரு மாமுனியும் எந்தன் தனைநோக்கி இருந்தார் தவசுகண்டீர்

குறு முனி சாபம்

அல்லாமற் பின்னும் அரக்கன்ரா வணன்தனக்குக் கொல்லாமற் கொல்லவொரு குறுமுனிவன் சாபமுண்டு அரக்கன் வரம்வேண்டி அவன்போகு மவ்வளவில் இரக்கமாய் மாமுனியும் இருந்தான் தவசதிலே தவசுநிலை பாராமல் தலைபத் தரக்கனுந்தான் பவிசு மதமாய்ப் படுவ தறியாமல் முனியையவன் காலால் ஒத்தினான் மாபாவி அநியாயப் பாவி அரக்க னவன்றனக்குக் கூறினான் மாமுனியும் கொள்ளைகொண்டச் சாபமது தூறின சாபத் துல்லியத்தை நீர்கேளும் மாலை மிகப்போற்றி வாய்த்ததவம் நிற்கையிலே காலெடுத்து ஒத்தினையே கள்ளாவுன் றனக்கு இந்தத் தவசுதனில் ஈசுரரைத் தானினைந்து உந்தன் தனையறுக்க ஒருராம பாணமது வந்து பிறந்திடவும் மாய னதைத்தானெடுத்து உந்தனுட மார்பில் ஊடுரு வவிடவும் துசுவீசு மாமுனிவன் தசரதராய்ப் பூமிதனில் பிறந்து இருந்திடவும் பின்னுஞ் சுகசீல மாமுனியும் தினகரராய் வந்து பிறந்திடவும் ஓமுனிக்கு லட்சமியும் வில்லோ டுதித்திடவும் இராமபா ணத்தோடே இராமர் தசரதற்கு முராகமத் தின்படியே உலகி லுதித்திடவும் பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும் நாணங்கெட் டரக்காவுன் நல்லதலைப் பத்திழந்து சேனைத் தளமிழந்து சிரசிழந்து வாழ்விழந்து வானரங்கள் வந்துன் வையகத்தைச் சுட்டழித்து உன்சடல மெல்லாம் உழுத்துப் புழுப்புழுத்துத் தன்சடலப் பட்டுச் சண்டாளா நீ மடிவாய் வேண்டுவேன் தவசு விமலன் தனைநோக்கி ஆண்டுபன்னி ரண்டாய் அவன்றவசு நின்றனனே நின்ற தவத்தின் நிலைமையறிந் துமையாள் அன்றைக்கு வந்து அருளினா ளாயிழையும் உரைத்த மொழிகேட்டு உற்ற முனிதனக்குத் துரைத்தனமா யித்தனையும் சொல்லி விடைகொடுத்தேன் இப்படியே மாமுனிக்கு ஈந்திருக்கு மிவ்வரங்கள் அப்படியே துசுவீசு மாமுனியுஞ் சுகசீல மாமுனியும் நம்மை வருந்திநிஷ்டை செய்யுகிறார் ஓமுனிக்கு நல்ல ஒழுங்குசெய்ய வேணுமல்லோ அல்லாமல் தேவாதி அபயம் பொறுக்கரிது எல்லா மிதுகண்டு இப்பிறவி செய்யுமென்றார் நல்லதுகா ணென்று நல்லதிரு லட்சுமியை வல்லமுள்ள பெட்டகத்தில் வைத்தார்கா ணீசுரரும் இராமபா ணமதையும் நன்றாய்ப் பிறவிசெய்ய சீராமஸ்ரீ யம்பகனும் சிவனு மகமகிழ்ந்து என்ன விதமாய் இதுபிறவி செய்வோமென்று பொன்னம் பலத்தோர் புத்திநொந்து தாமிருந்தார் ஈசுரரு மப்போ இரத்தின கிரிதனிலே வீசு பரனும் வேள்வி யதுவளர்க்க வேள்வி வளர்த்து விமல னுருவேற்றத் தாழ்வில்லா ஆயன் தற்சொரூபந் தானாகித் திருக்கணைக் காலில் செய்ய நரம்புருவி கருக்கணமாய் ராம பாணக் கணையெனவே உறுதிகொண்டு வேள்விதனில் விட்டெறிந்தா ரம்மானை பிறிதிகொண்டு லட்சுமியும் பிலத்த திருக்கரத்தில் தூண்டு விரலில் துய்ய நரம்புருவி வேண்டும் பெரிய வீரவில் லீதெனவே ஆராரு மிந்தவில்லை அம்பேற்றக் கூடாமல் சீரா மரேற்ற சிந்தித்தா ளம்மானை உடனேயது வில்லாய் ஓம மதில்பிறக்கத் திடமாக ராமர் திருக்கணைக்கா லுள்நரம்பு பாணமதாய் வேள்விதனில் பரிவாயப் பிறந்திடவே தாணரும் வானோரும் சங்கத்தோ ருங்காண எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே வல்லோர்க ளான வாய்த்ததே வாதியெல்லாம் சங்கடங்கள் தீர்ந்ததென்று சந்தோசங் கொண்டாட அங்கணங்க ளான அலகைமிகக் கூத்தாட இராமபா ணத்தாலே இராவண சூரனையும் ஸ்ரீராமர் சென்று தென்னிலங்கை தன்னிலுள்ள அரக்கர்குல மறுப்பார் அச்சுதனா ரென்றுசொல்லி இரக்கமுள்ள தேவரெல்லாம் இரங்கிமிகக் கொண்டாட வில்லோ டுடன்பிறந்த வீரலட்சு மியெனவே வல்லோர்க ளாராலும் வந்திந்த வில்லதையும் வளைத்தோர்க்கு நல்ல மாலைசூட்ட லாமெனவே தழைத்த சுகசீல தாட்டீக மாமுனியைத் தினகரராய்ப் பூமிதனில் செய்துவைத்து லட்சமியை மனோகரமாய்ப் பூமியிலே வைத்தபெட்ட கத்தோடே வில்லோ டேபிறக்க விமல னருளினராம் நல்ல துசுவீசு மாமுனியை நாடதிலே தசரதராய்த் தோன்றவைத்துத் தேசாதி ராசனுக்கு விசமாலை ராமருமாய் வீரக் கணையோடே கூடப் பிறக்கக் குன்றெடுத்தார் தான்துயிலும் நீட அரவணையை நீதலட்சு மணராக்கித் தலையணை மெத்தையையும் சத்துரு பரதனுமாய் நிலைவரமாய் ஈசன் நெறியாய்ப் பிறவிசெய்யத் தேவரையும் வானரமாய்ச் சிவனார் பிறவிசெய்ய மூவரை யும்பிறவி உள்ளதெல்லாஞ் செய்திடவே கொடுமுடியாய்ப் பிறந்த கோளிலங்கைப் பாவிகளை முடியடிவே ரில்லாமல் முழுது மறுப்பதற்கு வேண்டும் பிறவியெல்லாம் விமல னருளிமிகத் தாண்டவ சங்காரம் தானிதென்றா ரம்மானை இராவணன் தன்னைக் கொல்ல இராம பாணங்க ளோடே சிராம ராய்மாயன் தானும் தசரதன் தனக்குத் தோன்ற விராகன மாது சீதை வில்லுட னுதிக்கத் தேவர் மராம ரக்குலங் களாகி வந்தனர் புவியின் மீதே சிராமருந்தான் ராவணனைச் செயிக்க ஒருவிதமாய் இராமபா ணத்தோடே நாட்டில் பிறந்தனராம் தென்னிலங்கை தான்முடிய சீதை சிறையிருக்கப் பொன்னரிய வில்லோ(டு) உடன்பிறந்தாள் பொன்மாது தேவரெல்லாம் வானரமாய்த் தென்னிலங்கை சுட்டழிக்கப் பூவர் சுகுமுனிவர் போர்விசுவ கன்மனெனும் வானரத்துக் கேற்ற மந்திரி தானாகித் தானவரையு மனுப்பித் தரணிதனி லெம்பெருமாள் லட்சும ணரெனவே ஏற்றசத்து ருபரதன் கட்சியுடன் மாயன் கணையோ டுடன்பிறந்தார் இப்படியே ராவணற்கு எல்லோ ரும்பகையாய் முப்படியே உள்ள முறைநூற் படியாலே வந்து பிறந்தார்காண் மாயவரு மம்மானை இப்படியே ராமர் ஏற்ற தசரதற்கு அப்படியே பிறந்து அங்கிருந்தா ரம்மானை

சீதா கல்யாணம்

சீதை வளர திருவில்லுந் தான்வளர கோதைக் குழல்சீதைக் கோமான் மிகவளர சிராமர் பிறப்போர் சிறப்பாய் வளர்ந்திடவே இராமர் குலங்கள் இரகசிய மாய்வளர அரக்கன் கொடுமை அண்டமள வேவளர சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே மாதை மணமிடவே மாதா மனதிலுற்றுத் தன்புரு சனோடே தையல்நின் றேதுசொல்வாள் அம்பும்வில் லும்வளர ஆயிழையுந் தான்வளர்ந்து பக்குவங்க ளாச்சே பைங்கிளிக்கு மாலையிட ஒக்குவ தென்ன உரைப்பீரென் னுத்தமரே என்று மடமாது ஏற்ற தினகரரை நின்று வணங்கி நேரிழையுஞ் சொல்கையிலே வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும் அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும் பூரா சமான புவியைம்பத் தாறிலுள்ள இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ் சூட்டுமென்று சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியைக் கண்டுநின்று மாமுனியும் கண்ணனார்க் கேதுரைப்பான் பண்டு உனக்குப் பரம சிவனாரும் வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்குச் செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால் பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ என்று கலைக்கோட்டு மாமுனியுந் தானேகி சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே அன்றைம் பத்தாறு அரசருக்கு மாளனுப்பி தேசாதி தேசர் திசைவென்ற மன்னரெல்லாம் மேசாதி யானோரும் மேவுந்தெய் வேந்திரனும் இராவண சூரன் இராமர்முத லானவரும் இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம் வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல் முல்லைமன்ன ரெல்லாம் முகம்வாடிப் போயிருந்தார் இராம ரெடுத்து இராம சரமேற்றி சிராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை மணம் முகித்துவானோர் மங்களகீ தத்தோடே துணைவர் தலைவரொடு சென்றா ரயோத்தியிலே அயோத்தியா புரியில் ஆனதம்பி மாரோடும் கையேற்று வந்த கன்னி திருவோடும்

ஸ்ரீராமர் வனவாசம்

வாழ்ந்திருக்கும் நாளில் மாதா கைகேசியம்மை 360 தாழ்ந்தமொழி சொன்னதினால் தம்பி பரதனையும் நாடாள வைத்து நல்லஸ்ரீ ராமருந்தான் கூடவொரு தம்பியோடும் குழல்சீதை மாதோடும் நாடி நடந்தார் நல்லவன வாசமதில் வாடிவந்து கானகத்தில் வாழ்ந்திருக்கும் நாளையிலே லட்சுமண ருமங்கே ஏற்றகனி தான்பறிக்கக் கட்சியுடன் நடந்து காட்டில் மிகப்போகச் சூர்ப்பநகை தன்மகனும் துய்ய தவசுநிற்க ஆர்ப்பரவா யீசர் ஆகாசத் தேவழியே வாளை அயச்சார் வாய்த்தபர மேசுரரும் தாழ வரும்போது தாமனந்த லட்சுமணர் கண்டந்த வாளைக் கைநீட்டித் தான்பிடித்துத் துண்டம் விழஆலைத் துஞ்சிவிழ வெட்டினர்காண் பட்டந்த ஆலும் படபடெனச் சாய்ந்திடவே வெட்டந்து வீழ்ந்தான் மீண்டுதிரம் பாய்ந்ததுவே அரக்கன்தாய் கண்டு அலறி வெகுண்டெழுந்து இரக்கமில்லாச் சூர்ப்பநகை இலட்சுமண ரைத்தேடி தேடி ஸ்ரீராமர் சீர்பாதங் கண்டணுகி நாடியெனைத் தாவுமென்று நாணமில்லா தேயுரைத்தாள் என்பாரி யிங்கே இருக்கவே வேறொருவர் தன்பாரி தன்னைத் தான்விரும்பேன் போடியென்றார் போடிநீ யென்ற புத்திதனைக் கேட்டரக்கி தேடியே லட்சுமணரைச் சேரவுற வாடிநின்றாள் உறவாடி நின்ற ஒயிலை யவரறிந்து பறபோடி யென்று பம்பத்தன மூக்கரிந்தார் மூக்கு முலையும் முகமும் வடிவிழந்து நாக்குரைக்க வாடி நாணங்கெட்டத் தீயரக்கி தன்னுடனே கூடித் தமய னெனப்பிறந்த மன்னன்ரா வணன்தமக்கு வகையா யுரைக்கலுற்றாள் காட்டி லொருபெண் கமலத் திருமகள்போல் நாட்டிலொவ்வாக் கன்னி நான்கண்ட தில்லையண்ணே உன்றனக்கு ஆகுமென்று உற்றவளை நான்பிடித்தேன் என்றனுட மூக்கரிந்தோர் இருவருண் டல்லாது மற்றொருவ ரங்கே வாழ்ந்திருக்கக் கண்டதில்லை கற்றொ ருவர் காணாது கையிலம்பு காணாது மருவனைய அண்ணேவுன் வாய்த்த விரலதிலே ஒருயிறைக்கே வுண்டு உற்றஅவர் தன்னுயரம் என்றந்த அரக்கி ஈனம்பல துரைக்க அன்றந்த ராவணனும் ஆகாசத் தேரேறிப் பிச்சைக் கெனவே புறப்பட்டான் காடதிலே அச்சமில்லா லட்சுமணர் ஆனஸ்ரீ ராமருமாய் மானின் பிறகே மனம்வைத்து நின்றிடவே வானின் செயலால் வானவர்கள் பார்த்திருக்க நாரா யணர்தேவி நல்லதிரு லெட்சுமியை ஏராத பாவி இலச்சைகெட்டத் தீயரக்கன் தேரிலே அம்மைதனைத் திருடிக்கொண் டேகினனாம் பாரிலே வுள்ள பட்சி பறவைகளும் கண்டு பதறிக் கதறிமிக அழவே அண்டர் முனிதேவர் எல்லோருந் தாமழவே மான்வேட்டையாடி மாரீசனை யறுத்துத் தான்வேட் டையாடும் தகையாலே தம்பியுடன் வந்தார்காண் லட்சுமியும் வாழ்ந்திருக்கு மண்டபத்தில் பந்தார் குழலனைய பாவையரைக் காணாமல் கலங்கி மிகவாடி கண்ணீர் மிகச்சொரிய மலங்கியே லட்சுமணர் மண்ணிற் புரண்டழுதார் என்னே மணியே எனைப்பெற்ற மாதாவே பொன்னே யமுதே பெற்றவளே யென்றழுதார் இராமர் முகம்வாடி நாயகியைத் தான்தேடி ஸ்ரீரா மர்கலங்கி சினேக முடனழுதார் மனுவாய்ப் பிறக்க மனுவுடம்பு கொண்டதினால் தனுவா னதையடக்கித் தானே புலம்பலுற்றார் அன்ன மயிலோடும் அன்றில் குயிலோடும் புன்னை மலரோடும் புலம்பி மிகவழுதார் வன்னமுள்ள யானை வாய்த்தசிங் கத்தோடும் பெண்ணமுதைக் கண்டீரோ என்று புலம்பலுற்றார் இப்படியே ராமர் இளைய பெருமாளும் அப்படியே சொல்லி அழுதழுது தான்வாடிச் சோலை மரத்தின்கீழ்ச் சோர்ந்து முகம்வாடி மாலவருந் தம்பி மடிமேல் துயின்றிருக்க அஞ்சனை யாள்பெற்ற அனுமனதில் வந்தடைய சஞ்சல மேதென்று சாரதியுங் தெண்டனிட மின்செறியு மாயன் விழித்தவனைத் தானோக்கிக் கவசகுண்ட லமணிந்த கார்குத்தா யாரெனவே உபசரித்துச் சொன்ன உச்சிதத்தைத் தானறிந்து அய்யரே யென்னை ஆட்கொண்ட நாயகமே மெய்யரே நீங்கள் மெலிந்திருப்ப தேதெனவே கேட்க அனுமன் கிருபைகூர்ந் தெம்பெருமாள் சேர்க்கையுடன் சொன்னார் சீதையுட தன்வளமை ஏற்கை யாகக்கேட்டு இயலுனுமன் ஏதுசொல்வான் நல்லது அடியேன் கேட்டேன் நானினி வுரைக்கும் வாறு சொல்லவுங் கேட்பீ ரெந்தன் திருவடை யாளஞ் சொன்னீர் வல்லவர் தகப்ப னானீர் வரந்தர வேணு மிப்போ புல்லர்வா ழிலங்கை சுட்டு அம்மையைக் கூட்டி வாறேன் என்தாய் மொழிந்த இயலடையா ளத்தாலே முன்தானே பெற்ற முதல்வர்தா னென்றனக்கு அய்யா தானாகும் அடைக்கலமே யாமடியார் பொய்யாம லென்றன் பேரனுமன் கண்டீரே இலங்கை தனைச்சுட்டு அம்மையைக் கூட்டிவர மலங்காதே போவென்று வாக்கருள வேணுமையா சுக்ரீவன் சாம்புவனும் சுத்தமுள்ள வீரர்களும் ஒக்கவொரு முகமாய் உடையோன் பதமடைய கெருடன் மிகமறித்துக் கேலியிட்ட ஞாயமதும் திருடன் கொடிய தீபாவி ராவணனும் அம்மை தனைக்கொண்டு அவன்கோட்டை யானதிலே செம்மையில்லாப் பாவி சிறையில்வைத்த ஞாயமதும் எல்லா மறிந்து எம்பெருமாள் கோபமுற்று வெல்லத் துணிந்தார் மிகுபடைகள் தான்திரட்டி எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களையும் முழுதும் வருத்தி ஒப்பமிட் டெம்பெருமாள் விசுவகம் மாளனையும் விரைவா யருகழைத்து 460 வசுவாசு மைந்தன் வாய்த்த அனுமனையும் அனுமன் தனையேவி ஆன மலையெடுத்துத் துனும னுடனே தோயக் கடலதுக்குள் கோட்டைய திட்டுக் குக்குளித் தங்கேகி ஓட்டனாய் விட்டார் உற்ற அனுமனையும்

அனுமன் தூது

பூட்டமுடன் வாயு புத்திரனுந் தான்மகிழ்ந்து நாட்ட முடனிலங்கை நாடாளும் பாதகனைக் கண்டு முடுகிக் கருத்தழியத் தான்பேசி கொண்டு இலங்கை குப்பையிடத் தீக்கொளுத்தி மால்கொடுத்த வாளி மாதுகையி லேகொடுத்து வால்கொண்டு வீசி வனங்காவு தானழித்துக் கேதார மாமலையும் கீர்த்தியுட னேகுதித்துப் பாதார மென்று பணிந்தானே ராமரையும்

இராவணன் பாடு

அரக்க னவன்பேசும் அநியாயந் தான்கேட்டு இரக்கமுள்ள எம்பெருமாள் எழுந்தார் படைக்கெனவே படைக்கு இவர்நடக்க பார்த்துவி பீஷணனும் அடைக்கல மென்று அவர்பாதஞ் சேர்ந்தான்காண் சேர்ந்த வுடனே திருமால் மனமகிழ்ந்து ஓர்ந்த படையோடே உடன்யுத்தஞ் செய்திடவே அரக்கன் படையும் அச்சுதனார் தன்படையும் இரக்க மில்லாமல் இருபேருஞ் சண்டையிட்டார் படைபொருது வெல்லாமல் பத்துத்தலை யுள்ளோனும் கடகரியுந் தோற்றுக் கையிழந்தா னம்மானை பத்துத் தலையும் பார்மீதி லற்றுவிழ மற்று நிகரொவ்வா மாயத் திருநெடுமால் அரக்க னுயிரு அங்குமிங்கும் நிற்கையிலே இரக்கமுடன் நின்றங்(கு) ஏதுரைப்பா ரம்மானை கேளாய்நீ ராவணா கிரேதா யுகந்தனிலே பாழாய் இரணியனாய்ப் பாரில் பிறந்திருந்தாய் உன்னிடுக்கங் கண்டு உன்புதல்வ னானாகி தன்னடுக்கல் வந்துவுன்னைச் சங்காரஞ் செய்தேனான் மகனாய்ப் பிறந்து வதைத்தேனான் பாரறிய பகை நானென்று பண்பு மிகக்கூற அப்போது நீயும் அன்றுரைத்த வார்த்தையினால் இப்போது உன்குலங்கள் எல்லாங் கருவறுத்து நாணமில்லா துன்னிலங்கை நகரிதீ யாலழித்துப் பாணமொன்றா லுன்னைப் படஎய்தேன் கண்டாயே அல்லாம லுன்றனக்கு அங்கமொரு நூறு எல்லாரும் வெல்லா ஈசன் கயிலையதும் எடுத்த பெலமுமுண்டே ஈரஞ்சு சென்னியுண்டே கடுத்த பெலமுள்ள காலாட்டுகள் பொரவுண்டே இந்திரனை வென்ற ஏற்ற புதல்வருண்டே சந்திரனுஞ் சூரியனும் தன்னிடத்தி லுண்டல்லவோ மூணுலோ கத்தாரும் உன்னிடத்தி லுண்டல்லவோ ஆணுவங்கள் பேசினையே அம்பொன்றில் மாண்டாயே கோலுபோ லேயுயர்ந்த கொடும்பாவி நீகேளு நாலு முழமல்லவோ நல்லதலை ஒன்றல்லவோ என்கை வாளி எடுத்துவிடத் தாங்காமல் உன்கை காலுமற்று உயிரழிந்து மாண்டாயே பத்து மலைபோலே பருந்தலைகள் பெற்றதெல்லாம் இத்தலத்தில் கண்டிலனே என்கையால் மாண்டாயே மாண்டாய்நீ யென்று வசைகூறக் கேட்டரக்கன் ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது தம்பி யெனப்பிறந்து சத்துருப்போல் தான்சமைந்து என்பெலங்க ளெல்லாம் எடுத்துரைத்தா னுன்றனுக்கு ஆனதா லென்னுயிரு அடையாளம் பார்த்துலக்காய் ஊனமுற எய்தாய் உயிரழிந்தே னல்லாது நீயோடா என்பெலங்கள் நிலைபார்த்துக் கொல்லுவது பேயா நீபோடா புலம்பாதே யென்னிடத்தில் அப்போது மாயன் அதிகசீற் றத்துடனே ஒப்பொன் றில்லாதார் உரைப்பார்கா ணம்மானை உன்னுட தம்பி யாலே உயிர்நிலை யறிந்து யானும் என்னுட சரத்தால் கொன்றேன் என்றியம்பிய அரக்கா வுன்னைப் பின்னுகப் பிறப்பு தன்னில் பிறப்புநூ றோடுங் கூடி அன்னுகந் தன்னில் தோன்ற அருளுவே னுன்னை நானே என்னொரு தம்பி யாலே என்னையுங் கொன்றா யென்று தன்னொரு மதத்தால் நீயும் சாற்றிய அரக்கா வுன்னைப் பின்னொரு யுகத்தில் நூறு பிறப்புடன் பிறவி செய்து இன்னொரு ஆளின் கையால் இறந்திடச் செய்வே னுன்னை என்னுடைய தம்பி யாலேதா னென்னுயிரை உன்னுடைய அம்பால் உயிரழிந்தே னல்லாது என்னைநீ கொல்ல ஏலாது என்றுரைத்தாய் உன்னை நானிப்போ ஒருபிறவி செய்யுகிறேன் என்றுசொல்லி மாயன் எண்ணவொண்ணாக் கோபமுடன் அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்து முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே ஒன்னேயொரு துண்டம் ஒருநூறு பங்குவைத்துத் துவாபர யுகம்வகுத்துத் துரியோதன னெனவே கிரேதா யுகமழித்துக் கீழுலகில் தோணவைத்தார்

துவாபர யுகம்

பாவி பிறக்க பச்சைமால் தான்கூடத் தாவிப் பிறந்த தம்பியர் மூவரையும் விபீஷணனும் நல்ல வெற்றிச்சாம் புவனையும் அபூருவமாய்க் குந்தியர்க்கு ஐவரையும் பிறவிசெய்தார் ஐவரையும் பூமி அதிலே பிறவிசெய்து மொய்குழ லான மெல்லி திரௌபதியாய் அம்மை திருக்குழலில் அமர்ந்திருந்த பொற்சடையை நம்மை விபீஷணற்கு நல்மக ளாக்கிவைத்து அரக்கர் குலமறுக்க அம்மை யெழுந்தருளி இரக்கர் புரமேகி இருக்குமந்த நாளையிலே தோழியாய் முன்னிருந்த துய்யத் திரிசடையை நாழிகை தன்னில் நாதன் பிறவிசெய்தார் பின்னுமந்த மாயன் பெரியோ னடிவணங்கி நின்னுகரங் குவித்து நெடியோ னுரைத்தனராம் எழுபது வெள்ளம் ஏற்றவா னரங்களுடன் முழுது மிலங்கை முடித்துநான் நிற்கையிலே என்படைக ளான எழுபதுவெள் ளமதிலும் உன்படைக ளெல்லாம் உயிரழிந் தாரெனவே ஆராய்ந்து என்படையை அளவிட்டு நிற்கையிலே தோராத மன்னன் துடியானச் சேவகன்தான் ஒருவன் தனைக்காணேன் உடனே மறலிதனை வருக அழைத்து வகையே தெனக்கேட்க நானில்லை யென்றே நமன்தான் மிகவுரைக்க ஏனில்லை யென்று இறுக்கிநான் கேட்கையிலே அய்யாவே வும்முடைய ஆளான வீரனைத்தான் கையால முள்ள கும்பகர்ண னொருசமரில் பிடித்து நசுக்கிப் பிசைந்து திலதமிட்டான் அடுத்துநின்று பார்த்து அரக்க னவனுயிரைக் கொண்டேகி நானும் கொடுநரகில் வைத்திருக்கேன் என்றே தான்மறலி இத்தனையுஞ் சொன்னான்காண் ஆனதால் கும்ப கர்ண னவன்தனையும் ஈனமில்லாக் கஞ்சன் எனப்படையு மிவ்வுகத்தில் என்றே தான்மாயன் இதுவுரைக்க ஈசுரரும் அன்றே தான்கும்பனையும் அப்படியே தான்படைத்தார் படைத்த சடமதுக்குப் பரம னுயிர்கொடுக்கச் சடத்தை மிகயெழுப்பித் தானனுப்ப ஈசுரரும் துவாபர யுகமெனவே தொன்முறையைத் தான்பார்த்துத் தவறாத வண்ணம் தான்படைத்தா ரெல்லோரும் அப்படியே ஈசர் அன்று படைத்தபடி இப்படியே வந்து இவர்கள் பிறந்தனராம் முன்னுள்ள பீடத்து உதிரமெல்லாந் தானெழுந்து அன்றுள்ள பாவி அவன்கூடத் தானிருக்க அரக்க னிராவணனும் அதிகத்துரி யோதனனாய் மூர்க்கன் பிறப்போர் ஒருநூறு பேரோடு வந்து பிறந்தான்காண் வையகத்தி லம்மானை சந்துபயில் மாயன் தன்னோ டுடன்பிறந்த தம்பி பரதன் சத்ருக்கன் லட்சுமணன் நம்பி விபீஷணனும் நல்லதொரு சாம்புவனும் ஐவரும் பூமிதனில் அப்போது தோன்றினராம் தெய்வத் திரிசடையும் தேவி துரோபதையாய் மெய்வரம்பா யுள்ள மேன்மை யதின்படியே ஐவருட தேவியென்று ஆயிழையுந் தோன்றினளாம் கும்பகர்ண னென்ற கொடும்பாவி கஞ்சனுமாய் வம்பகனாய் வந்து மதுரை தனில்பிறந்தான் இப்படியே ஐபேரும் ஏற்றரிய நூற்றுவரும் அப்படியே பங்கு வகைபாதி யாய்ப்பிறந்தார் இராச்சியத்தி லுள்ள இறைதான முள்ளதெல்லாம் தராச்சியமாய்ப் பாதியெனத் தங்கள்சில நாடாண்டார் கஞ்ச னவன்பிறந்து கடிய கொடியவனாய் வஞ்சனையும் பெற்ற மாதா பிதாக்களையும் சிறையதிலே வைத்துத் தேசமதைத் தானாண்டு இறைமிகுதி வேண்டி இராச்சியத்தை யாண்டனனே ஆனதா லவனுடைய அம்புவியி லுள்ளோர்கள் ஈனதுன்ப மாகி இருந்தார் பயமடைந்து தேவரையும் வானவரைத் தேவேந்தி ரன்வரையும் மூவரையுஞ் சற்றும் முனியாமல் மாபாவி தெய்வ மடவாரைத் திருக்கவரி வீசிடவே வைவ னவன்பிடித்து வாவெனவே ஆள்விடுவான் வருணனொடு வாயுவையும் வலுவிலங்கில் தான்போட்டு அருணன் முதலாய் அந்தி வரும்வரையும் வேலை யவன்கொண்டு விடுவா னவன்தொழிலாய் மாலை நினையான் மறையைமிக நினையான் ஆலயங்கள் கோயில் அழிந்த மடங்கள்வையான் சாலயங்கள் செய்யான் தர்மசிந்த னைகள்செய்யான் அந்தணர்க்கு மீயான் அன்னதா னங்களிடான் பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்தமக் களியான் ஆவு தனையடைத்து அதுக்கிரைகள் போடாமல் கோவுகளைக் கொல்வான் கொடும்பாவி நெட்டூரன் கண்ட வழக்குரையான் கைக்கூலி கேட்டடிப்பான் சண்டனைக்கண் டாருவென்பான் தன்னைப்பா வித்திருப்பான் எம்மைப் படைக்க ஏலுமோ மற்றொருவர் நம்மைப் படைத்ததுவும் நான்தா னெனவுரைப்பான் இப்படியே கஞ்சன் எதிரியில்லை யென்றுசொல்லி அப்படியே மீறி ஆண்டான்கா ணம்புவியை மேலோகந் தன்னில் மிகுத்ததெய்வக் கன்னியரில் வாலோக மான வாய்த்தகன்னி தேவகியும் உரோகணியா ளென்னும் நுதல்மடவா ரண்டுபேரும் புரோகணிய மான பொய்கைநீர் தானாடி அக்காளுந் தங்கையுமாய் அவர்கள்ரண்டு மாமயிலும் மிக்கான பட்டுடுத்து மேவிவழி தான்வரவே மாயன் சிறுமதலை வடிவெடுத்துத் தானழவே ஆயனுட கோலம் அறியாமல் மங்கையர்கள் தெய்வகியும் பார்த்துச் சொல்லுவாள் தங்கையிடம் நெய்நிதியக் கன்னி நெடியவிழி ரோகணியே இன்னா அழுது இதில்கிடக்கும் ஆண்மதலை பொன்னான பூமியிலும் பெண்ணே நான்கண்டதில்லை காலில்சிவ சக்கரமும் கையில்மால் சக்கரமும் மேலில்சத்தி சக்கரமும் விழிசரசு சக்கரமும் வாயு பகவான் வடிவுமிகப் போலே ஆயும் பலகல்வி ஆராய்ந்த அச்சுதர்போல் கண்கொள்ளாக் காட்சி கைமதலை தன்னழகு விண்கொள்ளாக் காட்சி மெல்லியரே யிம்மதலை இம்மதலை தன்னை எடுத்துநாம் தாலாட்டி பொன்மதலை தன்னைப் போட்டுவைத்துப் போவோம்நாம் என்றுசொல்லி மாதர் இருபேருஞ் சம்மதித்து வண்டுசுற்று மெல்லி வந்தெடுத்தா ரம்மானை மதலை தனையெடுத்து மார்போடு தானணைத்து குதலை மொழியமர்த்திக் கோதைரண்டு மாமயிலும் கயிலை யதுக்கேகி கறைக்கண்டர் பாதமதில் மயிலனைய மாமயிலார் வந்தார்கா ணம்மானை வந்த மாடவர்கள் மார்பி லமுதிளகி அந்தப் பரமே சுரனா ரவரறிந்து கன்னியரே உங்கள் கற்பு அகன்றதென்ன மின்னித் தனங்கள் மெல்லியுட லானதென்ன பச்ச நிறமேனி பால்வீச்சு வீசுதென்ன அச்சமில்லாக் கொங்கை அயர்ந்துஉடல் வாடினதேன் ஏதெனவே சொல்லுமென்று ஈசுரனார் தான்கேட்க சூதகமாய் நின்ற தோகைபோல் வாடிநின்றார் வாடியே மடவார் தாமும் மார்பதில் துகிலை மூடி கோடியே அயர்ந்து ஏங்கிக் குருவதைப் பாரா வண்ணம் நாடியே தாழ்ந்து பெண்கள் நாணியே நின்ற தன்மை தேடியே மாயன் செய்தச் செயலென அறிந்தா ரீசர் அறிந்தார் மாயன் சேயாகி அழுதே இரங்குங் குரலதினால் செறிந்தார் குழலார் இவர்கள் சென்று சேர்த்தே யெடுத்து அணைத்ததுவும் பறிந்தே யிவர்கள் நாணினதும் பால்தான் தனத்தில் பாய்ந்ததுவும் அறிந்தே கன்னி யிருவரையும் அழித்தே பிறவி செய்தனராம் பிறவி யதுதான் செய்யவென்று பெரியோ னுரைக்கப் பெண்ணார்கள் அறவி யழுது முகம்வாடி அரனா ரடியை மிகப்போற்றித் திறவி முதலே திரவியமே சிவமே உமது செயலைவிட்டு இறவி யானா லெங்களுக்கு இனிமேல் பிறவி வேண்டாமே வேண்டா மெனவே மெல்லியர்கள் விமல னடியை மிகப்போற்றி மாண்டா ரெலும்பை மார்பணியும் மறையோன் பின்னு மகிழ்ந்துரைப்பார் தூண்டாச் சுடரோன் திருமாலைச் சேயென் றெடுத்தச் செய்கையினால் ஆண்டா ருமக்கு மகனாகி அதின்மேல் பதவி உங்களுக்கே மெல்லியரே உங்களுட மெய்வரம்பு தப்பினதால் செல்ல ஏதுவாச்சு சீமையிலே யம்மானை என்றே அரனார் இருகன்னி யோடுரைக்க அன்றே மடவார் ஆதிதனை நோக்கி ஆதியே நாதி ஆனந்த மெய்ப்பொருளே சோதியே நாதி சொரூபத் திருவிளக்கே அல்லாய்ப் பகலாய் ஆரிருளாய் நிற்போனே வல்லாய்ப் புவியை வார்த்தையொன் றாற்படைத்த ஆதிப் பொருளே அனாதித் திருவுளமே சோதிப் பொருளே சொல்லொணா தோவியமே எட்டாப் பொருளே எளியோர்க் கெளியோனே முட்டாத செல்வ முதலே முழுமணியே கண்ணுள் மணியே கருத்தினுள் ளானவனே பெண்ணு மாணாகிப் பிறப்பில்லா நின்றோனே இறப்புப் பிறப்பில்லாத எளியோர்க் கெளியோனே பிறப்பு இறப்பில்லாத பேசமுடி யாதவனே கருவிதொண்ணூற் றாறும் காவலைந்து பேருடனே உருவு பிடித்து உயிர்ப்பிறவி செய்வோனே மூவரு முன்றன் முடிகாண மாட்டாமல் தேவருந் தேடித் திரிந்தலைய வைத்தோனே மவ்வவ் வாகி வருந்தியவ்வும் ஒவ்வாகி செவ்வவ் வாய்நின்ற சிவனே சிவமணியே மாய னெடுத்த மகவான கோலமதை நேய மறியாமல் நெறிதவறிப் போனதினால் பின்னேநீ ரெங்களையும் பிறவிசெய்ய வேண்டாங்காண் எந்நேரங் கயிலை இப்பூமி யானதிலே தெய்வப் பசுப்போல் தேவரீ ரெங்களையும் மெய்யறிவு கூடி மிகப்புடையு மேலோனே அல்லாதே போனால் அடியார்க ளெங்களையும் இல்லாதே செய்யும் இனிப்பிறவி வேண்டாங்காண் அம்மை உமையாள் அருகே மிகஇருந்து உம்மையும் போற்றி உம்மூழி யங்கள்செய்து பூவுலகில் நாங்கள் பெண்ணாய்ப் பிறந்ததுண்டால் பாவிகட்கு வேலைப் பண்ணி முடியாதே பூவு முடித்துப் பூமேடை யும்பெருக்கி நாவுலகு மெய்க்க நல்லகவி தான்பாடி தம்புரு வீணை சப்தக் குழலுடனே இன்புருக ராகம் இசைந்தமுறை தானிகழ்த்தி நரசென்மம் வாழும் நசுரக் குலங்களிலே அரசேநீ ரெங்களையும் அழுந்தப் படையாதேயும் இப்படியே கன்னி இரங்கி யழுதிடவே அப்படியே கன்னி அவர்களுக் காதியுந்தான் சொல்லுவார் வேதச் சுடரோ னதிசயித்து நல்லதுகாண் பெண்ணே நம்மைரண்டுஞ் சொல்லாதே மாயன் துவாபர வையகத்தில் போய்ப்பிறக்க வாயமிட்டா ருங்களையும் மாதா வெனவாக்க நாமென்ன செய்வோம் நவ்விமால் செய்ததற்குப் போமென் னஈசர் பிறவிசெய்தா ரம்மானை வாயு மகாதேவன் வடிவென்ற இச்சையினால் ஆசையா லுங்களுக்கு அவனே புருஷனென்றார் சங்கு சரங்கொண்ட தம்பியென்ற இச்சையினால் அங்குப் பகவதியும் அச்சுதரு முங்களுக்கு மதலையென வந்துதிப்பார் வையமது கொண்டாட குதலை மொழியாரே கொம்பே றிடையாரே விலங்குச் சிறையும் மிகுசிறையு முங்களுக்கு மலங்குவது மெத்த மாய்ச்சலுண் டாகியபின் ஸ்ரீகிருஷ்ண னாகத் திருமா லுதித்தபின்பு குறுக்கிட்ட தோசம் கொடுமை மிகத்தீர்ந்து பின்னே பதவிப் பேறுண்டு முங்களுக்கு மின்னே ரொளியை விமலன் பிறவிசெய்தார் பிறவியரன் செய்யப் பிறந்தார்கள் பூமியிலே திறவியது விட்டுத் தேவகியும் ரோகணியும் மதுரைதனில் வந்து மாபாவிக் கஞ்சனுக்கு இருதையல் மாமயிலார் ஏற்ற பிறப்பெனவே கூடப் பிறந்தால் கொடியதோ சமெனவே தேட வொருராசன் சிறுவி யெனப்பிறந்தார் பிறந்தே தான்கஞ்சனுக்குப் பிறப்பெனவே பேசும்வளம் சிறந்தே யிவர்கள் திருத்தமாய் வாழுகையில் இப்படியே கஞ்சன் இவர்களிரு தங்கையையும் அப்படியே கூட்டி அவன்வேட்டை யாடிவர மாமுனிவன் தனக்கு வாய்த்திருந்த மாம்பழத்தைத் தாமுனிந்து கஞ்சன் தானக்கனி பறித்துத் தங்கையர்க்குத் தானீந்தான் சயோகமுனி யறிந்து மங்கையர்க்கு வந்த மகனா லழிவையென்று மாயனுட ஏவலினால் மாமுனியு மப்போது பாயமுள்ள கஞ்சனுக்குப் படுசாப மிட்டனனே சாபமது கஞ்சன் தானறியா வண்ணமுந்தான் பாவமிக தான்வருத்தி மிகுத்தகே டுள்ளகஞ்சன் சோதிரியங் கேட்கத் தொடர்ந்தான்கா ணம்மானை அப்போது சோதிரிஷி அந்தமுனி சாபமதால் எப்போது ஆகிடினும் இடுக்கம்வரு மென்றுரைத்தான் சோதிரியங் கேட்டுத் துக்கமுற்றுக் கஞ்சனுந்தான் வேதி யனையனுப்பி மிகுத்தகே டுள்ளகஞ்சன் கலியாணஞ் செய்யக் கருத்தல்ல வென்றுசொல்லி வலியான கஞ்சன் வைத்திருந்தா னம்மானை அந்தநல்ல செய்தி அறிந்தந்த நாரதரும் வந்துகஞ் சன்தனக்கு வளப்பமெல்லாஞ் சொல்லலுற்றார் கேளாய் நீகஞ்சா கீர்த்தியுள்ள சாஸ்திரங்கள் வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில் தர்மந் தலைகெடுங்காண் சாஸ்திரத்துக் கேராது வற்மம் வந்துசிக்கும் மாரியது பெய்யாது கோத்திரத்துக் கேராது குடும்பந் தழையாது சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம் மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து ஊனமடா அக்குடும்பம் உலகத்துக் கேராது கோட்டை யழியும் குளங்கரைகள் தானிடியும் நாட்டை முடிக்குமடா நல்லகன்னி காவல்வைத்தால் பொன்னான சீதை பிலத்தகற் பானதிலே கண்ணான இலங்கை கரிந்ததுவுங் கண்டிலையோ இப்படியே வேதம் இயம்பி யிருப்பதினால் அப்படியே பெண்ணார் அவர்கள்ரண்டு பேரையுந்தான் காவலிட்டு வைத்தால் கற்பதினா லுன்றனக்குப் பாவம்வந்து சுற்றும் பலிக்குமடா வேதமது ஆனதால் பெண்கள் அவர்கள்ரண்டு பேரையுந்தாம் மானமுள்ள மன்னனுக்கு மணஞ்செய்து தான்கொடுத்துக் கெற்பமது உண்டாகிக் கீழே பிறக்கையிலே அப்போநீ கொன்றாலும் ஆனாலும் பாரமில்லை என்றுஅந்த நாரதரும் இத்தனையும் தான்கூற நன்று மொழியெனவே நவ்வியே கஞ்சனுந்தான் எனக்குப் படிப்புரைத்த ஏற்றவசு தேவன் தனக்கு இவர்களையும் தான்சூட்ட வேணுமென்று வேணுமென்று சீட்டோ விரும்பிவசு தேவனுந்தான் வாணுவங்க ளோடே வந்தான் மதுரையிலே தேவகியை ரோகணியைச் சிறப்பா யலங்கரித்து வைபோக முள்ளவசு தேவனையு மொப்பிவித்துச் சங்கீதத் தோடே தையல்ரண்டு பெண்களையும் மங்களத் தோடே வசுதேவன் தாலிவைத்துக் கட்டிக் கைபிடித்துக் கனசீ தனத்தோடே கொட்டித் திமிர்த்தூதும் குழலோடே வீற்றிருந்தான் வாழ்ந்திருந்து பெண்கள் வயிறு வளருகையில் ஆய்ந்தறிந்து கஞ்சன் அருவிலங்கில் வைத்தனனே தெய்வகியாளு மழுது சிந்தைமுகம் வாடிருப்பாள் மெய்யன் வசுதேவன் மிகக்கலங்கி தானிருப்பான் மங்கைநல்லாள் ரோகணியும் வாடி யழுதிருப்பாள் சங்கையுள்ள தேவர்களும் தையல்தெய்வக் கன்னியரும் எல்லோருங் கஞ்சனுட இடுக்கமது தன்னாலே அல்லோரு மெத்த அறமெலிந்தா ரம்மானை இப்படியே செய்யும் இடுக்கமதுக் காற்றாமல் அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட

தேவர் முறையம்

நிலந்தேவி ஆகாய நீர்தேவி யார்கூடி தலந்தேவி மன்னன் தனக்கே யபயமிட தேவாதி தேவர் தேவிமுறை யாற்றாமல் மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது கண்டுதே வாதிகளும் கன்னி புவிமகளும் விண்டுரைக்கக் கூடாத விமல னடிபோற்றி ஆதியே நாதி அய்யாநா ராயணரே சோதியே வேதச் சுடரே சுடரொளியே பத்தர்க்கு நித்தா பரனேற்றார்க் கேற்றோனே மூவர்க்கு மாதி முழுமணியாய் நின்றோனே தேவர்க்கும் நல்ல சிநேகமாய் நின்றோனே கிட்டவரார்க் கெட்டாத கிருஷ்ணாவுன் நற்பதத்தைக் கட்டவரு மட்டான கருணா கரக்கடலே உச்சிச் சுழியே உம்மென் றெழுத்தோனே அச்சிச் சுழியே அம்மென் றெழுத்தோனே அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஆதிஅ வென்றெழுத்தும் நெஞ்செழுத்து மெட்டெழுத்தும் நீயாகி நின்றோனே எண்ணொருபத் தெண்ணிரண்டும் இவ்வே நடுவாக ஒண்ணெழுத்தாய் நின்ற உடைய பெருமாளே தண்டரளத் தூணாகித் தருவைந்து பேராகி மண்டலத்துள் ளூறலுமாய் மயமுமாய் நின்றோனே போக்கு வரத்துப் புகுந்துரண்டு கால்வீட்டில் நாக்குரண் டுபேசி நடுநின்ற நாரணரே அல்லாய்ப் பகலாய் ஆணாகிப் பெண்ணாகி எல்லார்க்குஞ் சீவன் ஈயுகின்ற பெம்மானே பட்சிப் பறவை பலசீவ செந்துமுதல் இச்சையுடன் செய்நடப்பு இயல்கணக்குச் சேர்ப்போனே ஒருபிறப்பி லும்மை உட்கொள்ளாப் பேர்களையும் கருவினமா யேழு பிறப்பிலுங் கைகேட்போனே ஆறு பிறப்பில் அரியேவுன்னைப் போற்றாமல் தூறு மிகப்பேசித் தொழாதபே ரானாலும் ஏழாம் பிறப்பிலும்மை எள்ளளவுதா னினைத்தால் வாழலா மென்றவர்க்கு வைகுண்ட மீந்தோனே இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுந்தான் அப்படியே ஓரணுவும் அவர்நினையா தேயிருந்தால் குட்டங் குறைநோய் கொடியகன்னப் புற்றுடனே கட்டம் வந்து சாக கழுத்திற்கண்ட மாலையுடன் தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும் காதா னதுகேளார் கண்ணே குருடாகும் புத்தியற்று வித்தையற்றுப் பேருறுப்பு மில்லாமல் முத்திகெட்ட புத்தி முழுக்கிரிகை தான்பிடித்துப் பிள்ளையற்று வாழ்வுமற்றுப் பெண்சாதி தானுமற்றுத் தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி மாநிலத்தோ ரெல்லாம் மாபாவி யென்றுசொல்லி வானிழுத்து மாண்டு மறலியுயிர் கொள்கையிலே நாய்நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலைத் தேயமது காணத் திசைநாலும் பிச்செறிந்து காக்கை விடக்கைக் கண்டவிடங் கொண்டுதின்னப் போக்கடித்துப் பின்னும் பொல்லாதான் தன்னுயிரை மறலி கொடுவரச்சே வலியதண் டாலடித்துக் குறளி மிகக்காட்டிக் கொடும்பாவி தன்னுயிரை நரகக் குழிதனிலே நல்மறலி தள்ளிடவே இரைநமக் கென்று எட்டிப் புழுப்பிடித்து அச்சுத ரைநினையான் அய்யாவைத் தானினையான் கச்சி மனதுடைய காமாட்சியை நினையான் வள்ளிக்குந் தேவ மாலவருக் காகாமல் கொள்ளிக்குப் பிள்ளையில்லாக் கொடும்பாவி யென்றுசொல்லி எவ்வியே அட்டை எழுவாய் முதலைகளும் கவ்வியே சென்று கடித்துப் புழுப்பொசிக்கும் என்றுநீ ரேழு இராச்சியமுந் தானறிய அன்று பறைசாற்றி அருளிவைத்த அச்சுதரே வானமது பூமியிலே மடமடென வீழாமல் தானவனே உன்விரலால் தாங்கிவைத்த பெம்மானே வாரி வரம்பைவிட்டு வையகத்திற் செல்லாமல் காரியமாய்ப் பள்ளி கடலில் துயின்றோனே மானம் வரம்பு மகிமைகெட்டுப் போகாமல் ஊன மில்லாதே உறும்பொருளாய் நின்றோனே சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறு மேபொசிப்புத் தாவமுட னீயுகின்ற தர்மத் திறவோனே வலியோ ரெளியோர்க்கும் மண்ணூருஞ் செந்துகட்கும் கலிதீர ஞாயம் கண்டுரைக்கும் பெம்மானே சிவசெந்துக் கெல்லாம் சீவனுமாய் நின்றோனே பாவமும் புண்ணியமாய்ப் பாராகி நின்றோனே கண்ணாகி மூக்குக் கருணா கரராகி மண்ணாகி வேத மறையாகி நின்றோனே சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகிச் சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே நட்சேத்தி ரமாகி நாட்கிரகம் நீயாகி இச்சேத்தி ரமாய் இருக்குகின்ற பெம்மானே மெய்யனுக்கு மெய்யாய் மேவி யிருப்போனே பொய்யனுக்குப் பொய்யாய்ப் பொருந்தி யிருப்போனே இமசூட் சமாகி ஏகம் நிறைந்தோனே நமசூட் சமான நாரா யணப்பொருளே கல்வித் தமிழாய் கனகப் பொருளாகிச் செல்வித் திதுவாய்ச் செவ்வாகி நின்றோனே அண்ட பிண்டமாகி அநேகமாய் நின்றோனே கண்ட இடமும் கண்ணுக்குள் ளானோனே ஈசர் கொடுத்த ஏதுவர மானாலும் வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே நடக்க இருக்க நடத்துவதும் நீயல்லவோ திடக்க மயக்கம் செய்வதும் நீயல்லவோ ஆரு மொருவர் அளவிடக் கூடாமல் மேரு போலாகி விண்வளர்ந்து நிற்போனே எண்ணத் தொலையாத ஏது சொரூபமதும் கண்ணிமைக்கு முன்னே கனகோடி செய்வோனே மூவரா லுன்சொரூபம் உள்ளறியக் கூடாது தேவரா லுந்தெரியாத் திருவுருவங் கொள்வோனே ஆயனே யெங்கள் ஆதிநா ராயணரே மாயனே கஞ்சன் வலிமைதனை மாற்றுமையா பாவமாய்க் கஞ்சன் பலநாளா யெங்களையும் ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா ஆழி யடைத்த அச்சுதரே யென்றுரைத்தார் வாண னென்றகஞ்சன் மாபாவி யேதுவினால் நாணமது கெட்டு நாடுவிட்டுப் போறோங்காண் நரபால னென்ற நன்றிகெட்ட கஞ்சனினால் வரம்பா னதுகுளறி மானிபங்கள் கெட்டோமே இத்தனையுங் காத்து இரட்சிக்க வேணுமையா முத்தியுள்ள தேவர் முறையம் அபயமிட பூமா தேவி புலம்பி முறையமிட நாமாது லட்சுமியும் நன்றா யபயமிட நாரா யணர்பதத்தை நாயகியுந் தெண்டனிட்டுச் சீரான லட்சுமியும் செப்பினள்கா ணம்மானை என்னைப்போல் பெண்ணல்லவோ இவள்தா னிடுமுறையம் வன்னமுள்ள மாலே மனதிரங்கிக் காருமையா உடனேதா னாதி ஓலமிட்டுத் தேவருக்கும் திடமான பூமா தேவிக்குஞ் சொல்லலுற்றார்

தேவர் வேண்டுதலுக்கு இரங்கல்

வந்து பிறப்போங்காண் மாபாரத முடிக்க நந்தி குலம்வளர நாம்பிறப்போங் கண்டீரே சாரமில்லாக் கஞ்சன் தனைவதைத்துப் பூமியுட பாரமது தீர்ப்போம் பாரத முடித்துவைப்போம் துவாபர யுகத்தில் துரியோ தனன்முதலாய்த் தவறாத வம்பன் சராசந் தன்வரையும் அவ்வுகத் திலுள்ள அநியாயமு மடக்கிச் செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும் உங்களுக்கும் நல்ல உதவிமிகச் செய்வதற்கும் அங்குவந்து தோன்றி ஆய ருடன்வளர்வோன் போங்களென்று பூமா தேவியையுந் தேவரையும் சங்குவண்ண மாலோன் தானே விடைகொடுத்தார்

கண்ணன் அவதாரம்

விடைவேண்டித் தேவர் மேதினியில் தாம்போகப் படைவீர ரான பச்சைமால் தானெழுந்து ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து சோதி மணிநாதன் சொல்லுவா ரம்மானை வாணநர பாலனென்ற மாபாவிக் கஞ்சனினால் நாணமது கெட்டோமென நாடிமிகத் தேவரெல்லாம் பூமா தேவிமுதல் பொறுக்கமிகக் கூடாமல் ஆமா அரியே ஆதி முறையமென்றார் முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தா ரம்மானை அதுகேட்டு ஈசர் அச்சுதருக் கேதுரைப்பார் இதுநானுங் கேட்டு இருக்குதுகா ணிம்முறையம் ஆனதால் கஞ்சன் அவனைமுதல் கொல்வதற்கு ஏனமது பாருமென்று எடுத்துரைத்தா ரீசுரரும் பாருமென்று ஈசர் பச்சைமா லோடுரைக்க ஆருமிக வொவ்வாத அச்சுதரு மேதுரைப்பார் மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி பாருபா ரதமுதலாய்ப் பாரதப்போர் தான்வரையும் நாரா யணராய் நாட்டில் மிகப்பிறந்து வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்துச் சத்தபல முள்ள சராசந் தன்வரையும் மற்றவ னோராறு வலியபலக் காரரையும் கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து வெல்லப்பிறப் பாரெனவே வியாசர் மொழிந்தபடி அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும் நல்ல மகவான நாரா யணர்நமக்கு மகவா யுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி தவமா யிருந்து தவிக்கிறாள் தேவகியும் இப்படியே யுள்ள எழுத்தின் படியாலே அப்படியே யென்னை அனுப்புமென்றா ரம்மானை முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப் போகாமல் தன்னை மதலை யெனஎடுக்கத் தவமா யிருந்த தெய்வகிக்குச் சொன்ன மொழியுந் தவறாமல் துயர மறவே தேவருக்கும் என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவா திருக்கும் பெம்மானே முன்னே வியாசர் மொழிந்தமொழி மாறாமல் என்னையந்தப் பூமியிலே இப்போ பிறவிசெய்யும் செந்தமிழ்சேர் மாயன் சிவனாரை யும்பணிந்து எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிர மடவை கன்னியரா யென்றனக்கு கவரியிட நீர்படையும் பன்னீர்க் குணம்போல் பைம்பொன் னிறத்தவராய் ஆயர் குலத்தில் அநேக மடவாரை பாயமுற வாடிருக்கப் படைப்பீர்கா ணீசுரரே உருப்பிணியாய் இலட்சுமியை உலகிற்பிறவி செய்யும் கரும்பினிய தெய்வக் கயிலாச மாமணியே சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும் மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும் எல்லோரையு மிப்பிறவி இதிலே வதைத்திடவே அல்லோரை யும்பிறவி ஆக்கிவைய்யு மென்றுரைத்தார் என்றனக்கு நல்ல ஏற்ற கிளைபோலே விந்து வழிக்குலம்போல் மிகுவாய்ப் படையுமென்றார் இப்படியே மாயன் இசையஅந்த ஈசுரரும் அப்படியே பிறவி அமைக்கத் துணிந்தனராம் துணிந்தாரே மாயன் தொகுத்ததெல்லா மாராய்ந்து வணிந்தார மார்பன் வகைப்படியே செய்யலுற்றார் தெய்வகியாள் வயிற்றில் திருமால் பிறந்திடவே ஐவர்க் குறுதியிட அச்சுதருந் தோன்றுவாராம் கலக்கமுடன் விலங்கில் கவிழ்ந்திருந்த மாதுவுட மலக்கமது தீர மலரோன் பிறக்கலுற்றார் ஐவர்க் குபகாரம் அன்பாகச் செய்திடவும் தெய்வகிக்கும் ரோகணிக்கும் சிவகெதிக ளீவதற்கும் கஞ்சனுட வலுமை கட்டழித்துக் கொல்வதற்கும் விஞ்சவரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும் சத்த பெலமுள்ள தத்துவங்க ளுள்ளோரைத் தத்தியுள்ள விமனையும் தன்னா ளாக்கிவிட்டுக் கொல்வதற்கும் தேவருட கூர்முறையந் தீர்ப்பதற்கும் வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும் முன்னே வியாசர் மொழிந்த முறைப்படியே 1000 தன்னிக ரில்லாத தையல்தெய்வ கிவயிற்றில் பிறக்கிறா ரென்று பெரியோர்கள் கொண்டாட இறக்கிறார் பொல்லாதார் என்றுமிகக் கொண்டாட முன்பெற்ற பிள்ளை முழுதுமவன் கொன்றதினால் வன்பற்ற மாது மங்கையந்தத் தெய்வகியும் மெத்த மயங்கி முன்னம்விதி தன்னைநொந்து கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ என்றுஅந்தக் கன்னி இருபேருந் தான்புலம்பி விண்டு சொல்லாத விதன மிகவடைந்து அழுது கரைந்து அவளிருக்கும் வேளையிலே பழுதில்லா தாயன் பாவை வயிற்றிலுற்றார் பகவதியு மங்கே பாவையசோ தைவயிற்றில் சுகபதியு மங்கே தோன்றினள்கா ணம்மானை மாயனந்தத் தெய்வகியாள் வயிற்றிலுற்ற தவ்வளவில் தேசமெல்லாம் நன்றாய்ச் செழித்ததுகா ணம்மானை கெற்பமுற்ற தெய்வகியாள் கெஞ்சுகவா யஞ்சுகமும் நற்பதமாய்த் தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய் பத்துமாதந் திகைந்து பாலன் பிறந்திடவே சுற்றுமதிற் காவல்வைத்த துடியோர் வலுவிழந்து வசுதேவன் காலிலிட்ட வாய்த்த விலங்குமற்று விசுவாச மாதருட விலங்கது தானுமற்றுத் தாள்திறந்து நேரம் தான்விடியு முன்னாகக் கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை கொண்டாடித் தானெடுத்துக் கூறுவா ளம்மானை கண்ணணோ சீவகனோ கரியமுகில் மாயவனோ வண்ணனோ தெய்வேந்திரனோ மறையவனோ தூயவனோ அய்யோமுன் பெற்ற அதிக மதலையெல்லாம் மெய்யோதா னிம்மதலைக்(கு) ஒவ்வாது மேதினியே என்று பிரியமுற்று ஏற்ற மதலைதனை அன்று கொடுத்து அனுப்பினா ளயோதையிடம் கொண்டு வசுதேவன் அயோதைக் குடிலேகிக் கண்டு அயோதை கன்னியங்கே பெற்றிருந்த பெண்மதலை தன்னைப் பூராயமா யெடுத்து ஆண்மதலை தன்னை அயோதை யிடமிருத்தி வந்து வசுதேவன் மங்கைகை யில்கொடுத்துப் புந்திமிக நொந்து போயிருந்தா னம்மானை அந்த யிராவிடிந்து அலைகதிரோன் தோன்றினபின் கந்த மனசுள்ள கஞ்ச னவன்தனக்கு ஒற்றாளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி பெற்றா ளுன்தங்கை பிள்ளை யெனவுரைத்தான் கேட்டானே கஞ்சன் கெருவிதமாய்த் தானெழுந்து பூட்டான நெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்துத் தூக்கி நிலத்தில் துண்ணெனவே தானடிக்க ஆக்கிரமத் தாலே அவன்தூக்க ஏலாமல் சோர்வுறவே கஞ்சன் துடியிழந்து நிற்கையிலே பாரளந்தோன் தங்கை பகவதியு மேதுசொல்வாள் என்னை யெடுத்து ஈடுசெய்யா தேகெடுவாய் உன்னை வதைக்க உற்றயெங்க ளச்சுதரும் ஆயர்பா டிதன்னில் அண்ணர் வளருகிறார் போய்ப்பா ரெனவே போனாள் பகவதியும் கேட்டந்தக் கஞ்சன் கிலேச மிகவாகி வீட்டுக்குள் போயிருந்து விசாரமுற்றா னம்மானை அய்யோ முனிதான் சபித்தபடி ஆயர் பதியில் போகறியேன் மெய்யோ தளரு துடல்மெலியு மெல்லி மொழிந்த விசளமதால் கையோ சலித்துக் காலயர்ந்து கால விதியாற் கருத்தயர்ந்து பையோ ராளைத் தானழைத்துப் பார்க்க விடுத்தான் கஞ்சனுமே

கஞ்சன் பாடு

அய்யோ மறையோன் அன்று சபிபத்தபடி சையோ இடையர் தம்பதியில் போகறியேன் தங்கை வயிற்றில் செனித்தபிள்ளை யானதுண்டால் பங்கம்வரு மென்றனக்குப் பதறுதடா என்னுடம்பு என்று மனங்கருகி இயலழிந்த கஞ்சனுந்தான் அன்றுஒரு தூதனையும் அனுப்பினன்கா ணம்மானை வாராய்நீ தூதா மற்றோ ரறியாமல் பாராய்நீ தூதா அயோதைப் பதியேகி என்றுஅந்தத் தூதனையும் ஏகவிட்டான் கஞ்சனுமே நன்றுநன்று என்று நடந்தானே தூதனுந்தான் தூதன் மிகநடந்து தோகைஅயோ தைமனையில் புகுந்தந்தப் பிள்ளை பொன்தொட்டிலி லேகிடக்கக் கண்டுஅந்தத் தூதன் கஞ்சனுக்கு நஞ்செனவே விண்டு பறையாமல் விரைவாகப் போயினனே போயந்தத் தூதன் பொறையுள்ள கஞ்சனுக்கு வாயயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான் காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ நாமத் திறவானோ நாரா யணன்தானோ சோமத் திருவுளமோ தெய்வேந் திரன்தானோ ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ மாயனோ வுன்னை வதைக்கவந்த மாற்றானோ ஆரோ எனக்கு அளவிடவுங் கூடுதில்லை பேரோ அயோதைப் புதல்வனெனக் காணுதில்லை தெய்வகியாள் தேகத் திருச்சுவடு தோணுகொஞ்சம் மெய்யதிப னான விட்டிணுபோல் முச்சுவடு என்றந்தக் கஞ்சனுக்கு இத்தூதன் சொல்லிடவே அன்றவன் கேட்டு அயர்ந்திருந்தா னம்மானை என்செய்வோ மென்று இருக்குமந்த நாளையிலே முன்செறியும் பூத மூரிதனை யேவியவன் கொல்லவென்று விட்டான் குழந்தைதனை யம்மானை வல்ல பெலமுள்ள மாபூதம் பட்டபின்பு பின்னுமே தானும் பிலஅரக்கரை யேவிக் கொன்றுவா வென்றான் குழந்தைதனை யம்மானை கொல்லவந்த பேரையெல்லாம் கொன்றதுகா ணக்குழந்தை வெல்லவிட்டப் பேரிழந்து மெலிந்திருந்தான் கஞ்சனுமே ஆயர் குடியில் அரியோன் மிகவளர்ந்து மாயன் விளையாடி மடந்தையோடுங் கூடி வென்றுபால் வெண்ணெய் மிகப்பொசித்துக் காடதிலே கன்றாவு மேய்த்துக் காளியன் தனைவதைத்துக் கஞ்சனுட ஏவலினால் காட்டில்வந்த சூரரையும் துஞ்சிவிடக் கொன்று தொலைத்தனர்கா ணம்மானை ஆயருக்கு வந்த ஆபத்து அத்தனையும் போயகற்றி நந்தன் பிள்ளையெனவே வளர்ந்தார் மதுரைதனில் வாழும் மாபாவிக் கஞ்சனுக்கு இறுதிவரும் போது ஏதுசெய்தான் கஞ்சனுமே நந்திடையன் பாலன் நல்லஸ்ரீ கிட்டிணனை இந்திடத்தில் கொண்டுவர ஏவிவிட்டான் ஓராளை கஞ்சனுட ஆளும் கண்ணர்ஸ்ரீ கிட்டிணரை அஞ்சலென்று கண்டு அழைத்தாருமைக் கஞ்சனென்றான் அந்தவிச ளமறிந்து அரியோ னகமகிழ்ந்து வந்த விசளம் வாச்சுதென் றெம்பெருமாள் கூடச் சிலபேரைக் குக்குளிக்கத் தான்கூட்டி ஈடவி யென்ற எக்காள சத்தமுடன் குஞ்சரமும் பரியும் குரவைத் தொனியுடனே கஞ்ச னரசாளும் கனமதுரை சென்றனரே நாட்டமுட னயோதை நல்லமகன் வந்தானென்று கேட்ட விசளம் கெட்டியெனக் கஞ்சனுந்தான் இங்கேநான் சென்று ஏற்றவனைக் கொல்லவென்று சங்கையற்றக் கோடி தத்திப் படையுடனே கொல்லவிட்டக் கஞ்சன் குதிரைத் தளம்படையும் எல்லாந் திருமால் இறக்கவைத்தா ரம்மானை கஞ்சன் படைகள் கட்டழிந்து போனவுடன் வஞ்சகனும் வந்து மாயனு டனெதிர்த்தான் மாயனுட போரும் வஞ்சகக்கஞ் சன்போரும் தேசமெல்லா மதிரச் சென்றெதிர்த்தா ரம்மானை மாயனுக்குக் கஞ்சன் மாட்டாமல் கீழ்விழவே வாயமிட்டுக் கஞ்சன் மார்பிலே தானிருந்து கஞ்சன் குடலைக் கண்ணியறத் தான்பிடுங்கி வெஞ்சினத்தால் மாயன் விட்டெறிந்தார் திக்கதிலே கஞ்சனையுங் கொன்று கர்மமது செய்தவரும் தஞ்சமிட்டத் தேவருட தன்னிடுக்கமு மாற்றி மாதாபிதா வுடைய வன்சிறையுந் தான்மாற்றி சீதான உக்கிர சேனனையு மாளவைத்து அவரவர்க்கு நல்ல ஆனபுத்தி சொல்லிமிக எவரெவர்க்கும் நல்லாய் இருமென்று சொல்லியவர் திரும்பிவரும் வேளையிலே தீரன்சரா சந்தனவன் எந்தன் மருமகனை இவனோதான் கொன்றதென்று வந்தனனே மாயனுடன் வாதாடி யுத்தமிட அப்போது மாயன் ஆராய்ந்து தான்பார்த்து இப்போ திவனை ஈடுசெய்யக் கூடாது சத்தபெல மல்லோ சராசந்த வேந்தனுக்குக் கொற்றவ வீமனல்லோ கொல்லவகை யுண்டுமென்று இதுவேளை தப்பவென்று எம்பெருமாள் தானடந்து செதுவோடு கூடிச் செகலதுக்குள் ளேகினரே கடலதுக்குள் வந்து கனத்தமதி லிட்டவரும் திடமுடனே மாயன் துவரம் பதியிருந்தார் பூதனைச் சகட னோடு பின்னுள்ள அரக்கர் தம்மைச் சூதனை யெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரை புக்கி நீதமே யில்லாக் கஞ்சன் நெஞ்சையும் பிளந்து கொன்று கூதவன் துவா ரகையில் குணமுட னிருந்தா ரன்றே

அகிலம் மூன்று

divider
கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும் வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும் இம்முதலா யுள்ள ஏற்ற அரக்கரையும் அம்முதலா யுள்ளவரை அரியோ னறுத்தனராம் சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும் வித்தகனார் கொல்ல மேல்நினைத்தா ரம்மானை கஞ்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு அஞ்ச லருளி ஆழிக்குள் வீற்றிருந்தார்

ருக்மணி கல்யாணம்

வாரிக்குள் கோட்டை வளைந்துமணி மேடைவைத்து வீரக் குருநாதன் வீற்றிருந்தா ரம்மானை மாயன் துவாரகா பதிவாழ்ந்து தானிருக்க நாயனுக்கு வந்த நல்ல உருப்பிணியை விதியை யறியாமல் மேலுமொரு ராசனுக்குத் திருமாங் கலியம் சேர்க்கத் துணிந்தனராம் அப்போது நாரதரும் அரியோ னடிபணிந்து இப்போது வுன்றனக்கு இசைந்த உருப்பிணியைப் பாணிக் கிரணம் பண்ணப் பறையடித்தார் நானிதையுங் கேட்டுநாடியுரைத்தே னென்றார் அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு இம்முனிந்து போக இசைந்தார்கா ணம்மானை மோகத்திரு மாலை முக்கோடி பொன்னதுக்கு வேகத்தா லுண்டுபண்ணி விரைவாய்க் கொடுநடந்தார் முழுத்திரு மாலைதன்னை மொய்குழலாள் கன்னியுடக் கழுத்திலே யிட்டுக் காமக்கண் ணீட்டிடவே மாயனுக்கும் மோகம் மாதுக்கும் மும்மோகம் தேயமெங்கும் மோகம் சென்றதுகா ணம்மானை முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும் அந்நாளே கொன்று அவன்படையுந் தானறுத்து உருப்பிணிக்குத் தேவரெல்லாம் ஓலமிட மாலையிட்டு விருப்புகழ்ந்த மாயன் விமான மதிலேறி மனோன்மணியை யுங்கூட்டி மாயன் படையுடனே வினோகர மால்தானும் விரைவாய் நடைநடந்து வடவெல்லாந் தீர்த்து வைகுண்டப் பெம்மானும் கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர் இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம் அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தா ரம்மானை ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய் அருந்தி முறைமா தரையணைந்து தீயன் கொடிய கஞ்சனையும் திருக்கி யறுத்து அசுரரையும் உபாய முடனே கொலையடக்கி உருப்பிணி முதலாய்ப் பெண்களையும் தேயம் புகழ மணமுகித்துத் துவரம் பதியிலி ருந்தளரே உருப்பிணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும் திருப்பொருத்தம் பூட்டிச் செகலதுக்குள் வீற்றிருந்தார்

பாண்டவர் வரலாறு

கஞ்ச னிடுக்கம் கழித்தந்தக் காரணரும் பஞ்சவர்க்கு நன்மைசெய்யப் பார்த்தனர்கா ணம்மானை பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும் சிறந்தபுக ழைபேரும் தேசமதி லேவாழ்ந்து அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று எவரெவரு மெய்க்க இவர்வளர்ந்தா ரம்மானை வளர்ந்து நிமிர்ந்து வரும்வேளை யானதிலே இழந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி துடியாய் மனுவழக்குச் சொல்லித்துரி யோதனனும் முடிய வினைசூடி உலகாண்டா னம்மானை பாவி யிருந்து பாராண்டச் சீமையிலே கோவுகட்கு நீர் குடிக்கக் கிடையாது தன்ம ரவ்வீமன் சகாதே வன்விசயன் நன்மை பரிநகுலன் நாடான நாடதுதான் குருநா டெனவே கூறுவா ரந்நகரு திருநாடு தன்னுடைய சிறப்புக்கே ளம்மானை துரியா தனாதி செலுத்துமஸ்தி னாபுரத்தில் பரியொட் டகமும் பலிமிருக மானதுவும் பசியால் தகையால் பட்சி பறவைகளும் விசியாய்க் குருநகரில் மேவித்தகை யாறிவரும் அத்தினா புரத்தில் அரதேசி யாவரெல்லாம் பத்தியா யுள்ள பஞ்சவர்க ளாண்டிருக்கும் குருநாடு தன்னில் குழாங்கொண் டிருந்தனராம் திருநாட்டுக் கொவ்வும் சிறந்த குருநாடு ஒருநாடு மந்தக் குருநாட்டுக் கொவ்வாது பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள் தந்நாடு தேவரும் வானவரும் தெய்வத் திருமாலும் மூவரும் நன்றாய் உகந்த குருநாடு ஆளியொடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும் வேளிசமா யுள்ள வெகுவைந் தலையரவும் வெள்ளானை வெள்ளை மிகுசாரை யானதுவும் துள்ளாடி நித்தம் துலங்கிவரும் நன்னாடு அந்நாடு நாடு அரன்நாட்டுக் கீடாகும் பொன்னாடு நாடு புத்தியுள்ளோர் தந்நாடு அரனருளைப் பெற்றிருக்கும் ஐவருட நன்னாடு இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு மாயனருள் பெற்ற மன்னவர்கள் தந்நாடு தாய்நாடு ஆனத் தமிழ்க்குரு நன்னாட்டில் மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி பொய்யில்லாத் தர்மருக்குப் பேர்பாதி யாகவேதான் ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காகத் தாண்டவ ராயர் தண்மையா லம்மானை

பாண்டவர் வனவாசம்

இப்படியே ஆண்டு இருக்குமந்த நாளையிலே முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே வணங்கா முடியுடைய மன்னன்துரி யோதனனும் இணங்காமல் பிணங்கி ஏதுசெய்தா னம்மானை தலைவீதம் பங்கு தான்வையா வண்ணமுந்ததான் நிலைபகிர்ந்து விட்டோமே நினைவுசற்று மில்லாமல் இனியவன் பூமிதனை யாம்பறித்து ஐவரையும் தனியே வனத்தில் தானனுப்பி இராச்சயத்தை அடக்கி யரசாள அவன்நினைத்து மாபாபி உடக்கிச் சூதுபொருத்தி ஒட்டிவைத்தான் ஐவரையும் பாவிதுரி யோதனனும் பஞ்சவரைத் தான்விரட்டி சோவிதமாய் நாட்டைச் சுற்றியர சாண்டிருந்தான் வனவாசந் தன்னில் வந்திருந் தைபேரும் இனமா னதுபோல் இருந்தார் குகையதிலே அப்போது வேத வியாச ரவறிந்து செப்போடு வொத்தத் திருமா லருகேகி மாயவரே பஞ்சவர்க்கு வாரமதாய்த் தானிருந்து தீயதுரி யோதனனைச் செயிக்கவந்த பெம்மானே பஞ்சவரை மாபாவி பழுதுசூ தாடிவென்று வஞ்சக மாய்ப்பாவி வனத்தில் துரத்திவிட்டான் ஐபேரும் பத்தினியும் அன்னை பிதாவுடனே பைப்போ லலறிப் பசித்திருந்து வாடுகிறார் அன்றுமகா மேர்வில் அடியே னுரைத்தபடி இன்றுபா ரதமுடிக்க எழுந்தருளும் நாளாச்சு என்று முனிதான் எடுத்துரைக்க மாயவரும் அன்று திருமால் ஐவ ரிடம்நடந்தார் வேத வியாகரரும் வேயூதும் வாயானும் சீதக்குணத் தர்மர்முன்னே சென்றனர்கா ணம்மானை நாரா யணர்வரவே நல்லதர் மாதிகளும் பாரா னதையளந்தோன் பதம்பூண்டா ரம்மானை கால்பிடித்துத் தர்மர் கண்ணர் பதந்தொழவே மால்பிடித்துத் தர்மரையும் மார்போ டுறவணைத்துப் பதறாதே பாண்டவரே பத்தியுள்ள பஞ்சவரே கதறாதே ஐவரையும் காத்தருள்வோ மென்றுரைத்தார் அப்போது தர்மம் அச்சுதரை யும்போற்றி இப்பெழுது எங்களுக்கு ஏற்ற பசிதீர சூரிய பாண்டம் தனையழைத்துச் சுத்தமனே ஆரிய மான அன்ன மருளுமென்றார் அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி ஓரரியும் கையா லெடுத்துக் கனத்ததர்மர் கைக்கொடுத்து ஐயா யிரங்கோடி ஆட்கள்மிக வந்தாலும் என்பே ரரிதான் எனைநினைந்து பாண்டமதில் அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன் என்பே ரரியை எடுத்ததி லிட்டதுண்டால் அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார் இத்தனையுஞ் சொல்லி ஈந்தாரே யன்பருக்கு சித்திரம்போல் வேண்டித் தெளிந்திருந்தா ரம்மானை மாயனுஞ் சொல்லி மண்டபத்தில் போயின்பின் தூயவியா கரரும் சொல்லுவார் தர்மருடன் பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமா லின்றுமுதல் தஞ்சமென்று சொல்லித் தான்போனார் மாமுனியும் மாமுனியும் போக வனத்திலந்த ஐபேரும் ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தா ரம்மானை பாவிதுரி யோதனனும் பஞ்சவரைக் கொல்லவென்று ஆவி யவன்செய்த அநியாய மத்தனையும் ஒக்க வொருமிக்க உரைக்கக்கே ளொண்ணுதலே சிக்கெனவே நஞ்சைத் தீபாவி யிட்டனனே நஞ்சைக் கலந்து நல்லதயி ரென்றீந்தான் அஞ்சலென்று மாயன் அதுகாத்தா ரம்மானை பாதாளம் வெட்டிப் பார்வீ மனையோட்டி நீதாள மான நெடியோ னதுகாத்தார் கன்னிதனிற் பாவி கழுநாட்டி ஐவரையும் கொன்றுவிட வைத்ததையும் குன்றெடுத்தார் காத்தனரே அரவதையும் விட்டு அருள்வீம னைவதைத்தான் விரைவுடனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே தண்ணீரில் நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும் மண்ணீரேழு மளந்த மாயனது காத்தார் பூதத்தை யேவிப் புல்லிசெய்தான் மாபாவி நீதத் திருமால் நிலைநிறுத்தி யாண்டனரே இப்படியே பாவி இடறுசெய்த தோசமெல்லாம் அப்படியே மாயன்காத்து ஆண்டனரே ஐவரையும் பாவியவன் செய்ததெல்லாம் பலியாம லைபேர்க்கும் சோவிதமாய் மாயன் துணைசெய்தா ரம்மானை

துரியோதனன் பாடு

பின்னுமந்தப் பஞ்சவர்க்குப் பெரும்பாவி சொன்னபடி பன்னிரண் டாண்டு பரிவாய்க் கழிந்தபின்பு மாயன் தூதுபோனார் வஞ்சமில்லாப் பஞ்சவர்க்குத் தீயதுரி யோதனனும் திருமாலைப் பாராமல் தாள்போல் புத்தி தானுரைத்துப் பஞ்சவர்க்கு வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே எள்போ லிடங்கள் ஈயேனென வுரைத்தான் மாயனையும் பாவி வாபோ வெனப்பேசி ஈயேனெனச் சொன்ன இயல்புகேட் டெம்பெருமாள் கன்னன் பிலமும் கடியவிது ரன்பிலமும் மன்னன் சிறுபீஷ்மர் வாழுந்துரோ ணர்பிலமும் தென்னன் துரியோ தனன்பிலமுந் தானழித்து வன்ன விசயனுக்கு வாளி பலகொடுத்து வீமனுக்கு நல்ல விசைதண்டா யுதங்கொடுத்துத் தாமன்சகா தேவனுக்குச் சத்திசூலங் கொடுத்து நகுலனுக்கு ஆயுதமும் நல்லபரி கொடுத்துப் புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து மங்கை துரோபதைக்கு வாய்த்தக் கனல்கொடுத்துச் செங்கையிலே பாரதத்தைச் சேவித்தார் மாயவரும் மாயருட கையில் வளர்ந்த திருமுடியில் ஓசையிட வொன்று ஒத்துதே பாரதப்போர் ஐபேருட படையும் அரவக்கொடி யோன்படையும் கைப்போரு விற்போரும் கணைப்போரும் வாள்போரும் அம்புப்போ ருங்கரியின் அச்சுப்போரும் பொருது கன்னன் சகுனி கனத்தவலுச் சல்லியனும் மன்னன் சிறுபீஷ்மர் வாய்த்த துரோணர்முதல் சராசந் தன்வரையும் சத்தியக் கீசகனும் பூராச வீமன் பெலியிட்டா னம்மானை இத்தனைப்பேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும் அத்தனைபே ரையும் அறுத்தா னருச்சுனனும் துரியோ தனன்படைகள் சேர மடிந்தபின்பு விரிமாறு தூவி வெளியில்வந்தான் மாபாவி தம்பி படைகள் தலைவர் புதல்வர்முதல் வம்பி லிறந்தாச்சே வாழ்வெதே னென்றுசொல்லி எல்லா ரிறந்திடிலும் எண்ணமில்லை யென்றிடலாம் வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால் இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவே விருப்பமுள்ள கர்ணனைத்தான் வெற்றிகொண்ட அர்ச்சுனனை இன்றுகொல்ல வென்று எழுந்தான் படைக்கெனவே அன்றுமால் தானறிந்து அருச்சுனனைத் தானழைத்து இத்தனை நாளும் என்னபோர் செய்தாய்நீ அத்தினா இன்றுன்மேல் அரவக் கொடியோனும் வாறான் படைக்கெனவே வாள்வீமனை யழைத்து உன்றனக்கு நல்ல உறுவேட்டை யின்றடவா என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாற லாமடவா வண்ண மகள்தனக்கு மயிர்முடித்த லின்றடவா எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்றடவா என்றந்த வீமனுக்கு இசைந்தபோர்க் கோலமிட்டு வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து வீமனுட தண்டதுக்கு விசைமால் விசைகொடுத்துப் போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து விசையன் பரிநகுலன் வெற்றிச்சகா தேவனையும் இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லமென்று வீமனை யுங்கூட்டி வெளியிலரி வந்திடவே காமக் கனல்மீறிக் கரியோ னெழுந்ததுபோல் வந்தானே பாவி வணங்கா முடியோனும் சந்தான மான தமிழ்வீமன் தான்மாறி எதிர்த்தா ரிருவர் எனக்கெனக் கென்றேதான் செதுத்தான் வலுமை செய்வதுகே ளம்மானை மண்விண் ணதிரும் வானமது தானதிரும் திண்திண் ணெனப்பூமி தொந்தொ மெனக்குலுங்கும் மலைக ளசைந்து மடமடென ஓசையிடும் கலைகள் கரிகள் கதறி மிகஓடும் அலைகள் சுவறி அங்குமிங் கோடிடவே இலைக ளுதிர்ந்து இடிந்துவிழு மாமரங்கள் தூளெழும்பிச் சூரியனைத் தோன்றாம லேமறைக்கும் வேöழுழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே தவமுனிவர் நெட்டை தானெகிழ்ந்து தட்டழிந்து திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினரே வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற நாதாந்த மோதும் நன்மறையோர் தாம்பதற துரியோ தனன்போரும் செயவீமன் றன்போரும் எரியோ டெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல் ஒண்ணுக்கு வொண்ணு ஒல்கிப்புறஞ் சாயாமல் மண்ணும்விண் ணுமதிர மண்டி யுத்தமிட்டார் துரியோ தனனடிக்கத் துடிவீமன் சாயாமல் மரியாதை வீமன் மாறிய வனடிக்க அடிக்க அவன்பிடிப்பான் அப்படியே சண்டையிட்டுச் சாயா விதத்தைத் தானறிந் திருபேரும் வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன் துட்டாள னான துரியோதன னுரைப்பான் இத்தனை நேரம் இருபேருஞ் சண்டையிட்டுப் புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பாலே உன்பெலமு முன்னுடைய உயிர்ப்பெலமும் நீயுரைத்தால் என்பெலமு முன்னோடே இயம்புகிறே னென்றுரைத்தான் அப்போது வீமன் அவனிலைக ளத்தனையும் தப்பாமல் தானுரைத்தான் சகலோ ரறிந்திடவே கேட்டுத்துரி யோதனனும் கேளுநீ யென்பெலங்கள் தீட்டுகிறே னென்னிடது செய்யபுற மென்றுரைத்தான் கள்ளக் கௌசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம் எவ்வளவு போலே இசையாத வீமனுக்கு மெய்யுரைத்தா னென்று மேலான போர்வீமன் கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும் திடத்த முடனே சென்றவ் வீமன்பேரில் மாறி யவனிடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன் தேறியே மாயவரைச் சிந்தை தனில்நினைக்கத் திலர்தமுள்ள மாயன் செயவீ மனைநோக்கி வலது துடைதனிலே மாயன் கண்காட்டிடவே அடித்தானே வீமன் அதுதான் குறியெனவே துடித்தான் கிடாய்போல் துரியோதனன் விழுந்து மூடற்ற மாமரம்போல் முறிந்துகீழ் தான்விழுந்தான் கூடற்ற உயிர்போல் குலைகுலைந்து வீழ்ந்தனனே அப்போது மாயன் அரவக்கொடி யோனிடத்தில் தப்பாமல் வார்த்தையொன்று தான்கேட்கப் போயினரே முன்னே பிறப்பில் முடியிலங்கை யாண்டிருந்தாய் தென்ன னிராவணனாய்ச் சிரசுபத்தாய்த் தானிருந்தாய் அப்போது நீதான் அநியாயஞ் செய்ததினால் செப்போடு வொத்த ஸ்ரீராமனாய் நான்தோன்றி பத்துச் சிரசறுத்துப் பார்மீதிலே கிடத்தி உற்று வொருவசனம் உரைத்தேனா னுன்னிடத்தில் தம்பியா லென்னை சரமறுத்தா யல்லாது எம்பிரா ணன்வதைக்க ஏலாது என்றனையே தம்பியொரு நூறோடே தான்படைத் துன்னையுந்தான் கொம்பிலொரு ஆளைவிட்டுக் கொன்றேனே உன்னையென்றார் என்றுரைக்கப் பாவி இகழ்த்துவா னப்போது தண்டுகொண் டேயடித்த தமிழ்வீ மனல்லாது இன்றுன்னா லேலாது இடையாபோ வென்றனனே அப்போது மாலும் அதிகக்போ பம்வெகுண்டு துப்புரைகள் கெட்ட தீயனுக்கங் கேதுரைப்பார் உன்னையின்ன மிந்த உலகி லொருபிறவி சின்னவன்ன மாகச் சிரசொன்றாய்த் தான்படைத்து அறிவுபுத்தி யோடும் ஆணுவங்கள் தன்னோடும் செறியுங் கலையோடும் சிறப்போடுந் தான்படைத்து என்பேரி லன்பு இருக்கவெகு சாஸ்திரமும் தன்போத மறியத் தான்படைப்பேன் கண்டாயே முன்னே வுனக்கு உற்றபிறப் பாறதிலும் என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை ஏழாம் பிறப்பதிலும் என்னைநினை யாதிருந்தால் பாழாவாய் மேலும் பகையில்லை யென்றனக்கு என்று திருமால் இயம்பித்துரி யோதனனை அன்றவனைக் கொன்று ஐவரையுந் தான்வருத்திக் கர்மச் சடங்கு கழிக்க விடைகொடுத்தார் தர்மமுள்ள கர்ணனுக்கு சாஸ்திரத்தி லுள்ளமுறை எல்லாச் சடங்கும் இவருக்கும் நூற்றுவர்க்கும் உல்லாச முள்ளதர்மர் ஒக்கமுறை செய்தனராம்

கர்ணனுக்கு முத்தியருளல்

முறைசெய்து கர்ணனுக்கு முத்திமோக்ஷங் கொடுக்க மறைதேர்ந்த மாயன் வந்தா ரவனருகே அப்போது வேத வியாசரவ ரங்குவந்து செப்போடு வொத்த திருமாலோ டேதுரைப்பார் பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட ஆவிக்கு மோக்ஷம் அருளுவதோ மாயவரே என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று மாமுனியே நானுரைக்கக் கேட்டருள்வாய் பண்டு இலங்கைப் பாரழிக்கவே நினைந்து தொண்டுபண்ணி நின்ற துய்யவா னரங்களிலே வல்லபெல முள்ள வாலியிவன் முற்பிறப்பில் நல்லவனாய் முன்னே நாட்டி லிருக்கையிலே இராவணனோ டேகூடி இராமசரத் தாலிறந்தான் சிராமனாய் நானிருந்து செயித்த விதமறிந்து வந்து பணிந்தானே வாலியவ னென்காலில் நன்றியுள்ள மாலே நானுமுன் னேவலனாய் முன்னேநீ ரமிழ்தம் உவரிதனிற் கடைய என்னை யொருபுறமாய் ஏவல்கொண்ட மாயவரே பத்துத் தலையுள்ள பாவியந்த ராவணனைக் கொத்திச் சிரசறுத்துக் கொல்லேனோ நானடியேன் என்றந்த வாலி இறைஞ்சிநின்றா னென்னையுமே அன்றுவா லிதனக்கு அருளினது நீர்கேளும் எனக்கேவ லாக இப்பிறவி நீபிறந்து தனக்கேராப் பாவிதனைச் சங்காத்தங் கொண்டதினால் இனிமே லவனோடிருந்து என்சொல் கேட்கவைத்துக் கனியான மோஷக் கயிலாச மேதருவேன் என்றவனை யழித்து இப்பிறவி ஐவருடன் முந்தி உதித்து முதற்பிறவி செய்தவனை அரவக் கொடியோன் இடத்தி லனுப்பிவைத்து இரவலர்க்கு மீந்து என்புத்தி யுள்ளிருத்தி அன்னை பிதாசொல் அசராம லைபேர்க்கு ஒன்னே வொருகணைமேல் விடேனென்ற உத்தமன்காண் ஆனதால் முன்னே அருளிவைத்த சொற்படிக்கு மானமாய் மோக்ஷம் வகுத்தே னிவனுக்கென்றார் நல்லதுதா னென்று நன்முனிவன் தான்மகிழ்ந்தான் எல்லைவைத்தா பாரதப்போர் இன்று முடிந்ததென்று கொண்டாடி ஐபேரும் குருமுனியைத் தெண்டனிட்டு வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி ஐபேரும் பத்தினியும் அச்சுதரை யும்போற்றி மெய்போக மான வியாசரை யுங்குவித்து ஆண்டார்கள் சீமை அச்சுதனா ருண்டெனவே பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே வைகுண்ட மேக மனதிலுற்று எம்பெருமாள் பொய்கொண்ட வேசம் பொருந்திப் பொருப்பேறி ஆங்கார மோகத்(து) அம்புக் கணுவாலே ஓங்கார மாமுனிவன் விடையேற்றுத் தான்மெலிந்து பஞ்சவர்க்கு உள்ள பாரப் பெலங்களையும் துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கு மேல்நடப் புள்ள விசளமெல்லாந் தானுரைத்து நூல்நடந்து வாருமென்று மோக்ஷத் திறவோனும் சீரங்க மாபதியில் செல்கின்ற அப்பொழுது சாரங்கர் செய்த தன்மைகே ளம்மானை

சப்தகன்னியரும் சான்றோர் பிறப்பும்

அரிகோண மாமலையில் அயோகவமிர்த கங்கை பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது தேன்கமுகு மாங்கமுகு தென்னங் கமுகுகளும் வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும் சோலை மரமும் சுபசோப னமரமும் ஆல மரமும் அகில்தேக்கு மாமரமும் புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும் தென்னை மரமும் செஞ்சந் தனமரமும் மாவு பலமரமும் வாய்த்த பலாமரமும் தாவு மரத்தின் தண்மைசொல்லக் கூடாது சோலையிலே வீற்றிருக்கும் சீர்பறவை யின்பெருமை தூல மின்னதென்று சொல்லத் துலையாது பார்வதியும் ஈஸ்வரனும் பாவித் திருப்பதுபோல் தேர்பதியும் மேடைகளும் சிங்கா சனங்காணும் அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல் நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது கயிலை யீதென்று கண்ணான மாமுனிவர் ஒயிலாகக் கூடி உவந்திருப்ப தவ்வனத்தில் வைகுண்டங் காண வந்ததர்மி யெல்லோரும் மெய்குண்டங் கண்டோ மெனஇருப்பா ரவ்வனத்தில் அப்படியே நல்ல அயோக அமிர்தவனம் இப்படியே நன்றாய் இயல்பா யிருப்பதுதான் புட்டாபுரங் கிழக்கு பூங்காவு நேர்மேற்கு வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனந்தெற்காகத் தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு மிக்கவகை மேற்கு மிகுத்தவனம் நேர்கிழக்கு இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிர்தவனம் அவ்வனத்தி லுள்ள அமிர்தகங்கை யானதிலே குளித்து விளையாடிக் கூபந் தனிலிறங்கி களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார் மரகத வல்லி வள்ளி சலிகையெனும் சரகதக் கன்னி சரிதை அரிமடவும் எழு மடவும் எண்ணெண்ணு மிப்படியே நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென ஏலறிந்து கன்னி இவரல்ல ஈசரென்று சாய்ந்து விலகித் தையல்நல்லார் போகுகையில் ஆய்ந்து தெளிந்த அச்சுதரு முன்னேகி பலநாளு மீசுரர்க்குப் பாவையரே நீங்களுந்தான் செலந்திரட்டி மேன்முடியில் செய்தீ ரனுஷ்டானம் இனியெனக்கு நீங்கள் எல்லோரு மிக்கவந்து கனிநீர்தனையு மெந்தலையில் கவிழுமென்றா ரெம்பெருமாள் அப்போது கன்னி எல்லோரு மேதுரைப்பார் எப்போதுந் தானாய் இருப்பவர்க்கே யல்லாது மாயவர்க்கு மற்றுமுள்ள மயேசு ரர்தன்றனக்கும் வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர் தன்றனக்கும் எருதேறி நித்தம் இறவா திருக்குகின்ற ஒருவனுக்கே யல்லால் ஊழியங்கள் வேறில்லையே கேட்டுஸ்ரீ கிருஷ்ணரும் கிளிமொழியோ டேதுரைப்பார் ஒட்டி லிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும் ஆண்டிக்கே யல்லாது அரவணையி லேதுயிலும் 400 காண்டீபனுக் கேவல் கருதோ மெனவுரைத்தீர் தோகையரே கங்கையினிச் சுருட்டுவ தைப்பார்ப்போம் ஆகட்டு மென்று அச்சுதருங் கோபமுற்று மேலோக மாயிருக்கும் வேதயேழு வுகத்தில் சாலோக மான சத்திபர லோகமதில் ஆருரூ மில்லாத ஆகாச சத்தியொன்றும் சீருரூப மான சிவலோக மானதிலே மெய்கொண்ட வானோர் வித்தொன்று ஆனதுவும் வைகுண்ட லோகமதில் வாய்த்ததர்மி யானதிலே தன்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின் சென்மித் தெடுத்தார் சிவயிருஷி யொன்றதிலே தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவரில் சகோதரரா யொன்று தானெடுத்தா ரம்மானை சொர்க்கலோ கமதிலே ஸ்ரீராமர் தன்றனக்கு பக்குவங்க ளாகப் பணிவிடைகள் செய்வோரில் நல்லகுல மான நயனவித் தொன்றெடுத்து வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகமதில் புத்தியுள்ள நாதன் பின்யுகத்தை யாளுதற்கு சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தா ரம்மானை இப்படியே மேலோகம் ஏழு லோகமதிலும் அப்படியே நல்ல ஆர்க்கமுள்ள வித்தேழு எடுத்துத் திருமால் இருதயத்தி லேயடக்கிக் கொடுத்துநின்ற தாதாவைக் குவித்துப் பதம்போற்றிக் கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம்வே றில்லையென்று தீத்தழலாய்ப் போகத் திருவுருவங் கொண்டனரே பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி குரமாய் வருணன் குளிரத் தொளிந்திடவே காமத் தழலாய்க் கருமேனி யானதிலே வேமக் கனல்போல் விழிகொழுந் திட்டெரிய சாந்தணியுங் கன்னி தையல்தெய்வ மாமணிகள் கூந்தல் விரித்துக் கூபந் தனிலிறங்கி அரிஓம் எனவே ஆடிக் கரையேறி தரிதோம் மெனவே சலக்கரையை விட்டவர்கள் உயர வரவே உள்ளுதறத் துள்ளல்கொண்டு அயரக் கரங்கால் அங்கமெல்லாந் தொங்கலிட கிடுகிடெனத் தேகம் கிளிமொழிவாய் கொட்டிடவே திடுதிடென அக்கனியைத் திரைபோல் வளையலுற்றார் கன்னி யேழுபேரும் கனலை மிகஆவ உன்னித் திருமால் ஓங்கார மோகமதால் மங்கை யேழுபேர்க்கும் வயிற்றிலுற்ற தம்மானை சங்குவண்ண மாலோன் தற்சொரூபங் கொண்டனரே உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளை தடமேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார் வெருவிப் பயந்து விழிமடவா ரெல்லோரும் கருவிதொண்ணூற் றாறும் கலங்கியே தானோடி துகிலை யெடுத்துடுத்துச் சுருட்டினார் கங்கைதனை கையில் சலந்தான் கட்டித் திரளாமல் கலங்கி யழுது கண்ணீர் மிகச்சொரிந்து மலங்கி யழுது மண்ணிலவர் புரண்டு அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே மெய்யோடே குத்தி விழுந்தழுதா ரம்மானை கனலைத் துணையா மென்றாவிக் கற்பை இழந்தோங் கன்னியரே புனலைத் திரட்டப் பெலமின்றி புத்தி யழிந்தோம் பூவையரே அனலைத் தரித்த அரன்முன்னே அங்கே சென்றால் பங்கம்வரும் இனத்தைப் பிரிந்த மானதுபோல் இருப்போம் வனத்தி லென்றனரே

அம்மைமார் தவம்

கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து மின்னித் தனங்கள் மிகுபால் சுரந்திடவே கற்புக் குழறி கயிலையுக மானதற்கு 460 அற்புத வேள்கங்கை அவர்நினை வில்லாமல் எல்லோரு மிக்க ஈசுரரைத் தானினைத்து வல்லோனே யென்று வரம்பெறவே நின்றனராம் நின்றார் தவத்தின் நிலைமைகே ளம்மானை இன்றெங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர் வந்தெங்கள் தம்மை மாலையிட வேணுமென்று பந்துத் தனமின்னார் பாவையேழு பேரும் ஈசுரரே தஞ்சமென இருந்தார் தவசதிலே மாசொன்று மில்லா மாத ரேழுபேரும் தெற்கு முகமாய்த் தேவி யேழுபேரும் மிக்கத் தவசு மிகப்புரிந்தா ரம்மானை கற்பழித் தெங்கள்கையில் கன்னிதிர ளாமல்வைத்தோர் பொற்பாத முண்டெனவே பூவை தவசுநின்றார் பாலிளகி நல்லமிர்தம் பாலாறா யோடிடவே காலிளகா வண்ணம் கடுந்தவசு செய்தனரே பிள்ளை யேழுபேரும் பெற்றுப் பெருகிடவும் கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும் மக்களையு மெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து ஒக்க வொருமித்து உலகாள வைத்திடவும் நின்றார் தவசு நேரிழைமா ரெல்லோரும் நன்றான மாமடவார் நாடித் தவசிருக்க பிறந்த பிள்ளைதன்னுடைய புதுமைகே ளன்போரே அறந்தழைக்கும் நாரா யணர்மக வாகியதோர் சான்றோர் பிறந்ததுவும் தரணியர சாண்டதுவும் வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும் அய்யா உரைக்க அடியே னதையெழுதி மெய்யான போத மேலோர்கள் முன்பதிலே அன்பான இந்த அகிலத்திரட் டம்மானை தன்போத மாயிருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்குக் கன்மமுதல் சஞ்சலங்கள் கழியுமென் றெம்பெருமாள் உண்மையுள்ள லட்சுமிக்கு உபதேசமா யுரைத்தார் இப்படியே பிள்ளைதனை ஈன்றபின்பு கன்னியர்கள் அப்படியே சென்று அவர்போய்த் தவசிருக்க

திருமால் அமுதளித்தல்

பிள்ளை களைப்போட்டுப் புண்ணியனார் போகாமல் வள்ளலந்த மாலும் மதலை தனையெடுத்து ஆரிடத்தி லிம்மதலை அடைக்கலமாய் வைப்போமென்று விசாரித்து நன்றாய் விசாரமுற்றா ரம்மானை தெய்வேந்திரன் பசுக்கள் திரைமேயக் கண்டவரும் கையதிலே சீங்குழலைக் கனிவாயில் வைத்திருத்தி நிரைவா வெனவே நியமித்தங் கூதிடவே அரை நொடியிலாவு அங்கொன்று மில்லாமல் அங்குவந்து மாயனிடம் அழைத்ததென்னக் கேட்டிடுமாம் சங்குதனில் பாலுமிழ்ந்து தாருமென்றா ரெம்பெருமாள் பாலுமிழ்ந் தாவு பலநாளும் பாலருக்கு நாலொருநாள் மட்டும் நடந்துவரும் வேளையிலே கன்றுக்குப் பாலு காணாமல் மேய்ப்போர்கள் ஏதென்றெனப் பார்த்து இயலறிந்து வானவர்கோன் தானறியச் சொல்லிச் சண்டையிட வந்தனனே வந்தவனுக் கெதிரே மாமுனிவன் சூலமதை இந்தாப்பா ரென்று எறிந்தா ரவன்பயந்து ஆரோ வெனப்பயந்து அயிராவதத் தோனும் போரொல்கிப் போனான் பொன்னுலோ கந்தனிலே நல்லதென மாமுனியும் நளின முடன்மகிழ்ந்து செல்லமக வான சிறுவர் தமைவளர்க்க

காளி வரவு

மாகாளி யென்ற வடபத்தி ரகாளி ஓகாளி யென்ற உயர்ந்த பெலக்காரி பெண்ணல்லப் போர்க்குப் புருடர்மிகப் போராது விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி இப்படியே நன்றாய் இவளிருக்கும் நாளையிலே ஆணொருவர் தன்னால் அழியா வரங்கள்பெற்ற தாணொருவன் தனையும் சத்தி உமைதனையும் கெணியா வரங்கள்பெற்றுக் கீழுமே லுமடக்கித் துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல்கொண்டு தேட்ட முடனேழு செகல்கடந் தப்புறத்தில் கோட்டை யதிட்டுக் குறும்புசெய் தாண்டனனே தேவர்கள் சென்று சிவனார்க் கபயமிட மூவரு மொத்திருந்து மழுதும் விசாரமிட்டார் ஆணாலே தக்கனையும் அழிக்கவகை யில்லையிங்கே பூணாரம் பூண்ட புட்டா புரக்காளி காளி படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால் தூளிபடத் தக்கன் சிரசறுப்பா ளென்றுமிக மாலுரைக்க ஈசுரரும் மறையோருஞ் சம்மதித்து வேலுகந்த காளிதனை விளித்தார்கா ணம்மானை உடனறிந்து மாகாளி உடையோன் பதம்பணிந்து வடவாக் கினிமுகத்தாள் வருத்தினதே னென்னையென்றாள் தக்கன் தலையறுத்துச் சங்காரஞ் செய்திடவே மிக்கநீ போவெனவே விடைகொடுத்தா ரீசுரரும் விடைவேண்டி காளி விமல னடிபோற்றிப் படைக்காரி பின்னுமொன்று பரமனோ டேகேட்டாள் என்னோ டுதவி இயல்படையாய்த் தான்வரவே வன்னப் புதல்வர் வகிருமென்றாள் மாகாளி அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி கற்போடு வொத்த கன்னியே வுன்றனக்கு பெண்ணா ணுமில்லாப் பெரிய பெலக்காரி கண்ணான காளி காரிகையே நீகேளு தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி மரித்துப் பிறக்காத மாகாளி யேயுனக்கு விடையா யொருவசனம் விரிக்கக்கே ளொண்ணுதலே படைக்காகப் பாலர் பச்சைமால் தாவெனவே தவசு மிகப்புரிந்தால் சங்குசரத் தாமன் விபுசு தனிற்பிறந்த வீரரேழு பேர்களையும் உன்னை யழைத்து உன்கையி லேதருவார் முன்னே தவசு மிகப்புரியப் போவெனவே அரனார் விடையும் அருளி மிகக்கொடுக்கப் பரமான தேவி பச்சைமால் தன்றனைத்தான் நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே அனைத்துயி ருங்காக்கும் அச்சுதருந் தானறிந்து மக்களேழு பேர்களையும் மாகாளி கைக்கொடுக்கக் கொக்கரித்துக் காளி கொண்டாடித் தான்மகிழ்ந்து வாங்கு மளவில் மாமுனியைத் தானோக்கி தாங்கிநின்று பாதத்(து) அடிதாழ்ந்து ஏதுசொல்வாள் வேத முனியே வித்தைக் கருத்தோனே மாதவங்கள் கற்ற மாமுனியே யிம்மதலை ஆனோர்க்கு நாமம் அருளிநீர் தாருமென்றாள் வானோர்கள் போற்றும் மாமுனியுந் தான்மகிழ்ந்து

சான்றோர்க்கு நாமம் அருளல்

உள்ளதுதா னென்று உடனே மனமகிழ்ந்து வள்ளல்சிவ னாரறிந்து மறைவேதனை யழைத்து முப்பத்து முக்கோடி முனிவரவர் தங்களையும் நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும் தேவர் முதலாய்த் தேவேந் திரன்வரையும் மூவ ரறுவர் உள்ளோரையு மழைத்து கிணநாதர் வேதா கிம்புருடரை யும்வருத்தி குணமான தந்தி குமரனை யும்வருத்தி சத்தி உமையும் சரசுவதி பார்பதியும் எத்திசையும் வானோர் எல்லோரை யும்வருத்தி சங்கமது கூடி சாஸ்திரங்கள் தானோதி மங்கள வாத்தியங்கள் மடமடென நின்றதிர இப்படியே சங்கம் எல்லோருந் தான்கூடி அப்படியே தானிருக்க அருளுவா ரச்சுதரும் பிறந்தபிள்ளை யேழதுக்கும் பேரிட வேணுமென்று அறந்தழைக்கு மீசர்முன் அவர்வைத்தா ரம்மானை அப்போது ஈசுரரும் அன்பா யகமகிழ்ந்து இப்போது மாயவரே எல்லோருக் கும்போதுவாய் நீர்தானே நாமம் இட்ட லதுபோதும் பார்தா னளந்த பாலவண்ணா வென்றுரைத்தார் கார்வண்ணருங் கேட்டுக் கறைக்கண்ட ரோடுரைப்பார் தார்வண்ணரே முதற்பேர் தானுரைக்க வேணுமென்றார் நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும் வல்லவனே உன்னாத விந்தில்வந்து தோன்றினதால் தோணாப் பொருளைத் தொடர்ந்துகண்ட மன்னவர்க்கு சாணா ரெனநாமம் சாற்றினா ரீசுரரும் முதற்பேர்தா னீசர் மொழிந்தபின்பு வேதாவும் மதமான விந்து மாயமுனி சேயதற்கு சான்றோ ரெனநாமம் சாற்றினார் வேதாவும் ஆண்டா ரிதுவுரைக்க அச்சுதரும் பின்சொல்லுவார் நாடாள்வா ரென்று நாமமிட்டார் பாலருக்கு தாடாண்மை யுள்ள சத்தியங் கேதுரைப்பாள் அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுப்பாள் எங்கும் புகழ்பெற்று இராஜபட்டந் தான்சூடும் சங்குமன்ன ரென்று தானுரைத்தாள் சத்தியுமே பேறுபெற்ற பாலரென்று பிரிய முடன்மகிழ்ந்து பாருபதி நாமம் பகருவா ளம்மானை சென்றஇடம் வென்று சீமைகட்டித் தானாண்டு மண்டலங்கள் தோறும் வரிசைபெற்று வாழ்ந்திருக்கும் பொற்பமுடி மன்னரென்று பேரிட்டாள் பார்பதியும் கற்பகத்துக் கொத்த கன்னி சரசுவதியும் வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரை யுரைத்தாள் பிள்ளையார் தானும் பிரியமுடன் மகிழ்ந்து நன்றான வீர நகுலவேந் தரெனவே அன்றானை முகத்தோன் அருளினர்கா ணம்மானை சண்முகனுந் தான்மகிழ்ந்து தவலோக மன்னரென்று விண்ணுகமு மெய்க்க விளம்பினர்கா ணம்மானை வானோர்கள் வேத மாமுனிவர் தாமகிழ்ந்து தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்குத் தர்மகுல வேந்தரென்று சாற்றினா ரம்மானை கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச் சூரியகுல வேந்தரென்று சொன்னார்கா ணம்மானை வாசவனுந் தான்மகிழ்ந்து மாயனுட பாலருக்கு வீசவிசைய வேந்தரென்று நாம மிட்டார் இப்படியே நாமம் இவர்மொழிந்த தின்பிறகு கற்புடைய சன்னாசி கருத்தாக வேயுரைப்பார் நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக் காட்டுரா சனெனவே கருத்தாக நாமமிட்டார் இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமமிட்டு அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பணிந்து சத்தி யுமையும் சரசுவதி பார்பதியும் எத்திசையு மெய்க்க எடுத்துநீ ராட்டுவாராம் அமுதமது சேனையிட்டு எல்லோரும் தாமகிழ்ந்து குமுதமொழி மாதர் குரவையிட்டுத் தாமகிழ்ந்து அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க தண்டாமரை மாது தாலாட்ட வுத்தரித்தாள்

சரஸ்வதி தாலாட்டு

வைகுண்ட கண்ணோ வரம்பெற்ற மாதவமோ கைகண்ட வித்தை கருத்தறிந்த உத்தமரோ தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ வங்கம்நிசங் கண்ட மங்காத சான்றவரோ சிங்கமுகத் தண்டிகையும் சிலம்புனைந்த ரத்தினமும் சங்கக் கொடிவிருது சங்குரட்டை பெற்றவரோ முத்துச் சிலாப முதலாளி யானவரோ கொத்துமுங்கை யாபரணம் கொடிவிருது பெற்றவரோ மூலப்பொருள் கண்ட முதற்சாதி யானவரோ தாலம்பா லுண்டு தானிருந்த மன்னவரோ நடைக்கா வணங்களிட்டு நல்லதீ வட்டியுடன் படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ வெள்ளானை மேலே வீதிவலஞ் சுற்றிவந்து துள்ளாடி சிங்கா சனம்வீற் றிருப்பவரோ பூதமது பந்தம் பிடித்துமுன்னே தான்வரவே நாதமிரட் டையூதி நாடாளு மன்னவரோ எக்கா ளமூதி இடமடம் மானமுடன் மிக்கான சீமையெங்கும் மேவிவரு மன்னவரோ வாரணங்கள் கட்டி வையகத்தைத் தானாண்டு தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத்திருச் சான்றவரோ கர்மம தில்லாமல் களிகூர்ந் திருப்பவரோ தர்மமுடி பெற்றவரோ சாஸ்திரத்துக் குற்றவரோ உடற்கூறு சத்தி உயிரோ டுதித்துவந்த சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ கல்விக் குகந்த கருணாகர ரானவரோ செல்விக் குகந்த சென்மமது கொண்டவரோ தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிக ளாவதற்கும் மூவர்க்கு முதவிசெய்து உதித்துவந்த கற்பகமோ சென்ற இடமெல்லாம் சிறப்புவெகு மானமுடன் மண்டலங்கள் மேய்க்க வாழுகின்ற சான்றவரோ சாணா ருக்குள்ளே சர்வது மேயடக்கிக் கோணாத மாயன் குருக்கொடுத் தீன்றகண்ணோ அறிவுஞா னத்தோடும் ஆதிப் பிறவியோடும் செறியுங் கலையோடும் செடமெடுத்த சான்றவரோ துட்டரென்ற பேரைச் சூரசங் காரமிட்டுக் கொட்டமிட்டுக் கோட்டை கொடிவிருது பெற்றகண்ணோ ஆண்டிருக்கு மன்னவரோ அச்சுதரின் பாலகரோ தாண்டி வரம்பெற்றுத் தரணியர சாண்டவரோ பாண்டவரோ ஆண்டவரோ பாலவண்ணர் பெற்றெடுத்த சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ தங்கமணியோ நவமணியோ சலத்தில்விளைந்த தரளமுதோ சிங்கக்கொடிகள் பெற்றவரோ சீமையடக்கி யாண்டவரோ துங்கவரிசை பெற்றவரோ திருமால்விந்தி லுதித்தவரோ சங்கமகிழ வந்தவரோ சான்றோர்வளர ராராரோ

கற்பகத்தரு

சந்தோ சமாகச் சரசுவதி தாலாட்டி வெந்தோச மெல்லாம் விலகவே நீராட்டி வைகுண்ட மூர்த்தி மாமுனிதன் கைக்கொடுக்க மைகொண்ட வேதன் மதலை தனைவாங்கி ஈசர் முதலாய் எல்லோருங் கூடிருந்து வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருவமிர்தம் சேனைமிக வூட்டுதற்கும் செல்வ முண்டாவதற்கும் வானத் தமிர்தம் வருத்திமிக ஈயவென்று கயிலை தனிலிருக்கும் கண்ணான பேர்களுக்கு அகிலமதிற் பாயும் ஆகாய வூறலதை வருத்திக் கொடுக்கவென்று மாயவரு மீசுரரும் பொருத்தமுள்ள வானோரைப் போய்வேண்டி வாருமென்றார் அப்படியே வானோர் ஆகாய மீதேகி செப்பமுட னமிர்தம் சென்றவர்கள் பார்க்கையிலே ஆருரூப மில்லா ஆகாச மேல்வழியே சீருரூப மான சிவகயிலை யானதிலே பாயு மளவில் பலசாஸ்தி ரங்கள்கற்ற வீயுமறை வேதியனும் விழிநுதலாள் கன்னியரும் அமுதமதை யெல்லாம் அள்ளித் தலைமேலும் குமுதமுடன் குடித்துக் கொழுத்துமிகப் பாளைவைத்துத் தேகமது நிமிர்ந்து தேவியு மன்னவனும் ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில் வானோர்கள் பார்த்து வாய்த்தமிர்தங் காணாமல் ஏனோயிது மாயமென்று எண்ணிமிகப் பார்ப்பளவில் கொண்டாடி நின்ற கூர்மறையவன் தனையும் பெண்டாட்டி யான பெண்ணதையும் வானோர்கள் பிடித்து இழுத்துப் பின்னுமுன்னுந் தள்ளிமிக அடித்துச் சிவன்முன்னே அச்சுதரும் பார்த்திருக்க கொண்டுவந்து விட்டுக் கூறுவார் வானோர்கள் பண்டுமுத லின்றுவரை பாய்ந்த அமிர்தமெல்லாம் உண்டுகொண்டு தேகம் உரத்துமிகப் பாளைவைத்து வண்டுறுக்கி மிக்க வலுப்பேசி னானெனவே சொல்லிடவே வானோர் திருமா லதுகேட்டு நல்லதுதா னென்று நாடிச்சிவ னோடுரைக்க அப்போது நல்ல ஆதி சிவமுரைப்பார் எப்போதும் பாலர் இவருண் ணமிர்தமெல்லாம் கொடுக்கும் படியாய்க் குருக்கவையு மென்றுரைத்தார் அடுக்கநின்ற தேவர் அதுகேட்டுச் சீக்கிரமாய் மறையோனையும் மாதுவையும் வந்தெடுத்துச் சாபமிட இறையவரைப் பார்த்து ஏதுரைப் பான்மறையோன் இப்போது இட்ட இச்சாப மானதுதான் எப்போது நீங்கும் என்றேகேட் டான்மறையோன் நீசக் குலமறுத்து நெடிய திருமாலும் மாசில்லாத் தர்ம வையகத்தை யாளுதற்கு அன்பு சேகரிக்க அங்குவரு வார்கண்டீர் வம்பு மாறும்போது மாறுமுங்கள் சாபமென்றார் உடனே மறையோனும் ஓவியமு ள்ளதென்று தடமேலே நின்று தால மெனவளர்ந்தார் வளர்ந்த அமிர்தமதை மக்களேழு பேர்களுக்கும் பழமமிர்தக் காயோடு பலவகையுந் தானாண்டு அமிர்தமதை நீங்கள் ஆக்கிரகந் தானடக்கிக் குமிர்தமுட னீங்கள் குடித்திருங்கோ வென்றுசொல்லி உங்களுக்குப் பாலமிர்தம் ஊறுமல்லா லித்தாலம் எங்களுக்கு மித்தாலம் இசையாது கண்டீரோ பாலருக்கு இந்தவரம் பரமயுகத் தோர்கொடுத்து ஞாலமுள்ள காளி நாயகியைத் தானழைத்து பத்திரத்தாள் பெற்றமக்கள் பாலரையுங் காளி பண்பாக வாங்குகையில் ஆலமுத முண்ட அச்சுதரு மேதுரைப்பார் அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும் கடகரியின் தொழிலும் கந்துகத் தின்தொழிலும் மாவேறுந் தொழிலும் வாள்வீசுந் தொழிலும் பாவேறு பாட்டும் பழமறைநூ லானதுவும் அடவு மேலான அதிகப்பல வித்தைகளும் திடமு மிகவருத்தி சேனா பதியாக்கி எல்லா விதத்தொழிலும் இசைவான ராகமதும் நல்லா வருத்தி நாட்டமுட னேகொடுத்து உயிர்ச்சேதம் வராமல் ஒன்றுபோ லென்மகவை நெய்ச்சீதம் போலே நீவளர்த்துத் தாவெனவே அல்லாம லென்மகவை ஆரொருவ ரானாலும் கொல்லாமல் காக்கக் கூடுமோ வுன்னாலே அன்பான காளி அதற்கேது சொல்லலுற்றாள் என்பாலகர் தனையும் ஈடுசெய்ய யிங்கொருவர் உண்டோகா ணிந்த உலகி லெனக்கெதிரி என்றேதான் காளி இப்படியே சொல்லியபின் பாலரையுந் தானெடுத்துப் பரமசிவ னாரருளால் கோலமுள்ள மாயன் கொடுத்தாரொரு வார்த்தைசொல்லி சீலமுள்ள காளியென் சித்திரப் பாலருக்கு பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடுநீ மதலைதனக் கோர்தீங்கு வந்ததே யுண்டானால் குதலையரே வுன்றனக்குக் கொடுஞ்சிறைதான் சிக்குமென்று சொல்லியே காளிகையில் சிறுவரையுந் தான்கொடுத்து வல்ல பெலமுள்ள மாடுதனி லேறியையும் வேதாவும் நல்லநெற்றி விழியுடை யாள்தனையும் மாதாவு மான வாய்த்தசர சோதியையும் தேவர்முதல் வானவரை சிட்டர்முனி வோர்களையும் மூவர்களை யுங்கயிலை ஊரேபோ மென்றனுப்பி காளிதனைப் பிள்ளைகளைக் கருத்தாய்வள நீயென்று ஆழி யடைத்த அச்சுதருந் தான்நடந்து சீரங்க மாபதியில் சென்றிருந்தா ரம்மானை சாரங்கர் சீரங்கம் தான்வந்தா ரென்றுசொல்லி சீரங்க மெல்லாம் செழித்து மிகவாழ்ந்து பாரெங்கு மெச்சிப் பரந்துகா ணம்மானை அப்படியே அச்சுதரும் அப்பதியி லங்கிருக்க எப்படியும் சீரங்கம் இனிதழைக்கு மென்றுமிக மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் தேவருங் கொண்டாடி சிந்தைமகிழ்ந் தேயிருந்தார் சீரங்க மான திருப்பதியின் வளமை சாரங்க ராயர் தாமுரைத்தா ரம்மானை மாரியது மூன்று வருசிக்கத் தான்பொழிந்து ஏரி பெருகி ஏற்றசெந்நெல் தான்விளைந்து படியொன்று கோட்டையொன்றாய்ப் பழுத்துவருஞ் செந்நெலது கரும்பு முத்தீனும் கசுவுங் கரைபுரளும் அரும்பு வனமும் அகில்தேக்கு மாமரமும் கோவுஞ் ஸ்ரீரங்கரெனக் கூப்பிடுங்கா ணச்சுதரை மாவுஞ் ஸ்ரீரங்கரென வந்தழைக்கு மச்சுதரை மயில்குயில் மான்கலையும் வாய்த்தஅணில் பட்சிகளும் ஒயிலாக அச்சுதரை உள்ளாக்கி யாடிவரும் அவ்வூரி லுள்ள அந்தணர்க ளெல்லோரும் கவ்வைவே றில்லாமல் கரியமால் தன்றனக்கு பூசை முறைவைத்துப் பிராமணர்கள் செய்துவர ஆசையுட னச்சுதரும் அங்கே யினிதிருந்தார்

சான்றோர் பெருமை

சீரங்க மாபதியில் சிறந்திருக்கு மப்போது சாரங்கர் பெற்ற சான்றோர் களின்பெருமை சொல்லுகிறா ரெங்கள் திருமால்கா ணம்மானை நல்லதுகா ணென்று நாடித் திருகேட்க அன்பான சான்றோர்க்கு ஆனமா காளியம்மை தன்பாலர் போலே தான்வளர்ந்து வித்தைகளும் வருத்திக் கொடுத்து மன்னர்மன்னர் தானாக்கி கருத்திலுறக் காளி கண்ணான மக்களுக்கு வேண்டும் பணிகளெல்லாம் விதவிதமாய்த் தானெடுத்துப் பூண்டந்த மக்களையும் பூத்தான மாய்வளர்த்தாள் மிக்கநல்ல பிள்ளை வீரரென ஆகுகையில் தக்கனென்ற சூரன் தன்பேரில் மாகாளி படைக்கு யெழுந்தருளிப் பாலரையுந் தான்கூட்டி நடைக்கு அதிகமுள்ள நாயகியும் பாலருக்குப் போர்க் கோலமிட்டுப் புட்டாபுரங் கடந்து ஆர்க்க முள்ளகாளி அலகைப் படையுடனே சான்றோரை விட்டுத் தக்கனையுந் தான்வதைத்து மூன்றோரை நெஞ்சில்வைத்து ஓங்கார மாகாளி தக்கனையுங் கொன்று சான்றோ ரவர்தமக்கு மிக்க வரிசை மிகக்கொடுத்து மாகாளி புட்டா புரத்தில் பேய்க்கணங்கள் சூழ்ந்துநிற்க கட்டாத காளி கமலத்தில் வீற்றிருந்தாள்

சான்றோர் திருமணம்

அப்போது நல்ல ஆர்க்கமுள்ள பாலருக்கு இப்போது மாலையிட ஏழுபேர்க்கும் வேணுமென்று பார்த்து விசாரித்துப் பத்திர மாகாளி நாற்றிசையும் பார்த்து நாரத மாமுனியை அழைத்துநல்ல மாகாளி அந்தமுனி யோடுரைப்பாள் விழைத்துநல்ல புத்தி விபரமிட்டுச் சொல்லுகின்ற மாமுனியே யென்றன் மக்களேழு பேர்களுக்கும் நீமுயன்று பெண்ணேழு நிச்சயிக்க வேணுமென்றாள் நல்லதுதா னென்று நாரத மாமுனிவன் வல்லவகை யாலுன் மக்களுக்குப் பெண்ணேழு பார்த்துவரு வேனென்று பகர்ந்துமுனி போயினனே சாற்று மொழியிசையத் தானுரைக்கு மாமுனிவன் நீதமுள்ள நல்ல நிருபதி ராசனுந்தான் பெற்ற மதலைதனைப் பெண்கேட்கப் போயினனே மாமுனிவன் கேட்க மன்ன னதிசயித்துத் தாமுனிந் தேது தானுரைப்பா னம்மானை நல்ல முனியே நானுரைக்க நீர்கேளும் செல்ல மகவு தேவிக்கு மென்றனக்கும் இல்லாம லனேகநாள் இருந்தோந் தவசாக நல்லான ஈசர் நாட்டமுட னிரங்கி ஆண்பிள்ளை யுன்றனக்கு ஆகமத்தி லில்லையென்று பெண்பிள்ளை யேழு பிறக்குமென்று சொன்னார்காண் அப்போது ஈசுரரை அடியேன் மிகப்பார்த்து இப்போது என்றனக்கு இரணமுடி வாகுகையில் கொள்ளிவைக்கப் பிள்ளை ஒன்று கொடுவுமென்றேன் தெள்ளிமை யாயீசர் சொன்ன மொழிகேளும் தெய்வச் சான்றோராய்த் திருவான மாகாளி கையதுக்குள் வாழ்ந்துன் கன்னியேழு பேர்களையும் மாலையிட் டுன்றனக்கு வருமாபத் தையெல்லாம் மேலவராய்க் காத்து மேதினியோர் தாமறிய உன்றனக்கு நல்ல உதவிமிகச் செய்வதற்கும் வந்தங் கிருப்பாரென வகுத்தாரே ஈசுரரும் ஆனதால் பெண்ணேழும் அவர்க்கேதா னல்லாது மான முனியே மற்றெவர்க்கு மாகாதே என்று நிருபதனும் ஏற்றமுனி யோடுரைக்க நன்று நன்றென்று நாரதருஞ் சம்மதித்து மன்னவனே கேளு மாகாளி தன்னிடத்தில் சொன்னபிள்ளை யேழும் சிறந்திருக்கி றாரெனவே அந்தமன்ன ரான ஆண்பிள்ளைக ளானோர்க்கு இந்த முகூர்த்தம் யான்கேட்க வந்தேனென்று சொல்லமுனி மன்னவனும் சோபித மாய்மகிழ்ந்து நல்ல முகூர்த்தம் நாளிட்டா னம்மானை நாளிட்டு நாரதரும் நல்லமா காளியுட தாளிணையைப் போற்றித் தானுரைத்தா ரம்மானை மாகாளி யுன்றனுட மக்களேழு பேர்களுக்கும் வாகான மன்னன் வாய்த்த நிருபனுட மக்களேழு பெண்களையும் மாலைமணஞ் சூட்டுதற்கு மிக்கநா ளிட்டு மேவிவந்தேன் மெல்லியரே என்றுமுனி சொல்ல ஏற்றமா காளிசொல்வாள் நன்றுநல்ல மாமுனியே நான்வளர்த்த கண்மணிகள் தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள் மெய்வரம் புள்ள மெல்லியரைச் சொல்லுமென்றாள் பியற்றிவந்த பெண்ணதுக்குப் பிறவியென்ன மாமுனியே உய்த்துவந்த பெண்ணேழின் உற்பவஞ்சொல் மாமுனியே அப்போது பெண்ணார்கள் ஆதிப் பிறவியெல்லாம் செப்புகிறோ மென்று சிவகாளிதனைத் தெண்டனிட்டு கேளாய் நீயென்று கிருபையுட னேதுரைப்பான் நாளான நாளதிலே நல்லதெய்வ லோகமதில் தெய்வேந் திரனார்க்குச் சொல்லேவல் செய்திருந்த நெய்நெடியக் கன்னி நேரிழைமா ரேழ்பேரும் வேலையின்ன தென்று விரித்துக்கேள் மாகாளி மாலையிலுங் காலையிலும் வானவர் கோன்றனக்குப் பூவெடுத் திட்டுப் பூசைபுனக் காரமிட்டுக் கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடிநிதம் ஏவல் புரியுகின்ற இராசதெய்வக் கன்னியர்கள் நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே பூவுலகு மன்னர்களைப் பூத்தான மாகவெண்ணி பாவினியக் கன்னி பஞ்சமது வேறாகிப் பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய் ஆவடுக்கங் கொண்டு அவர்க ளொருப்போலே காச்சல் குளிரெனவே கவ்வையுற்றுத் தானிருக்க மாச்சல் தனையறிந்தான் மகவானு மப்போது ஆனதால் வேதாவின் அண்டை யவனணுகி தீனம்வந்த தேதெனவே தேவியர்க்கு வேதாவே வேதா தெளிந்து விரித்துரைப்பா ரப்போது சூதான மான தோகை யேழுபேரும் பூலோக மன்னருக்குப் பிரியமுற்று மையல்கொண்டு காலோயு தென்று கவ்வையுற்ற தல்லாது வேறில்லை யென்று வேதா இதுவுரைக்க தேறியே வாசவர்கோன் தேவியெழு பேர்களையும் அப்படியே பூவுலகில் அமையுமென்றார் வேதாவை இப்படியே வந்து இவர்பிறந்தா ரென்றுமுனி சொல்லச் சிவகாளி சிரித்து மனமகிழ்ந்து நல்லதிது மாமுனியே நன்முகூர்த்தம் பார்த்துரைநீ உடனே முனியும் உகந்த முகூர்த்தமென்று திடமே நிருபனுக்குச் செய்திசொல்ல ஆளும்விட்டு நாளை முகூர்த்தமென்று நாற்றிசையுந் தானறிய கோழையில்லா மன்னர் குலதெய்வச் சான்றோர்க்கு முகூர்த்தமென்று சாற்றி மூவுலகுந் தானறிய பகுத்துவமாய் நல்ல பந்தலிட்டா ரம்மானை வயிரக்கால் நாட்டி வயிர வளைகளிட்டுத் துயிரமுள்ள தங்கத் தூண்கள் மிகநாட்டி முத்து நிரைத்து முதுபவள வன்னியிட்டுக் கொத்துச் சரப்பளியைக் கோர்மாலையாய்த் தூக்கி மேற்கட்டி கட்டி மேடைபொன் னாலேயிட்டு காற்கட்டி பட்டுக் கனமா யலங்கரித்து வாழை கரும்பு வகைவகையாய் நாட்டிமிக நாளை மணமென்று நாட்டுக்குப் பாக்குவைத்து வெடிபூ வாணம் மிகுத்தகம்பச் சக்கரமும் திடிம னுடன்மேளம் சேவித்தார் பந்தலுக்குள் வாச்சியங்க ளின்னதென்று வகைசொல்லக் கூடாது நாச்சியார் மாகாளி நாயகியுங் கொண்டாடி பாலருக் கேற்ற பணியெல்லாந் தான்பூட்டிச் சாலமுள்ள சிங்கத் தண்டிகையில் தானிருத்தி பட்டணப் பிரவேசம் பகல்மூன்று ராமூன்று இட்டமுடன் பூதம் எடுத்துமிகச் சுற்றிவந்து மண்டபத்துள் வைத்து மாபூதஞ் சூழ்ந்துநிற்க தெண்டனிட்டு மன்னர் தேசாதி சூழ்ந்துநிற்க பதினெட்டு வாத்தியமும் பட்டணமெங் குமுழங்க ததிதொம் மெனவேசில தம்புருசா ரங்கிகெம்ப பந்தமது பிடித்துப் பலபூதஞ் சூழ்ந்துநிற்க நந்தகோ பால நாரா யணர்மகிழ்ந்து மைந்தருக் கின்று மணமுண்டு என்றுசொல்லி வைந்தர்பல தேவர்களை வாருமென வேயழைத்துப் பாலருட முகூர்த்தம் பார்க்கப்போ மென்றுசொல்லி சீலமுட னனுப்பி ஸ்ரீரங்க மேயிருந்தார் தேவதே வர்புகழத் திசைவென்ற சான்றோர்க்கு மூவர்களும் வந்து உதவிசெய்தா ரம்மானை நல்ல முகூர்த்தம் நாள்பார்த்துச் சான்றோர்கள் எல்லாச் சடங்கும் இயற்றிவைத்தா ரம்மானை சடங்கு முகித்துச் சான்றோரை யொப்பமிட்டுத் தடங்கொண்ட மன்னவரைத் தண்டிகையின் மீதிருத்தி அரசர் மிகச்சூழ அணியீட்டி யாட்கள்வர விரைவாகக் காளி வித்தகலை யேறிவர அரம்பையர்க ளாடிவர அயிராவதத் தோன்வரவே வரம்பெரிய தேவர் மலர்மாரி தூவிவர ஆலத்தி யேந்தி அணியணியாய்த் தான்வரவே மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே பூதம தாடி பிடாரியது சூழ்ந்துவர நாதம் ரெட்டையூதி நடந்தார்மாப் பிள்ளைகொண்டு விருதிற் பெரிய வீரதெய்வச் சான்றோர்கள் நிருபன் மகளை நியமித்து மாலையிட வீரியமாய் நல்ல விவாகமிட வாறாரெனப் பூரியலிற் சொல்லி பேர்கள் சிலரூத இப்படியே வாத்தியங்கள் இசைந்திசைந் தேவூதி அப்படியே நிருபன் அரசன் மகள்தனையும் மாலை மணமிட்டு வாழவந்தா ரம்மானை வாலையது வான மாகாளி வாழுகின்ற மண்டபத்துள் வந்து மகிழ்ந்திருந்தா ரம்மானை

அகிலம் நான்கு

divider
தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக் கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும் தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும் வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள் மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை நெய்த்தெளிய கன்னி நேரிழைமா ரெல்லோரும் இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தா ரம்மானை பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி எமத்திறைவ ராக எங்கும் புகழ்ந்திடவே சமர்த்த ரெனஅவர்கள் தலையெடுத்தா ரம்மானை முத்து வியாபாரம் முதல்வியா பாரமுதல் பத்தரை மாற்றுப் பசும்பொன்வியா பாரமுடன் மாணிக்க வியாபாரம் வியிரப்பொன் வியாபாரம் ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம் கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம் ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச் செய்தனராம் தாலம தேறித் தைரியப் பால்வாங்கி மேலுள்ள சான்றோர் மிகுதியா யாண்டிருந்தார் நெய்த்தொழிலும் வில்தொழிலும் நெறடுவிதத் தொழிலும் மெய்த்தொழில்கள் கற்று மேலோ ரெனவளர்ந்தார் சோழ னதையறிந்து தெய்வச்சான் றோர்களுக்கு வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங் கொடுத்து நல்லமன்ன ரென்று நாடி மகிழ்ந்திருந்தார் செல்லமன்ன ரான தெய்வச்சான் றோர்களுக்கு அடிக்கல் லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங் கொடுத்து வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து ஆழமுள்ள சான்றோர் அரசாண்டா ரம்மானை சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார் வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார் இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத் தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே

கலியன் பிறப்பு

சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான் பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள் நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல் அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன் அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன் தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால் வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம் இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல் மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால் ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும் ல்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய் ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும் வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான் நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும் வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான் நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில் உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும் தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும் கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும் சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும் இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார் அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார் முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத் தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால் இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும் அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும் குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன் மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும் எப்போது மிறவா(து) இருக்கும் முனிவர்களும் நல்லதுதா னென்று நாடி யகமகிழ்ந்து வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம் பிறவி வகுக்கவென்று பெரியோ னகமகிழ்ந்து திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தா னம்மானை எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே அல்லோரும் வந்து ஆதியோ டேவுரைத்தார் உடனே சிவமும் உள்ள மிகக்களித்து இடமே தான்பேர்ந்து எழுந்தருளி ஈசுரரும் அதிசயத்தைப் பார்ப்போமென்று அவரேகும் வேளையிலே எதிராக நின்றுநந்தி ஏதுரைப்பா ரம்மானை மூவர்களுந் தேவர்களும் மூர்த்திகளுங் காணாத தேவரீ ரெழுந்தருளி திசைநோக்கி வந்ததென்ன அப்போது நந்தியுடன் ஆதி மிகவுரைப்பார் இப்போ தோரற்புதமாய் இருக்குதென்றா ரெல்லோரும் வானோக்கிக் காலும் மலர்நோக்கிச் சிரசும் தானமது மாறி தலைகீழாய் நிற்பதுவும் பார்த்துவர லாமெனவே பையநடை கொண்டேனென்றார் சாற்றுமொழி கேட்டுநந்தி தானுரைப்பா ரம்மானை அங்கல்லத் தானம் அழிந்ததுகா ணீசுரரே இங்கு நான்கண்டேன் எழுந்தருளி வந்ததினால் தலந்தா னிளகி தான்வந்த தாலேதான் குலந்தா னழியும் குசல்பிறக்கும் ராச்சியத்தில் வரம்பழியு மாரி மனுநீதங் குன்றுமையா பரம்பெரிய வேதம் பழுதுவருங் கண்டீரே என்றந்த மாமுனியும் ஈசுரரை யுங்கூட்டி குன்றுபொன் னான கிரிமேவித் தானிருந்தார் நடந்த புதுமையென்ன நாம்வருத்திப் பார்க்கவென்று திடந்தெளிந்த மாமுனிவன் செப்பவே ஈசுரரும் சாத்திர வேதச் சதுர்மறையைத் தான்வருத்தி சித்திர புத்திரரைச் சீக்கிரத்தி லேயழைத்து வந்த புதுமை வகையென்ன நம்கணக்கா இந்தக் கணக்கை எடுத்துரைநீ யென்றனராம் அப்போது ஈசுரரை அன்போ டுறவணங்கி செப்போடு வொத்த சித்திரருஞ் செப்பலுற்றார் சாத்திரத்தி லுற்ற தன்மை மிகக்கேளும் சீத்துவ மாகச் சித்திரரும் செப்பலுற்றார் முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே தன்பிறவி யோடாறு தான்பிறந்தான் சூத்திரமாய் மண்தா னுடம்பு வந்துதித் தோன்றனக்கு விண்தா னுடம்பு விலாசக் குருவோடு சலந்தா னுடம்புக்(கு) உறுதி தைரியங்கள் வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்குப் பிலந்தூக்கும் வாயு பிராணன்கா ணீசுரரே முப்பழியோ டாறு உயிரழித்த மாயனுக்கு இப்போது வந்த இவன்தான் கொடிதுவையா மாயனாலு முழமாய் மனுச்சிங் கமுகமாய் வாயமாய் நம்மை வதைத்தானே யென்றுசொல்லி அன்றா யனெடுத்த அளவா யுருவெடுத்துச் சென்றா லவனுடைய திறத்தைநாம் பார்ப்போமென்று வேகத்தால் துண்டம் வெடித்ததுகா ணிப்புதுமை ஏகந்தா னாளும் ஈசனே யென்றுசொல்லி இப்படியே சித்திரரும் எடுத்துரைக்கவே ஈசர் அப்படியே வந்தவனுக்(கு) ஆயுசு மவன்பலமும் கரணமுதல் நடப்பும் கட்டாக நீதேர்ந்து மரணமுதல் நடப்பும் வகுத்துரைநீ நம்கணக்கா அப்போது சித்திரரும் ஆதியருள் நெஞ்சில்வைத்துப் பொற்பாத முண்டெனவே புகல்வா ரியல்கணக்கர் அப்பனு மம்மை அடங்கிமிகப் பெறாமல் கொப்பளித்துத் தானாய்க் குறுத்துவந்த நீசனுக்குத் தத்துவந் தொண்ணூற்(று) ஆறுந் தடிக்குணந்தான் புத்தி புலனைந்தும் பொய்ப்பூண்ட பூதமுமாய் சத்துருக்கன் கண்கால் தலையும் வெறும்நீசம் உற்றுணர்ந்து பாராத உடலு மவன்காலும் மாயக் காயமதுக்கு வருசமொரு நூறிருப்பு தோயநாதத் துளிர் தொகைபத்துநூ றாயிரந்தான் வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாலு தாழ்வு தசைநரம்பு சனித்தமுப்பத் தோராண்டில் ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே மூர்க்கத் தசையும் உதிரப் புனலுடம்பும் மண்தண்ணீ ரோடே வகைக்காகாப் பாண்டமிது விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய் ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே வீட்டைப் பிரித்தால் விறகுக்கு மாகாது விசையிட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும் பசையில்லாப் பாவையிது பட்சியொன் றாடிவரும் பட்சிக்குக் காயம் பகைத்துக்கிட்ட முட்டுகையில் குச்சியைக் கீழ்ப்போட்டு குதித்தோடு மக்குருவி இக்குருவிக் கூடு இவன்மணிய மீசுரரே அக்குருவி யேகும் அவ்வளவு மிந்நீசன் பண்ணுகிற நீசம் பரமனுக்கு மேராது கண்ணிமைக்கு முன்னே கனவுருட்டுச் செய்திடுவான் இப்படியே வுள்ள இயல்பு மிவன்நினைவும் அப்படியே நீசம் அடைந்த மனவீடும் உள்ளவனாய் வந்து உருவெடுத்தா னாகையினால் எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும் அன்று அவன்தனக்கு ஆளனுப்பித் தான்வருத்தி ஆரைவிடு வோமென்று ஆராய்ந்து ஈசுரரும் சூரமுள்ள காலன் தூத னெமன்தனையும் துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும் மொட்டைக்குற ளிகளையும் முக்கோடிக் கூளியையும் விட்டழைத்து வாருமென்று விடைகொடுத்தா ரீசுரரும் துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து கொட்டங் கீழாகக் குருத்துநின்ற பாதகனை தட்டு மிகமாறி தலைகீழாய் நின்றவனை ஈச ரழைத்தார் எழுந்திருந்து வாவெனவே நீசன் தனையழைக்க நெளிந்தே வுருண்டவனும் பிரண்டுருளப் பிண்டம் பிசைபிசைந்து தான்மலங்க மருண்ட விழியால் மாகம துகலங்கி மண்ணை விட்டுயர மண்டைவர மாட்டாமல் விண்ணெல்லா மெத்த வெம்மருண்ட தம்மானை கயிலைக் கிடுகிடெங்கும் கண்டபேர் தாம்பதற அகிலங் கிடுகிடெங்கும் அழைக்கவந்தோர் தாம்பதற அரனா ரிடத்தில் அவர்கள்சில ரோடி சிரமா னதுவெளியில் செல்லவர மாட்டாமல் பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல் சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று தம்மாலே யாகும் தந்து தெளிந்தெடுத்துக் கம்மாளன் வேலையினால் கவ்வையொன் றுண்டாக்கி குத்திப் புறத்தே கோதிவையு மென்றுசொல்லி எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து வேண்டியந்த நந்தி விரைவா யவர்நடந்து ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வை யால்கோதி வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம் பளிரெனவே வந்து பொருந்தியதே யம்மானை பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும் சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க உடனே யவனும் உள்ள மிகக்களித்து விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத் தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான் என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன் அன்று மொழிய அமர ரதையறிந்து பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல் எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண் ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண் பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும் நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண் மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல் தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண் இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும் புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான்

கலிச்சி தோற்றம்

ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த ஆனா லெனதுடைய அளவி லளவாக மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண் என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார் நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார் அப்போது நீசன் அரனார் தனைநோக்கி ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய் அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய் குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய் மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய் யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய் கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய் சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய் தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய் நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய் இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய் உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய் அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல் மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச் சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான் அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும் திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார் அப்போது சத்தி ஆதி யடிவணங்கி ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில் விதியாயிடது விலாவி லொருயெலும்பைத் தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே என்று உமையாள் இப்படியே சொன்னவுடன் அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன் பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத் தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து வெறிகொண்ட நீசன் விலாவி லொடித்ததினால் நீசன் பலத்தில் நேர்பாதி யாகுமென்று வாசமட வாய்வரவே மதனன் தனைநினைத்தார் மதனை யரன்நினைக்க மாநீசன் தன்னெலும்பு வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை நீசன் நினைத்த நினவுபோ லம்மடவை பாசக்கலை தூவி பகட்டிவிழித் தாள்மருட்டி மும்மடங்காய் மோகம் முருகுக் குழல்சரிய கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள் கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியுடன் அண்டாளைச் சென்று ஆவிமுகத் தோடணைத்து நன்றாகத் தர்மம் நாள்தோறுஞ் செய்துகுண்டம் கண்டாரைப் போலே கட்டினான் மங்கையரை மங்கையரை நீசன் வாயாரா முத்தமிட்டுக் கொங்கைதனைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று எடுப்பா னவளை இடுப்பிலே வைத்திடுவான் படுப்பமோ வென்று பாய்விரிக்க நின்றிடுவான் பெண்ணோ டுறவாடிப் பேதலித்து அந்நீசன் மண்ணோடு மண்ணும் மருவுவது போல்மருவி ஆசை யவள்பேரில் அங்கமெல்லாந் தானுருகி நீச னவள்பேரில் நினைவாக நின்றதல்லால் படைத்தருளி வைத்த பரமனையு மெண்ணாமல் தடதடெனப் பெண்ணைத் தானெடுத்து முத்திடுவான் அப்போது தேவர் அமரர்களும் பார்த்தவனை இப்போது உன்விழிக்கு ஏற்கும் படியாகப் பெண்படைத்துத் தந்த பெரியோனைத் தான்வணங்கி மண்பரந்த மன்னா வரங்கேளு என்றனராம் என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன் அன்றந்த ஈசர் அடிவணங்கி யேதுசொல்வான் என்றனக்கு ஏற்ற இளமயிலை யுண்டாக்கித் தந்தருளுங் கோவே சர்வ தயாபரனே இனியெனக்கு ஏற்ற இயல்வரங்க ளானதெல்லாம் கனியிதழும் வாயானே கையில்தர வேணுமென்றான்

கலியன் கேட்ட வரங்கள்

அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார் என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன் தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க வீழ்ப்பாரங் கெட்ட விசைகெட்ட மாநீசன் மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும் தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான் அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும் வரமுடைய சத்தி வலக்கூறுந் தாருமென்றான் சிவமூலஞ் சத்தித் திருமூல மானதுவும் தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும் மாலுடைய மூலம் வாய்த்தலட்ச மிமூலம் மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும் காலனின் மூலம் காமாட்சி தன்மூலம் வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம் கணபதி யின்மூலம் கிங்கிலியர் மூலம் துணையதிப னான சுப்பிரமணியர் மூலமதும் ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம் வாயிதக் கண்ணே வரமாகத் தாருமென்றான் அல்லாமற் பின்னும் அந்நீசன் கேட்டவரம் பொல்லாத வித்தை புகலக்கே ளொண்ணுதலே கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவதுவும் நாடு பாழாக்கி நகரிகொள்ளை யாக்கிடவும் துயில்வோர் போலுலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு அயதிமோ கினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான் ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும் நாவடக்கு மோகினியும் நருளழைக்கும் மோகினியும் ஆண்பெண் பிரிக்க அதிகவெகு மாரணமும் கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுக்கும் மாரணமும் கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும் தொல்லை வருத்தி சோலிசெய் யுச்சாடனமும் லோகமது வாழாமல் உள்ளமுங்கித் தாழ்ந்திடவும் ஏகமாய்த் தம்பனமும் இதின்கரு வுந்தாரும் கொட்டிக் கலைக்க கூறுகெட்டச் சல்லியமும் ஒட்டியமுந் தாரும் உள்ளகரு வுந்தாரும் பூசை முறையும் புவனச்சக்க ரமுடனே தீட்சை விதிமுறையும் சிவவிதியுந் தாருமையா சலமேல் கனல்மேல் தானிருக்கு மோடிகளும் கலைமேல் குடைபிடிக்கக் கருவது வுந்தாரும் மிருக மதைவருத்தி வேலையது கொண்டிடவும் இறுக்கமுள்ள வாதை எனக்குவிட்டுத் தாருமையா அட்டகர்ம மெட்டும் அடக்கிவரந் தாருமையா மொட்டக் குறள்களையும் முன்னேவலாய்த் தாரும் மந்திர சாலம் மாய்மாலத் தந்திரமும் இந்திர சாலம் எனக்கருளு மென்றுரைத்தான் நோவுக் கிரகம் நுழையாம லென்றனக்குத் தாவுகெவுனக் குளிகை தாருமென்றான் மாநீசன் வந்த பிணிதீர்க்க வைத்திய வாகடமும் தந்துதந் தாகப்பல சாஸ்திர முந்தாரும் மூவருட வடிவும் உதித்துவந்த முற்பிறப்பும் தேவருட பிறப்பும் தெளிந்தெழுதித் தாருமென்றான் பறக்குங் குளிகை பரனையழைக் குங்குளிகை மறைக்குங் குளிகை மாலைவருத் துங்குளிகை சாலக் குளிகை சத்திவருத் துங்குளிகை வாலைக் குளிகை மறையைவருத் துங்குளிகை காளிதனை வருத்திக் கைக்குள் விடுங்குளிகை கூளிகணத் தைவருத்திக் கொண்டுவரும் நற்குளிகை தேவரையும் வானவரைச் சென்றழைக் குங்குளிகை மூவரை யுமழைத்து மோடிசெய்யுங் நற்குளிகை பழிசெய்தால் வெல்லப் பாரத் தொழில்கள்முதல் சுழிவரைகள் தானறிய சூதானமாய்த் தாரும் மருட்டு விதமும் மாஞாலக் குண்டணியும் உருட்டுங் கொடிய உரம்பேசிய மதமும் வாள்வெடிக ளாயுதங்கள் வாய்தடுக்கத் தந்திரமும் வேழ்வருத்தி வேலைகொள்ள விசையடக்குந் தந்திரமும் துட்ட மிருகம் தூறுவிசங் கொண்டதெல்லாம் கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும் கட்டுச் சுருக்கும் கடியபல வித்தைகளும் நட்டு முட்டுள்ள நவநிதிய வஸ்துக்களும் தந்திந்தப் பெண்ணுடனே சார்ந்துவிளை யாடிருந்து விந்து சனங்கள் மிகுவாகத் தானுதித்துக் கிளையோடே வாழ்வு கெறுவித மாயாண்டு வளையான மாதை மறவாம லெப்போதும் புத்திக் கருத்தும் பெண்பேரி லென்றனக்குச் சற்றும் நெகிழாமல் தாரும்வர மென்றுரைத்தான் அப்படியே வுள்ளவரம் அந்நீச னுக்கருள எப்படித்தா னென்று எண்ணினா ரீசுரரும் எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன் புண்ணிய நாதன் புகலலுற்றா ரம்மானை முப்பத்தி ரண்டறமும் முகித்திருந்த வொண்ணுதலே செப்புத் தனத்தழகு செவ்வே கருங்குயிலே வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு இன்ன விதமென்று இயம்புநீ பெண்மயிலே அப்போது சத்தி ஆதி யடிவணங்கி நற்போது மறவா நல்லகன்னி யேதுரைப்பாள் சாத்திரமும் வித்தைகளும் தந்திரமுங் கேட்டதினால் சூத்திரச் சித்தனொன்று சுறுக்காயுண் டாக்குமென்றாள்

அகத்தீசர் பிறப்பு

உடனேதான் ஈசர் உள்ளங்களி கூர்ந்து திடமாய்த்தான் ஈசர் சிந்தைதனி லுத்தரித்து அகத்தீச னென்று ஆதிமன துள்ளிருந்து செகத்தோர்கள் காண சித்தாதி தானாகி சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே சூத்திரச் சித்தாதி தோன்றினன்கா ணம்மானை எல்லோருங் கண்டு இவராகு மென்றுசொல்லி அல்லோரு மெச்சி அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதென்று ஈசர் நன்முனியைத் தானோக்கி வல்ல கவியோடு வந்துதித்த சாஸ்திரியே என்னென்ன சாஸ்திரங்கள் ஏதேதுக் கானாலும் இன்னாநிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவுமென்றார் அப்போ தகத்தீசர் ஆதிமறை முதலாய் மைப்போடும் வித்தை மாஞால அச்சரமும் கொடுத்தோ மெனவே கூறினார் மாமுனியும் கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும் அக்கறுகு சூடும் ஆதிமுத லந்தம்வரை வசமாகும் வித்தை மரணம்வரா வித்தைகளும் நிசமாகும் வித்தையெல்லாம் நீசனுக் கேகொடுத்தோம் கொல்லவே மெத்தக் கோபத்தால் நீசனையும் வெல்லவகை யில்லையல்லோ விடையேறு மீசுரரே இந்நீசன் லோகமதில் இருந்தாளும் நாளையிலே அன்னீத மல்லால் அறமறிய மாட்டானே அல்லாமற் பின்னும் அச்சுதனார் சக்கரமும் பொல்லாதான் கொண்டு போறான்மால் கிரீடமும் இவ்வரிசை ரண்டும் இவனிடத்தி லேயிருந்தால் எவ்வொருவ ரால்வதைக்க ஏலாது நீசனையும்

கலியரசன் சத்தியம்

என்று அகத்தீசர் இப்படியே தான்கூற அன்றுஸ்ரீ ரங்கர் ஆண்டியுரு தானாகித் தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு சிலையில்லா வெங்கையால் சென்றாரே நீசனிடம் நீச னிடத்தில் நெடுமால்தான் முன்னேகி வாசமுடன் வார்த்தை வழுத்தினா ரம்மானை ஈச னிடத்தில் இறைஞ்சிவரம் பெற்றதிலே தேச இரப்பனுக்குச் சிறுகா யென்றுரைத்தார் தாரா தேபோனால் சாபமிடு வேனுனக்குப் பாராய்நீ யென்று பகட்டினா ரெம்பெருமாள் அப்போது நீசன் ஆண்டி தனைப்பார்த்து இப்போது போடா இரப்பனோ டேதுசண்டை மாயன் வரவேணும் வலுப்பார்த்து விட்டிடுவேன் பேய னுடனெனக்குப் பேச்சென்ன நீபோடா என்று அந்தநீசன் இவ்வளமை கூறிடவே அன்று பரதேசி அவனோடங் கேதுரைப்பார் பிச்சைக் காரன்தனக்குப் பெலமில்லை யென்றோநீ அச்சம தில்லாமல் அடமா யிதுவுரைத்தாய் பண்டாரந் தன்பலமும் பழிநீசா வுன்பலமும் சண்டையிட்டுப் பார்த்தால் தான்தெரியும் மாநீசா என்று பண்டாரம் இதுவுரைக்க அந்நீசன் குன்று கரத்தெடுத்த கோபால ரோடுரைப்பான் ஆள்படை களில்லாமல் ஆயுதங்க ளில்லாமல் வேழ்படை களில்லை வெட்டவா ளிங்குமில்லை தடியில்லை சக்கரமும் தானில்லை உன்கையிலே முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோ டுயுத்தமிட்டால் ஆண்மையில்லை யென்றனக்கு ஆயிழைமா ரேசுவரே தாண்மைமொழி பேசாதே தலைவிரித்துப் பேயாநீ மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் தேவரையும் வேலைகொள்ள சிவமூலம் பெற்றிருக்க ஒன்றில்லாப் பேயனோடு யுத்தமிட்டா லென்றனையும் நன்றினியப் பெண்கள் நகைப்பார்நீ யப்புறம்போ என்று அந்தநீசன் இயம்பத் திருமாலும் நன்றுநன்று நீசா நானுரைக்க நீகேளு பண்டாரத் தோடே படையெடுத்தா லாண்மையில்லை என்றேதா னிப்போ(து) இயம்பினையே மாநீசா பண்டார மென்றும் பயித்தியக் காரனென்றும் ஒண்டியாய் வந்தவனொ(டு) யுத்தமிட மாட்டேனென்றும் பிச்சைக் காரனெனவும் பெரிய இரப்பனென்றும் கச்சையில்லா னென்றும் கணைகம்பில் லாதானென்றும் இப்படியே பண்டாரம் என்றிருக்கும் பேர்களுக்கு எப்படியும் வம்புசெய்வ(து) இல்லையென் றுண்மையுடன் சத்திய மாகத் தானுரைநீ பார்ப்போமென்றார் புத்தியில்லா நீசன் புகலுவான் பின்னாலே பண்டார மென்றும் பரதேசி யானவரைத் தண்டரளக் கந்தைத் தலைவிரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன் அவரோடு சண்டையிடேன் ஒட்டியே வம்பு ஒருநாளுஞ் செய்வதில்லை என்றான்காண் நீசன் எம்பெருமாள் தானுரைப்பார் நன்றாக இப்படியே நட்டிசெய்ய மாட்டேனென்று ஆணையிட்டுத் தாவென்று அருளினா ரெம்பெருமாள் வீணமட நீசன் விளம்புவா னப்போது ஆரார்கள் பேரில் ஆணையிட வேணுமென்று பேராகச் சொல்லு பிச்சையெடுப் போனேயென்றான் அப்போது பண்டாரம் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது நீதான் ஈசன்தனை வணங்கி வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும் பெண்டிவள் பேரதிலும் பெலமாக இப்போது ஆண்டி பரதேசி ஆகிவந்த பேர்களையும் வீண்டிடறு செய்யேன் எனவேநீ யாணையிட்டால் ஆணைக் கிடறுசெய்து ஆண்டிகளைச் சில்லமிட்டால் வீணேபோ மென்வரங்கள் வீட்டுப்பெண் ணார்கள்முதல் பெண்தோற்று நானும் பெற்றவர முந்தோற்று மண்தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்றுச் சேனைத் தளந்தோற்று சீமையரசுந் தோற்று ஆனைப் படைதோற்று அரசுமே டைதோற்று என்னுயிருந் தோற்று என்கிளையோ டேநானும் வன்னரகில் போவேன் என்றேவாக் குரைத்திடுநீ அப்போது நீசன் ஆண்டி யுரைத்தபடி எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால் சொன்னபடி யெல்லாம் தோற்றிறந் தென்னுயிரும் வன்னரகில் போவேனென்று ஆணையிட்டான் மாநீசன்

சக்கராயுதம் பணமாதல்

நல்லதுதா னென்று நாட்டமுற்றுச் சன்னாசி வல்ல பெலமுள்ள மாநீசா நீகேளு மந்திரங்க ளாலே மகாகோடி ஆயுதங்கள் தந்திரங்க ளாலே தான்வருத்த லாகிடுமே அப்படியே யொத்த அச்சரங்கள் தானிருக்க இப்படியே ஆயுதத்தை எடுத்துச் சுமப்பதென்ன நீகேட்ட சக்கரத்தை நிமலனவர் தாராமல் தொனிகெட்ட வெற்றிரும்பைச் சுமவென்று தந்தார்காண் இரும்பைச் சுமந்தால் இல்லைகா ணொன்றுபயன் தரும்பொருள்போ லுள்ள சம்பாத்தியந் தாறேன் மண்டலங்கள் தேசம் வாழ்வுக ளுண்டாவதற்கும் கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம்போல் தருகிறே னுன்றனக்குத் தான்வேண்டு நீயெனவே பருமுறுக் காயாண்டி பகர்ந்தாரே நீசனுக்கு அப்போது நீசன் அகமகிழ்ந்து கொண்டாடி இப்படியே தாருமென்று ஈந்தானே சக்கரத்தை சக்கரத்தை வேண்டி சங்குசரத் தாமன் மிக்கப் பணமாக்கி மிகுத்தசக்க ராயுதத்தைச் சபிக்கவே மாயன் சக்கரா யுதங்கேட்கும் நீச னிடத்தில் என்னைப் பணமாக்கி ஈயுறீரே சுவாமி இப்போது சாபமிட்டு இப்போ திடுஞ்சாபம் எப்போது தீருமென்று அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே கலிமா றும்போது கடருமென்றா ருன்சாபம் வலியான சக்கரமும் வாய்த்தபண மாகியதே பணமாகிக் கீழே பறந்து குதித்திடவே இணமான நீசன் எட்டி யவன்பிடித்துக் கண்ணில்மிக வொற்றிக் காரிகையாள் கைகொடுப்பான் பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்துதடி என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி மன்று தனில்போக வரந்தாரு மென்றுரைத்தான் அப்போது தன்னில் ஆண்டியவ ரங்குசென்று இப்போது இங்கேவைத்து இவன்தான் மொழிந்ததெல்லாம் தப்பாம லாகமத்தில் தானெழுதி வையுமென்றார் முப்போது வுள்ள முறைபோலே மாயவரும் ஆகமத்திற் பதித்து ஆண்டார் துரிதமுடன் நாகரீக நாதன் நடந்தார்ஸ்ரீ ரங்கமதில்

கலியுகம்

நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான் ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம் என்னென்ன வாயமதாய் இருக்குதுகா ணுத்தமரே வலியான மாதே மாநீசன் கேட்டதுதான் கலியுகம் போலிருக்கு கண்ணமுதே யென்றுரைத்தார் சிவம்வாய் திறந்து செப்பக் கலியுகமாய் இதமான தேவர் எழுதினா ரகமத்தில் கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள் பொலிவுடன் சேர்த்தனர் புராண மீதினில் சலிவுடன் நீசனும் தரணியில் போந்திட வலியுள்ள மாயன் ஸ்ரீரங்க மேவினார் மாயனுக்கு ஆணை மாநீச னிட்டதெல்லாம் தூய பெருங்கணக்கில் தொகுத்தெகுதி வைத்தனராம் நீசக் கலியன் நிறைவோன் பதம்போற்றித் தேச மதில்வரவே சென்றான்கா ணம்மானை கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே சிலிரெனவே லோகம் திணுக்கிடவே யம்மானை

நல்லவை மறைதல்

தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே வர்மமாய் நீசன் வரவேகண் டம்புவியில் 580 நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும் வல்ல வகைநீதம் மாற்றங்கே ளன்போரே வெள்ளானை வெள்ளை வேங்கையொடு வெண்கடுவாய் தள்ளாத சற்பம் தலையைந்து கொண்டதுவும் வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில் கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன் நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம் வல்லவெண் நரிகள் வளர்ந்துவரும்வெண் காகம் ஆளியொடு சிங்கம் ஆனையி றாஞ்சிப்புள்ளும் வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள் மிருகமதில் வெள்ளைகொண்ட மேல்மிருக மானதெல்லாம் அறியவே குண்டம் அதுநோக்கிப் போயிடவே பால்நிற மான பட்சிப் பறவைகளும் மேல்பரனார் குண்டம் மிகநோக்கி நாடிடவே வெண்சாரை யைந்துதலை விசஅரவ மானதெல்லாம் துஞ்சாத நாதன் துணைதேடி நாடிடுமாம் முன்னிருந்த சாஸ்திரமும் முறையும்பஞ் சாங்கமதும் பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம் நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும் போயகல்வோ மென்று புத்திதனி லெண்ணிடுமாம் முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவை டூரியங்கள் பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம் சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ பொங்குநவ ரத்தினமும் போகவழி தேடிடுமாம் கடல் விளைவெல்லாம் கண்காணா தோடிடுமாம் தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க சிலைகள் பதிகள் தெய்வத்திருச் சமூலம் அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய மாரி மறைய மலர்க்கண் மிகமறைய ஏரி பாழாக எண்ணினதே யம்மானை கர்மக் கலியதனால் கடல்கோபித் தேயடிக்க தர்மந் தலைகவிழ்ந்து தானிருந்து தம்மானை தருமமெய் நீதமதும் தாரணியில் உர்வனமும் பொறுமை யுடைய பெரிய மிருகமதும் நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும் தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும் நீதத்தோ ரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே பாதத்திருக் குண்டம் பாதைவழி தேடிடுமாம் நடந்தோர்க ளெல்லாம் நாடி வழிவரவே கடந்தார்கள் வல்ல கலியைவிட்டுக் காடதிலே காடதிலே செல்ல கனத்தபஞ்ச பாண்டவர்கள் வாட லுடவாய் வைகுண்டந் தானேக கண்டாரே தர்மர் கடந்துநின்ற நீதமதைப் பண்டாரத் தர்மர் பகர்ந்தா ரதினோடு நாட்டிலுள்ள நீதமெல்லாம் நடந்துகா ணாதேசென்றால் வீட்டி லுறுதியுள்ள மேல்வீடு காண்பதற்குப் போவேனோ தர்மம் போனதினால் நாயடியேன் சேர்வேனோ குண்டம் செய்தர்ம மில்லையென்றால் என்றுரைக்கப் பாண்டவர்கள் இயல்தர்ம மேதுரைக்கும் பொன்றுவந்து லோகம் பொய்ப்பூண்ட தானதினால் எங்களுக் கங்கே இருந்தா லாகாதெனவே செங்கண்மா லாயனையும் தேடியே போறோமென்றார் அப்போது பாண்டவர்கள் அன்பாய்ப் பதம்பணிந்து இப்போது உங்களையும் இழந்துவிட் டிங்கிருந்தால் கர்மக் கலிமூழ்கிக் காண்பதில்லை குண்டமது தர்மத் தோடங்கே தான்வருவோம் கண்டீரே தர்மமும் நீதமதும் தாட்டீகப் பாண்டவரும் வர்மமில்லாக் குண்டம் வழிநோக்கிச் செல்லுகையில் மேலான மாமிருகம் வேதக் காராவுகளும் நாலா மொருதலையும் நல்ல அரவமதும் வெண்பட்சி யான மேலான பட்சிகளும் இன்பட்சி யெல்லாம் எங்கினிப் போவோமென்று கதறி யழுது கனைத்துநின்றார் காடதிலே பதறி யழுது பறவை மிருகமொடு நிற்கு மளவில் நீலவண்ணர் தானறிந்து பக்குவப் பிராயப் பண்டார மாகிவந்து ஏதுகா ணீங்கள் இந்தவன வாசமதில் ஓதிக் கரைய உங்கள்விதி யானதென்ன செப்போடு ஒத்த திருமால் தனைப்பார்த்து அப்போது எல்லாம் அழுதழு தேதுசொல்லும் நீசக் கலியன் நீணிலத்தில் வந்ததினால் தேசமதி லெங்களுக்குச் செல்லவிருப் பில்லையையா என்றுரைக்கச் சன்னாசி ஏதுரைப்பா ரன்போரே நன்றுநன்று கேளும் நான்சொல்ல நீங்களுந்தான் பாண்டவரைத் தர்மமதைப் பாரநீ தமதையும் ஆண்ட வைகுண்டம் அடையப்போ மென்றுரைத்தார் தெய்வக் காராவைச் சிறந்தவெள் ளானைகளை மெய்வரம்பு கொண்ட மிகுத்த மிருகமெல்லாம் கும்பக் குருமலையில் கூடியே நீங்களெல்லாம் சம்பு சதாசிவத்தைத் தான்போற்றி யுள்ளிருத்தி நீசன் தனையறுத்து நீதயுகந் தானாள வாசமுட னேவரவே வரம்வேண்ட நில்லுமென்று ஐந்தலை நாகமதை அந்தமுனி தானழைத்து உன்றனக்குச் செய்தி உரைக்கிறேன் கேளெனவே அலைமுகத்தில் நூற்றொன்று ஆழம் வரைக்கீழே நிலைதனிலே நின்று நெடியோனை உள்ளிருத்தி கலியை யழித்துக் கடியதர்ம மாகவேதான் வலியயுக மாளுதற்கு வைகுண்டா வாவெனவே நிற்பாய்த் தவசு நீபோவென அனுப்பி நற்பாக நீங்கள் நற்றவசு செய்யுமென்று சற்பமதுக் கரசு சங்குவெள்ளைச் சாரைதன்னை பற்பக் கிரிதனிலே பைம்பொன்னிறப் பொய்கையிலே வம்பை யழித்து வாய்த்ததர்ம ராச்சியத்தில் அன்பரோ டேயரசு ஆளத்திரு மால்வரவே வேணுமென்று நிட்டை விரும்பிச்செய் யென்றேதான் ஆணுவ நாதன் அதற்கு விடைகொடுத்தார் அன்னப்பட்சி யான அதிகப் பறவைகளும் பொன்னம்பல கிரியில் போய்த்தவசு பண்ணுமென்றார் சாத்திர மாமறையைத் தானெடுத்து மாமுனியும் சூத்திர நெஞ்சத்து உள்ளிருத்தி வைத்தனராம்

கலைமுனி ஞானமுனி தவசு

இருத்திஸ்ரீ ரங்கம் ஏகவென் றெம்பெருமாள் கருத்தி லுறயிருத்திக் கட்டாய் வருகையிலே ஞான முனியினொடு நல்ல கலைமுனிவன் தானமுள்ள மாமுனிவர் தலைகவிழ்ந் தேதவசு சடைத்து முகம்வாடித் தானிருக்கு மப்போது திடத்தமுடன் நல்ல திருமா லருகேகி நன்றியுள்ள மாமுனியே நல்லகயி லாசமதில் கண்டதுண் டுங்களையும் காட்டில்வந்த வாறேது அப்போது மாமுனிவர் ஆதி பதம்பணிந்து செப்போடு வொத்தத் திருமாலே நாங்களுந்தான் கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை ஒயிலாகப் போற்றி ஒழுங்கா யிருந்தவர்காண் இருக்குமந்த நாளையிலே எங்களிரு பேர்களையும் தருக்குகந்த ஈசர் தன்னையவர் வருத்தி மாயன் மேல்பிறக்க மண்ணுலோ கந்தனிலே காய மிழந்து காணா துருவெடுத்து மறைந்திருக் கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால் சிறந்தபுகழ் மாயவனுக்குத் தேருஞ் சிங்காசனமும் மண்டபங்கள் மேடை வாய்த்தநீ ராவிகளும் பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப் பொற்பதியும் உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி கண்டுகொண்டா னானால் கலியனதை யாண்டுகொள்வான் முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி இன்பமுள் ளவகைகள் எல்லாமதி னுள்ளேவைத்து வைகுண்ட ரங்கே வந்தா லிதைக்காட்டி மெய்கொண்ட வுங்கள் இடத்திலே போவுமென்று அல்லாதே போனால் அக்கினியா லுங்களையும் இல்லாதே செய்வார் என்றுசொல்லி வாருமென்று அனுப்பினா ரெங்களையும் அதற்காக இங்குவந்தோம் துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம்வைத்து ஏகினோங் கயிலை இடைவழியில் மாநீசன் தாவி வரக்கண்டு தவலோக மேமறைந்து கர்ம விதிப்பயனால் கலக்க மிகவடைந்து தர்மச்சிறப் பில்லாது தலைகவிழ்ந் திருந்தோமென்றார் அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும் இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது கருங்குரங்கு காரானை கரியகடு வாய்புலியும் இருங்கருட னூர்வனமும் எறும்புஈ மூட்டைகளும் கள்ளக் கசடுள்ள கரிய மிருகமதும் கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும் தரந்தரமாய்க் கூடித் தாமே திரளாக வரவேகண் டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே ஈதே தெனவே எனக்கேட்க மாமுனிவர் நீச னுதிரம் நீதிகெட்ட இம்மிருகம் வாசமுள்ள பட்சிகளும் மானிலத்தி லூர்வனமும் பிறந்துதித்து வந்து பேருலகி லம்மானை சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து விலகியே போக வேணுமென் றெம்பெருமாள் மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி எங்களுக் கெங்கே இருக்கவே சொல்வீரென்று அங்கந்த மாயவரின் அடிதொழுதா ரம்மானை அப்பொழு தெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார் இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில் செந்தூர்ப் பதியில் சிறந்தவா ரிக்கரையில் நந்த கோபால நாராய ணாவெனவே மாயநீ சக்கலியை வதைசெய்து தர்மமதாய் ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள் ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும் விடைவேண்டி மாமுனிவர் வேல னுறைந்திருக்கும் கடலான தற்கரையில் கடுந்தவசு பண்ணினரே அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க இப்படியே மாயன் இசைந்தஸ்ரீ ரங்கமதில்

போகமுனி தவசு

போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன் தாவு மொருமலையில் தலைசிதறிச் சாகவென்று வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில் ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங் கேதுரைப்பார் மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனிநீ குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம் அப்போது மாயவனார் அடிபோற்றி யேதுரைப்பான் செப்பமுள்ள மாயவரே சீமைதனை யளந்த மாயவரேநானுமினி மாள்வதல்லா லிங்கிருக்க ஞாயமில்லை அய்யா நாரா யணப்பொருளே என்றுரைக்க மாமுனியும் ஏதுரைப்பா ரெம்பெருமாள் உன்று வசனம் உரையென்றார் மாமுனியை என்றெம் பெருமாள் இவையுரைக்க மாமுனியும் அன்று முனிசொன்ன வசனங்கே ளன்போரே தர்மநீ தமதுவும் தரணிதனில் மானுபமும் கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால் வன்மம்வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும் நானிருந்த நிட்டை நாலிரண் டாகையிலே மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால் என்தவந்தான் வம்பில் இழந்தேனே யென்றுசொல்லித் தன்தலையைத் தான்சிதறிச் சாகவே ணுமெனவே மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று அலைமேல் துயின்ற ஆண்டியோ டேயுரைத்தான் நல்லதென்று யுன்றனக்கு மாளவென்றால் வேறில்லையோ கல்லிலே முட்டிக் கண்தவர்ந்து சாவதென்ன சொல்லுநீ யென்று திருமா லிதுவுரைக்க

மலைப் புதுமை

அப்போது மாமுனியும் அந்தமலைப் புதுமை இப்போது சொல்லுகிறேன் என்றே வுரைக்கலுற்றான் வேதா விதித்த மேலான ஆகமம்போல் நாதாந்த வேதம் நாலுண்டு கண்டீரே கலியன் பிறந்தபின்பு கட்டான வேதமொன்று சலிவாகி வேதம் தான்விளங்கா வண்ணமுந்தான் இளகாமல் கற்போல் இருந்ததுகாண் வேதமது குழைவான வேதா குறியா யதையறிந்து கல்வி யிளகாமல் கற்போ லிருந்ததினால் பல்லுயிர்கள் வாழும் பாரிலொரு பங்காக மலையாய் வளர்ந்து வைந்தர் வருகையிலே அலைபோலிளகி அவனிதனில் பாயவென்று சபித்தார் காண்வேதா தானறிந்து வேதமது குபிந்தான மான குன்றுபோலே வளர்ந்து அன்றந்த வேதம் ஆனதினால் நானடியேன் இன்றென் சிரசை இதிலிடறி மாண்டதுண்டால் வைகுண்டங் கிட்டுமென்று மாளவந்தே னிம்மலையில் கைகண்ட வேதக் கருணாகரக் கடலே என்றுரைக்க மாமுனிவன் எம்பெருமாள் நல்லதென்று அன்று முனியை அவரோ டுடன்கூட்டிப் போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன் ஏகின்ற வேளை எம்பெருமா ளேதுசொல்வார் மாமுனியே நீகேளு மாச்சலா யென்னுடம்பு தாமுனியே யென்றனக்குச் சடைவா யிருக்குதுகாண் ஆனதால் கங்கைபார்த்(து) அதிலே குளித்துமிகப் போனால் சுகமெனவே போகனோ டேயுரைத்தார்

சலந்தவசு

அப்போது நல்ல அருள்கொண்ட மாமுனிவன் இப்போது மாயவரே இதோ தெரியுகின்ற அருணகிரி மலையில் அருவியொன் றுண்டுமையா கருணை யிரங்கினதால் காட்டியே தாறேனென்றான் நல்லதுதா னென்று நல்ல முனியோடே வல்ல திருமேனி வாவிதனைக் கண்டார்காண் கண்டு திருமேனி கனத்தநீ ராவிதனில் சென்றிறங்கி மேனிதனில் செலங்கோரி விட்டிடவே ஆவி தனிலிறங்கி அச்சுதனார் நின்றிடவே தேவி யொருபெண் செலமெழுந்து மாயனையும் வந்து பணிந்திடவே மாயனதைப் பார்த்துச் சந்துபயில் மாமுனியே தண்ணீரைக் காணாமல் பெண்ணாக வந்த புதுமையென்ன மாமுனியே கண்ணான மாமுனியும் கட்டுரைப்பா னம்மானை எண்ணாத தெண்ணி ஏதுரைப்பான் மாமுனியும் பெண்ணோடு கேட்டால் புதுமை யதுதெரியும் என்றுரைக்க மாமுனியும் ஏந்திழையோ டேதுரைப்பான் நன்றுநன்று பெண்ணேநீ நதியா யிருந்ததுவும் பெண்ணாக வந்ததுவும் பேசுநீ ஒண்ணுதலே தண்ணீராய் நின்ற தார்குழலா ளேதுரைப்பாள் அய்யாவே நானும் அதிகயி லாசமதில் மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள் அரையில் கலைபூணா(து) ஆவியிலே சென்றிறங்கிக் குளித்தே னதையும் கொன்றையணி வோனறிந்து அழித்தே யெனையும் ஆவிபோலே படைத்தார் படைக்கும் பொழுதில் பரமனோ டிச்சாபம் கடருவதெப் போதெனவே கறைக்கண்ட ரோடுரைத்தேன் ஆவியாய் நீகிடந்தால் அச்சுதனா ரங்குவந்து தாவிக் குளிக்க சாபமது மாறுமென்றார் என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமா ளேதுரைப்பார் அன்றந்தப் பெண்ணதையும் ஆகமப் போகனையும் நானாண் டிருந்த நல்லதுவா பரத்தில் தானாக ஆண்டு தானிருக்கு மப்பொழுதில் சூரிய வொளிகாந்தம் துலங்கும்வை டூரியத்தில் வீரிய மான வெற்றிவிரு துக்குடையும் தங்கப்பொன் னாயுதமும் தளிருநிறச் சக்கரமும் பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும் கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும் மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும் உண்டுகா ணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான் என்றுநான் வருவேன் இதுவரைக்குங் காத்திருங்கோ நான்வந்த போது நல்லகதி யுங்களுக்குத் தான்தருவேன் போகுமெனத் தங்களிரு பேர்களுக்கும் விடைகொடுத்து ஸ்ரீரங்கம் மேவி யவரிருக்கத் திடமுடனே போகமுனி தேவி சலமடவும் வந்தந்த மாயவரின் வாழ்வெல்லாங் காத்திருந்தார் சென்றந்த மாயவனார் ஸ்ரீரங்கமே யிருந்தார் மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கு மப்போது மாயக்கலி செய்த மாயங்கே ளன்போரே சாத்திரத்தை யாறாய்த் தான்வகுத்து வேதமதை மாத்திரமே நாலாய் வகுத்தனன்கா ணம்மானை நட்சேத் திரத்தை நல்லிருபத் தேழாகப் பொய்ச்சேத் திரமாய்ப் பிரித்தான்கா ணம்மானை கோளொன் பதுக்குக் கூடுபன்னி ரண்டாக நாளேழு வாரம் நாட்டிவைத்தா னம்மானை பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து தக்கமது லோகம் தானாண் டிருக்கையிலே மாந்திரத்தால் செய்த வறுமைகே ளன்போரே பாந்தள்வாய்க் கட்டி பரிசுகெட ஆட்டிடுவான் சந்திரனை மங்கவைப்பான் சமுத்திரத்தைப் பொங்கவைப்பான் மந்திரத்தால் தெய்வமதை மாடுபோல் வேலைகொள்வான் கற்பைக் கலக்கிடுவான் கன்னி யழித்திடுவான் வெற்பைத் தகர்த்திடுவான் வெடியைத் தடுத்திடுவான் ஆண்பெண்கள் தம்மை அலைச்சலது செய்திடுவான் கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுப்பான் மானிடரை பசுவை யடைத்துப் பட்டினிகள் போட்டிடுவான் கசுவை மறைத்திடுவான் கண்ணைக் கெடுத்திடுவான் மிருகமதைக் கட்டி இரையிடாக் கொன்றிடுவான் கருவை யுருவழிப்பான் கன்னி சிறைவைப்பான் மானிடர்க்குக் குட்டம் வருத்தியே கொன்றிடுவான் வீணிலே மானிடரை விசமடக்கிக் கொன்றிடுவான் மாரிதனை மறைப்பான் வருத்தவென் றாலழைப்பான் ஏரிதனை வெட்டி இயலழியச் செய்திடுவான் அடப்பமிடத் தாயை ஆளாக்கி வைத்திடுவான் குடைப்பிடிக்கப் பிதாவைக் கொண்டிடுவான் வேலையது பேயை வருத்திப் பூசை மிகக்கொடுத்து தேயமதில் மானிடரைச் செத்திறக்க வைத்திடுவான் கடலதுக்கும் மாமலைக்கும் கற்கோட்டை தாண்டவிட்டுத் தடவரைக ளெல்லாம் தகர்த்துப் பொடிப்படுத்திப் பூலோகத் தேசம் புவனமெல் லாம்பரந்து மேலோக மெல்லாம் மிகப்பரந்தா னம்மானை கயிலை யெமலோகம் கரியதெய்வ லோகமெல்லாம் அகிலமே ழும்புரண்ட அதிசயங்கே ளன்போரே சிவந்தா னினைத்தால் செல்லார்கள் தேவர்களும் தலந்தா னிளகித் தான்வந்த தாலேதான் மூவர்க ளூரும் முறைமை மிகத்தவறி தேவர்க ளூரும் தியங்கிமிகத் தான்புரள

நந்திவரவு

தெய்வலோ கமுறைமை திசைமயங்கித் தான்புரள மெய்கொண்ட லோகமெல்லாம் மிகமயக்க மானதினால் ஈசுரனா ரப்போ ஏதெனவே தான்வெகுண்டு வீசுபுகழ் நந்திதனை விரைவாய் வரவழைத்து மாமுனி யேகயிலை வரம்பழியக் காரணமேன் ஓமுனியே நீயும் உள்ளதெல்லாஞ் சொல்லெனவே என்றந்த நந்தியோடு ஈசுரனார் தான்கேட்க அன்றந்த மாமுனியும் அரனா ரடிதொழுது நல்லதுகா ணீசுரரே நம்மள்தனக் கிங்கேதான் செல்லாது இங்கிருந்தால் சிவனே யெனத்தொழுது பூலோக மேழும் பொன்னுலோக மேழும் தாலோக முதலாய்த் தவலோ கம்வரையும் ஈரேழு லோகம் இருபுத்தி யானதெல்லாம் பாரெல்லா மிப்படியே பரந்து இருப்பதெல்லாம் சொல்லவே ணுமென்றால் சிவகயிலை விட்டேநாம் நல்லபர லோகமதில் நாம்போவோ மீசுரரே என்றந்த ஈசுரரை இறைஞ்சி முனிதான்கூட்டி அன்றந்த மாமுனியும் அரனாருந் தானேகி சென்றார் பரலோகச் சீமையிலே வந்திருந்து வண்டாடுஞ் சோலை வைடூரியக் கோயில் கோவிலவர் புக்கிக் குருவை மிகப்போற்றி ஆவலுடன் மாமுனியும் அருளுவா ரம்மானை நல்லபர மேசுரரே நாடுதடு மாறினதை எல்லாம் நீர்கேட்க எடுத்துரைப்பே னென்றுமுனி மாமுனியு மீசுரரை வணங்கிப் பதங்குவித்து ஓமுனியும் நன்றாய் உரைப்பார்கா ணம்மானை கேட்டீரோ ஈசுரரே கேடுவந்த செய்தியெல்லாம் தீட்டுகிறே னென்று செப்புவா ரன்போரே மாயன் வைகுண்டம் மறையவென்று பொய்ச்சடலக் காய மிழந்து காணா துருவெடுத்து ஏகி வரும்வழியில் ஏந்திழையாள் தெய்வகன்னி தாவிச் சுனையாடித் தாங்கள்நிற்கும் வேளையிலே கண்டந்த மாயன் கன்னியர்மே லிச்சைகொண்டு பண்டந்த யோகமுனி பச்சைமால் தன்றனக்கு மேலோகத் தார்களெல்லாம் விஷ்ணுவின் நாதமதில் பூலோகந் தன்னில் பிதிராகு வாரெனவும் பிதிரில் தவமிருந்து பிறந்தவழி தன்னையெல்லாம் சதிராக வந்தெடுத்துத் தர்மயுக மாள்வாரென்று யோகமுனி யிட்ட உறுசாப மத்தனையும் போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்துக் கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து தன்னிக ரில்லாத சான்ரோ ரெனவளர்ந்தார் வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க இழந்த கலிதோன்றி இவன்சென்றா னவ்வுகத்தில் கலிய னவன்செல்லக் கைமறந் தவ்வுலகில் பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும் முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய் ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி ஊன மடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள் தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கிப் பந்தி யழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள் ஒண்ணுக்கொண் ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல் பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித் தாய்க்குத்தான் பிள்ளை தாழாம லேபேசும் வாய்க்குவாய்ச் சொன்னாலும் மங்கைநல்லா ளென்றிடுவான் பிதாவை மிகநம்பார் புண்ணியமென் றேபாரார் இதாகவெல்லாம் நீசன் இடறுவரச் செய்ததினால் ஆனதா லிந்த வழிவழியே யங்குளது போனதால் நீசம் பொன்னுலோ கம்வரையும் ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும் கோவிச்சு தையா கொடுங்கலியு மங்கேகி ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில் ஏதெல்லா மாகுதென்று ஈசுரரே பார்த்திருவும் மாயனை யும்வருத்தி வார்த்தைகே ளாதிருந்தால் தேய மிருள்மூடிச் சென்றிடுங்கா ணீசுரரே அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று செப்பேடு வொத்த சிவனாரும் நொந்திருந்தார் மாமுனியே மாயவனை வருத்தவென்ன செய்திடுவோம் ஓமுனியே நீயும் உரையென்றா ரன்போரே

பேய்ப்பிறப்பு

அப்போது மாமுனியும் அரனா ரடிவணங்கி இப்போது தானதவம் இல்லையே லோகமதில் தவஞ்செய்து மாயவரைத் தான்வருத்த வென்றாலும் பவஞ்செய்த காலம் படுமோ தவமிருக்க என்றுரைத்து மாமுனியும் இன்னமொன்று சொல்லிடுவான் நன்றுநன்று ஈசுரரே நானுரைக்கக் கேட்டருளும் இருள்கொண்ட காலமதால் ஏற்றதர்மஞ் செல்லாது மருள்கொண்ட காலமதால் வம்புக்கேநே ராகுமையா ஆணுவஞ்சேர் பேய்க்கணங்க ரம்பைக்கோர் மாலைதன்னைப் பூணும்நீர் தவசு புரிந்தா லரிவருவார் என்று முனிசொல்ல ஈசுரனார் சம்மதித்து அன்று பேய்க்கணங்க அசுமாலை யையணிந்து இருந்தா ரரிதான் இப்போவர வேணுமென்று தருந்தார மார்பன் தானறிந் தேதெனவே இருக்க வகையில்லாது எழுந்திருந்தா காயமதில் சுறுக்கா யுதித்துத் தோன்றினார் ஈசர்முன்னே அப்போது மாயவரை ஆதி யாவிப்பிடித்து இப்போ திதுவரையும் எங்கேநீர் போனீர்காண் என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச் சொல்லிடவே அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து பாண்டவர்க் குபகாரம் பண்ணி யிருந்ததுவும் வீண்டதுரி யோதனனை வெற்றிகொண்ட செய்தியதும் பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டுஸ்ரீ ரங்கமதில் இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்துவா னேனென்றார் அப்போ தரனார் ஆதிமா லோடுரைப்பார் இப்போது கலியன் இராச்சியத்தி லேபிறந்து பதிநாலு லோகமதும் பாரஇருள் மூடினதால் இதுநாள் வரையும் யானுமும்மைக் காணாமல் மனங்கலங்கிப் பேய்க்கணங்க மாலையிட்டு நானிருந்தேன் கனங்கொண்ட மாயவரே கயிலையிருள் மாற்றுமென்றார் நல்லா யிருக்குதுகாண் நவின்றதெல்லாங் கேட்பதற்கு எல்லா மிருக்கட்டென்(று) ஈசுரரே உம்முடைய கழுத்தில் தரித்ததையும் கழற்றி யெறியுமென்றார் வழுத்திடவே ஈசர் மாலை தனைக்கழற்றி கோபத்தா லக்கினியில் குறியா யெறிந்தனரே வேகத்தால் மாலை வெடித்ததுகாண் பேய்க்கணம்போல் கொள்ளைகொண்ட பேய்கள் கோடாமுக் கோடியுமாய்த் துள்ளிக் குதித்துச் சுற்றிக் குதித்தாடும் அப்போது பேய்கள் அரனா ரடிவணங்கி இப்போது ஈசுரரே எங்கள்பசி தீர்த்து மந்திர சாலம் மாய்மால மாரணமும் தந்திர சாலம் சர்வதுமே தாருமையா கொல்லச்சாவு சங்கிலியும் கொன்றவரைத் தானெழுப்ப வெல்லப்பிழை சங்கிலியும் வெடிப்பாக வேதாரும் ஈசுரரும் தேவர்களும் எங்கபடத் துள்ளாக வீசுபல வரங்கள் விடையாகத் தாருமையா அப்போது பேய்கள் அதுகேட்ட தத்தனையும் இப்போது கொடுக்க ஈசுரருஞ் சம்மதித்து மாலோடும் வேதா மறையவனோடுங் கேட்பார் கேட்டிருந்த நாரணரும் கிருபையுட னீசுரரைத் தேட்டமுடன் பார்த்துச் செப்புவா ரம்மானை ஈசுரரே பேய்களுக்கு இவ்வரங்க ளீந்தாக்கால் வீசுங்காண் லோகமதை விழுங்குங்கா ணிப்பேய்கள் தூயவரே பேய்கேட்ட சுத்தவர மத்தனையும் ஞாயமில்லை யென்று நானுரைக்கப் போகாது ஆனாலும் பேய்களுக்கு அருள்வீரா லிவ்வரங்கள் ஞானாந்திர மான நாரத மாமுனியை வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத் தவன்கையிலே இருத்தி யணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான் பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால் தேயக்கலி மாளுகையில் சிவவடகை லாசமதில் முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவு மென்றுசொல்லித் துனிவான முனியுடனே சொல்லி யனுப்புமென்றார் அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே மாமுனியுஞ் சம்மதித்து வரம்வேண்டிப் பேய்களுந்தான் தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம் பேய்ப்பூ லோகமதில் போயிடவே ஈசுரரும் ஆயனா ரோடே அருளுவா ரன்போரே கயிலை யிருளைக் கடத்திவைக் காதிருந்தால் அகில மதிலிருப்பு அல்லவே அச்சுதரே அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி இப்போது நீங்கள் எல்லோரு மிக்கவேதாம் நன்றான ஆண்டிகள்போல் நற்றா வடங்களிட்டுப் பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோ வென்றுசொல்லி நடந்தார் சீரங்க நகரிதனி லெம்பெருமாள் மாயனுரை மாறாமல் வாய்த்தமே லோகமுள்ளோர் ஈசர்முத லாண்டியென இருந்தார்கா ணம்மானை ஆனதால் கலியன் அங்கே யனுவிலகி மான மனுப்போலே வாழ்ந்திருந்தா ரம்மானை

அகிலம் ஐந்து

divider
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன் மாலோ சனையிழந்து மாறியே மானிடவர் சாதி யினம்பிரித்துத் தடுமாறி மானிடவர் ஊதி னங்களாக ஒன்றுக்கொன் றேயெளிதாய் பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து மருட்டும் புரட்டுடனே மாநீச னாளுகையில் மாரி யதுபொழிந்து வைகை யதுவுடைத்து ஏரி வழிந்து இராச்சியத்தைத் தானெடுக்க வெள்ளம் பெருகி வெம்மருண்ட தம்மானை உள்ளமகிழ்ச் சோழனுக்கு உடனேதா னாளோடி மனுநீதிக் காவலவா வைகையடை யாதிருந்தால் இனித்தேசந் தன்னை யாம்தேட ஞாயமில்லை ஊரை யரித்து உவரிதனில் கொண்டேகும் பாரை மிகஆளும் பத்தியுள்ள சோழமன்னா என்றுகுடி யானவர்கள் இராசனுக் கேவுரைக்க அன்றுதான் வைகை அணையடக்க வேணுமென்று எல்லா வகைச்சாதி இப்போ வரவழைத்து வல்லபுகழ் மன்னன் வைகை யணையில்வந்து மண்ணோடு கல்லும் மரங்கள்மிகு வைக்கோலும் எண்ணெண்ணக் கூடாத ஏதுவகை யானதெல்லாம் கொண்டுவந் தேயணையில் கூறிட்டுத் தானடைக்க அன்றுஅடை படாமல் அறிவழிந்து சோழமன்னன் அய்யோ பாழாக அவனிதான் போகுதென்று மெய்யோடு மெய்குழறி வெம்மருண்டு நிற்கையிலே

சோழன் வினை

கோளனென்ற மாநீசக் குலத்தி லுதித்துவந்த ஈழனொரு பொல்லாதான் என்சொல்வா னம்மானை மன்னவனே இந்தவைகை மலையெடுத்து வைத்தாலும் இன்னமிது கேளாது ஏலாது நம்மாலே தெய்வகுலச் சான்றோராய்ச் சித்திர மாகாளி கையதுக்குள் பிள்ளையெனக் கட்டாய் வளருகிறார் அந்தச் சான்றோரை அழைத்திங்கே கொண்டுவந்து இந்த அணையடைக்க ஏலுமென்றா னம்மானை அப்போது சோழன் அந்நீசக் கலியதினால் இப்போது மயங்கி என்சொல்வான் மன்னவனும் மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத் தான்கூட்டி வாருமென்று சொல்லி மன்னவ னேவிடவே சேருமென்று சொல்லச் செவுகர் தாம்விரைந்து அழைத்துவந்தார் சான்றோரை அரசன்மிகக் கொண்டாடித் தழைத்தபுகழ் சான்றோரே சந்தோசமாக இப்போ வைகை தனையடைக்க வழிபாரு மென்றுரைத்தான் செய்கை முடிச்சான்றோர் தேசமன்ன னோடுரைப்பார் நல்லதல்ல மன்னவனே நம்மோ டிதுவுரைக்க இல்லை யிந்தவேலை இதற்குமுன் கேட்டிலையே வெட்டாப் படையை வெற்றிகொண்டோ மும்மாலே பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன் மாயக் கலியதனால் மன்னவனுங் கேளாமல் ஞாயமொன்றும் போகாது நளிமொழிகள் பேசாதே குட்டையினால் மண்ணெடுத்துக் குளக்கரையைத் தானடைக்கக் கெட்டியல்லாமல் வேறு கெறுவிதங்கள் பேசாதே என்றுரைக்கச் சான்றோர் இயம்புவா ரம்மானை நன்றுநன்று மன்னவரே நமக்கு அழகல்லவே இவ்வேலை யொன்றும் எங்களோ டீயாமல் எவ்வேலை சொல்வீரோ யாமதற்குள் ளதென்றார் கேட்டந்த மன்னன் கிறுக்க முடனிறுக்கித் திட்டினான் சான்றோரைச் சினத்தான்கா ணம்மானை அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார் இப்போது சோழன் ஏதுசொல்வா னம்மானை நான்வேலை சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு தான்பாரு மென்று தன்தள கர்த்தருடன் வேலையது கொள்ளுமென்று விசைகாட்டினான் கெடுவான் தூல மறியாமல் துள்ளியே சேவுகர்கள் சூழ வளைந்து துய்யசான் றோர்களையும் வேழம் பலதை விட்டுப் பிடித்திடவே சான்றோ ரடுக்கல் சாரவகை யில்லாமல் மீண்டகலத் தோற்று வெளியிலே நின்றிடவே அப்போது சோழன் அவனானை கொண்டுவந்து இப்போது சான்றோரை ஏறிப் பிடித்தனனாம் சான்றோர்கள் சோழனையும் தட்டப் படாதெனவே நன்றியுடன் நின்றார் நாடி யவன்பிடித்துக் குட்டையெ டென்றிடவே கூடா தெனவுரைக்கத் தட்டினான் வைகையிலே தலையைச் சாணான்றனக்கு ஆனைதனை விட்டு அரசனந்தச் சோழமன்னன் சேனைத் தலைவர் சிறந்தசான் றோர்கள்தம்மில் கொன்றா னொருவனையும் குளக்கரையி லம்மானை பின்னா லொருவனையும் பிடித்துக்கொடு வாருமென்றான் குட்டை யெடென்று கூறினான் மாபாவி திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சான்றோர் முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான் இன்னமிந்தக் குட்டை யாங்கள்தொடோ மென்றனராம் பின்னுமந்தச் சோழன் பிடித்தொரு வன்தனையும் கொன்றான்காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி நன்றி மறந்து நாடாண்ட சோழமன்னன் கொன்றான் காண்ரண்டு குலதெய்வச் சான்றோரை அப்போது வித்யா தரமுனிவர் தானறிந்து செப்போடு வொத்த திருமா லருகேகி மாயவரே உம்முடைய மதலையேழு பேரில் காய மழித்தான் கரிகாலச் சோழனவன் என்ற பொழுது எம்பெருமா ளப்போது அன்றுபுட் டேயருந்தி அவளாட்போல் கோலமது கொன்று குமாரர்களைக் குசல்செய்த தும்பார்த்து அன்றுவை கையடைத்து அடிகள்மிகப் பட்டவரும் ஸ்ரீரங் கந்தன்னில் சிறந்தகோ பத்தோடே சாரங்கர் வந்து தானிருந்தா ரம்மானை மாகாளி தானறிந்து மக்களைத்தான் கொன்றதினால் ஓகாளி சோழன் ஊர்வறுமை யாகிடவும் பன்னிரண் டாண்டு பாரில்மழை பெய்யாமல் உன்னினாள் மனதில் உடனே மழைசுவறிப் பெய்யாமல் சோழன் பேருலகம் பஞ்சமதால் அய்யமது ஈயாமல் அறிவழிந்து வாடினனே இறந்தசான் றோர்களுட ஏந்திழைமா ரெல்லோரும் சிறந்த தவம்புரிய சென்றனர்கா ணம்மானை சென்ற தவத்தின் செய்திகே ளன்போரே அழுக்குக் கலையணிந்து அணிந்தபொன் தாளாமல் இழுக்குச் சொல்லீந்த ஈழன் பழிகொள்ளவும் இறந்த மன்னவர்கள் எழுந்திருந் தெங்களையும் சிறந்த மணத்தோடு உடன்சேர வந்திடவும் பழிசெய்த சோழனுசர் பகலநரி ஓடிடவும் அழிவாகிச் சோழன் அவன்மாண்டுப் போயிடவும் வரந்தாரு மென்று மாயவரை நெஞ்சில்வைத்துப் பரமானப் பெண்கள் பாரத் தவசுநின்றார்

ஸ்ரீரங்கம் விட்டுச் சுவாமி அனந்தபுரம் ஏகல்

இப்படியே மாதர் இங்கே தவசிருக்க அப்படியே மாயன் அவர்ஸ்ரீ ரங்கமதில் இருக்கும் பொழுது இரணியநீ சக்கலியன் கருக்காக லோகம் கண்டவிட மேபரந்து ஸ்ரீரங்க மானதிலே சேர்ந்திருக்கும் வேதியர்கள் நிதங் குளறி நெறிதவறிப் போனதினால் முறைவைத்த பூசை முந்தி முறையெனவே மறையவனும் பூசை வந்தே முகித்திடவே பொறாமல் மற்றொருவன் பூசையெனக் கென்றுசொல்லி மறவாத மாயவரை வணங்கிநிட்டை செய்யவென்று முப்பது வேள்வி மொகுமொகெனத் தான்வளர்த்து இப்போ நான்வீழ்வேன் இதில்மாயன் வாராட்டால் என்றவ னெண்ணி ஏற்றவோ மம்வளர்த்து அன்றவன் வீழ ஆர்ப்பரிக்கு மவ்வளவில் மறையவனை மாயன் வந்தெடுத்துப் புத்திசொல்லி நிறையொத்த மாயன் நெடுமறையோ னைக்கூட்டி ஸ்ரீரங்கம் விட்டுத் திருவனந் தம்நோக்கிச் சாரங்கர் போகத் தானேகும் வேளையிலே நன்றான கேத்திரனும் நல்லமறை வேதியனும் அன்றிளகிச் சென்று அரனார் திருக்கோவில் வந்த பொழுது வானமதி லுள்ளோரும் நந்நகோ பால நாரா யணரிடத்தில் சென்று தொழுது தேவரெல்லாந் தெண்டனிட்டு இன்று பெருமாள் இங்கே யெழுந்தருளி வந்த வகையேது மாயவரே யென்றுசொல்லி அந்தமுனி தேவர்களும் அச்சுதரோ டீதுரைக்க நல்லதென்று அய்யா நாரா யணர்மகிழ்ந்து வல்ல பரமே சுரரை மிகவாழ்த்தி ஈசுரரே யென்றனக்கு இங்கிருக்கக் கூடாமல் 140 தேச மதைப்பார்த்துத் திருவ னந்தமேகி இருக்கவே யென்று எழுந்தருளி வந்தேன்காண் மருக்கிதழு மீசுரரும் மாமுனிவர் தேவர்களும் நீசனாய்த் தோன்றி நிரந்து பரந்திருந்த தேசத் திருவனந்தம் செல்லவகை யேதுவையா அல்லாமல் நீசன் அவனிடத்தில் போயிருந்தால் எல்லா மவன்றனக்கு ஈடாகிப் போகுமல்லோ கைவாய்த்து தென்று கலியனவன் கொண்டாடி மெய்வாய்த்து தென்று மேலாக மாநீசன் பரிகாசங் செய்வானே பார்முழுது மாநீசன் ஆனதா லங்கேக அச்சுதரே ஞாயமில்லை மான மழிந்தாச்சே மாகலியன் வந்ததினால் எல்லாங் கழியை ஈடழிக்கப் பாருமையா இல்லையே யானால் எங்களுக் கிங்கேதான் சென்ற இடமெல்லாம் சிறைபோ லிருக்குதையா என்றுதான் தேவர் ஈசர்முதல் சொல்லிடவே அன்று அவர்களுக்கு அச்சுதரு மேதுரைப்பார் நன்றுநன்று வானவரே நல்லபர மேசுரரே கலியேது நீசம் காணேது வையகத்தில் சலிவேது ராச்சியத்தில் தானேதும் நானறியேன் அனந்தபுரம் போக ஆதியி லென்றனக்குத் தனந்தசுக முனிவன் சாபமுண் டானதினால் கொஞ்சநா ளானாலும் குடியிருக்க வேணுமங்கே வஞ்சகங்க ளில்லாத மாயன்வழி கொண்டனராம் ஈசர்தனை யனுப்பி எம்பெருமா ளச்சுதரும் வாசமுள்ள சேத்திரனும் மறையவனுந் தேவர்களும் சங்க மதுகூடித் தத்திதத்தி யாய்வரவே வங்கத் திருவனந்தம் வழிநோக்கித் தான்வரவே

பிரம்ம ரிஷிகள்

வழியிலோ ரற்புதந்தான் மாயவனார் கண்டுமிகக் களிகூர்ந் தவருடனே கட்டாக ஏதுரைப்பார் மாமுனியே தேவர்களோ வழியி லொழுங்கொழுங்காய் ஓமுனியே நின்றதையும் உரைப்பீர்கா ணென்றுரைத்தார் அப்போது மாமுனியில் அருண முனிவனொன்று செப்போடு வொத்த திருமாலை யும்பணிந்து மாயவரே நான்முகனும் வாழும் பிரம்மமதில் ஆய கலையிருஷி ஐம்பத் தொருநான்கோர் பிரமன் பிறப்பைப் புகுந்தெடுத் திவ்விருஷி வரமான புத்தகத்தை மாறாட்டஞ் செய்ததினால் அறிந்தந்த வேதாவும் அவர்கள் தமையழைத்துச் செறிந்த இருஷிகளைச் சிலைக்கல்லாய்ச் சாபமிட்டார் அப்பொழு திவ்விருஷி அயனைத்துதித் திச்சாபம் எப்பொழு திச்சாபம் ஏகுமென்றார் மாயவரே வேதா தெளிந்து விஷ்ணுஸ்ரீ ரங்கம்விட்டுத் தீதோர் திருவனந்தம் செல்லவரும் வேளையிலே வந்து சிலைதனையும் மாயவனார் தொட்டிடுவார் சிந்து திருக்கைதான் சிலைமேலே பட்டவுடன் தீருமுங்கள் சாபமென்று சிவயிருஷி யானோர்க்குப் பேருல கம்படைத்த பிரமன் விடைகொடுத்தார் அந்தப் பொழுதில் ஐம்பத்தொரு நான்குரிசி இந்தக் கற்சிலையாய் இவரிருந் தாரெனவே மாமுனிவன் சொல்ல மாயவரும் நல்லதென்று தாமுனிந்து கற்சிலையைத் தான்தொட்டா ரம்மானை உடனே இருஷிகளாய் உருவெடுத்து மாலடியைத் தடமேலே வீழ்ந்து தானாவி யேகுவித்து அன்று பிரமா அடியார்க்கு இட்டசாபம் இன்றகல வைத்து இரட்சிக்க வந்தவரே எங்களுக்கு நல்லகதி ஈந்துதா ருமெனவே திங்கள்முக மாயருட திருப்பாதம் போற்றிநின்றார் நல்லதுதா னென்று நாரா யணர்மகிழ்ந்து வல்ல இருஷிகளே வாழ்வெங்கே வேணுமென்றார் மேலோக வாழ்வு வேணுமோ அல்லவென்றால் பூலோக வாழ்வு போதுமோ வென்றுரைத்தார் அப்போ திருஷியெல்லாம் அவனியி லெங்களுக்கு இப்போ வரங்கள்தந்து ஏகவைத்தால் போதுமையா நல்லதுதா னென்று நல்ல இருஷிகட்கு வல்லத் திருமால் வரங்கொடுப்பா ரம்மானை பிச்சையது வாங்கிப் பெருமை யதாயருந்தி மிச்சமது வைக்காமல் விழிபரந்து பாராமல் சீமைக்கொரு இருஷி செல்லுங்கோ ஆண்டியெனத் தாண்மை பரதேசி தானாகி வீற்றிருந்து பூசை பெலிகள் பீடமிட் டேராதிருந்து ஆசைக் கருத்தை அறுத்து வொருநினைவாய் மாசணு காமல் மனதில் நமைத்துதித்து ஓசை யுடனே உலக மதில்நீங்கள் வைகுண்ட மென்று வையகத்தே வாழுமென்று பொய்குண்டம் நீக்கிப் பூலோக மேயிருங்கோ தந்த வரத்தில் தப்பி நடந்ததுண்டால் வந்தங் கிருந்து வருத்தியுங்கள் தம்மையெல்லாம் அவரவர்கள் செய்த அக்குற்றந் தான்கேட்டு எவரெவர்க்குந் தக்க இயல்பே தருவோமென்றார் நல்லதுதா னென்று நாடி இருஷியெல்லாம் செல்லப்பர தேசிகளாய்ச் சென்றாரே சீமையிலே இருஷி களையனுப்பி எம்பெருமாள் தான்மகிழ்ந்து துரிச முடனனந்த சீமைநோக் கிநடக்கத் தேவர்களும் வானவரும் ஜேஜே யெனநடக்கத் தாவமுட னனந்தம் தானோக்கி மால்நடக்க அனந்த புரம்நோக்கி அச்சுதனா ரேகுகையில்

எக்காள துர்க்கை

புனந்தனிலோர் பொருப்புப் பூவையுருப் போல்கிடக்கக் கண்டெம் பெருமாள் கால்கொண் டுதைத்திடவே குன்றுபோ லேயுடம்பும் குஞ்சரம்போல் கைகாலும் துண்டு மலைபோல் துய்யமூக்கு முலையும் வாய்கண் ணொருமலையாம் வயிறுமூணு மலையாம் கொண்டை பன்னிரண்டு குறுக்கமுண் டன்போரே பண்டே திருமால் பம்பழித்தத் தாடகைபோல் நின்றாளே யண்டபிண்டம் நிறைந்த சொரூபமதாய் கண்டாரே எம்பெருமாள் கனத்தவி சேடமென்று தேவர்களே வானவரே சேத்திரனே வேதியனே பாவலரே கல்தான் பரும்பெண்ணாய் வந்ததென்ன சொல்லுவீ ரென்று திருமா லுரைத்திடவே வெல்லும் புகழ்தேவர் விளம்புவா ரம்மானை ஏம னிணையான எக்காளத் துர்க்கையிவள் சாமி சிவனார்தன் சொல்லையிவள் தட்டினதால் கோபித் திவளைக் குன்றுபோல் சாபமிட்டார் ஏகி வரும்போது இவள்தானு மீசுரரை வணங்கியிச் சாபமெப்போ மாறுமென்றாள் மாயவரே அணங்குக்கு ஈசர் அருளினது கேளுமையா அனந்த புரமதிலே ஆனநதி மேலே வனந்தமால் பள்ளிகொள்ள வருகின்ற அவ்வழியில் உன்சாபந் தீர்த்து உன்னை உலகதிலே பின்சாப மிட்டுப் போக விடைதருவார் என்று சிவமுரைக்க இப்படியே வந்தவளும் குன்றுபோ லேகிடந்தாள் குருவேயுன் பாதமதால் அவள்சாபந் தீர்ந்து ஆயிழை போல்வடிவாய் இவள்தானும் வந்தாள் எனச்சொன்னார் தேவர்களும் நல்லதென்று நாரணரும் நாரிதனைக் கொண்டாடி வல்லவளே யெக்காள மடந்தையே யுன்றனக்கு ஏதுனக்கு வேணுமென்று என்னோடு கேளுஎன்றார் வாதுக்கு வல்லகியாள் மாய ருடன்கேட்பாள் நாரணரே அய்யாவே நான்தான் முற்காலமதில் பாரமுள்ள செந்திருஷி பாரியாய் நானிருந்தேன் அப்போது என்றனக்கு அழகிது இல்லையையா செப்போடு வொத்த சிவகாமி போலழகு நன்றாக என்னுடைய நல்லபர்த் தாவுடனே ஒன்றாக வாழ்ந்து உறவா டிருக்கையிலே என்பேரி லிச்சை ஏமன்மிகக் கொண்டாடி வம்புசெய் தென்னுடைய மன்னவனைக் கொன்றான்காண் ஆனதா லேமனுக்கு அழிவுவர வேணுமென்று மானத் தவமிருந்து வருந்தினே னீசுரரை அப்போது ஈசுரரும் அடியாள் மனந்திருத்தி இப்போது அந்தகனை இறக்கவைத்தால் ராச்சியத்தில் நருட்பெருத்துப் பூலோக நாடுதரியா தெனவே பொறுத்துக்கோ கொஞ்சம் பூவையே யென்றுரைத்தார் என்னை மனந்திருத்தி ஏமனோடே சேர்த்தாலும் மன்னனை வதைத்ததுதான் மறவாம லெப்போதும் திவசமொரு நேரம் சிவனாரை யானோக்கிப் பவத இயமனுக்குப் பகையாகக் கேட்டிருந்தேன் ஆனதா லீசர் அறிந்தே யெனைநோக்கி ஈன முடன்பேசி இகழ்த்தினா ரீசுரரும் கொஞ்சம் பொறுக்கவென்று கூறினேன் பெண்கொடியே மிஞ்சவல்லோ செய்தாய் எனவெகுண் டாதிபரன் மலைபோ லுடம்பும் வயிறு மிகப்பெருத்து அலைபோற் பரந்த அங்கம் பெரும்புடமாய்க் கல்லது போற்கிடந்து காலனைக் கொல்லும்வகை வல்ல வகையாலும் வருந்திக்கோ என்றுசொல்லிக் கோபித்தார் முன்னே குன்றுபோ லேகிடக்கச் சாபித்தா ரென்னை சாமியுன் பாதமதால் தோன்றினே னென்சாபத் துயரறுத்தேன் மாயவரே வீன்றிய அந்தகனை வேரோ டறுத்திடவே வரந்தா ருமையா மாயவரே யென்றுசொல்லி சிரமுரத்தப் பெண்கொடியாள் தெண்டனிட்டாள் மாயவரை அப்போது மாயவரும் அவளை முகம்நோக்கி இப்போது பெண்கொடியே யான்சொல்லக் கேட்டிடுநீ அந்தகனைக் கொல்லவென்று அருந்தவசு பண்ணிடுநீ வந்த யுகமாறி வலியபெலத் தர்மயுகம் உதிக்கும் பொழுதில் உன்தவ சின்படியே சதிக்குகந்து தானால் சண்டனழி வாகுமென்றார் அப்போது பெண்கொடியும் மானத் தவம்வளர இப்போ விடையருளும் என்றுகேட்டு வேண்டியவள் நின்றாள் தவத்தில் நீலியாய்ச் சண்டனுக்கு வண்டூறிக் கன்னி மன்னன் பழிவாங்க ஆதியைப் போற்றி அருந்தவசு பண்ணிடவே சோதித் திருமால் திருவனந் தம்நோக்கி நடக்கத் திருமால் நளின முடன்மகிழ்ந்து வடக்குக் கயிலாச வழியே வருகையிலே

வானோர்க்கு அருளல்

தெய்வலோகத் திலுள்ள தேவாதி தேவர்களும் வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும் சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும் தவமான வேதச் சதுர்மறையோன் தன்னுகத்தில் கருதி ரிஷிமுதலாய்க் கட்டாக நாற்புவியில் இருக்கின்ற வானவர்கள் எல்லோரு மெண்ணமுற்று மான வரம்பு மகிமைகெட் டேகுமுன்னே வான மதுவிட்டு வடகயிலை போவோம்நாம் கயிலை வரம்பழிந்து கட்டுமிகத் தப்பினதால் அகில மழிவதற்கு அடையாள மித்தனைதான் அல்லாமல் குறோணிமுதல் அந்நீசக் கலியன்வரை எல்லாஞ் சரியாகி எவ்வோர்க ளானாலும் கல்லாத பொல்லாக் கலியனுட மாய்கையினால் நல்லோராய் மேற்பிறந்து நளினமுற்று வாழ்வரென்று வேதா கணக்கில் விதித்துரைத்தார் முன்னாளில் நாதாந்த வேதம் நழுவிமிகப் போகாதே இப்படியே தேவர் எண்ணமுற்று வாடினரே முப்படியே யுள்ள ஊழிவி தியெனவே கடைச்சாதி யான கலிச்சாதி யானதிலே படையாமல் நம்முடைய பங்குவம்மி சத்தோராய் ஒண்ணா மதுகுலந்தான் உயர்தெய்வச் சான்றோரில் வண்ணமுள்ள வேதா மனுவாய்ப் பிறவிசெய்ய ஒன்றாக நாமளெல்லாம் உவந்துதவஞ் செய்யவென்று நின்றார் தவத்தில் நிறைவோன் பதம்போற்றி தங்கள் குலமான சான்றோர்கள் தங்குலத்தில் எங்கள் தமைப்பிறவி இப்போசெய்ய வேணுமென்று பிறந்திறந்த போதும் பின்னுமந் தப்பிதிரில் மறந்திடா வண்ணம் மனுவி லுதித்திடவும் ஆதிமகா மூலத்து ஆதிநா ராயணரே நாதியா யெங்களையும் நாடிமிக வந்தெடுத்து எங்கள் துயரம் எல்லா மவர்மாற்றி சங்கடங்க ளில்லாத தர்ம பதியருளிக் கிரீடமுஞ் செங்கோலும் கீர்த்தியுள்ள முத்திரியும் வீரியமாய்த் தந்து மேலோக முமகிழ எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பதவிதந்து மண்விண் புகழ வரந்தாரு மென்றுசொல்லி நின்றா ரதையும் நெடியோன தையறிந்து கொண்டாடி யேதெனவே கூறினார் தேவருடன் நின்ற நினைவை நெடுமால் தனக்குரைக்க அன்றந்தத் தேவருக்கு அலையாத புத்திசொல்லி நல்லதுதான் தேவர்களே நாடுவது காரியந்தான் வல்ல தவசு மனம்பிரியாச் செய்யுமென்றார்

பசுவும் பெண்ணும்

அச்சுதரும் தானடந்து அனந்தபுர மேகுகையில் பச்சுடம்பாய் நின்ற பசுவுமோ ரேந்திழையும் நாராய ணாவெனவே நாடித் தவமிருக்கச் சீராய்த் திருமால் சிறந்ததவங் கண்டருளி ஏது பசுவே ஏந்திழையே வுங்களுக்கு நேதுவில்லா வண்ணம் நெடுந்தவசு பண்ணினதேன் அப்போ துபசுவும் அச்சுதருக் கேதுரைக்கும் இப்போது மாயவரே என்னுடைய புத்திரனைக் கொல்லும் படியாய்க் கோதை யிவள்தவசு செல்லும் படியாய்ச் சிந்தை மிகக்கலங்கி புத்திரனு மாண்டால் பிள்ளையா யென்றனக்கு உத்திரக் கன்றாய் உடன்பிறக்க வேணுமென்று நின்றேன் தவசு நீலவண்ண ருண்டெனவே என்றே பசுவும் ஈதுரைக்க ஏந்திழையும் நன்றாகப் பார்த்து நாரா யணருரைப்பார் ஒண்டொடியே உன்றன் உற்றவழக் கேவுரைநீ அப்போது பெண்கொடியும் அச்சுதரைத் தானோக்கிச் செப்போடு வொத்த தேவியுஞ் சொல்லலுற்றாள் அய்யாவே யெனக்கு ஆளான வீரனைப்போல் மெய்யா யொருமதலை விமல னருளினர்காண் மதலை வளர்ந்து வயதுபதினா லாகுகையில் குதலை மொழிகேட்டுக் கொண்டாடி நான்மகிழ்ந்து இருக்குமந் தநாளில் இப்பசுவின் புத்தினர்தான் உருக்கமுட னென்பேரில் உள்ளாசை கொண்டான்காண் அதட்டினே னானதற்கு ஆகட் டெனவுறுக்கி மதட்டி மதலைதனை மாளவைத்தான் மாபாவி ஆனதி னாலடியாள் அறமெலிந்து தான்வாடி போனேன் பிரமா பூசாந்திரக் கணக்கில் உள்ள விதியோ ஊழி விதிப்படியோ கள்ளக் கணக்கன் கண்மாயமோ எனவே பார்த்தேன் மகன்தான் படவிதி யங்குமில்லை ஆர்த்தேன் நான்கோபம் அக்கினிபோ லெமீறி சிவனுக் கபயம் செவியறிய விட்டேனான் இவளுக்கு வேண்வடி ஏதுசெய்வோ மென்றுசொல்லி ஒருவரு மென்னுடைய ஊழிவிதி கேட்கவில்லை வருவது வரட்டெனவே வந்தே தவசுநின்று மகன்பழிதான் வாங்க மாயவரே உம்மருளை அகமிருத்தி நானும் அருந்தவசு செய்தேனான் என்றுரைக்க ஏந்திழையும் எம்பெருமா ளேதுரைப்பார் நன்றுநன்று பெண்கொடியே நல்ல தவம்புரிந்தால் நினைத்த படியே நிறைவேறு மென்றுரைத்துக் கனத்த பசுவேநீ கட்டாய்த் தவமிருந்தால் உன்றனக்குச் சித்திரனும் ஒருகன்றாய்த் தான்பிறந்து உன்றன் மகனார்க்கு ஏவல்செய்ய வைத்திடுவேன் என்று பசுவதுக்கும் ஏந்திழைக்குந் தானுரைத்து அன்று திருவனந்தம் அவர்நோக்கித் தானடந்து

சேத்திர பாலனுக்குச் சொன்னது

கேத்திரனும் வேதியனும் கிருஷ்ண ரடிபணிந்து மூர்த்திகளுங் காணாத முதலே முதற்பொருளே உன்மகவாய் வந்துதித்த உயர்ந்த குலச்சான்றோர் தன்கமவோ ரங்கே தவித்துமுகம் வாடிருக்க நீசனுட குடியில் நீர்போகக் காரியமோ தேசமெல்லாம் நீசனுட செய்திகேட் டேயிருந்தும் போவதோ தேவரீர் பொல்லா தவன்குடியில் தேவரீ ரும்முடைய சிந்தையெள் போலறியேன் என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று கேத்திரனே நான்சொல்லக் கேட்டிடுநீ சான்றோர்க் குபகாரம் தான்செய்யு முன்னாகப் பொன்றுகலி நீசனுக்குப் புத்திசொல்ல வேணுமென்றும் அல்லாமற் குறோணி அவன்மாய யிவன்வரையும் எல்லாந்தான் சொல்லுக்கு இடறுவை யாதபடி சான்றோர்கள் தம்மிடத்தில் சாங்கமாய்ப் போயிருந்து ஆன்றோர்தா னெங்களையும் அழியவைத்தீ ரென்றுரைப்பான் ஆனதால் நானும் அதற்கிடைகள் வையாமல் ஈன முறுநீசன் இடம்போறே னென்றுரைத்தார் அப்போது கேத்திரனும் அன்பா யகமகிழ்ந்து செப்போடு வொத்த திருமாலைத் தெண்டனிட்டு மாயனே உன்றன் மகிமையதை யாரறிவார் ஆயனே வும்முடைய அளவறியக் கூடாது என்று கேத்திரனும் இயம்புவான் பின்னுமொன்று மன்று தனையளந்த மாயப் பெருமாளே பூசை புனக்காரம் பெரியதீ பத்துடனே நீச னுமக்கு நினைத்துநிதஞ் செய்வானே எந்தனக் கென்ன இலக்குக் குறியெனவே சிந்தை தெளிந்து செப்பி விடைதாரும் என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பா ரெம்பெருமாள் இன்றுநீ கேட்டதற்கு இயல்புரைக் கக்கேளு கலிநீசன் மாநிலத்தில் கால்வைத்து அன்றுமுதல் சலிவாகி யென்மேனி தண்ணீ ரறியாது எண்ணை யறியேன் இலட்சுமியை நானறியேன் வண்ணத் துகிலறியேன் மறுபுடவை தானறியேன் பூசை யறியேன் பொசிப்பறியேன் பூவறியேன் ஆசை யறியேன் அக்கக் கிளையறியேன் மெத்தை யறியேன் மேவுஞ் சொகுசறியேன் ஒற்றைபோ லானேன் உட்கார்ந் திருக்கறியேன் மேடை யறியேன் மகிழுஞ் சிரிப்பறியேன் தோழமையை நானறியேன் சுருதி மொழியறியேன் ஆளவை குண்டம் அரசுமே டையறியேன் இத்தனைகள் தானறியா(து) எண்ணமது நானறியேன் புத்தியுள்ள கேத்திரனே பூசைபூ ஏற்பதெல்லாம் மாயக் கலியறுத்து வாய்த்தநா டாள்வார்க்கு ஞாயமுள்ள பட்டம் நான்சூட்டித் தர்மமதாய் இராச்சியத்தை யாளவைத்து இத்தனையு மேற்பதல்லால் அதற்குமுன் பூசை புனக்காரமுத லேற்பதில்லை இதற்குமுன் னேற்பவர்கள் எனக்காகா தேபோவார் என்றந்தக் கேத்திரனுக்(கு) இத்தனையுந் தான்கூறி அன்றந்த நீசன் அவ்வூரி லெம்பெருமாள்

புலச்சிக்கு அருளியது

நீச னிடத்தில் நீலவண்ணர் வந்ததுதான் தேச மறிய செச்சை புலச்சிகண்டு ஒளித்தா ரொருஇடத்தில் ஊர்தேச முமறிய விழித்தாள் புலச்சி விதமறிந் தெல்லோரும் நீச னறிந்து நெருங்கமணி மேடைவைத்து வீசை முறுக்கி விசையாக அந்நீசன் கோவில் சிவாலயங்கள் கொந்துகொந் தாயமைத்துப் பாவித்துப் பூசை பண்ணத் துணிந்தனனே மேடைக்குக் கால்கள் மிகுத்தத்தங்கத் தால்நிறுத்தி வாடைக் கமகமென வாத்தியங்கள் நின்றதிர தீபம் புலச்சி தீவட்டித் தான்கொடுக்கப் பாவக் குடும்பத்தோர் பண்ணினார் பூசையது நம்பூரி வேதியர்கள் நாடி யகமகிழ்ந்து பம்பைப் பரத்தை பகட்டுக்கை காட்டலோடு நாடி மகிழ்ந்து நல்ல அனந்தபுரம் கோடிநூ றாயிரம்போல் கூண்டரிய தீபமொடு தேடரிய மாமறையோர் சிந்தைகளித் தேயிருக்க நாடதிக மாகி நல்ல அனந்தபுரம் மாத மும்மாரி வருசிக்கத் தான்பொழிந்து வாரமுடன் செந்நெல் மாறாம லேவிளைந்து தென்னங் குலைசிதறித் தேர்ப்போ லலங்கரித்து என்னென்ன பவிசு எல்லா மிகப்பெருத்து ஒப்பில்லாத் தேசம் உற்ற அனந்தபுரம் செப்பத் தொலையாது சிறந்தப் பெருமையது நன்றாகச் சீமை நாடோறு மேவாழ்க அன்றுஸ்ரீ ரங்கர் அங்கே யகமகிழ்ந்து நீசன் நினைத்த நினைவுபோ லெம்பெருமாள் தேசப் பவிசும் சிறப்பு மிகக்கொடுத்து நீசன் தனக்கெதிரி நீணிலத்தி லில்லையென்று தோசக் கலிப்புவியைச் சூட்டியர சாளுகையில்

கலியரசன் தவம்

மதலைய தில்லாமல் மனஞ்சலித்து மாநீசன் குதலையி னேதுவினால் கொஞ்சஞ் சடைவாகி ஆதித் திருமால் அடியை மிகப்போற்றிச் சோதியே யென்றனக்குச் சிறுவனொன்று தாருமென்றான் அப்போது நாராயணர் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது உனக்கு இங்கிருந் தால்மதலை கிட்டாது காசிதனில் கீர்ந்த நதிக்கரையில் திட்ட முடன்தவசு செய்யப்போ யங்கிருந்தால் மதலையுட துயரம் மாறுங்கா ணுன்றனக்குப் பதலைமொழி நீசனுக்குப் பகர்ந்தார்கா ணம்மானை கேட்டந்த நீசன் கெட்டிதா னென்றுசொல்லி நாட்டுக்குச் சீட்டெழுதி நருட்களையுந் தான்வருத்திப் போனானே நீசன் புகழ்பெரிய காசிதனில் சேனா பதிகள் திக்கெங்குஞ் சூழ்ந்துநிற்க நீசன் தவசு நிற்க வொருமறையோன் வாசக் குழலோடு மருவினன்கா ணம்மானை கண்டந்த நீசன் காமம் பொறுக்காமல் தண்டுமீ றிக்காமம் சலத்தில் விழுந்ததுவே இரைநமக் கென்று எட்டியொரு கொக்காவி விரைவாய் விழுங்க மிகுத்தகர்ப்ப முண்டாகித் தண்ணீரில் பிள்ளை தான்பெற்று தம்மானை வெண்ணிற மான மிகுத்தபிள்ளை தான்மிதந்து போகும் பொழுதில் புனலரிஷி மாமுனிவன் தாப முடன்சிசுவை தானெடுத்தா னம்மானை மதலை தனையெடுத்து வளர்த்துப் பருவமதில் குதலை தனையாற்றில் குளியோட நீச்சலதும் தோணியே றுந்தொழிலும் சுருக்குக்கப் பலேற்தொழிலும் ஆணிப்பொன் முத்து அதுவளருந் தலமும் வெள்ளித் தலமும் மிகுத்தபொன் னுத்தலமும் உள்ளவித்தை யான உற்றரச வாதமுதல் கள்ள உபாயக் கபடுபலத் தந்திரமும் வெள்ளை நீசன்தனக்கு விதமா யவர்வருத்திச் செங்கோ மட்டியெனத் தேசநசு ராணிகளில் பெண்கள் ரண்டுபேரைப் பேறாய் மணமகித்து இருத்தினான் மாமுனிவன் ஏற்றசெங் கோமட்டியில் பருத்த வெள்ளைநீசன் பண்பாக அங்கிருக்க நின்ற தவசு நெறியழிந்து மாநீசன் அன்றந்தப் பாவி அனந்தபுரம் வந்தனனே வந்து சடைவாய் மாநீசன் தானிருக்கச் சந்துபயில் மாயவரும் தானறிந் தேதுரைப்பார் மன்னவனே யுன்றனக்கு மதலையது கிட்டினதோ என்ன விதங்காண் ஏகிவந்த தென்றுரைத்தார் அப்போது நீசன் அவனேது சொல்லலுற்றான் இப்போது மாயவரே யான்தவசு நிற்கையிலே மறையவனுந் தேவியோடு மருவினதைக் கண்டாவி இறையவரே யென்றனக்கு இந்திரியந் தானிளகி ஆனதால் தவசு அழிந்தே னதினாலே ஈனமுடன் மதலை இல்லையென்றா ரீசுரரும் மதலையில் லாதிருந்தால் வையகத்துக் கேராது குதலையல்லோ வேணும் குவலயத்தை யாளுதற்குச் செங்கோ லரசு செலுத்தியர சாளுதற்கு முன்கை சிரைத்து முறைகர்மஞ் செய்திடவும் பிள்ளையில்லா தேயிருந்தால் போதுமோ புண்ணியரே வள்ளலந்த மாலும் மறுத்துரைப்பா ரம்மானை சொந்தமுள்ள சோதிரியைச் சுறுக்காய் வரவழைத்து உந்தனக்குப் பிள்ளை உண்டோதா னில்லையென்று வருத்திக்கே ளப்போ வகைசொல்வான் சோதிரிசி பொருத்தமா யாயன் புகன்றாரே நீசனுக்கு

மருமக்கள் வழி

நல்லதென்று வேதியனை நாடி யவனழைத்துச் சொல்லவென்று நீசன் தொகுத்தவனோ டேகேட்க அப்போது சோதிரிசி அந்நீ சனைப்பார்த்து இப்போது கேள்நீ ஆகமத்தி லுள்ளமுறை பெற்றாலு முன்மகவு பேருலகம் ஆளாது மற்றோர்பெற் றுன்மருகன் ஆளுவான் வையகத்தை என்றேதான் சாஸ்திரமும் இசையுதுகாண் மன்னவனே அன்றேதான் சோதிரியும் அந்நீசனுக் குரைத்தான் நல்லதென்று நீசன் நாடி யகமகிழ்ந்து வல்ல வகையாலும் வைத்தபங்குக் கிட்டுமென்று சோதிரியைத் தானனுப்பித் துயர்நீங்கி யேயிருந்தான் ஆதி முறைப்படியே அவன்மரு கன்றனக்குப் பட்டந்தா னென்று பறைசாற்றி யாண்டிருந்தான் திட்டமுடன் நீசன் தேசமதை யாளுகையில் முன்னீசன் விந்தில் உதித்துவளர்ந் தேயிருந்த அந்நீச னான அசுபக் கிரிவளமை

வெண்ணீசன்

சொல்லவே நாதன் தொகுத்துக்கே ளன்போரே வல்லசெங் கோமட்டி வையகத்தி லந்நீசன் வெள்ளி மலையும் மிகுத்ததங்கப் பொன்மலையும் கள்ளமில்லா வாதம் கைகண்ட வித்தையதாய் நிதியிற் பெருத்து நெருங்கப் படைகூட்டிப் பரியானை ஒட்டகங்கள் பலபடைகள் சேகரித்து ஆளும் படையும் ஆயுதங்க ளஸ்திரமும் வேழும் பெரிய வெகுவாணு வங்கூட்டித் தன்னோ டினங்கள் சதாகோடி யாய்ப்பெருத்து என்னோ டெதிர்க்க யாதொருவ ரில்லையென்று அவன்தா னொருவேதம் ஆகமங்கள் தான்பிரித்து எவர்தா டெதிர்க்க யாதொருவ ரில்லையென்று அவன்தா னொருவேதம் ஆகமங்கள் தான்பிரித்து எவர்தா னெதிரியென்று எண்ணமுற்று மாநீசன் நட்சேத் திரத்தை நகட்டிருபத் தெட்டாக்கி வைத்தானே மாதம் வருசமது மாறாய் முன்னீசன் வைத்த முறைமை யிலுங்கூட்டிப் பின்வந்த நீசன் பிரித்தானொன் றேற்றமுடன் அரிநமா வென்ற அட்சரத்தை விட்டவனும் விரியாய் அனாதியென விளம்பினான் வையகத்தில் இப்படியே வைத்த இவன்வேத மானதுக்குள் அப்படியே மற்றோரை அகப்படுத்த வேணுமென்று பணமா னதைக்கொடுத்துப் பகட்டினான் மானிடரைச் சிணமாக மானிடவர் சேர்ந்தா ரவன்வேதமதில் இப்படியே வேதமொன்று இவன்பலத்தா லுண்டாக்கி அப்படியே தானிருக்க அவனேது தானினைப்பான் ஆணுவங்கள் சேனை ஆயுதங் கள்வெகுவாய் வாணுவங்கள் ரெம்ப வம்மிசத்தோ ரெம்பரெம்ப படையாலு மற்றொருவர் பணத்தாலும் நம்மையுந்தான் தடைசெய்து நம்மைத் தடுப்பவரா ரென்றுசொல்லி ஆரா ரெதிரியென்று அவன்பார்த் திருக்கையிலே பூராய மாயொருவன் போதித்தா னவன்றனக்குச் சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும் வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில் பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன் மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும் வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல் மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு வந்தானே யந்த மாநீசன் தன்பேரில் செந்தார மாயன் சேனை வருவதையும் அறிந்தே நீசன்தனக்கு அச்சுதருஞ் சொல்லலுற்றார் வெறிந்தமுள்ள நீசன் வேண்டும் படைகூட்டி நசுறாணி யான நல்லவெண் ணீசனுக்குத் துசுவான மாநீசன் திருமாலின் தன்னருளால் எற்றுக் கொடாமல் இவன்வெற்றி கொண்டனனே மற்றுமந்த நீசன் மாறியவன் போயிருந்தான் அப்போது அந்த அன்னீத மாநீசன் இப்போது படையை யாம்வெற்றி கொண்டோமென்று கோட்டைபின்னு மிட்டுக் கொடிய விருதுகட்டித் தாட்டிமையா யுலகில் சட்டமது வைத்தனனே வைக்கும் பொழுதில் மாயவரைத் தானோக்கிச் செய்க்கும் பெரிய திருமாலே யென்றனக்குக் கைக்குள்ளே ஏவல் கருத்தாகச் செய்வதற்கு மெய்க்குணம்போ லுள்ள விதமான சாதியொன்று வருவித்து என்றனுட மணிவாசல் காத்திருக்கத் தருவித்து நல்ல சாதியொன் றென்றுரைத்தான் அப்போது மாயன் அதற்கேது சொல்லலுற்றார் இப்போது உன்றனக்கு ஏவல் தொழில்கள்செய்ய ஆகின்ற பேரை அழைத்துக்கோ என்றுரைத்தார் வேகுன்ற நீசன் விளம்புவா னமைச்சருடன் ஆரைக் கொடுவரலாம் அருகில்விட்டு வேலைசெய்ய ஏரையொத்த மந்திரியே இயம்பு மெனக்கேட்டான் அப்போது மந்திரிகள் அந்நீசனுக் குரைப்பார் இப்போது வேறொருவர் இருந்தாலா காதெனவே நல்லவகை யான நாடுஞ்சான் றோர்களைத்தான் வல்லவகை யாலும் வருவித்து வைப்பீரால் ஆகுமந்தச் சாதியென்று அந்நீசனுக் குரைத்தார் வேகும் பொழுதில் வெற்றிசான் றோர்களுக்கு ஆள்விட்டு வருத்தி அதிக நிதிகொடுத்து வாள்கொடுத்து ஆயுத பாணி மிகக்கொடுத்துப் பட்டயமுங் கொடுத்துப் பாரயிறை கூலிவிட்டுச் சட்டைக்குல் லாகொடுத்துத் தலைப்பா மிகக்கொடுத்து வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே வாசமொழிக் கலியன் மாய்கையால் சான்றோர்கள் ஊழி விதியால் உடையோனை நெஞ்சில்வைத்துக் காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார்

கலிநீசன் சாபம்

அப்படியே காத்திருந்து அவர்வருகும் வேளையிலே முப்படியே வந்த முழுக்கலியன் தோசமதால் அந்தநீ சன்தனக்கு அழிவுவரும் வேளையிலே இந்தச் சான்றோர்கள் இவர்தூக்கம் வைத்திடவே நீசனுட வம்மிசத்தோர் நேரக்கூறே யறிந்து வாசமிட்டு நீசனையும் வதைத்தாரே யவ்வினத்தோர் சீவன்போ கும்வேளைச் செப்புவான் சாபமொன்று காவலாய் நீரிருந்து காட்டிக்கொடுத் தீரேயென்று கோபித்தான் சான்றோரைக் கூறழியப் பேசியவன் சாபித்தான் சான்றோர்க்குச் சத்தியில் லாநீசன் என்குடும்பத் தோர்கள் இராச்சியத்தை யாளுமட்டும் உன்குடும்பத் தோர்கள் ஊழியங்கள் செய்துமிக அழுந்தப்படு வாரெனவும் அந்நீசன் சான்றோர்க்கு விழுந்த மொழியாய் விரைந்துரைத்தா னேநீசன் சொல்லியந்த நீசன் சோர்ந்திறந்தா னவன்றன் வல்லி யுடன்பிறந்த மகன்தேசம் ஆண்டிருந்தான் நீசனுட சாபம் நீணிலத்தில் சான்றோர்க்கு மாய வலையாய் வளைந்ததுகா ணன்போரே தேவ ரதையறிந்து திருமா லிடமேகி மேவலர்கள் வந்து விளம்பினா ரப்போது மாயவரே எங்கள் வழியில்வாழ் சான்றோர்க்குப் பாவிநீ சன்சபித்த பழிசாபங் கேட்டீரோ சாபத்துல்ப மெல்லாம் தானுரைத்தா ரச்சுதற்குத் தாமத் திருமேனி தானுரைப்பார் தேவருக்கு மன்னதியத் தேவர்களே வாய்த்தபுகழ் சான்றோர்க்கு அந்நீசன் சாபம் அதுவுங் குறிதான்காண் வம்புள்ள நீசன் வழக்கெல்லா மேற்பதற்கு அன்புள்ள சான்றோர்க்கு அவனிட்ட சாபமது எத்தனை குற்றம் இவர்செய்து போட்டாலும் அத்தனையும் நீசன் அவனேற்கக் காரியந்தான் நல்லதுகாண் தேவர்களே நாடுஞ்சான் றோர்களுக்குத் தொல்லைவந்தா லுந்தீர தொகைவைத்த லக்குமுண்டு சோழனுக்குச் சான்றோர் செய்தநன்றி மெத்தவுண்டு வேழமிட் டிருப்பேரை வெட்டினான் பாரறிய நீசனுக்குச் சான்றோர் நித்திரைக ளில்லாமல் வாசல்நடை காத்ததற்கோ வலுதுயரச் சாபமிட்டான் எல்லா மறிவார் ஈசர்முதல் லோகம்வரை வல்லாண் மையான வாயத்ததே வாதிகளே நாமென்ன செய்வோம் நாட்டில்விதி வந்ததற்குப் போமென்னத் தேவருக்குப் பெரியோன் விடைகொடுத்து மாயவரு மங்கே மனஞ்சடைத்துத் தானிருந்தார் வாயக் கலிநீசன் வையகத்தை யாண்டிருக்க நீசனிட்ட சாபம் நீதிச்சான் றோர்களுக்கு மாயவினை போலே வளைந்ததுகா ணன்போரே தம்பி தமையனுக்குச் சத்துருப்போல் தானாகி வம்புக்குங் கோளு மாநீச னோடுரைத்து அடிக்கவே கைக்கூலி அவனுக்கே தான்கொடுத்து முடிக்கும் வரையும் முறைமுறைக்கோள் சொல்லிடுவான் இப்படியே சான்றோர் இவர்கள்நிரப் பில்லாமல் அப்படியே நீசனுட அன்னீதத்தால் வேறாய்

கலிநீசன் கொடுமை

பிரிந்துதான் சான்றோர் பெருத்த கிலேசமுற்றார் அறிந்துதான் நீசர் அவர்கள்தொக் காச்செனவே தாலிக்கு ஆயம் சருகு முதலாயம் காலிக்கு ஆயம் கம்பு தடிக்காயம் தாலம தேறும் சான்றோ ருக்காயம் தூலமுட னரிவாள் தூருவட் டிக்காயம் தாலமதுக் காயம் தரணிதனிலே வளர்ந்த ஆலமரம் வரைக்கும் அதிகஇறை வைத்தனனே வட்டிக்கும் ஆயம் வலங்கைசான் றோர்கருப்புக் கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே பாழிலே சான்றோர்க்குப் படுநீசன் கொள்ளுகின்ற ஊழியங்க ளெல்லாம் உரைக்கக்கே ளன்போரே பனைகேட் டடிப்பான் பதனீர்கேட் டேயடிப்பான் கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான் நாருவட்டி யோலை நாள்தோறுங் கேட்டடிப்பான் வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான் நெடுமட்டைக் கேட்பான் நெட்டோலை தான்கேட்பான் கொடுவா வெனவே கூழ்பதனீர் கேட்டடிப்பான் சில்லுக் கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றிக் கொல்லைதனில் சான்றோரைக் கொண்டுவா என்றடிப்பான் மீச்சுக் கருப்புக்கட்டி மிளகுபல காரமிட்டு வீச்சுடனே கொண்டு வீட்டில்வா வென்றடிப்பான் வட்டிக் கருப்புக்கட்டி மணற்கருப்புக் கட்டியொடு வெட்டக் கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொடு தோண்டிக்கும் பாய்க்கும் சுமடதுக் குமோலை வேண்டியதெல் லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான் காலைப் பதனீர் கண்முற்றா நொங்குகளும் மாலைப் பதனீர் வற்றக்கா யும்பதனீர் கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான் விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே இத்தனையும் வேண்டி இவன்கொண்டு போனாலும் பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயர மாறாதே பனையிலுள்ள வஸ்து பலநாளு மிப்படியே வினைகொண்ட பாவி வேண்டியவன் போனாலும் சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று மாண்டோர் கணீசன் மனதில்வைக்க மாட்டானே உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம் நொய்கொண்ட நீசன் நோகப் பறித்தானே இப்படியே சான்றோர் இவர்தேடுந் தேட்டையெல்லாம் அப்படியே நீசன் அவன்பறித்துத் தின்றாலும் ஞாயமுள்ளச் சான்றோர் நாமமது கேட்டதுண்டால் நீசக்குலத் தோர்விரட்டி நெடுந்தூரங் கொண்டடிப்பார் பின்னுமந்தச் சான்றோரைப் பொல்லாதான் கொள்ளுகின்ற அன்னீத மெல்லாம் அருளக்கே ளாயிளையே உப்பா லுவரா உபய மெடுத்தவரை ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான் குளம்வெட்டச் சொல்லிக் கூலி கொடுக்காமல் களம்பெரிய சான்றோரைக் கைக்குட்டை போட்டடிப்பான் சாணார்கள் தம்பனையில் தான்முளைத்த ஓலையெல்லாம் வீணாக நீசன் வெட்டித்தா என்றடிப்பான் வெட்டிக் கொடுத்தாலும் வெற்றியுள்ளச் சான்றோரைக் கட்டிக் சுமவெனவே கைக்குட்டை போட்டடித்து சுமந்து போனாலும் தொகையெண் ணமுங்கேட்டுப் பவந்து மொழிபேசிப் பணமுமிகக் கேட்டடிப்பான் ஐயையோ சான்றோரை அந்நீசன் செய்ததெல்லாம் வையமது கொள்ளாதே மாதேவுன் னோடுரைத்தால் ஈசருக்கும் வேதா இவர்களுக்குந் தேவாதி வாச முடன்பதறி வணங்கிநின்ற வேலையைப்போல் நேசமுள்ள சான்றோர் நெடுநாளு மேபதறி நீசனுக்குச் செய்த நிசவேலை யொக்குமல்லோ ஈப்புலிபோல் நீசன் ஈயைப்போ லேசான்றோர் நாய்ப்புலிபோல் நீசன் நல்லாடு போல்சான்றோர் கீரியைப்போல் நீசன் கிராணம்போ லேசான்றோர் பாரியைப்போல் நீசன் படுத்தினான் சான்றோரை பண்டுநீ சன்பித்த படுசாபந் தன்னாலே விண்டுரையா வண்ணம் விசையடக்கித் தாழ்ந்திருந்தார் இப்படியே ஊழியங்கள் எண்ணலக்கில் லாதபடி அப்படியே சான்றோர் அவனூழி யங்கள்செய்து அல்லாமல் நீசன் ஆர்க்கமுள்ள சான்றோர்க்கு வல்லாண்மை யான வரிசை யிறைகள்வைத்துக் கரிவிறை பாட்டஇறை கண்டபாட் டஇறையும் தரிசிறை காணாத தரைப்பாட் டஇறையும் ஆமிசங்க ளில்லாத அன்னீத வம்பிறையும் நேமித்து வைத்து நிலையுள்ளச் சான்றோரை அடித்துக் கைகெட்டி ஆண்பெண் வரைக்குமிட்டு இடித்தடைத்துப் பட்டினிகள் இரவுபகல் போட்டுப் பெண்ணா ணுடைய பெருமை மிகக்குலைத்து மண்ணாண்ட சான்றோரை வரம்பழித்து மாநீசன் சாணாரைக் கண்ணில் தான்காண வொட்டாமல் வீணாட்டஞ் செய்து விரட்டி யடித்துமிகப் பம்பழித்துச் சாணாரைப் பலசாதி யின்கீழாய்த் தும்பழித்து வேலை தூறுபடக் கொண்டனனே பறையன் புலையன் பகல்வரான் போகுமிடம் மறையொத்த சான்றோர் வந்தால் பிழையெனவே முக்காலி கட்டி முதுகி லடித்துமிக மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் பிழையெனவே சாணான்தன் வஸ்து தரணி தனக்குயிராம் ஆனாலுஞ் சான்றோர்க்கு அடியொருநாள் மாறாது கோவில் சிவாலயங்கள் கூடங்கள்சிங் காசனங்கள் நாவுலகுங் கள்ளாய் நாடி யிருந்தாலும் சாணான்கள் ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம் வீணாகச் சாணாரை விரட்டி யடிப்பான்காண் சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும் வீணுடம்பு கொண்டோர் விரித்துரைத் தோராமல் சாணான்சா ணானெனவே சண்டாள நீசனெல்லாம் கோணா துளத்தோரைக் கோட்டிசெய் தேயடித்தான் தரணிதனில் வந்து தலையெடுத்த யாவருக்கும் மரணம் வரைக்கும் வந்துதித்த அன்றுமுதல் சேனைமிக வூட்டுதற்கும் தெய்வச்சான் றோரமிர்தம் ஈனம தில்லாமல் யாபேர்க்கு மீந்தாலும் பொல்லாத நீசன் பொறுதியுள்ளச் சான்றோரை கல்லாதான் கூடிக் காணவிடா தேயடித்தான் நீசன் குடியிருக்க நிறைந்தமணி மேடையெல்லாம் வாசமுடன் சான்றோர் வஸ்துவல்லா லாகாது அப்படியே சான்றோர் அவருதவி செய்திடினும் எப்படியுஞ் சான்றோர் இடுக்கமது மாறவில்லை எவரெவர்க்குஞ் சான்றோர் ஈந்துமிக வந்தாலும் அவர்களுக்கு நீசன் அனுப்போ லுறவுமில்லை பாலரியச் சான்றோர் படுந்துயரங் கண்டிருந்து மாலதிகக் கோபமுடன் மாநீ சனைப்பார்த்து

ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல்

கேளடா சூத்திராவுன் கிளையோடே மாளுதற்கு வாளடா சான்றோரை வம்புசெய்து வாறதுதான் உன்றனக்கு முன்கிளைகள் உள்ளோர்க்கும் நாள்தோறும் என்றனக்கும் நன்மை இன்பமுடன் செய்துவரும் சாணாரை நீயும் தடிமுறண்டு செய்கிறது வாணாள்க் கிடறு வருமடா மாநீசா முன்னுகத்தில் கேளு முகமைந்து கொண்டோனும் உன்னோடும் பிறவி ஒருயேழு உண்டுமடா ஒண்ணாம் யுகத்துக்கு உற்ற குறோணியடா மண்ணெல்லாங் குறோணி வந்தெடுத்து விழுங்குகையில் பூதக் குருமுனிவன் புத்திசொன்னா னவ்வுகத்தில் நீதமுடன் கேளாமல் நீசனவன் மாண்டான்காண் அடுத்த யுகமதிலே அக்குண்டோம சாலினுக்குக் கடுத்தமுள்ள கோவிரிஷி கடியபுத்தி சொன்னான்காண் கேளா தேமாண்டான் கிளையோடே யந்நீசன் பாழாகிப் பின்னும் பதிந்தமூன் றாம்யுகத்தில் மல்லோசி வாகனென்று வந்த இருவருக்கும் நல்லபெல ரோமரிஷி நாடிமிகப் புத்திசொன்னான் கேளாதே மாண்டான் கிரேதா யுகந்தனிலே தாழாத சூரபற்பன் தம்பி யவன்றனக்கும் வீரவா குதேவர் விரைந்துமிகப் புத்திசொன்னார் தாராமல் சூரன் தன்கிளையோ டேமாண்டான் அவ்வுகத்தில் வந்த அசுர னிரணியற்குச் செவ்வுகந்த சிங்கம் செப்பினதே புத்தியது சற்றுமவன் கேளாமல் தான்மாண்டா னவ்வசுரன் பத்தத் தலையான பார அரக்கனுக்குத் தம்பிவி பீஷணனும் தான்சொன்னான் புத்தியது வம்பிலவன் கேளாமல் மாண்டான் கிளையோடே பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தான் மறுயுகத்தில் மன்னுகந்த பீஷ்மரும் வாழ்த்திமிகப் புத்திசொன்னார் கேளாமல் மாண்டான் கேடுகெட்ட மாபாவி தாழம லுன்றனக்கு தற்சொரூபத்தோ டிருந்து நாரா யணராய் நானுதித்து உன்றனக்குச் சீரான புத்தி செப்புகிறேன் கேளடவா உன்கிளையும் நீயும் உற்றார்பெற் றார்களுடன் தன்கிளையோ டெநீயும் தரணியர சாளவென்றால் சாதி தனிலுயர்ந்த சான்றோ ரவர்களுக்கு நீதி யுடனிறைகள் இல்லாமல் நீக்கிவைத்துக் காளி வளர்த்தெடுத்த கண்மணிக ளானோர்க்கு ஊழியமுந் தவிருநீ உலகாள வேணுமென்றால் அல்லாமல் சான்றோரை அன்னீத மாயடித்தால் பொல்லாத நீசா புழுக்குழிக் குள்ளாவாய் கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால் அற்படியும் உன்கோட்டை அழிந்துபொடி யாகுமடா சாணாத்தி யுன்னைச் சாங்கமுடன் சபித்தால் வாணாளழியு முன்றன் வம்மிசங்கள் தாமுடியும் தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துநிந் தித்துண்டால் கோட்டை யிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும் நாட்டை முடிக்குமடா நல்லசா ணாத்திகற்பு சேனை யழியுமடாவுன் செல்வமது குன்றுமடா வான மிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா திடம்பெரிய சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால் கடல்வந்துன் சீமைதனை கட்டா யழிக்குமடா ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து இறைகூலி தானம் இட்டுக் கொடுத்தவர்க்குத் தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால் குஞ்சரமு முன்னுடைய கொத்தளமுந் தானிடித்து வஞ்சகமா யுன்றனக்கு வலியகர்மஞ் சுற்றுமடா கர்ம வியாதிகளாய்க் கண்டமா லையுடனே வர்மம்வந்து சிக்குமடா மாநீசா நீகேளு தெய்வச் சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால் பொய்வகையால் கர்ம போகத்தால் நீமடிவாய் என்றுநா ராயணரும் ஏற்றபுத்தி சொல்லிடவே அன்றுஅந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான் மாயவரே நீர்கேளும் வாய்த்தசான் றோர்களைத்தான் ஆயரே நீரும் அபுருவமாய்ச் சொன்னீரே சாதிகட் கீழான சாணார்கள் தங்களுக்கு வீரியமா யித்தனையும் விவரித்துச் சொன்னீரே சாணார்க்கு வைத்த தலைவீத முள்ளஇறை - என் வாணா ளழிந்திடினும் மாற்றிவைக்கப் போறதில்லை என்சீவ னுள்ளளவும் ஏற்றசா ணான்தனக்கு வன்பான ஊழியங்கள் மாற்றிநான் வைப்பதில்லை நீர்தா னுமிந்த நிலைபேர்ந்து சாணாரின் ஊரா னதிலே உறைந்திருக்கப் போனாலும் கேட்பதில்லை சாணாரின் கேள்விநான் கேட்பதில்லை தாட்பதல்லால் சாணாரின் சங்கடங்கள் கேட்பதில்லை என்றந்த நீசன் இத்தனையு மாயருடன் தாவியு ரைக்கச் சாற்றுவா ரச்சுதரும் பாவி யுனது பவிசெல்லாந் தான்மாறி ஆவிக்கு நரகம் ஆவதற்கோ என்னோடே இந்த மொழியுரைத்தாய் ஏனடா மாநீசா உன்றனுட ஊருவிட்டு ஓடிப்போ வென்றனையே ஆனாலுஞ் சாணார்க்கு அடியும்பல ஊழியமும் மானாந்திர இறையும் மாற்றிவை யென்றுரைத்தார் அப்போது நீசன் அச்சுதரைத் தான்பார்த்து வெப்போடு கோப வெகுளியாய்த் தானுரைப்பான் மாலைகா லைநேரம் மாயவனே உன்றனக்குச் சீலமுள்ளப் பூசை செய்துவ ருவதற்கு நித்தமொரு நூறுபொன் நினக்குச் செலவுமுண்டே அத்தனையுங் கிட்டிடுமோ அவனிறைகள் தான்தடுத்தால் அல்லாம லென்றனக்கு ஆயிரத்தி நூறுபொன் எல்லாத் திருப்பதிக்கும் என்றனக்கும் வேணுமல்லோ என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்குப் பொன்பதி னாயிரந்தான் போடணுமே சம்பளங்கள் இப்பொன்னுக் கெல்லாம் யானெங்கே போவேனடா அப்பொன்னுக் கெல்லாம் அவனை யடித்தல்லவோ வேண்டித்தா னித்தனையும் விதானிக்க வேணுமல்லோ ஆண்டியுன் சொல்லை யான்கேட்க ஞாயமுண்டோ என்னோடு தானிருந்து இந்தமொழி சொன்னாயே உன்னோடு யென்றனக்கு உறவென்ன நீபோடா முன்னெல்லாம் நீதான் உதவியோ யென்றனக்கு இந்நிலத்தை விட்டு எங்கானா லும்போடா அதுக்கந்த நீசன் அடடா என்றிடவே பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிச் சொல்லுவார் பின்னும் சீவனம்போ லுள்ளபுத்தி பல்லுயிருக் கெல்லாம் படியளக்கு மாலோனும் இத்தனையும் வேண்டி என்றனக்குப் பூசையது நித்தமும்நீ செய்யெனவே நின்னோடு கேட்டேனோ பூசைசெய்தாய் நீயும் பிராமண நம்பூரிகட்குத் தேச மறியாதோ செப்பாதோ சாட்சியது ஏற்கா திருப்பதற்கு ஏற்ற அடையாளம் தெற்கே தலைவைத்துச் சென்றதுவுங் காணலையோ பின்னுமந்தப் பூசை புனக்கார மானதெல்லாம் பின்னுங் கடைச்சாதி புலச்சிகை யெச்சித்தீதான் அறியலையோ நான்தான் அமுதேற் றிருப்பதுதான் வெறிகொண்ட நீசா மேதினிகள் சொல்லாதோ என்றந்த மாலும் இத்தனையுஞ் சொல்லிடவே அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான் நான்தந்த தொன்றும் நாவில்வைக்க வில்லையென்றால் என்தொந் தமாக என்னோ டிருப்பதென்ன போபோ நீதானும் போகு மிடந்தனிலே நீபோ வெனவே நிகழ்த்தினான் மாயவரை அப்போது மாயன் அதிகக் கோபத்துடனே இப்போது நீசனைப்பார்த்(து) ஏதுரைப்பா ரம்மானை

அனந்தபுரம் விட்டுச் சுவாமி திருச்செந்தூர் ஏகல்

போறேன் நானுன்னுடைய புரத்தைவிட்டுச் செந்தூரில் வாறேன் நானுன்னை வதைக்கவொரு கோலமிட்டு எளியசா ணானெனவே எண்ணம்வைத் தென்றனையும் நளியாகப் பேசி நகைத்தாயே மாநீசா எளியோர் வலியோர் எவெர்க்கும்வெகு நன்மைசெய்து வெளியாக உன்றனக்கு விபரம்போ தித்தருளி நீயறியத் தர்மம் நீணிலத்தி லேநடத்திப் பேய்வெறியைக் கொன்று பேருலக மத்தனையும் நாடாள் வார்தமக்கு நான்பட்டமுஞ் சூட்டித் தாடாண்மை யான சத்தியமா யென்றனையும் ஒருபுத்தி யாகி உள்ளென்னைக் கொண்டோர்க்குப் புதுப்புத்தி யீந்து பூலோகம் ஆளவைப்பேன் வருவேன் நானென்று வருமுன் னறிவதற்கு நிருப மதுவெழுதி நீணிலத்தி லேயனுப்பி மரமறிய சீவசெந்து மலையு மிகவறிய திரமான வாயு சேடன் முதலறிய வருண னறிய மதியு மிகவறிய தருணம் வரும்போது சாணா ரிடம்வருவேன் அறிந்துபல சாதிமுதல் அன்பொன்றுக் குள்ளானால் பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார் என்று அந்தநீசனுக்கு எடுத்துரைத்து எம்பெருமான் அன்று திருவனந்தம் அவனிவிட் டெழுந்தருளி நீசனுட கோட்டை நெடுநெரெனத் தானிடிய தேசமெல்லாம் நித்திரா தேவி யிருள்மூட ஏழுமேக முங்கூடி இராச்சியத்தைத் தான்மூடி வெளுவே ளெனமாரி வெண்டூளி போல்தொளிய வாயு வதுதிரண்டு வையகத்தைத் தானரிக்க வீசுவீ சென்று உலாவி யதுவீச வாரியது கோபமுற்று வையகத்தை தான்முழுங்க மூரிபோல் மூச்செறிந்து மொகுமொகென கோபமுற்று மாநீச னிட்டிருந்த வாய்த்தகற் கோட்டையெல்லாம் தேனியீன் கூடதுபோல் செகலிடிந்த தம்மானை கோட்டைத் தளமிடிந்து குஞ்சரங்கள் தானிறந்து பூட்டை மிகப்பூட்டிப் போட்டிருந்த காவலெல்லாம் உழைந்து மிகவெருவி ஓகோவென வுளறி கழைந்து அவரோடக் கைமறந்து நின்றனனே சிப்பாயி யோட சுபேதாருந் தானோட அப்பப்பா வென்று அந்நீசன் தானோட பிராமண நம்பூரி புலம்பிமிகத் தானழுது ஸ்ரீராமனையுங் காணலையே தேசமிரு ளாகுதல்லோ அய்யோ கெடுத்தானே அரசன்நம்மை யென்றுசொல்லி மெய்யோடே குத்தி விழுந்தழுவார் வேதியர்கள் மாய னனந்த புரத்திலே வாழுமட்டும் நீசனுட சட்டம் நின்றுதல்லோ ராச்சியத்தில் ஸ்ரீபத்ம நாபரிந்தச் சீமைவிட்டுப் போனவுடன் பிறிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம் என்று பலபேர்கள் இப்படியே சொல்லிமிக அன்று புலம்பி அழுவார் சிலபேர்கள் நம்பூரி வேதியர்கள் நாம்கெட்டோ மென்றுசொல்லி வெம்பிடா வண்ணம் வெளியிலுரை யாதிருந்தார் இப்படியே பூலோகம் எல்லாந் திணுக்கிடவே அப்படியே மாயவரும் ஆனதெய் வாருடனே இன்றுமுதல் யானிருக்கும் இடங்களிலே சாதியெல்லாம் ஒன்றுபோ லென்னிடத்தில் ஒத்துமிக வாருமென்று சொல்லித் திருச்சம்பதி சென்றிடவே தானடக்கப் பல்லுயிரும் வந்து படிந்ததுகே ளன்போரே திருச்சம் பதியதிலே சென்றவர் தானிருக்கப் பொருச்சமது பார்த்தான் புகழுமொரு நம்பூரி அப்போது சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம் இப்போது சும்மா இங்குவர லாமெனவே அன்றந்த சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம் இப்போது சும்மா இங்குவர லாமெனவே அன்றந்த சாஸ்திரத்தில் அதுகண்டு மல்லாமல் நன்றந்தச் சாணார்கள் நல்லதே ருண்டுபண்ணித் தொட்டுக் கொடுத்துத் தேர்நடத்த வேணுமென்றும் மட்டும் வெகுதானம் வலங்கையுயர் கொண்டோர்க்குக் கொடுக்கவே ணுமென்று கூறினார் சாஸ்திரத்தை வெடுக்காக அந்த விபரிப்பெல் லாம்நடத்தி வாரிக்கரை யாண்டியென வாய்த்தநா மம்விளங்க நேரியர்கள் சூழ நெடியோ னங்கேயிருந்தார்

அகிலம் ஆறு

divider
திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்க விருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன் வையங்க ளெல்லாம் வரம்பழித்து மாநீசன் நெய்யதியச் சான்றோர்கள் நெறியெல் லாங்குலைத்துப் பேரழித்துத் தர்மம் பெருமையெல்லாந் தானழித்தான் மார்வரை யேகூடும் மைப்புரசு சஞ்சுவம்போல் தான மழித்துச் சான்றோரின் கட்டழித்து ஈனகுலச் சாதிகட்கு ஈடாக்கித் தான்கொடுத்துப் பள்பறைய நீசனுக்குப் பவளத்தார் தான்கொடுத்துக் கள்பறைய சாதிகட்குக் காலமிகக் கொடுத்துச் சாதி வரம்பு தானழித்து மாநீசன் மூதி முன்னீசன் மும்முடி யுந்தவிர்த்து நவ்வா முடியெனவே நாடிவன்நா டாகவேதான் எவ்வோ ரறிய இவன்தேசந் தானாக்கி ஆளாகமுன் னீசனையும் அவனைநா டாளவைத்துப் பாழாக நீசன் பழையசட்ட முமாற்றி நீசன் நவ்வாவின் நினைவுபோல் சட்டமிட்டுத் தேசமெல்லாம் நவ்வா செய்தானே சட்டமது மானம் வரம்பு மகிமைகெட்டுச் சான்றோர்கள் ஈன மடைந்து இருக்கின்ற வேளையிலே

தேவர் முறையம்

தேவர்க ளெல்லாம் திருச்செந்தூர் சென்றேகி மூவரொரு மித்தனுக்கு முறையிட்டா ரம்மானை ஆதி முதற்பொருளே அய்யாநா ராயணரே சோதியே யெங்கள் துயரமெல்லாந் தீருமையா இத்தனை நாளும் இருந்தோமொரு மானுவமாய்க் கொற்றவரே நாங்களினிக் குடியிருக்கப் போகாது சாதிக்கட்டை யெல்லாம் தலையழித்து மாநீசன் மேதினிக ளெல்லாம் மேவினா னையாவே தான மழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின் மான மழிந்தாச்சே வரம்பெல்லாங் கெட்டாச்சே பூப்பியமுங் குலைத்துப் புரசியோ டொப்பமிட்டுக் காப்பிலிய னேதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள் இத்தனை நாளும் யாங்கள்முறை யிட்டதுபோல் புத்தி தனில்வைத்தால் பொறுக்கஇனிக் கூடாதே தம்பி சான்றோர்கள் சங்கடத்தைக் கேளாமல் சம்பி முகம்வாடித் தலைகவிழ்ந் திருப்பதென்ன மக்களு டதுயரம் மனதிரங்கிப் பாராமல் பக்கமாய் நீரும் பாரா திருப்பதென்ன சான்றோர் படுந்துயரம் தானிரங்கிப் பாராமல் ஆண்டோரே நீரும் அயர்ந்தே யிருப்பதென்ன இதெல்லா மெங்களைநீர் ஏற்றசான் றோர்பிறப்பாய் முதலெல்லாஞ் சான்றோருள் முடிந்துவைத்த கண்ணியினால் பாவியந் தநீசன் படுத்துந் துயரமெல்லாம் தாவிக் கயிலை சத்தி சிவன்வரைக்கும் பொறுக்கமிகக் கூடலையே புண்ணிய அய்யாவே மறுக்க மதைப்பாரும் மனதிரங்கி யெங்களுக்கு உகத்துக் குகங்கள் ஊழியங்கள் செய்ததெல்லாம் அகற்றி யருள்தந்த அச்சுதரும் நீரல்லவோ மக்களா யெங்களையும் வலங்கைவுய்யோர் தாமாக ஒக்குறவு கெட்டோன் உலகில் படைத்திருந்தால் இத்தனை பாடும் எங்களுக் கென்றோதான் புத்திரரா யெங்களையும் பூமிதனில் பெற்றுவைத்து நாங்கள் படும்பாடு நாரணரே கண்டிலையோ தாங்களுக்கு நெஞ்சம் சற்று மிரங்கலையோ இப்படியே தேவர் எல்லோரு முறையமிட அப்படியே முறையமிட்டு அவரங்கே நிற்கையிலே அம்மை உமை இரங்கல் நல்ல உமைதிருவும் நன்றா யெழுந்தருளி வல்ல பொருளான வாய்த்தநா ராயணரின் அடியி லவள்வீழ்ந்து அழுதுகரைந் தேதுரைப்பாள் முடியுமடி யில்லா முதலே முதற்பொருளே அரிஹரிநா ராயணரே அண்ணரே அச்சுதரே கரிஹரிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே இலச்சைகெட்ட பாவி ஏமாளிக் கலியதினால் அலச்சல்செய் தெங்களையும் அகற்றிவைத்துப் போனீரோ பாவிக் கலியனுட பழிசாபச் சூட்சியினால் பூவில் மண்டூகம் பொசித்துதே காரணரே கலியனுட ஏதுவினால் கபாலியும் மைத்துனரும் சலிவாகி மேனி சடல மிகத்திமிர்த்து இருள்மூடிக் கண்கவிழ்ந்து இருக்கிறா ரீசுரரும் உருவு சுவடில்லை உம்முடைய மைத்துனரும் நின்னயமில் லாக்கலியன் நீசன் பிறந்ததினால் என்னோடே பேச்சு இல்லையும் மைத்துனரும் வானுறவு கெட்ட மாநீசன்வந்த நாள்முதலாய் நானும்பர மேசுரரும் நலநஷ்டமுந் தெரியோம் பேசிப் பழக்கமிட்டுப் பெருத்தநா ளுண்டுமண்ணே தோசிக் கலியனுட சூட்சியினால் நாங்கள்படும் பாட்டைவந்து பாராமல் பரிகாசம் பார்ப்பதென்ன நாட்டைக் கெடுத்தானே நன்றிகெட்ட மாநீசன் அல்லாமல் நம்முடைய அருமைச்சான் றோர்கள்படும் பொல்லாங்கை யெல்லாம் போய்ப்பார்க்க எழுந்தருளும் வரமீறியக் கலியன் மாய்கையி னேதுவினால் பிரமன் பிறப்புப் பிசகித் தலைமாறி முண்டம்போல் பிறப்பு முகங்கண்ணில் லாப்பிறவி பிண்டப் பிறவி பேருறுப் பில்லாப்பிறவி தலையுடம் பில்லாத சடலப் பிறவியைப்போல் நிலைதவறி வேதா நினைவுதடு மாறினனே சீவன் கொடுக்கும் சிவனுக் கிருநினைவாய்ப் பாவக் குணவுயிராய்ப் பகர்ந்தார் சிவனாரும் படியளக்க நீரும் பண்புற் றிருக்காமல் குடிகேடு மாச்சே குடிக்கக் கிடையாமல் இத்தனை யுங்கலியன் ஏதுவால் வம்பாச்சே அத்தனையும் நீர்தான் அறியாதவர் போலே எங்கள்மேல் பகைபோல் இருப்பதென்ன அச்சுதரே சங்கடங்க ளெல்லாம் தான்சொல்லக் கூடாது கயிலை சிவனார் காணாம லும்மையுந்தான் அகிலமதைப் பாராமல் அயர்ந்திருக்கி றாரெனவே ஆனதா லென்னுடைய அண்ணரே அங்கேகி மானமுள்ள புத்தியும் மைத்துனர்க்குச் சொல்வாரும் என்றுமையா ளிப்படியே இன்பமாய்ச் சொல்லிடவே அன்று பெருமாள் அவள்முகம்பார்த் தேதுரைப்பார் சிவனாரும் நீயும் தேசமதி லில்லாட்டால் எவனுக்கு மலைச்சல் இல்லையே ராச்சியத்தில் உங்களால் யானும் உகத்துக் குகங்கிடந்து சங்கடங்க ளுற்றுத் தவிக்கத் தலைவிதிதான் நீங்களில்லை யானால் எனக்கும் அலைச்சலில்லை ஏனுங்க ளோடே இப்பாடு யான்படத்தான் அயோத்தியா பட்டணத்தில் அரசுண்டு மென்றனக்குக் கையேற்று வந்த கன்னி திருவுமுண்டு ஏனிந்தப் பாடு யான்படக் காரணந்தான் மானழுதாற் போலே மறுகுவாள் லட்சுமியும் கைப்பிடித்த நாள்முதலாய்க் கலந்துவிளை யாடறியேன் மெய்ப்பிடித்த மான மெல்லியரு மங்கிருக்க இரப்பனைப் போல்லோகம் எல்லாந் திரிந்தலையப் பரப்பிரம னம்மைப் படைத்ததுமி தற்கோவென எல்லையில்லாப் பாடு யான்பட்ட துபோதும் நல்லகுலச் சான்றோரை நான்பெற்று வைத்தேனே வைத்த தெல்லோரும் மனதறியப் பார்த்திருக்க பொய்த்தலைவ னீசனையும் பிறவிசெய்ய ஞாயமுண்டோ நீசனுட கையதிலே நின்மக்கள் தங்களையும் பாசக் கயிறிட்டுப் பந்தடிக்கச் செய்தாரே தொட்டாலும் நீசம் தொடருமதைக் கண்டாலும் வெட்டா வெளியாய் விரட்டிப் பிடிக்குமல்லோ காதிலதைக் கேட்டாலும் கர்மம்வந்து சிக்குமல்லோ ஆரிந்த நீசனையும் அழிக்கவகை யாரறிவார் மாய்கை நினைவொழிய மறுநினைவு வாராதே மோசக் கலியனையும் முடிக்கவகை யாரறிவார் வாளா யுதத்தாலே மாளானே மாகலியன் தூளாம் பிறவி சொல்லொணா வல்லமைதான் முப்பிறவி யாறும் முடித்த வலுமையெல்லாம் இப்பிறவி தன்னில் எட்டிலொன்று பாரமில்லை உகத்துக் குகம்பிறந்து ஓடித்திரிந் தவனென்றே அகத்துக்கொஞ்சம் வைய்யாமல் அவர்மூப்பாய்ச் செய்தாரே ஆனதா லின்னமினி அங்குவர வேணுமோகாண் தானம்வைத்துப் பாராமல் சங்கை யழித்தாரே எங்கே யானாலும் இறந்திடுவே னானிதற்குச் சங்கையுள்ள சாணார்க்குத் தங்குமிடம் வேறிலையே தாய்தந்தை யில்லாமல் தயங்குகின்ற பிள்ளையைப்போல் மாயக் கலியனினால் வாடுவரே சான்றோர்கள் தகப்பனில்லாப் பிள்ளை சாணார்க ளென்றுசொல்லி அகப்படுத்திச் சான்றோரை அடிப்பானே மாநீசன் 140 தாயுந் தவமிருந்து சடைப்பாளெனைக் காணாமல் ஆயுங் கலைதெரிந்த ஆயிளையும் வாடுவளே இப்படியே ஞாயம் இருப்பதா லென்றனக்கு அப்படியே வேறு வழியல்லவே யானதினால் எங்கினிப் போவேன் என்றெண்ணுது என்மனது உங்களுட ஊருக்கு ஒண்ணுதலே போநீயெனக் கோபத்தால் தங்கையுடன் கூறினா ரித்தனையும் வேகத்தா லம்மை விழியிட் டழுதனளே கயிலைக்கு நீர்தான் கால்வைக்கா தேயிருந்தால் அகிலம தொன்றாய் அழியு மொருநொடியில் நல்லகுலச் சான்றோர் நாடுங் கலியனினால் தொல்லைமிகப் பட்டுத் துயருற்று வாடுவரே நானுமென்றன் ஈசுரரும் நல்ல கயிலையிலே மானுங் கலைபோல் மறுகி யிருப்போமே கயிலை முனிதேவர் கட்டழிந்து வாடுவரே மயிலனைய ஈசர்சொல்லை மறந்து மிருந்தாரே கன்னிப்பெண் ணார்களென் கற்பனையைத் தான்மறந்து உன்னுதலாய்ப் பெண்கள் ஒருவர்க்கோர் மூப்பாச்சே ஐயோ கயிலை அங்கே வரம்பழிந்து பையரவம் பூணும் பரமன்மௌ னமாச்சே அண்ணரே கோவே அடியாள் தனக்கிரங்கி எண்ணமில்லாக் கயிலைக்கு எழுந்தருள வேணுமையா என்று அறம்வளர்த்தாள் இறங்கியண்ணர் கால்தனையும் சென்று பிடித்துச் செய்யத்தாள் தான்வணங்கி மனதிரங்கி எம்பெருமாள் மார்போடு தங்கையரைத் தனதில் பிரியமுற்றுத் தங்கையரோ டேதுரைப்பார்

திருமால் திருக்கயிலை ஏகல்

உன்னோடு பிறந்த ஊழிவிதி யானதினால் நன்னாடோ டேவாழ நமக்குவிதி யில்லையே உன்றனக் காகவல்லோ ஊருக்கூரே திரிந்து சந்தோச மற்று சடைக்க விதியாச்சே என்று பெருமாள் ஏற்ற பிறப்போடு இன்று கயிலைக்கு எழுந்தருள வேணுமென்று தேவர் முனிவரோடு திருக்கனனி மாரோடு மூவருட நடுவன் மகமலர்ந் தேகூடி நடக்கவே ணுமெனவே நளினமுற் றெம்பெருமாள் கடற்கரையில் வந்து காலமே தெனப்பார்த்தார் இந்தச் சொரூபமதாய் இங்குவிட் டெழுந்தருளிச் சிந்தர் குடியிருக்கும் சீமையி லேகுமுன்னே கலிமூழ்கி நாமள் கரையேறப் போறதில்லை பொலிவாக வேசம் புதுப்பிக்க வேணுமென்று என்ன சொரூபம் எடுப்போம்நா மென்றுசொல்லி அன்னப் பெருமாள் ஆலோ சனையாகி மேலெல்லாம் வெண்ணீற்றை மிகஅணிந் தெம்பெருமாள் பாலொக்கும் நெஞ்சம் பரம னொருநினைவாய் மாமோக ஆசை மயக்க வெறியறுத்துத் தாமோ தரனார் சடைக்கோல மேபுனைந்து காலில் சிவநினைவைப் கழராமல் தானிறைத்து மார்பிலைந்து பூமணியை வகிர்ந்தார வேடமிட்டுக் கண்ணில் மனோன்மணியைக் கண்ணாடி யாய்ப்பதித்து எண்ணரிய தங்கை இன்பமுட னேவளர்த்த முப்பத்தி ரண்டறத்தை உடலெல்லா மேபொதிந்து செப்பமுடன் கந்தை செய்யவெண் கலையணிந்து தண்டரள மானத் தடியொன்று கைப்பிடித்து அண்டர்களும் போற்றி அரகரா என்றுவர தேவர்களுங் கூடிச் சிவசிவா சிவனேயென்று தாவமுள்ள தேவரெல்லாம் தாரமி டேத்திவர அம்மை உமையாளும் அவளுஞ் சடைவிரித்துச் செம்மையுள்ள மாதும் சிவசிவா என்றேத்தி எல்லோ ருடனே எம்பெருமாள் தானடந்து வல்லோர் புகழும் வாழ்கயிலை வந்தனராம் கயிலை தனில்வரவே காரிருளுந் தான்மறைய மயிலையொத்த ஈசர் மாயவரைக் கண்டாவிச் சந்ததியைக் கண்டு தாயாவல் கொண்டதுபோல் வந்தந்த ஈசுரரும் மார்போ டுறவணைத்து இத்தனை நாளும் யானும்மைக் காணாமல் புத்திரனுந் தாயைப் போகவிட்டாற் போலிருந்தேன் மாரி காணாத வாய்த்த பயிர்போலும் ஏரி காணாத ஏற்றநீர் போலிருந்தேன் இனம்பிரிந்த மான்போல் இருந்தே னுமைத்தேடித் துணையில்லார் போலே துணையற்று நானிருந்தேன் என்று மகாமாலை எடுத்தாவி ஈசுரரும் சென்றாவிக் கொண்டு சிணுங்கி யழுதுசொல்வார் இணையும் புறாவதுபோல் இருந்தோமே மைத்துனரே துணையு மெனைமறந்து தூரநீர் போனதென்ன என்னைவிட்டு நீரும் எழுந்தருளு மன்றுமுதல் வன்ன உமையாளின் வடிவை மிகஅறியேன் துணையிழந்த அன்றிலைப்போல் தினமு முமைத்தேடிக் கணவனில்லாப் பெண்போல் கலங்கினேன் காரணரே உயிர்த்தோ ழமைபோல் உறவுகொண்ட நாரணரே மெய்த்தோ ழமையை விட்டுப் பிரிந்தமுதல் பிரிந்து மலைத்தேன் பச்சை நிறமாலே சரிந்துபள்ளி கொண்டு சதாவருட மாச்சுதல்லலோ இத்தனைநாளும் என்னைமிகப் பாராமல் மத்திப மந்திரியே மறந்தென்னை வைத்ததென்ன கயிலைக்கு மென்றனக்கும் கட்டான மந்திரிதான் அகில மீரேழ்க்கும் அடக்கமுள்ள மந்திரிதான் நீயல்லாமல் வேறுளதோ நெடிய திருமாலே தானீ தமான சர்வபர நாரணரே இந்த விதமாய் இகபர விதத்தோடும் உந்தன் தனைப்பெறவே உயர்ந்ததவஞ் செய்தனல்லோ அப்படியே நீரும் ஆதிநா ராயணராய் முப்படியே வந்து உருவெடுத்த மாயவரே கயிலைத் தேவாதிகளும் கண்ணான மாதிருவும் ஒயிலான மாமறையோர் உற்ற இருஷிகளும் கின்னரர்கள் வேத கிம்புருடர் கேதாரர் மன்னர் முனிவர்களும் மறையும்பல சாஸ்திரமும் வேதாவும் நந்தி விதரூபச் சித்தர்களும் நாதாந்த வேத நல்ல ரிஷிமாரும் இப்படியே ஓர்வசனம் அவர்களோ டேகேட்டுக் கல்லை வலித்திழுத்துக் காலில்மிகப் போட்டவர்போல் சொல்லை மிகக்கேட்டுச் சுமந்தேன் மிகுபாரம் எல்லா விதப்பாடும் யான்பட்ட துபோதும் வல்லவனே யுன்னுடைய வாக்கைக்கே ளாதபடிச் செய்த விதத்தாலே செப்புதற்கு நாணமுண்டு மெய்யிசையு மாலே மெத்தகோ பிக்கரிது எல்லா முமது இச்சையது போல்நடத்தும் சொல்லொன்றுக் குள்ளே சூட்டிநீ ராளுமென்று மாலுக்கு மனது மகிழ்ச்சை வரும்படிக்குப் பாலுக்கு மோரான் பகர்ந்தார்கா ணம்மானை அப்போது அச்சுதரும் அவரேது சொல்லலுற்றார் எப்போது முமக்கு இப்படியே யுள்ளமுறை நானொருவன் வேடனைப்போல் நாட்டில் திரிந்தலைய ஏனோகா ணுங்களுக்கு இல்லையே சங்கடங்கள் முன்னுதித்தப் பாவி முழுநீசக் குறோணியினால் பின்னுந்துரி யோதனனாய்ப் பிறந்தவன் மாளும்வரை உகமா றானதிலும் உதித்தக்குறோ ணியுயிரைப் பகையாக்கிக் கொல்ல பட்டபா டெத்தனைகாண் யான்மிகப் பட்டபாடு ஆரும் படவரிது தான்பட்ட தெல்லாம் தான்போது மென்றுசொல்லி இனிமேல் பகைதான் இல்லாமல் செய்வதற்கு மனுவாய்ப் பிறக்க மக்களே ழுபேரை சேர்த்தெடுத்து விந்தில் சேர்ந்துசெங் காவுதன்னில் சார்ந்து விளையாடி தான்பெற்ற பாலருக்கு எல்லோருங் கூடி ஏற்றதிரு நாமமிட்டு வல்லோராய்ப் பூமிதனில் வாழுமென்று வைத்தோமே அலுவ லொழிந்ததென்றும் அலைச்சல்மிக இல்லையென்றும் மெலிவெல்லாந் தீர்ந்து மேவிஸ்ரீ ரங்கமதில் இனிதிருக்கும் போது என்னை நினையாமல் மனிதனையும் பூமியிலே வகுத்ததென்ன சொல்லுமென்றார் ஆறு யுகமதிலும் அதிகபலக் காரர்களாய் வீறுடனே பிறவி விதவிதமாய்ச் செய்தீரே முன்பிறந்த குறோணி முழுங்கினான் கயிலைமுதல் வன்பிறவிச் சூரனைத்தான் வதைக்கவே றாருமுண்டோ இரண்டாம் யுகத்தில் நன்றிகெட்ட மாபாவி குண்டோம சாலியனாய் குதித்தான் மகாபாவி வானலோ கமுழுங்க வாய்விட் டலறினதால் கோனகிரி வேந்தே கொன்றதுவே றாருமுண்டோ மூன்றாம் யுகத்தில் முளைத்தானே யப்பாவி வான்றான மல்லோசி வாகனென்ற மாபாவி தேவரையுந் தெய்வ ஸ்திரிகளையு மூவரையும் ஏவலது கொண்டு இடுக்கமது செய்தனனே முறையமது ஆற்றாமல் ஓடிப்போ வென்றுரைத்தீர் சிறைப்பிடித்தப் பாவிகளைச் செயித்ததுவே றாருமுண்டோ நாலாம் யுகத்தில் நன்றிகெட்டச் சூரபற்பன் ஆலா விருச்சம் அதுபோல் கிளையுடனே நாட்ட முடனே நாடும் படையோடு கோட்டை யதிட்டுக் கொடியமா பாவியனாய்க் கேட்ட வரங்களெல்லாம் கெட்டியாய் நீர்கொடுத்துத் தேட்டமுடன் கயிலை சீமையது வுங்கொடுத்து இருக்க இடமற்று எழுந்திருந்து நீரோடி உருக்கமுடன் நானிருந்த உவரியி லேகிவந்தீர் தேவர்களைப் பாவி செய்த இடுக்கமதால் மூவர்முத லும்மிடத்தில் முறையிட்ட ஏதுவினால் என்னை வருத்தி ஏற்ற மொழிகள்சொல்லிச் சென்றவனைக் கொல்லுமென்று செய்திசொல்லி விட்டீரே விட்டவுட னவனோடே வெகுநாளா யுத்தமிட்டுப் பட்டபா டெல்லாம் பகர எளிதாமோ உயுத்தமிட் டவனை ஒக்கத் தரமறுத்துச் செயித்தேன் பின்னவனும் செத்த யுகமதிலே இரணிய சூரனென்று எனக்கெதிரி யாய்ப்பிறந்து தரணியி லவன்பேரைச் சாற்றி வழங்கலுற்றான் பின்னு மவன்றனக்குப் பிள்ளையாய் நான்பிறந்து கொன்று தரமறுத்தேன் குதித்ததுகாண் மற்றயுகம் பத்துத் தலையோடு பாவியவன் பிறந்து உற்றுஅவன் கேட்டவரம் ஒக்கநீர் தான்கொடுத்து அருகில்மிக வாழ்ந்திருந்த ஆயிளையை நீர்கொடுத்துக் குருவிருந்த சோதி குன்றையும் நீர்கொடுத்துப் பாவியவன் மூன்று பாரடக்கி ஆண்டனனே தேவியும் நானும் தேசமதி லேபிறந்து அவனை யழித்து அந்தயுக முங்கருக்கிச் சிவனேயுன் பாரிதனைச் சிறைமீட்டித் தந்ததாரு சதியாந்துரி யோதனனாய்த் தான்திரும்ப வெபிறந்து மதியாம லென்றனையும் மறையுமிக நம்பாமல் அன்போரை யெல்லாம் அகப்படுத்தி மாபாவி வம்பான கள்ளன் மாய்மாலஞ் செய்ததினால் கொன்றவகை சொல்லக் கூடுமோ காரணரே என்னென்ன பாடு யான்பட்ட மாய்மாலம் கஞ்சனென்ற பாவிக்குக் கடியவரம் நீர்கொடுத்து வஞ்சகன்தான் செய்த மாய்மாலம் மெத்தவுண்டு அவனை வதைக்குமுன்னே அடியெத்த னைகளுண்டு சிவனே யுமக்குச் சூடெண்ணஞ் சற்றுமில்லை இருப்பி லிருந்துகொண்டு எனக்கலைச்சல் செய்வதுண்டு எதிர்ப்பவரார் சொல்லும் இந்தமாய் மாலமொடு கலியென்ற சொல்லு காதில்மிகக் கேட்டதுண்டால் சலிவாகி மேனி சடலமிரு ளாகுமல்லோ மெய்ப்பேச வேணுமென்று மேவி யிருந்தாலும் பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென வாளா யுதத்தாலே வாய்த்தகணை யம்பாலே பாழாக்க வென்றாலும் படாதே மகாலிதான் மற்றப் பிறவி யாக வகுத்தாலும் இத்தனை யெண்ணம் இல்லையே யென்றனக்கு அய்யோயென் மக்கள் அதற்குள்ளாகப் பட்டாரே மெய்யோ யினிமக்கள் விளங்குவ தெக்காலம் தீண்டிப் பிடித்தானே செத்தகலி மாய்மாலன் வீண்டிடறு தீர்ந்துமக்கள் விளங்குவது எக்காலம் ஆறு பிறவி அழித்ததுவு மென்றனக்கு நீறுபோ லெண்ணுதுகாண் நிற்கலியைப் பார்க்கையிலே என்ன விதத்தால் இவனை யழிப்போமென்று வன்னச் சிவனாரே மனதுவேறே ண்ணுதுகாண் நாடாச்சு தேசம் நகரியுங்கள் பாடாச்சு வீடாச்சு குண்டம் மேதினிக ளங்காச்சு தேச வழிபோறேன் செல்லாது இங்கேதான் மாய்கை வலையைவிட்டு மறையவே போறேன்காண் பலபேர்க ளாட்டும் பாம்புபோ லென்னையுந்தான் அலைவிதமா யென்னை அழைத்ததென்ன சொல்லுமென்றார் அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தான்பார்த்து இப்போது நானும் இயம்புகிறேன் கேளுமென்று முற்பிறவி துயரம் எல்லாம் வரும்படிக்குப் பண்டுவொரு சாபம் பகர்ந்தேன்நான் மைத்துனரே அன்றுசா பம்பகர்ந்த அதுகேட்டுக் கொண்டருளும் குறோணி யொருசூரக் கொடும்பாவி தான்பிறந்து சுறோணித மாயவரே தொல்புவியெல் லாமுழுங்கி என்னோடு ஈஸ்வரியாள் எல்லோரை யும்விழுங்க நின்னோடு மாயவரே நீயொருவன் தப்பிமிக என்னை நினைத்துத்தவம் இருந்தாய்நீ கீழுலகில் தென்னவனே நீயும் செய்தத் தவமதினால் எழுந்தருளி நானும் என்னவரம் வேணுமென்றேன் குளிர்ந்த குணமான கோவேந்தே நீமாறி கேட்டாயே சூரனுடல் கீறித்துண் டாறாக்கித் தாட்டாண்மை யாகத் தரணிதனில் விட்டெறிய வரந்தாரு மென்று வாகாகக் கேட்டவுடன் தரந்தரமே துண்டம் தரணிக்கெல் லாம்பிறந்து மாற்றா னாயுனக்கு வருமாறு யுகம்வரைக்கும் சீற்றத் துடனே செடமெடுக்கு மென்றுசொல்லித் தந்த வரத்தின் தன்மையா லிந்தமுறை எந்தன்மேல் கோபம் ஏன்சொல்லப் போறீர்காண் என்றந் தஈசர் இப்படியே சொன்னவுடன் அன்று மகாமால் ஆகங் களிகூர்ந்து ஆனாலும் நான்கேட்ட அவ்வரங்க ளானாலும் மானாபர ஞாய வரம்பழித்துப் போட்டீரே இதற்குமுன் னேதாலும் என்னையறி யாதவண்ணம் ஒதுக்கிலிருந் தோர்வளமை உங்களால் செய்ததுண்டோ மும்முறைபோ லென்னை உவந்துக் கெணியாமல் அம்முறையை நீரும் அழித்ததேன் ஈசுரரே என்னைக் கெணியாமல் இக்கலியைச் செய்ததினால் நன்னமிர்த ஈசுரரே நம்மாலே கூடாது அழிப்பதுவுங் கலியை அங்கல்லால் கூடாது விழிப்பதென்ன நம்மாலே விசாரமிடக் கூடாது நம்மாலே யொன்றும் நடவாது ஈசுரரே சும்மாவென் னோடிருந்து சோலிபண்ண வேண்டாங்காண் உகத்துக் குகங்கள் ஓடித்திரிந் தலைந்து மகத்துவமாய்ச் சந்து சதைமுறிந்து நோகுதையா தூங்கி விழியாமல் திமிர்ப்போல் சரீரமது ஏங்கிமிக வாடுதப்பா என்திருவைக் காணாமல் பாவிகள் பண்ணிவிட்ட பாட்டைமிக எண்ணுகையில் ஆவி மிகவாடி அங்கமெல்லாஞ் சோருதையா அந்தமுழுப் பாவிகளில் அதிகமுழுப் பாவியிவன் சந்ததிக்குத் தாய்தகப்பன் தாழ்ந்துநின் றேவல்செய்தால் கொடியவனோ பாவி கொஞ்சமிஞ்ச மோயிவன்தான் முடியுமோ பாவி யுத்தமிடச் சென்றதுண்டால் தன்ம மறியாத சண்டித்தடி மூடர்கையில் நம்மைப் பிடித்தங்கே நகட்டிவிட வேண்டாங்காண் பட்ட அடிவூறப் படுத்திருக்கப் போறேனான் ஒட்டொழிய என்னை ஒடுக்கிவிட வேண்டாங்காண் என்றாதி நாரா யணர்தானு மிப்படியே அன்றாதி நாதன் அவரோ டிதுவுரைக்கச் சிவனு மிகவயர்ந்து செப்புவார் மாயருடன் புவன மதற்குடைய பொன்னே யென்மாதவமே இப்படித்தான் மைத்துனரே ஈதுரைத்தீ ரானாக்கால் எப்படித்தா னானும் ஏகம தாளுவது சுவரல்லோ மைத்துனரே சித்திரம் நாங்களல்லோ கவரல்லோ நாங்கள் கயமல்லோ மைத்துனரே மாயனல்லோ எங்களுக்கு மலையல்லோ மைத்துனரே ஆயனல்லோ எங்களுக்கு அணையல்லோ மைத்துனரே கொப்பல்லோ நாங்கள் குருவல்லோ மைத்துனரே செப்பல்லோ மைத்துனரே சிமிள்கூடு நாங்களெல்லாம் நீர்தானு மிப்படியே நெகிழ்ந்தமொழி சொன்னதுண்டால் ஆர்தானு மெங்களுக்கு அணைவுமொழி சொல்லுவது மூடிப்படிக் குலுங்க முயங்காதோ கொப்பதெல்லாம் கூடிப்படிக் குலுங்க குலையாதோ சீவனது தேவர்முனி சாஸ்திரிகள் சிறுபுத்தி யைக்கேட்டு மூவருன்னைப் பாராமல் முனிந்துசெய்த ஞாயமெல்லாம் பொறுத்தருளு மென்னுடைய புண்ணிய மைத்துனரே மறுத்துரைத்தால் நானுமினி வகுத்துரைக்க ஞாயமில்லை எல்லாம் பொறுத்து இனியுமக்குத் தேர்ந்தபடிச் சொல்லொன் றுக்குள்ளே செலுத்தியர சாளுமென்று ஈசுரனார் சொல்ல எம்பெருமா ளேதுசொல்வார் வீசுபுக ழீசுரரே விரித்துரைக்க நீர்கேளும் என்னையுமோ கீழுலகில் இறந்துகிடந் தாரெனவே சொன்னவரை யெல்லாம் சுறுக்காகத் தானழையும் என்றந்த மாயவனார் இப்படியே சொன்னவுடன் அன்றந்த ஈசுரனார் அழைத்தா ரவர்களையும் உடனேதான் தேவர்முனி ஒக்கப் பயமடைந்து தடதடென ஓடிவந்து தாழ்ந்துநமஸ் காரமிட்டு அப்போது மாயவனார் அவர்கள் தமைப்பார்த்துச் செப்புகிறா ரையா திருக்கண் பொறிபறக்கக் கண்கள் சிவந்து கருமேனி தான்விறைத்து விண்க ளதிர வெடுவெடெனக் கோபமுற்றுத் தேவர் திணுக்கிடவே தெய்வமுனி தான்பதற மூவர் திணுக்கிடவே உரைக்கிறா ரெம்பெருமாள் மண்திண் ணெனவே மலைகள் பொடிபடவே திண்திண் ணெனவே தேவர் மிகப்பதறச் சிவனுங் கிடுகிடெனச் சிவனுமை யும்பதற நமனும் பதற நாரா யணருரைப்பார் தேவரே வானவரே தெய்வமுனி சாஸ்திரியே மூவரே நானும் ஒளித்ததெங்கே சொல்லுமென்றார் ஆளுக்கொரு மூப்பாய் அரியிங்கே யில்லையென்று கோளுரைத்த ரீசர் குருமுன்னே நீங்களெல்லாம் சாத்திரத்தைப் பார்த்துச் சரியாகச் சொன்னதிட்டச் சூத்திரத்தை யெல்லாம் சொல்லுமென்றா ரெம்பெருமாள் சொல்லநா வில்லாமல் சோர்ந்துமிகத் தேவரெல்லாம் பல்வாய் சுண்டொல்கிப் பதைபதைத்து நின்றனரே கண்தலை கவிழ்ந்து கால்பேர்த்து வைக்காமல் விண்கவிழ்ந்த யோகமுனி வெட்கிநின்றா ரன்போரே நின்ற நிலையறிந்து நெடியபர மேசுரரும் அன்றெந் தனோடே அறம்பாடிச் சொன்னதெல்லாம் இன்றெங்கே போச்சுதுகாண் இரண்டும்மிகச் சொல்லாமல் நின்றிங்கே நீங்கள் நினைவயர்ந்து நிற்பதென்ன பேச்சுப்பே சுங்கிளிக்குப் பின்பூனை நாட்டமுற்றால் சீச்சுக்கீச் சென்றுகிளி கீழ்ப்பதுங்க வேண்டியதேன் அன்றுநீர் சொன்னமொழி அயர்த்துமிகப் போனதென்ன இன்றுநான் கண்டிலனே இதற்குமுன் னுள்ளதிறம் இப்படியே ஈசர் எடுத்துரைக்கத் தேவரெல்லாம் எப்படிநாம் சொல்வோம் என்றே திகைக்கலுற்றார் எல்லா மறிந்து எடுத்துரைப்பா ரெம்பெருமாள் பொல்லாதார்க் கெல்லாம் பிறப்பொன் றிசைந்திருக்கு சொல்லுகிறேன் நானுமொன்று சொல்லுவதைக் கேட்பீரோ நல்லதுதா னென்று நாட்டமுற் றெல்லோரும் அப்போது எம்பெருமாள் ஆதிசிவ மோடுரைப்பார் இப்போது கேட்பீரோ யான்சொல்லும் நியாயமது

சிவன் திருமால் ஐக்கியம்

என்றுதிரு மாலுரைக்க எடுத்துரைப்பா ரீசுரரும் மன்று தனையளந்த மாலேயென் மைத்துனரே வாரு மெனஅழைத்து மாலோன் தனையிருத்திச் சீருடனே வேதாவும் சிவனும் உமையாளும் எல்லோருங் கூடி இருந்தந்த மாயவரின் நல்லா யருகிருத்தி நவிலுவார் சத்தியமாய் இதற்குமுன் செய்த இழிவெல்லாம் நீர்பொறுத்துக் கதுக்காக வும்முடைய கருத்தின் படியாலே நடக்கும்படிச் சட்டமெல்லாம் நாரணர்க்குத் தந்தோங்காண் அடக்குடக் கெல்லாம் ஆதிக்குத் தந்தோங்காண் இன்றுமுத லும்முடைய இச்சைபோ லேநடத்தி என்றும் நடத்திக்கொள்ளும் என்றே விடைகொடுத்து சட்டமெல் லாமுமக்குத் தந்தோ மினிநீர்தான் இட்டசட்ட மீறி இனியொருவர் செய்யோங்காண் உம்மை நினையாமல் உக்கலியைச் செய்ததினால் நம்மை வரைநீர்தான் நடத்தும் படிநடத்தும் என்றந்த ஈசுரரும் ஏற்ற உமையாளும் அன்றந்த வேதாவும் அமரர்முனி தேவர்களும் சத்திய மாகத் தானுரைத்தார் நாரணர்க்கு மத்திய நாதன் மனமகிழ்ந் தேதுசொல்வார் நல்லதுதா னென்று நாட்டமுற் றெம்பெருமாள் வல்ல பரமே சுரரோ டேவகிர்வார் கன்மம்போ லொத்தக் கலிப்பிறப் பானதினால் நம்மள் முதல்மாறிப் பிறக்கநா ளாகுதுகாண் ஆனதா லீசுரரே அருளுகிறேன் நீர்கேளும் ஈனமுள்ள பாவி இயன்றதுரி யோதனனைக் கொன்றே னவனைக் குருநாடை வர்க்கீந்து முன்னே மறையோன் மொழிந்தசா பத்தாலே தேவர்முதல் வானோர் தேவமுனி தான்வரையும் மூவ ருறையும் உற்றதெய்வ லோகமேழும் மேலோர்க ளெல்லாம் மேதினியி லென்றனக்குப் பூலோகந் தன்னில் பிள்ளையென வேபிறக்க வேணுமென்று மாமுனிவன் விட்டசா பத்தாலே தாணுவே நீரறியத் தாம்பிறந்தார் சாணாராய் ஏழுலோ கமதிலும் ஏற்றமுள்ள வித்தெடுத்துக் கீழுலகில் பெற்றேன் கீர்த்தியுள்ள சாணாராய்ப் பெற்றுவைத்து ஸ்ரீரங்கப் பூமியிலே போயிருந்தேன் மற்றுஞ்சில நாட்கழித்து வாழுந் தியதிதனில் அனந்த புரம்நோக்கி யானேகும் வேளையிலே புனந்தனிலே நின்று புலம்பலுற்றார் தேவர்களும் தெய்வலோ கத்திலுள்ள தேவதே வாதிகளும் வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும் சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும் தவமான வேதாவின் தன்னுகத்தில் வாழ்பவரும் வடகயி லாசமதில் வந்திருந்தார் வாட்டமதாய் நடக்கும் வழியில் நானவரைக் கண்டேதான் தாது கரமணிந்த தானவரே தர்மிகளே ஏதுகா ணீங்கள் இங்குவரக் காரணமேன் என்றவரோ டேகேட்டேன் ஈசுரரே கேட்டருளும் அன்றவர்க ளென்னோடே அருளினதை நீர்கேளும் கலியன் பிறந்ததினால் கட்டழிந்து மானுபங்கள் சலிவாகி எங்களுட தானதவங் குன்றினதால் இனியிருந்தா லென்னபலன் என்றுமிக எண்ணமுற்றுக் கனிந்து வுமைத்தேடிக் காணவந்தோ மென்றுரைத்தார் அப்போது வுங்களுக்கு ஆகவேண் டியவளம் இப்போதே சொல்லும் என்றேகேட்டேன் தேவருடன் சொல்லுகிறா ரந்தத் தேவர்கள்தா மீசுரரே நல்லதுதா னிந்த நாட்டில்கலி வந்ததினால் கலிக்குமுன் னுள்ளதுவும் கலியில்மிகக் கண்டதுவும் அலிக்கிய மானதினால் அக்கலிமா ளும்போது சிவசத்தி தான்முதலாய்ச் சீவனுள்ள செந்துகளும் தவமுனிவ ராகிடினும் தரணி புற்பூண்டுவரை மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும் திட்டமுடன் நாரணர்க்குச் சிந்தையொத்த பேர்களெல்லாம் மேனி யழுக்கறுத்து மேன்மூ டிருளறுத்து யோனிப் பிறப்பும் உற்றலிங் கப்பிறப்பும் அவரவர்க் குள்ள அதிகப் பிறப்போடும் எவரெவர்க்கும் பூமியொன்றில் இனிப்பிறக்க வேணுமல்லோ ஆகும் பிறப்பும் ஆகுவது மிந்நாளில் சாகும் பிறப்புத் தவறுவது மிந்நாளில் அப்படியே நீசன் அவன்பிறந்தத் தோசமதால் எப்படியும் ரண்டிலொன்று ஆகுவது திட்டமுண்டே ஆனதா லெங்களுட அக்கமதி லிப்போது மானமாய்ச் சான்றோராய் வகிருமென்றா ரீசுரரே கொஞ்சம் பொறுவுமென்று கூறிவந் தேன்முன்னமே இஞ்சொல் பார்க்கும்போது இவ்வுலகி லுள்ளோரைப் பிறவிசெய்ய ஞாயமுண்டு பிள்ளைமொழி சொன்னதினால் திறவி முதற்பொருளே செய்தியென்ன சொல்லுமென்றார் அப்போது ஈசுரரும் அச்சுதரைத் தான்பார்த்து இப்போது மைத்துனரே யானென்ன சொல்வதுதான் 540 நீர்நினைத்த துபோலே நிச்சயித்துக் கொள்ளுமென்றார் பாரனைத்துங் காக்கும் பரமே சுரருரைத்தார் அப்போது பாரளந்த அய்யாநா ராயணரும் முப்பொருளு மொன்றாய் ஒத்திருந் தேதுசொல்வார்

தேவலோகத்தார் மனுப்பிறப்பு

தேவரையுந் தான்வருத்திச் செப்புவா ரையாவும் பாவலரே நீரும் பார்த்துணர்ந் தோராமல் மாலிங்கே யில்லையென்று மாறாட்டஞ் சொன்னதற்கு சூலின் கருத்திரண்டு தொல்புவியி லேபிறக்கும் உங்களி னமாக ஒருபிள்ளை பெற்றதுண்டு அங்குபோய்ச் சாணாராய் அதில்பிறக்கப் போவுமென்று சொல்லவே தேவரெல்லாம் சிரித்துமனங் கூடி நல்லதுகாண் நாரணரே நாங்கள்பிழைத் தோமெனவே பிறக்கவே போவோம் பிறந்தா லடியார்க்கு இறக்கவிதி யாகுமல்லோ இழிகலிய னேதுவினால் இறந்தால் பின்னுமந்த இனத்திலடி யார்பிறக்க வரந்தாரு மென்று வணங்கிநின்றா ரையாவை அப்போது அய்யா அரிநமோ நாரணரும் செப்பரிய நல்லகுலத் தேவர்களுக் கேதுரைப்பார் மக்களே நீங்கள் வையகத்தி லேபிறந்தால் வக்கலிய னேதுவினால் மாயமுங்க ளைச்சூழ்ந்து என்பேரு மீசர் ஏற்றஉமை யாள்பேரும் தன்பேருஞ் சொல்லாதே என்று தடுத்தடிப்பான் ஆனதால் சாவுவரும் ஆனாலு முங்களுயிர் மானமது மாறாமல் மாறியவ் வினத்திலுறும் இப்படியே வுங்களைநான் இரட்சித்துக் காக்குமட்டும் எப்படியு முங்களுயிர் இதில்விட் டகலாதென்றார் நல்லதுகா ணென்று நாட்டமுற்றுத் தேவரெல்லாம் வல்ல வகையான வாய்த்தசா ணாரினத்தில் தேவ ருயிர்பார்த்துச் சென்றுதித்தார் தேவரெல்லாம் மூவருரை மாறாமல் மோகமுள்ள தேவரெல்லாம் சம்பூர்ணத்தேவன் - பரதேவதை தவசு போகும் பொழுதில் பொன்னுலகத் தேவர்தன்னில் தாவும்பெரிய வொரு சம்பூரணத் தேவன் பரதே வதையான பார்மறலி தன்னுகத்தில் உரமான தேவியவள் உடையமன்ன னைநீக்கித் தெய்வச்சம் பூரணனும் சேர்ந்தவளோ டேநடப்பாய் மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே நான்பிறக்கப் போணுமென்றால் நன்னுதலை யென்னோடு தான்பிறக்கச் சொல்லித் தாரம்போ லாக்குவீரால் நான்பிறக்கப் போவேன் நாரணரே யல்லாது தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்க ளுண்டுமையா என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய் உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ அப்பிறவிக் கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா ஆனையொடு பூனை அணைந்துநலஞ் செய்திடுமோ பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா ஆனை மதமா யடர்ந்து மிகத்தேவா பூனை யொடுவந்து புல்குமோ - பூனை நாயோடு புல்குமோ நல்லறிவில் லாத்தேவா ஈயோடு சேர்மோ இசல் ஏனடா தேவாநீ இந்தமுறை சொன்னதென்ன வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில் ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி எப்படியும் புத்தி இசையாம லேயுரைப்பான் காவலரே மாமோகம் கண்டஇட மன்றல்லவோ ஆவலது கொண்டஇடம் அச்சுதரே சம்மதங்காண் 600 எந்தவித மாகிடினும் எனக்கந்தப் பெண்கொடியைத் தொந்தமா யென்றனக்குத் தொலையாத ஆசையதும் தந்தருளி வைத்தால் தர்மமுண் டுங்களுக்கு என்றன் பிரானே இனிமாற்றிச் சொல்லவேண்டாம் என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பா ரெம்பெருமாள் ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால் வேழமொத்த தேவா மிகுத்ததவஞ் செய்திடுநீ மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல் தவசு இருபேரும் தாற்பரிய மாகநின்று சிவசுவா சம்பெருக்கிச் சிறந்ததவஞ் செய்திடச்சொல் நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம் அன்றுங் களுக்கு அருளுவே னானுமென்று சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து நல்லதுதா னென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான் பரதே வதையான பைங்கிளியைத் தான்கூட்டி விரைவா கத்தேவன் விறுமா பதஞ்சேவித்து நின்றான் தவசு நெடியோ னுறுதியென்று நன்றான நன்னுதலும் நல்லசம் பூரணனும் நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார் அனைத்துயி ருங்காக்கும் அய்யாநா ராயணரும்

எமலோகத்தார் மனுப்பிறப்பு

ஏம னுலகமதில் இருக்குந் தபோதனரைத் தாமனந்தப் பேர்கள் சர்வது மேயழைத்து வாருங்கோ பிள்ளாய் வாய்த்த தபோதனரே ஏதுங்கள் ஞாயம் என்னோடே சொல்லுமென்றார் உங்கள் குடும்பம் உடையோன் பதம்வணங்கி எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால் ஆனதா லவர்கள் அனுக்கிரகந் தன்னாலே மானமுட னேமனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர் இன்ன முன்வழிகள் என்மகவா யங்கிருக்க வன்னமுட னவ்வழிதான் வாய்த்தசா ணாரினத்தில் போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதி லேவளர்ந்து மேற்பிறவி வந்திடினும் மேவுவ தவ்வழியில் இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து எப்படியு மென்குடும்பத் தாலே யிருளகன்று உன்பிறப்போர் தம்மால் உதவிபெற்று வாழுமென்று எம்பெருமாள் சொல்லி இனத்தில் பிறவிசெய்தார்

சொர்க்க லோகத்தார் மனுப்பிறப்பு

சொர்க்கலோ கத்தாரைச் சுறுக்காய் வரவழைத்து மிக்கவுங்கள் செய்தியென்ன விடுத்துரையு மேவலரே நான்பிறவிக் கெல்லாம் நம்பிகூ டப்பிறந்து என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால் இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய் வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால் காலக் கலிதான் கட்டழித் தென்மகவு மேலுக மாள விடைநிச்சித் திருப்பதினால் நீங்களும்போ யங்கே நிங்ஙளுட தன்வழியில் மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய் வாழுகின்ற நாளையிலே வருவே னானுங்களிடம் நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ ஏவல்கண் டுங்களைநாம் இரட்சித்து ஆண்டுகொள்வோம் போவெனவே சொல்லிப் புகன்றா ரவர்களுக்கு

பிரமலோகத்தார் மனுப்பிறப்பு

பிரமலோ கத்திலுள்ள பிலத்த இருஷிகளை வரவழைத்து அய்யா நாராயணர் வகிர்வார் வாருங்கோ பிள்ளாய் வாய்த்த ரிஷிமாரே ஏதுங்கள் ஞாயம் என்னோ டுரையுமென்றார் அப்போது நல்ல அந்தரிஷி யேதுரைப்பார் இப்போது அய்யாவே எங்களைப்பூ லோகமதில் படைக்கவே ணுமெனவே பகர்ந்தமொழி மாறாமல் நடக்கக் கருமமிது நாரணரே பொய்யாது முன்னமே யெங்கள் முறைவழியி லோருயிரை வன்னமுள்ளச் சாணாராய் வகுத்தீரே யும்மகவாய் அல்லாம லெங்கள்வழி ஆனரிஷி தங்களிலே பொல்லாத குற்றம் பிரமனுக்குச் செய்ததினால் அன்பத்தினா லொன்றிரிஷி அவனிதனில் போகவென்று இன்புற்ற நாரணரே ஈந்தீரவர் கேட்டவரம் ஆனதா லவர்கள் அவனிதனி லேதிரிய ஏனையா எங்களைநீர் இப்போ பிறவிசெய்தால் இனம்பிரிந்து நாங்கள் இருப்போமே பூமிதனில் கனம்பொருந்தும் நாரணரே கட்டுரைக்க வேணுமென்றார் நல்லதுதா னென்று நாரா யணருரைப்பார் வல்ல ரிஷிமாரே வகையாகக் கேட்டீரே அதற்கு விபரம் அருளுவேன் கேளுமென்று மதுக்குகந்த மன்னன் வழுத்துவா ரன்போரே சென்ற ரிஷியெல்லாம் செடமெடுத்துப் பூமிதனில் மண்டலங்கள் தோறும் வாழுவார் கண்டீரே என்ன விதமாய் இருப்பாரென் றேயினமாய் துன்னயமாய் நீங்கள் துணிந்துநன்றாய்க் கேட்டிங்கோ மான்தோ லிலேயிருப்பான் வானமதைத் தான்பார்த்துத் தீன்சோ றருந்தாமல் செலங்குடித்து நாடோறும் கற்பமுண்டோ மென்று கலியில்மிகப் பட்டுழன்று அற்பமுடன் கொஞ்சி அவன்சிலநாள் தானிருந்து பிரம்ம வைகுண்டம் பிறப்பெடுத்து நான்தானும் வரம்வைத் தவனை வதைத்துப்பின் னுன்னினத்தில் படைத்துத் தருவேன் பார்த்துக்கோ லெக்கெனவே அடர்த்தியா யைம்பத்து ஐந்து இருஷிகளும் ஆளுக் கொருவிதமாய் அருந்துவ துமிருப்பும் நாளு முறையாய் நடத்துவதும் நீகேளு ஒக்க விபரமதாய் உரைக்கநே ரம்பெருகும் மிக்கத் திரட்டாய் விடுகிறேன் நீகேளு நல்ல மிளகுதின்று நவகண்டி தான்பூண்டு கொல்ல மிளகுதின்று குப்பைமே லேபுனைந்து வெள்ளித் தடுக்கில் வீற்றிருப்பா ரேசிலர்கள் ஆனைத்தோ லிட்டு அருந்தாமல் நாடோறும் கானகத்தில் வாழ்ந்து கண்மூ டாரேசிலர்கள் மரத்தைமிகக் காலிலிட்டு வார்சிலந்திக் கோர்வையிட்டுச் சரத்தையுள்ளே கொண்டு தானிருப்பா ரேசிலர்கள் மீட்டைக் கொடியும் மிளகுவெற்றி லைக்கொடியும் இட்டமுடன் நிஷ்டை இருப்பார் சிலபேர்கள் உப்பில்லா தன்னம் ஒருபோது தான்குடித்து அப்பிலிட்டுத் தின்று அக்கினியி லேகாய்ந்து இருப்பார் சிலபேர் இன்னமும்நன் றாய்க்கேளு பொருப்பி லிருப்பார் பூமியில் வரோமென்பார் கள்ளிப்பா லுண்டு கவிழ்ந்திருப்பா ரேசிலபேர் கொள்ளித் தழலும் கொள்ளைகொண்டக் கஞ்சாவும் உண்டோங்காண் லோகமதை விழுங்குவோ மென்பார்சிலர் புல்லை யருந்திப் புலித்தோலின் மேலிருந்து தில்லைப்பா லுண்டு திரிவோமென் பார்சிலபேர் புகையிலைச் சாறு புகட்டுவோ மென்பார்சிலர் தகையில்லாக் கற்பம் தானுண்டோ மென்பார்சிலர் பூவில் படுப்போம் புகட்டுவோ மாவின்பால் காவி லுறைந்து கலைதரி யாதிருப்பார் உடையுடா தேகழுத்தில் உத்திராட்ச மேபுனைந்து நடையொற்றைக் காலால் நடப்பார் சிலபேர்கள் இப்படியே நன்றாய் இவரிவர்க் கோர்விதமாய் அப்படியே தேசமைம்பத் தாறதி லுந்திரிவார் சோழக் குருநாடு தேசமது நன்னாடு ஆளவை குண்டர் அவர்வளரும் நன்னாடு இந்நாட்டில் வாழும் இராச ருடவளமை சொன்னால் தொலையாது சொல்ல எளிதல்லவே இப்புவியில் வாழும் என்றன்வை குண்டரிடம் எப்புவியில் வாழும் இருஷிகன் னாசியெல்லாம் வரம்வைக்கச் சொல்லி வதைக்கவந்த வைகுண்டர்காண் பரம்பெரிய வைகுண்டப் பதியாள வந்தவர்காண்

ஐம்பத்தைந்து பிரம்ம ரிஷிகள்

சன்னாசி யெல்லாம் தலைவீதம் வாழுகின்ற மின்னான சீமை விரிக்கக்கேள் நீங்களெல்லாம் பாண்டிய னான பரிகொங்கை நன்னாட்டில் ஆண்டிருப்பான் சன்னாசி அவனொருவன் கேட்டிருநீ வருஷ மொருநேரம் மாறிப் பிறந்தேனென்று புருஷனென வந்தெடுத்தால் பிள்ளையுண் டென்றுசொல்லி இருப்பான் சிலநாள் இவனொரு சன்னாசி சிங்கள நன்னாட்டில் சீகண்டன் ராச்சியத்தில் புங்கம்பா லுண்டு பூவையரைப் பாரோமென்று ஆடை யுடுக்காமல் அவனிருப் பானொருவன் கோரக்க நாடு குருக்கேத்திரன் ராச்சியத்தில் சூரக்கோல் கைப்பிடித்துச் சூலா யுதமேந்தி தன்மதத்தால் பேசித் தானிருப்பா னேசிலநாள் கன்மத்தால் சாவான் கடியமூன் றாம்பேர்தான் இப்படியே யைம்பத் தாறூ ரிவைகளுக்கும் அப்படியே தானிருக்கும் ஆனசன் னாசிகட்கு ஒண்ணொண் ணடையாளம் உரைக்கிறேன் சீக்கிரமாய் துண்ணெனவே நீங்கள் துணிந்துமிகக் கேளுமென்று நாலாஞ் சன்னாசி நயன மிமையாதிருப்பான் காலைக் கைகொண்டு கட்டிறுக்கி யேயிருப்பான் அஞ்சாஞ் சன்னாசி அன்னங் குடியாமல் பிஞ்சிரு மிச்சியிலை பிசைந்துதின் றேயிருப்பான் ஆறாஞ் சன்னாசி ஆனகஞ் சாகுடித்து நீறாக்கித் தேகமதை நிஷ்டைபோல் தானிருப்பான் ஏழாம் சன்னாசி இடுப்பிலொரு சீலைகட்டிப் பாழாகப் பட்சி பறவைதின்றே யிருப்பான் எட்டாஞ் சன்னாசி இருந்துமிகக் கண்மூடி கட்டாய்ச் சுவாசமதைக் கவர்ந்துகவர்ந் தேயிருப்பான் ஒன்பதாஞ் சன்னாசி உமிழ்நீ ரிறக்காமல் இன்ப விறுவிறுத்து ஈரவம்போல் கண்வெளுத்துத் தூங்கினாற் போலே சூழச்சூழ விழித்துப் பாங்குகள் தேடிப் பதிந்திருப்பான் கண்டீரே பத்தாஞ் சன்னாசி பதிவாக நாள்தோறும் சிற்றா மணக்கிலையில் துயிலுவான் கண்டீரே பதினொராஞ் சன்னாசி பவளமணிக் கோர்வையிட்டுத் துதியா யொருமூலம் சொல்லித்தினம் சேவித்து உரிய உளுந்தும் ஓயாமல் கஞ்சாவும் சதமென்று நம்பி தானிருப்பான் கண்டீரே பன்னிரண்டாஞ் சன்னாசி பாரக்கல் கோர்வையிட்டு உந்திக்(கு) இலுப்பையிலை உழக்குச்சா றுகுடித்து இருப்பான் பதிமூன்றான் இவனினத்தைக் கேட்டிருநீ பருப்பா னவலும் பழமுந் தினமருந்தி கோவை யிலையும் கொடுப்பையிலை யும்புசித்துச் சேவைபண்ணி நித்தம் செய்திருப்பான் கண்டாயே பதினாலாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு துதியா யொருமூலம் சொல்லித் தினஞ்சேவித்துக் கையிறை கொண்டேதான் கட்டிக்கொண் டேயிருப்பான் பதினைந்தாஞ் சன்னாசி பார்க்கெந்த மாலையிட்டு மதியகத்தே வுண்டு மலர்ந்துதுயின் றேகிடப்பான் பதினாறாஞ் சன்னாசி பண்ணு முறைகேளு ஆடை யுடுக்க அறிவுசற்று மில்லாமல் கோடை குடித்துக் குலைவான் பதினாறான் கள்ளிதனைத் தின்று காய்க ளிலையருந்தி கொள்ளித் தழல்காய்வான் கொடிய பதினேழான் நல்லத்திக் காயருந்தி நாமமணி யும்பூண்டு கொல்லத்தி போலே குலைந்துகுலைந் தேதிரிவான் இவன்பதி னெட்டான் என்றே யினமறிநீ எவனு மறிவான் ஈரெட்டு மூன்றானை மான்தோலின் மேலிருப்பான் மற்றிருபான் மீசையுள்ளான் தான்தெரியு மற்றிருபத் தொன்றா னினங்கேளு நாகத்தின் முள்ளை நல்லதலை மேலணிந்து கூகத்தைச் சுற்றிக் கும்பிட்டுத் தான்திரிவான் இருபத்தி ரண்டான் இனங்கேளு நன்றான மதுவைத்து நித்தம் வணங்குவான் மந்திரத்தை இருபத்தி மூன்றான் இருப்பான் மயிர்வளர்த்துச் சருவைத்துப் பால்பழத்தில் தந்திரத்தை யோதிடுவான் இருபத்தி னாலான் எங்கு மிகத்திரிந்து உருவேற்றி நித்தம் உடல்வாட லாயிருப்பான் இருபத்தியைந் தாமிருஷி எருக்கலம் பாலருந்தி பருவமாய் ஓவியஞ்செய் ததிலே படுத்திருப்பான் கள்ளுக் குடித்துக் கறியுப்புக் கூட்டாமல் புள்ளித்தோல் மேலிருப்பான் புகழிருபத் தாறானும் நீரைத் தியானமிட்டு நித்திரைக்குத் தானோதி பாதை வழியேகான் பத்துரண் டேழானும் கோண முடிமுடித்து குறுத்தடியுங் கைப்பிடித்து நாணமில்லா தேதிரிவான் நல்லிருபத் தெட்டானும் சூலம் பிடித்துச் சுழியெழுத்தை மேலூன்றி கோலமிட் டேதிரிவான் கூறிருபத் தொன்பானும் முப்பதாஞ் சன்னாசி முச்சந்தி தான்பார்த்து அப்புச் சிரங்குபற்றி அவன்கிடப்பான் சந்தியிலே ஓர்முப்பத் தொன்றான் ஊமையென வேதிரிந்து கூர்மையுள்ள காது கொஞ்சமுங்கேளாத் திரிவான் முப்பத்தி ரண்டான் உயர்ந்ததிடில் தான்பார்த்து சர்ப்பத்தின் நஞ்சு தானுண்டோ மென்றிருப்பான் நன்றா யறிந்திடுநீ நல்லமுப்பான் மூன்றானையும் கண்டா லறிந்திடலாம் கண்ணில் வெளுப்புமுண்டு தொண்டையில் சடம்புகட்டித் தொல்புவியி லேதிரிவான் மண்டை வகுப்புமுண்டு வாய்த்தமுப்பத் தினாலான் முப்பத் தைந்தானும் முயலகன்போ லுண்டாகி எய்ப்பிளைப்பார் போலே இவன்திரிவான் கண்டாயே செப்பமுள்ள முப்பத்(து) ஆறான் செய்தியைக்கேள் புஸ்பமீதிற் படுத்து பூவையர்கள் தாலாட்ட அற்பமுட னாடை அணியாமல் தானிருப்பான் முப்பத்தி யேழாஞ் சன்னாசி யானவனும் அகத்தி யிலையருந்தி ஆனைத்தோல் மேலிருந்து மகத்துவமாய்ப் பேசி மாள்வான் முப்பத்தேழான் கொல்ல மிளகு குறுணியொரு நாளருந்தி பல்லைமினுக் காதிருப்பான் பார்முப்பத் தெட்டானும் சோறு குழையவைத்துச் செவ்வலரிப் பூவிலிட்டு ஆறுமுன் பூவோடு அருந்துவான் முப்பத்தொன்பான் நாக்கிலோ ராணிதனை நல்லவிந்தை யாய்க்கொருத்து மூக்கிலே கட்டி முனங்குவான் நாற்பதானும் சிறுபயறை மாவாக்கித் தேங்கா யதனிலிட்டு முறுக்கா யதையருந்தி முழுங்குவான் நாற்பத்தொன்றான் அறைக்கீரை வித்தை அருந்தித் தினந்தோறும் சுரைக்கூடிட் டேதிரிவான் சுத்தநாற் பத்திரண்டான் நாற்பத்தி மூன்றான் நத்தைச்சூரி விதையை தாற்பத்தி யமெனவே தானிருப்பான் கண்டாயே விராலி யிலையும் விளாங்காய் வெறுந்தோடும் நிராதனமாய் வைத்து நித்த மருந்துவன்காண் நாற்பத்தி நாலான் என்றே யிவனையறி நாற்பத்தைந் தானுடைய நல்விபரம் நீகேளு பூப்பறித்துத் தின்று பூனைமொழி பேசிடுவான் பேய்க்குமட்டிக் காயைப் பிசைந்து விரைதானெடுத்து நாய்க்குணம்போல் தின்பான் நாற்பத்தி ஆறானும் எருமை யுடமோரும் எள்ளெண்ணெ யுங்குடித்து நருநரெனப் பேசிடுவான் நாற்பத்தி யேழானும் மருளான பெண்ணை மனதில்வை யோமெனவே இருளான போது இந்தநினை வாயிருப்பான் காமத்தைத் தன்னால் கழியவிட் டேவாடி நாமத்தைப் பேசான் நாற்பத்தி யெட்டானும் புகையிலையைத் தீயில்வைத்துப் புகையு மிகக்குடித்து நகம்வளர்த் தேயிருப்பான் நாற்பத்தொன் பான்தானும் அன்பதாஞ் சன்னாசி அரசியிலை மேலிருப்பான் மண்புரளத் தான்கிடந்து மாஜலங் குடித்திருப்பான் அன்பத் தொன்றானும் அலைவாய்க் கரைதோறும் புண்ணியத் தீர்த்தமெனப் போயாடி யேதிரிவான் நீல மவரி நித்தஞ்சா றேகுடித்து ஆலம் பலகையிலே ஐம்பத்திரண் டானிருப்பான் சுக்குப் பொடியைத் தினந் தினமெயருந்தி அக்குமறு கணிவான் ஐம்பத்தி மூன்றானும் ஐம்பத்தி நாலான் அசுரக்கா வடிவைத்துக் கெம்பித் திரிவான் கீரித்தோல் காலிலிட்டு விளியிட் டேயாடி வெற்றிகொண் டேதிரிவான் வழிவிட்டு விலகி வழிநடப்பா னைம்பத்தஞ்சான் இப்படியே யைம்பத்(து) அஞ்சு இருஷிகளும் அப்படியே அவரவர்கள் அற்புதங்கள் வேறுசெய்து இருப்பா ரவர்கள் இராச்சியத்துக் கொன்றாக பருப்பா ரவர்கள் பழுதுகை வாய்த்துதென்று இருக்குமந்த நாளையிலே யான்வருவேன் தெச்சணத்தில் ஒதுக்கிச் சன்னாசிகளை ஒன்றொன்றாய்க் கொண்டுவந்து வைக்கச்செய் வேன்வரத்தை மனுவறி யச்சிலரைச் செயிப்பேன் பலபேரைச் செகமெல்லா மறிய வதைத்து ஒவ்வொன்றாய் மனுவில் வரத்தாக்கி நிரைத்துங்கள் தன்னோடு நிலைநிறுத்தி யேதருவேன் ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய் ஈனமில்லா துங்கள் இனத்தில் பிறந்திருங்கோ வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால் பாழுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில் நான்வந் துங்களையும் நாட்ட முடனெடுத்து மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன் என்று பிரம இராச்சியத் தோர்களையும் அன்று பிறவி அமைத்து அனுப்பினர்காண்

வைகுண்டலோகத்தார் மனுப்பிறப்பு

அந்தப் பிறவி அவர்செய் தனுப்பிவைத்துச் சொந்தப்பிறவி சிவவைகுண் டத்தோரை வாருங்கோவென்று வரவழைத் தெம்பெருமாள் 880 ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றார் தர்மிகளை அப்போது தர்மியெல்லாம் அரியோ னடிவணங்கி எப்போது மெங்களைநீர் இரட்சித்துக் கொண்டவரே ஆண்டவை குண்டம் ஆண்டிருந்தோ மித்தனைநாள் தாண்டவரே யினியுமது தயவி னருளாலே என்னபடி நிச்சித்து இருக்குதோ அவ்வழியில் வன்னத் திருமாலே வகுத்தா லதுமனதாம் என்றுதர்மி யெல்லாம் இசைய ஆதிநாரணரும் நன்றுபிள்ளா யுங்களுட நல்வளமை சொல்லுகிறோம் இல்லா தெளியோர்க்கு எனைநினைந்து தர்மமிட்டுப் பல்லுயிர்க் குன்னயிராய்ப் பார்த்தீ ரொருப்போலே நீத நிலையை நிறுத்தி யெனைநினைந்து சீதமாய்ப் பூமி செலுத்தியர சாண்டிருந்து வந்தீர்கள் கூட்டோடு வைகுண்ட மானதிலே சேர்ந்தீர்க ளாகிடினும் செய்தநன்றி தான்பார்த்து உங்களுக்கின் னாள்வரையும் உதவிதர வில்லையல்லோ தங்களுக்கு நன்மை தரவேணு மானாக்கால் இன்னமொரு பிறவி என்மகவி லேபிறவும் வன்னப் பிறவியென் மகவழியில் தான்பிறந்தால் ஏழு யுகக்கணக்கும் யான்கேட் டுங்களுக்கு மாளுவ தில்லாமல் மறுபிறப் புமறுத்து நம்முடைய சொத்தும் நாடியுங் களுக்கீந்து மும்மடங்காய்த் தர்மம் ஓங்கிவளர்ந் தேயிருப்பீர் என்றுதர்மி தங்களுக்கு எம்பெருமா ளீதுரைக்க அன்றந்தத் தர்மிகளில் ஐபேர்க ளேதுரைப்பார் ஆயரே எங்களுட ஆதிநா ராயணரே மாயரே எங்களைநீர் மறந்தெங்கே போனீர்காண் காணாம லும்மையெங்கள் கண்கள் மிகத்தவித்து வாணா ளயர்ந்து மறுகிநொந்து வாடினோமே என்றுதர்ம பாண்டவர்கள் இப்படியே சொல்லிடவே நன்றுநன் றென்று நாரா யணர்மகிழ்ந்து முன்னமே நீங்கள் உகத்துக் குகங்கூட என்னைவிட் டகலாது இருந்தீர்க ளென்னுயிர்போல் ஆனதா லிப்பிறவி அய்யாநா ராயணராய் மானமாய்த் தர்மம் வளர்ந்தோங்க எந்நாளும் நிச்சித்து ஒன்றாய் நிலைநிறுத்தித் தற்சொரூபம் மெச்சித்து நானினித்தான் மேல்பிறக்கப் போவதினால் என்மகவாய் நீங்கள் ஏழி லொருவனுமாய்க் கண்மணிபோல் நீங்கள் கலியுகத்தில் போய்ப்பிறங்கோ என்றேதான் தர்மிகட்கு எம்பெருமா ளீதுரைக்க அன்றேதான் தர்மி எல்லோரு மேதுரைப்பார் தானதவஞ் செய்தல்லவோ தர்மிகள் தானாகி மான வைகுண்ட வாசலிலே வந்திருந்தோம் மானுவங்க ளில்லா மாளுங் கலியுகத்தில் பேய்நீச வையகத்தில் பிறக்கப்போ வென்றீரே நாங்கள் முன்செய்த ஞாயநடுப் போய்விடுமே ஏங்கக் கலியனுட இருளினா லையாவே நாயநடுக் கேட்டு நடுக்கம் மிகப்பிடித்து தேயமதில் நாங்கள் செய்தமுறை தப்பிடுமே ஆனதால் நீரும் அன்றுநடுக் கேட்கையிலே மானமில்லை யானால் வழக்கென்ன சொல்லிடுவோம் என்றுரைக்கத் தர்மி ஏதுரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று பிள்ளைகளே நானதற்குச் சொல்வதுகேள் என்மக்க ளேழும் இயல்கலியில் பட்டுழன்று வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம் நான்பொறுத் துங்களுக்காய் நானே தவசுபண்ணி வான்சிவனுக் கேற்க வாய்த்த தவமிருந்து மக்களேழு பேர்கள் வம்மிசங்க ளுள்ளதெல்லாம் ஒக்கவொன்று போலே உகந்தெடுத் துண்மையுடன் நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும் தாடாண்மை யான சத்தியுமை தன்னாணை நீங்களென்ன குற்றம் நிலையில்லாச் செய்தாலும் தாங்கிப் பொறுப்பேன் தருவே னானல்லபுத்தி உங்கள்கர்ம மெல்லாம் ஒக்கத் தொலைப்பதற்கு மங்களமாய்ச் சிவனை வருந்தித் தவசுபண்ணி நானுங்க ளாலே நல்ல தவசிருந்து மானுபங்கள் கெட்ட மாகலிய னுகத்தில் தாயும் தகப்பனையும் தான்பழித்த துற்கலியில் பேயுங் கலிநீசப் பிறப்பைச் சோதித்தறுத்து தாடாண்மை தர்மம் தழைக்கவைத் துங்களையும் நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது என்றுரைக்க அய்யா எல்லோருஞ் சம்மதித்து அன்று பிறவி அமையுமென்றா ரப்படியே நன்மையுள்ள தர்மியெல்லாம் நல்லசான் றோர்குலத்தில் மேன்மையோ ரெல்லாம் மேதினியி லேபிறந்தார்

அகிலம் ஏழு

divider

சிவலோகத்தார் மனுப்பிறப்பு

அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள் நந்த சிவனுகத்தோர் நாடும்வா னோர்களையும் வாருங்கோ பிள்ளாய் வானோரே என்றுசொல்லி ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றா ரெம்பெருமாள் அப்போது வானோர் எல்லோரு மேமகிழ்ந்து செப்புகிறா ரந்தச் சிவனாதி தன்னோடு மாயவரே தூயவரே மற்றொப்பில் லாதவரே ஆயரே உம்முடைய அறிவின் படியாலே அமையு மமைத்தால் அதுமனதா மெங்களுக்கு சமயம் வழுவாத சாதித் திருமாலே என்றேதான் வானோர் இதுவுரைக்க அய்யாவும் நன்றென வேமனது நன்றா யகமகிழ்ந்து காலக் கலிதான் கலிமூழ்கி வையகமும் மேல யுகம்வரையும் மூழ்கியது கண்டீரே ஆனதா லீரேழு அவனி இருள்மூடி மான மழிந்து வரம்பழிந்து மானிடரும் ஆதி முதல்சாதி அடங்கல்வரை தேவரெல்லாம் நீதி நிலைமாறி நின்றதுவுங் கண்டீரே ஆனதா லிந்த அன்னீத இருள்தனையும் ஏனமென்ன பார்த்தேன் இதையறுக்க வேணுமென்று பார்க்கும்போ திந்தப் படூரநீ சக்கலியை ஆர்க்கும் செயிக்க அடங்காது கண்டீரே ஆனதால் நாமள் எல்லோரு மின்னமொரு மானமாய்ப் பிறந்தால் மாளுங்கலி யல்லாது கலிக்குள்ளகப் பட்டசடம் கலியழிக்கக் கூடாது பெலிக்குக் கலியையிட பிறந்தல்லா லேலாது ஆனதால் நாங்கள் அம்புவி யில்வருவோம் வானவரே யுங்களுட வளப்பமென்ன சொல்லுமென்றார் அப்போது வானோர் எல்லோரு மேபயந்து செப்புவ தேதோ திருமாலே நாங்களினி சிவன்முதலே திருமால் திருவுக் கிதுவானால் எவனையாப் பூமியிலே இனிப்பிறக்கோ மென்பதுதான் ஆனதால் பின்னும் அடியார்க கொருவிதனம் ஈனமே கண்டு இரங்குதையா எங்கள்மனம் அவ்விதத்தைச் சொல்வோம் அடியார்க் கின்னபடி எவ்விதத்தி லேயும் இசைந்தனுப்பு மெங்கோவே என்றுவா னோர்பணிந்து இயம்புவா ரன்போரே அன்றுமுத லின்றுவரை அடியார்க ளெல்லோரும் சிவனுக் கடிமை செய்திந்தப் பூமியிலே எவனுக்கும் பதறாது இருந்தோமே இவ்வுலகில் மாய்கையில்லை எங்களுக்கு மக்கள்பெண்டீர் தானுமில்லை சாய்கைத் துயிலுமில்லை தகையுமில்லை எங்களுக்கு இளைப்பில்லை தாகம் இல்லை பசிதாகமதும் வளப்பில்லை தேகம் மறுவில்லை நோவுமில்லை அலந்தா சையில்லை ஆணில்லை பெண்ணுமில்லை கலந்தா சையில்லை காமக் கழிவுமில்லை இத்தனையு மில்லாது ஈசன ருட்செயலால் நித்திய மனப்பூவால் நிமலன் பதம்போற்றி இன்பதுன்ப மற்று இருவினைகள் தானுமற்று வன்பத்து சம்பத்து வாக்குடனே போக்குமற்று மலமற்றுச் சலமற்று மயமும் சயமுமற்றுப் பெலன்பொறி யற்றுப் பேரற்று ஊருமற்று இத்தனையு மற்று இருந்தசிவத் தொண்டரிடம் புத்திகெட்ட மாகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே சொன்னமொழி மாறாமல் சுவாமிவிண் ணப்பமென்றார் என்னவித மாகிடினும் இரட்சிக்க வேணுமையா என்றந்த வானோர் இறைஞ்சித் தொழுதிடவே நன்றென்று கேட்டாதி நாரா யணருரைப்பார் நல்லதுகாண் வானவரே நானினிமேல் செய்பிறவி இல்லறத்தை விட்டுத்தவம் இல்லைகாண் வேறொன்று ஆனதால் பேடென்றும் அருளியிருளி யென்றும் மானமில்லா ரென்றும் வாராது மேற்பிறவி ஆணுக்கொரு பெண் அன்றூழி காலமெல்லாம் தோணுதலா யொன்றாய்த் தொல்லூழி காலம்வரை வாழ்ந்திருப்பா ரென்றும் மக்கள் கிளையோடும் தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத்தோங்க எந்நாளும் பேரு தழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார் ஊரொன் றுகமொன்று உரையொன்றுக் குள்ளாக்கி இறவாமல் பெண்ணோடு இருந்துமிக வாழ்வதல்லால் பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனே யல்லாது ஊர்மறந்து பேர்மறந்து உற்றக் கிளைமறந்து பார்மறந்து தேசப் பவிசு மிகமறந்து ஆடல் மிகமறந்து ஆயிழையைத் தான்மறந்து பாடல் மறந்து பக்கத் துணைமறந்து அன்ன மறந்து அதிக மணமறந்து சொர்ண மறந்து சுகசோ பனமறந்து நலமறந்து தேக நளினமிக மறந்து மலசல மறந்து வளருந்தவப் பேறுமில்லை இத்தனை நன்மைகள் எல்லாமிகக் கொண்டாடிச் சித்திரமாகத் திரும்பிப் பிறப்பற் றவராய் என்பிள்ளை ஏழும் எடுத்தவழி ஓரினமாய் அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே என்று மகாமால் இப்படியே சொல்லிடவே அன்றந்த வானோர் எல்லோரு மேயிரங்கி நன்மை பலதோடும் நன்னுதலாள் தன்னோடும் மேன்மை பலபெறவே மேற்பிறக்கச் செய்வோமென்று சொன்னீரே அய்யா சுகம்பெற்றோம் நாமளென்று பன்னீர்க் குணம்போல் பச்சம்வந்து வானோர்கள் ஆதியே எங்களையும் அதிலமைக்க வேணுமென்று சோதியே என்று தொழுநின்றார் வானோர்கள் நல்லதுதா னெனவே நாட்டமுற் றெம்பெருமாள் வல்லமக்க ளான வாய்த்தசா ணார்குலத்தில் ஏழு மக்களிலும் ஏற்றவா னோர்வழியில் மாளுவந்தா லுமதிலே மாறாப் பிறக்கவென்றும் நாரா யணர்புவியில் நல்லமக்க ளேழ்வரையும் சீராக வந்தேற்றுச் செய்தவினை யும்நீக்கி ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான் ஆழிக்கரை யான்மகவு அரசாள்வா ரென்றுசொல்லி சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய் நல்லதென்று வானோர் நாடி யகமகிழ்ந்து 100 சாணா ராய்வந்து தானுதித்தார் வையகத்தில் வாணா ளறிந்து வானோர் மிகப்பிறந்தார்

பரலோகத்தார் மனுப்பிறப்பு

அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள் சொந்தப் பரலோகச் சுத்தமுனி வோர்களையும் எல்லோ ரையுமழைத்து எம்பெருமாள் ஏதுரைப்பார் வல்லோரே உங்கள் வளப்பமென்னச் சொல்லுமென்றார் நீங்க ளெனைமறந்து நீணிலத்தி லில்லையென்று நாங்கள் மிகவறிய நன்றிகெட்டுச் சொன்னீரே ஆனதா லுங்களுக்கு அதிகப்பிழை யாச்சுதல்லோ ஏனமென்ன பார்த்து இயம்பு முனிவோரே அப்போது மாமுனிவர் எல்லோரும் தாம்பயந்து செப்புவ தேதோ சிவனுலகோர் செய்திகண்டால் கற்பனைக்குள் ளல்லால் கடருவமோ நாங்களினி அற்பரல்லோ கற்பனைக்கு அல்லவென்று சொல்வதுகாண் என்றுமுனி சொல்லி இயம்புவார் பின்னுமுனி எல்லா வுரையும் எடுத்துரைத்தீர் வானோர்க்கு நல்லா யறிந்தோம் நாதனேயவ்வகைபோல் படைத்தனுப்பு மும்முடைய பால ருடவழியில் நடத்தை யதிகமுள்ள நாராயணப் பொருளே என்று முனிவோர் இப்படியே சொல்லிடவே அன்று பெருமாள் அவர்க்கேது சொல்லிடுவார் எல்லோரு மென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ வல்லோரே யுங்களைநாம் வந்தெடுப்போ மஞ்சாதே என்மக்க ளேழும் ஈன்றவழிச் சான்றோரை பொன்மக்க ளான பூமக்கள் தங்களுக்கு என்சொத்து மீந்து என்பேரையுங் கொடுத்துத் தன்சொத்தோ டேயிருந்து தற்சொரூபங் கொண்டிருப்பேன் இறப்பு பிறப்பு இல்லாம லென்மகவைப் பிறப்பிறப் பில்லாமல் பெரும்புவியை யாளவைப்பேன் ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை என்றாணை யாதி நாரா யணர்கூற நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து அய்யா வுமது அருளின் படியாலே மெய்யா வுமது விந்து வழிக்குலத்தில் படையுமையா சாணாராய்ப் பரமனே யென்றுநின்றார் சடையு மணிந்தமுனி தானுரைக்க அய்யாவும் நல்லதுதான் பிள்ளாய் நாடுவது கருமம் வல்லவரே சான்றோர் வழியிலுங்கள் தம்மினத்தில் பிறக்கப்போ மென்று பெருமுனிவரை யனுப்பிச் சிறக்கச் சிவனோடு செப்புவா ரெம்பெருமாள்

திருமால் சிவனிடம் மேல்நடப்புரைத்தல்

ஆதியே நாதி ஆனந்த மைத்துனரே சோதியே சான்றோராய்த் தொல்புவி ஏழிலுள்ளே சங்கமுதல் தெய்வ சத்திபர லோகம்வரை அங்கவரைச் சாணாராய் அவதரித்தார் பூமியிலே என்மக்க ளான இப்பூமி ஏழிலுள்ள பொன்மக்க ளெல்லாம் பொறுமையுள்ள சாணாராய்ப் பிறந்தார் புவிதனிலே புகலுமையா நம்மள்செய்தி கலிக்குள் ளகப்பட்டோர் கடந்துகரை யேறவென்றால் வலிக்கு வலுவான வகையல்லோ வேணுமையா தீட்டுக்குள் சென்றால் திரும்பக் குளியாமல் வீட்டுக்குள் போவாரோ மேதினியோர் நாமறிய இனிமேல் செய்தி இன்னதென் றீசுரரே கனியான மைத்துனரே கட்டுரைக்க வேணுமென்றார் அப்போது ஈசர் அச்சுதரைத் தான்பார்த்துச் செப்புவது நாமறியோம் செய்கரும மங்கேயல்லால் நம்மோடே சொல்ல நாரணரே ஞாயமில்லை தம்மோடே சொன்ன சத்தியத் தின்படியே நடத்தும் நீரென்று நவின்றாரங் கீசுரரும் திடத்திருமா லானோர் செப்புவார் பின்னாலே

தர்மயுகச் சிறப்பு

இவ்வுகமும் நீசன் இனக்குலமும் நாமழித்துச் செவ்வுகத்த நம்மனுவோர் சிறந்ததர்மத் தாரணியும் புதுயுகம் புதுவிருச்சம் புதுமனு புதுநினைவும் நெதிவுசற்று மில்லாது நின்றிலங் கும்பதியும் புதுவாயு புதுவருணன் புதுமுகில் புதுமதியும் புதுமிருகம் புதுப்பறவை புதுவூர் வனங்கள்முதல் தர்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துவெல்லாம் நன்மையினித் திட்டித்து நடத்திடவும் வேணுமல்லோ இப்படியே ஞாயம் இருப்பதுவு மல்லாமல் முப்படித்தா னுள்ள முறைகேளு மீசுரரே துரியோ தனனைத் தொலைத்துக் கலிவருமுன் பதிரங்க மேவிப் பள்ளிகொண்டு நானிருந்தேன் ஸ்ரீரங்க மீதில் சிறந்திருக்கு மப்பொழுது நீதங்கள் கெட்டகலி நீணிலத்தில் வந்ததினால் நீதநெறி மானுபமும் நிசமான தர்மமதும் சாதமுள்ள வெள்ளானை தலையைந்து கொண்டதுவும் கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன் வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறா வெள்ளைமயில் நல்ல அனுமன் நாடுங்காண் டாமிருகம் வல்ல வெண்ணரிகள் வளரும்வெண் காக்கைகளும் ஆழியோடு சிங்கம் ஆனையிறாஞ் சிப்புள்ளும் வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்கள் வெண்கற்றா வெண்போத்து வெண்தோகை வெண்பறவை பண்புற்ற பட்சி பலமிருக மூர்வனமும் இத்தனையும் நீசனுக்கு எற்றுக் கொடாதபடி புத்தி யறிவோடு புவனமதை விட்டேகிக் கானகமே நடந்து கதறி யெனைவருந்தி மானுவமாய் நின்று வருந்தித் தவம்புரிந்தார் ஆனதா லூர்வனத்தில் ஐந்துதலை வெண்சாரை ஈனமில்லா மிருகம் ஏற்றவெள் ளானைகற்றா வெண்ணாடை வெண்ஞாளி வெண்முத்தி வெண்மிருகம் வெண்பட்சி யான மேல்பட்சி யானதிலே பொன்பட்சி வெண்பட்சி பூணுநிறத் தானபட்சி தென்பட்சி அன்பட்சி செந்தா மரையின்பட்சி இப்பட்சி யோடு இம்மிருக மூர்வனமும் அப்பட்சி யோடே அனைத்து மனுகூலமுமாய்க் கூடிக் குழையும் கொடிப்பிதிரு மொன்றதுபோல் தேடரிய அந்தத் தேதிதனில் தோன்றிவரும் விருச்சம் படைக்க வேணு மதுவிபரம் புரச்ச மதுபார்த்துப் புகலுது ஆகமந்தான் என்பிள்ளை ஏழும் இயாபிக்க நாமீந்த மின்விருச்ச மான மிகவிருச்சம் நிலையாய் வன்னமது பூகம் வாசமது விருச்சம் தென்னை விருச்சம் செறியும்புன் னைவிருச்சம் ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம் சோதி விருச்சம் சுபசோபன விருச்சம் தேச விருச்சம் செம்பொன் னிறவிருச்சம் ஆகமத்தி லுள்ள அனேக விருச்சமதும் வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந் தேதிதனில் சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம் வான மதிலுறையும் வளர்நிலவும் நேராக ஈனமில் லாததுதான் இலங்குமெந் நேரம்வெளியாய் சேத்திரங்க ளொன்று தினமு மதுவிளக்காய் சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும் வாயுவே பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும் ஆயுங் கலைதமிழும் அறிவொன்று போல்பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும் தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள் ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள் மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய் இருப்பார் வயது எண்ணிக்கையில் லாதபடி பருப்பார் பழமும் பாலு மிகஅருந்திப் புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனை யாண்டிருப்பார் மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும் தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம் நன்மைவெள்ளங் காட்ட நாடுங் கருணைவெள்ளம் இப்படியே தர்மபதி இராச்சியமொன் றுண்டாக்கிச் செப்படிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும் முன்னமே யென்றனக்கு உகந்ததுவ ராபதியில் பொன்னம் பதியும் பெரியதங் கப்பதியும் உண்டுகா ணப்பதியும் உவரியதுக் குள்ளிருக்கு கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள் ஆனதா லப்பதிதான் ஆகுவது மக்களுக்குத் தான முடனமைக்கத் தர்மசாஸ்திரத்தி லுற்றிருக்கு தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும் நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை சாத்திர வேதம் சமயம்போ தித்தருளி சேத்திரவிப ரிப்புரைக்கச் செல்லநம் மனுவோரும் காலனெனுஞ் சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு ஏலமே தவசு இடறாக நிற்கிறார்காண் ஆனதா லவர்கள் அழிவாகிப் போகுமையா ஊனக் கிரகம் ஒன்பது பேர்களையும் அழித்துவே றொன்றுக்குள் அருள்கொண் டிருக்குதுகாண் முன்னூலின் சாத்திர முறையெல்லாந் தப்பவைத்துப் பின்னூல்பு ராணமொன்று போதிப் பொருவனுமாய் இந்தப் படியேயான் நிச்சித் திருப்பதினால் அந்தப்படி யுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில் அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல் லாமமைத்துக் கதுக்கெனவே பார்ப்போம் கலியை யழிப்பதற்கு

அம்மைமார் தவநிறைவு

என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள் தவத்தி லவர்நின்று தலைவரையுங் கால்வரையும் உபத்திர மால்விருச்சம் உடலெல் லாமேமூடி கன்னியர்கள் ரோமம் கனத்தபுவி யில்வேராய் உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி நன்றினியக் கன்னியர்கள் நாடுந் தவத்தருமை பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக் கூடவுண்டே ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும் ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள் ஏட்டி லடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால் பொறுத்து முகியாதப் பெரிய தவத்தருமை மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்துதவ முற்றியதே சத்தி உமையாட்கும் சதாசிவ மானதுக்கும் முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும் மனதில் மிகஅறிந்து மாதுசத்தி யேதுரைப்பாள் காட்டிலேழு பெண்கள் கனநாள் தவசுபண்ணி தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்காண் ஈசுரரே பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக் கூடலையே அங்கேபோய் நாமள் அவர்தவசு பார்ப்போமென்றாள் என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்க ரேதுரைப்பார் நல்ல உமையே நாடும்பெண் ணார்தவத்தில் செல்லவென்றால் நாரணரும் தேனேவர வேணுமென்றார் அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும் ஒப்போ டுறவணங்கி உரைக்கிறா ளன்போரே அண்ணரே கோவே ஆதிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள் தவசுதனி லிருந்து சடைத்தார் கனநாளாய் சிவனே அவர்கள்தவம் செப்பப் பொறுக்காது நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்க ளேழ்வரையும் ஆமான பதவி அருளவே வேணுமையா என்றுநா ராயணரை எழுந்தருளச் செய்துஉமை அன்று சிவனாரும் ஆதிநா ராயணரும் அம்மை உமையாளும் அரம்பை ஸ்திரிமாரும் செம்மையுட னடந்து சென்றார் வனமதிலே வனத்தி லவர்கள்வர மாதரேழு கன்னியர்கள் இனத்திலுள்ள மாதுமையை எல்லோருங் கண்டாவி தாயே வுனது தாள்கண்டு எத்தனைநாள் வாயே புவிக்குடைய மாதாவென் தாயாரே எனதேர மெங்களைநீர் இகழ்ந்து கடத்தாமல் தனதாக எங்கள் தயவில் குடியிருந்து கற்பகலாக் காத்த கண்ணெங்கள் மாதாவே உற்பனமா யெங்களைநீர் உலகில் தவறவிட்டு இருந்தாயே தாயே எங்கள்விதி நாயகமே அருந்தாமல் வாடினோமே அறமில்லார் தங்களைப்போல் காத்திருந்தா யென்றிருந்தோம் எங்களுட கட்டழியப் பார்த்திருந்த ஞாயமென்ன எங்களுட பார்வதியே எந்நேர மீசுரர்க்கும் என்னம்மை யுங்களுக்கும் சொன்ன பணிமறந்து சொல்தப்பி நின்றோமோ ஈசருட சட்டம் யாங்கள் மிகமறந்து தேச மதில்வரவே சிந்தை யிச்சித்ததுண்டோ கற்பினை மறந்தோமோ காராவைக் கொன்றோமோ அற்புதவேள் தாயே அடியார் தமக்கருளும் என்றுகன்னி யெல்லாம் இப்படியே தானுரைக்க அன்று அறம்வளர்த்த அம்மை மனதிரங்கி நல்லதுகாண் பெண்ணேயுங்கள் ஞாயமெல் லாமுரைப்போம் வல்ல சிவனாரே வார்த்தையொன்று நீர்கேளும் தவத்தை நிறைவேற்றித் தார்குழலா ளேழ்வரையும் அகத்தே வரவழையும் ஆதியே யென்றுரைத்தாள் அப்போ சிவனார் ஆனகன்னி ஏழ்வரையும் கொப்போடு சூழ்ந்துநின்ற குழையெல்லாமே யுதிர்த்தி நிறைவேற்றித் தவத்தை நேரிழைமா ரேழ்வரையும் சிறைமாற்றிப் பெண்களையும் சிவனார் வரவழைத்து வந்து மடவார் மறையொத்த மூவரையும் சந்துஷ்டி யாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டுக் கனகத் திரவியக் கப்பல்கரை சேர்ந்தாற்போல் மனமகிழ்ந்து மாதுமையை மாமடவார் முத்திமுத்திக் கொண்டாடிக் கொண்டாடிக் கூறுவார் கன்னியர்கள் சென்றாடிச் சென்றாடிச் சிவனை மிகப்போற்றி வந்தனே வந்தாய் போற்றி மாதுமைக் கணவா போற்றி சந்தன மயிலே போற்றி சண்முகன் தாயே போற்றி நந்தகோ வேந்தே போற்றி நாதனே நீதா போற்றி சிந்தரென் கணவா போற்றி சிவசிவா போற்றிப் போற்றி மாதவா போற்றிப் போற்றி மறைமூடி காணா வல்ல நீதவா போற்றிப் போற்றி நிசரூபச் சித்தா போற்றி சீதவா ளுமையே போற்றித் தெய்வநன் மணியே போற்றி பாதவா வனத்தில் தொட்ட பாங்கனே போற்றிப் போற்றி மூவர் தேடியு முற்றாத முதலே யுனதுபதம் போற்றி தேவர்க் கரியத் திரவியமே தெய்வ மணியே சிதம்பரமே காவக் கானக வனமதிலே கற்பை யழித்துக் கைவிட்டகன்ற தாவத் துணையே யென்கணவா தவமே யுனதுபதம் போற்றி மாட்டி லேறும் மகாபரனே மாது உமையாள் பங்காளா காட்டி லடியா ரேழ்பேரும் கற்றா விழந்த பசுவதுபோல் ஊட்டி உறக்கா ரில்லாமல் ஊமை கண்டக் கனாவதுபோல் வாட்ட மறிந்து மனதிரங்கி வந்தாய்க் கவலை தீர்ந்தோமே தீர்ந்தோமினி எங்களைத் தானும் திரும்பக் கயிலைக் கழையாமல் ஈந்தோர் பிள்ளை ஏழ்வரையும் இனமு மேழுங் குறையாமல் சாந்தோ ரெங்கள் கணவரையும் தந்தே தரணி யரசாண்டு வாழ்ந்தே யிருக்க வரமருளும் மாயா திருக்கு மறைமுதலே அய்யா முதற்பொருளே ஆனந்த மானவரே மெய்யான மூல மேல்வீட்டி ருப்போனே தூணாக அண்டபிண்டத் தூரைக் கடந்தோனே கோணவட்டத் துள்ளே குடியிருக்குங் கோவே ஈசரே யெங்களுட இளைப்பெல்லாம் நீர்மாற்றித் தேசமதில் வாழச் செல்ல வரந்தாரும் பெற்றமக்க ளேழும் பிள்ளை யதுவழியும் கொத்துக் கொடியும் குலவம்மி சமுழுதும் சான்றோர் வழிமுழுதும் தற்காத்து எங்களையும் பண்டூசல் செய்த பாரமுனி வன்பதத்தில் சேர்ந்திருக்க வுமவரின் திருப்பாத முந்தொழுது தாழ்ந்திருக்க வுஞ்சிவனே தாரும்வர மென்றுரைத்தார் அப்போது நல்ல ஆதிசிவ மேதுரைக்கும் இப்போது நாரணரே இக்கன்னி கேட்டதற்கு இன்னவித மென்று இசைந்து வரங்கொடுவும் சொன்னவிதங் கேட்டுச் சொல்லுவார் நாரணரும் கேட்ட வரமதுதான் கெட்டிதான் ஈசுரரே நாட்டமிந்தப் பெண்களுக்கு நான்சொல்ல நீர்துணையாய் மடமாதே பெண்ணரசே மடந்தைக் கிளிமொழியே தடமான பொய்கையிலே தண்ணீர் தனைச்சுருட்டி ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து வாசமுடன் நாடோறும் வருகின்ற வேளையிலே இன்றேநீர் கொண்டு ஏகின்ற நீரையெல்லாம் இன்றென் தலையில் இயல்பாய் விடுவுமென்றேன் இரந்து திரியும் ஈசருக் கல்லாது பரந்தபுவி மாயனுக்குப் படாதே எனவுரைத்தீர் அப்போது உங்களைநான் ஆகட் டெனவுறுக்கி இப்போது பாரென்று இத்தனையுஞ் செய்தனல்லோ வண்ணத் திருமாலிவ் வகையுரைக்க மாதரெல்லாம் கண்ணையவர் பொத்திக் கவிழ்ந்துமிக நாணிநின்றார் அப்போது எம்பெருமாள் அவர்களுட னேதுரைப்பார் ஒப்போடு வொத்த ஓவியங்க ளேகேளும் நீர்பெற்ற பிள்ளைகள்தாம் நீணிலத்தி லேபெருகி வானத் தமிர்த மதுபா லமுதருந்தி வாழ்ந்தார் சிலநாள் மன்னரெனக் கோட்டையிட்டார் ஆழ்ந்ததொரு சோழன் அவன்பழிகள் ரண்டேற்றான் பின்னுள்ள சான்றோர்க்குப் பிறகுவந்த மாநீசன் அந்நீசன் சாபமிட்டு அவர்கள் துயரமுற்றார் துயரமுற்றுச் சான்றோர் துற்கலிக் குள்ளாகி அயர்ந்து மிகவாடி ஆட்போலே நீசனுக்குத் தாழ்ந்து பணிவிடைகள் சான்றோர்கள் செய்தாலும் வாழ்ந்துமிகக் கெட்டகலி வைது மிகஅடித்து ஆருமற்றார் போலே அலையுகிறார் சான்றோர்கள் சேருமிட மில்லாமல் தியங்குகிறார் சான்றோர்கள் அப்ப னானிருக்க அவரம்மை நீயிருக்க அப்பனம்மை யில்லையென்று அடிக்கிறான் நீசனெல்லாம் நீரு மித்தனைநாள் நின்றுவிட்டீ ரித்தலத்தில் நானும் பரதேசம் நடந்துவந்தே னித்தனைநாள் சான்றோர் துயரம் தான்கேட்பா ராருமில்லை மீண்டே நாம்கேட்கவென்று மேதினியில் போகவென்றால் இச்சொரூபங் கொண்டு ஏகினால் மாகலியன் பொய்ச்சொரூபத் துள்ளே புக்கிடுவோ மல்லாது என்றையா நாதன் எடுத்துரைக்கக் கன்னியர்கள் அன்றவர்கள் தலையில் அடித்துக்கீழ் வீழ்ந்தழுதார் அழுதாரே பெண்கள் அருவரைகள் தானிளக ஒழுகான பெண்கள் ஓலிமிட் டேயழுதார் அய்யோயெம் மக்கள் ஐந்திரண் டானதிலே பொய்யோமெய் யோசோழன் பொன்றிவிட்ட ஞாயமது கற்பழியாக் கன்னியெங்கள் கற்பையெல்லாம் நீரழித்து உற்பனமாய்ப் பெற்றபிள்ளை ஒன்றுபோல் நீர்பார்த்து வளர்க்காமல் மக்களையும் மாளக் கொடுத்தீரே பழவினையோ யெங்களுட பாவக் குறைச்சலிதோ கற்பிழந்தோ மென்றும் கௌவையில்லா தேயிருக்க இப்பிழையோ வந்து எமக்குத் தலைவிதிதான் மக்க ளிருபேரை வதைத்தகொடுஞ் சோழனுட அக்கபக்க மெல்லாம் அறாதோ எம்சிவனே மாபாவிச் சோழனுட வம்மிசங்க ளானதெல்லாம் தீயாவிக் கொண்டு செத்திடா தோசிவனே எம்மக்கள் தம்மை இடுக்கஞ்செய் தேயடித்த வன்மக்கலி நீசனெல்லாம் வாழ்விழந்து சாகானோ பழிசெய்த சோழனூர் பகலநரி ஓடாதோ வழிசோழ வம்மிசங்கள் வன்னரகில் மாளாதோ நீசக் குலங்கள் நெருநெரெனத் தானொடிந்து தோசப் புழுக்குழியில் தோயாதோ யெம்சிவனே பெற்றநா ளன்றுமுதல் பிள்ளைகளைக் காணாமல் நித்தம் பால்சுரந்து நெகிழுதே யெம்சிவனே பெற்றபிள்ளை ஏழுடைய பேருடம்பு தன்னிறத்தைச் சற்று மறிந்திலமே தலையிலேழு துஞ்சிவனே கொதிக்குதே யெங்கள் கும்பிமிகக் குமுறிக் கதிக்குதே யெங்களுட கண்மணியைக் காணாமல் ஏழுகன்னி மாரில் யார்பெற்ற கண்மணியோ கோளுரைத்துப் பாவி கொன்றானோ யெம்சிவனே கொன்னவன்தா னின்னம் கொடுநரகில் வீழாமல் இன்ன மிருப்பானோ இறந்தானோ யெம்சிவனே பாவியவன் செத்துப் பஸ்பமாய்ப் போனாலும் ஆவியைக் கண்டாலும் ஆக்கினைகள் செய்திடுவோம் மக்கள்ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை கலியாணஞ் செய்த கண்மணிக ளானாக்கால் வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே இட்ட வுடைமை இறக்கா திருப்பாரோ கட்டின மங்கிலியம் கழற்றா திருப்பாரோ இத்தனையுங் கழற்றாது இருக்கச் சிவன்செயலால் புத்தி தனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ ஏதென் றறிந்திலமே எங்களுட தாயாரே கோதண்ட மாதாவே கோவேயெந் தாயாரே வனத்தில்வந் தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோ மாதாவே கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே கன்னிப் பருவமதில் கைமோச மானதினால் உன்னி மனதில் உளறி யுளங்கலங்கிப் பாராமல் மக்களையும் பார்மீதி லேகிடத்திச் சீரா கவனத்தில் சென்றோ மிகநாணி பாவி கெடுவான் பழிசெய்வா னென்றுசொல்லித் தாவியே யெங்கள்மனம் சற்று மறியாதே எங்களையு மீடழித்து எம்மக்க ளேழ்வரையும் சங்கை யழிக்கத் தலையெடுத்தா ரிக்கூத்தர் நச்சுக் களையாய் நாங்கள்வா ழுமிடத்தில் சச்சுருவ மிட்டுவந்து சதித்தாரே பண்டாரம் எங்களுக் கென்றிவரைப் படைத்தா ரோபிரமன் கங்கை யணிசிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல் லாம்பார்க்கக் கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம் இனியெங்க ளையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும் மனுவேழ் குறையாமல் மக்களேழு வழியும் குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்குத் திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும் கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தை யாண்டிருக்க அடுத்துச் சிலநாளில் ஆக்கிவைக்கா திருந்தால் ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம் நாளு கடத்தாமல் நடத்தி மிகத்தாரும் எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே மங்கள சோபனமும் மறந்து மயிர்விரித்துத் தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து ஆங்கார மேமறந்து அவனியா சையறுத்துத் தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல் உலையில் மெழுகதுபோல் உறுவனத்தி லேநிலையாய் வெயில்பனியிலு மேகத் துளிர்விழிக் குள்ளாகிக் குயில்கூவும் வனத்தில் கோதையேழு பேரும் நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால் இனியெங்கள் மக்கள் ஏழ்வரையு மேழ்வழியும் அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தைக் கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும் எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம் மங்களமல் லால்கலி மாளும்வரை வாராது என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும் அன்றுநா ராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று என்னசொல்லப் போறோம் யாம்தா மினியெனவே வன்னத் திருமேனி மனதுநொந் தேதுசொல்வார் பெண்ணேநீ ரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி ஆனால் கலியை அழிந்துமக்கள் தம்வழியை நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும் துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர் அசுரக் குடும்பம் அறுக்கும்வரை முன்னாளில் ஈசரிட்ட சாபம் ஈதோடே வாய்த்துதடி மாசங் கடந்து வரும்வரைக்கும் நீங்களுந்தான் எங்கே போயிருக்க ஏழ்பேர்க்குஞ் சம்மதங்காண் கொங்கை யினியழகக் கோதையரே சொல்லுமென்றார் அப்போது கன்னி அவரெல்லா மாராய்ந்து செப்புகிறா ரந்தச் சிவபத்தர் தன்னுடனே மக்கள்ரண்டு பேர்கள் மாண்டாரவ ருயிரை அக்கமது செய்தீரோ அயலோவது ஞாயமென்ன என்றுகன்னி ஏழ்பேரும் இரங்கித் தொழுதிடவே அன்றுநா ராயணரும் ஆதிசிவ னுமையும் தாதா மனமகிழ்ந்து சதுர்முகனைத் தானழைத்து வேதாவே மக்கள்ரண்டை வெற்றியுள்ள வைகையிலே கொன்றானே சோழன் குருநன்றி யைமறந்து சென்றாரே மக்கள் சென்றவுயி ரெவ்விடங்காண் அப்போது வேதா அவர்தான் மிகமகிழ்ந்து செப்புகிறோ மென்று செப்பினா ரன்போரே இறந்தபிள்ளை ரண்டின் ஏற்றவுயி ரானதையும் அறந்தழைக்கு மாகயிலை அறைக்குள் ளடைத்திருக்கு மால்மக்க ளென்று மனமகிழ்ந்து நான்பதறி வாலைமுனி யுயிரும் வானவர்கள் தன்னுயிரும் ஆனதினால் பிறவி அமைக்கப் படாதெனவே நானிதற் கஞ்சி நற்பதியில் வைத்திருக்கு என்றுவே தாவுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார் அன்று படைத்திலையே அநேகமனு வாகுமல்லோ அஞ்சுமக்கள் பிள்ளை அவனியைம்பத் தாறதிலும் மிஞ்சிப் பரந்து மேல்சான் றோர்பெருக்காய் இப்பிள்ளை ரண்டும் ஏலமே நீர்படைத்தால் கொப்புநூ றாயிரம்போல் கூடிப்பெ ருக்குமல்லோ பாவி கெடுத்தான் படையாமல் நீர்கெடுத்தீர் தாவிக் கெடுத்தான் சளக்கலியன் மாபாவி இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து மனுவராய்ப் பூமியிலே வைகைக்கூ டவ்வோடு எழுப்ப வேணுமென்று யாம்நிச்சித்தி ருப்பதினால் வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால் அவ்வழியி லவ்வழிகள் அநேகம் பெருகிடவே செவ்வாக நிருமிப்போ திடீர்திடீ ரெனப்படையும் என்றுசொல்ல மூலம் இசைந்துநல்ல வேதாவும் நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம் இப்படி யேபிறவி இவர்செய்வோ மென்றுசொல்லி அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக உடனேநா ராயணரும் உள்ளங் களிகூர்ந்து திடமான கன்னியர்கள் செய்முகம்பார்த் தேதுரைப்பார் நீர்கேட் டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர் உங்களைப்பூ லோகமதில் உடைய வழிக்குலத்தில் நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித் திருப்பதினால் ஏதுபெண்கா ளுங்கள்மனம் ஏதென்று டனேசொல்லும் மாதுக ளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே செங்கருட வாகனவா தேவி மணவாளா நீர் நிச்சித்த நினைவெள்ளுப் போலளவும் சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே எங்களைப்பூ லோகமதில் எங்கள் வழிக்குலத்தில் மங்களமாய்ப் பிறவி வகுப்போ மெனவுரைத்தீர் பிறவிய துநாங்கள் பெண்மனுப் போல்பிறந்தால் இறவி யாகாமல் இருக்க அருள்வீரோ அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால் வல்லாத நாயகமே வந்துநீ ரேற்குமட்டும் மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்க மில்லாமல் சீதமாய் மனுவோடு உறவாடிச் சேராமல் மூடாம லாடை முகமினுக்கிச் சேராமல் பாடாம லந்திசந்தி படுத்துத் துயிலாமல் நன்மை யறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல் தின்மை யறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல் கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல் மயிரு வளர்க்க மனதுவே றெண்ணாமல் கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல் செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல் பக்குவ ஞாயப் பருவம்வந்து வாய்க்காமல் மிக்குவ மான மிகுவாழ்வு சேராமல் சுற்றுக் கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல் ஒற்றுப் பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல் அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல் தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல் இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்துச் சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து இரச்சிப்போ மென்று எமக்கு உறுதிபண்ணி நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும் என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே அன்றுஆ திநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதுதான் பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி வல்லவித மானாலும் மாறாதென வுரைத்தார் வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி நாக்குரைப்பார் பின்னும் நாரா யணரோடு நாங்கள்போய்ப் பிறந்தால் நம்முடைய நாயகமே தாங்கள்வரு மென்றதற்குத் தருணமே தென்றுரைத்தார் அப்பொழுது அய்யா நாராய ணருரைப்பார் செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில் வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும் கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும் சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று) எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம் கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம் சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம் என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய் இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய் வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும் வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார் உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும் திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில் பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள் திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க நாரா யணரும் நல்லசிவ னுமையும் சீராரும் நல்ல தெய்வத் திருமாதும் கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில் ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது

காளி சிறை

மாகாளி யென்ற வடபத்தி ரகாளி ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம் நன்றான கன்னி நாரா யணரிடத்தில் வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான் கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல் சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன் அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன் பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன் இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப் புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள் அப்போத னாதி அய்யாநா ராயணரும் செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார் கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான் பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும் வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும் திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார் வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய் நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன் மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால் மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள் புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள் தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப் பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச் சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில் இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம் நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண் கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம் என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும் மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும் கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால் மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும் இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய் அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை வல்லப் பொருளே மறைகாணா தோவியமே காளி சிறைதான் கவிழ்ந்திருக்கும் ஞாயம்வந்தால் ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும் முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப் பார்த்துநா மிங்கிருக்கப் படுமோகா ணீசுரரே சாற்றும்நீ ரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே உடனேதான் ஈசர் உரைக்கிறா ரன்போரே கடனோகா ணென்னோடு கலங்குமொழி பேசுவது நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து வீட்டையெப்போ கயிலை விளக்குவீ ரென்றுமிக தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும் குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ என்றே காபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள் நன்றென்றா கட்டெனவே நாரணருங் கொண்டாடி

மகாலெட்சுமி மகரமாதல்

லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பா ராதிமுதல் சச்சுடராய் நின்ற தருணத் திரவியமே இதுமுன் பிறப்பு இருந்தா யுருப்பிணியாய் மதுவினியப் பெண்ணே மாயக் கலியறுக்க நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர அலையி லறுமுகவன் அவன்பதியி னாழிதனில் நிலையிலே நின்று நீவளரு கண்மணியே நீவளரச் சூழ நிறைந்ததங்க மாமணியால் பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும் தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும் சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும் சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன் கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன் உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச் செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ கலியுகத்தை முடிக்கக் கண்ணான ஒருயிரை வலியுடனே யுன்னுடைய வயிற்றில் பிறவிசெய்து நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத் தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத் நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத் தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன் கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால் சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும் வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள் அப்போது அய்யா ஆனந்த மேபெருகி செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும் பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில் நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும் 720 சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம் பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த் துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க் காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக் காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப் பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம் கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய் அப்படித்தா னென்பிறவி அருகே வருகையிலே இப்படியே வந்து இருபேரு மோர்பிள்ளைபெற்று நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக் கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம் மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன் உடனேதான் லட்சுமியும் உரைக்கிறா ளாதியுடன் திடமான கோவே செய்ய மணிவிளக்கே என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய என்ன விதமாய் இசைவீர்கா ணென்கோவே என்றுரைக்க அம்மை ஏதுரைப்பா ரெம்பெருமாள் நன்றுநன்று பெண்ணே நமக்குத்தொழி லோகடிது அலையி லுனையும் ஆமதியப் பொன்மகரச் சிலைபோல் வளருவெனச் சிந்தித்தா ரெம்பெருமாள் வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை மடமடென வந்து வாரியெடுத் தாயிழையைச் செந்தூ ரலைவாரி திரைமே லெடுத்திருத்தி அந்தூரு வாரி அம்மை தனையெடுத்துச் சந்தன வாரி சமுத்திரத்தி னுள்ளிருத்திப் பந்தியாய் வைத்த பரமமணிக் கோட்டையதுள் தெய்வரம்பை சூழத் தேவரெல்லா மோலமிட மெய்பரமக் கன்னியர்கள் மிகுவாய்க் குரவையிட இடம்மான மெக்காளம் டகுடகா வென்றிடவே மடம்மான வாத்தியங்கள் மடமடென வேயதிர வலம்புரிக ளெல்லாம் மாதுவந்தா ளென்றூத சிலம்புனைந்த ரத்தினங்கள் சில்விளக் கேந்திநிற்க முத்துகள் சிப்பி முன்வந் தொளிவீச கொத்துக் கொத்தாகக் கோமேதகஞ் சூழ கன்னிமா ரெல்லாம் கால்கவரி வீசிநிற்க 760 தன்னிகரில் லாமறையோர் சாஸ்திரங்க ளோதிநிற்க மகரச் சிலையாள் மாதுதிரு லட்சுமியாள் சிகரகோ புரத்தாள் திருவுருவந் தான்வளர்ந்தாள் பார்பதி மாதுமையும் பரமேஸ்வரித் தாயும் சீர்பதியு மங்கே தினமூன்று நேரம்வர ஈஸ்வரனும் வேதா இவர்கள் தினம்வரவே வாசவனும் வானவரும் வந்துநிதம் போற்றிசெய்ய செய்ய அமரரெல்லாம் சிவசிவா வென்றுநிற்க வெய்யவனுஞ் சந்திரனும் மெல்லிபதம் போற்றிநிற்க புஷ்ப மலர்தூவிப் பொன்னுலகத் தோர்சூழ செப்பமுள்ள மகரச் சிலைபோல் திருவளர்ந்தாள்

அகிலம் எட்டு

divider
மாதுதிரு லட்சுமியாள் மகரச் சிலைபோலே ஒது மணியலைக்குள் ஒவியம்போ லேவளர மாதை மகரச் சிலையாய் வளரவிட்டுத் தாதணியும் நாதன் சங்கரரோ டேதுரைப்பார் கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப் போகவிட்டு நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப் பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார் செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும் நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார்

சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு

அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும் சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில் வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில் பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய் மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே ஆனதா லவரை அவனிதனி லேபிறவி ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால் நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும் இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும் மூவர் நடுவன் முத்தனரி நாரணரின் சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால் எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச் சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று நாடி யகமகிழ்ந்து நாரா யணருடனே சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான் மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில் தானாகிய மான சங்குசரத் தங்கமுடி என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில் இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப் பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள் வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால் எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன் வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும் நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண் அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால் இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும் அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான் அந்தப் பொழுதில் ஆதி சிவமுதலும் வந்தங்கு நின்றார் மாகிருஷ்ண மாலவரும் கண்டந்தத் தேவன் கைமறந்த நிஷ்டையோடு தண்டமிழ்சேர் பதத்தைத் தையலும்வந் தேவணங்கி இத்தனைநாள் யாங்கள் நின்றதவம் கண்டிரங்கிச் சித்த மிரங்கிச் சிவனேநீர் வந்தீரோ எந்தன் பெருமானே இறையவரே வந்தீரோ நந்தகோ பால நாரணரே வந்தீரோ குருவே அரிநாதா கோபாலா வந்தீரோ முருகக் குருபரனே முத்தாநீர் வந்தீரோ செல்வக் கடலே சீமானே வந்தீரோ கல்விக் கடலான கறைக்கண்டா வந்தீரோ அரவணிந் தத்திவுரித்(து) அணிந்தோரே வந்தீரோ பரமசிவ மான பச்சைமால் வந்தீரோ இப்படியே மானாளும் ஏற்றசம் பூரணனும் அப்படியே வந்தோர் அடிபணிந்து போற்றிடவே மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான் தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன் முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில் சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர் அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச் செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள் ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார் அப்போ சிவனார் அகமகிழ்ந்து தேவனோடு இப்போ துன்சிந்தை எண்ணமெல்லாஞ் சொல்லுவென்றார் தேவ னதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான் காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம் பூரணமா யங்கே புகுந்துதோ யென்சிவனே ஐயோநான் சொன்னேனென் ஆயிழையோ டல்லாது கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர் ஊமை மொழிபோல் ஒதுக்கி லுரைத்தாற்போல் நாமறியப் பெண்ணறிவாள் நாடறியா தென்றிருந்தோம் இவர்க ளறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ எவர்களும் நாம்பேசுகையில் இங்குவரக் காணோமே ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமே யென்சிவனே தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா நாரணரே என்சிவனே நாடிப் பொறுவுமையா என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய் நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்ற லேபடிக்கப் பரதே வதையான பைங்கிளியு மப்போது திரமான தாயார் சிவசக்தி பேரதிலும் சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும் விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள் காரணா அரிநாரணா கவிபூரணா வெகுதோரணா கவிஞோர் தொழும் வாரணா கருணகரத் தருணாவெகு தருணா கவிவருணா கவிமால் சிவாபோற்றி காயாம்பூவின் மேனிநிறமாயா சிவசிவாயா கருவா யுருவுருவா யுனைத் தினமே யருள் நியாயா குறிமத்தகா கருணாகரா போற்றி குணசீரா வெகுதீரா நலிவீரா புவிநாதா திருவோடுறு மார்பா சிறியார்மிக அறியாச்செய்த வெறியானதைச் சிறிதாக்கியே சேர்ப்பாய் முகம்பார்ப்பாய் முடிவானதை யறியாமலே மோகமாய் வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே உன்சொற்பதம் அஞ்சல்லென ஒஞ்சிப்பத மஞ்சினோம் உன் செயல்தந் தருள்வாயே இப்படியே கன்னி ஏற்றபர தேவதையும் அப்படியே ஆசிரிய விருத்தமொன்று பாடிடவே கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து மெட்டுக் கொடியிடையே மின்னிடையே நீகேளு உன்புருஷ னங்கே உற்றஎம லோகமதில் இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால் அவனைநீ மறந்து ஆனதெய்வப் பூரணனை இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும் நிறைவேற மாட்டாமல் நினைத்தகே டித்தனையால் பிறபோநீ பூமிதனில் பெரியசான் றோர்வழியில் எமவழியி லோர்பிறவி என்மகவா யங்கிருக்க அமைப்பா னதற்கு அவ்வழிதா னாயிழையே இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங் கழித்து அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ் சரசமற்று எந்நேர முன்றனக்கு ஏக்கமுட னழுந்தி மின்னேகே ளிந்த மிகத்தேவ னுன்வழியில் கொண்டபச்சத் தாலே கோதைய ரேயுனையும் கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால் கருவா லுருவைக் கைக்குள் வசமாக்கிப் பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு இருவ ரொருவரென இச்சைமிகக் கூர்ந்து குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று முற்புரு ஷன்தனக்கு மூலக்கருக் கேடணைத்து இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறியக் கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக் கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும் கேலி மிகவாகிக் கிலேச மிகவடைந்து உதிர வெளியாகி உட்செருமல் விக்கலுமாய்த் தீனறா மந்தச் செடியேற்பச் செய்கையினால் வீட்டை விரித்து மேலேதெய்வ வழியாய் நாட்டை யரசாண்டு நாச்சியார் போலிருப்பாய் என்று சிவனாரும் எம்பெருமாளு முரைத்து அன்று ஏமச்சண்டன் அவ்வழியி லேயமைத்தார் அமைக்க அணங்கும் அவனிதனி லேபிறக்க எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம் மாது புவியில் வளரப் பிறந்தபின்பு தாது கரமணிந்த சங்கு சரத்தாமன் தேவன் தனைப்பார்த்துச் செப்புவா ரெம்பெருமாள் பூவுலகி லுன்றனுட பெண்பிறக்கப் போனதல்லோ ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான் ஆறுசெஞ்சடை சூடிய ஐயனே அலையிலேதுயி லாதி வராகவா நீறுமேனி நிரந்தரம் பூசிவா நீசிவாசிவ மைத்துன ராகவா வீறுசத்தி மணவாள ரானவா வீரலட்சுமி மன்னரரி ராகவா ஏறுமீதினி லேறிடு மீஸ்வரா எமையாட்கொள் ளும்நாரணா போற்றியே சீதமாங்குணச் செல்வனே போற்றி சிவசிவா சிவனே போற்றி நீதவா நட்பெய்துவா போற்றி நீசிவா சிவராகவா போற்றி மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரிசெல்லனே போற்றி ஆதவா அரிநாரணா போற்றி அனாதியேயுன் றன்போற்றிப் போற்றியே அய்யனேதவம் யானிற்கும் போதிலே அந்திராணி மன்னனிந்திர னானவன் பொய்யின் மாய்கைநினை வதினாலவன் பொற்பக்கிரீடமீ துற்பனத் தாசையால் மெய்யின்ஞா னத்தவம் விட்டுவாடினேன் வித்தகாவுன் சித்த மிரங்கியே செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள் சிவசிவா சிவசிவா சிவாபோற்றியே போற்றியென் றேத்தித் தேவன் பொற்பதம் வணங்கி நிற்க ஆத்தியே சூடும் வேதன் ஆகமே மகிழ்ச்சை கூர்ந்து தீத்திய ஆய னோடு செய்தியே தெனவே கேட்க நாற்றிசை புகழுந் தெய்வ நாரண ருரைக்கின் றாரே தேவன் வணங்கித் திருப்பாதம் போற்றிடவே ஆயனோ டந்த ஆதிசிவ மேதுரைக்கும் அச்சுதரே தேவனுக்கு ஆன வளமையது நிச்சயமாய்ச் சொல்லி நீரனுப்பு மென்றுரைத்தார் அப்போது நாரா யணரு மகமகிழ்ந்து செப்புகிறோ மென்று தேவனுக்கங் கேதுரைப்பார் கேளாய்நீ தேவா கீழான மங்கையரைத் தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி சண்டாளா நீநினைத்த நினைவுதவத் தொத்திடுமோ சூழ வினையறுத்துச் சுருதிநே ருள்ளாக்கி நீளநூ லிட்டு நீதவசு நிற்கையிலே ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது ஏதுகா ணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால் மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீசிலநாள் தொந்துயர மெல்லாம் தொல்புவியி லேதொலைத்துக் கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக் கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே நஞ்சுதின் றானாலும் நாண்டுகொண் டானாலும் உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகிப் பின்னுஞ்சில நாள்கழித்துப் பெண்ணோ டுறவாடித் தன்னோவியம் போல் தானிருக்கும் நாளையிலே உன்துயரந் தீர்த்து உன்னையெடுத் தென்மகவாய் என்துயர மெல்லாம் யானேநீ மாற்றல்செய்து என்வரிசை தானம் எல்லாமுனக் களித்துப் பொன்னரசு தந்து புவியாள வைத்திடுவேன் என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே அன்றந்தத் தேவன் அவரடியைத் தான்போற்றி அய்யாவே பூமிதனில் அவதரிபோ என்றீரே பொய்யா னகலியன் பூமிதனி லேபிறந்தால் பிறந்த வழியும் பிதிருமந் தக்குலமும் அறந்தழைக்கு மாலே அதுவுமென் னாற்கெதிதான் பெற்றுக்கொள் ளும்படியாய்ப் புத்தி கொடுத்தருளிப் பற்றுத லாகப் பலன்கொடுப்போ மென்றுசொல்லும் அல்லாம லென்னைவந்து ஆட்கொள்ளும் நாளதுதான் எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமையா அப்பொழு தந்த ஆதிநா ராயணரும் செப்புகிறா ரந்தத் தேவன் தனக்குத்திடம் தெச்சணா பூமிதனில் தேசபர சோதனைக்கு நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக் கடையாளம் பூமியி லோர்திக்குப் பொருந்தி மிகவாழும் சாமிவே தமறந்து சுழல்வேத முண்டாகும் சாதி வரம்பு தப்பி நிலைமாறும் பாரிகட்கு மூப்புப் பார்மீதி லுண்டாகும் நீசக் குலங்கள் நெளுநெளெனப் பூமிதனில் தூசியிடத் தெண்டம் தொடர்ந்து பிடிப்பார்கள் 220 வானத் திடிகள் வருடவரு டந்தோறும் நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும் சீமை தென்சோழன் சீர்பயிரு மேவிவரும் இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும் தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும் நச்சேத் திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும் பொய்ச்சேத் திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும் நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும் சிவ்வா லயங்கள் தேய்ந்து சுவரிடியும் கிணறு பாழாகும் கீழூற்றுப் பொய்யாகும் இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள் மனுக்கள் தங்களுக்கு மாகலச லுண்டாகும் மாமோக ஆசையினால் மாசண்டை யாகிவரும் காமோக வெறியால் கனபழிக ளுண்டாகும் மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும் தாதாவை வேலை சந்ததிகள் கொண்டிடுவார் மாடாடு தன்வயிற்றில் மனிதர்போல் தான்பிறக்கும் கோடா னதுபெருத்துக் கொல்வார் சிலபேரை காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும் மாணிக்கத் தங்கம் வையிர மிகமறையும் நீணிலத்தில் பேய்கள் நிரந்துமிகக் கோட்டிசெய்யும் மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும் பேதையர்கள் பிள்ளை பிறக்கு மதிசயம்போல் கோதையர்கள் கொங்கை கூடாம லேவாழ்வார் கூடப் பிறப்பைக் கொடும்பகைபோ லெண்ணிடுவார் வான முறுமும் மழைகீழ்ச் சொரியாது தான மழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும் ஈனருக்குக் காலம் ரெம்பரெம்ப வுண்டாகும் வீணர் பெருப்பார் வீடதனைக் கெடுப்பார் தாணருட வேதம் தலையழிய விட்டிடுவார் பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிக வுண்டாகும் மெய்வேதந் தன்னை விரும்பா திகழ்ச்சிசெய்வார் கள்ளர் பெருப்பார் கறியுப்பு மேமலியும் கொள்ளையாய்ச் சம்பை கோடாமுக் கோடியுமாய் நாணி யிறப்பார் நஞ்சித்தின் றேயிறப்பார் கேணிக்குள் ளேயிறப்பார் கீறிக்கொண் டேசாவார் வயிர முழுங்கி மாள்வார் சிலபேர்கள் துயரம் பொறுக்காமல் தோயமதி லேவிழுவார் ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும் காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும் சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள் ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார் கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும் சட்ட மழியும் சந்தியம்பல மிடியும் கூட்டங் குலையும் குடும்பம் பகையாகும் நாட்டை யரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும் கோட்டை யழியும் குச்சிக்கட் டைமதிலாம் சீவசெந் தெல்லாம் தீனில்லாத் தட்டழியும் சூவை பெருக்கும் சூறா வளிமீறும் அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும் முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும் இப்படித்தா னல்லாமல் இன்னு மநேகவளம் செப்பத் தொலையாது செப்புவேன் பின்னுனக்கு நீகேட் டதற்கு நிலையாக இத்தனையும் நான்தேட் டமாக நாடியுன் னோடுரைத்தேன் உன்பேரால் நானும் உள்ளாசை கொண்டிருந்துன் தன்பேரா லென்றனக்குத் தலைச்சிறைதான் மாறுமென்று சொன்னே னுனக்குச் சொல்லுவே னின்னமுமே என்ன இனிப்பிறக்க ஏதுனக்குச் சங்கடங்கள் என்றுரைக்க நாதன் இசைந்ததே வனுரைப்பான் அய்யாவே யென்னுடைய ஆதித் திருவுளமே பொய்யா னகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே சாதி பதினெண்ணாய்த் தான்பிரித்தா னேநீசன் ஆதித்தா திதனிலே அமையுமையா என்கோவே அல்லாம லுன்றனக்கு ஆதிவரை யெந்நாளும் நல்லாகத் தொண்டுபண்ணி நவ்வியிருக்கு மனுவில் படையுமையா யென்றன் பிதாவே யெனப்பணிந்தான் குடையொன் றாற்பெரிய குருவு மகிழ்ந்துரைப்பார் நல்லதுகாண் தேவாநீ நம்மக்கள் ஏழ்பேரில் வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகவித்தாய் அவ்வழியி லம்மனுவில் ஆனசான் றோர்குலத்தில் மெய்வழியி லங்கே மிகப்பிறக்கப் போநீயென்றார் நல்லதுதா னென்று நவிலுவான் தேவனுமே வல்லவரே மூவருக்கும் மைத்துனராய் நிற்போரே என்னைப் பிறவி இப்போது செய்யுமென்று வன்னத் தேவாதி வணங்கிநின்றான் மாயவரை

ஆத்ம ஜெயம்

அப்பொழுது அய்யா நாராயணர் மகிழ்ந்து முப்பொழுது வுள்ள முறைமையது கூறலுற்றார் ஆறுதரம் நம்மை அகம்வைத்துக் கொண்டசடம் 300 பேதுபெற்ற தில்லையே பேறுநா மீந்திலையே அச்சடல மம்மலையில் அருந்தவசு பண்ணினதே இச்சடல மீடேற இந்தநாள் வந்துதென்று தேவன் சடலமதைத் திக்கென் றழித்துவிட்டு மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும் வரவழைத்து வாருமென்று மறையோரைத் தானேவி விரைவாக வாருமென்று விடைகொடுத்தா ரெல்லோரும் நடந்து மறையோர் நல்ல மலைபார்த்துச் சடம் வீற்றிருந்த தங்கமலை மீதில்வந்தார் மலைமீதில் வந்து மலைப்புதுமை தான் பார்த்து அலைமீதில் வாழ்துவரா ஆனபதி தன்னுடைய வடவாசல் நேரே வாழு மலையிதுதான் தடவரை யிம்மலையில் தானிருக்கும் நதிகள் தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக் கிணறுடனே சங்கமகி ழிம்மலையின் தடாகமிது நன்றெனவே கரைகாணாத் தேவர் காட்சியிடு மிம்மலைதான் விரைவான மாமுனிவர் வீற்றிருக்கு மிம்மலைதான் மரித்தோரைத் தானெழுப்பும் வாய்த்தசஞ்சீ விவளரும் பதித்தான மிம்மலையின் பகுத்துரைக்கக் கூடாது என்றுசொல்லித் தேவர் ஏற்றமலைக் குள்ளேகி நன்றுநன் றென்று நாடியவர் பார்க்குகையில் கண்டாரே காயாம்பூ கண்ணர்முக் கூடதையும் கொண்டாடிக் கூடதையும் குளிர்ந்தரத மீதேற்றி நடந்தார் கயிலை நாதர்திருக் கூட்டமதில் வடந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும் பார்த்துச் சடலமதைப் பதிந்தமுகத் தோடணைத்துத் தேற்றி உயிர்க்கொடுத்துச் செப்புவார் கூடுடனே எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச் சுமந்து அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகிப் பூமி கடலும் பொருப்புப்பூ லோகமெல்லாம் நேமித் தெனைச்சுமந்து நேட்டமுடன் திரிந்தாய் நீசெய்த நன்றி நினக்குரைக்கக் கூடாது நானுனக்குச் செய்யும் நன்றி மிகக்கேளு இத்தனை நாளும் எனைச்சுமந்து பாடுபட்டாய் புத்திரனாய் நீயெனக்குப் பெரியதெய்வ உயிரில் பிறந்து புவிமீதில் பின்னுஞ்சில நாட்கழித்துச் சிறந்த முகூர்த்தமதில் சேர்த்தே உனையெடுத்து உன்றனக்குப் புத்தி உபதேசங் களுரைத்து என்றன் துயரமாற்ற யுகசோதனைக் கனுப்பி உன்றன்துயர மாற்றி உகத்துயர மும்மாற்றி என்றன்துயர மாற்றி ஈசர்துயரம் மாற்றி கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச் சலிவில்லாத் தர்ம தங்கநவ ரத்னபதி முத்துநவ ரத்தின முடியுனக்கு நானருளி எத்திசையு மெய்க்க ஏற்றமனு அன்போர்கள் கட்டியங் கூறிக் காட்சியிட்டு வுன்றனக்கு எட்டுத்திக்கும் நின்றேத்த ஏற்றகுடை யொன்றுதந்து அரசாண்டு நீயும் அழியாத் திருவுளம்போல் வீரசான்றோர் சூழ வீரக் கொடிநிறுத்திச் செங்கோற்கு தர்ம சிவசெங்கோ லுமருளி எங்கோ லரசு என்நாமச் சக்கரத்தால் சீமையைம்பத் தாறுமுன் சொல்லொன்றுக் குள்ளாக்கிப் பூமுகச்சிங் காசனமும் பொன்முகச்சிங் காசனமும் கோமுகச்சிங் காசனமும் குணமுகச்சிங் காசனமும் மாமுகச்சிங் காசனமும் மயில்முகச்சிங் காசனமும் அன்னமுகச் சிங்கா சனமீதோ டாகவேதான் பொன்னம் பலம்போல் பெரியசிங் காசனந்தான் முப்பத்தி ரண்டும் முழுது முனக்கருளி செப்பொத்த மாணாக்கர் சேவிக்க வுன்றனக்குத் தருவேனா னுன்னுடைய தாயார்பே ராணையதாய் என்றையா நாதன் எடுத்தவர்க் கேவுரைக்க நன்றெனவே வானோர் நற்பூரணனைக் கொண்டாடிப் பேறுபெற்ற சென்மம் பிராணனிது நன்றெனவே பூருவத்தி லுள்ள பூசாந்திர மிவ்வளமை என்னதவஞ் செய்தாரோ இத்தேவன் தாய்தகப்பன் பொன்னப்ப நாரணர்க்கு பிள்ளையென வந்துதிக்க நாரண ரைப்பெறவே நல்ல தசரதரும் பூரணமாய் நின்றதவம் புகன்றிடவே கூடாது பன்னீரா யிரம்வருசம் பாரத் தவசுபண்ணி முன்னூறு வாரமதாய் உலகளந்தோர் ராமருரு கண்ணாளர் தந்தமக்கு கற்பகம்போ லித்தேவன் மதலையாகப் பிளந்து வையகத்தை ஆள்வானென்று கதலிவாய் நாதன் கற்பித்தா ரிப்படியே ஆருபெற்ற பேறும் அல்லப்பே றிப்பலன்தான் பேறுபெற்ற வரிவர்தான் பிறந்த இனமதிலே நாம்பிறந்தா லும்பெரிய நலங்கிட்டு மென்றுசொல்லித் தாம் பிறப்போமென்று சான்றோராய்த் தான்பிறந்தார் அவர்கள் பிறக்க ஆனதெய்வப் பூரணனை திவசமது பார்த்துச் செய்தார் பிறவியது செய்யச் சிவமும் சிவவேதனும் மகிழ்ந்து வைய மளந்த மாலும்பிறவி செய்தார் கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்கத் தர்மச்சம் பூரணனைத் தரணிப் பிறவிசெய்தார் செய்த சடமதையும் சுமக்கச் சடம்பார்த்து மெய்யிசையும் நாதன் மேதினியில் செய்தனராம் சடம்பிறக்க லோகம் தட்டுமிக மாறி உடன்பிறக்கச் செய்தார் உலகளந்தோர் கற்பினையால் அன்று பிறவிசெய்தார் அவனிசோ தனைக்கெனவே எண்ணமில்லை யென்று ஈசுரரு மாயவரும் கொண்டாடி ஈசுரரைக் கூறுவா ரச்சுதரும் கெண்டையக்கண் ணீசுரரே கேட்டீரோ யென்றனெண்ணம்

திருமால் கலைமுனிக்கு அருளல்

பஞ்சவர்க்கு அஞ்சல்செய்து பார்மீதில் நானிருக்க வஞ்சகநீ சக்கலியன் வந்ததுகண் டேபதறி நடுநடுங்கி நானோட நல்லகலைக் கோட்டுமுனி பொடுபொடென வந்தான் போற வழிதனிலே ஏன்காணும் மாயவரே எய்த்திளைத் தோடுவதேன் கண்காணாப் போறேனென கலைக்கோட்டு டனுரைத்தேன் என்ன விதத்தாலே என்றே யவனிசைய சொன்னதுறு கலியன் சூட்சியினா லென்றவுடன் அப்போ முனியும் அவனேது சொல்லலுற்றான் இப்போநீ ரோடுகிறீர் இவனை யழிப்பதற்கு எப்போ வருவீர் இசையுமென்றான் மாமுனிவன் அப்போ முனியோடு அருளினது நீர்கேளும் மாமுனியே நீகேளு வஞ்சகநீ சக்கலியை நாமுன்னின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ கலியனுட கண்ணு கண்டால் பவஞ்சூடும் திலிய அவனுயிரைச் செயிக்கயெவ ரால்முடியும் முன்னின்று கொல்ல மூவரா லுமரிது பின்னின் றவனவனால் பேசாதே மாழவைப்பேன் வல்லமையுங் காட்டேன் மாநீசன் கண்ணின்முன்னே உற்பனமுங் கொடேன் ஒன்றறியா நின்றிடுவேன் வந்தேனெனச் சொல்வார் வரவில்லை யென்றிடுவார் என்றன்பே ரோகாணும் யாரோஎனச் சொல்வார் இதோவந்தா னென்பார் இவனில்லை யென்றிடுவார் அதோவந்தா னென்பார் அவனில்லை யென்றிடுவார் இப்படியே சூட்சமொன்று எடுப்போம்நாம் மாமுனியே எப்படியு முள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே அறிந்தோ ரறிவார் அறியாதார் நீறாவார் செறிந்தோர்கள் வாழ்வார் சேராதார் போய்மாழ்வார் சாத்திரத்தி லுந்தோன்றேன் சதுர்மறையைத் தாண்டிநிற்பேன் சேத்திரத்தி லுமடங்கேன் செய்தவத்தி லுமடங்கேன் அன்பிலு மடங்கேன் அறத்திலு மேயடங்கேன் வம்பிலு மடங்கேன் வணங்கிடி லுமடங்கேன் கும்பிடி லுமடங்கேன் குவித்திடி லுமடங்கேன் நம்பிடி லுமடங்கேன் ஞானத்தி லுமடங்கேன் யோகக் கிரியை உறுசரிதை யிலடங்கேன் விற்பனத்தி லடங்கேன் வினோத மதிலடங்கேன் சொற்பனத்தி லடங்கேன் தெரிசனத் திலடங்கேன் கனாவி லடங்கேன் கைகாட்ட லிலடங்கேன் அனாவி லடங்கேன் அச்சரத்திலு மடங்கேன் இத்தனையிலு மடங்காது இருந்து பகைமுடிப்பேன் என்றுநான் சொல்ல ஏற்றகலைக் கோட்டுமுனி மன்றுதனில் வீழ்ந்து மறுகியழு தேபுலம்பி மண்ணிலு மடங்கா மரத்திலு மடங்கா மறையிலு மடங்கா பலவசத்திலு மடங்கா கண்ணிலு மடங்கா கருத்திலு மடங்கா கவியிலு மடங்கா பலவிதசெபிப் பிலுமடங்கா எண்ணிலு மடங்கா இகத்திலு மடங்கா இறையினி லடங்கா இரங்கிலு மடங்கா ஒண்ணிலு மடங்காத உனைவந் தடைந்திட உரைத்திட மருளென பதத்தடிமிசை விழுந்தான் மறையினி லடங்கா இறøயினி லடங்கா வணங்கிலு மடங்கா பலவகையிலு மடங்கா துறையினி லடங்கா தொல்வியி லடங்கா சுகயினி லடங்கா சுருதியி லடங்கா உறவிலு மடங்கா ஒளியிலு மடங்கா உகத்திலு மடங்கா ஒருவிதத்திலு மடங்கா புறத்திலு மடங்கா அகத்திலு மடங்கா புகழ்ந்துனை யடைந்திட வகுத்துரையென பதத்தடிவிழுந்தான் 440 சரியையி லடங்கா கிரியையி லடங்கா சையோகத்தி லடங்கா ஞானத்தி லடங்கா கருத்தினி லடங்கா கலைக்கியானத் திலடங்கா கனாவிலு மடங்கா கருவிலு மடங்கா உருவிலு மடங்கா உருகினு மடங்கா ஒன்றிலு மடங்காத உனைவந் தடியாருன தருகினி லடங்கிட அருளுரைத் திடுவென அருள்முனி பதத்தடிமிசை விழுந்தான் உகத்திலு மடங்கா ஓதிலு மடங்கா உணர்விலு மடங்கா உற்பனத் திலுமடங்கா தவத்திலு மடங்கா தழுவிலு மடங்கா தனத்திலு மடங்கா தயவிலு மடங்கா அகத்திலு மடங்கா புறத்திலு மடங்கா அசத்திலு மடங்கா புசத்திலு மடங்கா - மனத் தகத் தடக்கியுன் பதத்தடி பணிந்திட வகுத்துரை யருளென பதத்தடிமிசை விழுந்தான் ஓரெழுத்து மீரெழுத்தும் உற்றபர மூன்றெழுத்தும் ஆறெழுத்து மஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும் ஏதெழுத்திலு மடங்காது இருந்துபகை முடிப்பேனென ஓதினீரே அய்யா உலகளந்த பெம்மானே எட்டாப் பொருளே எங்கும் நிறைந்தோனே கட்டாக் கலியைக் கருவறுக்க வந்தீரால் நாங்களுமைக் கண்டு நலம்பெறுவ தெப்படித்தான் தாங்கள் மனதிரங்கித் தான்சொல்ல வேணுமென்றான் அப்போ முனிக்கு அருளினது நீர்கேளும் இப்போது மாமுனியே இன்றுநீ கேட்டதுதான் ஒருவ ரறியாத உபதேசங் கண்டாயே கருதி வருந்தினதால் கட்டுரைப்பேன் கேட்டிடுநீ எனக்கா கும்பேர்கள் இனங்கேளு மாமுனியே புனக்கார மில்லை பூசை முறையுமில்லை கோவில்கள் வைத்துக் குருபூசை செய்யார்கள் பூவதுகள் போட்டுப் போற்றியே நில்லார்கள் ஆடு கிடாய்கோழி அறுத்துபலி யிடார்கள் மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள் என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும் அன்போ டவரை ஆதரிக்கும் பேராகும் இரப்போர் முகம்பார்த்து ஈவதுவே நன்றாகும் பரப்போரைக் கைசேர்த்துப் பணிவதுவே நன்றாகும் என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும் அன்போராய் வாழ்ந்தாலும் அறிவுநினை வொன்றானால் நாம்வந்தோ மென்ற நாமமது கேட்டவுடன் தாம்வந்து வேடமிட்டோர் சாதியது நன்றாகும் அல்லாமற் கேளு அரிய முனியேநீ எல்லா அமைப்பும் ஏலமே விட்டகுறை எச்சாதிக் காச்சோ அச்சாதி நன்றாகும் எவர்க்கு மிகஈந்து இருப்போரே நன்றாகும் அவர்க்குதவி செய்வோர் அவ்வினமும் நன்றாகும் தாழ்மையாய் வாழ்ந்த சாதியது நன்றாகும் ஏழ்மையாய் வருவோம் இரப்பன் பரப்பனென இரப்பனைக் கைகொண்டோர் எனையேற்றார் மாமுனியே பரப்பனைக் கைகொண்டோர் பரமேற்றார் மாமுனியே சினமு மறந்து செடமுழிக்கும் பேர்மனுக்கள் நினைவுக்குள்ளே நாம் நிற்போங்காண் மாமுனியே இனத்தோடே வொத்து இருந்துமிக வாழ்ந்தாலும் சொன்ன நினைவதுக்குள் துயிலாமல் வாழ்வோங்காண் மாசுக் கலியை மனதூடா டாதேயறுத்து வாசு நினைவில் வந்துநிற்போம் மாமுனியே பின்னுமொன்று கேளு ஒருவர்க்கோர் வாரமுமாய் நின்றோ முனியேயினி நீசக் கலியறுக்கச் சென்றோமே யானால் செய்யுந் தொழில்கேளு காலுக்குள் ளேதிரியாம் கையதுக்குள் ளேதிரியாம் மேலுக்குள் ளேதிரியாம் விழியதுக்குள் ளேதிரியாம் கண்டெடுத்தார் வாழ்வார் காணாதார் வீணாவார் பண்டைப் பழமொழிபோல் பார்மீதி லாட்டுவிப்பேன் கண்டெடுத்துக் கொண்டோர் கரையேறு வாரெனவும் தொண்டனெனக் கண்டு சொன்னேனா னுன்னோடு தாய்தமர்க ளென்றும் தனது கிளைகளென்றும் வாயுரமாய்ச் சொல்லும் வம்பரென்றும் பார்ப்பதில்லை அன்பாகி வந்தவரை அலைச்சல்செய் தேற்பதுண்டு வம்பான மாற்றானை வளர்த்தே யறுப்பதுண்டு எட்டியு மெட்டாத எழைக் குணம்போலும் கட்டியுங் கட்டாத கடிய சொரூபமதும் வேளைக்கு வேளை விதக்கோல முமணிந்து நாளுக்கு நாளாய் நடக்கு மதிசயமாய் இரப்ப வடிவாய் இருந்து கலிதனையும் சங்கி லிரந்து தான்வளர்ப்பே னன்போரை என்றுரைக்க நாதன் எடுத்துமுனி யேதுரைப்பான் மன்று தனையளந்த மாயத் திருமாலே இந்த விதமாய் எழுந்தருளி வந்திருப்ப(து) எந்தச் சொரூபம் எடுத்தணிவீ ரெம்பொருமாள் கேட்டான் முனியும் கீர்த்தியுள்ள ஈசுரரே நாட்டான மாமுனிக்கு நானுரைத்தது கேளும் எகாபரத்தை நானினைத்து ஏழுபிள்ளை ஈன்றெடுத்து மகாபரனார் செயலால் மக்களுக்குச் சொத்தீய நானுப தேசித்து நாட்டில் மிகவிருத்தி மானுவஞ் சோதிக்க மகற்கு அருள்கொடுத்து மாசுக் கலியறுத்து மக்களொரு மித்தவுடன் பாசு பதங்கொடுத்துப் பாலன்கை யால்விளக்கிக் கூப்பிடுத லொன்றில் குவலயத்தைத் தான்கிறக்கிச் சாப்பிடுவே னஞ்சைத் தன்பாலை யாளவைப்பேன் என்று கலைமுனிக்கு இயம்பிவந்தே னீசுரரே அன்று மொழிந்ததுக்கு அமைத்ததுகா ணிம்மகவு சந்தோச மாச்சுதுகாண் சங்கரரே நீருமிப்போ வெந்தோசந் தீர்ந்துதென்று வெள்ளிக் கயிலையிலே ஒருவிடத்தி லெக்கியத்தை ஊட்டிக் கனலெழுப்பித் திருநடன மாடுமென்று செப்பினா ரொப்புடனே அப்படியே நல்லதென்று அரனு முமையாளும் முப்படியே மாலினிக்கு ஒன்பதாம் பேறெனவும் வேதனுக்கோ ராயிரம் பிறவி யாச்சுதென்றும் மாது உமைக்கு வளர்பிறவி ஏழெனவும் திதுவுக்கோர் பத்தாம் செய்யப் பிறவியென்றும் சதுர்மறைக் கேழெனவும் சாஸ்திரத்துக் கோர்நான்கும் வானவர்கோன் றனக்கு வளர்பிறவி மூன்றெனவும் தானவர்க் கேழெனவும் சரசுபதிக் காயிரமாம் தொண்டர் தமக்கு சூல்பிறவி யொன்றெனவும் அண்டர்கள் மெய்க்க அரனடன மாடலுற்றார்

திருநடன உலா

நாதன் முறையார்க்கு நற்பிறவி யொன்றுபத்தாம் வேதன் றனக்குப்பிறவி ஆயிரமாம் - வெண்டரள மாதுக்கு மாயிரமாம் மாதுமைக் கோரேழாம் சீதுக்குப் பத்தெனவே செப்பு இந்திரற்கு மூன்றெனவும் இறையவருக் கேழெனவும் சந்திரற் கோரேழாம் சாற்று - நன்றியுள்ள மறையதுக்கு மோரேழாம் மானமுள்ள தொண்டருக்கு இறப்பிறப்பில் லாப்பேறென் றியம்பு என்றிவகை ளெல்லா மிப்படியே வந்துதென்று ஒன்றியுள்ள சித்தாதி ஓதினான் - பண்டையுள்ள தாவடத்தை மேவிடத்திக் கோவிடத்தி லோமிடத்தி நாவிடத்திப் பூண்டாடி னார் தன்னாலே முளைத்த சற்கணையின் றண்வாங்கிப் பின்னாலே யோர்கணைப் பீறி - பின்னாளே பீறுங் கணையதினால் பெரும்புவியெல் லாந்தோன்றிச் சீறுங் கலிவயதால் சென்றுதோ வானத்தளவில் வளர்ந்த கம்பத் தண்ணருளால் சேனைச் செகம்படைத்த செல்வமோ - மானத்த மாகலிய னேதுவினால் வாழ்விழந் திவ்வுகமும் போகத்தருணம் வந்து பூட்டினதிப் போது நல்லாறு சாஸ்திரமும் நாலுமறை வேதமதும் 560 பொல்லாக் கலியினால் பொய்ச்சூடி - பொல்லாப் பொடியக் கலியோடு பொன்றியடி வேரறவே இடியத்தான் வந்தொத்த தின்று பக்கம் பதினைந்தும் பார்மேடம் பன்னிரண்டும் வக்கணைக் கோளொன்பதுவு மங்கி - அக்கிகொண்(டு) அழிந்த கலியோ டலமாந் தழிந்திடவே சுழிந்தகன லாறுவந்து சுற்றிச்சோ மாந்திர தந்திரத்தை வைத்திய வாகடத்தைச் சூழ்ந்திருந்த அட்சரத்தைச் சோதித்து - ஏய்ந்திருந்த இழகு கலியோ டிம்முறையெல் லாமொடுக்கிக் களவறுக்கச் சோதியொன்று காணுதோ அய்யமிட் டுண்ணாத அரும்பாவி யாவரையும் பொய்யரையும் வெட்டிப் பெலியாக்கி - மெய்யிழந்து நையுங் கலியோடு அனலாவிக் கொண்டெரிக்க வெய்யவன்போல் சோதியொன்று மேவுதோ பத்திசோ தித்தே பலநாளுங் காத்திருந்த வித்தகனை வந்து வேண்டார்மேல் - வீடிழந்து செத்திறந்து தீநரகச் சீக்கூட்டி லேயடையக் கொத்தியருந் தப்புழுக்கள் கொஞ்சுதோ பாங்கலிய னேதுவினால் பண்டுண்டு செய்ததெல்லாம் மூங்கிக் கலியதனுள் மூடி - மூச்சுவிட்டு ஓங்குவ தோங்கி உறங்குவது தானுறங்கி மூங்கிக் குளிப்பதுநாள் முற்றுதோ இலச்சைகெட்ட பாவி யென்றுவந்தா னன்றுமுதல் நற்சடலங்கள் நல்வகைகள் நாடிழந்து - நாணமுற்றுப் பட்சிமுதல் மாமிருகம் பால்நரிகள் கற்றாவும் அச்சமற்று வாழ்புவியொன் றாகுதோ பொல்லாத் துரங்கள்கொண்ட பேய்ச்செடிகள் தானொழிந்து கல்லாத புல்லர் கருவொழிந்து - எல்லாம் நல்லோராய்ச் சாகாமல்நாளும் நகரொன் றானதுக்குள் சொல்லொன்றாலாள சோதியொன்று தோணுதோ தாணுமால் வேதன் தற்பொருளாய் முப்பொருளும் ஆணுவமா யொன்றி லடங்குதோ - அஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும் ஆங்கார மூன்றெழுத்தும் ஓநமோ வென்றதுக்குள் ளொடுங்குதோ ஆகாத்த வஸ்துவெல்லாம் அழித்துநர கத்திலிட்டு வாகாய்க் குழிமூட வந்துதோ - சாகாத சனங்கள்பல வஸ்துவையும் தர்மபதி ராச்சியத்தில் இனங்களொன்றாயாள ராசாவொன் றாகுதோ பொன்னூற்றுத் தன்னூற்றுப் புரவுதன்னால் விளையூற்று முன்னூற்று யோசனை யுலாவுசுழி - பன்னூற்றுப் பாலூற்று மேலூற்றுச் சேலூற்று வாலூற்று மாலூற்று மாபதியு மாகுதோ செப்பொத்த பொன்னும் சிவமேடைசிங் காசனமும் முப்பத்தி ரண்டறமு மோங்குதோ - ஒப்பற்ற ஊர்தெருவு மொன்றதுக்குள் ஓர்யோசனைத் தெருக்கள் சீர்பதினா யிரத்தெண் சேருதோ தெருக்கள்பதி னாயிரத்தெண் செந்திருமால் வாழ்பதிக்குக் குருக்களொன்று விஞ்சையொன்று கூறுதலோ - மருக்கள் மாறாமல் வாழ்பதிக்கு மணங்கொடுத்து நிற்பதல்லால் வேறார்க ளும்பறிக்க வேண்டுமோ பொற்மைப் பதியில் பொன்வாச லொன்றதிலே தர்மமணி யொன்று தாங்குதோ - தருமமனு மணியினது கூறறிய மணிகணீரென் றதல்லால் இனியிரு ளில்லா தேகுதோ அலைந்தலைந்த சூரியனும் அவனலையச் சாயாமல் நிலந்தெரிய எப்போதும் நேரே - குலைந்தலைந்த கார்மேகத் தட்டதெல்லாம் கூண்டுடைந்து வானமதில் ஊர்மேகமெல்லம் ஒருமேக மாகுதோ தோணிக்கச் சிந்தை துலங்கிவெளி காட்டுமல்லால் காணிக்கை யென்றயிறை காணாதோ - மாணிக்கக் கல்லால் வளர்ந்தபதி காணுமொளி யல்லாது பொல்லாரெனப் பேச்சுப் போச்சுதோ ஈசர் நடன மிருபத்து ஒன்றதுக்குள் தேசமது தீதுநலஞ் செப்பினார் - வாசமுடன் வன்னி யமர்த்தி மாதுமையைத் தானோக்கி உன்னிச் சிவமுரைப் பார் ஈசர் மகிழ்ந்து ஏந்திழையைத் தானோக்கி வாச முடனீசர் வகுப்பா ரம்மாதோடு முன்னே மொழிந்த முற்றாண்ட வமதுக்குப் பொன்னே யிந்நேரம் புரிந்ததுநீ கண்டாயே அப்பொழுது ஈஸ்வரியும் அரனை மிகப்போற்றி இப்பொழுது என்னுடைய இராச மகாபரனே செப்போடு வொத்தச் சிவனே சிவபரனே ஆடினீரே தாண்டவந்தான் அநேக வளங்கள்சொல்லிப் பாடினீரே அய்யா பாட்டு வழுகாதே தாண்டவ மாடிப்புரிந்தால் சத்திசிவம் வரைக்கும் மாண்டாரைப் போற்கிடந்து மறுத்தெழும்ப வேணுமல்லோ அல்லாம லென்னுடைய அண்ணர் நினைப்பதிலே நல்லவரே கொஞ்சம் நானறிந்தது கேளும் காரணமா யண்ணர் கலியுகத் தைமுடிக்க நாரணர்தான் பூமியிலே நடப்பது நிசமானால் நம்மையு மிங்கிருக்க ஓட்டார்காண் நாரணரும் எம்மழையி லானாலும் எவ்வெயிலி லானாலும் கொந்தலி லானாலும் கூர்பனியி லானாலும் கந்தத் துணிகள்தந்து கையில்திரு வோடுதந்து என்றனக்கு நல்ல இளங்குறத்தி வட்டிதந்து மைந்தன் சரவணற்கு மறிப்பு மிகக்கொடுத்துப் பிரமனுக்குக் கோலமிட்டுப் பிசாசுத னைவிரட்டி வரமுள்ள தேவதைக்கு மாற்றி யுருக்கொடுத்து லோகமதில் நம்மையும் உகக்கோலங் களிட்டி வேகத்துடனே மேதினியெல் லாந்திரிந்து கலிக ளகலக் காண்டங் கழிக்கவென்று பலிகாண வைப்பார் பரசோ தனைக்கனுப்பி இப்படியே தோணுதுகாண் என்னுடைய சிந்தையிலே எப்படியும் வந்து இதுசமையு மீசுரரே என்று உமையாள் ஈசர்தனை வணங்கி அன்று மொழிந்து அவள்நிற்கும் வேளையிலே நாரா யணரும் நல்ல சிவனிடத்தில் சீராக வந்து தெண்டனிட்டுத் தானிருந்தார் இருந்து மாலோனும் இருதயத்தி னுள்மகிழ்ந்து பொருந்துவிழி தங்கையோடு புகலுவா ரம்மானை என்னுடைய தங்கையரே எனைமேனி யாக்குவளே உன்னுடைய தன்பொருட்டால் உலகளந்தோ னானாகி நாட்டி லென்பேரு நடத்திவைத்த நன்னுதலே கோட்டு வரையாளே கோவே யென்தங்கையரே நீயும் நம்மீசுரரும் நீணிலத்தில் போகவென்று நானும் நினைத்திருந்தேன் என்று நவின்றாயே ஈஸ்வரிக்கு மீசுரர்க்கும் இந்த நினைவானால் தேசமதில் போக வேண்டாமென்று சொல்வாரோ நானுங் களைவலிய நாட்டிற்போ மென்றிலனே தானுங்கள் தம்நினைவில் தரித்ததுபோ லேபோவும் நீங்கள் நடப்பதென்றால் எனக்குவெகு சந்தோசம் தாங்கள் மனதிரங்கி சாற்றிமிகப் போவுமென்றார் அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தானோக்கி மைப்போடுங் கண்ணினிய மைத்துனரே யென்றாவி சொல்லுச் சொல்லாதபடி சொல்லுதற்கு உம்மையல்லால் அல்லும் பகலும் அலைந்தாலுங் கிட்டாது போங்களென்று சொல்லாமல் புத்திசொன்னாப் போலேநீர் தாங்கி யுரைத்தீரோ சத்தியுள்ள மைத்துனரே புத்தியிது நன்று புண்ணியநா ராயணரே தத்தியுட னடக்க தருணமெப்போ தென்றுரைத்தார் நடக்கக் கருமமிது நல்லதுதா னென்றுசொல்லி அடக்க முடனே அய்யாநா ராயணரும் ஒத்திருந்து தங்கள் உற்பனமா யாராய்ந்து புத்திபோல் வாசகங்கள் பூத்தான மாயெழுதி நாட்டு நருளறிய நடைசீவ செந்தறிய காட்டு மரமறிய கல்லப்பு தானறிய புற்பூ டறிய பூமிதெய் வாரறிய நற்பறிந்து பேய்கள் நடுங்கி மிகஅறிய சேட னறிய சிறுவாய்வு தானறிய மேக மறிய மேலோர்கள் தாமறிய பூக மறிய பொழுதுசந் திரனறிய நட்சேத் திரமறிய நமனறிய கொளறிய பொய்ச்சரியை கிரியை பேர்நா லுந்தானறிய வேத மறிய விளங்கு மறையறிய வாதை யறிய மன்றுபதி னாலறிய சங்கறிய முத்தறிய சகலமச்ச முமறிய அங்கறிய நாம்படைத்த எல்லோருந் தானறிய எழுதி விடுவோங்காண் ஏற்றரிய புத்திவைத்து பழுதுவைத்தா ரென்று பார்பலதுஞ் சொல்லாமல் நம்பேரில் குற்றம் நகத்தளவு மில்லாமல் பம்முதலாய் நாமும் பரிந்தெழுதி தான்விடுவோம் என்று திருமாலும் இறவாத ஈசுரரும் மன்று படைத்த மறையோனும் பார்வதியும் சரசு பதியும் சத்தியுள்ள லட்சுமியும் விரசு முனிமாரும் வேத மறையோரும் சாஸ்திரரும் கின்னரரும் சங்கத் துறைவோரும் பார்த்திவனுந் தெய்வ பாவாணர் தாமுதலாய் வானவருந் தேவர்களும் மற்றுஞ்சித் தாதிகளும் தானவரும் வேதத் தம்புருக் காரர்களும் சங்கம் வரையும் தாண்டவர்கள் தாமுதலாய் எங்கெங்கு முள்ள இருஷிமுதல் தான்வருத்தி எல்லோருங் கயிலை இடம்விட் டெழுந்தருளி வல்லோர்கள் வாழும் வைகுண்ட மீதில்வந்து கங்கைநதி கண்டு கறைக்கண்டர் தேவர்வரை கங்கை தீர்த்தமாடி கிருஷ்ணர் பதிபுகுந்து மேடை விதானமிட்டு மிகுமேடை பொன்னழுத்தி வாடை கமழவிட்டு வானவர்கள் பாடவிட்டு எக்காள டம்மானம் எங்கு முழங்கவிட்டு மிக்க புராணக்கலை மிகுமறையோர் போற்றவிட்டு ஆகமங்கள் போற்றவிட்டு அரம்பையர்கை காட்டவிட்டுப் போகமுனி சித்தரெல்லாம் புராணகவி யோசையிட்டு மும்முதற்குத் தேவரெல்லாம் முறையிட்டு வாழ்த்தவிட்டுச் சங்குத் தொனிகளிட்டு சகலோரும் போற்றவிட்டு இத்தனை நற்சிறப்பும் இதமா யலங்கரித்து வித்தையருள் தண்டரள விழியாளைத் தான்வருத்தி அப்போ சரசுபதி ஆனந்த மேபெருகி இப்போ எழுந்தருளி இன்பமுடன் போகவென்று கங்கை நதிமூழ்கி கிரணப்பச்சை யாடைபெய்து சங்கையுட னாபரணம் சரசு பதியணிந்து குழல்முடித்து குழையில் குவிந்ததங்கத் தோடணிந்து வளையல் முறுக்குமிட்டு மாதுசந் தோசமுடன் பச்சைநிறக் காப்பணிந்து பவளமணித் தண்டையிட்டு மச்சமதில் மையெழுதி மகிழ்ந்து மூக்குத்தியிட்டுக் கொண்டைதனில் தேமலரைக் குவிய மிகச்சூடி பொற்சரிகைச் சேலை பெரியயேத் தாப்புமிட்டு அச்சரக்கைத் தோழி அரம்பையர்முன் னாடிவர அன்ன நடைநடந்து அனல்கொழுந் திட்டாப்போல் வன்ன அழகுடனே வந்தாள்திரு முன்பதிலே மாது வரவே மறையோனும் மாயோனும் ஏதுகோ லமெனவே எண்ணமதி லுன்னினராம் உன்னித் திடமாய் உளமகிழ்ந்து மாயவனும் கன்னி தனைப்பார்த்துக் கறைக்கண்டர் தானுரைப்பார் வன்னத் திருவடிவே மறையோனி னோவியமே அன்ன மடமாதே அரசுக் குகந்தவளே கருத்துடைய சோதி கவியுடையீ ருந்தனையும் வருத்தின காரியந்தான் வகுக்கக்கே ளொண்ணுதலே நாட்டிலொரு நீசன் நன்றியறியாப் பிறந்து மேட்டிமையாய் லோகமெல்லாம் மெய்யழித்தான் கண்டாயே கோட்டிப் பவம்பிறந்து குருநீதி யைக்கெடுத்தான் கேட்டிருக்கக் கூடாது கெடுநீசன் பொல்லாங்கு நம்மை நினையாததுதான் நமக்குசற் றெண்ணமில்லை செம்மையுள்ள சான்றோரைச் செய்தபங்க மேற்கலையே தெய்வப் பிறவியல்லொ திசைவென்ற சான்றோர்கள் மெய்வரம்பை யெல்லாம் மிகக்கெடுத்தான்மாபாவி கற்பகலாப் பெண்களுட கற்புக்கிரங் காதிருந்தால் உற்பனமோ நாமள் உடையபர னென்றாமோ எளியவனை வம்பால் இடுக்கஞ்செய் தேயடித்தால் விளியிட் டழுதாலும் மேதினியிற் கேட்பதில்லை கேளாத காரணத்தால் கீர்த்திகொண்ட பேரெளியோர் நாளான நாள்வழியாய் நம்பிநம்பேரில் வைத்தார் அல்லாமல் நம்முடைய அரிதன்மகா நாமமதை இல்லாம லேமறைத்தான் இயல்புகெட்ட மாநீசன் ஆனாலும் பாரமில்லை அன்னீதம் பொறுக்கரிது மானாபர ஞாயமதை வரம்பழித்தான் மாநீசன் ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி தாக மடைந்தார்கள் தவசுமுனி மார்களெல்லாம் நீசப் பாசாசு நீணிலத்தைக் கொள்ளைகொண்டு தோசப் பயலோடு துணையாய் மிகக்கூடிக் கெடுக்குதுகாண் பசாசு கேட்பார்க ளில்லாமல் கொடுக்கவொன் றில்லா நருட்பார்த்துக் கொல்லுதுகாண் அதுவே யொருகொடுமை அநேகம் பொறுக்கரிது எதுவும் வரம்புதம்பி இருக்குதுகாண் வையகத்தில் ஆனதால் நாங்கள் அவனிதனிற் போயிருந்து மானமுறை சோதித்து மனுவிடுக்கந் தான்தீர்த்து நாட்டிலுள்ள குற்றம் நாங்கள்பார்த் துத்தீர்த்து ஓட்டுவதை யோட்டி உறைப்பதை யுறைப்பித்து நாடையொரு சொல்லதுக்குள் நலமாக வாழ்விக்கவே பேடையன்ன மாமயிலே பெண்ணரசே இப்போது நாங்கள் நடப்பதற்கு நாளான நாளிதுவே ஆனதால் பாவி அவனிழுக்குச் சொல்லாமல் மானமுள்ள புத்தியைப்போல் வாசகமொன் றேயெழுதி வருவோமென அயச்சால் மாபாவி தானறிந்து கருவி குழறி கற்பினைக்குள் ளாகுவதும் என்னவோ வென்று இடும்புசெய்வ துமறிய அவனறிய விட்டதுபோல் அவனிபதி னாலறிய எவரும்புற் பூண்டுவரை எவ்வகையுந் தானறிய எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான் அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும் இப்போ திவ்வகைக்கு யானென்ன செய்கருமம் எல்லாங் கிருபை எம்பரனே யுன்செயலு அல்லாம லென்றனக்கு ஆகுமோ ஏதாலும் ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ சொல்லுவதும் நீயல்லவோ சொல்லவைப்பானும் நீயல்லவோ அல்லும்பகல் நீயல்லவோ அழியாத வனும்நீயல்லவோ எல்லா முமது கிருபை யெனக்கல்லாது சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தான் மாது திருமால் மலர்ப்பாதம் போற்றிடவே ஆதித் திருமால் அவரேது சொல்லலுற்றார் நீயுரைக்க நானெழுதி நீணிலத்தில் விட்டதுண்டால் வாயுரைக்கக் கூடாது மற்றோர்க ளாராலும் வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம் உம்பதுவே யல்லால் உறுகெதிகள் காணார்கள் ஆனதா லுன்வாக்கும் அரியச்சரமுங் காண்பித்தால் மானமென்ன வாகுமென்று வகுத்துரைத்துப் பார்ப்போம்நாம் அப்போ சரசுபதி அன்போ டுளமகிழ்ந்து செப்புகிறாள் நல்ல திருவாசகந்தா னம்மானை கலையொடு கலையைத் தாக்கிக் கண்ணின்மேல் கருணை நாட்டி மலையொடு மலையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு சிலையொடு சிலையி னாளும் சிவபரா கிருபை யென்றே அலைதலை முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள் கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண மீறிய மொழிகள் சொல்லி விளம்புவர் நாச மாகும் தேறிய பூதத் தோடு தேர்ந்துணர்ந் தவரே வாழ்வார் கூறிய வாசகத்தை யுள்ளங் கொண்டவர் குருவைக் காண்பார் ஒருதிரு விபூதி யுண்டை ஒருயிரு மிச்ச மாகும் ஓருதிடத் தேங்காய்ப் போலும் ஒருமனத் திரணை போட்டுக் கருதிட வெற்றிலை பாக்கும் கனிந்திடு வோர்க்கு மூவர் வருகிட ஞாய மெய்யின் வழியிது வாகுந் தானே மனுமொழி யிதுவா மென்று மதத்துடன் பேசு வோர்க்கு இனிதல்ல வீண்தா னென்று இயம்பிய பகைஞர் தம்மை குனிதவள் துர்க்கை சென்று கொன்றவள் நரகம் பூத்தி கனிதுடன் துர்க்கை வாரி கடல் தீர்த்த மாடுவாளே

வேறு

எறும்புகடை யானைமுதல் எண்பத்துநான் குயிர்கள் எழுகடல் பதினாலு புவிகளும் இரதிமதி சூரியர்கள் பருதி பாலாழியும் இயல்வானம் வாயு முதலாய் தெறும்பு மாமலை மாமரச் சோலையும் சேடனுந் தலைமோடனு மறியவே தென்கீழத் தேவரு மிங்குள்ள மூவரும் தேசதெய் வேந்திர னறியவே வாச முனிவோர்களும் வேதசன் னாசியும் மறையாறு சாஸ்திர மறியவே மண்டல மளந்தகை கொண்டெழுதும் வாசகம் மண்டலர்க ளெவரு மறியவே வறும்பகல் தொளாயிரத்து தொண்ணூற் றெட்டாண்டினில் வளர்ஸ்ரீ சாம்பசிவ மூர்த்தியும் பராபர ஸ்ரீராமரும் பதியேறும் மூர்த்தியும் பார்த்திந் தக்கலி யுகத்தில் படூரநீ சக்கலியால் வரும்வாறு வண்மையாய்ப் பகர்ந்து திருவாசக மெழுதிப் பலநூ லறிந்தவ ரெவர்க ளாயினும் பக்தியுட னெக் காலமும் பணிந்துதிரு வாசகத்தை முத்தியணைந் தோர்க்கு மிகுபல னுண்டாம் பகரக்கேளு நத்தியுடன் பூலோகக் கலியுகா தேசத்தில் நடக்கு முறைதானுங் கேளீர்

திருவாசம் - 1

நல்ல வீரபுரந்தரத் தர்மராசா வங்கிசத்திலே நாடும் ஒரு மதலை பிறந்து வந்தவுடன் நல்ல அருணாசலத்திலே வாலிபப் பிள்ளையாயிருக்கிறார். அந்தப் பூலோகக் கலியுகத்திலே ஆசாரமாயிருக்கிற பேர்களும் அழுக்கான புத்திமதியா யிருக்கிற பேர்களும் அவரவர் ஆங்காரமாகியே அழிந்து போவார்கள். அதின்மேல் பதினெட்டுத் துர்க்கையம்மாள் பிறந்து அந்தக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே வருகிறார்கள். வந்தவுடனே மூன்றுநாள் இருள்மூடி ஆனைத் துதிக்கைபோல் மழைபெய்யும். அதிலே சில துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள். அதின்மேல் பக்தியாயிருக்கிற பேர்களுக்கும் பிள்ளை யில்லாமலிருக்கிற பேர்களுக்கும் கண்ணில்லாமலிருக்கிற பேர்களுக்கும் தனமில்லாமலிருக்கிற பேர்களுக்கும் பராபர மூர்த்தியும் சாம்பசிவ மூர்த்தியும் ஸ்ரீராமச்சேயரும் தீட்சையாகித் திருமனதிரங்கிப் பக்திகாரணங்களைச் சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார்கள். இன்னுஞ்சிறிது நாளையிலே சிலபேர்கள் தெய்வீகமாய்ப் போவார்கள். முன்னுக்கு மழைதட்டும் உலகிற்பல பல வஸ்துவும் பலிக்குமென வகுத்தார். சிலநீசர் மிகக் கறுப்பை நினைவில்லாத்தொட்டு மிகப் பாசமடைந்து அலைந்து அழிந்து போவார்கள். வாலி சுக்ரீபனும் பண்டாரமாகிப் போவார்கள். வாச்சி கொழு கலப்பையெல்லாம் நாசமாகிப் போய்விடும். முன்னாலே துலுக்கர் தம்மை நாசம் பண்ணுகிறதற்காகவே துர்க்கையம்மாளைப் பிறவி செய்தனுப்புகிறோம். பிராமணர் நன்றாய் சுகத்துடன் வாழ்வார்கள். புவியில் முகத்துலிங்க மில்லாத பேர்க்குப் பிரமதேவரை யனுப்புகிறோம். பிரமதேவர் புவிமீதில் வந்து பக்தி காரணங்களைச் சோதித்துப் பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புதுக்கிராம தேசத்தில் வாழுந் தேவதைக்குப் பூசைப்பண்ணிப் போடுவாரெனப் புகட்டினார். காவேரியாற்றுக்குள்ளே மூன்று பொதி மங்கிலியம் கவிழ்ந்து அடையவேணுமென்றும் காசினியில் ஒரு ஏழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை அடர்ந்து பிடிப்பார் களென்றும், அறுத்த மங்கிலியத்தை மிகுத்துக் கட்டுவார்களென்றும், இன்னுஞ்சிறிது நாளையிலே கேள்விகேளாமலிருக்கிற பேர்களும் துர்ச்சனராயிருக் கிறபேர்களும் வர்த்தகனாயிருக்கிற பேர்களும் தம்மில் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு மாண்டுபோவார்கள், போனபேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷரைத் தெரிசனம் பண்ணிக் கொண்டு சர்வபாக்கியத்திலே யடைவார்கள். மூன்று லோகத்துக்கு ஒரு வால்வெள்ளி யுண்டாக்கி நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம். அதினால் மானிடரெல்லாம் உறழ்ந்து உட்கொள்ளைப் பிறக்கொள்ளை யடிப்பார்களென்று நமக்கு நன்றாய்த் தெரியும். நாமதற்குமேல் பூலோகக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே பண்டார வேசமாய் வருகிறோம். நாம் வருகிறபோது மண்ணெல்லாம் கிடுகிடென்றாடும், மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும், அப்போது அதிலே அநேக துர்ச்சனர்களெல்லாம் மாண்டு போவார்கள். போனபேர்கள் போக இருக்கிறபேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். மந்திர தந்திர வைத்தியங்களெல்லாம் மறைந்து போய்விடும். வாதை பேய்களெல்லாம் வட கயிலாசத்திலே போய்ச் சட்டுத்தீர்ந்து போவார்கள். ஏழு சமுத்திரத்திலே மூன்று சமுத்திரம் நீருள்வாங்கிப் போய்விடும். ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும், ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும், ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முடியும். தர்மங்கொடுக்கிற பேர்களுண்டு வாங்கிறபேர்களில்லை யென்று சொல்லுகிற வெயிலாள் மடக்கொடியாள் வயிற்றிலே நாடுமொரு மதலை பிறந்து பத்து வருசமாச்சுது. நாங்களும் மகா அருணா சலத்திலே வாலிபப் பிள்ளையா யிருக்கிறோம். அந்த வாலிபப் பிள்ளை என்ன சொல்கிறா ரென்றால் வீர புரந்தர தர்மராசா வழியிலே விகிநாராயணர் இங்கே வந்து மூன்று மாதத்துக்குத் தவசுபண்ணி இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார். வந்தவுடனே அந்நியோன் னியக் கலகமாகும். அந்தக் கலகத்திலே ஒருவருக்கொருவர் சத்தியமாய்ப் போவார்கள். போன பேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பாக்கியத்தைக் கொடுப்போம். பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார் தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும் துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர் ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர் கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும் தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார் திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல் ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில் வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக் கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோ ரவர்க்கே தக்கும் உருத்தில்லாக் கேட்போ ரெல்லாம் ஓருரை வெளியே காணார் சிரித்துரைக் கேட்போ ரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார் உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல் கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை 860 அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில் குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே எந்தன் மொழியு மென்னெழுத்தும் ஏடாய்ச் சேர்த்து இவ்வுலகில் சிந்தை மகிழ்ந்த அன்பருக்குத் தெரியத் திறமா யெழுதி வைத்தேன் எந்தன் பெருமான் திருமொழியை எடுத்தே வாசித் துரைத்தோரும் சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரண மில்லாமல் காண்பா ரென்றுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி காண்பார் நீதக் கண்ணாலே கருணா கரராய்க் கவ்வையற்றுக் காண்பா ரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பா டதுகேளு கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி எந்த இடமும் அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே தப்பா தெனவே சாபமிட்டேன் சத்திபேரி லுண்மை யதாய் எப்பா ரெல்லா மறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன் ஒப்பா ரொருவ ரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே அப்பா நாத னெழுதிவைத்த அகிலத் திரட்டம் மானையிதே என்றே யிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது கன்றே மேய்த்தோ னெழுதிமிகக் கலியுக மதிலே விட்டிடவே நன்றோர் மறையோ னிடமேகி நாட்டி லறியச் செய்யெனவே அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே

அகிலம் ஒன்பது

divider
நாடறிய எம்பெருமாள் நல்லதிரு வாசமிட்டு லாட மதிலிருந்து வாவுவா ரீசரொடு வாரமில்லை நமக்கு வஞ்சகங்க ளில்லாமல் சார முடனே தரணிதனி லோதிவைத்தோம் அகப்பே ரெனவே அவனிசொல்வ தில்லையினி உகப்பாரந் தீர்க்க உரைப்பீர்கா ணீசுரரே லட்சுமியை முன்னம் இருத்தினோஞ்செந் தூர்க்கடலில் பச்சணியுங் காளிதனைப் பாரச் சிறையில்வைத்தோம் என்மகவாய்ப் பெறவே இராச்சியத்தி லோர்சடலம் தன்மகவா யங்கே தான்பிறந்து நல்லவயசு இருபத்து நாலு என்றாச்சே மாநிலத்தில் கருவுற்ற முத்தோசம் கழிவதும் நாளின்றாச்சே விட்டதிரு வாசகந்தான் மேதினியோர் கொள்ளாமல் கட்டங் கொடிதாய்க் காணுதே தொல்புவியில் புத்திவரு மென்றிருந்தோம் பிழையாத நீசனுக்கு சற்று மனதில் தங்குமோ நல்வசனம் பார்த்திருந்தால் போராது பார்மீதில் மக்களுந்தான் காத்திருந்து வாடுகிறார் கௌவையுற்று நல்மனுக்கள் மனுவிடுக்கந் தீர்த்து வாய்த்தசொல் லொன்றதுக்குள் தோணியேவை குண்டர் சுத்தயுக மாளுதற்கு 20 நாளுண்டோ போவதற்கு நல்வேதச் சொல்லுமுண்டோ கோளுண்டோ வெற்றியுண்டோ கூறும்நீர் வேதவுரை அப்போது ஈசர் அகமகிழ்ந்து கொண்டாடி முப்போது வுள்ள முறைகேட்க வேணுமென்றால் ஆதி வியாகரரை அழைப்பித்துக் கேளுமென்றார் சோதி யுரைக்க திருமா லகமகிழ்ந்து அழைத்தார் வியாகரரை அதுகேட்டு மாமுனியும் பிழைத்தார்கள் போலே பொடுபொடென ஓடிவந்து தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண் ணப்பமென்றார் கண்டிருந்(த) அய்யா கரியமுனி யைப்பார்த்து முன்பிறந்த துமகிலம் முடிந்ததுவுஞ் கொல்லிமிகப் பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார் அப்போ வியாசர் ஆதி யருளாலே செப்புகிறோ மென்று தெண்டனிட்டுச் சொல்லலுற்றார்

வேதவியாசர் முன்னாகமம் கூறல்

குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை தரணியுக மாறுஞ் சாற்றியே-சத்தியுடன் தன்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து நன்மையுட னாடுவதும் நாட்டினார் குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து தரணியுக மாறோடு தன்னால ழிந்ததுவும் 40 சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும் நல்லியல்பு கொண்ட நாரணரோ டேதுரைப்பார் கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து உற்ற நசுறாணி உடன்வந் துடனோடி மற்றொரு பத்தாண்டில் ஆனவை குண்டராசர் உற்றொருவர் வந்து உலகாள வேணுமென்றும் முன்னே பரந்தான் மொழிந் ததின்படியே தர்ம புவியாள சுவாமிநீ ராகவென்றும் துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும் ஆகமத்தைப் பார்த்து ஆதிவி யாசுரரும் நாகத்தணை கிடந்தோன் நாட்டம தாயுரைத்தார் உரைத்திட வியாசர் தானும் உண்மையாய் மொழிந்த தெல்லாம் கரைத்திடாக் கயிலை மீது கல்லிலே எழுதி வையும் நரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழி தோறு முற்ற உரைத்திட முனிக்கு மேலும் உதவிகள் செய்ய வென்றார் என்று சொல்லிவேத வியாசர் இசைந்ததெல்லாம் கண்டுகயி லயங்கிரியில் கறைக்கண்டர் நாட்டிவைத்தார் மாமுனியை யுமனுப்பி மாயத் திருமாலும் தாமுனிந் தீசுரரைத் தழுவியுறத் தானணைத்துக் கேதாரம் விட்டுக் கிரிகோவில் வந்திருந்து 60 கோதார மாயன் கூறுவார் சங்கமதில் செந்தூர்க் கடலில் சென்றுபள்ளி கொண்டிருந்து விந்து வழிசெய்து வித்தகனை ஈன்றெடுத்துத் தேசபர சோதனைக்கு தெச்சணத் திலேயனுப்பி வாசமுட னிங்கே வருவோ மெனவுரைத்தார் அப்போதீ சுவரியும் ஆனசங்கத் தோரர்களெல்லாம் இப்போது நாங்கள் ஏகுவோ மும்மோடே என்றுரைக்கச் சங்கம் எடுத்துரைப்பா ரெம்பெருமாள் ஒன்றுமறி யாகாதே உற்றவுப தேசமதைத் தேவன் திருமுதலாய்த் தெய்வகன்னி மார்முதலாய் மூவர் முதலாய் உள்ளறியா விஞ்சையது நடந்தா லறிவார் நடக்குமுன் னேயொருவர் அடக்க மறியாத அருவிஞ்சை யீதல்லவோ அந்தவகை யானதினால் எல்லோரு மென்கூட வந்தால் சரியல்லவே வரவேண்டாமென்றால் நோவீர்களே என்றுரைக்க நாதன் எல்லோரு மேதுரைப்பார் ஒன்றுமறி யாதிடினும் உம்முடனே வாறொமென்றார் உடனே திருமால் உற்றலட்சு மிநினைவால் நடைமேல் நடையெனவே நல்லசெந்தூர் தானோக்கி உன்னி சிவமும் உற்றசத்தி நல்மாதும் வன்னத் தேவர்முதலாய் மாமுனிவர் கின்னரரும் சங்கமு மெங்குளோரும் சகலகலை வாணர்களும் மங்களக் காரர்களும் மாதுசத்தி யைச்சூழ்ந்து திரைதிரையாய்க் கன்னியர்கள் சேவித்து ஏத்திவர ஏழு வாச்சியமும் இமலோக ரேற்றிவர தொழுவார் சிலபேர் தொம்தொ மெனஆடி கடலிலோர் பிள்ளை கரியமா லீன்றெடுத்து நடமாடுந் தெச்சணத்தில் நகர்சோதனைக் கனுப்பி கலியை யறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துச் சலிவில்லாத் தர்மபதி சத்திமக்க ளையாள வாறாரைய்யா நாதன் வைகுண்ட மும்மூர்த்தி பேறானோர் காண்பார் பெரியதர் மப்புவியை என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந் தூதிவர கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங் கிரிகடந்தார் கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன் தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார் நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார் வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும் களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின் அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன் கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும் வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல் என்னவித மாமோ என்று மனம்பதறி மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும் சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன் காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச் சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச் சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடி வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில் பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம் நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம் போத வருங்காண் பொற்சவடி யாபரணம் வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான் கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான் காவடி கோடி காணிக்கை முக்கோடி பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள் எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான் கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல் நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார் நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான் பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும் என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார் பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும் இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு என்று இருபேரும் இயம்பி மனதடக்கி நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி அந்த முடனே எல்லோருந் தானடந்து செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும் மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும் குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும் கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச் சந்தன வாரி யோரம் தன்னிலே நின்று ரண்டு சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார்

கலைமுனி ஞானமுனி வரவு

ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர் பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே ஏதுகாண் மாமுனியே இங்குநின்ற வாறேது தாது கரமணிந்த சன்னாசி சொல்லுமென்றார் அப்போது மாமுனிவர் அவரேது சொல்லலுற்றார் முப்போது நாங்கள் மும்முதற்சொல் மாறாமல் மேலோகம் விட்டு மேகவண்ணா வுன்செயலால் பூலோக மீதிறங்கிப் பொங்குகடல் கண்டணுகிச் சோதி யுரைத்த சொல்லுரைத்து வாரியிடம் நீதியாய் நில்லுமென்று நினைவாகச் சட்டமிட்டுக் கயிலை யதேக கண்ணோக்கும் வேளையிலே அகில மதிற்கலியன் அனைமிகக் கண்டேதான் மேலோக மேற மேல்வழிகள் காணாமல் பூலோக மானதிலே போயிருந்தோங் கண்கவிழ்ந்து அப்போது ஆயனேநீர் அங்குவந்து எங்களிடம் 180 இப்போது போய்நீங்கள் என்னுடைய செந்தூரில் வாரிக் கரையதிலே வாய்த்ததவ மாயிருந்து சூரியப் பிரகாச சுத்தவை குண்டராசர் இக்கட லில்பிறந்து எங்கள் தமைக்கூட்டிப் பக்கமதில் வைத்துப் பதவிதர வேணுமென்று நில்லுங்கோ தவசு நினைவாக வென்றுசொல்லி பல்லுயி ரும்வளர்த்த பாக்கியவா னேநீரும் உரைத்தமொழி அய்யாவுன் உள்ள மறியாதோ கறைக்கண்டர் மைத்துனரே கண்ணா எனத்தொழுதார் அப்போது அய்யா நாரா யணர்மகிழ்ந்து செப்போடு வொத்தாற்போல் சிரித்து மனமகிழ்ந்து நல்லதுகாண் பிள்ளாய் நாடுந் தவம்புரிந்தீர் வல்லவர்தாம் நீங்கள் வாருங்கோ வென்றழைத்து அருகிலே நில்லுமென்று அகமழிந் தாரன்போரே குருவான ஈசரொடு கூறுவார் பின்னாலே நம்முடைய ஈசுரரே நாம்வந்த காரியங்கள் எம்முதலே யின்னதென்று இயம்புவீ ரீசுரரே கட்டான ஈசுரரும் காரியத்தைப் பாருமென்று மட்டான வாரிக் கரையிலே வந்திருந்து எல்லோருஞ் செந்தூர் இடமெல்லாங் கண்பார்த்து 200 வல்லோர்க ளெல்லாம் வந்திருந்தார் செந்தூரில்

சம்பூர்ணத் தேவனுக்கு நற்பேறு அருளல்

அங்கு சிலநாள் அமர்ந்திருக்கும் வேளைதனில் சங்குவண்ணர் நேமித்த சடல மதின்பெருமை உரைக்கிறார் அன்பர் உள்ள மகிழ்வதற்கு தரையீரேழு மளந்த சுவாமி யுரைக்கலுற்றார் சீரான நல்ல தெட்சணா புமியிலே பாரான நல்ல பதிதா மரையூரில் தவசிக் குகந்த தாமரையூர் நற்பதியில் சிவசிவா வளரும் தெட்சணா புரிநாடு பாண்டவரில் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு ஆண்டபர மேசுரரை அகம்வைத்துப் போர்விசையன் நின்று தவமுடித்து நெடியரனை மாதுவையும் கண்டு பதம்வாங்கிக் கைகண்ட திவ்வூரு அதியரசன் முன்னாள் அதிகத் தவமிருந்து பதியரசி யானப் பார்வதியை ஈன்றதுதான் இவ்வூரு தெச்சணந்தான் ஏற்றதா மரையூரு செவ்வூரு நல்ல சிறந்தமண வைப்பதிதான் வானலோ கம்வாழும் வாய்த்ததெய் வேந்திரனும் தானவரைக் காணத் தவசிருந்த திவ்வூரு பஞ்சவர்க்கு முன்னம் பசுவா னுதவிசெய்ய அஞ்சல்செய்து நாதன் அமர்ந்திருந்த திவ்வூரு சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்த திவ்வூரு தாம்பிரவர்ணி யாவி தழைத்திருந்த திவ்வூரு பரராச முனிவன் பாரத் தவசுபண்ணி விரமான வியாகரரை மிகஈன்ற திவ்வூரு தவம்புரிய வென்று தானினைத்த பேர்களெல்லாம் பவமற்ற தாமரையூர் பதியாகு மென்றுரைப்பார் தவசுக் குகந்த சந்தமுற்ற பேரூரு பவிசுக் குகந்த பாலதியத் தாமரையூர் அவ்வூரு தன்னில் ஆதி யருளாலே செவ்வுமகா விஷ்ணுவும் செய்தசட மேபிறந்து பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ்காட்டி மறந்திடா முன்னமைந்த மாதை யுறவாடிப் பூலோக மனுக்கள் பிள்ளைபோ லேவளர்ந்து மாலேற்கப் பூசை மனையில் மறவாமல் விட்டிணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டுக் கட்டுத்தீர்க் காகக் கண்வளர்ந் தார்கலியில் ஒருவர்க்கோர் பொல்லாங்கு உலகில்மிகச் செய்யாமல் குருவைக் குருகண்டு கொக்கரித் தேவளர்ந்தார் எதிர்த் தோரையடக்கி எல்லோர்க்கும் நல்லவராய் உருத்துக் கரியவராய் உலகில் மிகவளர்ந்தார் எச்சா தியார்க்கும் இவர்நல்ல வரெனவே அச்சாதி யெல்லாம் அகமகிழத் தான்வளர்ந்தார் முன்னுதித் துடன்பிறந்தோர் ஒருவர்மூப் பாடாமல் பின்னுதித்தும் பெரியோராய்ப் பெருமையுட னேவளர்ந்தார் தாய்தகப் பன்மாமன் சந்தமிந்தத் தம்பியென்றும் ஞாயவா னென்றும் நாடி மிகவளர்த்தார் ஊருக்குந் தலைவன் உடையவழிக்குந் தலைவன் ஆருக்குந் தலைவனென்று அன்னை பிதாவளர்த்தார் ஞாய மிருப்பதனால் நாடாள்வா னென்றுசொல்லித் தாய்தமர்க ளெல்லாம் தாங்கி மிகவளர்த்தார் சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன் மல்லுக்கும் வல்லவனாய் உபாயத் திலும்பெரியோன் மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன் எங்கும்பேர் கேட்கவைப்பான் இவன்கீர்த்தி நல்வளமை பல்லார்க்கும் ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான் எல்லார்க்கும் நல்லவனாய் இவன்சமைவா னென்றுசொல்லி எவ்வோருங் கொண்டாட இன்பமுட னேவளர்ந்தார் அவ்வோருங் கொண்டாட அவர்வளரும் நாளையிலே பத்து வயது பண்போ டிருபதிலே மற்று நிகரொவ்வா மன்னவர்போ லேவளர்ந்தார் எல்லாத் தொழிலும் இதமிதமாய்க் கற்றுமிகப் பொல்லா தாரோடு பெரும்பகைபோ லெசீறி நல்லாரை யுள்ளில் நாளு மறவாமல் கல்லாரை யெல்லாம் கண்டுகழித் தேயிருந்தார் ஈவதற்குத் தர்மனென எளியோரைக் கண்பார்த்து ஆய்வதற்கு நல்லான் என்றே மிகவளர்ந்தார் பதினே ழுவயதில் பண்டமைத்த பெண்ணோடு விதியா னபடியால் மெல்லியர்மே லிச்சைகொண்டு கூடிக் குணமாய்க் கொண்டவனை யுமகற்றித் தேடி யிவரோடு செய்யரச மாயிருந்தாள் வானுபர மேசுரனார் மாயவனா ராணையிட்டு நானும்நீ யுமாக நலமாக வாழ்வோமென்று ஆணையிட் டிருபேரும் அகமகிழ்ந் தன்றுமுதல் நாண மில்லாமல் நாயகன்போ லெவாழ்ந்தார் மங்கை காணாமல் மறுவூரு தங்கறியாள் அங்கவளைக் காணாமல் அயலூரு தங்கறியார் இந்தப் படியாய் இவர்வாழும் நாளையிலே எந்தநருளுங்கண்டு இவர்க்கிவளை யமைத்ததென்பார் முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே சொன்னா ரெவரும் சுவாமி யருளாலே அன்றைக் கமைத்ததுவே அவளையிவர்க் கல்லாது என்று நருளெல்லாம் இயம்பி மிகவுரைத்தார் மன்றீ ரேழுமறிய மங்கையொடு வாழ்கையிலே உற்ற வயசு ஓரிருபான் ரண்டதிலே சத்துராதி யோர்நீசன் தானே பிழையேற்க ஏற்கவே நீசன் இடறுசெய்த ஏதுவினால் ஆர்க்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே எல்லோரு மறிய இவரிருந்தா ரம்மானை வெல்லாரு மில்லா விசையடக்கித் தானிருந்தார் நொம்பலங்க ளென்று நொந்து மிகவுழைந்து தம்பிலங்க ளடக்கித் தருணம் புலம்பலுற்றார் கருவுற்ற தோசம் கழிந்து சிவஞானத் திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத் தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார் அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம் முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும் மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி அகம்வைத்த எண்ணம் அறிந்துசிவ நாரணரும் வந்துசொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்கச் சொல்லுகிறா ளந்தச் சொற்பனத்தை யன்போரே நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவா ளன்போரே ஆயிரத் தெட்டு ஆண்டிதுவா மிவ்வருசம் மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது இம்மாத மித்தேதி ஏற்றதிருச் செந்தூரில் நம்மாணை கொடியேறி நல்லதிரு நாள்நடக்கு அங்குன் மகனை அழைத்துவ ருவாயானால் எங்குள்ளோ ருமறிய இப்பிணி யுந்தீர்த்து நல்லபே றுங்கொடுப்போம் நம்மாணை தப்பாதெனச் சொல்லவே கண்டேன் சுவாமிகரு மேனிநிறம் நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப் போகாது தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து இந்தக் கனாவதற்கு இங்கிருந் தங்கேபோய் வந்தல்லா தேபிணியும் மாறவகை யில்லையல்லோ என்றுரைக்க எல்லோரும் இன்பமுட னேமகிழ்ந்து நன்றுநன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார் வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்துத் தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்துத் தீன மானவரைத் திடமாகக் கூட்டிவந்து ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில்வைத்து நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம் மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிகநிறுத்தி இருந்த பதியும்விட்டு ஏற்றவொரு காதம்விட்டு வருந்த நருளோடே வழிகொண்டா ரன்போரே கூடங் குளமும்விட்டுக் குளிர்ந்தசுக்குப் பாரும்விட்டுத் தோடவழி யாறுங்கண்டு சூறாவழிக் காடும்விட்டு நடந்து வொருவனத்தில் நல்லதண்ணீ ராவிகண்டு கொடர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும் பிறவிக்கு ஏற்ற பிள்ளை வருகுதென்று திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று அருகே தானின்ற ஆதி முனியான நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம் நானே மித்த நல்லவுயி ரானதிங்கே தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார் அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப் பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும் எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார் வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர் சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு கண்டு குவித்துக் கனக முனிமார்கள் வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும் முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப் பதியி லிருந்தாற்போல் பார்மன்னனை யிருத்திக் குதிரைநடை கொண்டாற்போல் கொண்டோடி மாமுனிவர் கூட நடப்போர் குதித்துக்குதித் தோடிவர வாடி யிடைந்து மனுநருட்க ளோடிவர நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி வல்லசெந் தூர்ப்பதியில் வந்தனர்கா ணன்போரே வந்த முனிமார்கள் வாழ்த்தியந்த நல்லுயிரைச் சந்தனா வீதியிலே சடலந்தனை நிறுத்தி மாமுனிவர் தாமும் மாயோனை வந்துகண்டு சாமிநீர் கொண்டுவரத் தானுரைத்த நற்சடலம் அடியா ரெதிரேபோய் அழைத்துவந்தோ மையாவே திடீரெனவே நாதன் சொன்னமுனி யோடுரைப்பார் கொண்டுவந்தோ மென்றீரே கூர்மையுள்ள நற்சடலம் பண்டுமுறை யெல்லாம் பகருவீர் மாமுனியே அப்போது மாமுனிவர் ஆதி யருளாலே செப்புகிறோ மென்று செப்பலுற்றா ரன்போரே நல்ல சடலமிது நாடுமுற் காலமதில் வெல்லமர்கோன் வாழும் வெற்றிதெய்வ கோலகவுயிர் பெருசம் பூரணன்தான் பெரிய திறவான்காண் ஆரொவ்வா ரேயிவர்க்கு ஆதி கிருபையுள்ளோன் அப்படியே தெய்ட லோகமதி லேயிருக்க இப்படியே யிவர்க்கு எமலோக மானதிலே இருக்கின்ற பெண்ணதிலே இசைந்தபர தேவதையென்(று) ஒருகுழலி தன்மேல் உள்ளாசை யாயிவரும் அவளு மிவர்பேரில் ஆசையாய்த் தானிருந்து இவளு மிவரும் இருந்துமிக வாழ்கையிலே தேவருக்குந் தெய்வ லோகமே ழுள்ளவர்க்கும் யாவருக்கு மோர்பிறவி யாகுகின்ற நாளதுவாம் இவரையும் வருத்தி என்னவுன் செய்தியென்றார் அவளுடைய ஆசையினால் அல்லவென்று தான்மறுத்து இவளையு மென்னோடு இயல்பாய்ப் பிறவிசெய்தால் குவளையணி மாயவரே குணமெனக் காகுமென்றார் அப்போது நாதன் அந்தத்தே வன்றனக்குச் செப்பமுள்ள புத்தி செப்பிமிகப் பார்த்தனரே அப்போதிவர் கேளாமல் அதுதானது தானென்றார் மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி ஆயனப்போ திவர்க்கு அதிகப் பலனுரைத்தார் நல்லதுநீ கேட்ட ஞாயமீட் டேற்றமதாய் வல்லவனை நினைந்து மாதுவும் நீதானும் எங்க ளிருபேர்க்கும் இன்னம் பிறவியிலே மங்கையும் புருசனென மறவாம லாவதற்கு வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றிப் பரந்தாண்டி கண்டு பலன்பெறுங்கோ வென்றுசொல்லி தவசிருக்க விட்டீர்காண் சங்கரரே நீர்கேளும் சிவசிவா வென்றுதவம் செய்தவர்கள் நிற்கையிலே தவம்பார்க்க ஈசுரரும் சன்னாசி நீதனுமாய் அவட மெழுந்தருளி அங்கேகும் வேளையிலே தெய்வேந் திரனும் திருமுடி யுஞ்சூடி மையேந்திர னுடைய மலர்பாதங் காணவென்று அவனுமிக வந்தான் அரனெதிரே அய்யாவே தவத்துக் கிடறு தான்வருவ தோராமல் தேவன் மதிமயங்கித் திருமுடிமே லிச்சைகொண்டு பாவையுட னுரைத்துப் பற்கடித்தான் தேவனுமே அதையறிந் திசுரருள் அன்றும்மு டனுரைத்தார் இதையறிந் துநீரும் ஏற்றதேவ னோடுரைத்தீர் வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால் ஏற்றகீ ழுலகில் என்மகவு சான்றோரில் நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து தொல்லையெல் லாந்தீர்த்துச் சூலினழுக் கறுத்து வளரும் பருவமதில் வந்துன்னை நானெடுத்து இளவரசா யுன்னை ஈன்றெடுத் தேவளர்த்து ஆளு மரசு அழகாக வுன்றனக்கு நாளு மிகத்தருவேன் நம்மானை தப்பாதென உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில் பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர் மாதைப் பிறவிசெய்தீர் மக்கள்சான் றோர்குலத்தில் சூதஎமக் குலத்தில் தோகையரைத் தோன்றவைத்தீர் அப்படியே முன்னம் அய்யாவே யிவ்வகைக்கு இப்படியே பிறந்து இச்சடல மென்றுரைத்தார் என்றிந்த விவரமெல்லாம் இயல்முனி வோர்கள் சொல்ல நன்றிந்த விவர மென்றே நாரணர் தயவு கூர்ந்து சென்றிந்தச் சடலந் தன்னைச் செந்திலம் பதியி லெங்கும் கொண்டெந்தத் தெருவுங் காட்டிக் குளிர்ப்பாட்டி வாருமென்றார் மேலுள்ள சடலந் தன்னை மிகுமுனி மாரே நீங்கள் நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையி லூட்டிப் பாலுள்ள பதத்தில் கொண்டு பழவிளை தீரக் காட்டி மாலுள்ளம் புகுத நாட்டி வாருங்கோ சிணமே யென்றார் அப்படி முனிமா ரேகி அங்கங்கே கொண்டு காட்டி முப்படித் தோசம்போக முனைபத மதிலேமூழ்கி இப்படி யிவரைக் கொண்டு இவர்வரு முன்னேயாகச் செப்படி வித்தை நாதன் செகலினுள் ளகமே சென்றார்

வைகுண்டர் உதயம்

வானவர் தேவர்போற்ற மறைமுனி வோர்கள் பாடத் தானவர் ரிஷிகளோடு தமிழ்மறை வாணர் போற்ற ஞானமாம் வீணை தம்பூர் நாற்றிசை யதிர வோசை ஓநமோ வென்று தேவர் ஓலமிட் டாடி னாரே மத்தளத் தொனிகள் வீணை மடமடென் றேற்ற வானோர் தித்திதெய் தித்தி யென்ன தேவியர் பாடி யாடத் தத்தியாய்ச் சங்க மெல்லாம் சதுர்மறை கூறி நிற்க முத்திசேர் மாயன் தானும் மூழ்கினர் கடலி னுள்ளே கடலினுள் ளகமே போந்து கனபதி மேடை கண்டு மடவிபொன் மகரந் தன்னை வாகுடன் பூசித் தேய்த்து நிடபதி மாயன் தானும் நிறைந்தபொன் னிறம்போல் வன்னி வடவனல் போலே வீசி வந்தனர் மகர முன்னே வந்தனர் மகர முன்னே மாதுபொன் மகரங் கண்டு செந்தழ லெரியோ வென்று செல்லிடப் பதறி நொந்து எந்தனின் மான வானோ எரிவட வாச மேர்வோ கந்தனின் மாய மாமோ என்றவள் கலங்கி னாளே கலங்கியே மகரந் தானும் கருத்தறிந் தேதோ சொல்லும் இலங்கியே வருவோ மென்ற என்மன்னர் தானோ யாரோ சலங்கியே யதிரப் பூமி சதிரெனக் கதிரு பாய துலங்கிய சுடரைப் பார்த்துச் சொல்லுவாள் மகரந் தானே சுடரே சுடரே துலங்கு மதிசுடரே கடலே கடலே கடலுட் கனலாரே அக்கினிக் கேயபயம் அனலே வுனக்கபயம் முக்கியமாய்க் காந்தல் முனையே யுனக்கபயம் தீயே யுனக்கபயம் திரிபுர மேயபயம் நீசுட்டத் தலங்கள் நினக்குரைக்கக் கூடாது மாசற்ற ஈசன் வல்லவனோ டுள்ளிருந்து காண்டா வனமெரித்தாய் கடியவில்லி கையிருந்து ஆண்டஇலங் கையெரித்தாய்அனுமன்கையி லேயிருந்து முப்புரத்தைச் சுட்டழித்தாய் முதன்மைகையி லேயிருந்து ஒப்புரவாய் நீயெரித்த உவமைசொல்லக் கூடாது அனலே வுனக்கபயம் ஆதி யுனக்கபயம் கனலே யமருமையா காந்தல்தனை மாற்றுமையா மன்னரரி நாரணர்க்காய் மாறுவீ ரக்கினியே இந்நியல்பை யெல்லாம் என்மன்ன ரிங்குவந்தால் சொல்லி யுனக்குச் சொக்கம்வேண் டித்தருவேன் வில்லிக்கு வல்லவனே விலகி யமருமையா என்னையென் மன்னவர்தான் இந்தக் கடலதிலே பொன்னனைய நன்மகரம் ஆகவே போகவிட்டார் வருவோ மென்றநாளும் வந்ததுகா ணக்கினியே தருவே னுனக்குவரம் தாட்டீகன் வந்ததுண்டால் அமர்ந்துநீ போனால் அதிகப்பல னுண்டாகும் சுமந்த பறுவதத்தின் சுகம்பெற்று நீவாழ்வாய் என்றுமக ரமாது எரியைமிகக் கண்டுளறி நின்று மயங்குவதை நெடியதிரு மாலறிந்து அனலைமிக வுள்ளடக்கி ஆதி யுருக்காட்டி மனைவியேநீ வாவெனவே மாய னருகழைத்தார் உடனே பொன்மாது உள்ளம் மிகநாணி தடதடென வந்து சுவாமியடி யில்வீழ்ந்து எந்தன் பெருமானோ இப்படித்தா னின்றதுவோ சிந்தை மயக்குதற்கோ தீப்போலே வந்ததுதான் என்றுமிகப் பொன்மகர இளமாது ஸ்தோத்தரித்து மன்று தனையளந்தோர் வாநீ யென அழைத்து அருகில் மிகநிறுத்தி அங்குள்ள தேர்பதியும் கருதி யிருபேரும் கண்கொண் டுறப்பார்த்து வச்சிர மேடை மரகதப் பொன்மேடை எச்சரிக்கை மேடைஎல்லா மிகபார்த்து மாதே வுனக்கு வளர்பிறவி பத்தெனவும் சீதே வுனக்குச் சிறந்தபேறு பத்ததிலே பலம்பேறு பேறாய் பார்மகிழ வோர்பாலன் சிலம்பே றுடையவனாய் சிவனுக் குகந்தவனாய் எகாபர முமகிழ யானும் நீயுமாக மகாகுரு வதாக மகிழ்ந்து மகிமையுடன் தன்மச் சிறப்பதிகத் தலைவன் தனைப்பெறவே உண்மையாய் நானுனக்கு உபதேச மாயுரைத்தேன் என்றுரைக்க நாரணரும் இளமகர மேதுசொல்லும் பண்டு அமைத்திருந்தால் பக்கஞ்சொல் வதோ அடியாள் சித்தத்துக் கேற்ற செயலெனவே பொன்மகரக் கற்றைக் குழலி கருதி மிகவுரைத்தாள் உடனே பொன்மகரம் உள்ளம் மயக்கமிட்டுத் திடமயக்கிச் சிங்கா-சனத்தில் மிகவிருத்தி மயங்கியே பொன்மகர மாது மிகவிருக்கத் தியங்குதே லோகமுதல் திரைவாயு சேடன்முதல் ஈசர்முத லாதிமுதல் ஏற்றதெய் வார்கள்முதல் சீதை முதல்மயங்க சீமையீரே ழுமயங்க மாமோகச் சக்கரத்தை மாயவனார் தான்வீசிச் சீமை யெழுகடலும் சிணமே மயக்கினரே மயக்கியந்த மால்மகரம் மாமோக மாயிருக்க தியக்கியந்த நாரணரும் சென்றார் மதுரமதுள் மகரமுள் சென்று மகனை மிகநினைக்க உகரமுனி கூட்டிவந்த உற்ற சடலமது சிணமே கடலுள் சென்றதுகா ணன்போரே குணமே குணமெனவே கூண்டரியோன் தான்பார்த்து மகனை மிகவெடுத்து மகரமதி னுள்ளேகொண்டு அகரத் தெருவறையில் அலங்காரத் தட்டில்வைத்துக் காலொன்றாய் நிற்கும் கனத்தபொன் மேடையதுள் நாலொன்றாய்க் கூடும் நல்லசிங் காசனத்தில் தங்கவை டூரியத்தால் தானிறைந்த மண்டபத்துள் எங்கும் பிரகாசம் இலங்குகின்ற மண்டபத்துள் முத்துக்கள் சங்கு முழங்குகின்ற மண்டபத்துள் பத்தும் பெரியோர்கள் பாவித்த மண்டபத்துள் தங்கநீ ராவித் தான்வளரு மண்டபத்துள் சங்கு முழங்கிநிற்கும் சதுரமணி மண்டபத்துள் மூவாதி கர்த்தன் உகந்திருக்கு மண்டபத்தில் தேவாதி தேவர் சிறந்திருக்கு மண்டபத்தில் ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மண்டபத்தில் தாற்பிரிய மான தாமிரவர்ணி மண்டபத்தில் எண்ணக் கூடாத இயல்புநிறை மண்டபத்தில் மண்ணளந்தோர் மகரமதுள் மகனை மிக இருத்திக் கண்ணான மகற்கு கனத்ததங்கச் சட்டையிட்டு எண்ணவொண்ணா ஆபரணம் எல்லா மெடுத்தணிந்து தங்கக் குல்லாவும் தலைமேலே தூக்கிவைத்துப் பங்கமில்லாத் தைலப் பதத்தில் மிகமூழ்கி வைகுண்ட வெள்ளை மான்பட்டொன் றேயெடுத்துக் கைகொண்டு பாலனுக்குக் கண்ணர் மிகச்சூடி மேலுக ளொக்க மினுமினுக்கப் பச்சையிட்டுக் காலுக ளுக்குத்தங்கக் கழராப் பணிகளிட்டு மகனை யெடுத்து மடிமீதி லேயிருத்தி உகமாள வந்தவனோ உடையவனோ என்றுசொல்லிக் கண்ணைத் தடவி கரிய முகந்தடவி எண்ணும் வளர்வாயென்று இசைந்தமுகத் தோடணைத்துப் பாலனைப் போல்காட்டிப் பதினா றுடன்காட்டி நாலுரண்டு காட்டி நல்ல மகவதுக்கு நடக்கக் கருமம் நவின்றிடவே நாரணரும் அடக்க முடனே அருளுவா ரன்போரே நல்ல வுபதேசம் நன்மகவுக் கேயருளி வல்லத் திருநாதன் வகுக்கிறா ரன்போரே

விஞ்சையருளல்

தேடிய மறைநூல் வேதன் தேவியர்க் கமல நாதன் நாடிய இறையோன் ஞானி நாச்சிமார் தேவ ரோடும் 560 கூடிய ரிஷியோர் வானோர் குவலய மறியா விஞ்சை தேடிய மகனார்க் கென்று செப்பினா ரொப்பில் லானே மகனே வுனது மனமறிய மறையோ ரறியா விஞ்சைசெய்து அகமே யருளித் தருவதெல்லாம் அனுப்போ லசலில் விலகாதே உகமே முடிந்த தின்பிறகு உதிக்குந் தர்மயுகத் தில்வந்தால் செகமே யறியச் சொல்லிமிகச் சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே ஆண்டா யிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே நான்றாங் கடலின் கரையாண்டி நாரா யணனே பண்டாரம் கூண்டாந் தெச்ச ணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்று ஒன்றாம் விஞ்சை யிதுமகனே உரைப்பேன் ரண்டாம் விஞ்சையதே வேண்டாம் வேண்டாங் காணிக்கையும் மிகவே வேண்டாங் கைக்கூலி ஆண்டார் நாரா யணன்தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும் வேண்டா மெனவே நிறுத்தல்செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருநீ இரண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையதே கொற்றவர் தானு மாண்டு குறும்புகள் மிகவே தோன்றி உற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்து வோடி மற்றதோ ராண்டு தன்னில் வருவோ மென்றா கமம்போல் முத்தலத் தோருங் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை நல்ல மகனே நாலாம் விஞ்சைகேளு வல்ல நடுஞான வாய்த்த வைகுண்டமது பிறந்துகொண் டிருக்கெனவும் புதிய ந÷க்ஷத்திரத்தில் அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லு மாழுவது மாண்டு மனதுகந்த தேமுழிக்கும் முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும் ஒருநெல் லெடுத்து உடைக்கநாடு கேட்டுக்கொள்ளும் இருநெல் லெடுத்து உடைக்கநாடு தாங்காது மலைக ளுதிர்ந்துவிடும் வான மழிந்துவிடும் தலைநாட் சேத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல் என்றுநா லாம்விஞ்சை இதுதானே என்மகனே சத்தமொன் றானதிலே தானிதெல்லா மாகுமென்று சித்த முடனே செப்பியிரு என்மகனே ஆயிரத் தெட்டு அதில்வாழுந் தேவருக்கு வாயிதமாய் விஞ்சை வகுப்பேன்கே ளென்மகனே நாட்டுக் குடைய நாரா யணர்தானும் ஆட்டுக் கொடைபூசை அனுப்போலும் வேண்டாமென்று சொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்கத் தொல்லுலகி லாரேக்கார் பார்ப்போமென்று சொல்லிடுநீ தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு வாறான நாரணர்தான் வாய்த்ததர்ம மேநினைத்துக் கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தா லோகமெல்லாம் உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும் இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல் சற்றும் வெலிபாவம் தான்காண ஒட்டாதெனத் தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும் உற்பனமா யறிந்தோர் ஒதுங்கியிருங் கோவெனவே வீணப் பசாசறிய விளம்பியிரு என்மகனே நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம் மட்டை யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார் சட்ட மசையாதே தன்னளவு வந்தாலும் நாட்டைக் கெடுத்த நவின்றகலிச் சக்கரத்தில் ஓட்டைக் கலத்ததிலும் உக்கு மிரும்பதிலும் முழியாதே யென்மகனே மும்முதற்கும் நாயகமே அழிவாகிப் போகும் அன்புகெட்ட நீசருடன் பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத் தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச் சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும் காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம் எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில் நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால் சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம் கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய் அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார் இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப் பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம் உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரே தங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும் பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும் என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்து நன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள் என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம் அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப் பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல் யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால் செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமே ஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள் என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்து மேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும் எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார் பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார் அந்த வுடனே ஆதிநா ராயணரும் சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக் கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத் திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித் தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும் உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய் சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால் தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால் அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம் எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும் நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும் இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய் எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே ஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்து பாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ வத்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல் சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல் கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல் எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல் பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல் காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல் மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய் மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும் கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய் அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால் நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும் வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே தானீத னான சர்வபரா என்மகனே ஒக்க வுனது உள்ளம் நினைத்தபடி மிக்க நடத்தி விரும்பியிரு என்மகனே எண்ணிறந்த கோடி இயல்பாவஞ் செய்தோர்க்கும் நண்ணியே மோட்சம் நவிலவென்றா லுன்மனந்தான் முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரைத் தக்கோடி நரகமதில் தள்ளவென்றா லுன்மனந்தான் உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகனே எனக்கேற்க நின்றவரை இரட்சிப்பது முன்மனந்தான் சிவனும்நீ நாதனும்நீ திருமாலும் நீமகனே தவமும் வேதனும்நீ சங்கமுத லெங்கும்நீயே அப்படியே அய்யா அரிநாத னுமுரைக்க முப்பொருளோர் மெய்க்கும் முதலோன் மகிழ்ந்துரைப்பார் ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்தால் வாறு மேலென்ன வகுப்பீர்கா ணையாவே அப்போது நாதன் அன்பா யகமகிழ்ந்து செப்புகிறார் நல்ல திருமகற்கு அன்போரே அதிகத் தவசு ஆண்டாறு தான்கழித்தால் இதின்மேல் நடப்பு இயம்பக்கே ளென்மகனே இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி மும்மூவ ருக்கும் முதல்வனாய் வந்தாக்கால் தானா னாய்நீயும் தலைவனும்நீ என்மகனே சாணாரின் நாயகமே சாதித்தலை வன்நீயே எந்தப்படிநீ எண்ணி நினைத்த தெல்லாம் அந்தப்படி செய்து அவனிதனி லேசிலநாள் சொந்த விளையாட்டு தொல்புவியிற் கொண்டாடிச் சிந்தாத நன்மையோடு செகத்திலிரு என்மகனே அதின் முன்னாக அன்னீத மாபாவி ஏதுவினை செய்தாலும் எண்ணம்வையா தேமகனே தாழ்ந்திரு என்மகனே சட்டைக்குள் ளேபதுங்கிச் சார்ந்திரு என்மகனே தனதில்மிக நினைத்துக் கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே பாராக்கிரமங் காட்டாதே ஆக்கிரம மெல்லாம் அடக்கியிரு என்மகனே தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான் பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள் ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல் மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே மகனே நானுனது மனதுட் குடியிருந்து சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன் நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார் சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே ஆழ மனதுடைய அதிகமக னேவுனது விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம் மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும் கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு மகனே வுனது மனறியக் காட்டினதை அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப் பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே நாட்ட மறவாதே நாரணா என்மகனே அப்போது ஆதியுடன் அம்மகவு ஏதுரைக்கும் இப்போது என்றனக்கு இத்தனையுஞ் சொன்னீரே கலியுகத் தைமுடித்துக் கட்டானத் தர்மபதி வலியுகத்தைக் காண்பதெப்போ மாதா பிதாவேயென்றார் அப்போது மகனை ஆவிமுகத் தோடணைத்து இப்போது சொல்லுகிறேன் என்மகனே கேட்டிடுநீ நீபோய்த் தவசு நீணிலத்தில் செய்திருக்க நான்போய் நடத்தும் நல்வளமை கேட்டிருநீ ஆயிரத் தெட்டு ஆனதிரு மண்டபத்தில் வாயிதமா யாண்டொன்றில் வைத்தமண்ட பங்களிலே நூற்றிப் பன்னிரண்டு நொடிப்பே னோராண்டதிலே தோற்றுவிப்பே னார்க்கும் தூது மிகநடந்து பத்தாண்டுக் குள்ளே பலசோதனை பார்த்து வித்தார மேலே விசாரிப்பேன் கண்டாயே அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவே ரத்தனையும் எங்கெங் குமொடுக்கி யானுன் னிடமிருந்து ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கி உன்மூப் புயர்மூப்பாய் உல்லாச மேதருவேன் பின்மூப் பில்லாமல் பெரியோனின் நாமமதாய் அடக்குடக் கெல்லாம் அன்றுனக்கு நான்தருவேன் வடக்கு வெளிவாசல் மலைமீதி லோர்புதுமை உண்டாகு மகனே உனக்கு நற்காலமதே தண்டா யுதத்தோடே சத்தமொன் றேபிறக்கும் மேலக்கால் மண்டபமும் மேல்மூடி தான்கழன்று காலத்தால் காணும் கண்மணியே யுன்காலம் தெச்சணா மூலை தென்பாற் கடலருகே 800 மெச்சும் பதிமூலம் விளக்கெரியக் கண்டுனது கால மிதுமகனே கன்னிதிரு தென்திசையில் கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும் தாபரமாய்த் தன்னால் தலங்க ளதுதுலங்கும் கண்டதுவே காலம் கனத்தவலு சூரியனும் பண்டு முறைதப்பிப் பருதிரத்தக் கண்வெறியாய் மகனே வுனக்காகா மாநீசப் பாவியெல்லாம் அகமே கனல்தாவி அன்றாடம் தானழிவார் உகமீதே தர்மம் உனக்கெனக்கென் றேகுதிக்கும் மகனே வுனது மாதவத்தோர் காலம்நன்று கால மிதுமகனே கண்மணியே கேட்டிடுநீ தூல முரையாதே துலங்கும்நா ளாகுமட்டும் எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம் மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே இவ்வகைக ளெல்லாம் என்மகனே யுன்காலம் அவ்வகைக ளெல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ இனத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று மனதில் வேறெனவே வையாதே யென்மகனே நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே லிங்கமொன் றேதிக்கும் இணையாக ஓர்சோடாய் தங்கநவ ரெத்தினங்கள் சமுத்திரத்தி லேகாணும் ஆனையொரு கன்றீனும் அதினா லுலகமெல்லாம் தானாக ஆளும் தலைவனும்நீ யல்லாது மலையடி வாரம் வளருமொரு விருச்சம் அலையதி லும்பெரிதாய் அதுதழையுங் கண்டாயே சிலையுள்ளே தோன்றி சிவதோத்தி ரமாக நிலையொன்றா யாகி நீயாள்வா யுன்காலம் வாரிக் கரையில் மண்டபமொன் றேவளர்ந்து நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு ஒருகுடைக்குள் ளாள்வாய் உன்கால மென்மகனே

அகிலம் பத்து

divider
தருமமதாய்த் தாரணியில் தன்னந்தன் னால்வாழ்ந்து பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல் லாம்வாழ்வார் அப்போது நீயரசு ஆளுவாய் யென்மகனே வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே கோடுபல வாதும் கோள்நீசப் பாவிகளும் கேடு வருங்காலம் கிருஷ்ணா வுன்நற்காலம் வானமது வெள்ளி மாறிவெறும் வானமதாய் மேன் முகிலற்று வெறுவான மாய்த்தோன்றும் நல்ல மகனே உனக்குவரும் நற்காலம் சொல்லத் தொலையாது சூல்மகனே என்கணக்கு ஒக்க அடக்கி உரைத்திருக்கு வுன்னிடத்தில் நிற்க நிலைக்க நினைத்ததெல்லா மங்காகும் பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது இச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே வந்தா ரறிவார் வராதார் நீறாவார் இன்ன முன்காலம் இயம்புவேன் கேள்மகனே தன்னந் தன்னாலே சாதிக்குச் சாதிமாளும் நல்ல நினைவோர்க்கு நாளெத்தனை யானாலும் பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார் நாட்டி லொருஅனுமன் நல்லவனை நானயச்சு கோட்டிசெய் யென்றுரைப்பேன் கோமகனே வுன்காலம் முறைதப்பி யாண்ட முகடன் வெறும்நீசன் குறைநோவு கொண்டு கூடிழப்பா னுன்காலம் அதிலே சிலபேர் அரசுனக் கெனக்கெனவே விதியை யறியாமல் வெட்டிக்கொண் டேமாள்வார் அத்தருண முன்காலம் அதிகமக னேகேளு இத்தருண மல்லால் இன்ன மெடுத்துரைப்பேன் எல்லோருங் கைவிட்டு இருப்பாருனைத் தேடாமல் நல்லோர் மனதில் நாரணா என்றுரைப்பார் கோல விளையாட்டுக் கொஞ்ச மெடுப்பேனான் தூல மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும் அன்போர்க ளெல்லாம் ஆவியே தான்மறுகி இன்ப முடனே ஏங்கியேங்கி யழுவார் இத்தனை நாளும் இவரைநம்பி நாமிருந்து 40 புத்தியது கெட்டோம் என்றுமிகப் பேதலிப்பார் அப்போது ஆகா அன்னீத மாபாவி இப்போது கண்டுதென்பார் ஏலமே சொன்னதெல்லாம் எய்த்தானென்பா னன்போரை இடுக்கஞ்செய் தேயடிப்பான் சூட்ச முடனே சொரூபமொன்று நானெடுப்பேன் அதுதா னொருகாலம் அதிகமக னேகேளு இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டிடுநீ அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய் இதின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே பின்னுமொரு சூட்சம் பிரமாண மாயெடுப்பேன் பன்னு மணியே பராபரமே கேட்டிடுநீ குளத்தைத் தடதடெனக் கொந்துகொந் தாயுடைத்து சுழற்றக்கன லக்கினியும் துர்க்கைமா துர்க்கையையும் விட்டயச்சு மாநிலத்தில் விளையாடி யேதிரியும் கட்டணங்க ளாக கனமாய்க் குழுகுழென ஓடுவார் பதறி விழுவா ரறமெலிந்து நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார் என்மகனே வுன்காலம் இன்னும் வகுப்பேன்கேள் பொன்மகனே பூமியிலே பின்னுமொரு காரணங்கேள் கெட்ட நசுறாணி கெம்பிக் கடைக்காலம் மொட்டைத்தலை யன்வருவான் முளையனவ னோடிடுவான் ஆடிக் கொண்டாடி அங்குமிங்குந் தானலைந்து ஓடிக் கொண்டோடி ஒன்றுபோ லேமாள்வான் மகனே யுன்காலம் மகிழ்ந்திரு என்மகனே உவமையொன்று சொல்லுகிறேன் உற்பனமாய்க் கேள்மகனே புத்திரனுக் கேகுருவும் புகன்றதெல்லாம் புகன்றாலும் சுற்றுமொரு சூட்சத் தொழிலுண்டு மாயானுள் அத்தனையு மென்னுள் அடக்கமில்லை யென்மகனே முத்தியெனை யீன்றோர் முதனாளோர் விஞ்சைவைத்தார் அவ்விஞ்சை மாத்திரமே யானுனக் கீயவில்லை இவ்விஞ்சை யீவதுதான் எப்போதெனக் கேளு சீமை யரசு செலுத்தவரும் நாளையிலே மேன்மை முடிதரிக்கும் வேளையி லென்மகனே சொல்லுகிற விஞ்சை சுத்தமனே கேட்டிடுநீ பல்லுயிர் களுக்கும் படியளக்கும் விஞ்சையது எல்லா முனக்களித்தேன் என்னுடைய நாரணனே அல்லாமல் நானுனக்கு அருளுகிற விஞ்சையைக்கேள் பெரியோர்க்கு வாழ்வு பெருகிச் சிறந்தாலும் மரியாதை யேயிருக்கும் மகனேநீ கேட்டிடுநீ சற்றோலே வாழ்வு சகடருக் கேவருகில் கற்றோரே யாகிடினும் கண்டறிவேன் போநீயென்பான் முள்முருக்கம் பூவு மினுக்குமூன் றுநாளை கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல் வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய் விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே துள்ளாத யானை துடியானை யென்மகனே அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே அண்டின பேரை அகற்ற நினையாதே ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும் கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே விசுவா சமதிலே விரோதம் நினையாதே எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே பரம்பூமி கண்டு பாவித் திருமகனே இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும் நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே என்மகனே நானுனக்கு இன்னமொரு விஞ்சைசொல்வேன் பொன்மகனே யுன்னுடைய புத்தியிலே வைத்திருநீ இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால் தீச்சட்டம் காய்க்கத் தேதிவரு மென்மகனே அனுப்போல் மறவாதே யான்வைத்த சட்டமதில் மனுப்போ லென்றிராதே மனதெண்ண மாயிருநீ பஞ்சமிர்தே யென்னுடைய பாதைதப்பி நீநடந்தால் கொஞ்சுங் கிளியே கொன்னெழுப்பு வேனுனையும் பதறியிரு என்மகனே பம்மியிரு கண்மணியே பொறுதி மகனே பெரியோரா யாகுவது உறுதி மகனே உலகமதை யாளுவது மகனேநா னெத்தனையோ மகாபெலங்கள் கற்றவன்காண் உகமீதே சொல்லித் தொலையுமோ வுத்தமனே எவ்வுகங் களுக்கும் இப்படியே தர்மமில்லை செவ்வுமகா விஷ்ணுதான் என்றுசொல்லார் தேசமதில் இப்போது என்மகனே இக்கலியன் மாய்மாலம் செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாதாராலும் இப்போதுன்னோ டுரைத்த இயல்விஞ்சைக் ககப்படுங்காண் அப்பனே பம்மலிலே அகப்படுங்கா ணிக்கலியும் கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே வலிமாய நினைவு மாய்மால மென்மகனே ஆனதா லாயுதங்கள் அம்புதடி வேண்டாமே மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே இன்னமொரு விஞ்சை இயம்புவேன் கேள்மகனே முன்னம்வகைக் காரனொடு மோதிப் பகையாதே பகைத்தா லிருக்க வொட்டான்கா ணவ்விடத்தில் உகத்தடக்கு முன்னே ஒருவரையுஞ் சீறரிது தாழ்ந்திருக்க வென்றால் சர்வதுக்குந் தாழணுமே ஓர்ந்திருக்க வென்றால் ஒருவர்பகை யாகாதே ஆனதால் நீயும் அவனைப் பகையாதே நானவனைக் கேட்பேன் ஞாயக்கே டாகிடினும் வலியோர்க் கொருவழக்கு வைத்துநீ பேசாதே மெலியோர்க் கொருவழக்கு வீணாய்ப் பறையாதே சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே வத்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே நீயெண்ணா தேயிருந்தால் நீணிலங்க ளுமயங்கும் தானிதின்மே லெண்ணம் தங்குதங் காதேயிரு சத்துரு வோடும் சாந்தமுட னேயிருநீ புத்திர ரோடும் பேசியிரு என்மகனே அன்போர்க்கு மீந்திருநீ ஆகாப்பேர்க்கு மீந்திருநீ வன்போர்க்கு மீந்திருநீ வழிபோவார்க்கு மீந்திருநீ சகலோர்க்கு மீந்து தானிருநீ யென்மகனே வலியோர்க்கு மீயு வழிபோவார்க்கு மீயு மெலியோர்க்கு மீயு மேன்மையா யென்மகனே ஆர்க்கு மிகவீந்தால் அந்தத்தர்ம மேகொதிக்கும் போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந் தர்மமது தன்மந்தான் வாளு சக்கரங்க ளல்லாது தின்மையது கேடு செப்பக்கே ளென்மகனே சாதி பதினெட்டும் தன்னாற்கே டாகுமட்டும் நீதி யழியாதே நீசாபங் கூறாதே மகனே வுனக்கு வைத்தவிஞ்சை மனதி லறிந்து கொண்டாயோ அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடந்து அல்லாமல் உகமே யழியு முன்னாக ஒருசொல் லிதிலே குறைவானால் சகமோ ரறியத் தீமூழ்கிச் சதியாய் மறுத்து முழிப்பாயே நல்லோர் மகனே சொல்வதுகேள் நானோ வுரைத்த விஞ்சையெல்லாம் வல்லோ னான திருமகனே மனதி லறிந்து அறிந்துநட எல்லாம் நமதுள் ளாச்சுதென்று எண்ணி நடப்பொன் றுன்னாலே சொல்லால் தாண்டி நடப்பீரால் தீயே குளித்து வருவாயே கொடுக்கும் வரங்களு னக்கீந்தேன் கொடுத்த வரத்தை பறிப்பதற்கு உடக்கு வரமுந் தந்தேனான் உன்ற னாணைத் திருவாணை அடக்கு முடக்குந் தந்தேனான் ஆதி சிவனா ரவராணை நடக்கும் படியே சட்டமெல்லாம் நாரா யணனே தந்தேனே தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந் தரைமீது எந்தன் மீது மறவாதே என்னாண் டருளு மிறையோனே அந்தன் மீது மறவாதே ஆயா னெனவே அறிவில்வைத்துச் சிந்தை மகிழ்ந்து முறைநடந்தால் சிவனு முனக்குள் வசமாமே தாயா ரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது பூசா பலன்கள் சொல்லிமிகப் புலம்பித் திரிவார் துயர்தீர மாயா திருக்கு மகனேவுன் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே சொல்ல எளிதோ என்மகனே சொல்லா தனேகம் தோன்றுமினி வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராரா லும் கொல்ல எளிதோ வுனைமகனே கோவேங் கிரியின் கோனாலும் வெல்ல எளிதோ வுனைமகனே மேலாங் கண்ணே மிகவளராய் இந்தப் படியே நாரணரும் இயம்ப மகவு ஏதுரைக்கும் கந்த னுறுவே லென்றகப்பா கடியா வுனது படிநடக்க எந்தப் படியோ நான்றமியேன் ஏதோ அறியப் போறேனெனச் சிந்தை மகிழ்ந்துத் தகப்பனுட திருத்தாள் பிடித்துச் செப்பலுற்றார் தன்னம் பெரிய தாட்டீக வைகுண்டரும் என்னசொல்வீ ரென்றனக்கு என்றகப்பா நீரெனவே வணங்கிப் பதம்பூண்டு மாதாவை யுந்தொழுது இணங்கி யிவர்கேட்க ஏதுசொல்வார் நாரணரும் நாராணா வைகுண்டா நன்மகனே என்னையினி வாரணமே நீவணங்கி மகனே கைசேராதே நீகை குவித்தால் எனக்குமிகத் தாங்கரிது தானீத னான சர்வபரா என்மகனே ஒருவருந் தாங்கரிது உன்கை குவித்தாக்கால் குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே இன்ன முனக்கு இயம்புகிற விஞ்சையதும் பொன்னம் மகனே பூராய மாய்க்கேளு சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும் வாரி மலையதிலும் வன்னியிலுந் தள்ளிவிடு வரத்தை மிகவேண்டி வைத்துக்கொள் ளென்மகனே சரத்தை மிகவாங்கித் தானனுப்புப் பேய்களையும் உட்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்க் கட்கோள் கருவைக் காணாதே சாபமிடு செல்வம் பொருந்திச் சிறந்திரு என்மகனே கொல்லென்ற பேச்சுக் கூறாதே என்மகனே ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம் செவ்வென்ற பேச்சுச் செப்பியிரு என்மகனே உரைத்த விஞ்சையெல்லாம் உனக்குப்போது மோமகனே விரைத்தமுள்ள வைகுண்டா விற்பனவா நீகேளு நீபோ யிருக்கும் இடங்களில் என்மகனே அன்பான பஞ்சவர்கள் அங்கேவுண் டென்மகனே முன்னே பிறந்த உகத்துக் குகங்களெல்லாம் என்னைவிட் டகலாது இருந்தார்கள் பஞ்சவர்கள் ஆனதா லிப்போது யானும்நீ யானதினால் மானமுள்ள பஞ்சவரை மகனேமுன் விட்டுக்கொள்ளு அல்லாமற் கேளு அரிநாரணா என்மகனே நல்லோராய்ப் பெண்கள் நாடியெண்ணக் கூடாது வல்லோராய் நந்தன் வம்மிசத்தில் வந்திருந்தார் அப்பெண்ணார்க் கெல்லாம் அதிகப்பலன் தாறோமென்றேன் இப்பெண்ணார் சிலர்கள் இன்னமங்கே தோன்றிவந்தால் ஆனதால் பெண்ணார்க்கு அழகுகொடு என்மகனே நின்ற தவசு நிறைவேறி னால்மகனே ஒண்டொடியார் சிலரை உன்பாரி தானாக்கி நன்மைகொடு என்மகனே நாரணா நாடாள்வாய் உன்னை நினைத்தோர்க்கு உதவிகொடு என்மகனே கட்டை விடாதே கருத்துள்ள என்மகனே சட்ட மறவாதே சாஸ்திரத்துக் குற்றவனே பெண்பாவம் பாராதே பேணியிரு என்மகனே கண்பாரு கண்மணியே கன்னி கணவருக்கு இன்னமொரு சூத்திரம் இயம்புகிறே னென்மகனே துன்ன மறியத் தோற்றுவிப்பேன் சாதிதோறும் அன்புவன்பு பார்க்க ஆரா ரிடத்திலும்போய் உன்புதுமை சொல்லி உடலை மிகஆட்டி சாதிசா திதோறும் சக்கிலி புலச்சிவரை ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன் காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு துலுக்கன்வீ டானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன் கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும் பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர் ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான் மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான் அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான் குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன் ஒருவர்க் கொருவர் உனக்கெனக் கென்றேதான் உறுதி யழிந்து ஒன்றிலுங்கை காணாமல் குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து மறுகித் தவித்து மாள்வார் சிலபேர்கள் ஓடுவார் சிபேர் ஒழிவார் சிலபேர்கள் கேடு வருமே கேள்விகேளாப் பேருக்கெல்லாம் அதன்மேல் மகனே யானுனக்குச் சொல்வதுகேள் இதின்மே லுனக்கு ஏகவியா ழம்வரும் சந்தோச மாகுதுகாண் உனைச்சார்ந்த அன்போர்க்கு எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே எதுவந் தாகிடினும் எண்ணம்வையா தேமகனே சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன் இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிடுநீ வேண்டா மிறைகள் வேண்டாமென்று சொல்லிடுநீ ஆண்டார் மகனே அதிகத் திருமகனே நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம் செல்ல மகனேவுன் சிந்தையிலே பற்றினதோ போதுமோ விஞ்சை புகலணுமோ என்மகனே சாருமொரு விஞ்சை தான்சொல்வேன் கேள்மகனே முவ்விஞ்சை வைத்தேன் உலகமறி யாதவிஞ்சை இவ்விஞ்சை மாத்திரமே இனம்பிரித்துச் சொல்லாதே பெற்றோர்கள் கண்டுகொள்வார் பேசரிய என்மகனே கற்றோர்கள் கண்டுகொள்வார் கண்ணே திருமகனே கண்ணே மகனே திருமகனே கமலப் பூமா கரிமகனே எண்ணே யெழுத்தே என்மகனே இறையோர் தொழவே வருமகனே ஒண்ணே மகனே உயர்மகனே உடைய மகனே கண்மணியே தண்ணே மகனே தவமகனே சாகா திருக்குஞ் சலமகனே மகனே தவமே மரகதமே மாதவம் பெரிய மலரோனே தவமே யுனதுள் வைத்தவிஞ்சை தானே போது மோமகனே எகமேழ் மகிழ வந்தவனே என்றன் மகனே வளர்வையென உகமே ழளந்தோ ருரைத்திடவே உயர்ந்த மறையோர் வாழ்த்தினரே அய்யாநா ராயணரும் ஆதிவை குண்டமென மெய்யா யுரைத்து விளங்கவே வாழ்த்தலுற்றார் மகனே வுன்தேகமதில் வைத்த நிறங்களெல்லாம் உகமழியு முன்னே ஒருவர்கண் காணாதென அகமே வைத்து அகமகிழு என்மகனே வைகுண்ட மென்றுமிக வாழ்த்தக் குருநாதன் மெய்குண்டத் தோர்கள் மேலோர்கள் வாழ்த்தலுற்றார் மகரவுந்தி விட்டு வைகுண்டந் தான்பிறந்து சிகரமுனி தேவருட சிறப்பதிலே வந்தவுடன் தேவர் திருவானோர் சென்றெடுத்து வைகுண்டரை மூவர்தே வர்மகிழ்ந்து முதலோனைக் கைகுவித்து ஏந்தி யெடுத்து இளந்தொட்டில் மீதில்வைத்துச் சாந்தி கழித்துத் தவலோகச் சட்டையிட்டுச் சீதை மயக்கமெல்லாம் தீர்ந்திடவே சாபமிட்டு வீரரையும் வந்து வீரலட்சு மியெடுத்து மடிமீதில் வைத்து மாதுசர சோதியுடன் குடியான பேரும் கொண்டங் ககமகிழ்ந்து பொன்தொட்டி லிட்டுப் பொற்சீதை தாலாட்ட பைங்கொடி யாள்சரசு பதிமாது தாலாட்டத் தேவரிஷி வானோர் தேவரம்பை மாதரெல்லாம் சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுப் பின்பாட ஈசர்முதல் சங்கம் எண்ணி மனமகிழச் 300 சார்சர சுபதியாள் தாலாட்ட வேதுணிந்தாள் பொன்மணிப் பதியி னுள்ளே புனலரி கிருஷ்ணர் பெற்ற தண்மணிப் பாலன் தன்னைத் தங்கமாந் தொட்டி லிட்டு மின்மணி கொடிசேர் கன்னி விளங்கிய சோதி மாது கண்மணி வைந்த ராசர் காணத்தா லாட்டி னாளே

தாலாட்டு

தார தரதர தாராரோ தார தரதர தாராரோ நாராயணர் தானோ தாராரோ நல்ல நாராயண வைகுண்டமோ காரணர் தானோ வைகுண்டமோ கயிலாச நாதக் கண்மணியோ செல்வ முதலான சீமானோ சிவசிவ சிவ சிவமுதலோ அல்ல லகற்றியே அரசாளும் அரியோன் மிகப்பெற்ற அரிதானோ தெய்வப் பெருமாள்தான் பெற்றகன்றோ சீதை மாதுதான் பெற்றகன்றோ மெய்ய னரிநாதன் பெற்றகன்றோ விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ இறவா திருமாது பெற்றகன்றோ மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ சீதக் குருதாயா ரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ கிருபைக் குருநாதக் கண்மணியோ விஷ்ணு மகாநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ நாட்டுக் குடையதோர் நாரணரின் நல்ல பாலனோ வைகுண்டனோ ஏட்டு முதலானோ தாராரோ ராச வைகுண்ட ராசர்தானோ மூலச் சிவநாதன் பெற்றகன்றோ உலகை யொருகுடைக் காள்வானோ நாலு வேதமும் தாண்டிமுறை நடத்தி யொருகுடைக் காள்வானோ ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு உற்ற பதவிகள் கொடுப்பவனோ தருமத் திறவானோ தாராரோ தங்க வைகுண்டத் தாட்டீகனோ மகரச் சீதையாள் வயிற்றுலுற்ற வளர்ந்த வைகுண்ட மாமணியோ அகரச் சிவகோபுர மழகுபதி அதிகப் பதிகெண்டு வந்தவரோ தங்கக் கோபுரம் தளிர்மரமும் சதுர மேடைகள் கண்டவரோ சங்க மகிழவே வந்தவரோ சகல கலைதமி ழாய்ந்தவரோ உலகம் பதினாலு மொருகுடைக்குள் ஒருசொல் மொழிக்காள வந்தவரோ இலகு பிரகாச சுவடுகொண்டு இலங்கும் பதியாளப் பிறந்தவரோ வம்புக் கலியுகக் குலமறுத்து வைந்தப் பதியாள வந்தவரோ அம்புக் கணையொன்று மில்லாமலே அறுக்க வந்தாரோ கலிதனையும் கூடப் படைகள்துணை யில்லாமல் குறும்பை யடக்கவே வந்தவரோ சாடத் தலையாரி யொன்றில்லாமல் சதைக்க வந்தாரோ கலியுகத்தை வாளு மாயுத மெடுக்காமலே வதைக்க வந்தாரோ கலியுகத்தைக் கோளு பேய்களைக் கிரகங்களைக் கொல்ல வரம்பெற்ற வைகுண்டரோ சாணாக் குருநாத வைகுண்டரோ சாதி தற்காக்குந் தலையாரியோ காணாக் கருவான கருமூலமோ கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோ நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ நாமம் பெரியதோர் வைகுண்டரின் நாமம் பெறவோங்க வந்தவரோ தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்றச் சீமை யரசாள வந்தவரோ மெய்வ ரம்பதின் முறைநடத்தி மேன்மைச் செங்கோல் முடிதரித்து பொறுமைப் பெரியோனோ வைகுண்டனோ பெரிய பூமேடைக் கொலுவீரனோ தரும வரம்புகள் தவறாமலே தரணி யரசாளும் வைகுண்டரோ திராசு நிறையிலுந் துல்லியமாய்ச் செங்கோல் செலுத்தவே வந்தவரோ மிராசு மூவர்க்கு முதன்மைதானோ மூலச் சிவமணி குருநாதனோ சான்றோர் கைகட்டிச் சரணங்கூறத் தரணி யொருகுடைக் காள்வானோ ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு ஆன மதலையாய் வந்தவரோ வைய மளந்ததோர் நாரணர்க்கு மதலை யெனவந்த வைகுண்டரோ தர்மப் பதியாளும் வைகுண்டரோ சாணர்க் கனுகூல மானவரோ அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ தோணாத் துறைகொண்டு வந்தவரோ துவரா பதியாளப் பிறந்தவரோ ஏழு யுகபரக் கணக்கையெல்லாம் எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ ஆளும் வைகுண்டப் பதியாளவே அரிய வைகுண்டம் பிறந்தவரோ வீர வீராதி வீரன்தானோ வீர சூரனா ரீன்றகண்ணோ சூர சூராதி சூரன்தானோ சூர சூரனார் பெற்றகண்ணோ நாத நாரணர் பெற்றகண்ணோ நாக மணிநாதன் பெற்றகண்ணோ சீதக் குணநாதன் பெற்றகண்ணோ சீதை மணவாளன் பெற்றகண்ணோ மேக நிறத்தண்ண லீன்றகண்ணோ மேலோர் போற்றும்வை குண்டக்கண்ணோ ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ இறவா திருமூர்த்தி பெற்றகண்ணோ

வேறு

சந்திர சுந்தர தந்திர மந்திர சாமிசீர் பாலகனோ தாயக மாயக நாயக மாகிய தாண்டவ சங்கரனோ சுந்தர சந்திர யந்திர குஞ்சித சூரியப்பிர பாலகனோ சூரனோ வீரனோ மாதனோ நீதனின் சூலகலா திபனோ தந்திர மந்திர இந்திர சுந்தரின் சந்ததி சந்ததியோ சகடவெலி சண்டரை அகடவெலி செய்திடும் சுக்கிர விக்கிரனோ கொந்தரி சந்ததின் தந்திர சுந்தர கோசல நாயகனோ கொடுகலி யறவொரு கடுமுனை கொண்டருள் குலவெங்கிட குண்டமோ சுத்தனோ கர்த்தனோ நித்தனோ அத்தனோ துலங்கும் தங்கரனோ சூரனோ வீரனோ தீரனோ நாதனோ சூரியப்பிரகாச வீதனோ விரனோ காரனோ தாரனோ சாரனோ வெங்கிட ரங்கிடனோ விகடக டகடக டகுட டடமருள் வேதவிக்கிர சுக்கிரனோ தீரனோ காரனோ சீரனோ வீரனோ செந்திலம்பதிவளர் சந்திரனோ திகதிக தரிகிட செகமுக மருள்புரித் திக்கிர விக்கிரனோ நீதனோ கீதனோ வீதனோ மாதனோ நீதவெங் கோகுலனோ நெகிடுகலி யகடற விகடுகுடல் கருவற நெக்கிர விக்கிரனோ இப்படி ஒளவை மாது இயல்புதா லாட்டக் கண்டு செப்படி முனிமா ரெல்லாம் சிவவைந்தர் பதத்திற சென்று முப்படி முறைபோல் தேவர் முக்கந்தன் பள்ளி கொள்ள அப்படித் தேவ ரெல்லாம் அவரிசை கூற லுற்றார்

பள்ளி உணர்த்தல்

பள்ளியுணராய்-சிவமருகா நீ பள்ளியுணராய் பள்ளியு ணராய்நீ தெள்ளிமை யாகவே பாற்கடல் மீதினில் தாக்குட னுதித்தவா வெள்ளி யுதித்திடப் பள்ளி யுணர்த்தவும் வேதநா ராயணர் சீதகோ பாலர்க்குக் கொள்ளி யெனவந்த வைகுண்டக் கோவனே கோவேங் கிரிவள ரீசர் மருகோனே வள்ளி மணவாளர் வளர்செந்தூர் வாரியில் வந்து பிறந்துநல் தெச்சணம் புகுந்தவா (பள்ளி) வேக முடனொரு சந்தத்து ளாடியே மேதினி யோர்க்குப காரங்கள் செய்யவே ஆகாத்த பேர்களை அக்கினியில் தள்ளவும் ஆகின்ற பேர்க்குப காரங்கள் செய்யவும் தாகத்துக் கானதோர் தண்ணீர் கொடுத்துநீர் சஞ்சல நோய்பிணி யஞ்சற்குத் தீர்க்கவும் ஏகத்துட னாளும் நாரண வேந்தர்க்கு எம்பி யெனவரும் தம்பிரா னானவா (பள்ளி) மூர்க்கன் கலியுக ராசனைத் தட்டியே முடுமுடுக்கஞ் செய்த மூர்க்கரை வெட்டியே ஆர்க்கமு டன்புவி யைம்பத்தாறு சீமையும் அடக்கியொரு சொல்லுக் குடைக்குள்ளே யாளவும் காக்காமகா தர்ம கற்பையுங் காக்கவே கர்த்தனரி கிருஷ்ணர் புத்திர ராய்வரும் தாக்கத் திறம்வளர் வைகுண்ட ராசரே தர்மமதி லுறையும் பொறுமைக் குலதீரா (பள்ளி) தம்பில மானகு றோணிகுண் டோமனைத் தத்தியாத் தில்லைமல் லாலனைச் சூரனை வம்பு இரணிய ராவண சூரனை மகோதர னானது ரியோதனப் பாவியைக் கொம்பிலுங் கெம்பிலும் அம்பினாற் கொன்றதோர் கோபால கிருஷ்ண குழந்தைவை குண்டரே நம்பின அன்பருக் குபகார சாலியே நாரணா சீமைக் கரிவரி யானவா (பள்ளி) பள்ளிதா னுணர்த்தத் தேவர் பரிவுடன் கேட்டு வைந்தர் தெள்ளிவை குண்ட ராசர் சிந்தையி லன்பு கூர்ந்து நள்ளிய தேவ ரார்க்கும் நயமுடன் தயவ மீந்து துள்ளியே தகப்பன் பாதம் தொழுதவர் வணங்கிச் சொல்வார் தேவர் துயரமெல்லாம் தீர்ப்போங்கா ணென்றுசொல்லி மேவலர்கள் போற்றும் விசயவை குண்டராசர் தகப்ப னுடபதத்தில் சரண மிகப்பணிந்து உகப்பரனார் நோக்கி உரைக்கிறா ரன்போரே என்னை பிதாவே மாதாவே யென்தாயே எல்லா விவரமதும் எடுத்துரைத்தீ ரென்றனக்கு நல்லோரே நானினித்தான் நடக்க விடைதாரும் பண்டுள்ள ஆகமம்போல் பால்வண்ணர் பெற்றிடும்வை குண்டர் தெச்சணமே கொள்வார்தான் பள்ளியென ஆதியா கமப்படியே அனுப்பிவையு மம்புவியில் சோதிமணியே சுவாமி யெனத்தொழுதார் உடனே மகனை உவந்துமுகத் தோடணைத்துக் கடலின் சிறப்பைக் கண்டாயோ என்னுசொல்லி மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப் பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே மகனே வுனைக்கண்டு மனச்சடவெல் லாந்தீர்ந்தேன் சுகமேபோய் வாவெனவே சொல்லி யனுப்புவேனோ உன்கூட நானும் ஓடி வருவேனப்பா என்கூட வுன்தாயும் ஏகி வருவாள்காண் என்று தாய்தகப்பன் இவர்கள் வழிகொள்ளவே கண்டு வைகுண்டர் கனமாய் மனமகிழ்ந்து நீங்கள் வருவதுதான் எனக்குவெகு சந்தோசம் தாங்கி வருவேன் தமியேனுங்கள் பாதமதை அப்போது நாரா யணர்மகனே யாவிமிக இப்போ தென்பாலகனே இயம்புகிற புத்தியைக்கேள் சீமை யதுகாணச் செல்லோங்கா ணுன்கூட வாமை மகனே வருவோமுன் கண்காண மகனே நீநடக்க வைகுண்டம்வை குண்டமென உகமீ ரேழுங்காண உரைத்துவிடு யாமமது முன்னடந்து யாமம் மொழிந்துநட என்மகனே பின்னடந்து நானும் யாமம் பிசகாமல் நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல் காட்டுவிப்பேன் மகனே கண்ணேநீ முன்னடநீ தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம் நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே கடல்திரைவாய்ப் பதிகள் கண்டுசென்று தானிருநீ தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே கண்ணி லுருக்காணும் கைக்குளொரு கிள்ளைவரும் பகைவன் மடிவன் பைங்கிள்ளை யங்காகும் உகவன் வருவன் ஒருவ னறிவான்காண் பகவான் சுழற்றும் பாருலக மும்பழுக்கும் அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங் காணும் மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும் பார்சிரசு கண்டு வாறேனென் பாலகனே திகையாதே முன்னடநீ சந்தமுனி தன்கூட பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு அஞ்சுபூக் கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு வஞ்சக மில்லாத வாழ்வுகொடு என்மகனே மகனே நீவாற வழியின் பவிசுகண்டு தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே என்றுவை குண்டருடன் இசைந்தமுனி ரண்டுவிட்டு கொண்டயச்சுக் காத்திருங்கோ குண்டருட பக்கமதில் சாட்சியாய்ப் பார்த்திருங்கோ தரணி வளப்பமெல்லாம் காட்சி கொடுத்திடுங்கோ கண்ணரியோன் முன்னிருந்து கோபங்காட் டாதேயுங்கோ குணமுனிவ ரேகேளும் சாபங் கொடாதேயுங்கோ சாஸ்திர முனிவர்களே நாரா யணர்பெலங்கள் நன்றா யறிவீர்களே சீரான பொறுதி செய்வதுநீர் கண்டிருங்கோ வைகுண்ட மாமுனிதான் வாழுந் தலத்தருகே மெய்குண்டமாய் மேற்கு மேன்மூலை யோர்தனுக்கு வடகீழ் மூலை மாமுனியே ஓர்தனுக்கு இடமிதுவே சொன்னேன் யார்க்குந்தெரி யாதிருங்கோ இந்தப் படிகாத்து இருங்கோ தருணம்வரை சிந்த முனிவர்களே செல்லு மிவர்கூட என்று முனிகளுக்கு இயம்பச் சிவநாதன் நன்றுநன் றென்று நன்முனிவர் சம்மதித்தார் உடனேதான் வைகுண்டர் உள்ள மிகமகிழ்ந்து கடலை மிகத்தாண்டி கரையிலே செல்லுமுன்னே தேவாதி தேவரெல்லாம் திருமுறைய மிட்டனரே ஆவலா தியாக அபயமிட்டார் தேவரெல்லாம் 480 வைகுண்டருக் கேபயம் முறையமிட்டார் மாதேவர் கைகண்ட ராசருக்குக் காதிலுற அபயமிட்டார் நாரணருக் கேயபயம் நாதனுக் கேயபயம் தோரணருக் கேயபயம் சுவாமி யுமக்கபயம்

தேவாரம்

நாராயண நாதாசிவ நாதா உமக்கபயம் நாடுங்கலி கேடுவரும் நாதா உமக்கபயம் சீராய்ப்புவி யாளவரு வாயே உமக்கபயம் சிவசிவனேசர சரணம்மகா சிவனே உமக்கபயம் பாராயேழை முகமேபரா பரமே உமக்கபயம் பாலர்தெய்வச் சான்றோர்படுந் துயரந் தனைமாற்றும் நாராயண தீராநல்ல நாகந் தனில்துயில்வாய் நலமோவுனக் கிதுநாள்வரை நாங்கள் படும்பாடு கடல்மேல்துயில் கண்ணாகனி கண்டே கன்றையெறிந்தாய்க் களமேபெலி கொளவேகூளி களிக்க லங்கையழித்தாய்க் குடைபோல்குன்றை யெடுத்தாய்முப்புர கோட்டை தனையெரித்தாய்க் கோனினிடை மாதரிணைக் கோனா கவேவளர்ந்தாய்க் காடேகாலி மேய்த்தாய்ப்புனல் களியன் தனைவதைத்தாய்க் கஞ்சன்தனை வதைத்தாய்பெலக் காரர்பெலம் வதைத்தாய் மாடேமேய்த்துத் திரிந்தாய்வலு மாபலியைச் சிறைவைத்தாய்க் கோசலாபுவி யாண்டாய்வலுக் குகனை மிகக்கண்டாய்க் குறோணிதனை வதைத்தாய்வலு குண்டோமசா லியைக்கொன்றாய்க் கொல்லதில்லை மல்லன்கொடுஞ் சூரன் தனைவதைத்தாய் ஈடாய்வலு இரணியன்குடல் ஆறாயோடக் கொன்றாய் இரக்கமற்ற துரியோதனன் அரக்கர் குலமறுத்தாய் இன்னங்கலி நீசக்குலம் கொல்ல வரம்பெற்றாய் ஏழைக்குடி சாதிகட்கு மீள விடைகொடுத்தாய் எழுந்துதெட்ச ணாபுவியில் இரங்கி வரவேணும் மாளக்கலி தாழநரகம் வீழ வரம்பெற்றாய் வாய்த்தகுல சான்றோரவர்க் கேற்ற வரம்பெற்றாய் வரவேணுந் தெட்சணாபுரி மலைபோ லுயர்ந்துபோகு தேசக்கலி தீதுவநி யாயம் பொறுக்கரிதே சிவனேவைந்த ராசேதெச்ச ணாபு வியில்போவோம் கேட்பாரில்லை யெனவேபேய்கள் கீழும் மேலுஞ்சாடுது கிருஷ்ணாமகா விஷ்ணுவேவுன் கிருபை யிரங்கவேணும் தாண்மைக்குலச் சான்றோருன்னைத் தவத்தால் தேடிவருந்துன் தாயுமவர் தகப்பன்சுவாமி தானே யல்லாலுண்டோ சர்வபரா சுவாமிசிவ சுவாமி யுமக்கபயம் சாணார்படுந் துயரங்கண்டு சுவாமி யெழுந்தருள்வாய் ஆற்றிலலைக்கோரை யைப்போல் அலைவதுந் தெரியாதோ அணைப்பாருன்றன் துணையேயல்லால் அவர்க்கே ஏதுமுண்டோ பலநாளவர் படும்பாட்டெல்லாம் பார்த்தே யிருந்தாயோ பயமோ அவரிடம் போகினுஞ் செயமோ சொல்லுமையா பாலரவ ருமக்கேயல்லா பாரா திருப்பாயோ ஆருமற்றார் போலேயவர் அலைவ துந்தெரியாதோ அரனேசிவ மருகாவுனக் கபயம் உனக்கபயம் அவரால்நாங்கள் படும்பாடெல்லாம் அறியல் லையோசுவாமி ஆதிமுறை யாகமத்தை அழித்துச் சொல்லுறோமோ அதுதான்பொய்யோ மெய்யோவென் றாகமந் தனைப்பாரும் அண்டரண்டந் தொழவேவரும் ஆதி யுமக்கபயம் அரகராசிவ அரனேசிவ அரசே யுமக்கபயம் ஆதிசிவ னாதிதவ மோதி யுமக்கபயம் ஐயுங்கிலி சவ்வுங்கிண அரனே யுமக்கபயம் அம்மாஆதி அய்யாசிவ மெய்யா உமக்கபயம் அரசேதெச்ச ணாபுவியில் வரவேணு முமக்கபயம் அந்தக்கலி திந்தெய்யென் றறவே வரவேணும் அத்திடக்கலி செத்திடக்கலி அறவே வரவேணும் அய்யக்கலி தீயாவியே அறவே வரவேணும் அவகடக்கலி சவகேடாக அழிக்க வரவேணும் ஐம்பத்தாறு சீமையொரு குடைக்குள் ஆள்வாயுமக்கபயம் அத்தாவுமக் கபயம்சிவ முத்தா வுமக்கபயம் ஆதிநா ராயணர்க்குப் பால னானகுணதீரா ஆதியுமக் கபயம்சிவ சோதி யுமக்கபயம் அரனேசிவ னார்க்குமருக னான குணபாலா அலைவாய்க் கரைமடமாம்பதி ஆள்வா யுமக்கபயம் அய்யாவை குண்டாஅலை கண்டா யுமக்கபயம் தாணுமா லயனாய்ப்பேரு தழைக்க சிவமுளைக்க தானாயொரு குடைக்குள்தர்மத் தரணி யாளவந்தாய் சாணாக்குரு வேதக்குரு தானானா யுமக்கபயம் தாண்டும்பதி கூண்டப்பதி தானானா யுமக்கபயம் தவமேதெச்ச ணாபூமியில் தானே வருவாயே தெச்சண மீதே வந்து தெய்வமா யிருந்து கொண்டு மிச்சமாய் புதுமை காட்டி மேதினி யெவருங் காண உச்சமே சான்றோர்க் கீந்து உதவியுஞ் செய்வா யென்று பச்சமாய்த் தேவ ரெல்லாம் வைந்தரின் பதத்தில் வீழ்ந்தார் வீழ்ந்திடக் கண்டு வைந்தர் விடையுள்ள தேவர் தம்மைச் சோர்ந்திட மொழிகள் சொல்லி தேவரே பதற வேண்டாம் ஓர்ந்திட எனக்கு முன்னே உள்ளது தானே யென்று கூர்ந்திட வுரைத்தீ ரெல்லாம் குணமுடன் மகிழ்ந்து சொல்வார் தெய்வ மாதர்கள் தாம்பெற்ற தேவரே சான்றோர்க் கெல்லாம் மெய்வரம் பதுபோல் ஞாயம் விளம்பிடப் பேறு பெற்றேன் பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றுற வரங்கள் பெற்றேன் அய்வரைக் காத்துத் தர்ம அரசுக்கும் பேறு பெற்றேன் ஒருகுடை யதற்குள் ளாள ஒருவிஞ்சை யதிகம் பெற்றேன் கருவுடை யோர்க்குங் காண கனவரம் பெற்றே னானும் மறுகிநீர் தவிக்க வேண்டாம் வருவேனான் சான்றோ ரண்டை குறுகலி யதனைத் தாண்டிக் கொள்வேனென் குலத்தைத் தானே என்னையே கெணியா வண்ணம் ஏழையா யிருந்த சான்றோர் தன்னையே பழித்தோ ரெல்லாம் சளமது துயரங் கொண்டு அன்னீத நரகந் தன்னில் அகப்படத் தள்ளித் தள்ளிக் கொன்றுநான் சான்றோர்க் கெல்லாம் கொடுப்பேன் மேற்பவிசு தானே எல்லாஞ் சான்றோர் கையாலே எள்ளும் நீரும் கலிக்கிறைத்து பொல்லாக் கலியை நரகமதில் புக்க அடித்துப் பேயோடு கொல்ல விடைகள் கொடுப்பேனான் கூண்ட சான்றோர் கையதிலே வல்லோர் புகழுந் தேவர்களே மனமே சடைக்க வேண்டாமே வேண்டா மெனவே தேவருக்கு விடைகள் கொடுத்து வைகுண்டரும் கூண்டாங் கடலின் கரைதாண்டி குதித்தே கரையி லோடிவந்து தாண்டாய் முன்னே பெற்றதொரு தாய்க்கோர் சடல வுருக்காட்டி ஆண்டா ராணை யொருவருக்கும் அகலா தெனவே யாணைகொண்டார் நானோ பிறந்த சமுத்திரத்தின் நடுமேற் கடலி லன்னாபார் ஏனோ பதியும் மேடைகளும் எண்ணிப் பாரு தேர்நிறமும் மானோ பொன்னோ மண்டபமோ வறடே யுனக்குச் சாட்சியிது யானோ காட்டுஞ் சொரூபமெல்லாம் யாதா யிருநீ மறவாதே பதமோ பதமோ பாற்கடலின் பாலை யகமே கொள்ளுவென இதமாய் இதமாய்ச் சொல்லிடவே இசையா வண்ணம் வீழ்ந்திடவே உதயம் உதயம் வெளித்திறந்த உருவை யொருவர்க் குரையாமல் இதையே யிதையே மறந்துஎன்னை இளப்பம் பேசிநெகிழா தென்றார் ஆண்டா யிரத்து எட்டுமுன்னே அன்னை யெனவே நீயிருந்தாய் கூண்டா மெட்டா மாசியிலே குணமாய் நாரா யணர்மகவாய் சான்றோர் கெதிகள் பெற்றிடவே தர்ம குண்டம் பிறந்துவொரு கூண்டாங் குடைக்கு ளரசாளக் கொண்டே போறேன் கண்டிருநீ வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள் பொய்கொண்ட பேரைப் பெலிசெய் தரசாள கொண்டுநான் போறேன் குலக்கிழடே பாரெனவே அன்றுவை குண்டர் அவர்நடந்தார் தெச்சணத்தில் கெங்கைக் குலத்தாயை கிருஷ்ணர் வரவழைத்து நங்கையே யென்னுடைய நாமமது கேட்டதுண்டால் பால்போல் பதம்போல் பாவந்தீ ரன்பருக்குச் சூல்புத்தி வம்பருக்குச் சூதுசெய் மங்கையரே என்றுவை குண்டர் யாமம் கூறிக்கூறி இன்றுதெச்ச ணம்போக எழுந்தருளி யேவருக சகல வுலகோரும் சந்தோசங் கொண்டாடப் புகல எளிதில்லாத பெரியநா ராயணர்க்கு வைகுண்டம் பிறந்து வார்த்தையொன் றோர்குடைக்குள் மெய்கொண்ட முப்பொருளோர் மேனியொன் றாய்த்திரண்டு எல்லா வரமும் இவர்க்கு மிகக்கொடுத்து நல்லோர்க்குக் காலம் நலமாகு மென்றுசொல்லி வானலோ கம்வாழும் வானவருந் தானவரும் தானே முன்னாகமங்கள் தப்பாதிடை முனிவர் வகுத்திருந்த ஆகமங்கள் நிறைவேறி வந்துதென்று மாமுனிவ ரெல்லோரும் மாசந்தோசங் கொண்டாடி நாமு மெதிரேபோய் நல்லவை குண்டர்பதம் கண்டுகொள்வோ மென்று கனமுனிவ ரெல்லோரும் கொண்டு மலர்ப்பூக்கள் கோமான்கால்மீ தேசொரிந்து கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து உற்ற துலுக்கன் உடன்வந் துடனோடி மற்றொரு பத்தாண்டில் வருவோமென் றாகமத்தின் வர்த்தமா னம்போலே வந்தவை குண்டரென எல்லோரும் போற்றி எதிர்நின்று வாழ்த்திடவே நல்லோரா யெங்களையும் நாரா யணர்மகனே உன்கிருபை தந்து உதவிதரு வாய்மேலும் முன்கிருபை யெல்லாம் உனக்குள்வச மாச்சுதல்லோ முப்பொருளும் நீதானாய் உறுவெடுத்தா யானதினால் எப்பொருளைக் கண்டு இயல்புபெறப் போறோங்காண் வைகுண்ட மாமுனியே மனதிரங்கிக் காக்கவேணும் மெய்குண்டர் பதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்தார் அப்போது வானோர்க்கு ஆதிவைகுண் டருரைப்பார் இப்போது வானோரே எனையறிந்த தெந்தவிதம் என்றுவை குண்டர் இயல்பறியச் சொல்லிடவே அன்று வானோர்கள் எல்லோரு மேதுசொல்வார் கயிலயங் கிரியிலுள்ள கணக்குமுத லுள்ளதெல்லாம் ஒயிலாகப் பிறப்பு உயர்கணக் கானதுவும் தத்துக் கணக்கும் சஞ்ச முதற்கணக்கும் பத்துக் கணக்கும் பலன்பெற்றோர் தங்கணக்கும் மோட்சக் கணக்கும் முன்னுள்ள யுகக்கணக்கும் வாச்சக் கணக்கும் வைகுண்ட நற்கணக்கும் நரகக் கணக்கும் நடுத்தீருவைக் கணக்கும் தருமக் கணக்கும் சகலக்கணக் குமுதலாய்ப் பொறுமைப் பிரமா பூசாந்திரக் கணக்கும் எல்லாக் கணக்கும் எடுத்துமிகத் தேவரெல்லாம் வல்லான கயிலைவிட்டு வருவதுகாண் டேயடியார் தியங்கி மனங்கலங்கித் தேவரோ டேகேட்டோம் மயங்கிமிகக் கேட்டிடவே மாதேவ ரேதுரைப்பார் நாரா யணர்க்கு நல்லவைகுண் டம்பிறந்து சீரா யுலகமெல்லாம் சிறந்தே வொருகுடைக்குள் ஆள வருவதினால் அவர்கைக்குள் ளிக்கணக்கு நீள அரன்சிவனும் நெடிய மருகோனும் இந்நாள் முதலாய் ஏழ்ப்பிக்க வேணுமென்று சொன்னார்கா ணெங்களையும் சுருதிக் கணக்கையெல்லாம் பொன்னுலோ கம்புகுந்து பெட்டகத்தோ டேயெடுத்து வாரு மெனஅயச்சார் மகாபரனும் மாலோனும் சேரும் வைகுண்டம் சிணம்பிறந்தா ரென்றுசொல்லி ஆனதினா லிப்போ யாங்கள்கொடு போறோமென்றார் நானதுகள் கேட்டு நன்றா யறிந்தோமென்றார் அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார் இப்போது வானவரே எல்லோரு மென்கூட வாருங்கோ வென்று வைகுண்டர் சொல்லலுற்றார் சீருங் கோபால சிவனே செயலெனவே வானவர்கள் தேவர்முதல் மறைமுனிகள் சாஸ்திரிகள் தானவர்க ளுங்கூட சங்கீதம் பாடிவரச் சந்திர சூரியர்கள் தம்மானக் குடைபிடிக்கச் சுந்தரஞ்சேர் வைகுண்டம் தோன்றிவந் தாரெனவே வேத மறையோரும் விசய முனிவர்களும் நாதாந்த வேதமதை நன்றாய்த் தெளிந்தெடுத்துக் கோமான் வளரும் கோவேங் கிரிதனிலே நாமாது வாழும் நல்லதிரு மண்டபத்தில் தங்க நிறத்தூணில் சதுர்மறையோர் தாங்கூடி எங்கு மகிழ எழுதினா ரம்மானை

திருவாசகம் 2

ஏகமொரு பரமானதும் இம்மென்றொரு வாயுவில் சத்து வளைந்ததும் சத்தில் சிவம் தோன்றியும் சிவத்தில் சத்தி தோன்றியும் சத்தியில் நாதம் தோன்றியும் நாதத்தில் விஷ்ணு தேன்றியும் ருத்திரர் மயேசுரர் உலகம் தோன்றியும் உலகில் அண்டபிண்டம் தோன்றியும் பிண்டத்தில் குறோணி அசுரன் தோன்றியும் குறோணி வானலோகம் விழுங்கவும் கோபத்தால் விஷ்ணு சென்று குறோணியைத் துண்டாறாய் வெட்டி உலகில் தள்ளவும், துண்டமென்றில் குண்டோமசாலி பிறக்கவும் சுகசோபன மண்டபமலைய விளித்ததும் திருமருகரது கேட்கவும் தேவாதிகளை நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டிலாக்கிக் கடலை ஓடையாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறியே கறைக்கண்டர் ஓணிதள்ளவே கன்னியிலே தூண்டலுமிட்டு அக்குண்டோமசாலியையும் வதைத்து மறுயுகம் தோன்றியே தில்லைமலாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய அநியாயம் பொறுக்காமலே அவனிருவரையும் சங்காரம் செய்து அடுத்த யுகம் தோன்றியே, சூரன் சிங்கமுகா சூரன் செய்த அநியாயம் பொறுக்காமலே ஆதித்திருநெடுமால் ஆறுமுகக் கடவுளென நாமமுங் கூறியே அவனையும் சங்காரஞ் செய்து அவ்வுகத்திலே பிறந்த அசுரன் இரணியனையும் வதைத்து அந்த யுகமும் அழித்து அடுத்த யுகம் தோன்றியே, அரக்கன் இராவணசங்காரமுஞ் செய்து சீதாப்பிராட்டியினுடைய சிறையையு மீட்டித் தென்னிலங்காபுரி அரக்கரையும் கொன்று அக்கிளையொழிய அக்குலமும் அறுத்து அடுத்தயுகம் தோன்றியே; பஞ்சவர்க்கு பகாரியாகியே பகைத்தத் துரியோதனனையும் வதைத்துப் பஞ்சவர்க்குக் குருநாடு பட்டமுஞ் சூட்டியே அரசாள வைத்து கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக் கானக வழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப்பெலன்களையும் வாங்கிப் பச்சை மாலை சுமந்திருந்த பயமாயக் கூட்டைப் பர்வதாமலை யுச்சியிலே கிடத்தி, கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று ஏழுலோகம் புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங் கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப் பத்திர காளியிடத்தில் பாலரையுங் கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறியும்படி பள்ளிகொண்டிருந்ததும்; தேவாதிகளுடைய வாக்கினாலே ஈசுரர் தாமே கலியனையும் பிறவிசெய்து இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக் கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு கன்னிமக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே, வியாகரிடை முனிவர் வகுத்த ஆகமத்தின் படியே மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய்ப் பிறந்து ஒரு குடைக்குள் 1008 ஆம் ஆண்டு மாசியிலே அஞ்சி மூவஞ்சி தேதியிலே அவனிமனுவிலே ஆதிச்சாதியிலே மனுநிறமாக வந்திருந்து சாதி பதினெண்ணையும் ஒருதலத்தில் வருத்தியே தர்மமாய்த் தாரணி யாபேர்க்கும் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்க்கவும் சந்ததியில்லாத பேர்க்குச் சந்ததி கொடுக்கவும் தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும் சாதைவாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச் செய்யவும் தரணியேழு கணக்கையும் கேட்டு மிக சத்தியாய் அன்பு மனிதருக்காகவே தரணியில் நாலுதரம் சளங்கள் படவும் சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்தி பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்; சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும் தர்மமாகத் தரணியோர் குடைக்குள்ளாளவும் தங்கநவரத்தினத் திருமுடி சூடியே சகலமாபதி மேடைகள் பாவிக்கவும் தவசு கிருபை பெறவும், தங்கமணி சக்கராயுதக் கொடி ஒற்றைக்கொடி கட்டவும் சகலரும் புகழவரும் தர்மராசாவாகவும் சங்கவிருதுக் கொடி ஒத்தக் கொடி கட்டவும் அஷ்டதிக்குப் பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டியே அரசு பாவிக்கவும், ஆதி சர்வேஸ்வரனாகிய அவனியைம்பத்தாறு சீமையும் அடக்கி அரசாளவும் ஆதிசர்வ காலமும் அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும் ஆதிராமச் சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின் படியாகவே ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே, அண்டர்களும் முனிவர்களும் தேவர்களும் அதிக சகல மாமுனிவர்களும் எல்லோருங் கூடியிருந்தாராய்ந்து தொண்டர்தமக் கென்றுவளர் கொன்றையணி கயிலையில் மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபையினாலே என்றவர் கயிலையங்கிரியில் எழுதினார்.

அகிலம் பதினொன்று

divider
அன்றந்தத் தேவர்முனி எல்லோருந் தாங்கூடி சென்றந்தக் கயிலை செகத்தூணி லேதரித்து வைகுண்டர் பாதமதை வாழ்த்திக் குவித்துவர மெய்கொண்ட நாதன் வேலவன்செந் தூரணுகி நடக்க அறுமுகனும் நடுங்கி மிகப்பதறி வடக்குமுக மாய்விழுந்து வைகுண்ட ரைப்போற்றி அப்போது வேலவனை ஆதிவைகுண் டர்பார்த்துச் செப்புகிறார் குண்ட சிவநாத கண்மணியும் நாடுகேட் கப்போறேன் நாரணன் நான்தானும் கேடு வருமுனக்குக் கேள்விகே ளாதிருந்தால் இத்தனை நாளும் என்னைக் கெணியாமல் புத்தியறி யாதவர்போல் புலம்பினீ ரித்தனைநாள் இனிவைகுண் டம்பிறந்து ஏகமொரு குடைக்குள் மனுவொரு சொல்லாள மகாதர்ம மேநினைத்து மாய்கை யறுத்து மாற்றான் கருவறுத்துத் தோயக் குழிமூடி தொல்புவியைத் தானாள நல்லோர்க ளெடுக்க நான்போறேன் கண்டாயே கல்லார் தமக்குக் கசப்பினிமேல் கண்டாயே தர்மவை குண்டம் தான்பிறந்தேன் இப்போது தர்மச் சிறப்புத் தானினிமேல் கண்டாயே நன்மை யினிக்காணும் நாரணன்கண் ணல்லாது தின்மையென்ற சொல்லு ஆகாது கண்டாயே ஆனதா லுன்றனக்கு யானினிமேல் சொல்லும்புத்தி வானஞ்சூழ் வையகங்கள் வாழுகின்ற மண்டபங்கள் எத்தனையோ அத்தனையில் இருக்கின்ற தேவரெல்லாம் அத்தனை பேரும் அறியும் படிசொல்லுவேன் காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ பூசையே ராதிருங்கோ பெலிதீப மேராதுங்கோ ஆசைவை யாதிருங்கோ அவகடஞ் செய்யாதுங்கோ ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ மாய நினைவு மனதில் நினையாதுங்கோ வைகுண்டா வென்று மனதில் நினைத்திருங்கோ பொய்கொண்ட தேரோட்டம் புனக்கார மேராதுங்கோ தாதி கைகாட்டல் சப்பிரங்க ளேறாதுங்கோ மோதிப்பே சாதிருங்கோ மோகம்பாராட் டாதுங்கோ ஆலத்தி கைவிளக்கு ஆராட்டுப் பாராதுங்கோ சாலத்தீ பாராதுங்கோ சகலபூ ஏராதுங்கோ கொழுந்து மஞ்சணைமாலை குப்பையொடு சந்தனமும் விழுந்து நமஸ்காரமுதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ கூவென் றுரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ ஓவென்றுரை யாதுங்கோ ஓமமுறை யேராதுங்கோ தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ ஆபரணம் பூணாதுங்கோ அன்னீதஞ் செய்யாதுங்கோ எல்லாம் வெறுத்திருங்கோ இத்தனைபோ லுள்ளதெல்லாம் அல்லாமல் மீறி யாரொருவர் செய்ததுண்டால் வல்லாத்த கோபம் வரும்வை குண்டருக்கே நல்லோரே யாகவென்றால் நியாயமதி மேநில்லும் என்று வைகுண்டம் இயம்பக்கந் தனுரைப்பான் மன்று தனையளந்த வைகுண்ட நாரணரே நீருரைத்த சட்டமதில் நிலைதவறோம் நாங்கடியார் காரும்நீ ரென்று கந்தன் அடிதொழுதான் அப்போது வைகுண்ட ராசர்மிக வுரைப்பார் இப்போது சொன்னதெல்லாம் எனக்குநிச மாகவென்றால் உன்கோ புரத்தில் உயர்ந்தவட மேல்மூலையில் பின்கோ புரங்காணப் பிளந்துபோ டென்றுரைத்தார் அல்லாம லுன்னையென்று அவனியுண் டாக்கிவைத்த செல்லாச் சிலையைத் திருப்பிவிடு தெற்குமுகம் உலகோ ரறிய ஒருவாயி லுமடைத்துக் கலகமாய்க் கண்மூடிக் கவிழ்ந்திருப்பா யோவென்றார் அல்லா தெனைமறந்து அழிச்சாட்ட மாய்நடந்தால் பொல்லா தவனே பெருவிலங்கு சிக்குமென்றார் அப்போது கந்தன் ஆவி மிகக்கலங்கி இப்போது சொன்னதெல்லாம் யானினி செய்வனென்று ஆதி யுரைத்ததுபோல் அடியார்நடப்போ மென்றார் சோதி வைகுண்டம் சொல்வா ரவரோடு நிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ உலகறிய நானும் ஒருநெல் லுடைக்குமுன்னே பலசோ தனையும் பார்த்துநடுத் தீர்ப்புசெய்வேன் விடியும் பொழுது வேசம் பலதணிவேன் பிடியு மனுவுடனே பெரியயுக மாளவைப்பேன் வருவோ மொருநெல் மாறி யெடுக்குமுன்னே கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ என்று வைகுண்டம் இத்தனையுங் கந்தனுக்கும் மன்றுக்கு மென்றும் மறவாதுங் கோவெனவே அதைவிட் டவர்நடக்க ஆகாயங் கொண்டனரே இதைவிட் டவர்நடந்து ஏகாய மாகிவர

வானோர்கள் வைகுண்டரைப் போற்றுதல்

அண்டரொடு தெண்டனிட் டெண்டிசைகள் நின்றுவரும் ஆதவனைச் சூழ் கணம்போல் அரிஹரி அரஹரா சிவசிவா என்றுசிலர் ஆடியே பாடி வரவே தொண்டரவர் கண்டுவை குண்டரடி கண்டுதொழ சூழவளைந் தேழியல் படர்தே 80 சூரர்பதி நாராயணர் வீரர்பத மோதிவரச் சூராதி சூர ரெனவே செண்டையொடு தண்டைமணி டண்டடம டண்டமெனத் தேவர்சே வித்து வரவே சிவநமசி வாயமெனும் ஓம்நம சிவாயமென்னும் சேவித்திரு புறமும் வரவே அண்டமுர செண்டுமணி டுண்டும டுண்டுமென ஆகாய மீதில் வரவே அனவரத கோலாக லாதிநாரா யணாவென அமரரிசை கூறி வரவே மத்தள முடுக்குபல வாத்திய மடடென வானமதில் நின்ற திரவே மலர்மாரி சலமாரி தினமாரி தூவியே வானவர்க ளிசை கூறவே தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்மெனச் சங்கீதக் காரர் வரவே சகலகலைக் கியானவேத சாதிமுறை யோதிமிகு சாஸ்திரக் காரர் வரவே தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண தித்தியெனச்சில தேவர் கூறி வரவே சிவசிவ சிவசிவ சிவவென்று சிலதேவர் சேவித் தியல்கூறி வரவே நித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண தித்தியென நேரியர் சீரியல் கூறவே நீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குரு நீதென் குருவெனப் போற்றினார் பண்டைமுறை யின்றுவெனக் குண்டமெனக் கண்டுவரும் பலவாங் கிரி குண்டமே பசுவாமனே சிசுபாலனே பலமானனே தலமானனே பசுவா கிய நிசமே தொண்டர்தனக் கென்றுவரு குண்டவை குண்டமனாய்த் தெச்ச ணாபதி பூபனே துளபமணி களபமேனி யழகொழுகு கிருபைமிகு துவாரகா பதிக் கரசே சண்டன்வலி துண்டப்பட கொண்டக்கணை விண்டத்தொடு துச்சா வில்லு வீரா சாமியுன் றாளோ எங்கள் தலையின்மீது தலையின்வழி தானே நடவாயே துண்டப்பட வண்டச்சரம் கண்டப்படி பொண்டத்தொடு துச்சா வில்லு தீரா சுத்தா வுனக்கேற்றார்தமை வித்தானதில் வித்தாய் துவாரகாபதிக் கரசேயெனத் தொழுதார் தேவர் தொழுது திக்கெங்கும் போற்றிவரத் தாவமுள்ள வானோர் சங்கீதம் பாடிவர வேத மறையோர்கள் வேதக்கலை யோதிவர நாதமொடு சங்கு நகரா முழங்கிவர மத்தள மேலோர் மடமடென் றேற்றிவரத் தித்தி தித்தியெனத் தேவரெல்லாம் பாடிவரச் சாத்திர வேத சாதிமுறை யோதிவர நாற்றிசையும் போற்றி நாற்சாதி யும்வரவே அரம்பையர்க ளாடி ஆலத்தி யேந்திவர வரம்பகலா மாமுனிவர் வரிசைமிகக் கூறிவர நாதாந்த வேதம் நவில்வோர் நெருங்கிவர மாதவர்க ளெல்லாம் மலர்மாரி தூவிவர கண்டங் ககமகிழ்ந்து கண்ணான நாரணரும் கொண்டாடித் தேவரொடு கூறுவா ரன்போரே மனுக்கண் காண வரவேண்டீ ரென்பிறகே தனுக்கான ஏகமதில் சகலத்தோ ருமறிய வாருங்கோ என்னுடனே வானவரே தேவர்களே வானமதில் நின்று வாத்தியங்க ளேற்றிவர தானவர்கள் முதலாய்ச் சங்க முதல்வரவே ஆகாச மீதில்நின்று எல்லோரும் போற்றிவர வாகான சூரியனும் வந்து குடைநிழற்ற

செந்தூர் விட்டு வைகுண்டர் தெச்சணம் எழுந்தருளல்

நன்றான வைகுண்டர் நல்லசெந்தூர் தானும்விட்டு வண்டாடுஞ் சோலை வாய்த்த வனங்கள்விட்டு சோலைத் தெருக்கள்விட்டுச் செந்தூர் தலங்கள்விட்டு ஆலைத் தெருக்கள்விட்டு அந்தூர் பதிகள்விட்டு மண்டப மேடைவிட்டு மடங்கள் மிகக்கடந்து தண்டமிழ்சேர் செந்தூர் தலத்தைவிட்டுப் போவதற்கு நிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவர் நக்கன் மருகனுட நல்லடி யில்வீழ்ந்து செந்தூர் தலத்தைவிட்டுத் தெச்சணா பூமியிலே இந்த வேளைதனிலே எழுந்தருள வேண்டியதேன் இங்கே பகைத்ததென்ன என்னுடைய நாயகமே சங்க மகிழ்வேந்தே தானுரைக்க வேணுமென்றார் அப்போது நாரா யணர்மகிழ்ந் தேதுரைப்பார் இப்போது கேட்டதற்கு இயல்புரைக்கக் கேளுமினி கேள்விகே ளாநீசன் கெடுவ தறியாமல் நாள்வழியாய்ச் சான்றோரை நியாயமில் லாதடித்தான் சொன்னேன்புத்தி நீசனுக்குத் திருவனந்த மேயிருந்து என்னையும் பாராமல் இளப்பமிட்டான் சான்றோரை ஆனதால் நீசனுக்கு யானதிகக் கோபமிட்டு நானவ் வூரும்விட்டு நாடிவந்தேன் செந்தூரு இங்கே யிருந்தேன் யான்சிறிது காலமெல்லாம் வெங்கப் பயல்சிலர்கள் வேசையுட னாசையினால் என்னைக் கெணியாமல் என்கோவி லுள்ளேதான் சன்னைசொல்லிப் பெண்களுடன் சரசமிட் டெச்சியிட்டான் இருபேரு மொத்து இருந்தாலும் பழுதல்லவோ ஒருவன் பெண்ணானை ஒருநம்பூ ரிபிடித்து எனக்கேவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில் மனக்குழலி தன்னுடைய மார்பின் கலைபிடித்து இழுத்து வலித்து இழிக்கேடு செய்யவென்று பழுத்துச் சழிந்த பருநம் பூரியவன் மேல்தலையி லிட்ட முத்திரி கழற்றாமல் மால் மயக்கத்தாலே மனங்கலங்கி நம்பூரி மங்கை மனங்கலங்க வாரிப் பிடித்திழுத்துக் கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழிய வேகிழித்து வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று மோதி யென்பேரில் ஒருசாபங் கூறினளே நாரணா கந்தா நானுனக்கு ஏவல்பண்ணிக் காரணங்க ளாச்சு கடைசிநாள் தானாச்சு உனக்குமிந் தப்பதிதான் உறவுகே டாச்சுதையா எனக்கு மொருபிறவி இன்றுவந்து வாச்சுதென்று செந்தூர் தலங்கள் சிலநாள் செல்லுமுன்னே மண்தூர்ந்து போகுமென்று மாதுமிகச் சாபமிட்டாள் சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து சீவ னதுவிடவே சிவனைக்கண் ணோக்கினளே நம்பூரி பங்கத் தாலேயந்த நாயகியும் உம்பர்கோ னூரில் உயிர்விட்டாள் மாமுனியே தவறாத மங்கை தானுரைத்தச் சாபமதால் இதறா யெனக்கங்கு இருக்கமனங் கூடாமல் எங்கேயினிப் போவோமென்று இதைவிட் டெழுந்திருந்து மங்கைசொன்ன நாள்முதலாய்த் தெற்குவாரியிலே போயிருந்தேன் அல்லா மலிங்கே அழிமதிகள் ரெம்பரெம்ப வல்லாண்மை யாக வலுஞாயங் காணுதுகாண் முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்துமிக என்னடையில் வந்து ஏந்திழையா ராடுவது ஆட வரும்போது அசுத்தத்தோ டுவாறாள் பாடவரும்போது பண்ணுறா ளசுத்தமது கோவிலிலே பூசைசெய்யும் குறும்பர் மிகத்துணிந்து தேவியருக் கீயத் திருடுகிறா ரென்முதலை கணக்கன்முதல் நம்பூரி கள்ளப்பெண் ணார்களுக்கு இணக்க மதாயிருந்து என்முதலைக் கொள்ளைகொண்டு எடுக்கிறார் பெண்கள் எச்சியாட்டு மாடி ஒடுக்கிறார் பெண்கள் ஒண்ணுக்கொண் ணொத்திருந்து பம்பை பரத்தை பகட்டுக்கை காட்டலெல்லாம் எம்பரனுக் கேற்ற இயல்பல்ல மாமுனியே ஆனதா லிவ்வகைகள் யான்வேண் டாமெனவே மான மழியுமுன்னே மாமுனியே தெச்சணத்தில் பள்ளிகொண்டு நானிருந்து பார்த்துச்சில நாள்கழித்துக் கள்ளியாட்டுக் காவடி கைக்கூலி தான்முதலாய் நிறுத்தல்செய்ய வேண்டிய தெல்லா மிகநிறுத்திப் பொறுத்தரசு தர்மப் புவியாளப் போறேனினி மாமுனிக்குச் சொல்லி வழிகொண்டார் தெச்சணமே தாமுனிந் தையா தவறாத மாமுனியும் தெச்சணத்துக் கேகவென்று திருச்சம் பதியிருந்து உச்சமது கொண்டு உகச்சாப முங்கூறி நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக் கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம் சங்கீதங் கூறித் தாமே யவர்வரவே மங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார் மருட்கள் மிகவந்து வாசமிட்டுக் கூடிவர

பிசாசுகளின் பணிவிடையை மறுத்தல்

கீழநடை விடாமல் கிருபையுள்ள வைகுண்டரைத் தாழநடை விடாமல் சற்பூத மேந்திவர அப்போது பூதமதை அல்லகா ணென்றுசொல்லி மைப்போடுங் கண்ணர் மாபூத மதைவிலக்கி நீங்களெனைச் சுமந்தால் நீணிலத்துச் சோதனையில் தாங்கள் மீறிநடந்தால் தகுமோநான் கேட்பதற்கு வேண்டாங்காண் நாரணர்க்கு வேதாளா வுன்வேலை பாண்டவர்க ளானப் பஞ்சவர்க ளுண்டெனக்கு என்று வைகுண்டர் இசையத் திசைநடந்தார் தொண்டு செய்யாமல் சூல்பூத மாடிவரப் பூக்கொண்டு வந்து போட்டுத் தொழுவாரும் தீக்கொண்டு வந்து தீபரணை காட்டுவாரும் மலர்வீசிக் காற்று மரைவீசி நிற்பதுவும் சிலம்பொன் துளிபோல் சிறப்புடனே தூவிவர மதியுங் குடைபிடிக்க வாயு மரைவீசத் துதியும் வழிதீய்க்கத் தேவர்மிக வோலமிட இத்தனை நற்சிறப்பும் இயல்பாய் முழங்கிவரப் புத்தியள்ள நாரணரும் புறப்பட்டார் தெச்சணமே 220 நதியிற் பிறந்த நாரா யணமூர்த்தி பதியி னலங்காரம் பார்த்து வழிநடந்தார் கெங்கை தனிற்பிறந்த கிருஷ்ண மகாநாதன் கங்கை வழிநோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்

வெண்மை உயிரினங்கள் வைகுண்டரைப் பணிதல்

நடந்து வருகும் நல்லவை குண்டர்முன்னே கடந்து முன்போன காண்டா மிருகமொடு சிங்கமி யாளி செங்கருட னங்கனுமன் பங்கமிலா றாஞ்சி பால்நிறப் பட்சிகளும் ஐந்தலை நாகம் அஞ்சுபஞ் சாச்சாரை செந்தலைக் கருடன் செய்யகாண் டாமிருகம் கலியன்கண் காணாதே காடோடி வாழ்ந்திருந்த சலிவில்லா மாமிருகம் சந்தவர்ணப் பட்சிமுதல் தரும வைகுண்டர் தான்வந்தா ரென்றுசொல்லிப் பொறுமைக் குலங்களெல்லாம் புறப்பட் டகமகிழ்ந்து வந்து வைகுண்டர் மலரடியைப் பூண்டுகொண்டு சிந்தர் குலமன்னர் தெய்வப் பெருமாளே வைகுண்ட ரெப்போ வருவீர் வருவீரென்று கைகண்ட நிதியும் காணாதார் போலிருந்தோம் கப்பல்கரை கண்டாற்போல் கண்டோமே யும்மையும்நாம் செப்பத் தொலையாத திருவடியைப் போற்றிசெய்ய 240 வாறோங்கா ணும்முடனே வைகுண்டப் பெம்மானே தாறோங்கா ணெம்முதுகு சாமியுன் பாதமதுள் என்றிவைக ளெல்லாம் இரங்கித் தொழுதிடவே நன்றென் றுஅந்த நாரா யணருரைப்பார் ஒருவிளி பொறுங்கோ உண்மையிது தப்பாது இருவிளிக் குள்ளே என்னிடத்தில் வந்திடுங்கோ இருங்கோ முன்னயச்ச இடத்திலே போயிருங்கோ கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ அலைய விடாதிருங்கோ அஞ்சுபஞ் சமதையும் குலைய விடாதிருங்கோ குருநினைவை யுள்ளேற்றம் என்று அவைகளுக்கு எம்பெருமான் சட்டமிட்டு அன்று அவைகளையும் அனுப்பி மிக நடந்தார் நடந்துபல திக்கும்விட்டு நல்லவன வாசம்விட்டுக் கடந்துசில ஊரும்விட்டுக் கடல்வழியே தானடந்தார் இரசகனிக ளேற்று இரவும் பகல்கடந்தார் விசைகொண்ட ராசர் விசயா பதிகடந்தார் வாரிக் கரைவழியே வரவேணு மென்றுசொல்லி சூரிய புஸ்பத் துல்வக் குறிபார்த்து வீரிய நாதன் விரைவாய் வழிநடந்தார் கடலுட் பதிகள் கண்டுகண் டேநடந்தார் 260 மடமடென அட்டவணை வாரிதீர்த் தாமாடி கடற்பெம்மான் வாறார் காணுவோ மென்றுசொல்லித் திடமுடனே வாரி சென்றுகண்டு தான்தொழவே

கடல் விளைவெல்லாம் வைகுண்டர் பதம்பணிதல்

முத்துக்கள் சங்கு முன்வந்து தெண்டனிட்டு வத்துப் பெரிய வைகுண்ட மன்னவரே இத்தனை நாளும் இயல்கலிய னேதுவினால் சற்றும் வெளிகாணாதே சமுத்திரத்தி னுள்ளிருந்தோம் தர்மப் பெருமானே சாமிநீர் வந்ததினால் நன்மை யுடனாங்கள் நாட்டிலே வாறோங்காண் ஒருசொல் வரைக்கும் உவரியிலே வாழ்ந்திருங்கோ இருசொல் லாகுமட்டும் இங்கிருங்கோ என்றுரைத்து நடந்து வைகுண்டர் நாடி மிகவரவே கிடந்த நிதியும் கீழ்க்கிடந்த காசுகளும் ஒக்க உயரவந்து உளமகிழ்ந்து தானிருக்கும் திக்கென்று நாதன் சேடன் தனையழைத்து கயிலாசந் தன்னைக் கட்டாய் வரவழைத்து ஒயிலாக இத்தனையும் உள்ளேநீ கொண்டுசென்று காவல்செய்து கொள்ளு கயிலாச மென்றுரைத்தார் தேவன் சட்டமிட்டுத் தெச்சணம் போகவென்று நடந்தார் துரிதமுடன் நாரணனார் தெச்சணத்தில் நல்லநா ராயணரும் நாடி வழிநடக்க வல்ல பெலமான மாமுனிவ ருங்கூடி எல்லோருங் கூடி இயல்வா ரிக்கரையே நல்லோர்க ளாக நடந்தார்கா ணம்மானை வாதையே யானதெல்லாம் வைகுண்டர் பாதமதை சீதமுடன் போற்றித் தீபரணைக் காட்டிவரக் காட்டுகின்ற தீபமெல்லாம் காணாத வர்போலே நாட்டுக் குடைய நாரா யணர்நடந்தார்

நல்ல குலதெய்வங்கள் மறைதல்

நல்ல குலதெய்வம் நாட்ட மதையறிந்து எல்லைக் குடையை ஈசர்வந் தாரெனவே இன்றுமுதல் வம்பருக்கு இயல்பகைதான் சூழ்ந்துதென்றும் நன்று மனத்தோர்க்கு நல்லநாள் வந்துதென்றும் முற்கலியன் சட்டம் முதன்மையின் றுமுதலாய்த் துற்கலிபோ லாகிச் சுற்றுக் குலைந்துதென்றும் கொண்டாடி நல்ல கூளி கணங்கள்சொல்லிக் கண்டா ருடனேயும் கைதொழுத மனுவோடும் இன்றுமுத லெங்களுக்கு எற்கும்வகை யில்லையேகாண் கண்டுகொள்ளுங் கோவெனவே கண்காட்டிப் போய்மறைந்தார் நானில மரசு ஆள நாரணர் பெற்று வாறார் தானித மான அன்பாய்ச் சகலருங் கேட்டுக் கொள்ளும்300 மாநிலத் தோரே யென்னை வருந்தியே தேவ வேண்டாம் நானினிச் செய்ய ஆகா நவின்றவர் தெய்வம் போனார் தேயவங்க ளுலகி லெல்லாம் தெரிசனங் காட்டிக் காட்டி மெய்வரம் புள்ளோ ரெல்லாம் மேதினி விட்டுப் போந்தார் பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றிய வகையா ராமல் மெய்மறந் துரைகள் சொல்லி மேதினி யொழித்தா ரென்றே

வைகுண்டர் பகவதிக்கு அருளல்

கண்ணான நாதன் கமலக் குருநாதன் வண்ணமுள்ள நாதன் வழிநடந்தா ரம்மானை நடந்து பகவதியாள் நல்லகட லும்பார்த்துக் கடந்து பகவதியைக் கண்காட்டித் தானழைத்து நன்மை யுடைய நாயகியே சுந்தரியே பொன்மோ கினியே பிள்ளாய்நான் சொல்வதுகேள் வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றுக் குள்ளான உய்கொண்டோர் குலத்தை உருவேற்ற வந்தேனென எந்தன் திருச்சம் பதியு மிதுமுதலாய் எந்தெந்த நாட்கும் இனிக்காணிக் கைநிறுத்தல் ஆனதினால் நீயும் ஆதியி லென்னோடு தேனினியத் தங்கையராய்த் திட்டித்த ஏதுவினால் உன்னோடு இத்தனையும் உபதேச மாயுரைத்தேன் பொன்னாடு தெச்சணத்தில் போறேன் தவசிருக்க என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார் அன்று பகவதியாள் அறைக்குள் ளடைத்திருந்தாள்

வைகுண்டர் மணவைப்பதி ஏகல்

நாரா யணரும் நல்லசங்கத் தாருடனே சீராய் மணவைப் பதிநோக்கித் தான்நடந்தார் தென்காசி யென்ற தெச்சணா பூமியிலே கண்காட்சி சூழக் கண்ணர் மிகநடந்தார் நடந்தெம் பெருமாள் நல்ல கடல்வழியே திடந்தெளிந்த தேவர்களும் செயசெ யெனநடக்க கண்டார் துவரம் பதியின்கண் ணோட்டமெல்லாம் பண்டைப் பதியின் பவிசொல்லா மேபார்த்து ஆன பதியின் அகலநீ ளம்பார்த்து மான பதியின் வாசலெல்லாம் பார்த்தவரும் நாடுகுற்றங் கேட்க நல்லதவஞ் செய்வதற்குத் தேடும் வடவாசல் சீவிவளர் மலையின் நேரும்வா சல்தனக்கு நிகரில்லை யாமெனவே தவசுக் குகந்த தலங்களிது நன்றெனவே உபசீ வனம்வளரும் உகந்தபுவி யீதெனவே என்று மனதிலெண்ணி என்றன்பெரு மானும் அன்றுவே தமுனியை அழைத்துமொழி கேட்கவென்று வாநீ முனியே வல்லகலைக் கியானமொழி தானீ கரமாய்ச் சத்தியாய்க் கற்றவனே மான முனியே மறைநாலுங் கற்றவனே ஓநமோ வேதம் ஓயாம லோதுவோனே பின்முன் நின்று இயம்புரைகேட் டேயுரைநீ நான்தவ சிருக்க நாடுரைநீ மாமுனியே மான்தவ சுக்குகந்த மாமுனியே என்றுரைத்தார்

கலைமுனி தவசுக்குகந்த இடத்தின் சிறப்புக் கூறல்

வெள்ளா சனத்தில் விரைவா சியைநிறுத்திக் கள்ளமா னதையகலக் காடகற்றி-விள்ளரிய வெள்ளமாங் கருணைபெறு வேதமுக மாமுனியே உள்ளதெனக் கின்னதென் றுரை பூரணத்தி னாடி புகழ்ந்துமுனி கொண்டாடி வாரணத்தின் கோடுவரை தேர்ந்து-காரணத்தின் கட்டுரைத்து நாடுவளம் விட்டுரைப்பே னென்றுமுனி தொட்டுப் பதங்குவித்துச் சொல்லுவான்

கலைமுனி வேதவியாசர் பிறப்புரைத்தல்

அய்யாவே வேத ஆதிநா ராயணரே மெய்யா யுருவாய் விளங்குவோ னேகேளும் பரராச மாமுனிவன் பாலனென முனிவன் விரைவாக வேபிறந்து வெள்ளிமலை நாதனிடம் தாதா வுடனே தான்வரக்கண் டீசுரரும் வாராய் முனியே மதலையுனக் கிங்கேது அப்போ முனியும் அரனடியைத் தான்பூண்டு இப்போ திவ்வாண்டு இம்மாத மிந்நாளில் பஞ்சகரு ணாதி பன்னிரண் டொன்பதுவும் வஞ்சக மில்லாமல் வந்தா ரொருவீட்டில் பூரண நாளும் பிரிந்துறையும் நேரமதும் நாரணம் பிறந்த நல்ல நட்சேத்திரமும் யோக பலன்கள் ஒத்திருக்கும் நேரமதும் ஆகமக் கூட்டம் அடங்கிருக்கும் நேரமதும் மதிசுழி போலாகி வந்துரத மேறுகையில் துதிமுக வன்சர சோதி பிறந்ததன்றும் இவ்வாறு கூட்டம் எல்லா மெழுந்தொருநாள் அவ்வாறு தான்கண்ட அந்நா ழிகைதனிலே துற்கந்த முலாவும் தோகையொரு பெண்ணிடமே நற்கந் தமுலாவி நான்சேர்ந்தே னப்பொழுது சேர்ந்த பொழுது திரண்டுநா தம்வளர்ந்து காந்தற் றழுப்பாய்க் கன்னி யுடலாகிப் பெற்றா ளிவனைப் பேரு வியாகரெனக் கர்த்தா அறியக் கண்டே னிவன்தனையும் ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமுதல் வாசு நெறிதேசு வழியறிந்த மன்னவன்காண் ஏகச் சுழிமுனையும் இகமுகி வாம்வரையும் ஆக முடம்பறிவும் அண்டபிண் டத்தறிவும் முன்பின் னாராய்ந்து மூதுண ராகமங்கள் தன்னன் பிறப்பும் சாற்றத் திறவான்காண் கல்லாத கல்வி கலைக்கியா னக்காண்டம் எல்லா மறிந்த இயல்முனிவ னென்றுரைக்க நல்லதுதா னென்று நன்முனிவனை ஈசர் வல்லமையா மென்று மாமுனியைக் கொண்டாடி என்பிறப்பு என்மாது இதுமுன் பிறப்புமுதல் பின்பிறப்பு முதலாய்ப் பேசென்றா ரீசரரும்

வேதவியாசர் முக்காலம் உரைத்தல்

அப்போது வேத வியாச ரகமகிழ்ந்து செப்புகிறோ மென்று சிவனை மிகத்தொழுது மூல முதலை முத்தி முகந்துகொண்டு காலமே நின்ற கடவுளே தஞ்சமென்று ஆதிமுத லந்தம் அடங்கல் மிகவுணர்ந்து சோதி பதம்போற்றிச் சொல்லுவான் மாமுனியும் மும்மூர்த்தி யான முதல்மூர்த்தி தோன்றியதும் அம்மூர்த்தி தன்னில் ஆயிளையாள் தோன்றியதும் சத்தியிலே நாதம் தான்தோன்றி வந்ததுவும் வித்தியாய் நாதமதில் விந்துமிகத் தோன்றியதும் விந்திலே விட்டிணுவும் விரைவாகத் தோன்றியதும் அந்த முறைமுதலாய் அண்டபிண் டம்வரையும் சொல்லி யுகமதுதான் தோன்றும்வகை கூறலுற்றான் சல்லிக் கொடிய சண்டக் குறோணிமுதல் நீசன் பிறப்புவரை நிகழ்த்தினான் மாமுனியும் பாசனீ சன்வரைக்கும் பாருலக வாறதையும் சொல்லி விரித்து சுத்தஏ ழாம்யுகந்தான் நல்ல யுகமதுதான் நாடுவதுஞ் சொல்லிமிக வல்ல யுகத்தில் வளரும் மனுவளமும் எல்லாமே சொல்லி எற்றவை குண்டமுதல் அந்நாட்டைச் சொல் ஒன்றுள் ளரசாளப் பொன்னான நாரா யணர்ம கேந்திரனும் நல்ல வைகுண்டம் நற்பிறவி யாய்வளர்ந்து வல்ல கலியுகத்தில் வாய்த்ததெச்ச ணாபுவியில் புதுமை மிகச்செய்து பொல்லாத வம்பர்கையால் அடிகல் லெறிகள் அவர்பட் டம்புவியில் குடிதாழ்ந்த பேர்க்காய்க் கோப மதையடக்கி நல்லோர்க்காய்ப் பாடுபட்டு நல்லஉப தேசமதாய்ப் பஞ்சகரு ணாதிகளைப் பம்மலாய்த் தானடத்திக் கொஞ்சநா ளுங்கழித்து குதித்துதித் தேவளர்ந்து ஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போ லேயிருந்து தேவ அறிவார்க்குத் திரவியம்போ லேயிருந்து பச்சைக் குழந்தை பருவமுன் னாகியவர் மெச்சக் கொடியாட்கு மேவும்பரு வம்போலும் சுத்தக் கிழவரைப்போல் சூரப்பி ராயமுமாய் மெத்தப் புலம்பி விழலும்பிரா யம்போலும் நாலு பிராயம் நாளதுக்குள் ளேயெடுத்துக் கோலு கையேந்திக் குன்னும்பிரா யம்போலும் பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய்த் தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய்க் காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தனின் கர்த்தனுமாய் ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந் திவ்வுகத்தில் தர்மத்தால் கலியைத் தன்னந்தன்னால் கரைத்துக் கர்மத்தை யீடழித்துக் காந்தக்கோ லுமெடுத்து நேரோரைக் காத்து நிசமாக வேயெழுப்பி ஏராரைக் கொன்று ஏழ்நரகத்தும் பூத்தி உகத்துக் குகம்வழக்கு எல்லா மொருதலத்தில் தொகுத்து நடுத்தீர்ப்புச் செய்து மிகத்தெளித்து ஆகாத்த பேரை எல்லாம் நரகமதில் வாகாகத் தள்ளி வாசல்தனைப் பூட்டிச் சித்தத்துக் கேற்ற செடத்தோரைத் தானெழுப்பிப் பத்தரைமாத் துற்றப் பைம்பொன்னிறப் பொற்பதியில் சாகா வரங்கள் சனங்களுக் கேகொடுத்து வாகாக நல்ல வரிசை மிகக்கொடுத்து ஆண்பெண் ணுடனே அதிகவாழ் வுங்கொடுத்துக் காணக் காணக்காட்சிக் கனமாய் மிகக்கொடுத்துச் செல்ல வைகுண்டர் சீமையைம்பத் தாறதையும் அல்ல லகற்றி அரசாள்வா ரீசுரரே மும்மூர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும் எம்மூர்த்தி யெல்லாம் இயல்மூர்த்தி போலிருக்கும் வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில் மைகொண்ட நாதன் வந்து பிறப்பதுதான் வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமே குழந்தை வைகுண்டர் குமாரப் பிராயமட்டும் கோலா கலனாய்க் குருவாய்ச் சமையுமட்டும் நாலாஞ் சொரூபம் நடத்தும்வரை தெச்சணமே பொல்லாதெல் லாமழிந்து பூவர்கொலு வாகுமட்டும் எல்லா வழக்கும் இருப்புந்தெச்ச ணாபதயே ஆதியி லுதித்த வாறும் அரன்சிவன் பிறவி வாறும் ஓதிய யுகங்கள் வாறும் ஒவ்வொரு அசுரன் வாறும் நீதிய மனுக்கள் வாறும் நீதமாங் குண்டர் வாறும் தீதிலாத் தர்ம ஞாயச் சிறப்புட வாறுஞ் சொன்னான்

தெச்சணாபூமி வளம்

இவ்வாறு எல்லாம் எடுத்துமிக மாமுனிவன் அவ்வாறெல் லாமுரைத்து அகன்றனன்காண் மாமுனிவன் துதிகொடு தன்னால் சிவகோ வேங்கிரியில் பதியச் சிவமும் பதியென்றா ரன்போரே நந்தீ சுரரும் நாட்டினா ரவ்வுரையை இந்தப் பழமொழிபோல் இசைந்தப் புவிமகிமை தெச்சணா பூமி சிவபூமி நல்லதுதான் மிச்சம் வியாகர் முன்மொழிந்த துவுமிது ஆனதா லிப்பூமி ஆகுந் தவசிருக்க கோனாங் குமரி குடியிருக்கு மிந்நகரு சங்குத் துறைமுகத்து சதாகோடி யற்புதங்கள் எங்கு மகிழ இயல்புபெற்ற திந்நகரு மங்கைப் பதிநகரு மணவைப் பதிநகரு கங்கைக் குலநகரு கண்ணாளர் தன்னகரு பஞ்சவர்க ளஞ்சு பார்மன்னர் தன்னகரு சஞ்சீவி தன்னகரு தவத்தோர்க் குருநகரு தெய்வகுல மன்னர் சிறந்தக் குருநகரு சைவ முனிமார் தவத்துக் கிதுநகரு மேலோகக் காட்சி விளங்கிருக்கு மிந்நகரு சாலோக சாமி சார்ந்திருக்கு மிந்நகரு அரம்பை ஸ்திரீமார் ஆராடுஞ் சுனைநகரு பரம்பெரிய சேடன் பவிசுக் குருநகரு வாவி யுறைநகரு வைகைக் குருநகரு தாவிக் குலாவும் சந்தப்பட்சி தன்னகரு சொல்லஎளி தல்லகாண் தெச்சணா பூமிவளம் நல்லதிந்த நாடு நமக்குகந்த நன்னாடு பசுவும் புலியம் பாவித்திருந் தநகரு கசுவு மெந்நேரம் கரைபுரளும் நன்னாடு அந்நாடு நாடு அரனாட்டுக் கொப்பிடலாம் பொன்னாடு நாடு புரந்தரநாட் டுக்கீடாம் தவம்பெற்றோர் வாழ்ந்த தண்மைக் குருநாடு பவமற்றோ ராகி பாவித்த தின்னாடு நல்ல மலைவளரும் நாஞ்சி வளநாடு சொல்லுருசி யானச் சிறந்த குருநாடு ஒருநாடு மிந்நாட்டுக் கொவ்வாது வுத்தமரே திருநாடு ஈசர் தினமுறையும் நன்னாடு சம்பத்துக் கேற்ற சகல குருநாடு இன்பம் வளரும் இசைந்த குருநாடு ஆதி யொருமுனிவன் அடவில் தவசிருக்க நீதி யறியவென்று நிலமலனுந் தேவியுமாய் கற்றாவுங் கன்றதுபோல் கறைக்கண்டர் வேசமிட்டுப் பற்றாண்மை பார்க்கப் பாரில் மிகமேய்ந்து அந்த முனியடுக்கல் அன்றிராப் போயடைந்தார் சிந்த னருளால் சீறி யொருகடுவாய் பசுவையுங் கன்றதையும் பார்த்து மனமகிழ்ந்து இசுவாக வந்தீர் இரையாய் நமக்கெனவே என்று கடுவாய் இயல்பசுவின் கன்றதையும் தின்றுவிட வென்று சென்றுப் பிடித்திடவே அப்போ பசுவும் அந்த முனியடுக்கல் இப்போ தென்கன்றை இந்தக்கடு வாய்பிடிக்கு மாமுனியே நீயும் வந்தொரு சத்தமிட்டால் தாம்பயந்து கடுவாய் தன்னா லொதுங்கிவிடும் வந்துசொல் லாதாலும் மாமுனியே யிங்கிருந்து உந்தித் தொனியால் ஒருசத்தங் கூறினையால் என்பிள்ளை யென்றனக்கு இப்போ துதவுமென்றார் உன்னுள்ள முமேற்று உடையோன் பதம்பெறுவாய் என்று பசுவும் ஈதுரைக்க மாமுனியும் ஒன்றுமுரை யாடாது உள்ளங் கவிழ்ந்திருந்தான் கடுவாயுங் கன்றைக் கயிலையங் கிரிதனிலே வெடுவாகக் கொண்டு விட்டதுகா ணம்மானை பசுவும் வனமறைந்து பார்முனிவன் காணாமல் விசுவாச மாக மேலோகஞ் சேர்ந்ததுவே பின்னுஞ்சில நாள்கழித்துப் பேர்முனிவன் சிந்தையிலே முன்னும் பசுமுறையால் முகுந்தன்பதங் காணாமல் இத்தோசங் கழிக்க இன்னுஞ்சில நாள்வரையும் சித்தத்தோ டொத்தத் தெச்சணா பூமியிலே இரந்து குடித்து இத்தவ மேபுரிந்தால் பரந்தணியும் வேதன் பதமடைய லாமெனவே உத்தரித்து மாமுனிவன் ஒருநொடியி லேயிறங்கித் திர்ப்தியுட னேகித் தெச்சணா பூமிவந்தான் வந்து இரந்து வருசமொன் றானதின்பின் முந்துநின்ற காவில் உவந்து தவசுநின்று பரமன் பாதாரப் பவிசு மிகவடைந்து வரமருளப் பேறுபெற்று வாழ்ந்திருந் தானம்மானை அப்படியே தோசம் அகன்று அறம்வளரும் உற்பனம்போ லொத்த உகந்ததெச்ச ணாபதியே தெச்சணா புரியி னீதம் செப்பிடத் தொலையா தையா மிச்சமாம் புவியி தாகும் மேவலர்க் குகந்த நாடு பச்சமால் மகனே நீரும் பண்ணுறத் தவசு ஏறும் அச்சமும் வாரா தையா என்றடிமிசைப் பணிந்து நின்றான் நல்லது தானே யென்று நாரணர் தயவு கூர்ந்து வெல்லமர் மணவை வாரி மேன்முக மதிலே நின்று அல்லல்நோய் பிணிகட் கெல்லாம் அறமதால் தண்ணீர் தன்னால் தொல்லைநோய்த் தீர்ப்போ மென்று தெச்சணா புவியில் வந்தார் வந்தவர் தலமும் பார்த்து வழியி னற்குலமும் பார்த்துச் சந்தமாய் மகிழ்ச்சை கூர்ந்து சாமியும் முனியைப் பார்த்து இந்தமா நகரில் வாழும் இராசனு மறிய வென்றே விந்தையா யறிவு வொன்று விதித்தெழுதி யனுப்பு மென்றார்

திருவாசகம்-3

வால ராமச்சந்திர சூரிய நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி, தர்மம் நித்திச்சு, காணிக்கை கைக்கூலி காவடி என்றே திருச்சம்பதி முதல் வேண்ட ஆவசியமில்லையென்று நிறுத் தலாக்கியே, உகஞ்சோதித்து ஒரு குடைக்குள்ளான ஆயிரத்தெட் டாமாண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரமென நாமமுங் கூறி, எளிய கோலமெனப் பாவிச்சு தெச்சணம் பள்ளிகொண்டிருந்து, தர்மமாகத் தாரணி யாபேர்க்கும் தண்ணீ ரினாலே சஞ்சலநோய் கர்மம் வற்மம் வாதை கோதை பயங்களையும் பிறவி நாசமும் பொய்வினை சஞ்சாரமும், பீடை கோடை வாடை தீர்க்கவும், பிள்ளையில்லாத பேர்க்குப் பிள்ளை கொடுக்கவும், கண்ணில்லாதபேர்க்குக் கண் கொடுக்கவும், தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும், சாம்பசதாசிவ சாமி மூவரும் சற்குணமாகியே தன்னாலொரு வேசமாகிச் சமைந்து, சாதி உயர்கொண்ட சத்திமாதர் வழியிலே சகலகுண நாராயண தீரசம்பன்னர் சாதி வைகுண்டமாய்ப் பிறந்திருக்கிறார், இனி நன்றாய்த் தெரியுமே. ஆனதினால் பூமியிலே அடிபிடி அநியாயம் இறை தெண்டம் கைக்கூலி அவகடம் பொய்ப்புரட்டு அவர் செவியில் கேட்க வொண்ணாதென்றும், மகாகோடி தர்ம பாக்கியசாலியாய்ப் பூமியிலே அதிகப் பாசமாய் விரித்து அவரருகிற் சூழ அலங்கார தர்மமணியாய் நிறுத்தி அந்தரவீடு லாடந் திறந்து அதன்வழி அரனடனம் திருநடனம் ஆடல்பாடல் அங்ஙனே கண்ணோக்கி சகலதும் பார்த்தாராய்ந்து இருப்பதால் அவரவர் நினைவிலிருக்கிற தெல்லாம் அவருக்குத் தெரியாம லிருக்கிறதல்லவே அதுகண்டு பதறி ஆரானாலும் அவரிட்டிருக்கிற சட்டம்போல் நடந்து கொள்வாராகவும். அங்ஙனே நடக்கிலென்னு வருகில் அவர் நிச்சித்திருக்கிற தேதியில் நடக்கு படியே வரும். அன்பாகிய மனுக்களுக்கு அனுகூலம். 1008 ஆமாண்டு மாசியில் தெச்சணம் பள்ளிகொண்ட அய்யா நாராயண அய்யா வைகுண்ட மாய் தர்மம் நித்திச்சு எழுதின அறிவென்று மாமுனி எழுதி அவனியறியும்படி அயச்சான். ஆயிது வல்லாமல் அய்யா நாராயண அய்யா தர்மம் நித்திச்சுத் தவசிருக்கிற படியினாலே, இன்றுமுதல் அவர் நிச்சித்திருக்கிற நாள்வரையும் பூசை புனக்காரம் சேவித்தல் அர்ச்சனை ஆராடு நீராடு தீபரணை சாந்தி காளாஞ்சி கைவிளக்குக் காவடி காணிக்கை தெருமுகூர்த்தம் கோபுரமுகூர்த்தம் திருநாள் முகூர்த்தம் தேரோட்ட முகூர்த்தம் திருக்கொடி முகூர்த்தம் கொடிமர முகூர்த்தம் குருமுகூர்த்தம் குரவை குளாங்கூட்டம் கொலுவாரபாரம் ஆயுதம் அம்பு அச்சுநடை ஆனைநடை அலங்காரம் மஞ்சணைக் குளிநீராடல் இதுமுதலுள்ள நன்மை சுபசோபனம் வரையும் அவர்க்கானதல்லவே, ஆனதினால் நீங்கள் இதுவெல்லாம் இதுநாளைக்ககம் வீணில் செலவிடாமலும் விறுதாவில் நரகில் விழாமலுமிருக்கக் கடவுளிது நாராயண வைகுண்டசாமி திருவாக்குபதேசக் கருணையினால் மாமுனி எழுதி அயச்ச வாசகம் என்று எவரும் அறியவும். என்றிந்த விவர மெல்லாம் எழுதியே உலகில் விட்டு நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதி ருதிக்கும் வேளை பண்டிந்த மூலந் தன்னில் பஞ்சமி நேரந் தன்னே குண்டத்தின் அரசு கோமான குவலய மதிலே வந்தார் நாதன் குருநாதன் நாரா யணநாதன் மாதவனுந் தெச்சணத்தில் மாமருந்து மாவடியில் மணவைப் பதிமுகத்தில் மாதுகன்னிப் பார்வையிலும் இணையானப் பஞ்சவரில் ஏற்ற அரிச்சுனனும் மணமான நாதன் மகாபரனைத் தானாடி வணங்குந் தவத்தால் வந்ததா மரைப்பதியில் தெச்சணா மூலை தென்வாரி யற்றமதில் மிச்சமுள்ள தேவர் முழங்கிக் குரவையிடத் தேவர் திசையெட்டும் செயசெய எனநெருங்க மூவ ரதிசயமாய் மோடுவழி தாள்திறந்து ஆரபா ரத்துடனே அவர்கள்வந்து பார்த்துநிற்க வீரநா ராயணரும் வித்தாரத் தெச்சணத்தில் பள்ளிகொண்டா ரென்று நாமம் பரந்திடவே துள்ளியே சொரூபம் சுற்றினா ரம்மானை வைகுண்ட மென்று மனுவோ ரறிந்திடவே மெய்கொண்ட நாதன் மேவிநின்றார் தெச்சணத்தில் யாம மிகக்கூறி அதிகத்திசை எட்டிலுள்ள ஓமப் பசாசுகளை ஒதுங்கவுப தேசித்தார் மேல்நடப்பை யெல்லாம் வித்தார நாரணரும் தூல்நடப் பாகத் துறந்துதுறந் தேபடித்தார் கண்டவர்க ளெல்லாம் கருத்தோ டறியாமல் வண்டப் புலப்பமென வாக்குரைத் தேபோனார் பத்துமா தம்வரையும் பார்நடப் புள்ளதையும் முற்று மொருகுடைக்குள் உலகாள்வ தும்படித்தார் எல்லா நடப்பும் இவர்படித்த தின்பிறகு வல்லாண்மை யான வைகுண்டப் பெம்மானும் உகஞ்சோ திக்க உற்றார்கா ணம்மானை தவமே தவமெனவே தானிருந்து வையகத்தில் பொறுதி சதமாய்ப் புண்ணியனார் தானிருந்து உறுதியுட னையா உகஞ்சோ திக்கலுற்றார் நாரா யணரும் நல்லவை குண்டமெனப் பேரா னதுநிறைந்து புண்ணியனார் தெச்சணத்தில் மனுநிறமாய் வந்து மனுவைச்சோ தித்தெடுக்கத் தனுவை யடக்கித் தவசிருக்கா ரம்மானை

அய்யா வைகுண்டர் திருத்தவம்

உலகினில் மனுவாய்த் தோன்றி ஓர்இரு பதுநாலுக் கப்பால் தலைமுறை வினைகள் போக்கிச் சடலத்துள் ளூற லோட்டி மலைசெந்தூ ரலையி னுள்ளே மகரத்துள் ளிருந்து பெற்று அலைகடற் கரை நாரா யணரெனப் புவியில் வந்தார் வந்தந்த நாட்டி லுள்ள வன்குற்ற மதனைக் கேட்க நந்திகோன் விபூதி சாற்றி நாடிய தவங்க ளேற்றி முந்தநாள் மூவர்க் கெல்லாம் முதன்மையாய்ச் சாதித் தேற்றி சந்ததஞ் சாகா விஞ்சைத் தலைவனாய்ச் சமைய வென்றே நீதிய ரோமம் வீசி நினைவொன்றைக் கருணை வாசி சாதிக ளுரைக ளாற்றிச் சடத்துற வாசை யற்று வாதியாங் கார மற்று மலசல மதங்க ளற்று ஆதியைக் கருணை நாட்டி அவர்தவம் புரிந்தா ரையா ஆசையாம் பாச மற்று அனுதாரக் குளாங்க ளற்று மாசதாம் வினைக ளற்று வாக்கலங் கார மற்று நீசமாம் கலியை யற்று நீணிலத் தாசை யற்று ஓசையாம் வெளியைத் தாண்டி ஒருவனைக்கண் டுகந்தா ரையா கண்ட வர்ப்பா லேற்று கண்சுழி முனையில் நாட்டிப் பண்டவர் செகலில் பெற்ற படிமுறை தவறா நாட்டிக் கொண்டவர் லோகந் தன்னைக் குமியவோர் தலத்தி லாக்கி இரண்டது மறிய வென்றே இவர்தவம் செய்ய லுற்றார் மனுதவ தாரங் கொண்டு வந்தவர் பிறக்க லுற்றார் தனுமனு வோர்க ளெல்லாம் தழைத்துநீ டூழி வாழ்ந்து வனுதர்மப் புவியைக் கண்டு மாள்வரா வாழ்வு வாழ்ந்து துணிவுடன் மனதி லேற்றி சூரியத்தவசு நின்றார் முற்பிதிர் வழிக ளெல்லாம் முதன்மைபோ லாக வென்றும் கற்பினைப் படியே தோன்றிக் கலியுக மதிலே வந்த அற்புத மடவா ரோடும் ஐவர்தம் குலங்க ளோடும் செப்பியச் சாதி யெல்லாம் செயல்பெறத் தவசி யானார் இத்தவ மதிலீ தெல்லாம் இயல்புடன் வசமே யாகக் குற்றமே செய்வோ னீசக் கொடுகலி வழிகள் சாகக் கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாக உற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசும் பெற்றார்

அகிலம் பனிரெண்டு

divider
நாரா யணரே நல்லவை குண்டமெனச் சீராக தெச்சணத்தில் சிறந்ததவஞ் செய்யலுற்றார் ஆறு வருசத் துள்ளே யவர்நினைத்து வாறு வகையெல்லாம் வந்து வழிப்படவே நின்றார் தவசு நெடியநா ராயணரும் குன்றாக் கடலில் கொண்ட வழிப்படியே கடலில் மிகவே கண்டதெல்லாம் விள்ளாமல் உடலுள் சூட்சம் ஒருவருக்குங் காணாமல் அகமதுவே பூசித்து அதிகத் தவமிருந்தார் தவப்புதுமை சொல்லித் தானுரைக்கக் கூடாது ஈசர் முன்னாளில் இருந்தா ரொருதவசு வாசக் குழலுமையை மதலை யுருவாக்க வேட்டுவனுக் கீந்த விஞ்சைதனை நெஞ்சில்வைத்துக் கூட்டுக் கிளியைக் குழந்தையுரு வாக்கவென்று அத்தவந்தான் போதாது அய்யா இவர்தவத்தே கற்றைக் குழலுமையாள் கரியமுற் காலமதில் சூர னெனவந்தத் தோசப்பொல் லாதவனை வீரத் தனமாய் வெட்டிச் சரமறுக்க ஆறு முகமாய் அரியதொரு ஆண்பிள்ளைதான் பேறுடனே நமக்குப் பிறக்கவே ணுமெனவே சரவணப் பொய்கையிலே சாம்புவ னைநினைந்து அரகரா அவள்தான் அன்றுநின் றதவமும் இவர்தவத்துக் கொவ்வாது ஈசரரிலும் பெரிதாய் அவர்தவமு மொவ்வாது அய்யா இவர்தவத்தே சீதை தவசியதும் செப்பவொண்ணா தித்தவத்தே நாத அரிச்சுனனும் நாட்டத் தவத்ததிலும் எத்தனையோ கோடி இவர்தா னிருக்கும்தவம் வித்தரிக்க வென்றால் வெகுமணிகள் சென்றிடுங்காண் சொல்ல எளிதல்லவே சொன்னா லுலகிலுள்ளப் பொல்லாத் பேரும் பொருந்தியிதைக் கேட்டாக்கால் பாவந் தொலைந்திடுமே பாவிகட்கு மோர்நினைப்பாய் நாமிருப் பதுவோ நாலு திரையதனுள் ஆமவரே கண்டு அறிந்தா லதுவீதம் இச்சொரூபத் துள்ளே இதுவிதிக்க வொண்ணாது வச்சுகந்து பார்ப்பீரால் வழிதெரியு மிந்தேட்டில் என்னமோ வென்று எண்ணம்வைத்துக் கேட்பீரால் அன்னமுத லற்று ஆக்கினைக்குள் ளாவீர் நல்லவர்கள் நல்லாவார் நானுரைக்கே னம்மானை செல்லத் திருகேட்கச் செப்புகிறார் நாரணரும்

அய்யா மக்களுக்கு அருளல்

சீமையைம்பத் தாறு தேச நருட்களையும் 40 நேர்மை யொழுங்காய் நிமைப்பொழுதில் வந்திடவே செல்லவை குண்டச் சீமானு மப்பொழுது வல்ல தவமும் மனதுளரா தேமுடித்து உலக நருட்கள் ஒக்கவொரு மிக்கவரத் தலமளந்த நாதன் தானினைத்தா ரம்மானை வடக்குக் கிழக்கு வடமேற்கு நேர்மேற்கு நடக்கும் படியே நல்லதிக்கு நாற்றிசையும் அடங்கல் குடியிருக்கும் ஆட்களெல் லாம்வரவே சாணார் முதலாய்ச் சாதிபதி னெட்டையுமே நாணாம லோடிவர நாரா யணர்நினைத்தார் நினைத்த வுடனே நிமிசம் பொறுக்காமல் தினந்தோறும் வந்து சேரும் நருட்களது எண்ணக் கூடாது எவராலு மன்போரே திண்ணமுள்ள சாதி செப்பொண்ணா தன்போரே சாணா ரிடையர் சாதி வணிகருடன் நாணாத காவேரி நல்லதுலுப் பட்டர்முதல் சூத்திரன் பிரமா தொல்வணி கன்பறையன் ஊத்திர நீசன் உழவ னுடன்குறவன் கம்மாள னீழன் கருமற வன்பரவன் வெம்மா நசுறாணி வேகவண்ட ரிடையர் சக்கிலிய னோடு சாதிபதி னெட்டுகளும் முக்கிய மாக ஓடிவந்தா ரம்மானை ஆகாயங் காணாது அறைக்குள் ளடைத்திருந்த வாகா ஸ்திரீமாரும் வந்தார்கா ணன்போரே கிழவன் முடவன் கெற்ப ஸ்திரீமாரும் இளவயசு கொண்ட ஏந்துபச லைமுதலாய் ஒக்கவே வந்தார்காண் உடையவனார் தன்னிடத்தில் வந்த நருட்கெல்லாம் வாய்த்தவலு வியாதிமுதல் சிந்தையுடன் தன்னால் தீர்த்தாரே தர்மமதாய் ஐம்பது வயதாய் அரைதளர்ந்தப் பெண்ணாட்கும் சம்பத்துக் கேற்ற சந்ததிகள் தான்கொடுத்தார் உடல்தன மில்லாது உருவழிந்த பெண்ணாட்கும் சடலமுருக் கொடுத்துச் சந்ததி யுங்கொடுத்தார் பிறவிக் குருடூமை பேச்சறா நாக்குழறல் திறவி யொளிபோல் திறமும் மொழிகொடுத்தார் தர்மமில்லாப் பாவிகட்குத் தாண்மை மிகக்கொடுத்தார் கர்ம வியாதிகளால் கால்கள்மொட்டிக் கைகள்மொட்டி அந்தமொட்டி யெல்லாம் அறத்தா லதைத்தீர்த்துச் சந்தமுடன் கைகால் தானாக்கித் தான்கொடுத்தார் உடலை யுருக்கும் உற்ற சயஇருமல் குடலைப் புரட்டும் குன்மவாய் வுமுதலாய்த் தீர்த்துக் கெடுத்தார் தேசத்தோர் கண்டுமிகப் பார்த்துப்பார்த் துமகிழ்ந்துப் பச்சமுற்று வந்தனர்காண் கர்த்தாதி கர்த்தன் கடவுளா ரென்றுசொல்லி என்தேசத் தோரும் இங்குவந்தா ரன்போரே பதிணென் சாதிகளும் பண்பா யொருதலத்தில் விதிவந்து தென்று மேவிக்குலா வியிருந்தார் மேவிக் குலாவி மிகவே யொருதலத்தில் ஆவிநீ ருண்டு அகமகிழ்ந்தா ரம்மானை நொம்பலங்க ளெல்லாம் நிசமாகத் தீருவதும் அன்பா யுலகில் ஆனதே சத்தோரும் ஒருதலமாய் வந்து ஒன்றாய்க் குவிகிறதும் கருதினமாய்ப் பார்த்து அவர்கள் மிகவுரைப்பார் முன்னாள் மொழிந்த முறையாக மம்போலே இந்நாள் சமைந்திருக்கு தென்று மகிழ்ந்துரைப்பார் வைகுண்ட ராசர் வருவார்தான் பூமியிலே மெய்கொண்ட ராசர் மேதினியில் வந்தவுடன் சாதிபதி னெண்ணும் தலமொன்றி லேகுவிந்து கோதிக் குளிக்கும் ஒருகிணற்றி லல்லாது கர்மவியா திசெவிடு கண்குரு டூமையெல்லாம் தர்மத்தால் தீர்த்தார் சகலவுயி ரானதுக்கும் செல்வ முண்டாகும் சீமானார் வந்தவுடன் அல்லல் மிகத்தீரும் அவரை யறிந்தவர்க்கு எளியோர் வலியோர் எல்லா மொருப்போலே பழியான பேச்சுப் பாரினில் கேட்கவிடார் தேசமெல்லாம் பரக்கும் சீமானார் வந்தசெய்தி தோசமெல்லா மகலும் சுத்தமாய்க் கண்டவர்க்கு சார்ந்தவர்க்கு சாந்தனுமாய்த் தர்மங்கொடுத் தருள்வார் சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகுமெனச் சொல்லியிருந் தாகமத்தின் துல்யச் சுருதிப்படி நல்லவை குண்டர் நாட்டில்வந்தா ரென்றுசொல்லி சாதிபதி னெண்ணும் சடல வரவுமற்று ஆதிவை குண்டர் அடிவீழ்ந் தேத்தியவர் எல்லா மொருதலத்தில் இரண்டு மனுப்போலே அல்லோரும் வந்தோர் ஆவிநீ ருண்டிருந்தார் அல்லாமல் முன்னாள் ஆகமத் தின்படியே எல்லாமுன் வியாசர் எழுதின சொற்படியே தெய்வச்சான் றோர்களுக்குச் சேர்ந்த வியாழமது மெய்வகையாய் வந்து மிகத்தோன்றி யேயிருக்க இன்ன மிவர்வழியில் இயல்பாய் மணமுகித்து மன்னர் வைகுண்டர் மகராச ராகியவர் சீமையைம்பத் தாறும் சொல்லொன்றுக் குள்ளாக்கி மேன்மைச் சான்றோர்க்கு முத்திரிசெங் கோல்கொடுத்துத் தாழ்வில்லாச் சான்றோரைத் தர்மபதி மீதில்வைத்து ஆள்வதுவும் நிசமே ஆதியா கமப்படியே நாரா யணர்க்கு நாள்பகையாய் வந்தவர்க்குப் போரா தெனக்காலம் புராண முரைக்கிதுகாண் சொல்லி யுலகோர் தொல்புவியில் கொண்டாடிப் பல்லுயிரு மறிந்து பண்பாய் மகிழ்ந்திருந்தார் மகிழ்ந்து சிலநாள் வைகுண்டர் பாதமதில் மிகுந்துபல சாதிமுதல் மிகவந் துரைகேட்டார் வந்த நருளறிய வைகுண்டர் வாய்திறந்து சொந்தமுடன் வசனம் சொல்லிமிகக் கூறலுற்றார்

திருவாசகம் 4

1008 ஆம் ஆண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரம் தெச்சணம் பள்ளிகொண்டு காணிக்கை கைக்கூலி காவடி முதல் என்றனக்கு ஆவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு, கொற்றவரும் மாண்டு குறும்பு மிகத்தோன்றி, உற்ற துலுக்கன் உடன் வந்துடனோடி, மற்றொரு பத்தாமாண்டில் வைகுண்டம் வருவோ மென்ற ஆகமத்தின்படி வந்து வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும் நச்சேத்திரத்தில் குதிச்சிக் கொள்ளுந்தன்னே, மாளுவது மாண்டு கொள்ளுந் தன்னே, முழிக்கப்பட்டது முழிச்சி கொள்ளுந்தன்னே, முழிக்கப்பட்டது கண்டு கொள்ளுந்தன்னே, ஒரு நெல் எடுத்துடைக்க நாடு கேட்டுக் கொள்ளுந்தன்னே, இரு நெல் எடுத்துடைக்க நாடு தாங்காது தன்னே, வானமும் பூமியும் கிடுகிடென்றாடிடுந் தன்னே, வானத்திலிருக்கிற வெள்ளிகளெல்லாம் ஆலங்காய்போல் உதிர்ந்திடுந்தன்னே, மலைகள் இளகிடும் தன்னே, பதி எழும்பிடும் தன்னே, முழிக்கப்பட்டது கண்டுகொள்ளுந் தன்னே என்று நருட்களறியும்படி உபதேசித்துக் கொண்டிருந்தார். அதை உலகோர் அறிந்தும் கேட்டும் முன்னுள்ள ஆகமமுஞ் சரி, இவர் சொல்கிறதுஞ் சரியென்று ஒத்துக்கொண்டு இவர்தான் வைகுண்ட சுவாமி யென்று கேட்டறிந்து, இவர் தலத்திலே போவோமென்று வந்தார்கள். பின்னும் நாராயண வைகுண்ட சுவாமிதானே, பேய் பல சீவசெந்து ஊர்வனம் புற்பூண்டு கற்காவே ரியறிய உபதேசித்தார். எப்படி யென்றால், வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து காணிக்கை கைக்கூலி காவடி ஆடுகிடாய் கோழி பன்றி இரத்தவெறி தீபதூபம் இலைப்பட்டை இது முதலானதென்றனக்கு வேண்டாம் ஆவசியமில்லையென்று, தர்மம் நித்திச்சு நாடு குற்றங்கேட்க நாராயணம் சிறையிருக்கும்போது, இனி ஆரேக்கார் என்று பார்க்க, அதையறிந்து நீங்களும் ஒதுங்கியிருங்கோ வென்று உபதேசித்தார், உடனதுகளெல்லாம் அய்யாவாணை நாங்களொன் றும் ஏற்கமாட்டோமென்று சொல்லிப் போனார். உடனே நாராயண வைகுண்ட சுவாமி தானே ஓராண்டு ஒன்னரையாண்டு கழித்து உகஞ்சோதித்து வரும்போது, பேய் செய்கிற அன்னீதம் பொறுக்காமல் மானிடர் வைகுண்ட சுவாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார். உடனே வைகுண்டராசரும் திட்டிச்சுப் பார்க்கும் போது பேய் செய்கிறது அன்னீதந்தான் என்றறிந்து பேய்களுக்குள்ள முன்னாகமக் கணக்கைச் சோதித்துப் பேயை எரிக்கவேணு மென்று நாராயண வைகுண்ட சுவாமி தானே மனதிலுத்தரித்தார்.

பேய்களை எரித்தல்

பேய்கள்தான் பிறந்த வாறும் பெருவரம் பெற்ற நாளும் மாய்கையால் உலகில் பேய்கள் வந்ததோர் நாளும் பார்த்து ஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை யெரிக்க வென்றே ஆயர்முன் னெழுத்துங் கொண்டு அருள்முனி வரவே யென்றார் வரவென வுரைத்த போது மறைமுதல் வேதன் வானோர் துரகத மீதோ டாவிச் சீக்கிரம் வந்தா ரங்கே பரமருள் வைந்த ராசர் பார்த்தவர் தன்னை நோக்கி விரைவுடன் பேய்க்கு முன்னாள் விதிதனைப் பாரு மென்றார் விதிதனைப் பார்த்து வேதன் விளம்புவான் வைந்த ரோடு துதிகொடு எழுத்து மென்றன் சுருதியுங் கேண்மோ அய்யா ஆதிநாரா யணர்தா னிந்த அழிகலி யுகத்தி லேதான் பதினை குண்ட மென்று வந்தன்றே யவர்கள் போனார் பேயொடு பசாசு கூளி பொறாமையுங் கலியும் நீசம் மாயொடு கபடு கள்ளம் மனக்கறுப் புகங்கள் தீர்ப்பு பொய்யொடு மிரட்டு வஞ்சம் பிழைபொல்லாப் பென்ற தெல்லாம் வாயொடு வாயால் கெட்டு மறுபிறப் பில்லாப் போனார் நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றே காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள் சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே அழிவதை யழித்துப் போட்டு அவரொரு சொல்லுக் குள்ளாய் சுழிவரை யெழுத்தை யூனி தெய்வமா தவரு மாகி வழிதனில் வன்னி யாகி வகுத்திடும் மகவோ ராகி அழிவில்லாப் பதிதா ளாள்வார் ஆகமத் துரைதா னென்றார் ஆனதா லாகா தென்ற அவ்வகைக் கிதுநாள் சாக ஏனமு மிதுதா னென்று இயம்பிட வேதன் தானும் மானமாய்க் கேட்டு வைந்தர் வானவர் சாட்சி யென்று தானவர் கணக்கி லூனி சத்தியாய்ப் பதித்தா ரன்றே கணக்கிலே யெழுதிக் கொண்டு கருத்தினி லடக்கி வைத்து இணக்கியே யவரை யெல்லாம் இலக்குலக் கதிலே கொல்வோம் பிணக்கியே கொல்லே னானும் பிசகில்லா வழியே செய்வோம் குணக்கில்லாச் செய்வோம் பாரும் கோகிரித் தேவ ரெல்லாம் உகசிவா வானோர் வேதன் ஒருவரும் போக வேண்டாம் வகையுடன் நான்தான் செய்யும் வழிதனைப் பார்த்துக் கொள்ளும் இகபரன் முதலா யிங்கே இருமெனச் சொல்லி வைத்துப் பகைசெய்த கழிவை யெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார் ஈசர்முதல் வானோர் எல்லோரும் போகரிது வாச மலரோனும் மற்றோரும் போகரிது என்று இவர்களையும் இவர்சூ ழருகிருத்தி அன்றுபேய் கொண்டுவர அவர்நினைத்தா ரம்மானை உடனே யுலகமதில் ஊர்ந்துதிரி யும்பேய்கள் திடமே குளறி சிந்தை மிகக்கலங்கி பேய்க ளொருதலத்தில் பிரமாண மாய்க்கூடி மாய்கைத் தொழில்குளறி மனது மிகஅளறிச் சீல முடனுரைத்த சிவவைந்த ராசர்மொழி ஏலமேநாம் கேட்டு இருந்திலமே எல்லோரும் என்னவோ வென்று எண்ணி நினைத்ததெல்லாம் சன்னைபோ லாகாமல் சாக விதியாச்சே அய்யோ கெடுத்தோம் அவர்பேரில் குற்றமில்லை பொய்யென் றிருந்தோமே பெரியோ ருரைத்ததெல்லாம் நம்பேரில் குற்றமல்லால் நாரணர்மேல் குற்றமில்லை தம்பேரில் குற்றமல்லாமல் சாமிமேல் குற்றமில்லை நமக்கு முன்னாளில் நாரத மாமுனிவர் எமக்குயாமி யங்கொடுத்து அதிகவரம் வேண்டித்தந்தார் அவரிடத்தில் நாமள் எல்லோரும் போயுரைத்தால் சிவனிடத்தில் வந்து செய்திகேட் டேயுரைப்பார் போவோம் வாருங்கோ பேய்க ளொருப்போலே கோவேங் கிரிதனிலே குடியிருக்கும் மாமுனிவர் அண்டை யவரணுகி அபயம் முறையமென்றார் கண்டந்த மாமுனிவர் கழிவையெல் லாமமர்த்தி அபயமிட்ட தேது அலகைகளே சொல்லுமென்றார் கௌவை துயரமுற்ற கழிவெல்லாஞ் சொல்லலுற்று மனுவுருப்போல் வையகத்தில் வைகுண்டம் வந்திருந்து இனியுங்க ளையெல்லாம் எரிப்போ மிப்போதெனவே வரங்களையும் வைத்து மாண்டுபோங் கோவெனவே துரத்தனமா யெங்களையும் துடர்ந்து பிடிக்கிறார்காண் பதறியிங் கோடிவந்து பாட்டையும் மோடுரைத்தோம் இதறு தனைத்தீர்த்து இரட்சிப்பீ ரென்குருவே என்றுபே யெல்லாம் இப்படியே சொன்னவுடன் அன்று தலையோடு அந்தமுனி தானடித்து வைகுண்டம் பூமியிலே வந்து பிறந்தாரென்றால் மெய்கொள் சிவன்முதலாய் மேல்பிறக்க வேணுமல்லோ சத்தி சிவன்வரையும் சத்துப் பிறக்கணுமே பொல்லாப் பிசாசுகளே புத்திகெட்டுப் போனீர்களே வல்லாத்தா னல்லோ வைகுண்ட மாபொருளும் ஆரவர்நா மங்கேட்டால் அல்லவென்று சொல்வதுதான் சீர்பரன் முதலாய்ச் சிந்தை பதறணுமே உங்களுட மூப்பு உகத்திலினி வாராது எங்களுட மூப்புவரை இல்லையென்று போகுதுகாண் எல்லா மவர்மூப்புக் குள்ளே யடங்குதுகாண் பொல்லாப் பசாசுகளே பொன்றவிதி யுங்களுக்கு ஆனாலு மீசர் அமைப்புக் கணக்கெடுத்து நானே யிதுமேவித் தாறேனென் றிப்போது இந்தக் கணக்கும் ஏழு யுகக்கணக்கும் எந்தக் கணக்கும் இருப்பு மவரிடத்தில் ஆனால் கணக்கை அவரிடத்தில் நாமள்போய் நானாகச் சொல்லி நற்கணக் கும்பார்த்து அறிந்துகொள்ள லாமெனவே எல்லோரும் போவோமென்று நாரத மாமுனியும் நாட்டில்பே யத்தனையும் காரண வைகுண்டர் காலில்வந்து தெண்டனிட்டார் தெண்டனிட்ட போது சொல்வார் முனியுடனே பண்டா கமப்படியே பசாசையெல் லாமெரிக்க என்மனதி லுற்றேன் இங்கேவந்து வாய்த்ததென்று நன்முனியே பேயை நகன்றிடாக் காருமென்றார் முன்னேநீ பேய்க்கு முதல்யா மியங்கொடுத்து இந்நேரங் கூட்டி என்னிடத்தில் கொண்டுவந்தாய் வந்தது நல்லதுதான் வாய்த்தமுனி யேயிப்போ இந்தாப் பேய்க்கணக்கை எடுத்துரைக்கேன் கேட்டிருநீ பொல்லாக் கலியன் பிறந்தநா ளன்றுமுதல் எல்லாம் பேய்களுக்கு ஈந்தவர மானதினால் நீசன் கொடுமை நீணிலமெல் லாம்பரந்து தேசச் சிறப்புச் சிதறிக் குலைந்ததெல்லாம் வாயநா ராயணரும் வைகுண்ட மாய்ப்பிறந்து ஞாய நடுகேட்டு நாட்டுக்குற்றந் தீர்த்து ஆகாத்த தெல்லாம் அழித்துநர கத்திலிட்டு வாகாய் நரக வாசல் தனைப்பூட்டி நல்லோர்க்கு நாலு வரங்கொடுத் தேயெழுப்பி பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து வல்லோரைச் சொல்லொன்றுள் வைந்த ரரசாளப் பிறந்துபூ மிதனிலே பேறாக வந்தவுடன் இறந்ததுகாண் பேய்கள் இவர்க்காகாப் பேர்களெல்லாம் என்று பேய்களுக்கு ஈந்துவரம் கொடுத்ததெல்லாம் அன்று பேய்க்கணக்கு வாசித்தா ராதியுமே இம்மணியி லித்திவசம் ஈந்தவர மல்லாது எம்மணியு மிப்பேய்க்கு எள்ளளவு மில்லையென்றார் உண்டோகாண் பேய்க்கு ஒருமணிதா னானாலும் கண்டோ முனியே கணக்குண்டோ சொல்லுஇனி கேட்டு முனியும் கெஞ்சிமிக வாய்புதைத்து நாட்டுக் குடைய நாரா யணருரைத்தால் எவர்தா னெதிர்த்து இல்லையென்று சொல்லுவது மூவரு மங்கே ஒடுங்கி யிருக்கையிலே அல்லாமல் நீசன் அழிவாகு முன்னதியாய் எல்லாமவ னோடுளது ஏலமே சாகணுமே நீசன் வலுவெல்லாம் நேர்முன்னே தானறுத்து ஓசையொன்றுக் குள்ளே உகங்கேட்க நிச்சயித்தீர் நன்றிகெட்ட நீசன்வேர் நாள்வழியே நீரறுத்து ஒன்று விளிக்குள் உகமழித்துத் தீர்ப்புசெய்து நல்லோரை யெழுப்பி நகரொருசொல் லுள்ளான வல்லோராய் நீரும் வரம்பெற்ற மாதவமே ஆனதினால் பேய்க ள் அந்நீசக் குலமதினால் வானக் கனலில் மாளுமிக் காலமிதாம் என்று முனியுரைக்க ஏற்றவை குண்டமுதல் நன்று முனியே நம்பேரில் குற்றமில்லை முன்னுள்ள ஆகம முறைநூற் படியாலே என்னூ லொழுங்கில் எரிக்கிறே னிப்பேயை மாமுனியே நீசாட்சி மாயாண்டி நீசாட்சி நாமுனியே சாட்சி நல்லவரே நீசாட்சி எல்லோருஞ் சாட்சி என்பேரில் குற்றமில்லை வல்லாத்தான் வைகுண்ட மாலவ ருஞ்சாட்சி என்றுநா ராயணரும் எரிக்கலுற்றார் பேய்களையும் பண்டு அந்தப்பேயைப் பார்மீதில் கொண்டாடும் நருட்கள் மிகப்பார்த்து நாலைந்து தான்தாக்கிக் கருக்கிவிட வென்று களிவைத் தலையாட்டி மனுக்க ளறிய மனுநருளைத் தானாட்டித் தனுக்கள் மிகவாங்கத் தானினைத்தா ரம்மானை அப்போ நருள்பேரில் ஆடும்பே யேதுசொல்லும் இப்போது சுவாமி எங்களொக்கத் தானெரித்துத் 280 தனியே யரசாள சாதியொன்று தானெடுத்துச் சொல்லொன்றுக் குள்ளான சுவாமி வரங்கள்பெற்றுக் கொல்லென் றெங்களையும் கொல்லத் துணிந்தீரே என்றுபே யெல்லாம் எண்ணியெண்ணித் தானழுது அன்று அழுது அவர்வரங்கள் வைக்கலுற்றார் காந்த லிடியும் கனத்தவலுச் சக்கரமும் சூழ்ந்து குத்தல்கண்டு சுருண்டு மிகப்பேய்கள் ஐயோ சுவாமி அடியார்க்குத் தந்தவரம் வையோ ரறிய வைக்கிறோ மென்றுரைத்தார் உடனே வைகுண்டர் உற்றநா ராயணரும் திடமுடனே பேயோடு உரைக்கிறார் சீமானும் அணியில்லாப் பேயே அன்றுதந்த வரத்திலொரு மணியிருக்கு தானால் மாறியென் னோடுரையும் அப்போது பேய்கள் எல்லோருந் தானழுது இப்போது நாழிகையும் இல்லைமணி நேரமதும் உம்முடைய தர்மம் உண்டானா லெங்களையும் தம்முடைய கருணை உண்டாற் பிழைப்போங்காண் என்று பேயுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார் அன்று நானுரைத்து ஐமூன்று மாதம்வரை பார்த்து இருந்தேன் பசாசுகளே யுங்களுக்காய்க் காத்து இருந்தேனே ஆண்டொன்றொரு கால்வரையும் என்பேரில் குற்றமில்லை என்று சாட்சிவைத்து உன்பேரில் குற்றமதால் ஒடுக்கிறே னுங்களையும் என்று பேயோடு இப்போவரம் வையுமென்றார் அன்றுபே யெல்லாம் அறமெலிந்து தான்வாடி என்னமுறை சொல்லி இப்போவரம் வைக்கவென்று வன்னப் பொருளே வகையாகச் சொல்லுமென்றார் அந்தப் பொழுதில் அய்யாநா ராயணரும் இந்தப் பொழுதில் இம்மணியிந் நேரமதில் ஐயாவு மங்கே ஆகமத்தைத் தான்பார்த்து கைவாய்த்து தென்று கழிவோ டுரைபகர்வார் திட்டிச்ச அய்யாணை சேர்ந்து வரங்கள்வைத்து விட்டுருந்தச் சாவுபிழை சங்கிலிகள் தானும்வைத்து மலையேறி யொக்க மாண்டுபோ வோமெனவே விலையாய்ப் பலகையிலே விரித்தடியுஞ் சத்தியமாய் அய்யா வுரைத்த ஆணை தவறாமல் மெய்யாகப் பேய்கள் விளம்பிவைத்து தம்மானை அய்யாணை அய்யாணை திட்டிச்ச அய்யாணை மெய்யாணை எங்கள் மிக்கவரங்கள் வைத்தோம் தந்தபிழை சாவு சங்கிலிக ளானதுவும் எந்தன் குலமுழுதும் இப்போ வரமும்வைத்து அய்யாணை நாங்கள் அருமலைகள் தானேறி மெய்யாக அக்கினியில் விழுந்துசெத்துப் போவோமெனச் சொல்லிப் பேயெல்லாம் சுத்தவர மத்தனையும் பல்லுயி ருமறியப் படித்துவரம் வைத்ததுவே வைத்த உடனே வைகுண்டர் முறைப்படியே மெய்த்தபுகழ் சான்றோர் மெய்வாயுங் கையாலும் ஆகாத்த தெல்லாம் அழித்திடு வாரனவே வாகாக முன்னூல் ஞாய வழிப்படியே வாணாள் மறுகி வாதைவரம் வைத்தவுடன் சாணா னொருவிரலால் சற்றேதொட வைத்தனரே தொட்டிடவே பேயும் சுற்றுமனு நருளும் பட்டு விழுந்தாற்போல் பாரறிய தான்விழுந்தார் உடனே மனுவழியில் உடைய குலச்சனங்கள் படபடெனத் தூக்கிப் பதங்கோரி விட்டிடவே அசதி தீர்ந்தாற்போல் அந்த நருள்முழிக்கும் செய்திதனை யெல்லாம் சீமை நருளறியும் கண்டு கொண்டாடிக் காரணத்தின் ஞாயமென்று மன்று பதினாலும் கண்டு மகிழ்ந்திருந்தார் இப்படியே பேய்கள் எல்லாம் வரங்கள்வைத்து அப்படியே பேய்கள் அருமலைபோய் மாண்டதுவே மலைதனிலே வந்து மாண்டசெய்தி தானறிய இலையி லாடிட்ட இடையர்மிகக் கண்டுளறி அய்யோபேய் மலையில் அலறிக் கரிவதுதான் மெய்யாகக் கண்டு மிகப்பதறு தெங்கள்மனம் அழுதுமுறை யிட்டுப்பேய் அக்கினியில் சாடுவதும் முழுது மலைகள் முழக்கிக் கிடுகிடென ஆடு மிகப்பதறி அம்மலையில் மேயாமல் சாடுதுகாண் தரையில் சாரங்கள் சீமானே என்று இடையர் இயம்பக்கேட் டெம்பெருமாள் அன்று நருளறிய அவர்போ தித்தார்சாட்சி கேட்டு மனுநருட்கள் கெட்டிகெட்டி யிந்தமுறை நாட்டுக் குடைய நாரா யணரிவர்தான் மன்று தனையளந்த மாயத் திருநெடுமால் என்று பலரும் இயல்பா யறிந்திருந்தார் ஆகமப் படியே பேய்கள் அதினுட வரங்கள் வாங்கி லோகங்கள் அறியக் காட்டி யுகபர சாட்சி நாட்டி வேகத்தில் மந்திர தந்திர விசையெல்லா மடக்க வென்று நாகத்தி லுண்டு வாழும் மலையரசனை வருத்த வென்றார் வருத்தவே வேணு மென்று மகாபரன் மனதி லுன்ன விருத்தமாய் மலையில் வாழும் மிருகங்கள் கோப முற்றுத் துரத்தலைக் கண்டு மெத்தத் துயரமுற் றயர்ந்து மந்திர வருத்தலைச் செய்து பார்த்து மலைந்தன னரசன் தானே

மந்திரவாதிகளின் விசையடக்குதல்

மந்திர தந்திர மாமுனிவன் சாத்திரங்கள் விந்தைசெய்யு மாய்மால விசையடக்க வேணுமென்று நினைத்த வுடனே நெடுமலையில் தான்வாழும் அனர்த்த மிடும்மிருகம் ஆனை புலிகடுவாய் கடுகிக் கரடி கனத்தமந் திக்குரங்கும் முடுகி யெழுந்து மூச்சுவிட் டேவிரைவாய்ச் சீறி யெழுந்து சென்றுமலை யில்வாழும் கூறித் தொழில்கடிய குன்றரசர் தங்களையும் விரட்டத் தொடுத்ததுகாண் மிருக மிகக்கூடி அதட்டுப் பொறுக்காமல் அந்த மலையரசர் ஓமந் தனைவளர்த்து ஒருகோடி பூச்சொரிந்து ஆமா அரியெனவே அட்சரங்கள் தானெழுதி புவனைவலிச் சக்கரங்கள் பீட மதில்நிறுத்தி நமனை யழைக்கும் நல்லவலுச் சக்கரமும் சத்தி நிறுத்தி சதாகோடிப் பீடமிட்டு சுற்றிவர வோமம் சுழலக் கனலெழுப்பி வேண்டும் படைப்பு விதம்விதமாய்த் தான்படைத்துக் கூண்டு மலையரசன் குறளிகளைத் தான்வருத்தச் சேவித்தான் மூன்று நாளாக மந்திரங்கள் கோபித்துப் பார்த்தான் குறளிகள் தன்பேரில் சற்றும் பலிக்காமல் சடைத்துமந்தி ரத்தோனும் கற்றத் தொழிலும் கருவுங் கலைகலைந்து என்ன விதமோ என்று மிகக்குளறி மன்னன் மலையரசன் மார்கள் மிகநடுங்கி எங்கே யினிப்போவோம் என்று மனம்பதறி சங்கை யழிந்து சருவில் மிகஇறங்கி தட்டழிந்து வாடி தவித்துநின் றேதுரைப்பார் பட்டபா டேதெனவே பண்பாகக் கேட்பதற்குக் குறத்தியொன்று காண்கிலமே குறிகேட்டுப் பார்ப்பதற்கு உரைத்து அவரிருக்க உடையவ னாரருளால் குறத்தி யொருத்தி குறப்பெட்டி யுமிடுக்கி விறைத்துரைத்து வந்தாள் விசாரமிடு வோர்கள்முன்னே கண்டார் குறத்தியையும் கலிதீர்ந்தோ மென்றுசொல்லி வண்டாடுஞ் சோலை வனத்தில்வா என்றழைத்து அருகி லிருத்தி அவளைமிக ஆதரித்துச் சரிவிலுள்ள மாங்கனிதேன் தகையாற வேகொடுத்து பசிதீர்ந்து குறத்தி பகர்வா ளொருவசனம் விசியா யெனதுடைய பசிவிசா ரந்தீர்த்தீர் உங்க ளுடதுயரம் ஓட வழிகேளீர் தங்களுக்கு மெங்களுக்கும் சகலவுயி ரானதுக்கும் நாயகமாய் வந்து நாட்டில் மிகஇருக்கார் வாச மணக்குதுகாண் வையகங்க ளீரேழும் பேரு வைகுண்டர் பெரிய திறவான்காண் நேரா யிருப்பவர்க்கு நிச்சமாய்க் கைகொடுப்பார் அவரைநீங் கள்கண்டு ஆனதுய ரமுரைத்தால் தவிருந் துயரமெல்லாம் சுவாமியவர் தன்னருளால் என்று குறத்தி ஈதுரைக்க நாகரசர் நன்று குறத்தியுடன் நம்துயரஞ் சொன்னோமோ சொல்லா திருந்திடினும் சொன்னாளே நம்துயரம் எல்லாத் துயரமதும் இதினாலே தீருமென்று சந்தோசங் கொண்டு சற்குறத்தி யையனுப்பி வந்தார்கள் தெச்சணத்தில் வைகுண்டர் வாழ்பதியில் கண்டுவை குண்டரையும் கரங்குவித் தேபணிந்து பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தா ரவருடனே கேட்டு வைகுண்டர் கிருபையுட னேதுரைப்பார் நாட்டுக் குடைய நாராயணர் பாலன் பிறந்து வைகுண்டம் பெரிய யுகமாளச் சிறந்து தவசு செய்யு முறைமையினால் துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கிப் பக்கக் களையறுத்துப் பகைஞரொன் றில்லாமல் ஒருசொல்லுக் குள்ளே யுகமழித் துகமெழுப்பி இருசொல்லுக் குள்ளே இராச்சியத்தை யாளுதற்குப் பிறந்துகொண் டிருக்கும் பெருமைக் கடையாளம் இறந்ததுகாண் பேய்கள் இப்போது தந்திரமும் போக நினைத்தேன் பெரியதெய்வ முந்தனைத்தான் வேகந் தனிலே விடுத்ததுகா ணென்றன்முன்னே நல்லது கைவாய்த்து நமக்குவிதி தானாச்சு பொல்லாத தெல்லாம் போக விதியாச்சு உந்தன் துயரம் ஒக்கஇப்போ தீரவென்றால் எந்தன் மொழிகேட்டு இடைவீரோ நீங்களெல்லாம் அப்போது மலையில் வாழு மலையரசர் இப்போது சுவாமி என்னநீர் சொல்வீரோ அதுக்கெல்லாம் நாங்கள் அல்லவென்று சொல்லோங்காண் பொதுக்கெனக் கேட்டுப் புகல்வார் வைகுண்டருமே மாந்திர தந்திர மாமுனிவன் சாஸ்திரமும் உபாந்திர வாகடமும் உபாயச் சமூலமதும் மாயக் கருவும் மாரண வித்தையதும் உபாயக் கருவும் உயர்ந்தகரு மோடிகளும் தம்பனவுச் சாடனமும் சல்லியம் பேதனமும் வம்புசெய்யு மாஞால மந்திர மட்டகர்மம் எட்டு மடக்கி இதுமுதலாய் மந்திரமும் கட்டுடனே யிப்போ கருசமூ லத்துடனே ஒக்கவைத்தோ மென்று ஓருடக்கா யுடக்கி மிக்க என்முன்னே மேதினியீ ரேழறிய ஆணையிட்டு வையும் அருமலையில் வாழரசா நாணமிட்டுப் போகுமுன்னே நம்முன்னே வையுமென்றார் உடனே மலையரசர் ஒக்க மனதலைந்து குடலே மருண்டு குறுக முழிமுழித்து வம்பறுக்க வந்த மாயக்கூத் தனெனவே தம்பெலங்க ளற்றுத் தலைசாய்ந் துடனயர்ந்து மாட்டோமென்றோ மானால் மலைமிருகங் கேளாது வீட்டைப் பிரித்தெறிந்த மிருகம் விலகாது குடியிருப்பு நமக்குக் குன்றுமே லங்குமில்லை படியீரே ழளந்த பரமனம்மை யிங்குவிடார் அய்யாவுரைத்த ஆணை வழிப்படியே மெய்யாக வைத்து வீடுமட்டும் போயிருப்போம் அல்லாதே போனால் அம்மலையி லிருப்புமில்லை எல்லா மறிந்து இனிப்போவ துமரிது என்று மலையரசர் எல்லோருஞ் சம்மதித்து அன்று வைப்போமென்று அடிபணிந்து தெண்டனிட்டு ஐயாவே யெங்களுட ஆதிநா ராயணரே கையார வைக்கக் கருவுகொண்டு வந்தோமில்லை ஏடுகொண்டு வந்தோ மில்லையே யெம்பரனே வீடுவரைப் போயெடுத்து விரைவாக வாறோம்நாம் என்றுரைக்க மந்திரத்தோர் எம்பெருமா ளேதுரைப்பார் நன்று அதுதூரம் நம்முடைய கைக்குள்ளொரு சூட்ச முண்டு பிள்ளாய் சொல்லக்கேள் நீங்களெல்லாம் மாச்சல் படவேண்டாம் மலையரசா நீங்களெல்லாம் எல்லா விதத்தொழிலும் இந்திரமா ஞாலமுதல் எல்லாம் வைத்தோமென்று ஆணையிட் டாற்போதும் நல்லதுவே யென்று நாடி மலையரசர் வல்ல விதத்தொழிலும் மந்திரமா ஞாலமுதல் எல்லா மடக்கி இப்போது வைத்தோமென்றார் அய்யாணை யிட்டு அவர்முன்னே வைத்தார்காண் மெய்யாணை யிட்டப் பொழுதே மலையரசர் எங்கள் பிழைப்பு இப்போதே போச்சுதையா தங்கடங்க ளொன்று தானிருக்கு தையாவே இதினால் பிழைப்பு என்றிருந்தோ மித்தனைநாள் விதியால் குறைந்ததுகாண் வித்தை பிழைப்பெல்லாம் மலையில் பயிரிட்டு வயிறு பிழைப்பதற்கு உலைவில்லா நொம்பலமும் உலாவுமிரு கச்சிறையும் இல்லாமலே விலக்கி இப்போ தரவேணும் நல்லாப் பயிர்விளைந்து நாங்கள் பிழைக்கவேணும் என்று இவர்கேட்க இதுதந்தோ மென்றுரைத்தார் அன்று அவரனுப்பி அவர்மலைக் கேகுகையில் வைத்த தொழிலை மலையரசா நீங்களெல்லாம் செயித்த தறியாமல் திருப்பியே செய்ததுண்டால் நரக மதுபிடித்து நாள்வழியே கொன்னுகொன்னு துரோக மடைந்து தீநரகில் மாள்வீர்கள் என்று சபித்தார் எம்பெருமா ளானவரும் அன்று அவர்கேட்டு அப்படியே வந்ததென்றால் சொன்ன நரகில் செத்திறந்து போவோமென அன்னப் பெருமாள்முன் ஆணையிட் டுப்போனார் போனா ருலகில் பிச்சைவேண் டிக்குடித்து வானோ ரறிய மந்திரமா ஞாலமற்று மந்திர வித்ø மாமுனிவன் சாஸ்திரமும் தந்திரமும் போச்சுதென்று சகலோருங் கொண்டாடி வைகுண்ட சுவாமி வாய்த்த கணக்கதிலே மெய்கொண்ட வானோர் மிகஅறியத் தானெழுதி மேலோக மான வைகுண்ட ராச்சியமும் பூலோக முமறியப் பெரியோ னெழுதினரே மாந்திரங் கழிவு சூன்யம் மாரணக் கருவு கோளும் உபாந்திரக் கேடு தீதோ(டு) ஊறியப் பொய்பொல் லாங்கு ஏந்திய நினைவு பாசம் இதுமுதல் வினைக ளெல்லாம் சாந்தியி லெரித்து நீற்றித் தர்மத்தை வளர்க்க லுற்றார் நல்லநா ராயணரும் நாமமணி வைகுண்டராய்ச் செல்லத் திருவுளமாய்ச் சீமைக் குறுதியுமாய் மனிதவதா ரமெடுத்து வைகுண்ட வாசவனும் பனிதவழும் பத்தினியாள் பாலருட வங்கிசத்தில் உண்டாகி வாழ்ந்து உலக மறிவதற்கு குண்டணிப்பேய் பொய்யும் குறளிக்கரு வைத்தியமும் ஆகா தெனஎரித்து அப்பிறப் புமறுத்து வாகாகத் தர்மபதி வாழுங்கோ மானிடரே என்றுசொல்லித் தர்மம் எம்பெரு மாள்நினைத்து மன்றுபதி னாலறிய வாய்த்ததர்மங் கூறினரே

வைகுண்டர் தர்மம் கூறல்

இன்றுமுத லெல்லோரும் இகபரா தஞ்சமென்று ஒன்றுபோ லெல்லோரும் ஒருபுத்தி யாயிருங்கோ 520 காணிக்கை யிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ வீணுக்குத் தேடுமுதல் விறுதாவில் போடாதுங்கோ வைகுண்டருக் கேபதறி வாழுவ தல்லாமல் பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தியயர்ந் தஞ்சாதுங்கோ அவனவன் தேடுமுதல் அவனவன்வைத் தாண்டிடுங்கோ எவனெவனுக் கும்பதறி இனிமலைய வேண்டாமே என்று வைகுண்டர் இராச்சியத்தி லுள்ளோர்க்குக் கன்றுக்குமா தாஇரங்கிக் கற்பித்தது போலுரைத்தார் எல்லோருங் கேட்டு எங்கள்வினை தீர்ந்துதென்று நல்லோர்கள் முன்னே நவின்றிருந்த சொற்படியே வருவார் வைகுண்டர் வந்தா லிருப்பவர்க்குத் தருவார் கெதிகள் சாகாத வாழ்வுகளும் என்றுசொல்லி முன்னோர் எங்கள்கா லமதிலே நன்று திருமொழியை நாங்களுமே தான்கேட்க எங்கள் கலிதீர்ந்து எம்பரனே யென்றுசொல்லி சங்கை யுடனேபல சாதியெல் லாமறிந்தார் நருளறிய தர்மமிதை நாட்டியே யென்பெருமாள் துரித முடனே தொல்புவியில் வாழுகின்ற பட்சி பறவைகட்கும் பலசீவ செந்துகட்கும் அச்சு அரிமுதற்கும் ஆனமிரு கங்களுக்கும் ஊர்வனங் களானதுக்கும் உதித்தபுற் பூண்டுகட்கும் கார்சேட னாறுகட்கும் கரடுகல் லானதுக்கும் உத்தரவாய்த் தர்மம் உரைக்கிறா ரன்போரே மிருகமொடு மிருகம் மிகமகிழ்ந்து வாழ்ந்திருங்கோ உங்களுக்குப் புற்பூண்டு உண்டு மதைப்புசித்துச் சங்கையுட னோர்தலத்தில் தண்ணீர் குடித்திருங்கோ வாந்திருங்கோ நீங்கள் வைகுண்ட ருண்டெனவே தாழ்ந்திருங்கோ வென்று தங்கள் கிளைபோலே மிருக இனத்துக்கு இதுவுரைத்துப் பட்சிகட்கு உறுதி யுடனே உரைத்தார்வை குண்டருமே பட்சியெல்லா இனமும் பண்பா யொருஇனம்போல் கட்சி யுடனே களிகூர்ந்து வாழ்ந்திருங்கோ சிறிது பெரிது என்றுமிகச் சீறாமல் உறுதி பெரிது உடையோனே தஞ்சமென்று கூடிக் குலாவி குணமாய் மகிழ்ந்திருங்கோ நாடி யுரைத்தார் நல்லபட்சி தங்களுக்கு புல்பூ டானதுக்கும் பொறுதி மிகவுரைத்துக் கல்வாரி தனக்கும் கனத்தசே டன்தனக்கும் தங்கள் தங்களுக்கு தாழ்மை மிகவுரைத்து மங்கள மாக மனமகிழ்ந்து வைந்தருமே நாட்டுக்கு நம்முடைய நல்லதர்மத் தின்படியே கூட்டுக்கு ஏற்றக் குருவுபதே சம்போலே எய்யாமல் நாதன் எல்லோருந் தானறிய செய்தர் மஞாயச் செய்திகே ளும்நடுவே அன்னீதத் தாலே லோகம் அவனி யீரேழும் வாடி குன்னியே கலியில் மூழ்கிக் குறுகியே யலைவர் கண்டு கன்னிகள் மதலை யானக் கற்பகக் குலங்கள் தன்னில் மன்னிய மனுப்போல் தோன்றி மன்னுகத் துதித்தார் தானே உதித்தாயிரத் தெட்டாமாண்டில் உவரிசெந் தூரில்பெற்றுக் குதித்தாண் டருள்மாசியில் தெச்சணா குருநாட்டினில் பதித்தாமரை யூரினில் பள்ளிதான் கொண்டநாள் விதித்தாமிதைத் கருத்தாய் அருளுரைத்தா ரறவுரையே பொய்யில்லை பசாசு இல்லை பில்லியின் வினைக ளில்லை நொய்யில்லை நோவு மில்லை நொம்பலத் துன்ப மில்லை தொய்யில்லை யிறைக ளில்லை சுருட்டுமா ஞால மில்லை மையில்லை உலகத் தோரே வாழுமோர் நினைவா யென்றார் இத்தனை யெல்லா மில்லை என்றரி நாதன் சொல்லப் புத்தியி லறிந்து மண்ணோர் புதுமையென் றன்பாய் கண்டு580 முத்தியி லிவரைக் கண்டு முயன்றவர் பேறு பெற்றார் பத்தியில் லாதா ரெல்லாம் பாழெனச் சொல்லி நின்றார் இப்படி மனுட ரெல்லாம் இவர்மொழி தர்மங் கண்டு ஒப்புடன் கூடி வந்து ஒருவனே தஞ்ச மென்று செப்பிடத் தொலையா தையா சீர்பதம் பதமே யென்று நற்புடன் மனுட ரெல்லாம் நாடியே மகிழ்ந் திருந்தார்

கலியரசன் வைகுண்டரைப் பிடிக்க வருதல்

நாடியே யுலகி லுள்ள நருடகளோர் தலத்தில் வந்து கூடியே நிற்கும் போது குறோணிதன் கொடியால் வந்த சாடிக ளதினால் நீசன் சாகிற தறியா மீறி பாடிய வைந்தர் தன்னைப் படையேவிப் பிடிக்க வந்தான் வந்தவன் சுசீந்திரந் தன்னில் வளைந்து கூடார மிட்டு மந்திரி மாரை நோக்கி வகையெனப் புகல்வா னீசன் இந்தமா நிலத்தி லென்னோ(டு) எதிரிதா னாரோ சொல்வீர் விந்தையா யவரைச் சென்று விருதிட்டு வருக என்றான் நாடுங் குறோணி நாதவழி யாய்பிறந்து மூட மடைந்த முழுநீச மாபாவி இருந்த நகர்விட்டு எழுந்திருந்து தானேகி வருந்தப் படையோடு வந்தான் சுசீந்திரத்தில் ஆனைத் திரள்கோடி அதிகப் பரிகோடி சேனைத்திரள் கோடி சென்றார் சுசீந்திரத்தில் சேவுகக் காரர் திலுக்கர் துலுக்கருடன் ராவுத்தர் கோடி ராட்சதர்கள் முக்கோடி சரடன் கரடன் சவுனி கெவுனியுடன் முரட னுடனே மூர்க்கர் முழுமூடர் படைக ளலங்கரித்துப் பார வெடிதீர்த்துக் குடைக ளலங்கரித்துக் கொடிகள் மிகப்பிடித்து வாள்கா ரர்கோடி வல்லயக்கா ரர்கோடி தோள்கா ரர்கோடி சுரண்டிக்கா ரர்கோடி அம்புக்கா ரர்கோடி ஆயுதக்கா ரர்கோடி வம்புக்கா ரர்கோடி வந்தா ரவன்கூட வெடிக்கா ரர்கோடி வேல்கா ரர்கோடி அடிக்கா ரர்கோடி வந்தா ரவன்கோடி இத்தனை யார பாரத் துடன்நீசன் தத்தியுடன் நடந்து தமுக்கு மிகஅடித்து வந்து கூடாரம் இட்டான் சுசீந்திரத்தில் தந்துதந் தாகத் தங்கள் மிகக்கூடி கொந்துகொந் தாகக் கொடும்படைகள் கூடிவர மந்திரி மாரோடு வந்திருந் தேதுசொல்வான் கேளாய்நீ மந்திரியே கிருபையுட னோர்வசனம் வாளாற் பெரிய மன்னர்களந் நாள்முதலாய் நமக்கா யிருந்ததுகாண் நம்முடைய நாளையிலே துடுக்கான வெள்ளை நசுறாணி யவன்தனக்காய் ஆச்சுதே நாடு அவனுக்கே யாகிடினும் பேச்சுநா மல்லால் பின்னொருவர் காணாதே ஆனதாற் பூமியிலே ஆரொருவ ரானாலும் மானமற வேநமக்கு மாற்றானாய்க் கண்டதுண்டால் ஆய்ந்து விசாரித்து அறிவித்துச் சொல்லுமென்றான் தேர்ந்துநின்று மந்திரியும் தீநீசக் குலமதினால் பொல்லாத சூத்திரப் பிசாசுக் குலமதினால் கல்லாதான் கூடிக் கண்டுதேர்ந் தேதுரைப்பான் வேறொரு வரையும் மேதினியில் நாம்காணோம் வாறோர் ஞாயமாற்றம் வையகத்தில் காணுதிப்போ நமக்கு இறையிறுத்து நாடூழியங் கள்செய்யும் குமுக்கா யினம்பெருத்த கூண்டசா ணாரினத்தில் வைகுண்ட மாக வந்து பிறந்தோமென்று மெய்கொண்ட பூமியெல்லாம் வேறொருவ ராளாமல் நான்தான் முடிசூடி நாடுகெட்டி ஆள்வேனெனத் தான்தா னுரைபகர்ந்து சாதிபல தும்வருத்தி ஒருதலத்தி லூட்டுவித்தான் உற்றநீ ரானதையும் அருகிருக்குஞ் சாணார்க்கு அதிகவிதி தோணுதுகாண் ஆகாத்தப் பொல்லாரை அழித்துப்போடு வேனென்றும் சாகா வரங்கள் சாணாருக் கீவேனென்றும் சொல்லி யிருக்கிறான் சுவாமிவை குண்டமென்று தொல்லுலகி லிந்தச் சொற்கேட்டு ராசாவே என்றவன் மந்திரிகள் இத்தனையுஞ் சொன்னவுடன் ஒன்றுமுரை யாடாது உட்கார்ந் தயர்ந்துரைப்பான் ஏதுகாண் மாயம் இதுஞாயம் வந்ததென்ன வாதுக் கொருவர் வருவாரைக் காணோமென்று நினைத்ததற்கோ இந்த நேருசொல் வந்ததுகாண் மனதயர்ந்து பார்த்து மந்திரியைத் தானோக்கி ஏதுகாண் மந்திரியே எல்லாரிலு மெளியச் சாதியிலே வுள்ளவன்தான் சாற்றுவனோ இந்தமொழி ஏதோவொரு சூட்சம் இருக்குதுகா ணிம்மொழியில் ஆராய்ந்து பார்ப்போம் எல்லோருங் கூடிருந்து பாராய்நீ மந்திரியே பாரிலொரு சாஸ்திரியை என்றந்தப் பேர்கள் எல்லோரும் சம்மதித்து அன்றந்த சாஸ்திரியை அவன்வருத்திக் கேட்கலுற்றான் சாஸ்திரியே யிந்தத் தர்மராட்சி யந்தனிலே வேற்றொருவ ரென்றனக்கு வீறிட்ட துண்டோகாண் எதிரியுண்டோ பாரு என்னுடையச் சோதிரியே கருதி மிகப்பார்த்து கடியச்சோ திரிபுகல்வான் தர்ம முடிவேந்தே சாற்றக்கே ளுமரசே கர்மக் கலிதோசம் கமண்டலங்க ளேழ்வரையும் சுற்றிப் பரந்ததுகாண் தோசத்தால் பூமியெல்லாம் கர்த்தனரி கிருஷ்ணர் கடியகோ பம்வெகுண்டு பூமியிலே வந்து பிறந்திந்தத் தோசமதை சாமிதர்மத் தாலே தோச மதையழித்து நற்பூ மியாக்கி நாடெங்கு மோர்குடைக்குள் சொல்லொன்றுக் குள்ளான சுவாமிமகா விட்டிணுவும் மனுவாய்ப் பிறந்து வைகுண்ட மென்றுசொல்லித் தனுவை யடக்கித் தவசு மிகஇருந்து நல்லோரை யெல்லாம் நாடி மிகஎடுத்து வல்லோராய்ச் சாகாமல் வரங்கள் மிகக்கொடுத்து ஆள வருவார் அவர்வருகும் நாளிதுதான் என்றுமிகச் சோதிரியும் இந்தக் குறியுரைக்க நன்று நன்றென்று இராசன் மிகமகிழ்ந்து சொல்லக்கேள் சோதிரியே சொன்னதெல் லாஞ்சரிதான் எல்லையுண்டோ அவர் வந்திருக்கு மினங்களென்ன சொல்லி விரிநீ சுத்தமுள்ளச் சோதிரியே நல்லியல்பு பெற்ற நற்குறியோ னுரைப்பான் இன்னவகைச் சாதியிலே இவர்வரு வாரெனவே சொன்னக் குறியே சூதாய்த் தியங்குதுகாண் தருமங்கொண்டு சுவாமி தரணியில் வந்ததினால் பொறுமைக்குல மாயிருக்கும் பெரியவழி யாயிருக்கும் நம்மாலே சொல்லி நவிலக்கூ டாதிதுவே சும்மாஎனை நீங்கள் சோலிபண்ண வேண்டாமே என்றந்தச் சோதிரியும் இணங்கி வணங்கிநின்றான் மன்று தனையாளும் மன்னன்மறுத் தேபுகல்வான் அப்படித்தா னானால் ஆதிமகா விட்டிணுவும் இப்படியே வந்து இவர்பிறக்க வேணுமென்றால் போற்றி நம்பூரி பிராமணசூத் திரக்குலத்தில் ஏற்றிப் பிறக்க இயல்வில்லா மலிந்தப் பிறர்தீண்டாச் சாணார் குலத்தி லவதரித்துப் பிறக்க வருவாரோ பெரியநா ராயணரும் சும்மாயிருந் தச்சாணான் சுவாமி சமைந்ததெல்லாம் பம்மாத்தாய்க் காணுதுகாண் பிராக்கிரம மந்திரியே இப்போ தொருநொடியில் இந்தச்சா ணான்தனையும் மெய்ப்பாகக் கொண்டு விடவேணு மென்றன்முன்னே என்றுமந் திரிமாரை ஏவுந் தறுவாயில் அன்று அருகிருந்த ஆவிடையர் தம்வழியில் ஒருவ னெழுந்து உற்றரசனை நோக்கிக் கருதனம்போல் புத்தி கற்பித்தா னம்மானை

கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம்

கேட்டீரோ முன்னா ளுள்ளக் கெறுவித வளங்க ளெல்லாம் தாட்டிமை யாகச் சொல்வேன் தமியனும் வணங்கி நின்று பூட்டியே மனதில் வைத்துப் புத்தியென் றெண்ணி நீரும் நாட்டினில் நன்மை செய்து நலமுட னரசு செய்யும் மாயனோ உபாயத் தாலே மனுவது போலே யாகி ஆயனக் குலமுந் தோன்றி அவனியி லிருப்பன் கண்டீர் மாயத்தை யறியா நீரும் மாளவே போக வேண்டாம் ஞாயமா யுரைத்தே னையா நம்முட அரசுக் கேகும் எளிமையாங் குலங்க ளென்று எண்ணுற மனுவே யல்ல பழியென ஆதி நாதன் பார்க்கவே மாட்டா ரையா அழிவது யுகத்துக் காச்சு ஆனதால் வருவார் திட்டம் வழியிது இல்லை யையா மாறியே போவோம் வாரும் தசரதன் மகவாய் மாயோன் சீமையில் வந்து தோன்றி புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோ வசையுடன் மனுத்தா னென்று வாதிட்ட அரக்கன் தன்னை விசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டி லீரோ தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி வைவசு தேவன் பெற்ற மனுவென வளங்கள் நாட்டி 720 நெய்யிடை வழியிற் சேர்ந்து நெருட்டிமா ஞாலஞ் செய்து செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று மைக்குழல் சிலர்கள் தம்மை மணங்களு மிகவே செய்து மெய்ப்புடன் கிளைக ளோடு மேவியே குழாங்கள் செய்து செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ இப்படி மாயன் தானும் இருமூன்று யுகங்கள் தன்னில் ஒப்புடன் மனுப்போல் தோன்றி உவமைகள் பலதுஞ் செய்து அப்படி யுகங்கள் தன்னால் அழிந்திடா வரங்கள் பெற்ற செப்பிடக் கூடா மாயன் செய்தியுங் கேட்டி லீரோ சாணெனக் குலத்தில் மாயன் சார்வரோஎன் றெண்ண வேண்டாம் பாணனாய்த் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார் தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார் ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டி லீரோ குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார் மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார் விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார் அசுவெனக் குலத்தில் வந்தார் அவருரு கேட்டி லீரோ எவ்விடந் தானாய் மேவி இருப்பவர்க் கெந்தச் சாதி அவ்விட மாகா தென்று அவர்தள்ள மாட்டா ரையா 740 செவ்விட மாபோன் சூட்சம் செப்பிடத் தொலையா தையா இவ்விடம் விட்டு நாமள் ஏகுவோம் நம்மூ ரென்றான் என்றவன் சொன்ன போ இராசனு மிகவே கேட்டுப் பொன்றுற விதங்கள் சற்றும் புத்தியி லறியா வண்ணம் மன்றலத் தோர்க்கு மேற்கா வார்த்தையை யுரைத்தா யென்று கொன்றவன் தன்னைப் போடும் கோபமா யுரைத்தா னீசன் வேதமாங் கலைகள் தேர்ந்த மேற்குல மதிலே மாயன் சீதமாய்ப் பிறவா வண்ணம் சிறுகுலம் புக்கு வானோ ஆதர வில்லா வார்த்தை ஆர்க்குமே யேற்கா போடா பாதகா எனக்குப் புத்திப் பகரவே வந்தாய் மோடா நித்தமும் முன்னால் லட்சம் நேடிய பொன்க ளிட்டுச் சத்திரச் சாலை தோறும் தர்மமு மளித்து நாமள் சித்திரத் திருநாள் நித்தம் செய்கிற குலத்தைத் தள்ளி நித்தியம் வேலை செய்யும் இழிகுலம் புக்கு வானோ பிரமனை யொப்பாஞ் சாதிப் பிராமணக் குலத்தைத் தள்ளிச் சிராமனு மற்றோர் தன்னில் சேர்வது திடனோ இல்லை வராகமா யுதித்த மாயன் மனுவெனப் பிறக்க மாட்டான் இதாரடா இந்த வார்த்தை என்முன்னே சொல்லி நின்றாய் காரண மான மாயன் கலியுகம் வருகென் றெண்ணி நாரணன் பயந்து வோடி நல்மலை யேறி மானாய் வாரண நாத னம்பால் வல்வேட னெய்து செத்தான் தாரணி வாறே னென்று தவலோகஞ் சேர்ந்தான் மாயன் அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரான் இப்படி யிவன்தான் சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம் கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டு இப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி யென்றான் மழுப்பில்லைக் கேளுங் கேளும் மாண்டுநான் போனா லென்ன வழுப்பில்லை யுனக்குத் தூண்டல் வளருதே யவரி டத்தில் கழுத்திலே யுனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய் முழுத்தில்லை யானா லென்சொல் மேல்வீசை யரிந்து தாறேன் ஆனையும் படையு முன்றன் அரண்மனைக் கோவில் காலும் சேனையுங் குடையும் வியாழச் செல்வமுஞ் சிறப்போ டெல்லாம் ஏனமு மிகவே தோற்று எரிந்துநீ கரிந்து சாவாய் நானிதைச் சொல்ல வில்லை நாரண ருரைத்தா ரென்றான் என்றிவன் சொன்ன போது ஏங்கியே வுளறிப் பின்னும் பொன்னுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம் கொண்டிவன் தன்னைப் போடுங் கொடுவிலங் கதிலே சிங்கத் தண்டிகை யெடுத்து வாரும் சாணெனச் சாமி பார்க்க பார்க்கவே போவோ மென்று பார்முடி வேந்தன் சொல்லத் தார்க்கெனப் பாவி நீசச் சறடனு மேதோ சொல்வான் ஆர்க்கிது ஏற்குஞ் சாணான் அவனிடம் போவ தென்ன கார்க்கதி கௌட சாஸ்திரி கடியனை யனுப்பு மென்றான் அனுப்புமென் றுரைத்த போது அரசனு மேதோ சொல்வான் துனுப்புடன் சாணான் தன்னைச் சூழ்ந்துநூற் கயிற்றாற் கட்டிக் கனிப்புட னமது முன்னே கட்டுடன் கொண்டு வாரும் வனிப்புடன் போவா யென்று வரிசையுங் கொடுத்தா னீசன் கொடுத்திடும் வரிசை தன்னைக் குவித்தவன் வேண்டிக் கொண்டு கடுத்தமாய்க் கௌவுட சாஸ்திரி கடும்படைக் கோல மிட்டுத் தடுத்திடும் வீரர் தம்மைத் தானிங்கே வாரு மென்று நடுத்தர மதிலே நின்று நல்லணி வகுக்க லுற்றான் பரிநடைக் காரர் தம்மைப் பக்கமு முன்னே விட்டான் கரிநடைக் காரர் தம்மைக் காவலாய் முன்னே விட்டான் சரிபரி யேறிக் கௌவுட சாஸ்திரி முன்னே நின்று வரிபடைக் கவசம் போர்த்து வந்தனன் படைக்கு முன்னே அம்பெடுத் தெய்வே னென்று அவனொரு அணிகள் சாட கம்பெடுத் தடிப்பே னென்று காலசன் மிகவே சாட கொம்பெடுத் துதைப்பே னென்று குஞ்சரத் தலைவ ரோட பும்படக் கொல்வே னென்று போயினன் கௌவுடன் தானே இந்தநே ரந்தனிலே ஏகியந்தச் சாணானை குந்தமது கொண்டிடித்துக் குண்டிக் கயிறிறுக்கி இங்கேகொடு வாறேன் என்று கௌடனுமே துங்க விருதுபெற்றுச் சூழப் படைவகுத்து ஆயுத மம்பு அணியீட்டி தான்பிடித்து வாயுதக் கணைகள் வகைவகை யாயெடுத்துப் பரியை விதானமிட்டுப் பாய்ந்துக் கௌடனுமே கரியைக்சூ ழநிறுத்தி கனபடைகள் பின்னிறுத்தி நீசன் விடைவேண்டி நீணில முமறிய பாசக் கயிறுடனே பாவியந் தக்கௌடன் வாற விதமதையும் வைந்தப் பொருளறிந்து காரணிக்க மொன்று கருத்தில் மிகநினைத்து இப்போ பதறி எழுந்திருந்து வோடவென்று அப்போது மாயன் அறிந்தேகும் வேளையிலே நன்மையாய்ச் சொல்லி நாடுவது மெச்சாதி தின்மையாய்ச் சொல்லிச் சிரிப்பதுவு மெச்சாதி என்றுநாம் பார்ப்போம் என்று மனதிலுற்றுப் பண்டுதாம் பிறந்த பாற்கட லைநோக்கி

சுவாமி பாற்கடல் நோக்கி ஒடுதல்

ஓடத் துணிந்தார் ஒருவேச மும்போட்டு ஆடத் துணிந்தார் ஆகாசத் தேதேவர் ஆடையணியாமல் அரைக்கயிறு மில்லாமல் நாடைக் கெணியாமல் நடந்தார் கடல்நோக்கி நல்ல மனுச்சாதி நாரா யணாவெனவே செல்ல மக்களெல்லாம் சிவசிவா என்றுசொல்லிக் கூடத் தொடர்ந்துக் குவித்துப் பதம்போற்றித் தேடரிய நல்லோர் சேவித்துப் பின்வரவே ஆகாத நீச அநியாயச் சாதியெல்லாம் வாயாரப் பேசி வம்புரைத் தேநகைத்தார் பதறி யிவன்போறான் படைவருகு தென்றுசொல்லிக் கதறிமிக ஓடுகிறான் கள்ளச்சுவா மியிவனும் சாமியென்றால் நருட்குத் தோற்றுமிக ஓடுவானோ நாமிவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே பேயனுட பேச்சைப் பிரமாண மாய்க்கேட்டு ஞாயமது கெட்டோம் நாமெல்லா மென்றுசொல்லி நீசக் குலத்தோர் நெடுந்தூரம் வைத்தார்காண் தேசமதை யாளும் செல்லவைந்தார் சூட்சமதை அறியாமல் நீசரெல்லாம் அப்போநன்றி யுமறந்து வெறிகொண்ட பேயனென மேதினியில் பேசினர்காண் நல்ல மனுவோர் நாரணா தஞ்சமெனச் செல்ல மனுவோர் திருப்பாத முந்தொழுது கூடி நடந்தார் குருவே குருவேயென நாடி நடந்தார் நல்லபதியேற் வரெனக் 840 கண்டுகொள்வோ மென்று காட்சை யுடன்நடந்தார் பண்டு அருள்பெற்றோர் பச்சைமா லுடன்நடந்தார் அப்போ வைகுண்ட ராசர் மனமகிழ்ந்து எப்போதும் வாழ்வார் எனக்கான மக்களெல்லாம் வம்புரைத்த நீச வழிமுழுதுஞ் செத்திறந்து முன்பு விதியால் முழுநரக செத்திறந்து என்று சபித்து எம்பெருமாள் தானடந்து பண்டு பிறந்த பால்கடலுள் சென்றனரே சென்றனர் தேவ ரோடு செகல்கரை தனிலே நின்று நன்றினந் தன்னைப் பார்த்து நவிலுவார் வைந்த ராசர் பண்டெனைப் பெற்ற தாதா பாற்கட லுள்ளே யென்னைச் சென்றிட அழைக்கிறார் நீங்கள் செகல்கரை தனிலே நில்லும் நில்லுமென் றினத்தை யெல்லாம் நிறுத்தியே கடலி னுள்ளே பல்லுயிர் யாவும் ஆளும் பரமனு மங்கே செல்ல வெல்லமர் தேவ ரெல்லாம் மேகனிற் குடைகள் போட வல்லவன் தகப்பன் பாதம் வணங்கியே வைந்தர் சொல்வார் அப்பனே வொப்பில் லாதா அலைகடல் துயின்ற மாயா செப்பவுந் தொலையா நாமம் சிமையில் விளங்கப் பெற்றாய் தப்பர வில்லா என்றன் தகப்பனே கேண்மோ வையா எப்போநான் விளங்கி யுன்றன் இரத்தின சிம்மாசன மேறுவேன் 860 ஆண்டு ரண்டாச்சே மாதம் அயிரு பதினாலாச்சே வேண்டுத லின்னங் காணேன் வெம்புறேன் கலியில் மூழ்கி கூண்டுநீர் முன்னே சொல்லிக் குருவுப தேசம் வைத்த ஆண்டின்னம் வருகி லையோ அப்பனே மெய்யுள் ளோனே

முட்டப்பதி விஞ்சை 1

இப்படி மகன்தான் சொல்ல இருகையால் மகனை யாவி முப்படித் தவத்தால் வந்த முதலெனத் தழுவிக் கூர்ந்து எப்படி யென்றோ நீயும் ஏங்கவே வேண்டா மப்பா ஒப்பில் லாச்சிங் காசனம் உனக்கென வளரு தப்பா ஏங்கியே பதற வேண்டாம் எனது மகனே நீகேளு மூங்கிக் கலியை விட்டகன்று முழித்துக் குதித்து வுதித்தஅன்று தாங்கி யுனைநான் வந்தெடுத்துத் தனது தாயை யிடம்நிறத்திப் பாங்கி லுதித்த மகனுனக்குப் பட்டந் தரிப்பேன் பதறாதே வண்ணம் பதியி னலங்காரம் வகைகளின்ன தென்று சொல்லி எண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசு கண்ணைப் பறித்து நீசனுட கருவை யறுத்துக் கலியழித்து எண்ணும் வளர்ந்து வாழவைப்பேன் என்னா ணையிது நீசமகனே மண்ணி லுள்ளோர் தாமறிய மனுவோர் சீவ செந்தறிய கண்ணே யிவர்கள் கண்காணக் கலியிற் காட்சி மிகநடத்தி புண்ணிற் கதிரு பட்டாற்போல் பொல்லா நீசன் கண்டுழைந்து எண்ணியறியா நீசனெல்லாம் ஏங்கி மாள வைப்பேனே 880 மகனே நீயும் தவமிருக்கும் வாய்த்தஇடத் திலிப்போ சென்றால் உகமே யறியக் கலிநீசன் ஓடி வந்து உனைப்பிடித்துச் செகமே ழறிய உன்கையைத் திருக்கிப் பினனே கட்டிறுக்கிப் பகையே செய்து மிகஅடித்துப் பார விலங்கில் வைப்பானே வைப்பான் மூன்றே முக்கால்மாதம் வாய்த்த விலங்கில் நீயிருந்து செய்ப்பாய் கலியை யறுப்பதற்குத் தெய்தி இதுவே கைவாச்சு போய்ப்பா ரென்பான் பின்னுமவன் பெரிய குற்ற மிகவேற்று மெய்ப்பா யவனு முரைத்ததுபோல் மெள்ள வுரைத்து இருந்திடுநீ மனுவை யடித்த துபோலே வசைகள் சொல்லி மிகஅடிப்பான் தனுவை யடக்கிக் கொண்டிருநீ சற்றும் புதுமை காட்டாமல் இனிமே லறிவா யென்றுசொல்லி எண்ணி மனதி லெனைநினைந்து கனிபோல் மகிழ்ந்து நீயிருநீ கண்ணே யெனது கற்பகமே அன்பா யுன்னை யடுத்திருந்த ஆதிச் சாதி யவ்வினர்க்குத் தன்பா லருந்துஞ் சாதிகட்குத் தவத்துக் குறுதி தான்கொடுத்து என்பாற் கடலின் கரைதனிலே ஏழு மணிக்கு விடைகொடுத்துப் பின்பா லவரை யருகழைத்துப் புசத்தி லடுக்க இருத்திடுநீ கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம் கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும் தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும் பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே காட்சிச் சிறப்புங் கலியாணம் கவரி வீசிக் கொலுவாரம் சாட்சிக் கணக்கு முன்வருத்திச் சந்திர வர்ணக் கொடிநிறுத்தி வாச்சி யுனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்க காட்சி யுனது கண்முன்னே காணு மகனே கலங்காதே பல்லக் கேறி தெருவீதி பகலத் தேரு நீநடத்திச் செல்லப் பதிகள் மிகமுகித்துத் திருநாள் கண்டு மகிழ்ந்திருநீ வல்லக் கொடிகள் மரம்நிறுத்தி வருவாய் நித்தம் வாகனத்தில் பொல்லாக் கலியன் கண்டுழைந்து பொடிவா னித்த மடிவானே இப்படிச் சிறப்பு எல்லாம் உனக்கிது மகனே மேலும் எப்படி மலங்கி யென்னோ(டு) இதுவுரைத் தேது பிள்ளாய் சொற்படி யெல்லா மந்தத் தேதியில் தோன்றுங் கண்டாய் அப்போநீ யறிந்து கொள்வாய் அப்பனும் நீதாய னானாய் நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம் எல்லை தனில்வந்து இகனை நடத்துமப்பா என்னென்ன பவிசு இன்னம் நடக்குமப்பா உன்னையின்னங் காணார் உலகி லொருமணிக்குக் கெடுத்தானே யென்று கெடுவார் வெகுகோடி நடுத்தானம் நம்முடைய நம்மக்கள் குன்றாது புழுத்துச் சொரிவாய்ப் பூமி தனில்நீயும் கழுத்துவரை முன்னூன்றிக் கண்ணுந் தெரியாமல் 920 ஆவி யலுகாமல் ஆடையொன் றில்லாமல் பாவிப் பயல்கள் பரிகாசஞ் செய்யவென்று கிடப்பாய்த் தெருவில் கிழவன்வேச மெடுத்துத் துடைப்பார்கள் நம்மினத்தோர் தூக்குவார் நம்மினத்தோர் சாணாச் சுவாமி சாவாறு ஆகுதென்று வீணாக நீசரெல்லாம் வெகுளியாய்த் தானகைப்பார் பெண்சிலரைக் கட்டிப் பெரும்புவியோ ரறிய மண்சீமை யோரறிய மங்கையொடு சண்டையிட்டுத் தெருவிற் கரையேறித் தேவியரைத் தான்கூட்டி கருவி லுருத்திரண்டு கண்ணாளர் தாம்பிறந்து சீமை நருளறியத் தேசந் தனிலாண்டு தாண்மை பொறுதியுடன் சாணார் விருந்தழைத்து மனுக்கள் முறைபோல் வாழ்வாய்ப் புவிமீதில் தனுக்க ளுனக்குள்ளே சர்வது மேயடங்கும் எல்லா மடக்கி யானுன் னிடமிருந்து நல்லானே யுனக்கு நாட்டில் சிறப்புமெத்தக் காணு மகனே கலிநீசன் கண்ணுமுன்னே ஆணும் பெண்ணோடும் அன்புற்றி ருக்கையிலே நல்ல திருவாளி நற்பட்டு வாகனத்தில் செல்லத் திருவோடும் செம்பவள மாலையுடன் வாகனத் தேரும் வருமா ஞாலத்திருந்து கோகனக மாலே குணமாக வேகூடிக் காணுவோர் காண்பார் காணாதார் வீணாவார் தாணுவே நீயொருவன் தானாக ஆண்டிருப்பாய் இன்னம் பவிசு எண்ணத் தொலைந்திடுமோ வன்ன மகனே வாறதெல்லாங் கண்டிருநீ பதறாதே போயிருநீ பாரத் தவசியிலே குதறாதே போயிருநீ கூண்டத் தவசியிலே வாறநீ சன்தனக்கு மலங்காதே நின்றுகொள்ளு போறநீ சன்தனக்கு பொறுமையாய் நின்றுகொள்ளு என்று மகன்தனையும் எழுந்திருந்து போநீயென மன்று தனையளந்தோர் மகனைக் கடல்கடத்திக் கரையிலே கொண்டு கண்ண ருடனுறைந்தார் பிதாவை யனுப்பிப் பெரியவை குண்டப்பொருள் விதானித்து உச்சரித்து வேதவுல் லாசமிட்டுத் தெச்சணா பூமி சென்று தவத்ததிலே உச்சரித்து நாதன் உகந்து நடக்கலுற்றார் நடந்தாரே தெச்சணத்தில் நல்ல முனியுடனே படந்தார மாயன் பண்டு தவமிருந்த தலத்திலே வந்து சுவாமி தவமிருந்தார்

அகிலம் பதிமூன்று

divider

கலி சோதனை

இருந்தனர் விஞ்சை பெற்று இருபுற முனிவர் சூழப் பொருந்திடும் கமல மாது பூரண மதுவாய் நிற்கக் கரிந்திடும் நீசப் பாவி கயிறுவாள் வெடிகள் சூலம் புரிந்தவன் கோட்டி செய்து பிடிக்கவே வந்தா னங்கே வருமுன்னே யருகில் நின்ற மக்களை வைந்த ராசர் கருதின மாக நோக்கிக் கடக்கவே நில்லும் நீங்கள் பொருதிட நீசன் வாறான் பொறுத்துநாம் வந்த போது அருகிலே உங்கள் தம்மை அழைத்துநாம் கொள்வோ மென்றார் முப்படியே யுள்ள முறைநூற் படியாலே இப்போது நீசன் இங்கோடி வாறான்காண் மெய்ப்பான மக்களெல்லாம் விலகிநின்று வந்திடுங்கோ செய்கிறதைப் பார்த்துத் திரும்பியிங்கே வந்தவுடன் கையருகி லுங்களையும் கட்டாய் வரவழைப்போம் என்று மக்களுக்கு இயம்ப அவர்விலக முன்குறோணி விந்திலுள்ள மூடக் கௌடனவன் கூட்டப் படையோடு கொக்கரித் தேதுடிப்பாய்ச் சாட்டை வெறிபோலே சாடிவந் தான்கௌடன் சூழப் படையைச் சூதான மாய்நிறுத்தி வேழம் பலரேவி வெடியா யுதத்துடனே வந்து வளைந்தான் வைகுண்டர் வாழ்பதியில் சிந்துக் குயிரான ஸ்ரீபல்ப நாபருமே கவிழ்ந்துபதி வாசலிலே கட்டிலின் மேலிருக்க அவிழ்ந்த துணியோடே அவரிருக்கு முபாயமதை அறியாமல் நீசன் அணிவகுத்துத் தன்படையைக் குறியாய்ப் பிடிக்கக் கூட்ட மதில்நுழைந்து சாணா ரினங்கள் சதாகோடி கண்டுளைந்து வாணாள் வதைப்பானோ என்று மனதுளைந்து குதிரை மேலேறிக் கொடுஞ்சாட்டை யால்வீசி சதிரு சதிராய்ச் சாணாரைத் தானடித்து அடிபட்ட போது அவர்கள்மிகக் கொக்கரித்து முடிபடவே யிந்த முழுநீச வங்கிசத்தை இப்போ தொருநொடியில் இவரையெல் லாமடித்து மெய்ப்பாகக் கொன்று விடுமோ மெனச்சினத்தார் ஆளுக் கொருவன் ஆவானோ நீசனெல்லாம் தூளுபோ லாக்கவென்று துடியா யெழுந்திருந்தார் சான்றோர் சினத்துத் தாறு மிகப்பாய்த்து ஆன்றோரை நெஞ்சில்வைத்து ஆடை மிகஇறுக்கி உடையிறுக்கிக் கட்டி உல்லாசத் தொங்கலிட்டுப் படைத்திரளாய்ச் சான்றோர் பண்பா யொருமுகமாய் எதிர்த்துநிற்கும் போது எம்பெருமாள் தானறிந்து பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிப் பொறுத்து இருந்தவரே பெரியோரே யாகுமக்கா அறுத்திட வென்றால் அபுருவமோ என்றனக்கு வம்புசெய்வதைப் பார்த்து வதைக்கவந்தே னக்குலத்தை அன்புக் குடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம் பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன் மறுத்துரை யாடாமல் மக்களென்ற சான்றோர்கள் என்னசெய்வோ மென்று இவர்களையைத் தாங்கடித்து பின்னே விலகிப் பெரியவனே யென்றுநின்றார்

நீசன் கொடுமை

நீசன் மகிழ்ந்து எதிர்ப்பாரைக் காணோமென்று பாசக் கயிறுகொண்டு பரமவை குண்டரையும் கட்டி யிறுக்கிக் கைவெடியா லிடித்துக் கெட்டி யிறுக்கிக் கீழேபோட் டுமிதித்துத் தலைமுடியைத் தான்பிடித்து தாறுமா றாயிழுத்துக் குலையக் குலைத்ததுபோல் குண்டரைத் தானலைத்துக் குண்டியிலே குத்திக் குனியவிடு வானொருத்தன் நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான் வெடிப்புடங் கால்சுவாமி மேலெல்லாந் தானிடித்து அடிப்புடங்கு கொண்டு அடித்தடித்துத் தானிழுப்பான் சாணாருக் காகச் சமைந்தாயோ சுவாமியென்று வாணாளை வைப்போமோ மண்டிப் பதனிக்காரா பனையேறி சுபாவம் பட்டுதில்லை யென்றுசொல்லி அனைவோரை யும்வருத்தி ஆபரணந் தேடவென்றோ சமைத்தாய் நீசுவாமியென்று சாணாப் பனையேறி பனைச்சிரங் கின்னம் பற்றித் தெளியலையே உனைச்சுவாமி யென்றால் ஒருவருக்கு மேராதே ஆளான ஆளோநீ ஆளில் சிறந்தவனோ தாழாய்க் கிடந்து சாமியென்று வந்தாய்நீ நாரண சுவாமி நானென்ற தும்நீயோ வாரணத்தின் காலில்கட்டி வாட்டுவோம் பாருஎன்பான் உன்னோடு நின்றவர்கள் உன்னை யடிக்கையிலே என்னோடு வந்து என்னவென்று கேட்கலையே நீசுவா மியென்றால் நெகிழுவ ரோஇவர்கள் பாசக் கயிறு பற்றுமோ வுன்கையிலே வகைதேட வென்று மனுச்சுவாமி யென்றாயே புகையோடு புகையாய்ப் போறாய்நீ வம்பாலே நருளை வருத்திவிட்ட நல்லமந்தி ரத்தாலே மருளச்செய் தெங்களையும் மண்ணில்விழ வைபார்ப்போம் அல்லாம லுன்கைக் கட்டு மறுவதற்கு வல்லாமை யுண்டானால் மந்திரத்தைப் பார்நீயும் கூனைப் போலிருந்து குறுமுழி முழிப்பதென்ன நானன்னா வென்று நகைப்பா ரொருகோடி ஏசுவார் கோடி எறிவா ரொருகோடி பேசுவார் கோடி பேயன்வெறும் பேயனெனச் சொல்லி நகைப்பார் சுத்தமுள்ள நாரணரை பல்லுயி ரும்படைத்த பரமன்வாய் பேசாமல் கவிழ்ந்து கண்மூடிக் களிகூர்ந் தேமகிழ்ந்து சவந்தரிய நாதன் தானே நடக்கலுற்றார் வெடிகொண் டிடிப்பார் வெட்டவா ளோங்கிடுவார் அடித்தடித்துத் தள்ளி அங்குமிங் குமிழுத்து வேதனைகள் செய்வார் வேதநா ராயணரை சாதனைக ளுள்ள சர்வபர நாரணரும் எவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு இவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடு அவ்வுகத்தி லுள்ள அநியாயப் பாவிகளை இவ்வுகத்தைப் போலே எரியாமல் விடடேனோ என்று மனதில் இதமாய் மிகவடக்கி ஒன்று முரையாமல் ஊமைபோ லேநடந்தார் நடக்கவே மாயன் நல்லன்பு சான்றோர்கள் கடக்கவந்து நின்று கண்ணீர் மிகத்தூவி ஏழைக்கா யிரங்கி எங்கள்குல மீதில்வந்தீர் கோழைக் குலநீசன் கொண்டடிக்க வந்தானே பாவிநீ சனாலே பட்ட துயரறிந்து ஆவுமேய்த் தநாதன் ஆளவந்தார் நம்மையுமே அய்யோஇனி நாமள் அலைந்துமிகப் போவோமென மெய்யோடே குத்தி விழுந்தழுவார் சான்றோர்கள் தாய்தகப்ப னில்லையென்று தானடித்த நீசனெல்லாம் வாயயர்ந் திருந்தானே இவர்வந்த நாள்முதலாய் இனியாரு நம்மை ஏற்றுக்கை தாறதுதான் தனியானோம் நாமளினித் தலையெடுப்ப தெக்காலம் என்று சான்றோர்கள் சொல்லி யழுதசத்தம் கன்றுக் கிரங்கும் கண்ணர் மிகக்கேட்டு

அய்யா சான்றோர்க்கு அருளல்

மலையாதுங் கோநீங்கள் மாமுனிவன் புத்திரரே அலையாதுங்கோ மக்காள் அய்யா திருவாணை இப்பூமி தன்னில்வந்து இத்தனை நாள்வரைக்கும் கைப்பொருளுக் கிச்சை கருத்தில் மிகநினைத்துக் கைக்கூலி வேண்டிக் கருமஞ்செய்தே னானாக்கால் இக்குவ லயத்தில் இனிவரேன் கண்டிருங்கோ தன்மமது நிச்சத்துத் தாரணியில் வந்துண்டால் நன்மைக் கடைப்பிடித்து நான்வருவேன் நானிலத்தில் ஒன்றுக்கு மலைய வேண்டாங்கா ணுத்தமரே என்றைக்கும் நானிருப்பேன் என்மக்கள் தங்களிடம் ஆளுவே னோர்குடைக்குள் ஆனவை குண்டமனாய் ஆளுவோம் மக்கா வையகத்தை நாமாக ஒன்றுக்கு மலைய வேண்டாம் உகபர நாத னாணை என்றுக்கு மலையின் மீதில் ஏற்றின தீபம் போலே கன்றுக்குப் பாலு போலும் கண்ணுக்குப் புருவம் போலும் என்றுக்கு மக்கா வுங்கள் இடமிருந் தரசு ஆள்வேன் முன்முறை விதியா லிந்த முழுநீசப் பாவி கையால் என்விதிப் படவே வுண்டு இறப்பொன் றனக் கென்றதாலே பின்விதி யெனக்கு நன்றாம் பெரும்புவி யாள்வோ மக்கா உன்விதி நல்ல தாகும் ஒளிவறா வாழ்வீர் தாமே

சுவாமி கைது

என்று மகிழ்ந்து எம்பெருமா ளுள்ளடக்கி மன்று தனையளந்த மாலோன் நடக்கலுற்றார் கெட்டினக் கெட்டைக் கிறுக்க முடனிறுக்கிக் கட்டினக் கட்டோடே கடுநீசன் தானடத்தி ஏசுவார் மாயவரை எறிவார்காண் மாயவரைப் பேசுவார் மாயவரைப் பேயனென்பார் மாயவரை இப்படியே நீசக் குலங்களெல்லா மாயவரை அப்படியே பேசி அடித்து மிகநடத்தி நீசக் குலமிருக்கும் நெடுந்தெருக்க ளூர்வழியே பாசக் கயிறோடு பகற்கள்ள னைப்போலே தெருவுக்குத் தெருவு சிறுகுழந்தை நீசர்குலம் வருகின்ற மாயவரை மண்கட்டி பேர்த்தெறிவார் தலையைப் பிடித்திழுப்பார் சடைப்பேயன் பேயனென்பார் இலைசருகு போலே எரியுகின்ற சாதியெல்லாம் குண்டியிலே யொருவன் கோல்கொண்டு குத்திடுவான் நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான் நம்மள் குலத்தை நாணங் கெடுக்கவந்த பம்பக் குறும்பேயன் பம்பைதனைப் பின்னுமென்பார் அதிலுஞ் சிலபேர் அடடாபோ என்றிடுவார் மதிலேறி வந்து மாமட வார்சிலர்கள் இவன்தா னடியோ என்னையுமே ஆடவைத்துச் சவந்தனையே சுட்டதுபோல் தான்சுட்டப் பேயனிவன் தலைமயிரைப் பனையில் தான்பங்கு வைத்திறுக்கிக் குலையக் குலையக் கொன்னகொடும் பாவியிவன் என்று எறிவாள் இவள்சிலர்க ளம்மானை அன்றுதுகள் கண்டு அதிலுஞ் சிலமடவார் ஆமடியோவுங்களையும் அழைத்தானோ வீட்டில்வந்து ஓமடியோ இந்த இறுமாப்புப் பேசாதுங்கோ அன்றைக் கவனை அடிபணிந்து நின்றுகொண்டு இன்றைக் கவனை எறியத் தொடர்ந்தாயோ என்று சிலபேர் எறியாதே யென்றுரைப்பார் நன்று நன்றென்று நாரணரு முள்ளடக்கி ஒருதிக் கொருதி உரைத்திடுகோவெனவே கருதிமுகம் பாராமல் கண்ணர் மிகநடந்தார் பாவிக் குலங்கள் பச்சைமால் நாரணரை தாவிச் சுசீந்திரத் தலம்நோக்கிக் கொண்டுசென்றார்

சுசீந்திரத்தில் அய்யா

கொண்டுபோ கும்வேளை கொடும்பாவி நெட்டூரன் விண்டுரைக்கக் கூடாத வேதனைகள் செய்யலுற்றான் அய்யய்யோ மாயவரை அன்னீத மாபாவி செய்த வினையெல்லாம் சொல்ல முடியாதே கொண்டுவிட்டு மாயவரைக் கூண்டகலி ராசன்முன்னே கண்டு கலிராசன் கருத்தில் மிகத்தேர்ந்து பார்ப்போம் பரிட்சை பயித்தியக்கா ரனுடனே தாற்பரிய மாகத் தன்விரலின் மோதிரத்தைக் கழற்றி யொருவர் காணாமல் கையடக்கிச் சழத்தி வருவது தானறியா நீசன்வன் ஏதடா என்றன் கைக்குள் ளிருப்பதையும் ஓதடா வுன்றன் உற்ற வலுவாலே அப்போது மாயன் அடக்க மிக அறிந்து இப்போ துரைத்தால் இந்தநீ சக்குலங்கள் கண்டு பிடித்துக் கட்டுவார் நம்மையுமே தொண்டுசெய்யுஞ் சான்றோர் துயரமது மாறாது நாம்நினைத்தக் காரியமும் நடந்திடா தானதினால் ஏனிதைத்தான் சொல்லப் போறோ மெனஅடக்கி எல்லாம் படைத்த ஏகன் கிருபையென அல்லா நினைத்தபடி ஆகு மெனவுரைத்தார் அப்போது நீசன் அவன்வெகுளி யாயுரைப்பான் இப்போ தொருமருட்டாய் இவன்சமைந்தான் சுவாமியென்று மருளிதுதா னென்று மாநீசன் தான்மருண்டு கொண்டுபோங் கோசறடன் கூண்டவன் முன்பதிலே என்றுரைத்த போது ஏவல்சீவா யிகளும் நடத்தி யிழுத்து நாரா யணரையுமோ கடத்திச் சறடன் கண்டிருக்கக் கொண்டுவிட்டார் உடனே சறடன் உபாயமதைப் பார்ப்போமென்று தடதடென எழுந்து சாராய மானதிலே அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி நஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான் பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து காலனைக்கா லாலுதைத்தக் கடவுளார் தாமகிழ்ந்து வேண்டி யகமேற்றார் வேதநா ராயணரும் ஆண்டி யதனால் அஞ்சா திருப்பதையும் பார்த்துச் சறடன் பண்நா யகமகிழ்ந்து வேற்றொரு சூட்சம் வேறேயுண் டாகுமென என்னமோ என்று இவனுணர்ந்துப் பாராமல் பொன்னர் மயக்கம் பெரிய மயக்கமதால் கொடுபோங் கோவென்று கூறினான் சேவகநாடு வெடுவாகக் கொண்டு வெறுநீசன் டாணாவில் அடைத்துவைத் தானங்கே அன்னீத மாபாவி திடத்தமுடன் நாரணரும் சிந்தைமிக மகிழ்ந்து இருந்தா ரேயங்கே ஏழைக்கிரங்கி யவர் தருந்தார ருக்காகத் தடியிரும்பி லுமிருந்தார் மாண்டோ ரையுமெழுப்பும் மாய வலுவாண்டி அய்யோ அவரை அடைத்துவைத் தேயிருந்த பொய்யோ புரைக்குள் பொறுக்குமோ கண்ணுகண்டால் மோளுக் குழியும் மொய்த்தத்தெள் ளினங்களுமாய்த் தோளு வழியே சொரியுதே தெள்ளினங்கள் அட்டை மித்க அரியத்தேள் ஈமிதிக்க விட்ட நரகு மிகுவாய்ப் புழுமிதக்க நாற்றத் துறைகள் நரகத் துறைபோலே பார்த்த இடமெல்லாம் பலபுழுக்க ளுஞ்சரிய ஐயோ அய்யாவை அடைத்தப் புரையதிலே கையாடி நிற்கக் காரணமோ மாயவர்க்கு சான்றோ ருக்காகத் தர்மக் குருநாதன் மீன்று முழியாமல் முகமலர்ந் தங்கிருந்தார் ஏழை களுக்காக ஈரொன்றொரு நாளாய் மீளாச் சிலுவையிலே முள்ளா லடிகள்பட்டு மரித்துப் பிறந்ததுபோல் மாயக் குருநாதன் இதுவுகத்துக் கிப்புரையில் இருந்து அழுந்தவென்று இருந்தாரே மாயவனார் ஏழைகளுக் காயிரங்கிக் கருந்தார மார்பன் கருத்தில் மிக அடக்கி

அய்யாவை அனந்தபுரம் கொண்டு செல்லல்

எல்லா மடக்கி இவரிருக்கும் நாளையிலே பொல்லாக் கலியன் புறப்பட்டான் மேற்கெனவே இப்பே யனையும் இங்கேகொடு வாருமென்று அப்போது சொல்லி அவனடந்தான் மேற்கெனவே உடனே சிவாயி உற்றநா ராயணரைத் திடமாகக் கூட்டிச் சிணமே நடக்கலுற்றான் கொண்டு போனாரே கோட்டாற்று ஊரோடே கண்டுபெரும் பாவியெல்லாம் கட்டிகொண்டு தானெறிய எறிவார் சிலபேர் ஏசுவா ரேசிலபேர் வெறிப்பேய னென்று விரட்டி மிகஎறியார் எல்லாம் பொறுதியுடன் எம்பெருமா ளுமடக்கிக் கல்லாரை யெல்லாம் கமக்கியறுப் பேனென்று மனதி லடக்கி மாய நெடுமாலும் கனகத் திருமேனி கண்கவிழ்ந் தேநடந்தார் நடந்தாரே கோட்டாறு நல்ல பிடாகைவிட்டுக் கடந்தாரே சுங்கான் கடையெல்கைத் தானும்விட்டுப் பத்மனா புரத்தெல்கைப் பார்த்துத் தெருவோடே உற்பனமாய் மாயன் உள்தெருவோ டேநடக்க ஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேநடக்க ஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேபழித்து வாயாராப் பேசி வைதாரே நீசரெல்லாம் அதிலு மன்போர்கள் அவரைக்கண் டேபணிந்து இதுநாள் வரையும் இவர்நடந்த சட்டமதில் பொல்லாங்கு செய்தாரெனப் பேருநாம் கேட்டதில்லை எல்லாங் கடைதலைக்கு இட்டதர்ம மேகாக்கும் என்றன்போர் சொல்லி இவரழுது நின்றராம் அன்றந்த நாதன் அதுகடந்துப் போயினரே போனாரே தக்கலையின் புரைக்குள்ளே யுமிருந்து மானான பொன்மேனி வாலரா மங்கடந்து வாரிக் கரையும் வாய்த்த நதிக்கரையும் சீரிய நாதன் சென்றகண் டேநடந்தார் நடந்துத் திருவனந்தம் நல்லபுரத் தெல்கைகண்டு அடர்ந்த மரச்சோலை அடவி வனங்கள் கண்டு கண்டுகொண் டெம்பெருமாள் கண்கொள்ளாக் காட்சியுடன் பண்டுநாம் சீரங்கத்தைப் பார்த்தகன் றேநடந்து இவ்வூரைக் கண்டு எத்தனைநா ளாச்சுதென்று செவ்வுமகா விட்டிணுவும் சிந்தைக்குள் ளேயடக்கி

சிங்காரத் தோப்பில் சுவாமி சிறை

அவ்வூரைப் பாராமல் அந்த வனமானதுக்குள் எவ்வுயிர்க்குந் தானாய் ஈயுகின்ற பெம்மானும் நாட்டுக் கலியனுக்காய் நற்சோத னையெனவே நீட்டின காலில் நீசனிட்ட விலங்கோடே ஏழைகளுக் காக இருந்தார்பா ராவதிலே கோழைக் குடும்பக் குறும்பர் தமைவதைக்க மனுப்பா ராவதிலே மாயாண்டி தானிருந்தார் தனுப்பா ரமடக்கித் தாழ்மையுட னேயிருக்க ஆகாத நீசன் அழியும் நினைவதினால் போகாத படிக்குப் பேயன் தனைவிலங்கில் போட்டு வையென்றும் புள்ளி பதனமென்றும் கோட்டுக்கா ரர்தமக்குக் கொடுத்தானே வுத்தரவு அந்தக் கலிராசன் அவனுரைத்த வுத்தரம்போல் சந்தமுனி மாயனையும் தான்விலங்கி லிட்டுவைத்தான் அப்போது மாயன் அதிகசான் றோர்களுக்காய் இப்போ பொறுதிகொண்டு இருக்கே னெனஇருந்தார் நாட்டுச் சோதனைக்காய் நாராயணர் விலங்கில் நீட்டின காலோடே நிலம்பார்த் தேயிருந்தார் சாணான் பால்வைத்துச் சந்தோசப் பாலேற்று நாணாம லெம்பெருமாள் நற்சோலையி லிருந்தார் சோலையில் வாழ்பறவை சாமிவந்தா ரென்றுசொல்லி ஏலேல முங்கூறி எந்நேர முந்தொழுது நன்றான மாமுனியும் நற்பறவை யானதுவும் கொண்டாடிக் கொண்டாடிக் கொஞ்சிவிளை யாடிருக்கும் இந்தவனச் சோலையிலே எம்பெருமாள் தானிருக்க சந்த முடனருட்கள் சதாகோடி யாகவந்து தொழுது நமஸ்கரித்துத் தூயோன் பதம்பூண்டு முழுது முன்பாதமென மொய்குழ லார்சிலர்கள் நாற்பது வயசாய் நான்சேயில் லாதிருந்தேன் காப்பதுன் பாதமெனக் கண்டு தொழுதபின்பு தந்தாரே யெங்களுக்குச் சந்ததி தழைத்தோங்க வந்தாரே நாயடியார் வாழு மனையிடத்தில் என்ன உபகாரம் இவர்க்குநாம் செய்வோமென்று கன்னல் கதலிக் கனிகள் கொடுப்போமோ தர்ம மால்தீர்த்தச் சஞ்சலங்க ளானதையும் அம்மம்மா சொல்ல ஆராலு முடியுமோடி குட்டம் பதினெட்டும் குடித்தபத மொன்றாலே கட்டம் முதலாய்க் காணாப் பறந்ததுவே இப்புதுமை செய்தவர்க்கு இப்போ தொருபுதுமை கொப்பளிக்கு முன்னே கூடா தோஇவரால் ஏதோ வொருதொழிலாய் இவர்பம்ம லாயிருக்கார் சூதால் கொடுமைவந்து சுற்றுங்காண் நீசனுக்கு என்று சிலபெண்கள் ஏழைபங் கோனருளை கண்டு தொழுது கருத்தகலா நின்றுடுவார் அப்படியே நருட்கள் ஆதிநா ராயணரை செப்படிபோ லவர்க்குச் செய்தநன்றி சொல்லியவர் கூரைக்குப் போகக் கூறநினை வில்லாமல் நாரணரைச் சூழ்ந்து நமஸ்காரஞ் செய்துநிற்பார் சூழ்ந்து நருட்கள் தொழுதுமிக நிற்கையிலே தாழ்ந்துசா குங்கலியன் சறடன் தனைநோக்கிப் பேயனொரு சாணானைப் பிடித்துக்கொடு வந்தோமே தூய இரும்பு விலங்கதிலே போட்டுவைத்தோம்

கடுவாய் சோதனை

சாமியென்று பாவித்தச் சாணான்தனை நாமும் காமியத் தால்பெருத்தக் கடுவாய் தனைவருத்தி ஏவிவிட்டுப் பார்த்து இருவகையுந் தானறிந்து போவெனவே சொல்லிப் பேயன் தனையனுப்ப வேணுமே யிப்போ விவரமென்ன என்றுரைத்தான் ஆணுவ மூர்க்க அரச னிதுவுரைக்க நல்லதுதா னென்று நாட்டமுற் றுச்சறடன் வல்லபெலச் சேவுகரை வாவென் றருகழைத்து இப்போ தொருநொடியில் ஏழுமலை யுந்தேடி வெற்போடு வெற்பெல்லாம் வேக முடன்தேடி வேகம் பெரிய வேங்கைகடு வாய்பார்த்து நாகமதிலுங் கடிய நல்லகடு வாய்பார்த்து நாழிகை ஏழதுக்குள் நம்மிடத்தில் கொண்டுவரத் தூளி யதுபறக்கும் சூறா வளியதுபோல் கொண்டு வாவெனக் கூறிச் சறடனுமே விண்டுரைப்பான் பின்னும் வீரியமாய்ச் சேவுகர்க்கு நன்று மொழிகேளும் நல்வீரச் சேவுகரே இன்றேழு மணிக்கு இங்கேகொண்டு வராட்டால் தூக்கியே வுங்களையும் தூண்டலில் போட்டிடுவேன் ஆக்கினைகள் செய்துவுங்கள் ஆமிசத்தை வாங்கிடுவோம் என்று சொல்லிச் சேவுகரை இறுக்கமுட னிறுக்கி இன்றுபோ மெனவே ஏற்றவரி சைகொடுத்து அனுப்பினாள் சேவுகரை அந்தவே ளைதனிலே பனிப்பிசினும் வெயிலைக் கண்டு பதறினாற்போல் பதறியே சேவகர்கள் பண்பாகச் சட்டையிட்டுக் குதறியே வந்து கூண்டுரைப்பார் மாயவேனாடு நாரா யணரே நாங்கள்போ குங்கருமம் பேராய் நடக்கவேணும் பெரிய திருமாலே உம்மைச்சோ தனைபார்க்க குங்கருமம் ஆனதினால் செம்மையுள்ள ராசன் சிணமே யனுப்பினர்காண் ஆனதினால் கடுவாய் அடியேங்கள் கையதிலே போனவுடன் சிக்கிடவும் புண்ணியரே வந்தாரும் என்றுரைக்கச் சேவுகர்கள் எம்பெருமா ளுள்ளமதில் நன்று நன்றென்று நாரா யணர்சிரித்து விடைகொடுத் தார்கடுவாய் வேகமதில் சிக்கிடவும் படைச் சேவுக்கத்தார் பாரமலை தானேறி கடுவாய் கிடக்கும் கனமலைகள் தான்தேடி முடுகித் தலையாரி முடிச்சு வலைவளைந்து காடு கலைத்துக் கடுநாய்கள் விட்டேவி வேடுவர்க ளெல்லாம் விரைந்து கலைத்தனரே கலைக்க வொருகடுவாய்க் கடுங்கோபங் கொண்டெழுந்து வலைக்குள் நுழைந்ததுகாண் மாயவனார் தன்செயலால் உடனேதான் சேவுகர்கள் ஓடிமிக வளைந்து அடவுடனே வலையை அமர்த்தி மிகப்போட்டு உபாயத்தாற் சென்று ஒருகூட்டுக் குள்ளடைத்துக் கபாடத்தால் கட்டிக் கனகூடு தானெடுத்துத் தாமரை குளத்துச் சன்னாசி பாதமதால் நாமளு மன்னனுக்கு நாடிப் பிழைத்தோமென்றார் நல்லவென்னி யுண்டு நற்சாணாச் சுவாமியிடம் வல்லவர் தானென்று மாதவாய்க் கொண்டாடித் தேடித் திரியாமல் திக்கெங்கும் வாடாமல் ஓடித் திரியாமல் உயர்சாணாச் சாமியினால் நாமும் பிழைத்தோம் நற்கடுவாய்க் கொண்டுவந்தோம் சீமையாளு மரசன் செப்பும் வாக்குப்படியே கடுவாயைக் கொண்டு காலமே போவோமென வெடுவாகக் கூடதுக்குள் வேங்கை தனையமர்த்திச் சுமந்துகொடு வந்தார் துடியான சேவுகர்கள் அமர்ந்த கடுவாய் அதறுகின்ற வோசையினால் நருட்கள் மிகப்பதறி நாற்கரைக்கு மாட்கள்விட்டு வருகின்ற வேளை மாகோடி யாய்ச்சனங்கள் சாமியென்ற சாணானைச் சோதிக்க வேணுமென்று ஆமியமாய்க் கடுவாய் அதோகொண்டு வாறாரெனப் பார்க்க வருஞ்சனங்கள் பலசாதி யுங்கோடி போர்க்குத் திரள்போல் போற வகைபோலே எண்ணிறந்த நருட்கள் இதிற்கூடி வந்தனரே மண்ணளந்த நாதன் மனமகிழ்ந் தேயிருந்து சாமி யருகில் சூழ்ந்திருந்த சான்றோர்கள் நாமினித்தான் செய்வதென்ன நாதனே யென்றுசொல்லி கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து நாட்டுக் கரிவிரிநாள் நாரா யணனும்நான் படசி பறவை பலசீவ செந்துக்களை நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும்நான் மண்ணே ழளந்த மாயப் பெருமாள்நான் விண்ணே ழளந்த விஷ்ணு திருவுளம்நான் ஏகம் படைத்தவன்நான் எங்கும் நிறைந்தவன்நான் ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால் நாதக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோ சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ இந்நீச னெல்லாம் என்னையறி யாதிருந்தால் மின்னிலத்தில் நான்படைத்த மிருக மறியாதோ என்றே யடக்கி ஏகந் தனைநினைத்து ஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரே பதறாதே யென்றனுடப் பாலகரே யென்றுசொல்லி இதறாத மாயவனார் இருந்தார்கா ணம்மானை அப்போ தவரிருக்க அம்மிருக மானதையும் வைப்போடு நெஞ்ச மாநீச ராசனிடம் கொண்டுவைத்தா ரந்தக் கோபக்கடு வாய்தனையும் கண்டு கலிராசன் கனகசந் தோசமுடன் அன்று சிப்பாயிகட்கு ஆனவரி சைகொடுத்து இன்றுகடு வாய்தனையும் இப்போது கொண்டுசென்று கூட்டி லடைத்துவைத்துக் கோப மதுவருத்த ஈட்டிமை யாயதற்கு இரையொன்றும் போடாமல் இன்றைக்கு வைத்து இதுநாள் கழிந்ததன்பின் சென்றந்தப் பேயனிடம் செல்லவிட லாமெனவே அடைத்துவை போவெனவே அரசன் விடை கொடுக்கத் திடத்தமுடன் சேவுகர்கள் சென்றடைத்தார் கூடதிலே அன்றிரச் சென்று அடுத்தநாள் சென்றதற்பின் இன்றுகடு வாய்திறந்து இகழ்ச்சியது பார்பபோமென்று வந்தானே யந்த மாநீசப் பாதகனும் தந்தாய்ச் சறடன் சௌனி கௌடனுமே கவுடன் வெகுடன் கீர்த்திதுரை சானிகளும் மகுடவர்த்தனர் முதலாய் மந்திரி மார்களுமே துலுப்பர் சலுப்பருடன் சிப்பாயி மார்களுமாய் அலுப்பர் பட்டாணிகளும் ஆனகரி காலாளும் காலாளும் வீராளும் கருமறவர் சேகரமும் சூலாளும் தோலாளும் சூழ்ந்தபடை யாளர்களும் ஒக்கத் திரண்டு ஒருமித்தாங் காரமுடன் மிக்கத் திரண்டு வெடியாயு தத்துடனே ஆனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை சேனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை இந்தப் படையோடும் எச்சாதி தன்னோடும் வந்து வளைந்தார் மாகடுவாய்க் கூட்டையுமே அப்போது ராசன் அருகில்தலை யாடகளை இப்போது இந்த ஏற்றகாடு வாய்தனையும் குண்டியிலே கம்புகொண்டு குத்துவது கோபம்வரக் கண்டுகடு வாயதுவும் கம்பதுக் கேபதறி அதறி மிகமுழங்கி அதுகவிழ்ந்து தான்படுத்துப் பதறி யதுகிடந்து படுக்கை யிளகாமல் நீச னவன்குத்த நெடுஞ்சற டன்காமல் வாசப் பொடிவருத்தி வன்னப் பொடிநிறைத்து மட்டாய்க் கடுவாய் மாறி யிளகாமல் கிடந்ததுகா øணாய கிருபை யதினாலே தடந்தெரியா வண்ணம் சனங்கள் மிகப்பார்க்க ஈட்டி யெடுத்து இனிக்குத்த வேணுமென்று மேட்டி யொருவன் விசையாகக் குத்திடவே எட்டிக் கடுவாய் ஈட்டி தனைப்பிடித்து விட்டிடவே யருகில் நின்றதொரு வேதியனைக் குத்திச்சே யீட்டி குடல்பீற அம்மானை கத்தியும் பட்டுக் கதறியொரு வன்சாகப் பார்த்திருந்த நீசப் பாதக னேதுரைப்பான் நாற்றிசைக்கு மேராதே நல்மறையோன் பட்டதுதான் ஆயிரம் பசுவை அடித்துமிகக் கொன்றாலும் தோச மீதல்லவொரு வேதியனைக் கொன்றதுதான் என்னபோ லாச்சு யாம்நினைத்த காரியங்கள் மன்னன் கலிராசன் மாசறட னுமயர்ந்து ஞாயமீ தல்லவென்று நடந்தா னரண்மனைக்கு தோசமொன் றேற்றோமெனச் சொல்லி மிகப்போனான் அப்போது சனங்கள் அல்லோரு மேதுரைப்பார் இப்போதிப் பேயனுக்கு இதுவுமொரு நல்லதுதான் என்றுசொல்லி நீசன் ஏற்ற சறடனுமே ஒன்றுமுரை யாடாமல் உள்ளபடை யத்தனையும் கூட்டிக்கொண்டு போனான் கோட்டையதுள் ளம்மானை வேட்டைப் பலித்துதில்லை வெற்றிதான் பேயனுக்கு பார்க்கவந் தசனங்கள் பலதிசைக்கு மிவ்விசளம் ஆர்க்கு மிகவே அறிவித் தகன்றனரே அப்போ சுவாமி அருகில் மிகவாழும் மெய்ப்பான சனங்கள் மெத்தசந் தோசமதாய் இண்ணத் தறுவாய் ஈசுரன் காத்ததுதான் அண்ணல் காயாம்பு அச்சுதனார் காத்ததுதான் என்று மனமகிழ்ந்து எம்பெருமாள் நாரணர்க்கு அன்று விவரம் அறிவித்தா ரன்போர்கள் கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து ஆட்டுவோ மாட்டுவோங்காண் அல்லாமல் வேறுளதோ இப்படியே சொல்லி இருக்குமந்த நாளையிலே முப்படித்தான் ஈசர் மொழிந்தநா ளதுவரைக்கும் இருப்போ மெனச்சொல்லி இருந்தார்கா ணம்மானை அருப்பான நீசன் அவன்சிலநாள் சென்றதற்பின் என்ன விசாரம் இப்பேய னுக்குகெனவே தன்னே யிருந்து தானினைக்கும் வேளையிலே முன்னே யொருயுகத்தில் மூவரிய நாரணர்க்கு அன்னமொடு பாலும் அருந்த மிகக்கொடுத்த ஆயர் குடியில் அவதரித்தக் கோமானில் தூய வொருகோனும் துணிந்தங் கெழுந்திருந்து பத்தியுள்ள நாரணரைப் பாரா வதுஇளக்க உத்தரித்துக் கோனும் உலகமதை யாளுகின்ற மன்னவன் முன்பில்வந்து நின்றங்கு ஏதுரைப்பான் தன்னதிய மானத் தலைவனே கேட்டருளும் நம்முடைய ராச்சியத்தில் ஞங்ஙளிட தன்னினத்தில் எம்முடைய ஆளாய் இருக்கின்ற இச்சாணான் சாணானில் நல்ல தன்மைவெகு மானமுள்ளோன் கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன்காண் நேர்மை யொழுங்கோன் நேர்சொல் லொருவாக்கன் ஓர்மை யுடையோன் உபகாரக் காரனிவன் ஆனதா லெங்களுக்காய் அரசேநீர் தாமுருகி ஈனமிலா தெமக்காய் இரங்கு மெனத்தொழுதான்

வைகுண்டர் விடுதலை

அப்போ தரசன் அவன்மனது தானிளகி இப்போ திவனை யாமனுப்பி விட்டிடுவோம் விட்டா லவனும் மேலு மிருக்குமுறை 500 கட்டாகச் சொல்லிக் கைச்சீட் டெழுதிவைத்துப் போகச்சொல் லென்று போகண்ட னார்க்குரைக்க ஆகம் மகிழ்ந்து ஆயன்மறுத் தேதுசொல்வான் என்ன விதமாய் எழுதிவைக்கும் வாசகங்கள் மன்னவனே சொல்லுமென மாறி யவன்தொழுதான் அப்போ தரசன் எல்லோரு மேகேட்க இப்போ திவனினத்தில் எத்தனைபேர்க் கானாலும் ஒப்போ டுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால் சற்பம்போ லொத்த சகலசா திதனக்கும் உத்தரவு சொல்லாமல் உபாயமாய்த் தானிருந்து மற்றுமொரு சாதிகளை வாவென்று ரையாமல் தன்னொரு சாதி தன்னோ டிருப்பதல்லால் பின்னொரு சாதி பிதனம்வைத்தப் பாராமல் இனத்துடனே சேர்ந்து இருப்போம் நாமென்றுசொல்லிக் கனத்தோ டவனும் கைச்சீட் டெழுதிவைத்துப் பின்னவன் எல்லையிலே போகச்சொல் லென்றுரைத்தான் மன்னன் கலியுரைத்த வாக்கின் படியெழுதி ஒப்பமிடச் சொன்னார் உலகளிந்த பெம்மானை செப்பமுடன் நாரணரும் சிரித்து மனமகிழ்ந்து நம்மாலே சொல்லி நகட்டப் படாதெனவே சும்மா அவன்வாயால் சொல்லிச் சுமைசுமந்தான் இதல்லோ நல்ல இயல்கா ரியமெனவே அதல்லோ வென்று அரிமா லகமகிழ்ந்து கைச்சீட்டை சுவாமி கைகொண்டு தான்கீறி வச்சுக்கோ வென்று மண்ணில் மிகப்போட்டார் கீறிவிட்ட ஓலைதனைக் கெடுநீசன் தானெடுத்து மாறிக் கொருத்து வைத்தான்கா ணம்மானை உன்னில் லிடத்தில் உடனேநீ போவெனவே குன்னுடைய நீசன் கூறினா னம்மானை அப்போது மாயவனார் அகட்டென வுறுக்கி இப்போது நீநினைத்த இலக்கதிலே போவேனோ தேவ னினைத்தத் தேதியுண் டவ்வேளைப் போவே னெனச்சொல்லிப் பெரியோ னகமகிழ்ந்து நல்லவரே மக்காள் நாம்நினைத்தத் தேதியது வல்லவரே வருகு மாசிபத் தொன்பதிலே கிழக்குநாம் போவோம் கிரணமாய் நீங்களெல்லாம் விளக்கொளி போலே வீரம தாயிருங்கோ என்றுரைக்க நாதன் இசைந்தமக்க ளெல்லோரும் நன்று நன்றென்று நாதன் பதந்தொழுது தொழுது அவரிருக்கத் தூயத் திருமாலும் முழுது மனந்த மூதூரை விட்டுஇன்று பழுதில்லாத் தெச்சணத்தில் பரமனமக் கேயருளித் தந்தயச் சிருந்த தாமரையூர் நற்பதியில் சிந்தை மகிழ்நாதன் சீக்கிரம் போகவென நினைத்துத் திருமால் நிண்ணயமாய் உள்ளடக்கிக் கனத்த புகழ்சான்றோர் கைக்குள்ளே நிற்பவரைப் பய்யவே யின்று பயண மெனவுரைக்க உய்யமிகக் கொண்டோர் உல்லாச மேயடைந்து சந்தோசங் கொண்டு சங்கடங்கள் தீர்ந்துதென்று வந்தோர்க ளெல்லாம் மாயவரைத் தொட்டில்வைத்து ஏந்தி யெடுத்து இயல்வா கனம்போலே ஓர்ந்து வருக உற்ற அனந்தம்விட்டுக் கண்டுநீ சப்பாவிக் கர்த்தாவைத் தானிகழ்ப்பாய்க் கொண்டுபோஞ் சாணாரைக் கூடிமிகச் சிரிப்பார் சாமியென்றோன் பட்ட சளங்களெல்லாம் பார்த்திருந்தும் வாய்மதத்தால் பின்னும் வழுங்கல் சுமப்பதுபார் பிழைப்பில்லை யென்றோ புத்திகெட்டச் சாணார்கள் உழைக்க மதியற்று உளத்துகிறான் சுமந்து பேயனைச் சுமந்து புலம்பித் திரிவதற்கு நாயன் முன்னாளில் நாட்டில் படைத்ததுபார் என்று தூசணிப்பார் இசைந்தபுகழ்ச் சான்றோரை அன்றதிலே சிலபேர் அல்லகா ணென்றுசொல்லி நம்மளுக் கென்ன நட்டம்வந்து போச்சுதெனச் சும்மா அவனினத்தோர் சுமந்துகொண்டு போவதல்லால் ஏனிந்தப் பேச்சு யாம்சொல்லப் போறோமெனத் தானிந்த வார்த்தை சனங்கள்சிலர் சொல்லவே சொல்லன்பு வன்பு சுவாமி மிகப்பார்த்து நல்ல அனந்தம்விட்டு நாடும்வால ராமம்விட்டுச் செல்ல அரியும் சிறப்பா யகமகிழ்ந்து வல்ல வழியில் வாழுகின்ற ஊரும்விட்டுப் பள்ளிவா சல்விட்டுப் பார்வதி யகரம்விட்டுப் துள்ளிக் கோட்டாறு சுசீந்திரத் தலமும்விட்டு வேக மடக்கி விளியிட்டு வண்டுறுக்கி ஆகமத்தின் தேதி அடுத்தாலா கட்டெனவே சொல்லுவேன் வெள்ளித் தோன்றி வருகையிலே வெல்லுவே னென்று விசையடக்கி எம்பெருமாள் தொட்டிலி லிருந்து சுவாமி விளியுமிட்டு மட்டி லிருந்த வளர்தா மரைப்பதியில் வந்து பதிகண்டு வட்டமிட்டுத் தானாடி விந்து வழிகளுக்கு மேற்கெதிக ளாகுதென்று இன்றுமே லெனக்கு ஏற்றவெகு சந்தோசம் பண்டு எனக்குப் பகர்ந்த மொழிபோலே

துவையல் பந்தி-வாகைப்பதி தவசு

சான்றோரை நல்ல தவத்துக் கனுப்பிடவும் பண்டோர் நமக்குப் பகர்ந்தபடி மாதர்களை நாடு மணங்கள் நல்லகலி யாணமுதல் வீடுவகை சொத்து விருதுவே டிக்கையுடன் தேரு திருநாள் திருக்கல்யாணக் கொலுவும் பாரு புகழப் பாவாணர் கீதமுடன் நாட்டில் மனுக்கள் நல்லோர்கள் வாழ்வதிலும் மேட்டிமைக ளாக மிகுவாழ்வு சேர்கையுடன் வேண்டும் பவிசு மிகுவாய்ப் பவிசுகளும் தாண்டும் பெரிய சனங்கள் மிகக்குழைவும் கொடியுமிகக் கட்டிக் கொக்கரித் திகனையுடன் வெடியெக் காளமுடன் வெற்றியி டம்மானமிட்டு நாட்டில் சிறப்பதிகம் நாமினிமேல் செய்யவென்று தாட்டிமையாய் நாதன் சான்றோர் தமக்குப்போ அறிவில் வினோதம் அதிகநே ருத்தமமாய்க் குறியாய் மனதில் குறிக்கும் படியருள அருளான விஞ்சை அருள்கொடுக்கு மாலோனும் மருளாமல் சாணார் மனதி லுருவாக மூணுநேரத் துவைத்து உச்சி யொருநேரமதாய் வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும் வேகவைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டுத் தாக மில்லாமல் தவசிருக்க வேணுமென்று பெண்ணுடனே ஆணும் பிறந்தபிள்ளை தன்னோடும் கண்ணான கட்டில் கலருங் கிழவிவரை சூலி யிளம்பிள்ளை திரண்ட மடமாதும் மாலி னருளால் வஸ்துவகை தான்மறந்து வீடு மனைமறந்து விற்று விலைகள்செய்து ஒண்ணிலரைப் பாதியென ஒக்கவிற்றார் சொத்ததனை மண்ணு மறந்து மாடாடு தான்மறந்து ஆண்டபண்ட மெல்லாம் அகல மிகமறந்து கூண்டபண்ட மெல்லாம் கூசாம லேமறந்து அனுபோக மற்று ஆண்பெண் ணிகழாமல் இனிபோக மற்று இருந்தார் தவசெனவே எல்லோரு மிக்க இருக்கத் தலம்பார்த்து அல்லோரு மேக அவர்கள் மனதிலுற்று நாத னரிநாதன் நாரா யணநாதன் சீதக்குரு நாதனிடம் சென்றா ரவர்பதத்தல் சென்றே யவருடைய சீர்பாதந் தெண்டனிட்டு இன்றேக எங்களுக்கு இப்போ விடையருள்வீர் என்றே சனங்கள் எல்லோரும் போற்றிநிற்க அன்று பெருமாள் அகமகிழ்ந்து கொண்டாடி நாம்நினைத் ததுபோலே நடந்து காரியந்தான் தாம்நினைத் ததுபோலே தாநடந்து வீரெனவே உத்தரவு சொல்ல உடைய வழிச்சான்றோர் சித்தருட அருளால் சென்றார் தவமதுக்கே தவமது செய்ய வென்று சடுதியிற் சான்றோ ரெல்லாம் உகமது அளந்தோன் பாதம் உண்டென மனதி லாக்கி வகைபொரு ளாசை யற்று மனைவிகள் மக்கள் கூட திகையது நோக்கி வாரி துவரயம் பதியிற் சேர்ந்தார் மண்ணுடன் மனைக ளாசை மாடுடன் வீடு மாசை பெண்ணுடன் பொருளி னாசை பூதலப் பொன்னி னாசை எண்ணுடன் எழுத்தி னாசை இடறுபொல் லாசை வேசை ஒண்ணுடன் ஆசை நீக்கி உடையவ னாசை கொண்டார் கொண்டுநல் மனதிற் பூண்டு குருபரா தஞ்ச மென்று பண்டுநல் துவார கையின் பதிவாட வாசல் தன்னில் தெண்டிரை வாவை சூழ்ந்த செகற்கரை தனிலே வந்து கண்டுநற் பதியில் புக்கி கருத்துடன் இருந்தா ரன்றே இருந்தவர் தலமும் பார்த்து ஏகநல் வெளியுங் கண்டு பொருந்திடும் ஞான வான்கள் புண்ணிய மனதி லெண்ணி வருந்திடக் கனிவே காணும் வாவைநற் பதியி தாகும் தெரிந்திடக் கடலில் மூழ்கிச் சிவகலை யணிந்தார் தாமே அணிந்தவர் பெண்ணு மாணும் அன்புடன் மகிழ்ச்சை கூர்ந்து துணிந்தவர் தங்கள் தங்கள் துயரங்க ளறவே நீக்கப் பணிந்தவர் நாதன் தன்னைப் பரிவுடன் மனதுள் ளாக்கித் தணிந்தவர் கோப வேகத் தகுளியைத் தள்ளி வாழ்ந்தார் வாழ்ந்தே தவசு வாகைப் பதியதிலே தாழ்ந்தே சனங்கள் சந்தோச மாயிருக்க அந்திசந்தி யுச்சி ஆகமூ ணுநேரம் நந்தி யருளால் நல்ல துணிதுவைத்து உவரிநீ ரில்துவைத்து உவரிநீ ரைக்குடித்து உவரிநீர் தன்னில் உற்றன்ன மேசமைத்து உச்சி யொருநேரம் உணவு மிகஅருந்தி மெச்சிப் புகழ்ந்த விடிய வொருசாமம் உகப்பாட்டு மோதி உற்ற அபயமிட்டு வகையாய் விடிய வரும்நா ழிகையேழில் துணிகள் துவைத்துத் தோய மதிலிறங்கிக் கெணியாய்க் குளித்துக் கிருஷ்ணர் பதம்போற்றி இப்படியே நித்தம் இவர்மறவா வண்ணமேதான் அப்படியே வாரி அலைவாய்க் கரையிருக்க வாரிப் புறமாய் வளர்காற்று வாடைமிக நீரிறைத்தாற் போலே நித்தமந் தத்தவத்தோர் பேரி லிறைத்துப் பெருவாடை யாய்வீசச் சீருகந்த நாதன் செயலா மெனஇருந்தார் இருந்தார் தவசு ஏற்றரிய சான்றோர்கள் அருந்தாமல் மற்றொன்றும் அன்னமொரு நேரமுமாய் வாரிநீ ரல்லால் மறுநீ ரறியாமல் சீரியல்பாய்ச் சான்றோர் செய்தார் தவமதுவே பவமா னதுநீக்கும் பச்சைநா ராயணரும் முன்னாறு வருசம் உவந்திருந்த நற்றவத்தைப் பின்னொரு வருசம் பேணி நடத்துமுன்னே நீச னிடையில் நிறடுசெய் தானதினால் தோச மவன்பேரில் சுமக்கச்சா பம்புரிந்து ஆறு வருசம் அதிற்குறைவு வராமல் வாறு தவசு வகுத்து முடிக்கவென்று புரிந்தார் தவசு இலக்குத் திகைவதுமுன் சான்றோர் தவத்தைத் தான்பார்க்க வேணுமென்று ஆன்றோர் மனதில் அன்புமிகக் கொண்டாடி அலைவாய்க் கரையில் அமர்ந்திருந்த சான்றோரை நிலைபார்க்க வேணுமென்று நிச்சயித் தெம்பெருமாள் உகத்துக்குத் தக்க உபாயமினிச் செய்யவென்று மகத்துவ நாதன் மனதில்மிக வுத்தரித்துத் தெள்ளு தனக்குச் சிணமே விடைகொடுத்தார் விள்ளுறவே செய்து விடுநீ சிணமெனவே ஆதி விடையருள அதுவெல்லா மேசமைந்து மோதி யொருமித்து உற்றஅந்தத் தெள்ளினங்கள் வந்து வளைந்துதல்லோ வாய்த்ததவத் தோரருகில் பொந்து பொந்துள்ளும் போடுந் துணியதுள்ளும் வைத்தக் குடிலுள்ளும் வளைந்ததுகாண் தெள்ளினங்கள் மெய்த்தபுகழ்ச் சான்றோர் மெலிவாய் மிகச்சடைத்து மாடா டுகோழி வளர்ப்பில்லா நம்மிடத்தில் ஏடா விடமல்லோ இதுசெய்யு மாய்மாலம் இருக்கு மிடத்தில் எண்ணக்கூ டாதபடிப் பொருக்குப் பொருக்கெனவே பொன்றக் கடிக்குதென்ன மூணுநேரந் துவைக்கும் உற்றகலை யானதிலே கோணியலில் பற்றும் குறுந்தெள்ளு வந்ததென்ன படுக்க இருக்கப் பண்புசற்று மில்லாமல் முடுக்கமாய்த் தெள்ளு முடுக்கிமுடுக்கிக் கடிக்க இதல்லால் சான்றோர்க்கு இன்னம்விட்டுப் பார்ப்போமென சதமில்லா மூட்டை தன்னினங்க ளைவருத்தித் தவத்தைக் குலைத்துச் சான்றோரைத் தான்விரட்டிப் பவத்துமாய் நீங்கள் பாவிப்பீ ரென்றுசொல்லி மூட்டைக் குரைகள் மொழிந்தார் முகுந்தனுமே சேட்டைசெய் வோமெனவே திரண்டு மிகச்சூழ்ந்து வந்து வளைந்தார் வாழரியச் சான்றோரை முந்து பரிந்த மூண்டதெள் ளினங்ளோடு கூடிக் குலாவிக் கூட்டமிட் டேதிரளாய்த் தேடிச் சான்றோரைச் செகலதுக்குள் ளேவிரட்ட வேணு மெனவே விசும்புகொண் டவ்வினங்கள் பூணு முடைமை போர்த்துந்துணி யிலிருந்து நடையிற் கடிக்கும் கிடக்கவிடா தேயரிக்கும் குடிக்கின்ற வெள்ளமதில் கும்பல்கும்ப லாய்க்கிடக்கும் முடிக்குந் தலையில் முச்சிறங்கை போல்கிடக்கும் அன்னத்தி லேமிதக்கும் அண்டைக்கல்லி லேவாழும் முன்னெற்றி மயிரில் மிதந்துமிக முன்னுதிரும் இடைக்குள் ளிருந்து இடைவிடா தேயரிக்கும் உடையி லிருந்து ஓயாம லேயரிக்கும் மேலெல்லா மிதந்து மிகச்சரியும் கீழ்வழியாய்க் காலெல்லாந் தெள்ளு கனமாய் மிகஅரிக்கும் மாறி யிவரெடுக்க மனதுசற்று மில்லாமல் ஆறிப் பதறி அசையாமல் தாமிருப்பார் வாரிக் கரையில் வளர்நண்டு சேகரமாய் மாரித் துளிபோல் வந்து வளைந்துமிகப் பாண்டத்துக் குள்ளே பதிந்திருந் தேவாழும் காண்டமாய்க் கண்டு கைநீட்ட லாகாதெனத் தடவி யெடுத்துத் தன்னாலே போநீயென வடவிப் போகாமல் வளர்ப்பார்கள் போலிருப்பார் இப்படியே தெள்ளு ஈமூட்டை நண்டினங்கள் அப்படியே கூடி அவரலைச்சல் செய்திடவே அல்லாமல் சான்றோர் அவரவர்க்குத் தேகமதில் பொல்லாத வங்குப் பெரிய சிரங்குடனே வெகுவாய்ப் பெருத்து மேலிலிடை காணாமல் தகுவாய்ச் சடைத்துச் சனங்கள்மிக எல்லோரும் எங்கே யினிப்போவோம் எல்லோரு மென்றுசொல்லி சங்கை யுடன்கூடிச் சமுத்திரக் கரையருகில் போயிருக்கும் வேளை பொங்குகடல் கோபமதாய் வாயிதமாய்த் திரைதான் வந்துகோபித் தடித்து 740 பாலதியப் பெண்கள் பண்பா யுடுத்திருந்த சீலைரண்டு தன்னைச் செகற்கொண்டு போயினதே அய்யோ கடல்தான் அங்குசெல்லக் கூடுதில்லை செய்ய விலகவென்றால் தெள்ளுநம்மை விட்டுதில்லை வீட்டுக்குள் செல்ல விட்டுதில்லை மூட்டையது ஊட்டுகின்ற அன்னமதில் உயரவந்து நண்டிருக்கும் தேகமதிற் சிரங்கு சொறிச்சல் பொறுக்குதில்லை தாகத்துக் கேற்ற தண்ணீர் கிடைக்குதில்லை பாகமுட னுண்ணப் பற்றுதில்லை தீனதுவும் இனியெங்கே போவோம் எல்லோரு மென்றுசொல்லி மனுப்புகழுஞ் சான்றோர் மாதமொரு ஆறாய் இருந்தா ரதிலே ஈசன் செயலெனவே திருந்தார மார்பன் திரும்ப வொருதலத்தில் கொண்டுபோய்ப் பார்ப்போம் குலதெய்வச் சான்றோரை பண்டு வொருசணான் படுத்திருக்கு மவ்வேளை சொர்ப்பனம்போல் உற்பனமாய் சுவாமி மிகவுரைத்தார்

முட்டப்பதி தவசு

இதின்நேர் தெற்கு இருக்கு மொருபதிதான் அதின்நோக்குஞ் சொல்ல ஆராலு மேலாது துட்டர் தமைவென்று சுற்றுமதில் கோட்டையிட்டு அலங்கார நற்பதியின் அழகுசொல்லக் கூடாது வலங்கார மான வாய்த்த கடலதினுள் தேரு பொன்பதிகள் சிங்கார மேடைகளும் நீருக்குள் ளேயிருக்கும் நிறங்கள்சொல்லக் கூடாது கன்னிமா ராடும் கரியநல்லப் பூஞ்சுனைகள் பொன்னினா லேபடிகள் பூஞ்சப்பிரக் கொலுவும் மாணிக்கக் கல்லால் வளர்ந்தமணி மண்டபமும் ஆணிப்பொன் தன்னால் அழகுபூம் பந்தல்களும் வகையின்ன தென்று வகுக்க முடியாது தொகையின் தென்று தொகுக்க முடியாது இப்பதியில் நீங்கள் இந்தநே ரம்போனால் அப்பதியி லுங்களுக்கு அதிகப்பலன் கிட்டுமென்று தூக்கமதில் சொர்ப்பனம்போல் சொன்னாரே வுத்தரவு ஆக்க முடனே அவனெழுந்து சொல்லிடவே கேட்டு எல்லோரும் கெட்டிதா னென்றுசொல்லி ஆட்டு மெனவே எல்லோருஞ் சம்மதித்த நடக்கத் துணிந்தார் நாரண ருண்டெனவே அடக்க முடனிதிலே ஆறுமா சம்வரைக்கும் இருந்தோமே நன்றாய் இனிநடப்போ மப்பதியில் வருந்தாமற் போவோம் மகாபரனா ருண்டெனவே போவோ மெனவே பெண்ணா ணுடனெழுந்து தாவமுள்ள முட்டப் பதிதலத்தில் வந்தனரே வந்தனர் பதியின் கூறும் வாரியின் செயலுங் கண்டு சந்தன வாரி போலும் தலமிது நன்ற தாகும் இந்தநற் பதியில் நாமள் இருந்துதான் தவசு செய்தால் செந்தமி ழாயன் பாதம் செயல்பெற வாழ்வோ மென்றார் வாழ்வ திற்குறை வராது மக்களுங் கிளைக ளோடு தாழ்வ தில்லை வண்ணம் தவமது வளர்வ தாகும் நாள்வழிப் பலனுண் டாகும் நாரண ரருளி னாலே ஆள்வது திடனா மென்று அதிலவ ரிருந்தா ரன்றே என்றே மிகமகிழ்ந்து எல்லோரு மோர்முகமாய் அன்றே மிகமகிழ்ந்து அதிலிருந்தா ரம்மானை சூழ அணியாய்ச் சுற்று மதில்போலே நீள அரங்குவைத்து நெருங்கப் புரைகள்வைத்து வைத்தோர் திசையில் வாசலொன் றாகவிட்டு மெய்த்தே தினமும் மிகவே துணிதுவைத்து அன்ன மதற்கு அவித்தநெல் லேயுடைத்து வன்னமுள்ள காய்கனிகள் வகைவகையாய்த் தான்வகுத்து நல்லநீர் தன்னில் நாடி மிகத்துவைத்து எல்லா வகைக்கும் இசைந்தநீ ரேயிருந்தி அந்திசந்தி உச்சி ஆதிதனைத் துதித்துத் தந்திரம தாகத் தவசு மிகப்புரிந்தார் கண்டிருந்த மற்ற கலிநீசச் சாதியெல்லாம் பண்டி லமைத்ததுவோ பனையேறுஞ் சாணார்க்கு மூணுநே ரந்துவைத்து உச்சியொரு நேரமதாய் வேணும் பகுத்தாய் வெகுவா யலங்கரிக்க வேத னவர்க்கு விதித்த விதிப்படியோ நாதனவர் பங்கில் நாடிமிக வந்ததுவோ எப்போமீ னுண்டு என்றே மிகப்பார்த்து அப்போ ததைவேண்டி அரக்குரக் காயவித்து வாயிலெடுத் திட்டு வயிறுவளர்க்குஞ் சாணார்கள் புகையிலையு மறந்து பெண்ணாணு மோர்மனதாய் இந்தப் படியாய் இருக்க இவர்களுக்கு முந்தை விதித்த விதிவந் தொத்ததுவோ அவர்க ளுடுக்கும் ஆடையழுக் கில்லாமல் இவருடுக்கச் சற்றும் எண்ணமொன் றில்லாதார் மூணுநே ரந்துவைக்கும் உற்றதுணி பொன்னிறம்போல் தோணுதலா யவர்கள் தேகம் பழபழென இந்த விதமாய் இவர்கள்பா வித்திடவே சொந்தத் திருமால் சேர்ந்தா ரவரிடமே ஆதி மகாமால் அவர்பங்கி லில்லாட்டால் ஓதி யுணவருந்த ஒன்றுந்தெரி யாதிவர்க்கு பேற்றி நம்பூரி பிராமணர்கள் தஞ்சீலை மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண் இந்தசா ணார்சீலை எரிசூரி யன்போலே பந்த வொளிபோலே பழபழெனத் தோணுதுகாண் பிராமணர் சூத்திரர்கள் பேணி யிவர்தமக்கு நிராதனமாய்க் காய்கனிகள் நித்தஞ் சுமக்கிறார்கள் பாக்கியங்கள் வந்துதென்று பனையேறுஞ் சாணார்க்கு நோக்கமது வந்துதென்று நீணலத் துள்ளோர்கள் எச்சாதியும் புகழ்ந்து இருந்தார்கா ணம்மானை அச்சாதி யெல்லாம் அப்படியே சொல்லிமிகச் சாதிமற்றோ ரெல்லாம் தலைகவிழ்ந் திருக்கையிலே நாதித் திருமால் நாடுகின்ற சான்றோரை இவர்க்கருளு மாண்டு இலக்குத் திகைந்துதல்லோ அவரவர்கள் வீட்டில் அனுப்பிவிட வேணுமென்று தோணித்தா ரவர்மனதில் சொர்ப்பனம்போ லெம்பெருமாள் மாணிக்கச் சான்றோர் மனமறியத் தாம்பார்த்து இனிநாம ளிப்போ இருந்த தலமும்விட்டுத் தனியானோம் நாமளங்கே சார்ந்தோமெ யானாக்கால் நம்முடைய சாதி நகைத்திழிவு பேசுமல்லோ எம்முடைய தவமும் இல்லையென்று போயிடுங்காண் முன்னிருந்த வீடும் மூண்டிருந்த பண்டமுதல் தன்னிருந்த சொத்தும் தலத்தை யிழந்தவந்தோம் இனியங்கே போனால் இருக்க இடமுமில்லை இனியங்கே போவதைக்கால் இந்தக் கடலதிலே விழுந்தோமே யானால் மேலும் பதவியுண்டு அழுந்த லுடன்நினைத்து எல்லோரு மேயிருந்தார் அப்போ அரிநாதன் ஆகட்டென வுறுக்கி இப்போநீர் போவும் என்றே விடைகொடுத்தும் இன்னமிவர் போகலையே என்றே மனதிலுற்று அன்ன மøக்குறைத்து ஆழாக் கரிசியிட்டார் ஆழாக் கரிசி அலர்மலர்ந்த கோவையுடன் தாழாமல் சனங்கள் சடையாம லேற்றனரே துவையல் முடங்கவில்லை தொழுதுநிதஞ் சேவிப்பதுவும் உகப்பாட் டோதுவதும் ஓயாமல் செய்தனரே இன்னம்போ னாரில்லையே இப்படியே செய்திடினும் இன்ன மொருவசனம் இப்போது செய்யவென்று உன்னித் திருமால் உற்றவை சூரியைத்தான் ஏவினார் சான்றோர் ஏந்திழைக்கும் பிள்ளைகட்கும் மேவியே சான்றோர் மிகமெலிந்து தான்வாடிப் பற்றி யிருந்தப் படுசிரங்கு மாறலையே முற்றுங் கண்ணொளிவு முழுதுந் திறக்கலையே கும்பிக் குளிரக் குடிக்கக் கிடைக்கலையே வெம்பு மிலைகனிகள் மிகப்பறிக்கக் காணலையே ஐயோநா மெல்லாம் அலைந்து மலைந்திருக்க வையமதி லில்லாத வைசூரி வளைந்துதல்லோ என்று சனங்கள் எண்ணம் பெரிதாகிச் சென்ற சனத்தில் சிலபேர் மடிந்திடவே பதறி நடுங்கி பரனேநீ தஞ்சமென்று குதறி யுலகில் கூச்ச மிகவடைந்து எங்கே யிருந்தாலும் ஈசன் செயலெனவே சங்கை வழுகாமல் தாமோ தரனுடைய நினைவு மயராமல் நிலைதவறிப் போகாமல் தன்னுடைய வீட்டில் தான்போவோம் நாமளென்று போகு முன்னாகப் பெரியோன் பதமணுகிப் பாகுரைத்து நாமள் பட்டசள முரைத்து உத்தரவு வேண்டி உற்றிடத்தில் போவோமெனப் புத்தி யுடனே பெரியோ னடிசேர்ந்தார் சேர்ந்துவா கைப்பதியின் செய்தியெல்லா முரைத்துப் பேர்ந்துவந்து முட்டப் பதியின் பெருமைசொல்லி ஊணுகிடை யாததுவும் உயிரழிவு வந்ததுவும் கோணுத லெல்லாங் கூறி விடைகேட்டார் அப்போது நாதன் எல்லோரை யும்பார்த்து இப்போது உங்கள் இல்லிடத்தி லேபோனால் நாரா யணக்குருவை நாளு மறவாமல் பேராக வேயிருந்தால் பேறுங்களுக் கேகிடைக்கும் அன்ன மளக்கும் ஆதித் திருநெடுமால் முன்னவன் தன்பேரால் முத்திரிக ளிட்டதினால் சென்ற இடமெல்லாம் சிறப்பதிக முங்களுக்கு என்றைக்கும் நல்ல இயல்பே யருள்வோமென நல்ல விடைகொடுத்து நாரா யணரனுப்ப வல்ல வளர்சான்றோர் வாழ்த்தி யவர்போனார் அவரவர்கள் வீட்டில் அன்பாகப் போனவுடன் இவரிவர்க்கு நல்ல இயல்புசெய்ய வேணுமென்று ஏகபர நாதன் எம்பெருமா ளானவரும் லோகமதி லெம்பெருமாள் ஒருசொரூபங் கொள்ளலுற்றார் இரப்ப வடிவாய் எடுத்தா ரொருவேசம் பரப்ப வடிவைப் பாருள்ளோர் கண்டுகண்டு கோட்டைக் கணக்காய்க் குளிர்ந்தநெல் லேயெடுத்துச் சாட்டமுடன் காய்கனிகள் சகல வகையுடனே பழங்கள் முதலாய்ப் பப்படமும் பாயசமும் வளங்க இலையிட்டு வற்றல்வகை சீனியுடன் அன்ன முதல்தானம் ஆடையொடு பொன்தானம் சொர்ணத் தானமுதலாய்த் துவையல்கா ரர்ககெனவே சான்றோ ரினத்தில் சார்ந்தன்பு கொண்டோர்கள் ஆண்டோ னருளால் அன்னவஸ்த்திரங் கொடுத்தார் நித்தம்நித்த மன்னம் நீங்களுண்ணு மென்றுசொல்லிச் சித்த மிரக்கமதால் துவையற்கா ரர்க்கெனவே இடைவிடா தபடியே ஈந்தாரே அன்னமது வடவெல்லாந் தீர்ந்து மகிழ்ந்திருந்தார் துவைத்திருந்தோர் நாலு திசையதிலும் நடந்துபிச்சை தான்குடித்துப் பாலு பவிசுடனே பாவித்தி ருந்தனராம் இப்படியே சான்றோர் இனமா யிருந்தவர்கள் அப்படியே பிச்சையிட்டு அன்பாய் மகிழ்ந்திருந்தார் பாங்கா னதுவையல் பண்டா ரங்களெல்லாம் பூங்கார மாகப் பிச்சையமு துண்டிருந்தார்

அகிலம் பதினான்கு

divider

அய்யாவை முட்டப்பதிக்கு அழைத்தல்

இந்தப் படியே இவர் வாழும் நாளையிலே சொந்தத் திருமால்க்கு சுவாமி யுரைத்தபடி ஆண்டாறு சென்று அதிகத் தவமதுதான் கூண்டாய் முடித்துக் குருநாதக் கண்மணியும் இனிநாம் செய்யும் இயல்பென்ன என்றுசொல்லி மனிதவ தாரன் மனதில் நினைத்திருக்க நன்றான முட்டப் பதிதலத்தில் நாரணரும் மன்றாடும் நல்ல வாய்த்தபர மேசுரரும் வேதப் பிரமன் விளங்கு மறையோனும் நாத ரிஷிமாரும் நல்லசங்கத் தோர்களுமாய்ச் சத்தி யுமையும் சரசு பதிமாதும் வித்தை முகத்து வேழ முகத்தோனும் எல்லோரும் வந்து இருந்தார் கடலருகே அல்லோரும் வந்து அங்கே யிருந்துகொண்டு ஏற்ற முனியில் இரண்டுபே ரைவருத்திச் சித்த முடனே திடீரெனவே நீங்கள்சென்று நம்முடைய பாலன் நல்லவை குண்டரையும் எம்முடைய அருகில் இப்போ கொடுவரவே சொல்லி யயைச்சார் சுவாமிதா னென்றுசொல்லி நல்லியல்பாய்ச் சொல்லி நாரணனை யிங்கழையும் வாருங்கோ முனியே வாய்த்த தவத்தோரே சேருங்க ளங்கே திடீரெனவே யிப்போது என்று விடைகள் இருவருக் குங்கொடுக்க அன்று முனிகள் அவ்வாயு போல்விரைவாய்க் கடிதாய் நடந்து கரியமால் நற்றவசு முடிவாகச் செய்த முகுந்தன் பதியில்வந்தார் வந்தனர் வைந்தர் பாத மலரிணை முனிமார் கண்டு செந்தமிழ் ஆயன் பெற்றச் சேயிது கண்ணோ விண்ணோ கந்தரக் கலியை வென்றுக் கனதர்மப் புவியை யாள முந்தநல் தவங்கள் செய்து முடித்தவா பேற்றிப் பேற்றி பொல்லாக் கலியில் வந்திருந்து பெண்ணோ டவனிப் பொன்னாசை மண்ணோ டுண்ணு மதத்தாசை மாய்கை விழியார் மருட்டாசை பண்ணோர் தவத்துள் ளணுகாமல் பவமே யறுத்துப் பார்வைவிழி கண்ணோ ஞானக் கருவிருத்திக் கண்டாய்ப் பொருளைக் கண்டாயே அய்யா வுமது தவமதுவால் அரம்பை மாத ரன்றுபெற்ற மெய்யாஞ் சான்றோர் கெதிகள்பெற்றார் மேவலோரு மிகப் புகழ்ந்தார் பொய்யாங் கலிய னுயிரிழந்து போனா னரக மீழாமல் அய்யா முட்டப் பதிதனிலே அழைத்தா ருந்த னப்பனென்றார் அழைத்தா ரெனவே சொன்னவுடன் ஆதி முனியை மிகநோக்கிப் பிழைத்தார் போலே மனமகிழ்ந்து பின்னு முனியோ டுரைபகர்வார் 40 இழைத்த கலியி னுள்ளிருத்தி என்னைக் கலியன் செய்தவலு சழத்த மறிந்து வந்தாரோ சமய மிதுவோ தானுரைப்பீர் நல்ல முனியே நம்மைக் கலியதனுள் செம்மைகெட்ட நீசத் தீபாவிக் கையதிலே கண்ணியிட்டு வைத்துக் கடக்கே நகண்டிருந்த புண்ணியவா னின்று பிழைத்துக் குதித்தாரோ நான்பட்ட பாடு நாடுபதி னாலறியும் ஏன்பட்டா யென்று இன்றுகேட்க வந்தாரோ ஏதோ தெரியலையே என்னுடைய நாயகமே பாதகன்தான் செய்த பாராத்தியங் களெல்லாம் பார்க்கும் படியாய்ப் பாரிக்கி றேனெனவே ஆர்க்க முடனே அந்நீசன் செய்தபடிக் கட்டுங் கயிறும் கையில் விழுந்திடத்தில் முட்டுக்கு மேலே ஊற்ற மிகநினைத்தார் வெடிப்புடங்கு தன்னால் விலாவி லிடித்திடத்தில் துடிப்புடனே ஊற்றம் தோன்றும் படியேவைத்தார் மேலில் பிரம்பால் மிக்க அடித்திடத்தில் சீல முடனே சிணந் தோணவைத்தனரே கன்னமதில் கம்பால் கனக்க அடித்திடத்தில் உன்னித மாக உடன்தோண வைத்தனரே கூண்ட முடியைக் குலுக்கியசைத் திடத்தில் வேண்டு முடியை மிகக்கழிய வைத்தனரே இப்படியே நீசன் செய்த இடறதுபோல் அப்படியே தோணவைத்து ஆங்காரங் கொண்டனரே பால்மாட்டை நீசன் பற்றிக்கொண்டே யடைத்து மால்பா லேற்கும் மாதிரியைப் பார்ப்போமென இந்தநாள் வரைக்கும் இருந்ததொன் றானதுக்குள் அந்தநீ சன்தான் அநியாய மாகவேதான் கொண்டு அடைக்க கோவேங் கிரிநாதன் அன்றுமுத லிருபத் தொருநாள துவரைக்கும் கோல மெடுத்துக் குருச்சமைந்த நாரணரும் பாலுமுதல் வேறு பண்டமொன் றேராமல் இருக்குந் தறுவாய் இதுநல்ல தாகுமென அருக்காக நீசன் அவன்செய்த வேதனைபோல் எல்லா முறைபோல் எடுத்தார் சொரூபமது நல்ல முனிமார் நாரணா என்றுநிற்க கைக்குள்ளே நின்ற கரியசீ சன்மாரில் மெய்க்குள் ளறிய விளம்பினா ரெம்பெருமாள்

அய்யா முட்டப்பதி ஏகல்

இன்றைத் திவசம் இசைந்தமுட் டப்பதியில் நன்றிப்போ போக நல்மணிக ளாகுதெனச் சொல்ல அறிந்து சீசன்மார் தாமகிழ்ந்து நல்லதெனச் சொல்லி நாடி யவரிருக்க அன்றிரா தன்னில் ஆரு மறியாமல் நன்றினிய சீசன் நாலுபேர் தாமறிய வந்த முனியும் வளர்ந்த இருமுனியும் சொந்தமுடன் நாதன் தொட்டில் மிகஏறி சீசன்மார் காவிச் சிணமாய் மிகநடக்க வாசமுள்ள மாமுனிவர் வலமிடமுஞ் சூழ்ந்துவரத் துடியாகத் தொட்டில் சுவாமி மிகஇருந்து வடிவான முட்டப் பதிதலத்தில் வந்தனரே முட்டப் பதியில் முகுந்த னரிநாதன் கிட்ட வருகும் கிருஷ்ணர்வந்து சேர்ந்திடவே மகனை மிகக்கண்டு மாவிருப்பத் தோடிளகி உகமாள வந்த உடையமக னேயுனத சடமெல்லாம் வாடி சடைப்பானே னென்மகனே வடவெல்லா மென்னோடு வகுத்துரைநீ யென்மகனே கண்ணே மணியே கருத்துள்ள நாயகமே விண்ணே வொளியே வேதத் திருவிளக்கே கலியில் மிஇருந்து கலக்க மிகஅடைந்த மெலிவெல்லாஞ் சொல்லி விளம்புநீ யென்மகனே அடித்ததா ருன்னை அவனிதனில் பேயனென்று கடுத்தமது செய்தக் கலக்கமெல்லாஞ் சொல்லுவென்றார் சொல்லென்று மாலும் சிவமு மெடுத்துரைக்க வல்லபெல மான வைகுண்ட ரேதுரைப்பார் செந்தூர்க் கடலில் செகலதுக்குள் ளென்னைவைத்து முந்த எனக்கு மொழிந்த வுபதேசம் கப்பாம லாறு வருசந் தவசாக மெய்ப்பாவின் பாலருந்தி வீடுசொத் தெண்ணாமல் கலிக்காசி யாசை கனாவில் நினையாமல் அலிக்கியானப் பெண்ணின் ஆசை யணுகாமல் பக்கக் கிளையாசை பாவித் தினிதாசை அக்கத்தி னாசை அனுப்போல் நினையாமல் நல்ல துணியாசை நளின மொழியாசை சொல்லினிய ஆசை தீன்பண்டத் தினாசை தேய்ப்புக் குளிப்புச் சிறந்த பொருளாசை தாற்பரிய மானச் சந்தோசத் தினாசை பூமியா சைமுதலாய்ப் பேராசை யும்வெறுத்துச் சாமி யுமதருளால் தொல்புவியி லுள்ளோர்க்குத் தண்ணீரா லெத்த சர்வ வியாதிமுதல் மண்ணிலுள்ளோர் யார்க்கும் வாய்த்ததர்ம மாகவேதான் நோய்தீர்த்து வைத்ததல்லால் நேட்டமொரு காசறியேன் வாழ்வில்லாப் பேர்க்கு வாழ்வு மிகக்கொடுத்தேன் தாழ்வடைந் தோர்க்குத் தாழ்வை விலக்கிவைத்தேன் பிள்ளை யில்லார்க்குப் பிள்ளை மிகக்கொடுத்தேன் கள்ளமெல்லாம் நீக்கிக் கழிவை வரத்தைவைத்தேன் வரம்வேண்டி நம்மிடத்தில் வைத்தந்தப் பேய்களையும் குரமாய் மலையில் கொண்டு எரியவைத்தேன் ஆயிரத் தெட்டு ஆன திருப்பதியில் வாயிதமாய் வாழும் வாய்த்ததே வர்தமக்கு ஞாயமில்லை பூசை நல்லாடு தீபவெலி தேயமதி லுங்களுக்குத் தேரோட்டமு முதலாய் ஏற்கப் படாதினிமேல் இராச்சியத்தி லுள்ளவர்தாம் மார்க்க வைகுண்ட வல்லாத்தான் வந்ததினால் பூசை படைப்புப் பெலிதீப மேராமல் வாச முடனே மறைந்திருங்கோ நீங்களெனச் சட்டமிட்டு வைத்தேன் தரணிபுற் பூண்டுவரை மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும் வையகத்தை யாளும் மாநீச னுமறிய மெய்யாய் விரித்து விளம்பிமிகச் சட்டமிட்டேன் இத்தனை சட்டம் இட்டவர்த்த மானமெல்லாம் மத்திய மாய்வைத்த மாமுனியோ டேகேளும் அல்லாமற் பூமிதனில் அவர்களறி யாதபடி வல்லாமை யாய்க்காசி வழங்குமிலை பாக்குவரை நானாசை கொண்டு நருட்களிடம் வாங்கினதை வானாசை யுள்ள மாமுனியோ டேகேளும் சதுராய் நருளறிய நல்லவெகு அற்புதங்கள் இதுக்காய் கிணற்றில் ஏகாச்சிலை யுங்காட்டி இருந்தேன் தவசாய் என்னுடைய நாயகமே பொருந்தாத காரியங்கள் புத்திக் குளறிமிகச் செய்துமிகக் காணாது செய்ய மணிவிளக்கே நிசமிதுவோ என்று நீரவரோ டேகேளும் இத்தனையுந் தர்மமதாய் யான்செய் திருக்கையிலே புத்திகெட்ட நீசன் பொல்லாதான் வந்தெனையும் கட்டி யடித்துக் கைவெடி யாலிடித்து இட்டிறுக்கி வைத்தான் இரும்பு விலங்கதிலே நஞ்சிட்டுத் தந்தான் நாடுஞ்சா ராயமதில் கொஞ்சுங் கடுவாய்க் கூட்டி லடைக்கவென்றான் நீச னவன்சாதி நிசமாகத் தான்கூடி ஏசி யெனைப்பழித்த இடறுசொல்லக் கூடாது ஐயோ அவர்கள் அடித்த அடிகளெல்லாம் வையம் பொறுக்காதே மாநீசன் செய்தவினை மாந்திர தந்திரத்தால் வஞ்சனைகள் செய்தெனையும் கோந்திர மாகக் கொல்லவகை செய்தார்கள் பாவிகள் செய்த பலவினைகள் சொல்லவென்றால் தாவு முலகில் தாலமதி லோலையில்லை என்னைத் தவத்துக்(கு) இருத்தியிது நாள்வரையும் இன்ன மிரங்கலையோ என்தவசு காணலையோ அன்றருளித் தந்த ஆண்டு திகையலையோ இன்று முதற்கலியில் யான்போக வில்லையையா நம்மாற் கலியில் நனின்றிருக்கக் கூடாது சும்மா எனைநீங்கள் சோலிபண்ணக் கூடாது நன்றிசற்று மில்லா நாற வெறுங்கலியில் கொண்டென்னை வைத்துக் கோலமது பாராதேயும் இனியென்னாற் கூடாது இக்கலியி லேயிருக்கப் பனிதவழு மாயவரே பகர்ந்தமொழி மாறாமல் ஆறு வருசம் அவனித் தவசிருந்தேன் தாறுமா றுண்டானால் சாட்சியோ டேகேளும் என்று வைகுண்டர் இத்தனையுஞ் சொல்லிடவே நன்றினிய மகனை நல்லமுகத் தோடணைத்து கண்ணே மணியே கருவூலமே கனக மணியே ரத்தினமே விண்ணே வொளியே கற்பகமே வேதச் சுடரே விளக்கொளியே மண்ணே ழளந்த மலர்பதத்தில் வந்தே குதித்த மலர்க்கொழுந்தே இண்ணே முதலா யுனக்குநல்ல இயல்பே யாகு தென்மகனே மகனே தவத்துள் ளிருக்கையிலே வருமோ செல்வ மாரார்க்கும் செகமே ழறியத் தவமுடித்துச் சென்றால் சிவனுக் ககமகிழ்ந்து தவமே முடித்த நினைவதுபோல் சகல கருமங் கைகூடும் அகமே யுனக்கு அருளினது அனுப்போல் தவறா தருள்மகனே செல்ல மகனே சீமானே நீகேளு நல்ல மகனே நாரணா நீகேளு தவவேடம் பூண்டு தவமா யிருக்கையிலே சிவஞான மல்லால் செல்வம்போல் காணாது தவசு நிறைவேறித் தமோதரர்க் கேற்று பவிசு மிகவேண்டிப் பலன்பெற்று வாழ்வார்கள் மகனே நீயிருந்த மகாதவத் தின்பெருமை செகமீதே சொல்லத் தொலையுமோ என்மகனே கள்ள யுகத்தைக் காணாம லேயறுத்து உள்ள நடுஞாயம் உகத்தீர்ப்புச் செய்துமிக ஆகாத்த தெல்லாம் அழித்து நரகிலிட்டு வாகாய்க் குழிமூடி வாசல் தனைப்பூட்டி மாறிய தில்லாமல் வங்கிஷமுந் தானொழித்து வேறுவகை செய்து மேலுமொரு நல்லுகமாய்த் தரும யுகமாய்த் தாரணிக்க மாயருளிப் பொறுமை மனுவாய்ப் பெரியசான் றோர்வழியை அன்பாக வைத்து ஆள முடிசூடிப் பண்பாக வேண்டும் பவிசு மிகவாகச் சாகா வுலகத் தர்ம பதியாள வாகாய்த் தவசு வகுத்து முடிக்கையிலே ஆங்கார மாமோ ஆணுவங்க ளங்காமோ ஓங்கார மாமோ உற்ற தவசதுக்கு தவசு நிறைவேறி தான்வந்த தாலேயினி பவிசு வுனக்குப் பகருகிறேன் கேளெனவே அருகில்வைத்த மாமுனியை அழைத்தார் திருமாலும் துரிதமுடன் மாமுனிகள் சுவாமி யெனத்தொழுதார் இந்தநாள் வரைக்கும் இவரிருந்த நற்றவசு சந்தமோ வீணோ தாமுரைப்பீர் மாமுனியே அப்போ முனிகள் ஆதி யடிபணிந்து தப்பெருநா ளில்லை தவத்துக் குறுதியுண்டு நூலொழுக்க மல்லாமல் நுண்ணிமைகள் தப்பவில்லை மாலொழுக்க மல்லாமல் மனதுவே றில்லையையா தப்பாத தவத்தில் சண்டித் தடிநீசன் சிப்பாயி விட்டுச் சுவாமி தனைப்பிடித்து முடித்தலையைப் பின்னி முழுநீசப் பாவியவன் அடித்து விலங்கில் அவன்கொண்டு வைத்தனனே வைத்துப்பல வேதனைகள் மாநீசன் செய்ததல்லால் மெய்த்தபுகழ் மாலே இவர்மேலே குற்றமில்லை என்று முனிமார் இசையத் திருமாலும் கொண்டுபோய் நீசன் கோட்டிசெய்த ஞாயமெல்லாமல் இருக்கட்டு மந்த இழிநீசன் செய்ததெல்லாம் குருக்கட்டு முறையின் குணத்தைமிகச் சொல்லுமென்றார் உடனே முனிகள் உள்ள மிகமகிழ்ந்து படபடென நின்று பணிந்து மிகப்போற்றித் தப்பில்லை யையா தவத்தி லொருபங்கமில்லை என்று முனிகள் இகபரத்துக் குத்தமமாய் அன்று உரைக்க அதகத் திருநெடுமால் நல்ல தெனவே நன்மகனைத் தானாவி செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென மகனை மிகக்கூட்டி வாரிக்குள் ளேநடக்கத் தவமுனிவ ரெல்லாம் சங்கீதம் பாடிவர பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட நாவாணர் போற்ற நாரா யணர்மகனை பாற்கடலி லுள்ள பாலமிர்தந் தான்வருத்தி ஆர்க்க முடனே அருமைமக னைமூழ்க்கி அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி முழுக்காட்டி மகனை உகந்தமுகத் தோடணைத்து வேதப் புரோகி விளங்கி மிகவாழ்த்த நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில் தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே மங்காத ஈசுரரும் மாதவனுந் தேவர்களும் சத்தி யுமையும் சரசு பதிமாதும் முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும் எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட நால்லோர்க் ளெல்லாம் நாடி மிகஇருக்க

முட்டப்பதி விஞ்சை 2

வல்ல திருமால் மகனை முகம்நோக்கி செல்ல மகனே சிறந்ததேதி வந்ததினால் திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும் ஒருவாரந் தன்னில் ஒருநா ளிடைவிடாமல் நித்தந் திருநாள் நீநடத்தி யென்மகனே சத்தகன்னி மாரைத் தான்வருத்தி மாலையிட்டுக் கலியாண மங்களங்கள் காட்சித் திருநாளும் சலியாமற் காசுத் தந்தவர்க ளுண்டானால் வேண்டிநீ தர்மம் விரைவாய் நடத்தியிரு ஆண்டத் திருநாள் அதுமுடக்கம் வராமல் பிச்சிவெள்ளை பச்சரிசி மிளகிலை தேங்காயும் மிச்சம்பழஞ் சந்தனமும் மிகுபன்னீர் வாடைகளும் மேற்கட்டி கட்டி மிகுவா யலங்கரித்து மாற்கட்டுச் செய்து மகிழ்ச்சை டம்மானமிட்டு இந்தப் படியாய் ஏழுநாளுந் திருநாள் அந்தப் படிசெய்து அவனியி லாடிக்களித்து எல்லா முறையும் இயல்பாகக் கொண்டாடி நல்லாண்டு தேதி நல்லதிவ சம்பார்த்துத் தெய்வகன்னி மாரைத் தெய்வச்சான் றோரிடமே மெய்வரம் பான மனுமுறைபோல் தான்பேசிக் கொடுக்கல்வாங் கல்முறையும் கூறி மிகக்கேட்டுத் துடுக்கான நல்ல தோகைக்குண மும்பார்த்து பார்த்துன் னருகில் பணிவிடைகள் செய்யுகின்ற தோற்றுகின்ற சீசனுடத் தொல்முறை யும்பார்த்து பரிய முறையும் பாவையர்கள் தம்முறையும் சரியா யுலகோர் சங்கை யதுபோலே தங்க நிறமானத் தர்மத் தலைவாநீ மங்கள மதாக மாலையிடு என்மகனே என்னோடு கன்னி ஏலமே சொன்னபடி தன்னோ டினங்கள் தலைவன்மா ரேழ்வரையும் எடுத்துக் கொடுத்து இளமுலைப்பால் தானூட்டி கொடுத்து இகனைக் கூறிக்கோ என்மகனே இப்படியே பெண்கள் இன்னுஞ்சில பேர்களுண்டு அப்படியே அவரவர்க்கு அந்தந்த வேடமிட்டு வகைவகையாய் வேசம் மாறி யுருவெடுத்துத் திகையாம லவர்க்குச் சொல்லு முறைபோலே கலியாணக் காட்சி கணக்குத்தீர் வைமுறையும் வலியானக் கலியில் வாழ்வைமிகக் கொண்டாடிச் சாம்பசிவக் கோலம் சாருமஞ்ச ணைக்கோலம் ஆம்பக் குறக்கோலம் ஆடிமிகக் கழித்து முற்றுந் திருநாள் முழுது மிகநடத்திப் பத்தும் பெரிய பாலர்தங்கள் வீடேகி விருந்து மிகவும் விரைவாகத் தானருந்தி திருந்து புகழ்கிளைபோல் சிலவீட் டமுதருந்தி பிச்சைபோ லுமருந்தி பெண்வழிச்சோ றுமருந்தி மிச்சமாய்ப் புவியில் வேண்டும் பவிசுடனே வெற்றியி டம்மானம் விருதுக் கொடிகள்கட்டிப் புத்திர ரானோர்க்குப் பிழைக்கும்வலு புத்திசொல்லிப் பாடித்தீர் வைதீர்த்துப் பரசோ தனைபார்த்து ஆடித்தீர் வைதீர்த்து ஆண்பெண் மிகவேகண்டு நல்லாண்டு கண்டு நாடும் மங்கையரைச் செல்லக் கலியாணம் செய்து சிறப்புடனே செந்தா மரையா ளுடனே சிறப்பிருந்து ஆனை கன்றீணி அதினா லுலகமெல்லாம் தானாக நீயும் தலைவ னெனச்சமைந்து முரணிக் கலியழிய முச்சுடரு மொன்றாவாய்த் தரணி யீரேழும் தடதடெனத் தானசைத்து நீயதின்மே லாளும் நிண்ணயத்தைக் கேள்மகனே தங்க முடிசூடிச் சான்றோர்க்கு நால்வரமும் அங்கவர்க்குத் தானருளி அழகு மிகக்கொடுத்து நல்லதர்ம மாக நாடும் புவியதிலே அல்லல்வினை யற்று அவனியதை நீயாள்வாய் அப்போ நீயரசு ஆளுகின்ற நாளையிலே செப்பொண்ணாச் செல்வம் சிறப்புமிக வுண்டாகும் பூமடந்தை வீட்டில் புகுந்து கொலுவிருந்து தாமுனிந்து நீயும் தரணிதனில் வந்தவுடன் நான்வந்து உன்னை நாடி மிகஎடுத்துத் தான்மகிழச் செல்வத் தலைவ னுனையாக்கிச் சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே எல்லைக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும் தீர்த்து உனக்குத் திருவம்ப லமருளித் தோற்றும் பதிகள் துலங்கும்வெகு ரத்தினமாய் எல்லா மருளி ஏழுமாதர் தாஞ்சூழ வல்லோனாய் நீயும் வாழுவா யென்மகனே மலங்காதே யென்மகனே மாதவங்கள் பெற்றவனே கலங்காதே யென்மகனே கண்ணேயென் கற்பகமே என்று மகனுக்கு ஈதுரைக்கு மிவ்வளவும் மன்று குலுங்காது வாரி யலுங்காது மேகங் குடைநிழற்ற மேவலர்கள் போற்றிநிற்க யோக முனிமார் ஓதித் தமிழ்கூற ஈசர் மகிழ்ந்து இரத்தின மதிலிருக்க வாசவனுந் தேவர்களும் வாய்பொற்றித் தாழ்ந்துநிற்க இப்படியே சங்கம் எல்லா மகிழ்ந்துநிற்க அப்படியே விஞ்சை யருளினா ராதியுமே விஞ்சையும் பெற்று வைந்தர் விரைவுடன் தகப்பன் பாதம் அஞ்சையும் புணர்ந்த சோதி அரனையும் வணங்கிப் போற்றி நெஞ்சையு மொன்றுள் ளாக்கி நிர்மலத் தாயைப் போற்றி கொஞ்சையுங் குணத்தி னாதன் கூறுவார் குருவைப் பார்த்து என்னையாட் கொண்ட நாதா எங்குமாய் நிறைந்த நீதா உன்னையான் கண்டு போற்ற உன்னருள் கிருபை தந்தாய் இன்னமுங் கலியில் போய்நான் இருந்திந்த முறைகள் செய்தால் என்னையாட் கொண்டு ரத்தினக் கிரீட மெப்போ தீவீரோ கிரீட மெப்போ தீவிரென் றெனக் கேட்ட மைந்தா அரிவிரி கொண்டே சூடி அணியிடை மாரைத் தோய்ந்து தரிவிதி யான போதும் தாமரைக் கைநிகழ்ந்த போதும் பரிவலம் வந்த போதும் பார்மக ளடைந்தா யன்றே உன்விதி யதனால் முன்னூல் ஊறிய அமிர்தந் தன்னால் என்விதி தன்னால் வந்த இகபர முனக்குள் ளாகி மன்முறை தெளிந்த தன்றும் மான்கன்று ஈன்ற தன்றும் பொன்மக ளகன்ற தன்றும் பூமக ளடைந்தா யன்றே பூமக ளுன்னைச் சேர்ந்து பின்னாறு வரைக்கு மேலே நானுகந் தன்னாற் போக்கி நகரொரு பகற்குள் ளாக்கித் தானுனைத் தங்க மானத் தயிலமாம் பதத்தில் மூழ்க்கி வானுனை மகிழ ரத்தின மகிழ்கிரீட மருள்வே னென்றார் மகனே யுனக்கு மகாசெல்வ மாகிவரும் சுகமேபோ யிரெனவே சொல்லி யனுப்பலுற்றார் அனுப்பத் திருமால் அமைமக வேதுரைக்கும் மனுப்புகழப் பெற்ற வைகுண்ட மேதுரைக்கும் பாவி வெறுநீசன் பண்ணிவைத்த பாட்டையெல்லாம் ஆவியறிந் தென்னுடைய அங்கமெல்லாஞ் சோருதையா என்று வைகுண்டர் இசையத் திருமாலும் அன்று மகனுக்கு அருளினது கேள்மாதே இந்நீசன் நமக்கு இந்த யுகம்வரையும் மன்னீதங் கெட்ட மாற்றானாய் வந்ததினால் செய்தா னதினால் திருமகனே யஞ்சாதே மைதான மான வாக்குநமக் காச்சுதெனக் கைவாய்த்து தென்மகனே கலிநீச னையறுக்க மெய்வாய்த்து நம்முடைய மேன்மைக் குலத்தோர்க்கு அன்பான் சீமை அரசாள நாளாச்சு தன்பா லடைய சரியாச்சு தென்மகனே மலங்காதே போநீ வாழுகின்ற நற்பதியில் கலங்காதே போயிருநீ கண்ணே திருமகனே

முட்டப்பதியிலிருந்து அய்யா தோப்புப்பதி திரும்புதல்

என்று விடையருள ஏற்ற திருமாலும் அன்றுதிரு மாலும் அன்பாய் விடைவேண்டி அலைவாய்க் கரையில் ஆதி வருகுமுன்னே நிலையான சான்றோர் நிரம்பவந்து கூடினரே கண்டந்தச் சான்றோரைக் கரியமா லுமகிழ்ந்து நன்றென்று சொல்லி நாராயணர் கூட்டிப் பண்டிருந்த நல்லப் பதியில்வந்து சேர்ந்தனரே கண்டெந்தப் பேரும் கனபிரிய மாய்மகிழ்ந்து தாமோ தரனார் தலத்தில் மிகச்சேர்ந்து நாமோ முனிகூட நாடி மிகஇருந்தார் இருந்து மிகப்பாலும் ஏற்றநல்ல பச்சரிசி திருந்து சிறுமணியும் தேங்காய்ப்பூ தன்னுடனே கொல்ல மிளகு கூண்டப் பொடியுடனே நல்லாக இவ்வகைகள் நாடியொரு நேரமதாய் காவி மிகப்புரிந்து கனத்திருத்தி ராட்சமிட்டுத் தாவமுடன் மாத்திரைக்கோல் தானிதுவோ டேயிருந்தார் கொஞ்சநாள் கழித்துக் கூண்டதிவ சம்பார்த்துப் பஞ்சகரு ணாதிகளைப் பண்பாகத் தானிறுத்திக் கந்தை மிகச்சூடிக் காவித்தொட்டில் மீதிருந்து விந்தை யுடனுகத்து விவரிப்பெல் லாமெடுத்துக் கூறினா ரந்தக் கூண்டரியக் காரணத்தை பேறிருக்கும் நல்லோர் பெரிய பெருமானும் நாடழியப் போறதுவும் நன்னாடு தோன்றுவதும் பாடழிய நீசன் படப்போற செய்தியதும் நல்ல மனுவோர் நாடி முழிப்பதுவும் வல்லபுவி தர்மம் வாழ்வதுவுஞ் சிறப்பும் சொல்லி விரித்தார் சிறந்ததொட்டில் மீதிருந்து எல்லோருங் கேட்டு இப்போதோர் காரணந்தான் நடத்துகிறா ரென்று நல்லோர்கள் சொல்லிடுவார் சடத்தமுள்ள நீசச் சண்டாளப் பாவியெல்லாம் காசு மிகவேண்டக் கபடுசெய்கி றானெனவே பேசி யிவனும் பிதற்றுகிறா னென்றுசொல்லி நகைப்பார் சிரிப்பார் நன்றிகெட்ட நீசர்குலம் சிக்ப்பா னதுவால் தெய்வகுலச் சான்றோர்கள்

சான்றோர் பக்தி

கூடிக் குவித்து குணமாக வேகூடித் தேடிவைத்த பண்டம் சுவாமி தனக்கெனவே நம்முடைய சஞ்சலங்கள் நாடும்பிணி தீர்த்தவர்க்குத் தம்முடைய பாலு தாங்கொடுக்க வேணுமென்று பசுவைக் கொடுப்பார் பாலாடு தான்கொடுப்பார் கசுவிரக்க மாகக் காசு பணங்கொடுப்பார் கஸ்தி மிகத்தீர்த்த காயாம்பு வண்ணரென்று வஸ்திரங் கொடுப்பார் வழங்கு மிலைகொடுப்பார் நெல்லு சிறுமணிகள் நெய்த்தேங் காய்கனிகள் நல்லமைப்புச் சான்றோர் நாடி மிகக்கொடுத்தார் கொடுக்க அன்பரெல்லாம் குணமாய் மிகவேண்டி அடுக்க அவரருகில் அன்பாக நின்வரில் பணிவிடைகள் செய்வோர்க்குப் பரிந்து மிகஈந்தார் மணியாம் பரனும் மகிழ்ந்துபா லேற்றனரே ஏற்று உகத்துக்கு உகத்தீர்ப் பும்புரிந்து சாற்று மொழிகூறித் தானிருக்கு மப்பொழுது மாயத் திருமால் மால்வேச மேயெடுத்துத் தேயமதில் நம்முடைய தெய்வகுல மாதர்களை வருவிக்க வென்று மாஞால வித்தையினால் உருவிக்க வென்று உலகநரு னானதிலே தாக்கி உடலுள் தமனிய மாய்ப்பொதிந்து நோக்கு முறைகாண்டம் நேர்மை மொழிமொழிந்து பெண்ணாண் வரைக்கும் பெருங்கிழவி தான்வரைக்கும் கண்ணா னமதலை கைக்குழந்தை முதலாய்ப் பாட்டு வித்தேசம் படிப்புவித் தேசமுதல் ஆட்டுவித் தேசம் ஆட்டி மிகவருத்தி முன்னமைத்த பெண்ணை எல்லா மிகப்பார்த்துச் சொன்ன முறைபோல் சிணம்செய்ய லாமெனவே இட்டா ரொருசூட்சம் ஈசர்முத லெல்லோரும் மட்டாரும் சூட்சம் வையகத்தி லேயாவி சாதிபதி னெட்டும் ஆராட்டுப் பார்த்தனரே ஆதிச்சா திதனிலே அமைப்புபோ லுள்ளவர்கள் தானிறைந் தாடித் தண்மை மிகக்கூறி வானிறைச் சோதி மயமாய்க் குதித்தனரே இப்படியே சான்றோரில் ஏற்றபெண் ணாண்வரையும் அப்படியே நன்றாய் ஆராதனை யாகி ஊருக்கூ ரேயிருந்து உற்ற நருட்களெல்லாம் பாருகங் காணப் பண்பாகக் கொண்டாடி உமைபார் வதியெனவும் உற்றமுத் தாரெனவும் இமையோர் புகழும் இலட்சுமி நானெனவும் சத்திகன்னி மாதரென்றும் தார்குழலார் தோழியென்றும் பத்தியுள்ள நல்ல பரமே சொரியெனவும் மண்டைக்காட் டாளெனவும் மாதுநல்லாள் தோழியென்றும் பண்டையுள்ள ஈசொரியாள் பாக்கிய வாட்டியென்றும் வள்ளிதெய் வானை வாய்த்தபக வதியெனவும் பூம டந்தையென்றும் பெரிய பிராட்டியென்றும் பார்ம டந்தையென்றும் பத்திரமா காளியென்றும் நாகக் கன்னியென்றும் நல்லதெய்வக் கன்னியென்றும் பாகைக் கைகாட்டும் பைங்கிளிமார் நாங்களென்றும் இப்படியே நல்ல ஏந்திழைமா ரெல்லோரும் அப்படியே நல்ல அவனிப்பெண் ணார்பேரில் ஆரா தனையாய் அங்கங்கு தான்கூடி சீராகக் கூடிச் சேர்ந்துவரு வார்தினமே ஆண்பிள்ளை கள்பேரில் ஆனசிவன் மாலெனவும் நான்பிரமா வென்றும் நல்ல அனுமனென்றும் காலனென்றும் ஏமனென்றும் கடியபெலக் கந்தனென்றும் மாலவனின் மக்களென்றும் மாமுனிமார் நாங்களென்றும் தேவ ரிஷியெனவும் சிமிள்கருட சேவனென்றும் தாவமுள்ள நல்ல சன்னாசி மார்களென்றும் ஆரா தனையாய் அவர்கள் மிகஆடிச் சீராகக் காண்டம் செப்பிமிகப் படிப்பார் வருவார் தினமே மாயோனிட மதிலே கருவா யுதித்த காண்டம் மிகப்படிப்பார் இப்படியே பெண்ணாணும் யாம முறைப்படியே அப்படியே வந்து ஆடி மிகப்படிக்க நல்லநா ராயணரும் நாட்ட மிகஅறிந்து வல்லப் பொருளும் மனது ளறிந்திருப்பார் அறிந்து சிலநாள் அகமகிழ்ந்து தான்பார்த்துச் செறிந்த குணநாதன் தேதி கணக்கதிலே இகனை நடத்த எண்ணமுற்றி ருக்கையிலே உவமை பலசொல்லி உற்றதெய்வக் கன்னியர்கள் அனைவோ ரும்புகழும் அரன்கயிலை வாழ்ந்ததுவும் சுனையாடப் போனதுவும் தூயோ னடத்தினதும் பிள்ளைதனைப் பெற்றதுவும் பெருவனத்தில் சென்றதுவும் வள்ளல் சிவனை வருந்தித் தவம்புரிந்து உலகில்மிகத் தோன்றும் உள்ளவர்த்த மானமெல்லாம் சிலைநுதலிக் கன்னி சொல்லி மிகப்படிப்பார் அப்போ திருமால் அடக்கி மிகமனதில் செப்புவ தெல்லாம் சிந்தைதனில் கொண்டிருந்தார் உமைமண்டைக் காட்டாள் உற்ற பகவதியாள் இமையோர் புகழும் ஏற்றகுல பார்பதியாள் சீதை மடந்தை சேயிழைமா ரெல்லோரும் மாதவனை நோக்கி வளங்கூறி யேபடிப்பார் பாவிக் கலியன் பழிநீசன் தோன்றினதால் மேவிக் கலியில் மிகமூழ்கி மாயமதால் மாயக் கலியை வதைக்குமந்த நாளையிலே தேசமதி லெங்களையும் திருக்கல்யாண முகித்து எங்களுட நாயகனார் இங்குவரு வோமெனவும் எங்களையு மிங்கே இக்கோல மாய்வரவே சொல்லி யயைச்ச சுவாமிநீர் வந்தீரோ பல்லுயிரும் பணியும் பரமனேநீர் வந்தீரோ என்று மடவார் இப்படி யேயிசையப் பண்டு முறைபோல் பிரப்பிரம மாயிருக்கும் எண்ணித் திருமால் இருதயத்தி லேயடக்கி மண்ணி லுள்ளோர்கள் வந்துமிகக் கூடிநிற்க மேலோகத் தார்கள் இறைஞ்சிமிகப் பார்த்துநிற்கப் பூலோக மெல்லாம் புதுமையெனப் பார்த்துநிற்க அப்போது மாயாதி ஆகமத் தின்படியே செப்போடு வொத்த தேசத் திருப்பதியில் வாழுகின்ற தேவரையும் வாகாய் வரவழைத்து நாளுக்கு நான்சொன்ன ஞாய முறைப்படியே நடத்தாம லிப்போ ஞாயமீறி நீங்கள் அடத்தமாய்ச் செய்வதென்ன எல்லோருஞ் சொல்லுமென்றார் உடனே யெல்லோரும் உள்ள மிகத்தளர்ந்து திடமே குளறிச் சொல்லவா யில்லாமல் புத்தி மயங்கிப் பொறியழிந்து தேவரெல்லாம் சத்திகெட்டார் போலே தானே விறுவிறுத்து நின்ற நிலையை நெடியதிரு மாலறிந்து குன்றுதனில் கொண்டு கொழுவிலங்கில் தான்சேர்த்து மன்று ஒருகுடைக்குள் வைகுண்டம் ஆளவரும் இன்றுமுதல் லக்குவரை இருங்கோ பாராவதிலே வைத்தாரே நல்ல வடவா முகமதிலே செய்த்தான் விதியெனவே தேவரெல்லா மிருந்தார் அந்த அவதாரம் அதிக முடனடத்திச் சந்தான மான சப்தகன்னி மாரையினி மாமணங்கள் செய்து மாதரேழு பேர்களுக்கும் தாமதங்க ளின்றி சந்ததிகள் தாங்கொடுத்து இராச்சிய முங்கொடுத்து ஏற்றபவி சுங்கொடுத்(து) இராச்சிய மாளச் செய்யவே ணுமெனவே நினைத்துத் திருமால் நின்றிதயத் தேயடக்கித் தனத்தனங்கள் பாடித் தந்தனங்கள் போடலுற்றார் தினத்தினங்கள் பாடித் திருவேடம் போடலுற்றார்

சத்தகன்னிமார் வருகை

முன்னே குருநா டைவருக்கு மீண்டு கொடுத்து மிகக்கலியால் பொன்னோர் மானா யுருவெடுத்துப் பொருப்பே யேறி முனிகையினால் சென்றோங் கூடு மிகப்போட்டு ஸ்ரீரங்க மேகச் செல்வழியில் மின்னா ரிவர்க ளேழ்வரையும் மேவிப் புணர்ந்தோ மவ்வனத்தில் வனத்தில் புணர்ந்து மாதர்களை மக்க ளேழும் பெறவருளிப் புனத்தில் காளி தனைவருத்திப் பிள்ளை யேழு மிகஈந்து இனத்தில் பிரிந்த மானதுபோல் இவர்க ளேழு மடவாரை வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக் கொடுத்து மீண்டோமே மீண்டோங் கயிலைக் கிருந்துபின்னும் மெல்லி யிவர்கள் தவம்பார்க்க ஆண்டோர் சிவனா ருமையாளும் யாமுந் தவத்துக் கருள்புரிந்து சான்றோரிடமே பிறவிசெய் தரணி தனிலே நாம்வருவோம் என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே முற்பிறவி செய்த மொய்குழலார் வந்தாரென நற்பிறவி கொண்ட நாரா யணர்மகிழ்ந்து ஆடரம்பை மாரை அருமைமணஞ் சூட்டவென்று வேடம திட்டார் வீரநா ராயணராய் நாரா யணராய் நல்லதிரு வேடமிட்டுச் சீரான காவிச் சீலை மிகப்புரிந்து ஒருதோளில் பொக்கணமும் உத்திராட்ச மாலைகளும் துரித முடன்சிரசில் துளசிமா லைபுனைந்து கையிற் பிரம்பும் கனத்தசுரைக் கூடுடனே மெய்யில் வெண்பதமும் உத்திராட்ச மாயணிந்து மாலு நிறமாய் வாய்த்ததொட்டில் மீதிருந்து ஆகமத்தி லுள்ள அறிவுஞா னம்பேசிப் பாகமதில் நிற்கும் பாலதியச் சான்றோரைப் பார்த்து அருகழைத்துப் பச்சைமா லேதுரைப்பார் நாற்றிசை யுமறிய நல்லகுலச் சான்றோரே உங்களுட தாய்மார் உற்றகன்னி மார்களைநான் எங்க ளுடவிதியால் இப்போமணஞ் சூட்டுதற்கு விதிவந் திருக்குதுகாண் வேளையி தானதினால் பெரியவுங்கள் தாய்மாரைப் பேயழைத்து வாருமென்றார் நால்திசையும் நீங்கள் நடந்துமிக சத்தமிட்டு மாலதியப் பெண்ணை வரவழைத்து வாருமென்றார் சீரான நூல்முறைக்கு தேனெயெங்கள் தாய்மாரே நாரா யணர்க்கு நல்லமணஞ் சூட்டுதற்கு நாளான நாளிதுவாம் நன்னுதலே தாய்மாரே தாழாமல் வாருமென்று சத்தமிட் டழையுமென்றார் இப்படியே சொல்லி ஏற்றபுகழ்ச் சான்றோர்கள் அப்படியே சொல்லி அழைத்தாரே சத்தமிட்டுப் பாலருட சத்தம் பாவையர்கள் கேட்டுமிகச் சீல முடனெழுந்து தெய்வமட மாதர்வந்தார் வந்துமிக நாரணரை வாழ்த்தி மிகவணங்கி சந்துஷ்டி யாகத் தங்கள்தங்கள் வாக்கில்நின்று முன்முறைகள் சொல்லி மொழிந்துமிகப் படித்தார் தென்பதிக ளான தெச்சணா பூமியிலே நான்வந் திருந்து நானிலத் துள்ளவர்க்குத் தீனம் பலதீர்த்து ஸ்ரீபண்டா ரமெனவே நாம மிகக்கூறி நாட்டிலிருப் போமெனவே சொல்லி யெங்கள்தம்மைத் தொல்புவியில் வாருமென்று நல்லவராய்ச் சான்றோருள் நாடிப் பிறவிசெய்தீர் பிறந்து வளர்ந்து என்பேரு கேட்டவுடன் மறந்திடா வண்ணம் வாருங்கோ என்றுசொல்லிப் பிறவிசெய்த நாயகரே பெரியவரே வந்தீரோ கங்கை திரட்டி கறைகண்டர் தன்சிரசில் பெண்க ளேழுபேரும் பிரியமுடன் வாழ்ந்திருந்து எங்கள்கற் பெல்லாம் ஈடழிய வேதுணிந்து சங்கை யழித்த தலைவனேநீர் வந்தீரோ எங்களுட பிள்ளை ஏழு மினவழியும் அங்கங் குறையாமல் அவ்வழிகள் தாமுழுதும் கொத்தோ டேசேர்த்துக் குடும்பத்தோ டேயடக்கிப் பெற்றோர்க்கு எல்லாம் பெருவாழ்வு தான்வகுத்து எங்களையுஞ் சேர்த்து இரட்சிய முமருளி மங்களமாய் வாழ்வோமென்ற மாதவரே வந்தீரோ இனியிப்போ தேழ்வரையும் ஏற்ற மணம்புரிந்து வனிதவழு மாயவரே வைத்தாளு மென்றுசொல்லிப் பாடியே மாமடவார் பாதம் பணிந்துநிற்க நாடியே யெம்பெருமாள் நல்லதா கட்டெனவே அருகில் மிகநிற்கும் அன்பான சான்றோரை வருக அழைத்து வார்த்தைமிகக் கூறலுற்றார் எந்தனக்கு முன்னமைத்த இளங்குழலா ரேழ்பேரும் வந்தன ரேயிவர்கள் வளப்பமென்ன சொல்லுமென்றார் கன்னிதானோ யிவர்கள் கள்ளிகளோ பாருமென்று உன்னி மனதுள் உபாயமாய்த் தானுரைத்தார் நடையுடைகள் பேச்சு நாரியர்கள் தங்குணங்கள் மடமயிலின் சாடை மாதிரியைப் பாருமென்றார் அப்போது சான்றோர் எல்லோரு மேமகிழ்ந்து இப்போது எங்களுக்கு ஏதுந் தெரியாது படைத்தவர்க் கேதெரியும் பாவையரின் தங்குணங்கள் செடத்தமெல்லா மெங்களுக்குத் தெரியா தெனவுரைத்தார் மாயவர் தான்பார்த்து மாதுகளைத் தாநோக்கித் தூயவர் தான்வார்த்தைச் சொல்லுவார் பெண்களுடன் நானெப்போ துங்களையும் நடுவனத்தில் கண்டதுதான் தானெப்போ வந்தேன் தார்குழலே நானறியேன் காட்டிலே வந்ததெப்போ கற்பை யழித்ததெப்போ பேட்டிசெய்து பிள்ளை பெற்றதெப்போ நானறியேன் ஒன்றுந் தெரியாது உங்களைநான் கண்டதில்லை பெண்டுகளே யிப்பேச்சுப் பேசாதே போய்விடுங்கோ மாயமாய் நீங்கள் மருட்டி விழியாதுங்கோ பாயமா யுங்கள் பகட்டி லடங்கேனான் பண்டாரத் தோடே பழிமொழிகள் பேசாதே அண்டாது உங்கள்மொழி அகலநின்று போய்விடுங்கோ என்று அடாத்தியமாய் இவர்தான் மிகமொழிந்தார் நின்று நினைத்து நேரிழைமா ரெல்லோரும் அடந்து மடவார் ஆகத்திரண் டேகூடித் தொடர்ந்து நெருங்கித் தொட்டுப் பிடிக்கவென்று தார்குழலில் மூத்த சாத்திரத்தா ளேதுரைப்பாள் வாரணியுங் கூந்தல் மடவா ரென்தங்கையரே கள்ளக் கவுலாய்க் கண்மாயஞ் செய்துஅன்று மெள்ள நெகிழ்ந்த மெக்குவாய்த் தாதனையம் சென்று பிடித்துச் செய்தியென்ன கேளுமென்று தன்றுபுகழ் சாத்திரத்தாள் தங்கையரைக் கண்காட்ட மடவார்க் ளெல்லாம் மாகோப மாய்வெகுண்டு அடவாக மாயவரை அடர்ந்து பிடிக்கலுற்றார் தேன்மொழி மாரே யென்றன் சித்திரத் தங்கை மாரே கான்வன மதிலே நம்மைக் கைகலந் திழிவு செய்த மான்முனி தன்னைக் கண்டோம் வார்த்தையில் குழைக்கார் சோற்றை வான்முனி தன்னை நீங்கள் வளையுங்கோ சிணமே யென்றாள் செப்பிட மூத்த கன்னி தேவிய ராறு பேரும் அப்படி ஒன்று போலே அவர்வளைந் தாதி தன்னை முப்படி யெங்கள் தம்மை மொய்வன மதிலே வந்து கற்பினை இகழச் செய்தக் கள்வரே யென்று சூழ்ந்தார் சூழ்ந்தே நமது துகிலைமுன்னம் சுழியஞ் செய்த மாமுனியைப் பூந்தே நெருங்கித் துகிலுரியப் பிடித்தே யிழுத்து நாமீன்ற சாந்தோர் மக்க ளேழ்வரையும் தரவே யென்ன செய்தியென்று ஓர்ந்தே கேட்போ மென்றுசொல்லி ஒன்றுபோலே வளைய லுற்றார் வளைந்த போது மாயவரும் மனது ளுபாய மொன்றெடுத்து இளந்த மொழிகள் சொன்னாக்கால் இளப்ப மிதுவே யாகுமென்று குழைந்த வார்த்தை மிகக்கூறி குழந்தை யேழு மினவழியும் நுழைந்தே யெடுத்து நொடிப்பொழுதில் நேரேகொண்டு தாறோ மென்றார் தரு (பல்லவி) பிள்ளையை நாம்தா றோம்-நீங்கள்பெற்ற பிள்ளையை நாம்தா றோம் அனுபல்லவி பிள்ளையை நாம்தாறோம் கிள்ளை மடவாரே கள்ள மொழியில்லை உள்ளதைச் சொல்லுகிறோம் (பிள்ளை) சரணம் காட்டு வனத்திலே கண்டுங்கள் தம்மையும் லோட்டுகள் பார்த்துநீ ருடுகலை தோற்றதும் மேட்டுக ளாயென்னை யெரிக்கத் துணிந்ததும் பூட்டுகள் சொல்லாமல் பெண்ணேநீர் பெற்றிடும் (பிள்ளை) அருவன மீதினி லமிர்தவாழ் கெங்கையில் சொரூபமாய் நீங்கள் சுனையாடும் வேளையில் வரும்வழி மீதுங்கள் வாய்மொழி மதங்கண்டு கருவது கொண்டுநீர் காட்டினி லீன்றிடும் (பிள்ளை) உறுவன மீதிலென் உபாயத்தை யறியாமல் முறுவல்செய் தென்னைநீர் மொழிந்தது கண்டுநான் இறுவான மேலோக எழுபுவி உயிரெனப் பெறுகநான் செய்திடப் பேணியே நீர்பெற்றப் (பிள்ளை) மடமயில் மாதே நீங்கள் வந்தென்னை நெருக்க வேண்டாம் தொடவும்நீர் ஞாய மில்லை தூரவே யகல நின்று அடவதில் பெற்ற பிள்ளைக்(கு) அடையாள மறியச் சொன்னால் உடனிப்போ மதலை தந்து உலகமு மருள்வோ மென்றார் அய்யனே குருவே யெங்கள் ஆதியே சோதி யான மெய்யனே வொப்பில் லாத வேதநன் மணியே கேள்மோ வெய்யநல் மதலை யீன்று வெட்கமு மிகவே யாகிக் கையது தப்பி யோடக் கண்டமோ மதலை யென்றார் தரு(பல்லவி) மதலையைத் தாருமையா-நாங்கள் பெற்ற மதலையைத் தாருமையா அனுபல்லவி மதலையைத் தாருமெங்கள் வயிறெல்லாங் கொதிக்குது குதலைமொ ழிகள்கேட்டுக் கொஞ்சிக் குழைந்திருக்க (மதலை) சரணம் பெற்றநா ளின்றுவரைப் பிள்ளைதனைக் காணாமலே மெத்தம னதுநொந்து மெய்யந்த ளருதையோ (மதலை) வாலைப்ப ருவத்திலே வனத்தில்ம யக்கமிட்டுக் கோலம ழித்தவேத கோலகால மாமுனியே (மதலை) பாலர்பெற்ற நாள்முதலாய்ப் பன்னிரண்டு ஆண்டுவரைக் காலதி ழகாமலே காட்டில்த வசிருந்தோம் (மதலை) ஊணுஉ றக்கமில்லை ஒருவரின் தஞ்சமில்லை மூணுநாலு காலம்வரை மூண்டத்த வசிருந்தோம் (மதலை) சிங்கங்க ரடிபுலி திரியும்வ னத்தினூடே நங்கைமா ரேழ்பேரும் நாடித்த வசிருந்தோம் (மதலை) இத்தனைநா ளுந்தவ மிருந்துபின் னாங்களெல்லாம் பெற்றநல் மனுவயிற்றில் பிறந்துவு தித்துவந்தோம் (மதலை) முன்னிருந்த செல்வமென்ன மூதூர்சி றப்புமென்ன மன்னுகந்த மாதுமையை மறந்துக லியில்வந்தோம் (மதலை) ஆண்டச்சி றப்புமென்ன அருஞ்சுனை யாடலென்ன காண்டம்நிறை வேறுதற்கோ கலியிலு தித்துவந்தோம் (மதலை) உண்டிருந்த செல்வமென்ன உடுத்ததுகில் ஞாயமென்ன கொண்டிருந்த விதிப்பயனோ கூறுகலி மீதில்வந்தோம் (மதலை) பந்தடிக்கும் வீரமென்ன பூத்தொடுக்கும் சாரமென்ன முன்னுரைத்து விட்டதுபோல் மூண்டகலி மிதில்வந்தோம் (மதலை) கன்னிய ழியுமன்னே காதல்தனைப் பெற்றதினால் நின்னுபிள்ளைப் பாராமலே நெடுகந டந்துவிட்டோம் (மதலை) கண்டுபிள்ளைத் தானெடுத்துக் கமலமுகத் தோடணைத்துப் பெண்டேழும் பால்கொடாமல் பெருகவ னத்தில்சென்றோம் (மதலை) பாலிளகி நல்லமிர்தம் பாலாய்ச்சொ ரியுதையோ மாலழகா எங்களுட மனக்கவ லையைத்தீர்க்க (மதலை) வர்ணநி றமதுவும் மக்களுட சாயலதும் கண்ணதிலே கண்டறியோம் கையதிலே தாருமையா (மதலை) அங்கமெல்லாஞ் சோருதையோ ஆவிமெத்த வாடுதையோ தங்கமணி நாங்கள்பெற்ற தவமணியை எங்கள்கையில் (மதலை) மங்காத தெய்வகுல மக்களேழு மேழ்வழியும் சிங்கார மாகஇப்போ சீக்கிரம்நீர் தாருமையா (மதலை) மதலையுந் தந்து எங்கள் மனச்சட வெல்லா மாற்றிக் குதலைகள் தமக்கு இந்தக் குருமுடி சூட்டித் தர்மப் பதியுக மதிலே யெங்கள் பார்முடி மன்ன ராக நிதமிருந் தரசே யாள நின்மக்கள் தருவீ ரென்றார் தருவீ ரெனவுரைக்கு மடமாதே நீங்கள் சந்ததியைப் பெற்றிடத்தில் தயவாய்ப் பாரும் பெருகியே வாழ்ந்திருப்பா ரங்கே சென்று பெற்றிடத்தைப் பார்க்குகையி லுண்டு மங்கே மருவி யென்னைக் கேளாதே காட்டினூடே வாழ்ந்திருப்பார் கண்டுகொள்வீர் திட்டஞ் சொன்னோம் சருவியென்னை நெருங்காதே மடவீ ரெல்லாம் சந்ததியைத் தேடிவனஞ் செல்லு வீரே செல்லுவீ ரெனமொழிந்த தேனே கண்ணே சீமானே நாமாது புரக்கு மாலே பல்லுயிரு மிகப்படைத்தப் பாக்கிய வானே பருவனத்தி லெங்களைநீர் பற்றி வந்து தொல்லைவினை செய்துநாம் சுமந்து பெற்ற சுத்தகுல மானதெய்வச் சான்றோர் தம்மை இல்லிடத்தி லிப்போது தருகி லானால் இழுத்து வும்மைச் சந்தியிலே ஏற்றுவோமே சந்தியி லேற்றுவோ மென்ற மாதேகேளு தருவதுண்டோ முன்கடன்கள் தந்த துண்டோ பந்தியழித் துங்களுடப் பேச்சை நானும் பகருவே னுங்களைப் பார்பழித்துப் பேச முந்தியிதை யுரைத்திட்டே னோடிப் போங்கோ உலகநருள் அறிந்தாக்கால் சிரிக்க லாகும் சிந்தனைக்கே டாகும்வரை நிற்க வேண்டாம் தேன்மொழியே மறுவிடம்போய்த் தேடு வீரே தேடுவீ ரெனமொழிந்த இந்திர ஜாலம் தெய்வமட மாதரொடு செலுத்த வேண்டாம் நாடுபதி னாலறியு முமது கள்ள ஞாயமது எங்களொடு நவில வேண்டாம் வீடுவழி தோறும்விருந் துண்டு முன்னே மெல்லிமட வார்சிலரைக் கொள்ளை கொண்டு பாடுபட்ட பாட்டையினி நாங்கள் சொன்னால் பாரிலுள்ளோ ருமைப்பேசிப் பழிப்பர் காணும் பழிப்ப ரெனச்சொன்ன இளம்பாவை மாரே பாரிலுள்ளோ ரறிவார்கள் பச்சை மாலின் களிப்பதுவுங் காண்டமுறை நூல்கள் தோறும் காரணத்தைச் சொல்வார்கள் கருதிக் கேளு சுழிப்பதுவு மமைப்பதுவும் நமக்குள் ளாகும் தோகையரே யிதுஎனக்குச் சொந்த வித்தை குளிப்பதுவில் சுனையாடி மதலை யீன்றக் கோலமதைச் சொன்னாக்கால் குறைவ தாமே குறைவதா மெனச்சொன்னக் குறவா கேளும் கோவேங் கிரிவாழுங் குலமா மாதர் மறைமுதல்வ னானசிவ னார்க்கு நாங்கள் வந்துசுனை யாடிகெங்கைத் திரட்டி யேகத் துறையறியாக் களவாண்டுத் தேய்ந்த கள்வா தொல்புவிக ளறியாதோவுன் சுத்தக் கள்ளம் இறையளவு மெய்யில்லாப் பொய்யே சொல்லும் ஏமாளிக் கள்ளரென எவருஞ் சொல்வார் கள்ளரெனச் சொல்லிவந்த மாதே நீங்கள் களவாண்டீர் கயிலையதி லீசர் முன்பில் வெள்ளமது திரளாமல் கள்ளத் தாலே வெம்மருண்டு நின்றவித வெட்கங் கண்டு வள்ளல்சிவ னாரறிந்துக் கலியில் சான்றோர் மேல்வழியில் பிறக்கவென்று சபித்தார் முன்னே உள்ளதெல்லாஞ் சொல்லிடுவே னோடிப் போங்கோ ஓகோகோ வெனச்சொல்லி யுறுக்கி னாரே உறுக்கிநீ ருரைத்தசுணை யுமக்கே யல்லால் ஓவியங்க ளேழ்பேர்க்கு முண்டோ சொல்லும் இறுக்கிவைத்த நீரிளகச் சேய்த கள்ளம் ஈசர்முத லெல்லோருஞ் சொல்லு வார்கள் சிறுக்குமிடை மாதருட வீட்டில் வெண்ணெய்த் திருடியுண்டக் கள்வரெனச் சொல்வா ரும்மை பொறுக்கஇனி மாட்டோங்கா ணுமது ஞாயம் புகன்றிடுவோ மினியண்டம் பொடியத் தானே பிட்டுக்காய் மண்சுமந்து வைகை தன்னில் பிரம்படிகள் பட்டதுவும் போதா தென்றோ கெட்டுமிகப் பட்டீரே இடைச்சி கையால் கேள்வியில்லா முப்பரத்தில் கிழவன் போலக் குறுங்கண்ணி போட்டிழுத்துக் குனிய வைத்தப் பொட்டதுவுங் குலைத்திடுவோம் நாங்கள் பெற்றப் பிள்ளைதனை தந்துபுவி யான வைப்பீர் ஆடெடுத்தக் கள்வரல்லோ வுமக்குச் சூடு அணுவளவுந் தோற்றாம லலைந்து எந்த நாடடுத்த இடமெல்லாம் வேசம் போட்டு நாணமதொன் றில்லாமல் நாரி மார்தம் வீடடுத்த மனைதோறு மிரட்டிக் கொஞ்சி வேசியொடு கூடிவிளை யாடுங் கள்ளக் கூடெடுத்த மறையல்லோ எங்கள் தம்மைக் குவலயத்தில் கள்ளியெனக் கூறி னீரே இன்னமுண்டு வுமக்குவெகு பங்கந் தானும் எடுத்துரைத்தா லிப்போது இளப்ப மாகும் முன்னமைத்தப் பாலரையு மினத்திற் சேர்க்கை முழுவதையுந் தந்துபுவி யாள வைப்பீர் இன்னிமிப்போ தாராம லிருந்தீ ரானால் ஈரேழு யுகமறிய இழுத்து உம்மை அன்னமது அருந்தாம லிழுத்துக் கொள்வோம் அதுவறிந்து பாலரைத் தந்தாளு வீரே பாலரைத்தந் தாளுவீ ரெனமொழிந்த பாவைமாரே பகற்பொழுது கழித்துவெள்ளி யுதிக்கும் நாளை காலமேநீ ரெல்லோரும் வந்தீ ரானால் கதிரவனும் போயடைந்து கங்கு லாகும் சீலமுடன் தென்றலுக்கு மழைக்கும் நானோர் சீட்டெழுதித் தேவரையும் வருத்தி யிங்கே கோலமண முங்களைநான் புரிந்து கொள்வேன் குடிலதுக்குப் பேயமுது குடித்து வாரும்

அகிலம் பதினைந்து

divider

திருக்கல்யாணம்

வாருமென மங்கையர்க்கு விடையருளி மாயன் வருணனுக்குந் தென்றலுக்கும் வான லோக ஊருமிக அறிவதற்கு ஓலை தானும் உடனெழுதி அழைச்சிடவே வந்தார் வானோர் பாருடனே சங்கமது திரண்டு கூடிப் பாவாணர் கீதமுறைப் பாடி நிற்க சீருடனே கதிரவன் போயடைந்து மீண்டு தினகரனு முதித்துவெள்ளி தோன்றிற் றன்றே தோன்றிய பொழுதே வானோர் ஈசர்மாது துதிமுகனும் நான்முகனுந் தொல்வி மாதும் கூன்றிருஷி தேவரிஷி வேத மானக் குணயிருஷி கிணயிருஷி குலமா மாது தான்றுசர சோதிபக வதிமா மாது சதாகோடி தேவரம்பை சங்க மாக மன்றுபுகழ் நாரணர்க்குந் தெய்வ கன்னி மடவார்க்கு முகூர்த்தமென வந்தா ரங்கே வானமதில் டம்மான முழக்கத் தேவர் மலர்மாரி சலமாரி வானோர் தூவ நான்முகனும் வேதமுறை முகூர்த்தங் கூற நாரிமார் குரவையிட நமனு மாற தானமுறை மாமடவார் சமனங் கூறத் தரணிதனில் நாரணர்க்குந் தைய லான மேனமுகில் மாதருக்கு மணமா மென்று மேலோகப் பந்தலது விண்ணோ ரிட்டார் பந்தலுக்கு நமனாதி கால தாகப் பக்கம்பதி னைந்தும்வளை பரப்ப தாகச் சந்தமுடன் மேற்கட்டி மறைய தாகச் சாருமேல் மேய்ந்ததுவே சமய மாக அந்தமுறை சூரியனும் விளக்க தாக அலங்கிருதம் வானக்கா யதுவே யாகச் சொந்தமுள்ள சிவமதுவே பீட மாகத் தேவரெல்லாஞ் செய்துபந்தல் சிறப்பித் தாரே சிறப்பித்தோ மென்றுமகா தேவ ரெல்லாம் திருமாலி னடிபணிந்து சொல்வா ரப்போ பிறப்பித்தப் பெம்மானே யெவர்க்கு மாய்ந்துப் பேணியமு தளித்துவுயி ரனைத்துங் காக்கும் உறப்பித்த மாலோனே அய்யா வுந்தன் உதவியினால் பந்தலது விதானஞ் செய்தோம் நிறப்பித்த மணமதுக்கு நாங்கள் செய்யும் நிசவேலை யின்னதென நிகழ்த்து வீரே தேவருரை யதனைமிகக் கேட்டு மாயன் திருமனது மகிழ்ந்துவாய் திறந்து சொல்வார் மூவருரை மாறம லெனக்கு முன்னே மொழிந்ததெய்வ மாதர்களை முகூர்த்தஞ் செய்ய நாவதுரை வருணனொடு வாயு தானும் நளினமலர் தூவியது குளிர வீச தேவருரை செய்துமிக நில்லு மென்று தெய்வமட வார்வரவே சிந்தத் தாரே சிந்தித்த வுடனே யுந்தத் தேன்மொழி மாத ரெல்லாம் வந்தவ ரடியைப் போற்றி வணங்கியே நாங்கள் பெற்ற சந்ததி யேழு பேரும் தன்னுட கிளைக ளொக்கத் தந்துநற் புவியை யாளத் தருவீரென் தலைவா என்றார் தருவீரென மொழிந்தகுல மாதே பெண்ணே தலைவருங்கள் மக்களையுந் தருக வுங்கள் மருவினியக் கருவதிலே யுதிக்க ஈன்ற மனுவழியை யென்முன்னே வருகச் செய்தால் தருமினிய சொத்தாஸ்தி பொன்னுங் காசு தாறதுவுங் கொடுப்பதுவுங் சபையிற் பேசி பெருகவுங்கள் தம்மை மணஞ் செய்துநீங்கள் பெற்றபிள்ளை தந்துபுவி யாள வைப்பேன் புவியாள வைப்பேனென வுரைத்தீ ரெங்கள் பொன்மானே கண்மணியே புரந்த மாலே கவிஞோர்கள் போற்றுமதக் கன்றே தேனே காயாம்பு மேனியரே கடவு ளாரே இவிலோகக் கலியதிலே பிறந்த தாலே இதுநாளும் வரையன்ன மீந்த பேர்கள் செவியாலுன் பதமடைந்தா லவர்க ளேது செய்வார்க ளெங்களொடு சேர்க்கை தானோ சேர்க்கையுண்டோ எனமொழிந்த மானே பொன்னே தேன்மொழியே யுங்களுக்குத் தெரியா வண்ணம் வார்த்தையிது சொல்லாதே நமது வாழ்வும் மக்களுட வாழ்வதுவு மொன்று போலே மார்க்கமுடன் வைத்தரசு ஆள நானும் மனமதிலே நினைத்திருக்கும் வளமை யாலே கோர்கையிது அவர்கொடுக்கல் வாங்கல் தன்னை கூறிமிகக் கேட்டுமணங் கூடு வேனே மணங்கூடு னேனென வுரைக்க மாயன் மனுவழியி லுதித்தகுலச் சான்றோ ரெல்லாம் அணங்குஇன வழிபோலே யவர்கள் வந்து ஆயனடிப் போற்றிமிக அன்பாய் நிற்கக் குணங்குறிகள் கண்டுமிக அரியோன் மெச்சிக் கொடுப்பதென்ன இவர்களைநான் மணங்கள் செய்தால் பணங்கள்மிகப் பொன்காசு ரெம்ப ரெம்பப் பாவையர்க்குச் சீதனங்கள் பகரு வீரே பகருவீ ரெனமொழிந்த அய்யா நீரும் பரிசமென்ன எங்களுக்குப் பண்பா யீவீர் உகருமெனச் சொல்லிடவே சான்றோ ரெல்லாம் உடையகுலச் சொக்கருமே உரைப்பார் பின்னும் தகருமோ நான்தருகுந் தங்கக் காசு சதாகோடி யெண்ணமது தாணோ இல்லை நிகருவீர் நீங்கள்தருஞ் சொத்தை யெல்லாம் நினக்கறியச் சொல்லிடுங்கோ நிசமா யென்றார் ஆண்டவரே யிப்பரிசந் தருவீ ரானால் யாமடியா ராளுகின்ற வஸ்து வெல்லாம் கூண்டபண்டம் பொன்னுடைமை யாடு மாடு குருபரனே யாங்கள்வரை யுமக்குச் சொந்தம் மீண்டடிமை முக்காலு முமக்கு நாங்கள் விலையடிமை யானோங்காண் விரைய மாலே பாண்டவரைக் காத்துரெட்சித் தாண்டாப் போலே பாவையரு மக்களுமும் பக்கந் தானே பக்கமது என்றவுடன் மாயன் தானும் பதறாதே உங்களையுங் காத்துக் கொள்வோம் ஒக்கவெனக் குங்களையும் ஆண்டு கொள்வோம் ஒன்றுபோ லிருந்துபுவி யாள்வோம் நாமும் தக்கமதொன் றில்லையப்பா இந்த வார்த்தை தந்ததுவு மீந்ததுவுந் தவறோ இல்லை மிக்கதெய்வக் கன்னியரை மணங்கள் செய்ய மெல்லிகையைப் பிடித்தெனக்கு விடுகு வீரே கைப்பிடித்துத் தாருமென வுரைத்தீ ரையா கணவரல்லோ முன்னவர்க்குக் கருணை மாலே மெய்ப்பிடித்த மெல்லியருந் தேவி யல்லோ மேதினிக ளறியஅவ தாரஞ் செய்தீர் எப்படித்தா னாங்கள்கையைப் பிடித்து ஈய இவ்வுலகி லவதார இகனை தானோ எப்படியோ அறியோங்கா ணென்று சொல்லி ஏந்திழைமார் கைப்பிடித்தங் கீய லுற்றார்

திருமுகூர்த்தம்

ஈந்திடவே மாயவருந் தங்கத் தாலே இரத்தின வொளி போல்வீசுந் தாலிதன்னை மாய்ந்துமிகப் போகாமல் தாலி வாழ மகாதர்ம யுகம்வாழ மாதும் வாழ ஏந்துபுவி தர்மமது தழைத்து வாழ ஈசர்முத லெல்லோரு மிருந்து வாழ சாந்தகுலச் சான்றோர்கள் தழைத்து வாழ தாலிமிக வாழவென்று தரித்தார் தாலி தாலிமிகத் தரிக்குகையில் மாத ரோடு தமனியநா தன்மகிழ்ந்து தானே சொல்வார் கேலிமிக வுரையாதீ ரெனக்கு இன்னம் கெணிமடவா ரநேகமுண்டு மணங்கள் செய்ய சோலியல்லோ ஆச்சுதென்று நினையா துங்கோ தொல்புவியை யரசாள்வீர் நிசமே சொன்னோம் மாலினுட சூட்சமகா கோடி யுண்டு மனதுசடை யாமல்மிக வாழுவீரே வாழுவீர் கூடுவிட்டுக் கூடு பாய்வேன் மறுவூரு பாய்ந்துவுங்கள் மனதில் வாழ்வேன் மாளுவேன் முழித்துப்பின் வருவே னுங்கள் மனதலைந்து எனைஇகழ்ந்து மாளா துங்கோ தோழிலே யிருந்துபல சூட்சஞ் செய்வேன் தோகையரே நீங்களெல்லா மெனது பாயம் நாளிலே யறிந்துமிகக் கண்டு கொள்ளும் நாரணரி னடப்பிதுவே ஞாயஞ் சொன்னோம் சொன்னமொழி தனைமறந்து நீங்க ளெல்லாம் தூசணித்து எனைக்கபட மெண்ணா துங்கோ என்னுடையத் தொழிலிதுவே உங்க ளோடு இருந்துதர்ம முடிசூடி யாளு மட்டும் பொன்னுடைய நாடதற்கு வானோர் தம்மைப் போகவிடை கொடுக்கஅவர் போனா ரங்கே கன்னிமட வார்கையைப் பிடித்துக் கொண்டு கருணைபதித் தெருவீதி வருகின் றாரே சிந்து தெருவீதி நாம்வருவோம்-எந்தன் தேவியரே கன்னிநாயகமே மருவினிய கன்னியரே-பதி வலங்கள்சுற்றி நாம்வருவோம் கண்மணியே காரணரே-ஓகோ காயாம்பு மேனியரே மண்ணேழ ளந்தவரே-ஓகோ மாயவரே பதிவலம்வருவோம் பெண்ணரசே மாமயிலே-நமது பொறுமைப்பதி வலம்வருவோம் தண்ணமுள்ளத் தேவியரே-நமது தருமபதி வலம்வருவோம் ஆண்டமணி நாயகமே-உலகு ஆண்டருளு மெங்கண்மணியே காண்டம்நிறை வேற்றவந்த-எங்கள் கணவனாரே நாம்வலம்வருவோம் பொறுமைப்பதி வலம்வருவோம்-கலிப் பொடியயாமம் போட்டிடுவோம் தருமமது தழைக்கச்செய்வோம்-பதி தானேவலம் நாம்வருவோம் பொல்லாத வகையழித்து-சுவாமி புதுப்பூமி தோணவைத்துக் கல்லாதார் கருவறுத்து-சுவாமி கதியபதி வலம்வருவோம் நாடும்பதி தலங்கள்வாழும்-பெண்ணே நம்முடைய இனங்கள்வாழும் கேடுகலி கோடுஅறும்-பெண்ணே கிளர்ந்தபதி வலம்வருவோம் ஆகாத பேரையெல்லாம்-சுவாமி அக்கினிக்கு விருந்தளித்து வாகாகத் தர்மபதி-சுவாமி வாழும்பதி வலம்வருவோம் முன்குறோணி உதிரமதால்-பெண்ணே உதித்துவந்தக் குலங்களெல்லாம் தன்குணத்தால் மாண்டுபோக-பெண்ணே தர்மபதி வலம்வருவோம் மாற்றானொ ழியவேணும்-சுவாமி மக்களெல்லாம் வாழவேணும் காத்தோரைக் கைவிடாமல்-நாமள் கருணைபதி வலம்வருவோம் தெண்டமிறை பொய்களவு-பெண்ணே செய்யும்வண்டக் குலங்களெல்லாம் கொண்டகலி கூடமாண்டு-குரு நாதர்பதி வலம்வருவோம் வீணான கலியுகத்தை-சுவாமி வெய்யோனுக் கமுதளித்துச் சாணாரை வைத்தாள-சுவாமி தர்மபதி வலம்வருவோம் நாடும்பதி துலங்குதடி-பெண்ணே நல்லசிலை குதிக்குதடி ஆடுமாடு அருகுதடி-கர்த்தா ஆவினங்கள் தோணுதடி நல்லபதி துலங்கணுமே-சுவாமி நாடுதர்ம மாகணுமே பொல்லாப்பது ஒழியணுமே-சுவாமி புத்தியொன்றாய்க் குவியணுமே கோவில்தெரு துலங்கணுமே-நம்மள் கோட்டைவெளி யாகணுமே தேவருட நல்திருநாள்-பெண்ணே தினமும்வந்து கூடணுமே தங்கத்தொட்டில் தண்டாயமும்-சுவாமி தாண்டும்பதி வீதிகளும் சங்கமுடன் டம்மானமும்-சுவாமி தலத்தில்வந்து தோணணுமே கோட்டையிட்டுக் கொடியுங்கட்டி-பெண்ணே கொத்தளமாய் மேடைசெய்து நாட்டையெல்லாம் தான்கிலுக்கி-பெண்ணே நமக்குப்பதி யேறணுமே நம்பினோரைக் காக்கணுமே-சுவாமி நாடுகட்டி யாளணுமே அல்பலங்க ளேறணுமே-சுவாமி அவதாரங்கள் நடத்தணுமே சிங்காசன மேறணுமே-பெண்ணே தீவட்டிகள் போடணுமே கண்காட்சை காணணுமே-நானும் கன்னியரைக் கைப்பிடித்தால் பாக்கியங்கள் பெருகணுமே-சுவாமி பாரிலுள்ளோர் காணுதற்கு ஆக்கிநாங்கள் படைக்கணுமே-சுவாமி அமுதருந்தி வாழணுமே மக்கள்பெற்று வாழணுமே-பெண்ணே வந்துவென்றான் கால்பிடித்து ஒக்கல் நின்றோ ராடணுமே-பெண்ணே உற்றபள்ளி மெத்தைசூழ பால்பவிசு பெருகணுமே-சுவாமி பஞ்சணையில் கொஞ்சணுமே தூலருமை யறியாமலே-கலி தொல்புவியு மயங்கணுமே சமுசாரி யாகணுமே-பெண்ணே தலையிற்சோறு சுமக்கணுமே ஓவுதாரி யாகணுமே-பெண்ணே உங்களைநா னடிக்கணுமே அயலூரு போகணுமே-சுவாமி அழைக்கநீரும் வரவேணுமே கயல்விழிமா ரொருவர்க்கொரு-சுவாமி கத்துதல்கள் கொள்ளணுமே நானும்வந்து நிரத்தணுமே-பெண்ணே நல்லமொழி சொல்லணுமே தேனும்பாலும் போலநாமள்-பெண்ணே தேசமதில் வாழணுமே கண்டுஇந்த நீசர்குலம்-சுவாமி களிப்புச்சொல்லி யேசணுமே பெண்டுகட்கு விங்கியென்று-சுவாமி பொல்லாப்பய லேசணுமே காரணத்தை யறியாமலே-பெண்ணே கலிப்பயல்கள் தானகைத்தால் மாரணத்தின் தீர்வைதன்னில்-பெண்ணே மடுநரகம் பூத்திடுவேன் செம்பவள நற்பதியின்-சுவாமி தெருவலங்கள் சுற்றிவந்தோம் பொன்பதிக்குள் நாமள்புக்கி-மறு பொழுதுவந்தால் வருவோமையா

சோபனம்

சோபனமே சோபனமே-சுவாமி திருநடன சோபனமே தேவர்குரு நாரணர்க்கும்-அவர் தேவியர்க்கும் சோபனமே பூமலர்ந்த ஈசுரர்க்கும்-அவர் பொன்தேவி மாமதுமைக்கும் காமனந்த நாரணர்க்கும்-தெய்வக் கன்னியர்க்கும் சோபனமே பூமடந்தை நாயகிக்கும்-நல்ல பொன்னுமண்டைக் காட்டாளுக்கும் பார்மடந்தை நாயகிக்கும்-சிவ பகவதிக்குஞ் சோபனமே தெய்வானை நாயகிக்கும்-நல்ல சிறந்தவள்ளி மடந்தையர்க்கும் அய்வர்குல நாரணர்க்கும்-கன்னி அரிவையர்க்குஞ் சோபனமே துடியிடைக் கன்னி மாரைத் திருமணந் திருமால் செய்து குடிபுகழ்ச் சான்றோர் மக்கள் குரவைகள் முழக்கத் தோடு திடிரெனத் தெருக்கள் சுற்றித் தேவியு மன்ன ராகப் படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந் திருந்தா ரன்றே

அகிலம் பதினாறு

divider
மாதுநல்லா ளேழ்வரையும் மணமுகித்து மாயவரும் தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார் கன்னிமா ரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினி பொன்னம் பதியில் புகழ்ந்ததிரு நாள்நடத்தி நித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்று சித்தமதில் நாரணரும் சிந்தித்தா ரம்மானை எத்திசையு முள்ள ஏற்றபுகழ் சான்றோரும் முத்தி யடைந்தோம் மோட்சமது பெற்றோமென நம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரைச் செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால் குற்றமில்லை நம்முடைய குலத்துக் கினியெனவே சித்தமதில் நாரணனார் செயல்நமக் குண்டெனவே வந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்து சிந்துபுகழ் தெய்வ மடவா ரையுந்தொழுது நல்லபண்ட மானதுவும் நாடும்நிதி யானதுவும் வல்லகுலச் சான்றோர் மாதா பிதாவதுக்கும் கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம் விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும் பலன்பெற்றோ மென்றுப் பாலதியச் சான்றோர்கள் குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம்

அய்யா திருநாள் இகனை நடத்துதல்

அப்போது நாதன் ஆனந்த மேபுரிந்து இப்போ திருநாள் இகனைநடத்த வென்று நாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாள் தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால் இந்நாள் முதல்திருநாள் இன்ப முடனடத்திப் பொன்னான நாரணரும் பூரித்தா ரம்மானை ஞாயிறாழ்ச்சைத் திருநாள் நாம்பார்க்கப் போவோமெனத் தேச மதிலுள்ளத் தெய்வகுலச் சான்றோர்கள் பாலுக்கு நெல்லும் பண்பாய்ச் சிறுமணியும் மாலுக்கு நல்ல மகிழ்ந்துபிச்சி மாலைகளும் கொழுந்துபன்னீர் சந்தமமும் குலுங்கா விடலைகளும் தென்னங்காய் மாம்பழமும் திகட்டாப் பலாக்கனியும் வாழைக் கனியிலையும் வகிர்ந்தகமு கின்குலையும் நாளைத் திருநாள் நமக்குமுந்திப் போவோமென இத்தனையுங் கொண்டு இசைந்ததிரு நாள்வகைக்குப் பத்துமூ ணேழு பணமு மிகஎடுத்துக் காதுக்கு நல்ல கனத்த நகைகளிட்டு மாதுக் கியல்வாய் வளர்கோர் வையுமணிந்து பெட்டிச் சீலையுடுத்துப் பெரியநாமப் பொட்டுமிட்டுக் கட்டன்ன மும்பொதிந்து கண்ணர்திரு நாட்கெனவே மக்கள் மணவாளன் மனைவி கிளைகளுடன் சிக்கெனவே நாதன் திருநாட்கும் போவோமென வருவார் கிழமை மாதந் தவறாமல் திருமால் அகமகிழ்ந்து திருநாள் முறைநடத்தக் கொட்டகை யிட்டுக் குவிந்தமணி மேடையிட்டுப் பட்டால் மேற்கட்டி பழங்கனிகள் தாந்தூக்கிப் பிச்சிமா லைதூக்கிப் பெருவாடை தான்தொளித்து மிச்சம்பழந் தூக்கி மிகுவாடை தான்தொளித்து சந்தனங் கஸ்தூரி சவ்வாது புனுகுடனே சிந்தரெவ ரும்போற்றத் தேன்கனிகள் மாங்கனிகள் வெற்றிலை பாக்கு மிகுவாய்ப் பழங்களுடன் தத்திதத்தி யாகச் சதாகோடி யாய்க்குவித்துப் பாலாயி தங்கள்வைத்துப் பாவித்து நற்பதிக்குள் மாலா யிருந்து மகிழ அலங்கரிப்பார் தெருவிற் காளாஞ்சித் தீவட்டி யும்பிடித்து மருவினிய மாதர் மகாகுரவை மலமலென டம்மானை நகாசுரம் நல்லவா ணவெடிகள் மும்மான முளக்கம் போலே மிகமுழங்க கன்னிமார்க் கெல்லாம் காவிப்பட் டாடைகொண்டு பின்னு மடவார்க்குப் பெரியருத்தி ராட்சமிட்டு நாமப் பொட்டிட்டு நல்லஎத் தாப்புமிட்டு மாமடவா ரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வர எந்தன் பிரானும் எடுத்தா ரொருசொரூபம் கந்தைக்கா விபூண்டு கழுத்தில்தா வடம்பூண்டு கையதி லேமாத்திரைக்கோல் கமூக்கூட்டி லேபிரம்பும் மெய்யதிலே வெண்பதமும் மினுக்க முடனணிந்து உச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்தசுரைக் கூடுமிட்டு மெச்சுந் துளசி மிகுமாலை யுமணிந்து பிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச் சூழ்ந்துவரச் சச்சிசச்சி யாகச் சனங்கள்சான் றோர்கள்வரக் கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்தி ரமணிந்து மெய்க்குருவைப் போற்றி மேலில்ருத்தி ராட்சமிட்டுக் கையதிலே மாத்திரரைக்கோல் கனத்தசுரைக் கூடுமிட்டு மெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டு அய்யா குருவேயென்று அவர்கள் மிகப் போற்றிவரத் துய்ய துவையல் துவைத்தபண் டாரமெல்லாம் காவிருத்தி ராட்சம் கனத்தசெம்புக் கடுக்கனிட்டு நாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவே ஆரா தனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும் நாரா யணர்பேரில் நற்கீதம் பாடிவரத் தங்கரத்தினத் தொட்டில் சுவாமி மிகஇருந்து பெண்கள் மிகநன்றாய்ப் பெருகக் குரவையிட சங்கு தொனிக்கச் சகலோர் மிகப்போற்ற சிங்கமுக லெட்சுமியும் திருமுகத்தில் நின்றிலங்க சான்றோர்கள் தொட்டில் தண்டாய முஞ்சுமந்து ஆன்றோர் பதியை அலங்கிருத மாகிவரக் கன்னிமார் நாதன் கைக்குளொழுங் காய்வரவே மின்னும் பதித்தெருவும் மிக்கஇந் தப்பவிசாய் உலாவி வரவே உற்றதெய்வ வானோர்கள் குலாவி மகிழ்ந்து கிருபையுள்ள நாரணர்க்கு பூமாரி பொன்மாரி பெரிய சலமாரி நாமாரி வானோர் நாடி மிகத்தொளிக்க எல்லோரும் பார்த்து இத்திருநாள் நல்லதென்று அல்லோரு மெச்சி அகமகிழ்ந்தா ரம்மானை நல்ல திருநாள் ஞாயிறாழ்ச்சை முழுதும் செல்ல மறுநாள் திங்க ளுதித்தவுடன் காட்சி நடத்திக் கரிய திருமாலும் நாச்சிமார் கூட நாதன் பதிபுகுந்தார் நாதன் பதிபுகுந்து நருட்கு விடைகொடுத்து மாதரோடு நாரணரும் மகிழ்ந்திருந்தா ரம்மானை இப்படியே திருநாள் இகனை மிகநடத்தி நற்புடனே நாதன் நாயகிமார் தம்மோடு கூடி யிருந்து குலாவி யிருக்கையிலே வேடிக்கை யாக விதியின் படியாலே நல்லபுகழ் சீதா லட்சுமிக்கு நாரணரும் செல்லப்பட் டானதுவும் சிவந்ததங்கக் காறையதும் இட்டுக் கலியாணம் இலட்சுமியைச் செய்யவென்று மட்டநிக ரில்லா மாயன் மனதிலுற்றார் தங்கத்தால் காறை தானதியப் பட்டதுவும் அங்கே மிகவருத்தி ஆயிழைக்குத் தான்கொடுத்துத் திருநா ளிகனைத் திடிமன் முழக்கமொடு பெருமாளும் லட்சுமியைப் பேறாய் மணமுகித்துத் தெருவலங்கள் சுற்றிச் சிறந்த பதிபுகுந்து மருவினிய நாதன் மாதரோடு வீற்றிருந்தார் நல்லரிய நாதன் நன்றா யிருக்கையிலே வல்ல திருதெய்வ மடவார்க ளேதுரைப்பார் ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலே வைய மளந்த மாயத் திருமாலே எங்களைநீ ரிப்போ இவ்வுலகந் தானறிய மங்களமும் செய்தீரே மக்களையுந் தாருமென்றார் அப்போது மாயன் அவர்களோ டேபுகல்வார் இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்கு நல்லத் திவசம் நமக்குவரு மந்நாளில் வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார் அதுவரையும் நீங்கள் அதட்டாம லெயிருங்கோ இதுவரைக்க நல்ல ஏந்திழைமா ரெல்லோரும் சந்தோச மாக சுவாமி தனக்கவர்கள் வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிக வாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமட வாரேழும் ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார் நாரணருந் தேவியரை நாடி யகமகிழ்ந்து காரணரு மெச்சிக் களிகூர்ந் தினிதிருந்தார் நன்றாக இப்படியே நாச்சிமா ரோடிருக்க எண்டிசையி லுள்ள ஏற்றபுகழ்ச் சான்றோர்கள் வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றி சந்துஷ்டி யாகத் தாழ்ந்துநமஸ் காரமிட்டு மனதில் நினைத்ததெல்லாம் மாயவரோ டேவுரைத்துத் தன்துள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார் தெய்வமு மவராய்த் திருவுள முமவராய் வைய மகிழ மனுப்போலு மிருந்தார் வத்துவகையும் மாடாடு சொத்துக்களும் ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார்

அம்மை மார்களுக்கு மதலை ஈதல்

இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலே நற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடி மதலை கொடுக்க மனதிலுற் றெம்பெருமாள் குதலை யினத்தைக் கூறி மிகவுரைத்தார் ஏழினமு மாதருக்கு இனமிட்டே தான்கொடுத்து நாளுவந் தபோதே நாரணருங் கொண்டாடி வாய்த்த திருநாள் மகிழ்ச்சையுட னடக்க ஏற்றகுலச் சான்றோர் எல்லோரும் வந்துநிற்க பிள்ளை தனையெடுத்துப் பெண்ணார்க ளேழ்பேர்க்கும் வள்ளலந்த மாலும் மனதுற்றி ருக்கையிலே கண்ணான தெய்வக் காரிகைமா ரெல்லோரும் விண்ணாண மாக வீரநா ராயணரை கண்ணரே கரிய மாலே காரணக் குருவே அய்யா இண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாக விண்ணெங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும் மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார் நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரே மாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே இப்போ மதலை எடுத்து மிகத்தாரும் செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார் நல்லதுதான் பெண்ணே நாட்டு நருளறிய முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்த மதலைக ளேழும் வளர்த்து இத்தனைநாளும் குதலைப் பிராயமதாய்க் கொண்டுதிரிந் தேவளர்த்தேன் பாலமு தூட்டாமல் பருவனத்தில் நீங்கள்விட்டுக் கோல வனத்தூடே குதித்தோடி மீண்டுவந்தீர் என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால் பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோ தெய்வேந் திரன்பசுவைத் திரையாகக் கொண்டுவந்து மொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்கு ஊட்டி வளர்த்தேன் உம்பர்கோ னுமறிந்து மாட்டிடவே யென்னை மாபடைக ளோடுவந்தான் தப்பி யவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளை ஒப்பரியப் பாலமிர்தம் ஒருநா ளொழியாமல் மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன் மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண் ணுஞ்சுமந்து சொக்கரெனுஞ் சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்று பின்னுமிப் பிள்ளைகள்தான் பெரும்புவியை யாளவைக்கத் துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன் வந்தான்சா ணான்குலத்தில் மாயனென்று மாநீசன் பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கிச் சாட்டைகொண் டேயடித்துத் தடியிரும்பி லிட்டுவைத்துக் கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்து அரங்கு மணிமேடை யானதிலே யென்னைவைத்துப் பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான் சாணா ரிடத்தில் தான்போகா தபடிக்குக் கோணாம லெங்களுடன் கூடியிரு என்றுடித்தான் பெற்றபிள்ளை யெல்லாம் பெருகலைந்து போவாரென இற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்து சாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம் பாலருக்காய் வேண்டிப் பாரறியப் பட்டேனான் பெற்றது போதுமென்று பெண்ணேநீ ரேழ்பேரும் மெத்த தெளிந்து மேவிவந்தீ ரிப்போது என்றுரைக்க மாலும் ஏந்திழைமா ரேழ்பேரும் மன்று ள்ளோர்களறிய மாத ருரைக்கலுற்றார் பிள்ளைகள்தான் நன்றாய்ப் பெருகி மிகவாழ வள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்த காரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ பூரணத்தின் ஞானப் பெரிய திருமாலே ஆரு மொருதர் ஆராட்டங் காணாத மேரு நிறைவனத்தில் மெல்லிய ரேழ்பேரும் ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங் காணாமல் கரிய அவரவர்கள் காடு வடவுகளில் உடுகலைகள் கொய்து உற்றமுடி தான்விரித்துக் கடுகெனவே வூசிதனில் கைவிரலைத் தானூன்றி ஆசை யுறவற்று அக்கபக்கத் தாசையற்று மாசைக் கருவறுத்து மயக்கவெறி தானறுத்து பாச மறுத்துப் பக்கத் துணைமறந்து வாச மணமும் வாக்குப்பேச் சுமறந்து காடு நினைவறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து வீடு நினைவறுத்து வெளிவீடு தான்திறந்து மலசலங்க ளற்று வாயுவுடப் போக்குமற்றுக் குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்றுப் பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால் ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப் பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி முட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்து கடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்று கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும் ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத் தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும் பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்த உள்ளமைக ளெல்லாம் உரைக்க எளிதாமோ நாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரை தாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்து பிள்ளைக ளாசையினால் பேருல கில்வந்தோம் வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவ ரேதாரும் தந்து புவியாளத் தலைவரே யும்முடைய விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும் தாருமென மாதரெல்லாம் தாழ்மையுட னீதுரைக்க ஆருநிக ரொவ்வா அச்சுதரு மேதுரைப்பார் மாதேநா னிந்த வையகத்தில் வந்தவுடன் பாரேழில் நம்முடைய பஞ்சவர்கள் தம்வழியில் தேர்ந்துந்தன் மக்களிலே சீசனென நான்தெரிந்து கூர்ந்தெந்தன் கையதுக்குள் கொள்ளுகிறேன் வேலையது இன்னாபா ரென்று ஏழுபேரையு மெடுத்து நன்னகரி பார்க்க நாத னிடுப்பில்வைத்து வட்டமிட்டு ஆடி மாதரொவ் வொருவர்க்கொரு கிட்டவிட்டுக் காட்டிக் கிளிமொழிமார் கைக்கொடுத்தார் பாலரையும் பார்த்துப் பாவையரைப் பார்த்தவுடன் சீலமுள்ள லெட்சணமும் சிற்றிடையு மொப்பனையும் ஒப்பமென் றெல்லோரும் உம்பருந் தாமகிழ்ந்தார் செப்பமுள்ள மாதர் சிரித்து மனமகிழ்ந்து அன்றுபெற்ற பிள்ளை ஐந்திரண் டானதிலே மன்றுதனை யாளும் மாபாவிச் சோழனவன் கொன்றானிரு பேரைக் கூடைதலை மீதில்வைத்து சொன்னீரே சுவாமி தோன்றியிப்போ வந்தாரோ தேன்மொழியே மாதே சொன்னபிள்ளை ரண்டுடைய மானதிய மக்களென மாயவருந் தானுரைக்க அப்போது பெண்கள் அச்சுதரைத் தான்பார்த்து இப்போ வரவில்லையே எப்போ வருவார்கள் மைப்பெரிய கண்ணே மாதரென் தேவியரே செப்பினீரே நீங்கள் சென்றமக்க ளெப்போவென்று பொல்லாத நாட்டுப் பொன்று கலியைமுடித்து நல்லதர்ம நாடு நான்தோன்ற வைக்குகையில் நடுஞாயங் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்யுகையில் கெடுவேலை செய்த கேள்வியில்லாச் சோழனையும் ஆக்கினைகள் செய்து ஆழநர கமதிலே தாக்கியும் மக்களைநான் சடத்தோ டெழுப்பிமிகத் தருவேன் குருசுவாமி தன்னாணை மாதர்களே மருவினிய மாதே வாக்கிதுவே தப்பாது என்றாதி நாதன் ஈதுரைக்க மாதரெல்லாம் நன்றாய் மகிழ்ந்து நாடிமக்க ளையெடுத்து மடிமீதில் வைத்து மலர்ந்முகத் தோடணைத்துக் கண்ணோ மணியோ கரடரா சன்மகனோ விண்ணோர்கள் மெச்சும் வேதப் பரஞ்சுடரோ தோணார்க் கரியத் துய்யதிரு மாலீன்ற சாணாரோ நாயகமோ சகலகலை கற்றவரோ தெய்வ யுகக்கன்றோ திசைவென்ற சான்றோரோ வையம் புகழவந்த மக்களே என்றுசொல்லிச் சந்தோச மாகத் தார்குழலா ரேழ்பேரும் புந்தி மகிழ்ந்து பூரித் தகமகிழ்ந்தார் நாங்கள்செய் ததவத்தில் நாலிலரைப் பங்குவரம் வாங்கினோ மையா மாயவரே யின்னமுண்டு நாடாள வைக்க நல்லவரந் தந்ததுண்டு தாடாண்மை யுள்ள சங்கரரும் வந்திருந்து என்றுரைக்க மாதர் எம்பெருமாள் நல்லதென்று இன்று வரைத்ததுவும் இலக்கதிலே ஆகுமெனச் சீதைக்கு நல்ல சிறந்தமக னையெடுத்து மாதுக்குத் தான்கொடுத்தார் வையகத்தோருங் காண மணமுகித்து மாதருக்கு முன்வகுத்த மைந்தரையும் குணமுடனே காட்டிக் கொடுத்தாரே யெம்பெருமாள் நல்ல திருநாள் நாள்கழித்து மற்றாம்நாள் வல்ல கதிரோனும் வந்ததுகா ணம்மானை கதிரோனுந் தோன்றிக் கங்குலவெளி யாகுகையில் திருநா ளிகனை செய்து நிறைவேற்றி மக்களெல்லாஞ் சூழ வந்து மிகப்பணிந்து மிக்கஅவர் வீட்டில் விடைவேண்டித் தாம்போனார் கைக்குள்ளே நிற்கும் கரியச் சன்மாரும் மைக்குழல் மாரோடும் மகிழ்ந்திருந்தா ரம்மானை பின்னுஞ் சிலநாள் பெரியதிரு நாள்நடத்தி மன்னுகந்த நாரணரும் மாதரொடு வீற்றிருந்தார் பெண்க ளவரவர்க்குப் பெரிய அரங்குவைத்துத் தங்கள் தங்களுக்குச் சாமான்க ளுங்கொடுத்துப் பால்பவிசுங் கொடுத்துப் பாக்கியங்கள் மிகுவாய் மாலவர்கள் மனையில் வந்து அமுதருந்தி இன்றொரு வீட்டில் ஏற்ற அமுதருந்தி அன்றிரா அங்கே அனந்தமால் பள்ளிகொண்டு பின்னுமொரு மாதருட பொன்னரங்கில் வந்திருந்து அன்று அமுதருந்தி அன்றிரா அம்மனையில் பள்ளிகொண்டு இப்படியே பாவையர்கள் வீடோறும் துள்ளியே மாயன் திருவிளையாட் டுமாடி மங்கையர்கள் காணாமல் மறுமனைக ளும்புகுந்து கொங்கைமட வாரோடு கூடிவிளை யாடிடுவார் மாயன் விளையாட்டை வகைப்படியே சொல்லவென்றால் வாய்ந்த வுலகில் வளர்ந்தபனை யோலையில்லை கூடி மடவாரோடு குவிந்துவிளை யாடுகையில் நாடி மடவார்கள் நாயகிமார் தங்களுக்குள் ஒருவர்க் கொருவர் உபாயமாய்ப் பார்த்திருந்து திருமருக ரோடே தெய்வமட வார்வெகுவாய்ச் சண்டை பிடிப்பார் தந்ததுபோ ராதெனவே கண்டமட வாரோடும் கனிவாகப் போறீரென அவள்வீட்டில் போறீர் அவளோ டதிகமுமாய் உபகாரஞ் செய்யுகிறீர் உள்ளாகத் தானிருந்து என்னோடு பேச்சு இப்படியே செய்வீரென மின்னோ வியங்கள் வெகுவாகக் கத்திடுவார் சாமியொடு வெகுவாய்த் துரைத்தனங்க ள்தான்பேசி நாமகலப் போவோம் எனநடந்து மக்களுட வீட்டி லவர்போவார் வீரமால் தானறிந்து கூட்டி வரப்போவார் குளிர்ந்த மொழியுரைத்து அள்ளித் தருவேன் அனந்தவரா கன்பணமும் வெள்ளியும் பொன்னும் மேன்மையுள்ள சீலைகளும் உந்தனக்குப் போதும் உடைமை மிகத்தருவேன் அந்தப்பெண் ணார்களுக்கு அதுக்கதுபோ லேகொடுப்பேன் எழுந்திருநீ யென்று எட்டிமிகக் கைப்பிடித்துக் குளிர்ந்தநய வார்த்தைக் கோதைமின்னார் தாங்கேட்டுச் சிரித்து மகிழ்ந்து தேற்றலிது நன்றெனவே உருத்துமிகச் செய்வதெல்லாம் ஓவிய முமறிவேன் ஏன்காணு மும்முடைய இந்திரசால மெல்லாம் கோன் கிரிவேந்தே கொஞ்சமெனக் குத்தெரியும் மருட்டா தேயுங்காண் மாய்மால முந்தெரியும் உருட்டா தேயும்போம் உமதுதொழி லுந்தெரியும் எனக்கேற்ற வார்த்தை இதமதிமாய்ப் பேசிடுவீர் தனக்கேற்க நெஞ்சம் தானறியா தேயிருக்கும் கன்னி யுமதுடைய கருத்தெல்லாம் நானறிவேன் நின்னு சடையாதேயும் நீர்போவு மென்றுரைப்பாள் 340 அப்போது மாயன் அதுக்கினிய வார்த்தைசொல்லி இப்போது நீயும் எழுந்திருந்து வாவெனவே மாய னழைக்க மாது மெழுந்திருந்து நாயன் பிறகே நடந்து மிகவருவான் வந்து வளர்பதியில் வாழ்ந்துண் டினிதிருப்பார் சந்தோ சமாகத் தண்மை வெகுகுணமாய் இப்படியே பெண்களோடு இகனை மிகநடத்தி ஒப்புரவாய் மாயன் உகந்துண் டிருக்கையிலே செந்தூ ரலையில் தேவனுதித் தன்றுவந்து முந்துமூலப் பதியில் உவரிக் கரையிடத்தில் சென்றங் கிருந்து சிவலிங்கத் தானமைத்து மன்றுக்குள் கொஞ்சம் மறைத்துவைத்து மாயவரும் நான்தவ சிருந்து நாட்கள்கொஞ்ச மேகழித்து வான்புதுமை யற்புதங்கள் மாநிலத்தோர் தாமறியச் செய்துதெய்வ மாதர்களைச் சிறந்த மணமுகித்து தெய்திதனி லிங்கே திருநாளைக் கொண்டாடி வருவே னெனச்சிலைக்கு வாக்குமிகக் கொடுத்துத் திருவேற்றி வைத்த தேதியின்று வந்ததென சும்மா இவரைத் திருப்பதியில் வாநீயென்று நம்மா லுரைத்தால் ஞாயமில்லை யென்றுசொல்லிக் கொஞ்ச மொருசூத்திரம் கூர்மையாய்ச் செய்யவென்று அஞ்சலெனச் சாமளா தேவிதனை யழைத்துக் கன்னியிலே ரண்டு பேரைக் கலக்கமிட்டு என்னுடைய மக்களிலும் யாம முறைப்படியே கொஞ்சமது வாந்தி கொடுத்துயிரைத் தான்வாங்கி மஞ்சறை யில்வைத்து வாகாகக் காருமென்று விடைகொடுக்க நாதன் வேண்டினாள் தேவியவள் திடமுடனே சொன்ன சொல்வாக் குரைப்படியே கன்னியரில் ரண்டு கடத்தினாள் மாதேவி மின்னி னொளிமதலை வீரத் தனமாக நாலுமூ ணுடனே நகட்டினாள் மாதேவி உடனே சனங்கள் உடையவரே தஞ்சமெனத் தடமேலே வீழ்ந்து சுவாமி அபயமென்றார் அவதாரத் தின்படியே அன்றமைத்த பெண்கொடியை உபகார மாமணங்கள் உடையவரே நீரருளி வையகத்தோ ரெல்லாம் மனமகிழ்ந் திருக்கையிலே செய்யஇந்த மாயம் செய்வாரோ மாயவரே ஆரார்க்கு ஏற்கும் அரிவையர்கள் மக்களுந்தான் போரா வழியானப் பொல்லாப்புச் செய்தாரோ ஆதியே யவர்கள் அநியாயஞ் செய்ததென்ன சோதியே யென்று தொழுதார் மடவார்கள் அப்போ தொருமகன்றான் அஞ்சாறு நாளதுமுன் சொப்பனங்கள் கண்டதுவைச் சொல்லாமல் தட்டழிந்து அன்றைப் பொழுது அவன்வந் தடிதொழுது நன்றினிய எங்கள் நாரணரே நாயகமே பத்துநா ளுண்டும்நான் படுத்திருக்கு மவ்வளவில் பெற்றுச் சழிந்தவர்போல் பெரியபூவண் டர்வடிவாய் வந்தென் றனோடு வளப்பமென்ன சொல்லலுற்றார் சந்தமுடன் நானுரைத்தச் சட்டமற வாதபடி கொஞ்சநாள் தோப்பு குளிர்ந்தபதி யானதிலே அஞ்சிரண் டாண்டு அதில்வாழ்ந் திருந்துபின்னும் மூலகுண்டப் பதியில் மிகஇகனை செய்யெனவே ஏலமே சொன்னதெல்லாம் எண்ணமதி லில்லாமல் பெண்களைக் கண்டவுடன் பூத்தான மாய்மகிழ்ந்து கண்ணாட்ட மறந்து கலியை முடிப்பதற்கு நினைவு மயர்ந்து நிலைபேர்ந் திருக்குகிறான் நாட்டுக்குற்றங் கேட்க நானயைச்சு வைத்தற்கு கோட்டு மடவாரைக் குறிப்பாக எண்ணிமிக எண்ணி யிருக்குகிறான் இப்போது அங்கேசென்று நண்ணிமூ லப்பதியில் நாடிவரச் சொல்லிவிடு வரவில்லை யானால் மாதருடன் மக்களையும் சரமதையும் வாங்கிடுவேன் சுவாமியுடன் போயுரைநீ என்றுசொல்லி நாளும் எட்டுரண் டாச்சுதையா அன்று வுரைக்க அய்யாமிகக் கோபமுற்று பாவிப் பயலே பகராம லித்தனைநாள் மேவி யிருந்தாயே மெல்லி யிழந்தேனே தீட்டிவைத்த சொற்பனத்தைச் சொல்லா திருந்ததினால் கூட்டில் மிகவாழ்ந்த கிளியைமிகத் தோற்றேனே முந்திவந்து நீயும் மொழிந்ததே யுண்டானால் என்ற னிளமயிலை இழந்துமிக வாடேனே பூவண்ட ரானால் பெரிய பிதாவல்லவோ மாவண்டப் பயலே வந்துசொல் லாதிருந்தாய்

அய்யா மூலகுண்டப்பதி எழுந்தருளல்

இப்போ பதிக்கு எழுந்தருள வேணுமென்று மைப்போடு வொத்த மாதரொடு மக்களுமே கூடி நடந்தார் கூண்டரிய பொற்பதியில் தேடிமூ லப்பதியின் சிறப்பெல்லாந் தான்பார்த்து ஏலமே இப்பதியில் எட்டுநாட் குள்ளேவந்தால் மாலவரின் மக்களுக்கு மாய்வுசற்றும் வாராதே கெடுத்தானே சொர்ப்பனந்தான் கெணித்தவுடன் சொல்லாமல் கொடுத்தோமே நம்முடைய குலமக்கள் மாதரையும் இப்பதியில் வந்தால் எள்ளளவுந் தோசமில்லை எப்பதியு மிப்பதிக்கு ஒவ்வாது என்றுசொல்லி எல்லோ ருடனே எம்பெருமா ளுமகிழ்ந்து அல்லல் வினைதீர்ந்து அதில்வாழ்ந் திருந்தனராம் தோப்புப் பதிபோல் தொட்டிக்கட் டம்பலமும் கோப்புப் புரையும் குளிர்ந்த மணியரங்கும் பள்ளி யறையும் பார்சவுககை மண்டபமும் துள்ளி யிகனை சுகசோ பனம்வரவே பூம்பந்த லும்பெரிய புகுவீர மேடைகளும் ஊண்புரையும் நல்ல உகத்தீர்ப்பு மேடைகளும் சிணமாகச் செய்து சிறந்து மிகஇருந்து குணமாக மாயன் கோதையொடு வாழ்ந்திருந்தார் வாழ்ந்து திருநாள் வாரஞ்செவ் வாச்சைமுதல் ஆழ்ந்த திருமால் அவதாரக் காட்சியுடன் கும்மி யிகனை குவலயத் தீர்ப்புரைத்துத் தம்மியல்பு கொண்டு சுவாமிவெண் பட்டுடுத்தித் தங்கக்குல் லாஅணிந்து தாமரிய நீராளம் எங்கு மகிழ எம்பெருமாள் தானணிந்து ஆயிழைமா ரவர்க்கு அழகுவெண் பட்டுடுத்தி வாயிதமாய் மாயன் மகிழ்ந்துமிகக் கொண்டாடி மங்களமா யிகனை மகாயிகனைத் தான்கூறி சங்க மகிழ சுவாமிதிரு நாள்நடத்தி பாக்கியங் களோடே பவிசா யிருக்கையிலே தாக்கமிக மாயன் சந்தோச மாய்மகிழ்ந்து பொல்லாக் கலிநாடு பொன்றிவருங் காலமதில் வல்லாமை யான வாய்த்த பகவதிக்கும் மாது உமைக்கும் மண்டைக்காட்டாள் பார்வதிக்கும் தீதகலும் வள்ளி தெய்வானை நாயகிக்கும் கலிமுடியு முன்னே கலியுகத்தோர் கண்காண வலியான மாதர்களை மணமுகிக்க வேணுமென்று முன்னுரைத்த ஆகமத்தின் முறைநூற் படியாலே நன்னூல் வழியாய் நாமுகிக்க வேணுமென்று

அய்யா கன்னிபகவதி பதியேகல்

உன்னித் திருமால் உள்ளில் மிகஅடக்கி வள்ளலந்த மாகுமரி வாழும் பகவதியை மாயமாய்க் கொண்டு வரவேணு மென்றுசொல்லி உபாயமாய் மனதில் உடைய பரனினைத்தார் கிழவனா கச்சமைத்து கிருதஞ்செய்ய வேணுமென்று தளதளெனத் தேகம் தன்னுடம் புமினுக்காய் மெக்குவாய் பொக்கனுமாய் முடியுமிக வெண்ணரையாய் கக்க லிருமலுமாய்க் கையதிலே கோலூன்றி தள்ளாடி மெள்ளச் சன்னை மிகப்போட்டுப் பிள்ளாய்ப் பகவதியே பேத்தியென்றன் பொன்மகளே கண்ணு மயிலே கனகவொளி மாமணியே பெண்ணும்பிள்ளாய்ப் பேத்தி பேரனுக்குக் கஞ்சிவிடு என்றுசொல்லி மெள்ள ஏந்திழையாள் தானிருக்கும் குன்றுமணிக் கோவிலுக்குள் குன்னிமெள்ளச் சென்றனரே பேத்தியென்ற சொல்லைப் பிரியமுடன் நாயகியும் காதில் மிகக்கேட்டு கன்னி மிகப்பார்த்து ஆர்காணும் நானிருக்கும் அரங்குக்குள் வாறதுதான் பாரழியும் நாளோ பையரங்குக் குள்ளேவந்தாய் எங்கிருந்து நீதான் எவ்வூ ருன்பேரேது கிங்கிலுக்க வந்தவனோ கிழவன்தா னோவுரைநீ அம்மா என்பேத்தி ஆயிழையே நாயகியே சும்மா மயங்காதே சூட்சமொன்று மில்லையம்மா பரமார்த்த மம்மா பழனிமலை யென்றனக்கு விதமாற்ற மில்லை வினோதவித்தை தானுமில்லை இலாடகுருவம்மா இராமனென்றன் பேர்பேத்தி திலாடம திலிருந்து தீர்த்தமிங் காடவந்தேன் வந்தேனான் கண்மயக்காய் வழிதப்பி யிங்கேதான் உந்தன் திருப்பதியை ஒருஅகர மென்றிருந்தேன் மகளே யென்பேத்தி மாஞால மொன்றுமில்லை செகமெல்லாந் தீர்த்தம் சென்றேனா னிவ்வயதுள் உன்னுடைய தீர்த்தம் உகந்தாட இப்போவந்தேன் பின்னுமொரு பேச்சு பேசுகிறா ரிவ்வுலகில் இன்றுந் தன்பதியில் இருந்திந்த ராவிடிந்தால் நின்றுநின்று போயாலும் நிச்சயம்பார்த் தேமகிழ்ந்து என்னுடைய வூருக்கு ஏகவே ணும்பேத்தி பொன்னு மகளே பேத்தியெனப் போத்திசொன்னார் பேத்தியென் றுரைத்த போது பொன்பக வதித்தாய் மெச்சிப் போத்தியே யுமக்குக் கொஞ்சம் பொரிமாவு பிசைந்து தாறேன் ஏற்றுநீ ரிளைப்பு மாறி இன்றிரா கழித்து ஏகும் சாற்றிய மொழியைக் கேட்டுத் தனதுள மகிழ்ந்தார் போத்தி அம்மா நீசொன்ன அருமை யெனக்கதிகம் மும்மால்க்கு மேற்று முகுந்தன் பதம்பெறுவாய் தாகமல்லால் பசிகள் தானெனக்கு இல்லையம்மா தேகமது வாடாமல் செலந்தந்தால் போதுமென்றார் பால்மோரு போலே பதங்கொடுத்து மாகுமரி காலாறிப் போமெனவே கன்னி மிகவுரைத்தாள் தாக மதுதீர்ந்து தானிருக்கு மப்பொழுது நாகரீகக் குமரி நாயகியு மேதுரைப்பாள் 500 போற்றி யுமக்குப் போதவய தானதினால் நாற்றிசைக ளெங்கும் நடமாட்ட மாயிருக்கும் ஏதேது தீர்த்தம் இகனைபல மாயுளது மாதோடே சொல்லும் மாபெரிய போத்தியென்றாள் உடனே கிழவன் உளமகிழ்ந்து நன்றெனவே மடமாதே காசி மகாதீர்த்தம் நல்லதுதான் கன்னி மாகுமரி காசித்தீர்த்தம் நிகராம் பின்னு மற்றதெல்லாம் பிரமாண மப்படிதான் இப்போ தொருசெய்தி இராச்சியத்தில் சொல்லுகிறார் எப்படியோ நிசமாய் இருந்தாலது மேன்மையதாம் என்றுரைக்க நல்ல இளங்குமரி ஏதுரைப்பாள் விண்டுரைத்த ஞாயமதை விளம்புவீர் போத்தியென்றாள் அப்போது கிழவன் ஆச்சரிய மாய்மகிந்து இப்போது வேணும் இவளை மிகஇளக்க என்று மனதுள் இருத்தி மிகத்தெளிந்து மன்றுதனில் கேட்ட வளமைகே ளென்றுசொல்லி ஆயிரத் தெட்டாண்டாம் ஆனதொரு மாசியிலாம் வாயிதமாய்ச் செந்தூர் வாரிதனி லேபிறந்து வைகுண்ட மென்று வையகத்தில் வந்திருந்து கைகண்ட அற்புதங்கள் கனகோடி செய்கிறாராம் தண்ணீ ரதுவாம் தான்கொடுக்கு முத்திரியாம் மண்ணிலுள்ளோர் யாரும் வந்து வணங்குறாராம் தண்ணீர் மண்ணீந்து சகலவினை தீர்க்கிறாராம் புண்ணிய தானங்கள் போதமிகச் செய்கிறாராம் குட்டங் குறைநோவு குருடூமை யானதுவும் கட்டங் கொடியக் கர்மமுதல் தீர்க்கிறாராம் மைந்தர் கொடுக்கிறாராம் மகாதர்மஞ் செய்கிறாராம் மனுப்பேரில் பேயை மாகிலுக்க மாயாட்டித் தனுப்பெலங்கள் வாங்கி சருவி லெரிக்கிறாராம் தெய்வமட வாரெனவே தேவியேழு பெண்களையும் வைய மறிய மாலையிட்டுக் கொண்டாராம் நித்தந் திருநாள்போல் நீணிலத் துள்ளோர்கள் மெத்தக் குமுக்காய் மிகவந்து கூடுறாராம் டம்மான வெடிகள் டகுடகென நாகசுரம் இம்மாத்திர மெனவே எண்ணவுங் கூடாதாம் காட்சிரெம்ப வுண்டாம் கலிமுடிக்க வந்தோமென்றும் பேச்சுமிகச் சொல்லி பிரான்யாமங் கூறுறாராம் இப்படியே பேச்சு இதுவுறுதி யானாக்கால் எப்படியுங் கர்த்தன் இவரெனவே சொல்லிடலாம் அல்லாமல் கலியுகங்கள் அழியுகின்ற நாளையிலே சொல்லால் பெரிய திருமால் சொரூபமதாய்த் தெச்சணத்தில் வந்து திருவிளையாட் டாகுமென அச்சமறப் பேச்சென்று ஆதியிலே கேட்டதுண்டு அந்த முறைதானோ அவனியிலே கேட்கிறது எந்த விதமோ தெரியுதில்லை யென்பேத்தி போய்ப்பார்த் தால்தெரியும் பொன்மகளே பேத்தியென்றார் வாய்பார்த்த போது மாது மிகமகிழ்ந்து கண்ணரிய போத்தி காரணத்து நற்போத்தி திண்ணமுள்ள போத்தி செப்புவதை நீர்கேளும் தெய்வ மடவாரைத் திருமணங்கள் செய்தாரென்று வையமது சொன்ன வளமுரைத்தீ ரென்போத்தி மாதரையும் பார்க்க மனவிருப்ப மாயிருக்கு ஆதரவாய்ப் போத்தி அதுவரையும் என்னையும்நீர் கூட்டிக்கொண்டு போவீர் கிழவனா னபோத்தி பூட்டியுந் தன்பிறகே பிள்ளைபோ லேவருவேன் செய்தியென்ன வென்று தேவி யுருக்கமுடன் செய்தி மிகவடைந்த தாதனோ டேயுரைத்தாள் அப்பொழுது லாடகுரு அவரேது சொல்லலுற்றார் இப்படியே சொன்னதற்கு யான்கூட்டிப் போயிடுவேன் ஓடி நடக்க ஓட்டாது தள்ளாட்டம் கூடி நடக்கக் குறுக்குப் பெலக்காது பேசி நடக்கப் பிசகுமம்மா என்னாக்கு வீசி நடக்க விழிக்குக்கொஞ் சமறைவு கக்க லிருமல் கால்பெலக்க வொட்டாது சிக்கெனவே நடந்தால் செருக்கிரும லீளைவரும் இத்தனை துன்பம் இருக்குங் கிழவனுடன் சிற்றிடையீர் நல்ல சிறுபிரா யம்நடந்தால் ஒக்குமோ பேத்தி உன்னடையு மென்னடையும் பக்குவமோ நான்தான் பாதை நடப்பதற்கு நானடப்பேன் காதவழி நாலுநாள் தங்கலென நீயென்னோ டேநடந்தால் நிகராமோ பேத்தியென்றார் அப்போது நல்ல ஆயிழையு மேதுரைப்பாள் நற்போடு வொத்த நம்முடைய பேராநீர் வேறாட்கள் கூடவெளியேறப் போகாது வீறாகப் போத்தி மெல்லநடை யாகிடினும் உம்மோடே நடக்க உள்ளாசை யாயிருக்கு எம்மாத்திரம் நாட்கள் எவ்வளவு சென்றாலும் பைய இருந்திருந்து பாதை மிகநடந்து நெய்யதியக் கன்னி நேரிழைமா ரேழ்வரையும் பார்த்து வரவேணும் பண்டையுள்ள போத்தியென்றாள் சாற்று மொழிகேட்டு தாதன் மிகமகிழ்ந்து அப்படியே யானால் ஆயிழையே யுன்னருகில் பொற்பணிவே லைபுரியும் பெண்ணா ரறியாமல் இங்குள்ள பேர்கள் எள்ளளவு மறியாமல் கங்கைக் கரைவழியே காணாது போய்விடுவோம் போக வென்றாலும் பொழுது புறப்படுமுன் ஏகவேணும் நாமென்று இயல்பா யுரைத்தனராம் அப்போது கன்னி ஆயிழையும் நல்லதென்று இப்போ தெழுந்திரியும் இதுகடந்து போவோமெனச் சொல்லிக் கிழவன் சிரித்து மனமகிழ்ந்து நல்லகா ரியமெனவே நாம்போவோ மென்றுவுன்னி அரிஹரி கோவிந்தா அலைதுயின்றாய் போற்றுயென்று கரிஹரி கோவிந்தா காரியங்கைக் கொண்டோமென்று குன்னி மிகவெழுந்து கோலு மிகபிடித்து உன்னி யிருப்பும்விட்டு உடனே வெளியில்வந்து சன்னை மிகஇருமித் தள்ளாடித் தள்ளாடிப் பின்னே விழுவார்போல் போத்திமுவ் னிற்கையிலே மாது கதவெல்லாம் வாங்கி மிகஅடைத்துக் கேது விளைத்துவந்த கிழவன்பின் னாலேகி வந்தவளை யழைத்து வாவா பிறகெனவே சந்தமுடன் லாடகுரு சாடைசெய்து முன்னடந்தார் முன்னடக்கப் போத்தி மொய்குழலாள் பின்னடக்க அன்னநடைகள் விட்டு அலைவாய்க் கரைவழியே முட்டாங்கு மிட்டு முகந்தெரியா வண்ணமவள் கட்டாய்க் கவிழ்ந்து கன்னி பகவதியும் கிழவன் பிறகே கிளிமொழியாள் தானடக்க மலர்மாரி தூவ வாயு மரைவீச பூமி குலுங்காமல் பொருப்பு மசையாமல் காமி குமரி காலசையா மல்நடந்தாள் நடக்கும் வழிதனிலே நாயகியோ கேகேட்பார் வடக்குநா டுநமக்கு வசந்தான் வழிநடப்பு தெச்சணா பூமி திசைமாற்ற மாயிருக்கும் பச்சை வளையணிந்த பாவையரே பார்த்துநட திக்குத் திசைகள் தெரியுதில்லை யென்பேத்தி முக்கொரு மூலைதன்னை முன்னாடிப் போவோமென வாரிக் கரைவழியே வாய்த்தநேர் மேற்காகக் காரிருளாகு முன்னே கால்விரைவாய்ப் போவோமெனச் சொல்லச் சிறுகன்னி தியங்கிமெள்ள வாயுரைப்பாள் அல்லல் வினையோ ஆண்டவன் தன்செயலோ வெளிகாணா தேயிருந்த மெல்லி வெளியில்வந்தால் வழிதான் தெரியுமோகாண் மாபெரிய போத்தியென்றாள் பதறாதே பெண்கொடியே பகவான் துணையுண்டுமடி இதறாதே நாமள் இவ்வழியே சென்றாக்கால் தெச்சணத்தில் பள்ளிக்கொண்டு தெய்வமட வார்களையும் நிச்சயம் மணம்புரிந்த நீலவண்ண ருண்டுமடி கலங்காதே கண்ணே கடற்கரையே போவோம் விலங்காம லிவ்வழியே மேற்குநோக் கிப்போவோம் என்றுசொல்லி மாதை இளக்கிமிகப் போகையிலே அறைந்த வாரி அதற்கு வடபுறமாய் இடம்மான வோசை டகுடகா வென்றுமிக இடம்மானம் நாகசுரம் இரைச்சல் மிககேட்டுச் சற்றே பொறுபேத்தி சத்தமொன்று கேட்குதிங்கே மெத்த இரைச்சல் மேளத் தொனிகேட்குக் குரவை யொலியும் குத்து வெடியுங்கேட்குப் பரசா திக்குரல்கள் பலவிதமாய்க் கேட்குப் பார்த்து நடப்போம் பாதைவிட் டுவிலகிச் சற்று வடக்கேறி தான்பார்த்துப் போவோமென என்றுரைக்கப் போத்தி இயம்புவாள் நாயகியும் நன்றுநன்று கிழவா நடவுமுன் னேயெனவே தண்டையணி மடவாள் சடைத்து முகம்வாடி கெண்டையக்கண் மடவாள் கிள்ளைபோ லேயுரைத்தாள் குன்னிமெள்ளக் கிழவன் கோலூன்றிக் கோலூன்றி மின்னிடையே பையவென்று மெல்லவடக் கேறினராம் வடக்கேறி மாதை வலம்விட்டுத் தான்கூட்டி நடக்கையிலே ஆளிரச்சல் நாடி மிக்ககேட்டு அன்ன நடையழகி அமிர்தவாய்ச் சொல்லழகி சின்ன இடையழகி திசைமயங்கி யேதுரைப்பாள் கண்ணினிய போத்தி காரணத்து நற்போத்தி நண்ணினிய போத்தி நானுரைக்குஞ் செய்தியைக்கேள் சனக்கூட்டம் ரெம்பத் தான்காணு மானதினால் எனைக்கூட்டிக் கொண்டு இதில்விட் டகலாதேயும் திக்குத் திசையெனக்குத் தெரியாது கண்டீரே பக்குவங்கள் சொன்னேன் பாத மடைக்கலமே கைக்குள் விட்டுக்கொண்டு கன்னியரைத் தான்காட்டிப் பைக்குள் வைத்துக்கொண்டு பகலோ னுதிக்குமுன்னே என்பதியில் கொண்டு இருத்தியெனை வைத்தீரால் பொன்பதி னாயிரத்தால் புனைந்தவொரு தாவடந்தான் உம்முடைய மார்பில் உடனணிவேன் கண்டீரே எம்முடைய மானம் இருக்குதுகா ணும்மிடத்தில் ஒருவ ரறியாமல் உபாயமாய்க் கொண்டுவென்னை திருவனப் பதிக்குள் சேர்த்துவையும் போத்தியென்றாள் பேத்தி பதறாதே பெரியபதி சேர்த்துவைப்பேன் காற்று அசுங்காத கண்ணர்பதி சேர்த்துவைப்பேன் மலங்கா தேபேத்தி வான்பதியில் வாழ்ந்திருக்க கலங்கா தேசேர்த்துக் கண்ணாணை வைத்திடுவேன் என்றுரைக்கப் போத்தி இளவரசி யுமகிழ்ந்து அன்றந்தக் கிழவன் அருகிலொண்டித் தானடந்து ஆளுக் கிடைநடுவே ஆயிழையும் பேத்தியுமாய்த் தோளுப் பிடித்தாற்போல் தோகையரும் வந்தனராம் வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக் காலும் சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும் செந்தமிழ் தர்மச் சீரும் சிவாலயத் தெருக்கள் நேரும் புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சு வாளே போற்றிநீ ருரைத்த தெல்லாம் பொய்யில்லை மெய்ய தாகும் சாற்றினீர் பின்னுந் தெய்வத் தார்குழ லுண்டு மென்று பார்த்துநீர் நமக்குக் காட்டும் பைங்கிளி மாரை யெல்லாம் சீத்துவ மாக எந்தன் சிந்தையி லறிய என்றாள் உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானே யென்று மடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் கூட்டி குடதன முடையா ரானக் கோதையர் கோவில் புக்கி நடைதனில் நின்று கொண்டு நாரிய ரிவர்தா மென்றார் பார்த்தந்த மடவா ளானப் பகவதி மாது சொல்வாள் சேர்த்திந்த மடவார் தம்மைத் திருமணஞ் செய்த மன்னர் ஏற்றெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக் சாற்றிந்தத் தலமுங் காட்டித் தன்பதி போவோ மென்றாள் ஆதிக் கிழவா அரிவைகன்னி மார்களையும் நீதி யுடன்கண்டேன் நேரிழைமார் தம்மைமணம் செய்த கணவரையும் சென்றுபார்த்த தேநாமும் நெய்தரிய நம்பதியில் நாம்போவோம் வாருமையா என்றுரைக்க மாது இளங்கிழவ னேதுரைப்பார் நன்றுநன்று பேத்தி நாயகிமார் மன்னனையும் இன்றுநீ காண இப்போது காட்டுகிறேன் பார்த்துக்கோ வென்று பையவா வென்றுசொல்லிக் கோற்றுக் குருவம்பலத்தில் கும்மிமிகக் கொண்டாடி நாட்டுத்தீர்வைக் கணக்கு நவின்றிருக்கும் வேளையிலே காட்டிக் கொடுத்தார் கரியமால் நாரணரை

பகவதிக்குச் சச்சிதானந்த வடிவைக் காண அருளல்

பகவதியாள் வந்து பார்க்கின்ற அப்பொழுது சுகபதியாள் கண்ணதுக்குத் துய்யத் திருமாலும் பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும் நச்சரவில் பள்ளிகொண்ட நல்லசொரூ பம்போலே தண்டை யணிக்காலும் தாமரைக்கை பொன்முகமும் தெண்டையக்கண் மாலும் கிரணவொளி ரத்தினம்போல் செம்பவள வாயும் சிறந்தபீதாம் பரத்துடனே அம்பலத்தே நின்று ஆனந்த மேபுரிய ஆனந்த மான அழகு பகவதியும் தானந்த மான சச்சிதானந் தவடிவைக் கண்டந்த மாது கண்மூடா வண்ணமங்கே நின்று அவள்பார்த்து நெஞ்சந்தடு மாறினதை கிழவ ரறிந்து கிளிமொழியை விட்டகல பழவ ரொருசொரூபம் பாச மிகஎடுத்துக் கைநெகிழ்ந்து மாயன் கனகபதி மீதில்வந்தார் மைவளைய மாது மாறிமன தேதிரும்பிப் பார்த்தா ளருகில் பண்பாக நின்றதொரு கூத்தாடித் தாதனையும் கோதைமிகக் காணாமல் பாவிக் கிழவன் பாதங்கள் செய்தானே லாவிலாவிக் கொஞ்சம் லாவிமிகத் தேடலுற்றாள் அய்யோ கெடுத்தானே ஆதிக் கிழவனம்மை மெய்யோ னென்றிருந்தோம் வெளியேற்றி விட்டானே எங்கே யினிக்கண்டு என்பதியில் போவேனான் திங்க ளுதிக்குதல்லோ சேவல்குர லாகுதல்லோ நிலவெளிச்ச மாகுதல்லோ நிற்கிழவனையுங் காண்கிலையே குலமுழிவ தாச்சே குவலயங்கே டாகுதல்லோ மான மழிந்தாச்சே வையகமும் பேசாச்சே தான மழிந்தாச்சே சங்கையினி கெட்டாச்சே இக்கிழவ னம்மை இளக்கியிங்கே கொண்டுவந்து மொக்கை மிகக்கெடுத்து மோசஞ்செய்ய வந்தானோ என்னபோ லாச்சு என்தலையி கூறிதுவோ அன்னம்போல் வார்த்தை ஆசார மாயுரைத்துச் சந்தியில்பந் தாக்கினானே சளக்கிழவன் நம்மையின்று சுந்தரியு மொத்தச் சோர்ந்துமன தேகலங்கி புலம்புவாள் தனியே பொன்னும் பகவதியும் சிலம்பணியும் நாயகியும் தியங்கிப் புலம்பினளாம் என்னைப் படைத்தவரே ஈசுரரே தஞ்சமென்று பொன்னனைய மாதும் புலம்பித் தவிக்கலுற்றாள் தலையி லெழுதுஞ் சங்கரரே தஞ்சமென உலையில் மெழுகதுபோல் ஓவியமும் உள்ளுடைந்து இனம்பிரிந்த மானதுபோல் ஈயமது போலிளகி மனம்பிரிந்து மாது மதலை யழுதாப்போல் பிறப்பித்தச் சீமானே பிஞ்ஞகனே தஞ்சமென்று சிறப்பித்த மாது தியங்கி மயங்கலுற்றாள் மாது பகவதியாள் வயசுபதி னாறுடையாள் சாருமிட மற்றார்போல் தனியே புலம்பலுற்றாள் கண்ணினிய சொல்லாள் கரியமகா ஈசொரியாள் எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பகவதியாள் தாயில்லாப் பிள்ளை தயங்கினாற் போலேநின்று வாய்குளறிக் கண்ணீர் வடிய மிகஅழுதாள் சோடு பிரிந்த துய்யப்புறா வுமிரங்கிப் போடுகின்ற சத்தம் போலே குரல்நிகழ்த்தி உள்ளுக்குள் நோக்கும் ஓவியத்தின் தன்குரலும் எள்ளுக்குள் ளெண்ணெயென இருந்து மிருக்கலைத்தான் சங்குள் பிறந்த சமயத்திருமணியும் எங்கும் புகழ்பெற்ற ஈசொரியாள் மாமயிலும் தனியே யிருந்து தனதுள் ளகமடக்கி மனிதர் காணாமல் மறைந்துநின்று மாதுநல்லாள் கிழவன் தனைத்தேடி கிளிமொழி யாள்பார்த்துக் களப நிறத்தாள் காணாமல் வாடலுற்றாள் கூட்டிக்கொண்டு வந்த கூனுக் கிழவனையும் காட்டித்தர மாட்டீரோ கன்னிகுல மாதர்களே ஆதிமகா லட்சுமியே அண்ட மளந்தவளே சோதி மகாபரனே துணைசெய்ய மாட்டீரோ அன்னபட்சி மாமரங்காள் ஆவினங்கா ளூர்வனங்காள் என்னைமிகக் கூட்டிவந்த இளங்கிழவனைக் காட்டித் தாரீரோ என்றனுட சந்தபதி நான்போக வாரீரோ என்மனது வாட்டந் தவிர்ப்பதற்கு என்று புலம்பி இளங்குழலித் தேடுகையில் குன்றுமேல் திங்கள் குதிக்குமந்த வேளையதாம் வேளை யறிந்து மெல்லி பொன்வண்டதுபோல் சூழநிற்கும் புன்னைப் பூவிலொரு சூட்மதாய் இருந்தாள் பொன்வண்டாய் ஏற்றபக லேகும்வரைத் தருந்தார மார்பன் சுவாமி மிகஅறிந்து பகவதிக்கு மங்களங்கள் பாடி மகிழ்ச்சையுடன் சுகம்பெரிய மாயன் சோபனங்கள் கொண்டாட ஆடிக் களித்து அகமகிழ்ந்தா ரச்சுதரும் கூடிநிற்கும் பேரோடு கூறிமிக ஆடிடுவார் நாட்டை யழிக்க நமக்கு வொருமுகூர்த்தம் பேட்டைதர்மந் தோணப் பொகுதின் றென்றனக்கு என்று கும்மிபோட்டு இளங்குழலை யும்பார்த்து இன்று இருவென்று எம்பெருமா ளுமாட நல்ல பகவதியாள் நாடிப்பொன் வண்டதுபோல் செல்லப் பதுங்கித் திசைமயக்க மாயிருந்தாள் பகற்பொழுது மாறி பகவா னடைந்தபின்பு உகப்படைப்பு மின்னாள் ஒருகுழந்தை போலாகி பத்து வயசுப் பிராயம்போ லேசமைந்து சித்துப் பலதுடையாள் சேர்ந்தவுயிர்க் கண்மணியாள் இரண்டு பொழுதாச்சே நம்பதியை விட்டிளகி பண்டு பதிக்கேகப் பாதைசற்றுங் காணலையே நாலுதிசை யுண்டுமென்பார் நமக்குசற்றுந் தோணலையே கோலூன்றுங் கிழவன் கூட்டிவந்த பாதையதும் சற்றுந் தெரியலையே தலையிலெழு துஞ்சிவனே முற்றுமிந்த நாடு முடிமாய்ந்து போவதற்கோ நரைக்கிழவ னம்மை நடுச்சபையில் கொண்டுவிட்டான் உரைத்திடுவா ரிந்த ஊரி லொருவசனம் மாப்பிள்ளைக்கு வீங்கி வறட்டுக்கிழ வன்கூட போய்ப்பிழைத்தா ளென்று புவனஞ்சொல் வாரிதுவே நம்முடைய மட்டும் நாயன் விதித்தானோ சும்மாயிந் தக்கிழவன் சோலிபண்ண வந்தானோ படைத்த பரனே பாவியே யென்றலையில் நடத்தை யெழுதி நவின்றதுவு மிப்படியோ பரதவித்து மாது பலபலவா யெண்ணிமிக விரதமுற்று மாது மெல்லி யிளமயில்போல் ஆளுக் கிடையே அன்னம்போ லேதிரிந்து கூழு குடித்தக் குறுங்கிழவ னைத்தேடி திரியும் பொழுது செய்யதிரு மாலவரும் பரியேறும் பெருமாள் பகவதியைக் கண்டவரும் இனியிவளை யிந்த ராச்சியத்தில் நம்முடைய மனிதப்பெண் கூட்டிலிட்டு மாலையிட வேணுமென்று நினைத்துப் பெருமாள் நேரிழையைத் தான்மயக்கி புனைத்தொரு பெண்ணுடைய பொற்கூட்டுக் குள்ளடைத்து தாண்டவ மாடுஞ்சபையில் சனங்களெல்லோ ருமறிய காண்ட மிகப்படித்துக் கன்னிப் பகவதியை மனுவறிய அண்ட வானலோ கமறிய இனிமணங்க ளிவளை யாம்புரிய வேணுமென்று நிச்சித் தொருபெண் நிலையுங் குறிபார்த்து எச்சரிக்கை யான இளமயிலாள் தன்கூட்டில் அடைத்தார் பெருமாள் ஆயிழையும் வெகுவாய்ப் படைத்தோ ரருளால் பாரீரேழு மயங்கப் பாடினாள் காண்டம் பகவதித்தாய் நாயகியும் நாடி யவள்படித்த நற்காண்ட மானதுதான் புகன்றா லுலகம் பொடிப்போ லுதிர்ந்திடுமே உகந்தான் முடிய உரைக்கிறாள் காண்டமது மனுவி னுடலதையும் மாகுலுக்கமாய்க் குலுக்கி தனுவளைத்தாற் போலே சடலந் தனைவளைத்து ஆளுக் கிடையதிலே ஆட்டிச் சடலமதைத் தூளு மிகப்பறந்து தூசிவா னமடையச் சடலந் தனையாட்டித் தான்கோப மாய்க்குலுக்கித் தடதடெனச் சுவாமியுட தாளடி யில்வீழ்ந்து

பகவதியம்மை காண்டம் படித்தல்

பாவிநீ யிந்தப் பாரழிக்க வந்துஎங்கள் ஆவி மறுக அவனிதனி லெங்களையும் சீரழிக்க வென்றோ தெச்சணத்தில் வந்திருந்தாய் போரழிவு இல்லாமல் பொன்று கலியதிலே பொல்லாத நீசனுட பிதிரையெல் லாமழித்துச் சொல்லொன்றுக் குள்ளே தெய்வகன்னி மக்களையும் வைத்தாள நீயும் வந்தாக்கா லெங்களுட மெய்த்தான மழிக்க மேன்மையோ வுன்றனக்குப் பாவிநீ யென்னிடத்தில் பருங்கிழவ னாகவந்து தேவியென்றன் மானமெல்லாம் சீரழித்துப் போட்டாயே இவ்வளமை செய்வாய் என்றேநான் முன்னறிந்தால் பொவ்வாயில் தீயெரியப் போடுவே னக்கினியை என்கோவில் வந்து என்னைக்கண் மாயமதாய் உன்கோவில் வாசலிலே விட்டாட்டுப் பார்க்கிறாயே என்னமாய மாக இங்கேகொண்டு வந்தாய்நீ பொன்னம்பலத் தீசன் பொடிப்படுவா னிங்கில்லையோ பொல்லா தகத்தீசன் பொருப்பேறி மாண்டானோ எல்லா ஆபத்தும் இத்தனைநாள் காத்துஇப்போ மாண்டானோ அகத்தீசன் மாமுனியாய்ப் போனானோ வேண்டு மென்றகாலம் வேம்புமினிப் பானதுபோல் பார்வதி மாதுமையும் பரமே சொரியாளும் சீர்பதியென் னக்காள் சிறந்தமண்டைக் காட்டாளும் ஒக்கொன்றாய்ச் சேர்ந்தாரோ ஓவியம்நான் வேண்டாமென்று அக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோ மூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோ இவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம் சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோ ஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோ பாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானே போகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்கு ஏகவழி சற்றும் எனக்குத் தெரியல்லையே என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள் புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக் கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே தானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடி நானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள் நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு வாரணக் குயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா உரைத்திடு மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள் நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்று துரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள் சாதிக்குச் சாதி நீயும் சமைந்துநல் வேடம் பூண்டு தாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டு வாதிக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழியுன்றன் குலமே கந்தன் சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவே ளானும் அறிவே ளானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய் தறுமொழி சொல்ல வேண்டாம் தாணுமா லயனும் நானே உறுமொழி யொருசொற் குள்ளே உகமதை யாள நானும் மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே அப்போ தரிவையரும் ஆதி முகம்நோக்கி இப்போ துன்மருட்டு எல்லா மிகஅறிவேன் சோலிமிகச் செய்யாதே கெஞ்சுகவாய்ப் பெண்ணாரைப் பாதகங்க ளேராதே பாவையரை விட்டுவிடு தோதகமாய் வித்தைத் தோகையரோ டேறாது எங்கள் கண்மயக்கம் எல்லா மிகத்தெளித்து தங்கள்தங்கள் பதிக்குத் தானேக விட்டுவிடு கேட்டந்த நாரணரும் கிளிமொழியோ டேதுரைப்பார் நாட்ட மடவாரே நானென்ன செய்தேன்காண் உங்களைநான் கட்டி ஓடிமிகப் போகாமல் எங்களுட பொற்பதியில் இட்டிருக்கோ பிள்ளாய்ச்சொல் போகவே ணுமென்றால் பிடித்திழுப்பா ருண்டோசொல் ஏகவே ணுமென்றால் எழுந்திருந்து ஏகலாமே மாயத் திருமேனி மனதுள்ளொன் றேயடக்கிப் வாய்த்திரு வாய்மலர்ந்து உரைத்திடவே பெண்ணாளும் வாயுரைத்தாற் போலே மனதுமிகச் சொல்லாதே நீயுரைத்தாய் நெஞ்சம் நினைப்புவே றாயிருக்கும் மாய மறிவாரோ மாயாதி யுன்சூட்சம் உபாய மறிய ஒருவரா லேலாது என்று மாகுமரி இப்படியே சொன்னவுடன் நன்று நன்றென்று நாரணர்பின் னேதுரைப்பார் பெண்ணே யெனதுடைய பேரழகிப் பொன்மயிலே கண்ணே யெனது கனியேயென் தெள்ளமுதே அமுதவாய்ச் சொல்லழகி ஆசார வீச்சழகி குமுதவாய்ப் பெண்ணே குமரிப் பகவதியே தேனே மயிலே திகட்டாத தெள்ளமுதே மானே குயிலே மரகதப்பெண் ணோவியமே கிஞ்சுகவாய்ப் பெண்ணே கிளிமொழியென் மாமயிலே செஞ்சுடரே நல்ல திரவிய மாமணியே பொன்னும் பகவதியே பிள்ளாய்நான் சொல்வதுகேள் என்னுடைய பேரில் எள்ளவுங் குற்றமில்லை கலியழிய வயது காலஞ்சரி யானதினால் வலிய யுகமான வாய்த்ததர்ம நற்புவிதான் பிறப்பதினா லிந்தப் பெரும்புவியில் நாம்பிறந்து சிறப்பதுகள் செய்து செய்கரும முமுடித்து நாடாள நமக்கு நல்லபல னானதினால் தாடாண்மை யான சத்தி பகவதியே உண்மைதான் சொல்லுகிறேன் ஓவியமே நீகேளு தண்மையல்லால் வேறு தப்பிதங்கள் சொல்லேனான் கயிலையங் கிரியில் கறைக்கண்ட ரீசுரரும் மயிலனையா ளான மாது சரஸ்வதியும் மாது உமையாள் வாய்த்தகுல பார்வதியாள் சீதுபுகழ் லட்சுமியாள் சிறந்த பகவதியாள் மண்டைக்காட் டாள்தெய்வ மடந்தையே யுபேர்கள் குன்றிலுறை வள்ளி கோதைதெய் வானைவரை பூமடந்தை நல்ல பொன்னரியத் தேவியர்கள் பார்மடந்தை கங்கை பாணி மடந்தைமுதல் எல்லோருங் கூடி இருக்க வொருதலத்தில் வல்லாரு மீசர் வகுத்ததுவே நீகேளு கலியன் வரம்பெற்றுக் கயிலைதனை விட்டவனும் திலிய னவனுகத்தில் தேவியவள் பெண்ணுடனே வருகுமந்த வேளையிலே மாமுன சீராமரிஷி திருஉமையாள் பங்கரோடு சென்றுநின் றேதுரைப்பார் நல்லபர மேசுரரே நாட்டிலிந் தக்கலியன் வெல்லக்கூ டாதவரம் வேண்டியிவன் போறதினால் எக்கால மையா இவன்முடி வாவதுதான் அக்கால மெல்லாம் அருளுமென்றா னீசுரரை நல்லபர மேசுரரும் நாடிமுனி கேட்டதற்குச் சொல்லலுற்றார் பெண்ணே செவிகொடுத்துக் கேட்டிடுநீ

சிவன் ரோமரிஷிக்கு அருளியது

மாமுனி கேளென்று மாயாத ஈசுரரும் தாமுனிந்து சொன்னத் தன்மை மிகக்கேளு பொல்லாக் கலியன் பொன்றியடி வேரறுவ(து) எல்லா மறிய இலக்கறியக் கூறினராம் இவன்மா ளும்போது இனத்துக் கினம்பகையாம் சிவஞான நினைவு செல்லாது தேசமதில் கொலைகளவு ரெம்பக் கோள்கள் மிகுந்திருக்கும் தலைஞான வேதம் தடுமாறிக் கைவிடுவார் நேருக்குக் காலம் நெகிழ்ந்திருக்கும் பார்மீதில் போருக்கு யாரும் புத்தியாய்த் தானிருப்பார் பிள்ளைக்குத் தாயும் பெருத்தபகை யாயிருக்கும் கள்ளக் கணவருட கருத்துமிக மாதருக்காம் கூடி யுடன்பிறந்த கோதையரைப் பெண்ணெனவே நாடி யவரெண்ணி நாணியிறப் பார்கோடி வாரி கோபிக்கும் வாங்கும் சிலஇடங்கள் மாரி மறைந்துவிடும் வாயுவது நோய்வீசும் கீழ்ச்சாதி யெல்லாம் கெறுவிதங்கள் மிஞ்சியவர் மேல்சாதி தன்னை வேலைகொண்டு தான்வருவார் வம்பருக்கு நோக்கம் வாக்கில் மிகஇருக்கும் அன்பருக்கு நோக்கம் அடங்கி மிகஇருக்கும் மனுவதிலே கற்பிகழா மாதர்கற் பேயழந்து தனுவாய்ப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள் தெய்வ நிலைகள் தேசமதில் காணாது மைநெறியப் பெண்ணார் மனுநீதங் காணாது இராச நெறிநீதம் இராத்தியத்தில் காணாது பிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார் தெய்வ மடவார் தேசமதி லேவருவார் வைய மறிய மாலையிட்டு வாழ்ந்திருப்பார் பார்பதியாள் ஈசொரியாள் பரமே சொரியாளும் சீர்பதியாள ளான சீதாதே விமுதலாய்க் கன்னி குமரி கயிலைபுகழ் மாதரெல்லாம் உன்னி யவர்கள் ஒருதலத்தி லேகூடி வாழ்ந்திருப்பார் மங்களமாய் மக்கள்கிளை வாழ்வுடனே தாழ்ந்திறந்து மாகலியன் தன்னால் மடிந்திடுவான் இப்படியே யிந்தக் கலிமாயும் லக்கெனவே அப்படியே மாமுனிக்கு அருளச் சிவனாரும் பின்னு முனியும் பிஞ்ஞகனோ டேகேட்பான் துன்னுபுக ழீசுரரே தெய்வமட வார்களெல்லாம் கலியுகத் திலவர்கள் கட்டா யொருதலத்தில் சலிவில்லா தேவாழ்ந்து சந்ததிகள் வாழ்வுடனே வாழ்ந்திருப்பா ரென்று வகுப்புரைத்த ரீசுரரே கூர்ந்திவர்கள் தம்மைக் கோலமணஞ் செய்கிறதார் யானறியச் சொல்லும் அரனே எனத்தொழுதான் தானறியச் சொன்னத் தன்மை மிகக்கேளு நாடுகுற்றங் கேட்டு நல்லோரைத் தேர்ந்தெடுத்துக் கேடுகலி நீசருட கிளைவழிக ளுமறுத்துத் தெய்வ சான்றோர்களுக்குச் செங்கோல் மிகக்கொடுத்து மெய்வரம்பாய்த் தர்ம மேன்மைமுடி யுந்தரித்துத் தரும புவியாளத் தாட்டீக வைகுண்டரும் பொறுமைக்குல மானதிலே பிறக்கிறா ரானதினால் நாங்க ளெல்லோரும் நமனுவர்க் குள்ளாவோம் தாங்கி யொருபொருள்போல் தாமிருப்போ மப்பொழுது ஒருபொருளாய் வந்து உருவெடுப்ப தானதினால் திருமடந்தை யாவரையும் செய்யுமன்னர் தாமவராம் என்றீசர் சொல்ல இசைந்தமுனி நல்லதென்று நன்று நன்றையா நல்லகா ரியமெனவே சந்தோசங் கொண்டு தானிருந்தான் பெண்ணரசே முந்தோர் மொழிந்த முறைநூற் படியாலே வந்ததுகா ணிந்தவிதி மங்கையரே யுங்களுக்கு எந்ததுகா ரியம்பெண்ணே என்னையொன்றுஞ் சொல்லாதே தலையில் விதிபிள்ளாய்த் தங்கடங்க விட்டுவிடு கிலேச மதையெல்லாம் கிளிமொழியே விட்டுவிடு கொண்டுவந்தேன் பெண்ணே குவிந்தவதி எந்தலைக்குள் பண்டு அமைத்தபடி பதறாதே பாவையரே பெண்ணே நீயொருத்திப் பேர்பெரியக் கண்ணரசே கண்ணேயுனைக் காணாமல் கலங்கிமெத்த நானலைந்து வாடி யிருந்தேனடி மங்கையுனைக் காணாமல் கோடி யிருந்தேனடி குமரியுனைக் காணாமல் தாபத்தா லுன்னைத் தவமிருந்து கண்டேனடி கோபத்தால் கன்னி குமரியென்னைப் பேசாதே என்று மகாமாலும் இரக்கமுடன் மாதைமிகக் கொண்டு அணைவாய்க் குழைவாய் மிகவுரைக்க அம்மை பகவதியாள் ஆகங் களிகூர்ந்து நம்மைப் படைத்தது நாயன்முன்னா ளென்றுசொல்லி இருந்த பதியை எண்ணிöண்ணி மாதுநல்லாள் பொருந்தும் விழியாள் பெருமிமிக நீருவிட்டு அழுதாளே சொல்லி அருவரைகள் தானிளக ஒழுகாக நிற்கும் உலக நருளழவே மாமரங்க ளெல்லாம் பூத்துச் சொரிந்தழவே ஐயோ நானிருந்த அம்பலமும் வீதிகளும் வையா வழித்தெருவும் மண்டபமுந் தோற்றேனே சிங்கா சனமும் செகல்த்துறையும் வாவிகளும் மங்காத பொன்னு மாளிகையுந் தோற்றேனே இலாடக் கிழவன் இராத்திரியில் வந்துநம்மைக் கபாடமிகச் செய்ததினால் கனபதிகள் தோற்றேனே பொன்னா பரணமும் பெட்டகமுந் தோற்றேனே முன்னா ளெழுத்தோ முத்துமண்ட பமிழந்தேன் ஆண்டிலொரு தேரோட்டம் அதுவெல்லாந் தோற்றேனே வேண்டும் நருட்கள்வந்து விழுந்திறைகள் தோற்றேனே தண்டையணி சிலம்பும் தரளமெல்லாந் தோற்றேனே துணைக்கிள்ளை யானத் தோழியரைத் தோற்றேனே பணப் பெட்டகமும் பைம்பொன்னரிய பட்டுகளும் நவமணியால் செய்த நல்லவடந் தோற்றேனே செகமெல்லாங் கூடிச் சேவிப்பதுந் தோற்றேனே இத்தனைநா ளுமிருந்து இந்தக்கெதி யோஎனக்கு முத்திபெற்ற ஈசன் முன்னெழுதி வைத்ததுவோ அய்யோநான் பிறந்த அன்றுமுத லின்றுவரை வெய்யோன் முகம் வரையும் செல்லியறியேனே பாவிக் கிழவன் பரிகாசஞ் செய்வானென்று ஆவி யறிந்திலனே அங்கமது வாடுதையோ மூன்றுபொழு தாச்சே ஊறும்நீர் தானருந்தி மீண்டென் சரீரம் விழலா யெரியுதையோ பாலு பழமும் பருந்தேனுஞ் சர்க்கரையும் நாலு ரண்டான நல்ல ருசியதுவும் பாவித்த கும்பி பருங்கனல்போல் மீறுதையோ ஆவிதடு மாறுதையோ ஆதிபர மேசுரரே என்று பகவதியாள் எண்ணமுற்றுத் தானழவே மன்று தனையளந்த மாலுமிக அமர்த்தித் தேனினிய கண்ணே தேவி பகவதியே நானினித்தான் சொல்லும் நல்ல மொழிகேளாய் நான்மணங்கள் செய்யும் நாரியர்கள் தம்மிலுமோ மேன்மைய தாயுனக்கு வெகுபணிகள் நான்தருவேன் பொன்பணங்க ளானப் பெட்டக முந்தருவேன் என்பதி யுந்தருவேன் ஏறும்பல் லாக்கருள்வேன் தண்டாய மேறிச் சனங்கள்மிகப் போற்றிவரக் கொண்டாடும் நல்ல குருபாக்கி யந்தருவேன் திருநாள் பவிசு தினமுனக்கு நானருள்வேன் அருள்ஞானப் பெண்ணே அங்கிருந்த சீரதிலும் அய்யிரட்டி யாக அணிவே னுனக்குடைமை பொய்யென் றிராதே பொன்முடியின் தன்னாணை என்று மாயாதி இப்படியே ஆணையிட்டுக் குன்று தனமின்னாள் குமரி மனமகிழச் சத்தியஞ் செய்து தலையைத் தொட் டாணையிட்டுப் புத்திவந்து பெண்ணாள் பொன்னும் பகவதியாள் நாதனுட தஞ்சமென நாடி யகமகிழ்ந்து மாது குமரி வாயுரை யாதிருந்தாள்

பகவதி திருக்கல்யாணம்

அப்போ திருமால் ஆனந்த மேபெருகி இப்போ பகவதியை ஏற்றமணஞ் செய்யவென்று உன்னித் திருமால் ஒருசொரூபங் கொண்டனராம் மின்னுமந்த ஈசுரராய் வேடமது பூண்டு எக்காள வாத்தியங்கள் இசைதாள நாகசுரம் அக்காலத் தேவர் ஆகாய மீதில்நின்று பந்தல் விதானமிட்டுப் பாவாணர் போற்றிநிற்கச் சந்தமுடன் மனிதச் சாதி மிகமகிழ தெய்வரம்பை மாதர் திருக்குரவைத் தான்பாட ஞாய மனுவோர் நற்குரவைத் தான்பாட பகவதிக்கு நல்ல பாரமணக் கோலமிட்டுச் சுகபரனு மாலைமணச் சொரூப மெடுத்தவரும் பிச்சிமா லைபுரிந்து பொற்கடுக்கன் மீதணிந்து மிச்சமுடன் வெள்ளி விரலாளியோ டரைஞாண் பொன்தா வடங்களிட்டுப் பொன்னரிய தாலிதன்னை மின்தா வடம்பூண்ட மெல்லி பகவதிக்குக் கண்ணானத் தாலி காரணத்து நற்தாலி விண்ணோர்கள் மெய்க்க விறலோன் மிகத்தரித்தார் கண்டு தெய்வாரும் கன்னி பகவதிக்கு இன்று மணம்புரிந்தார் இறையவர்தா னென்றுசொல்லிக் கொண்டாடிக் கயிலை குவித்துமிக வாழ்ந்திருந்தார் தொண்டான சான்றோர் துதித்து மிகப்போற்றிக் கலிமுடிந்த காலம் கன்னி பகவதிக்குச் சலிவில்லா மாமணங்கள் தானாச்சு நன்றெனவே எல்லோருங் கொண்டாடி இருந்தார்கா ணம்மானை நல்லநா ராயணரும் நாடி யகமகிழ்ந்து செல்லமட வாரோடு சேர்ந்துவிளை யாடிருந்தார் அந்தந்தப் பெண்களுக்கு அழகுசொரூ பம்வேறாய்ச் சொந்த விளையாட்டுத் தோகையரோ டாடினராம் ஆடித் திருநாளும் ஆனந்தக் கும்மிகளும் நாடி யுகத்தீர்ப்பும் நல்லமக்க முக்கறிவும் சொல்லி யாமங்கூறிச் சோபனங்கள் தான்பாடி நல்லியல்பாய் நாதன் நடத்தி வருகையிலே

பார்வதி திருக்கல்யாணம்

ஈசுரனுக் கேற்ற ஏந்திழையாள் பார்வதியை வீசுபுகழ் மாதுமையை வெற்றிமண்டைக் காட்டாளை மாமணங்கள் செய்ய மனதிலுற் றெம்பெருமாள் பூமணங்கள் னானப் பொன்னுநல்ல பார்வதிக்கும் மங்களங்கள் கூறி மாதை மிகநினைத்துத் திங்கள் சடையணிந்து சிவவேட முந்தரித்து மாத்திரைக் கோல்பிடித்து மார்பில்தா வடம்பூண்டு காத்திருந்து பார்வதியைக் கருத்தாய் நினைக்கலுற்றார் மாதுமைக்கு மங்களங்கள் மயேசு ரன்கூற சீதுகந்த மாதுகளைச் சிவனு மிகநினைத்துக் கருத்தா யிருந்து காண்டமது சொல்லியவர் உருத்தா யிருந்துஓதுவார் மோகமதாய்ப் பெண்ணே யென்பார்வதியே பேரான மாதுமையே கண்ணே யென்பார்வதியே கனகவொளி ரெத்தினமே கூட்டுக் கிளியே கொடியிடையே நிங்களெல்லாம் நாட்டிலென்னை விட்டு நன்னகரில் வாழ்வீரோ தனியேநான் வந்திருந்து தவித்துமுகம் வாடுவது கனியேயென் மாமணியே கருத்தி லறியீரோ உள்ளுடைந்து வாடி உங்கள்மேல் காதல்கொண்டு தள்ளுடைந்து நானிருக்கும் தன்மை யறியீரோ ஊணுறக்க மில்லை உங்களைநா னெண்ணியெண்ணிக் கோணுதலாய் வாடி கோடிமுகம் வாடுறேனே வாரீரோ பெண்காள் வயிறுபார்த் தன்னமிடப் பாரீரோ என்முகத்தைப் பார்த்திரங்க மாட்டீரோ அன்னங்காய் வைத் அமுதருந்து மென்றுசொல்லி முன்னிங்கே வந்து முத்தமது தாரீரோ வாழை பழங்கனிகள் மாம்பழம் பாலக்கனிகள் கூழனைய சந்தனமும் கொண்டுவந்து தாரீரோ கண்ணரிய பெண்ணுகளே கள்ளமில்லா தோவியங்காள் பெண்ணரிய மாமயிலே பிள்ளா யென்கண்மணியே எண்ணுஞ் சிறுபிள்ளையாய் இருக்குமென்றன் பார்வதியே கண்ணு மயிலே கைக்குள்வந்து சேராயோ என்றுபர நாதனுமோ இவ்விசைகள் தான்கூற மன்றல்குழ லுமையாள் வாய்த்தகுலப் பார்வதியாள் வந்துதிருப் பாதமதில் மாகோபமாய் மகிழ்ந்து முந்து மொழியெல்லாம் மொழிந்தாரே மாதரவர் அய்யோஈ தென்ன அடிமாறு காலமதோ பொய்யோ கலியன் பிறக்கப்போய் நாங்களெல்லாம் இப்பா ருலகில் இப்படியே வந்ததென்ன முப்படியே யுள்ள முறைநூற் படியாலே பொல்லாக் கலியுகந்தான் பொடிப்பட்டுப் போறதற்கோ வல்லாத்த மங்கையெல்லாம் மாகலியில் வந்ததுதான் என்றந்த மாதர் இதுகூற மாயபரன் நன்றென்றன் மாதர்களே நாம்நினைத்த துபோலே வந்தீரே யின்று மணம்புரிய வேணுமென்று புந்தி யயர்ந்து பூவை முகங்கோடி அண்ணர்நா ராயணரும் அவனிதனில் வந்தாரென்று பெண்ணரசி நாங்கள் போய்ப்பார்க்க வேணுமென்று வந்தோமே யென்னுடைய வரம்பெரிய அண்ணரென்றாள் அண்ணரது நீயென்றாய் ஆயிழையே யிவ்வுகத்தில் இண்ணதுவே இப்படித்தான் என்னுடைய நாயகமே மனதயர்ந்து மாதர் வாயுரைக்கக் கூடாமல் தனதுள் முகங்கோடி தலையில் விதியெனவே நின்றார் மடவார் நினைவு தடுமாறிப் பண்டார மாகப் பரமன் வடிவெடுத்துத் தாலி மிகத்தரித்தார் தாமனந்தப் பெண்ணார்க்கு ஆலித்துப் பார்வதியை அரவியுட னீராட்டி சந்தோ சமாகத் தாலி மிகத்தரித்தார் வெந்தோசந் தீர்ந்து மேலோர்கள் கொண்டாட வையகத் தோரும் மனமகிழ்ந்து கொண்டாட செய்யத் திருமால் செய்சடங்கு கள்முடித்து வாழ்ந்திருந் தார்பெண்களுடன் மாய பரநாதன் தாழ்ந்து மடவார் சரண மிகப்பூண்டு பூண்டு பணிவிடைகள் பூவையர்கள் செய்துமிக வேண்டும்பல பாக்கியத்தோ(டு) இருந்துமிக வாழ்ந்தார் இப்படியே பெண்களொடு இருந்துமிக எம்பெருமாள் நற்புடைய தேர்திருநாள் நாளுங் குறையாமல் செய்து இகனை சிவசோ பனம்புரிந்து பைதுவளை மாதரோடு பண்பாக வேயிருந்தார் மாதருக்கு மாதவனாய் வானோர்க்கு நாயகமாய்த் தாரணிக்கும் நாதனெனத் தான்வாழ்ந் திருந்தனராம் வாழ்ந்திருக்கும் நாளில் மாதுகன்னி மார்களோடும் சேர்ந்திருக்கும் நாளில் திருமால் மனமகிழ்ந்து கூர்ந்தொரு தேவி குவிந்தமண்டைக் காட்டாள்க்கு சோபனங்கள் கூறி சுத்தமங்க ளம்பாடி சேவரசி யான மெல்லியரை நாமணந்தான்

மோகினி வேடம்

புரிவதற்குக் கோலம்புகழ்ந்தணிய வேணுமென்று மதிபெரிய மாதை மயக்கமிகச் செய்திடவே மாதுக்கு நல்ல மகாவிருப்ப மானதொரு சீதுகந்த மாதரென செம்பவள மாயவரும் காதுக்குத் தோடணிந்து கைக்கு வளையணிந்து மார்பில் வடமணிந்து வாய்த்ததண்டைக் காலிலிட்டுச் சேலை யுடுத்துச் சிவந்தகொசு கமுடித்து மாலை யணிந்து மார்பில் கலையணிந்து கோர்வை யணிந்து குழலு மிகமுடித்துத் தோர்வை படாதே தோகையென வேசமைந்து மஞ்சணையும் பூசிபிச்சி மாலை மிக அணிந்து செஞ்சொல் மதனைச் சிந்தைக்குள் ளேயிருத்தி எடுத்தார் பெண்ணாக எம்பெருமாள் கோலமது கடுத்தகன்னி மார்கள் கன்னிக் கணவரென்று சொல்லி மகிழ்ந்து தோழிநா மென்றுசொல்லி முல்லையணி பெண்ணார் முகுந்தன்பதந் தொழுவார் நாட்டி லுள்ளோரும் நாரணர்பெண் ணானாரென்று தாட்டிமையாய்ப் போற்றி சரணம் பணிந்துநிற்பார் இப்படியே வேசம் எடுத்துத் திருமாலும் பொற்படியில் வாழும் பொன்னுமண்டைக் காட்டாளை மயக்கிக் கொடுவரவே மாமோகப் பெண்ணேவ இச்சொரூபம் போலே ஏந்திழையாள் கண்ணிலொரு சச்சு ரூபமாகத் தான்கண் டுரைபகரும் பெண்ணேயென் னக்காள் டுரைபகரும் பெண்ணேயென் னக்காள் பேர்பெரிய நாயகமே கண்ணே யென்மாமணியே கனகவொளி மாதவமே கலியுகத்தி லேபெரிய கண்காட்சை தன்னுடனே வலிதான நல்ல வாய்த்த பதிச்சிறப்பும் நித்தந் திருநாளும் நீலமணி மண்டபமும் சிற்றம் பலமும் திருநாள் சிறப்புடனே சத்தகன்னி மாரும் தண்டரள மாதுமையும் புத்தியுள்ள பார்வதியும் போர்மகள் பகவதியும் கங்கை மடவாரும் காட்சி மிகப்புரிந்து கொங்கை மடவார் கூடி மிகப்புரிந்து கும்மி யடித்துக் குரவை மிகக்கூறி எம்வடிவு போலே ஏலங் குழலார்கள் ஆடிப் படித்து அலங்கிருத மாகியவர் சாடிக் குலாவி சனங்கள்வெகுக் கூட்டமுடன் பாலு பழமருந்திப் பாவிக்கும் பாவனையை மேலுக் குகந்தவளே விடுத்துரைக்கக் கூடாது என்றுரைக்க அந்த இளவரசிக் காட்டாளும் அன்று மதிமயங்கி ஆயிழையாள் மாய்கையொடு கூடி நடந்து கூண்டரிய நற்பதியில் ஆடிக் களிக்கும் ஆதியிகனைச் சுபையில் வந்தாளே மாய்கை மண்டைக்காட் டாளுடைய சிந்தை யதற்குள்ளே சென்று மிகவிருந்து திக்குத்திசைகள் தெரியாமல் தான்மயங்கி பக்குவ மாது பறிகொடுத்தப் பேர்களைப்போல் புலம்பித் தவித்துப் பெண்ணரசி நிற்கையிலே வலம்புரிக்கண் மாயன் மாதை மிகவருத்தி மணமுகிக்க வென்று மாயன் மனதிலுற்றுக் குணமுடைய மாயன் கூண்டுமுன் மாலையிட்டப் பகவதிக்குள் சேர்த்துப் பாரமணஞ் செய்யவென்று சுகபதியா ளந்தச் சோதி பகவதிக்குள் உள்ளாக்கிக் கொண்டு உற்ற திருச்சபையில் துள்ளாட்ட மாகித் தொகுத்தகாண் டம்படித்தாள் வையகத்தோர் காண வாழும் பகவதியாள் செய்யமண்டைக் காட்டாள் சிறந்தகாண் டம்பிடித்தாள்

மண்டைக் காட்டம்மை காண்டம் படித்தல்

அய்யோநான் கண்மயக்காய் அங்கிருந் திங்குவரப் பொய்யோ வொருமாய்கைப் பெண்ணாக வந்ததுதான் இங்கே யிவர்போலே இருந்ததுகாண் வந்தபெண்ணும் சங்கை நமைக்கெடுக்கச் சமைந்தாரே பெண்ணாகிப் பெண்ணாய்ச் சமைந்து பேராசையு மருளிக் கண்ணான என்றன் கற்பு மழிந்தேனே என்றுமா தேவி இப்படியே சொன்னவுடன் ஒன்றுமறி யாதவர்போல் உள்ளந் தனிலடக்கிப் பெண்ணே நானிந்தப் பெருங்கலியைத் தான்முடிக்கக் கண்ணான பெண்ணரசி கரிய சொரூபமது எடுத்திகனை கூத்து யானிங்கே யாடுறவன் முடுத்துந்த னூரில் முறைமயக்க வந்தேனோ எனக்குப்பெண் ணில்லையென்று இரந்துகொள்ள வந்தேனோ தனக்கிதுவோ ஞாயம் தரணியது சொல்லாதோ நாமிருப் பிங்கே நாமமெங்குங் கேட்குதல்லோ சோமவா ரமணிந்த சுவாமியுட கற்பனையோ என்று பெருமாள் இதுமொழிய மாதுசொல்வாள் குன்றெடுத்த மாயக் கோபாலா வுன்சூட்சம் எவரா லளவெடுக்க ஏலுங்கா ணுன்மாயம் கவராயிரங் கோடிக் கருத்திருக்கு மாயவரே இராமனாய்த் தோன்றி இராவணசங் காரமது சிராமர் படைவகுத்துச் செய்யம்பு கைப்பிடித்துப் போரில்நீர் நின்று பெருதுகின்ற வேளையிலே மேரு குலுங்கி விண்தூள் மிகப்பறந்து ஆகாயத் தேகி அந்தரங்க மேகமதில் தூள்மூடக் கண்டு தேவர் மீகப்பதறி வேழதிய உன்போர் மிகுதேவர் பார்க்குகையில் போரிலும்நீர் நின்றுப் பொருது சரம்விளைக்க வாரியிலும் பாம்பணையில் வாய்த்தபள்ளி கொண்டீரே ஆய்ப்பாடி ஆயர் எல்லோருந் தாங்கூடிச் சாய்ப்பானப் பேய்களுக்குச் சருவில் கொடைகொடுக்கப் பேயையெல்லா மோட்டி பெரும்பூத மாயிருந்து ஆயர்கள் பார்த்திருக்க அங்குபூ சாரியுமாய்த் தின்றாயே யத்தினையும் சிலபூத மாயிருந்து தொட்டிலா யர்மனையில் சிறுபிள்ளையாய்க் கிடந்து மட்டுப் பருவமுள்ள மாதர் மனைபுகுந்து விளையாடி நீயும் வேறா ரறியாமல் குழைவாய் மதலையெனக் கூண்டதொட்டி லேகிடந்து சிறுகுழவி போலே சீறி மிகஅழுவாய்ப் பருவதங்க ளுமெடுப்பாய்ப் பாலன்போ லேகிடப்பாய் உன்சூட்ச வேலை உரைக்க எளிதாமோ தன்சூட்ச மெல்லாம் தானுரைக்கக் கூடாது பலவேசங் கொண்டு பார்முழுதுஞ் சுற்றிடுவாய்க் குலவேசம் நீரும் கொண்ட தொழிலல்லவோ ஆரோடுஞ் சொல்லி அதட்டிவிட வேண்டாமே பாரோ டுதித்துவந்த பாவையொடு செல்லாது என்றுமண்டைக் காட்டாள் இசைந்தமொழி தான்கேட்டு நன்றுநன்று பெண்ணே நமக்கிதுவே ஞாயமுறை

மண்டைக்காட்டம்மை திருக்கலியாணம்

பெண்ணேயுன் றன்பேரில் பேராசை ரெம்பவுண்டு கண்ணே யுனையிப்போ கலியாணஞ் செய்வதற்கு வேளையி தாகும் மெல்லியரே யென்றுரைக்க மானதிய மங்கை மனதயர்ந்து வாய்குழறித் தலையி லெழுத்தெனவே சத்தமுரை யாடாமல் சிலைநுதலிக் கன்னி சொல்லுரையா தேயிருந்தாள் இருந்த நினைவை ஏகமூர்த்தி யறிந்து பொருந்து மதியானப் பிரமாதி வேசமதாய் வேச மெடுத்து மேளத் தொனியுடனே வாசவருந் தேவர்களும் மலர்மாரி தூவிநிற்க தேச நருளறியத் தெய்வமட வாரறிய மாய பரனும் மகாபெரிய நூல்முறையாய் வாசக் குழலாளை மாலையிட்டா ரம்மானை மாலையிட்டு நாதன் வாய்த்தசடங் குங்கழித்துச் சாலையத் துள்ளேகித் தானிருந்தா ரம்மானை

வள்ளி திருக்கல்யாணம்

மணமுகித்து நல்ல மணவறையக லுமிருந்து துணைபெரிய மாயன் சுருதி முறைப்படியே ஆகமத் திகனை அலங்கிருத மாய்ப்புரிந்து நாகரீக நாதன் நடத்திவரும் நாளையிலே கந்தனுக்கும் பெண்ணைக் கலியாணஞ் செய்யவென்று சிந்தித்து நல்ல திருமால் மனமகிழ்ந்து கேட்டு வரையாள் கோதைவள்ளி நாயகியைக் கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து எந்தன் பிரானும் ஏற்றவள்ளி நாயகியை மாலையிட்டு நல்ல மணமுகித்தார் கந்தனுமே வேலையிட்ட மான வேண்டுஞ் சடங்குசெய்து நாளிட்டு வந்து நாளேழு மேகழித்து வாழட்டு மென்று வாய்த்தசடங் குமுகித்து மாதரோ டெல்லாம் மகிழ்ந்திருந்தா ரம்மானை தாரணியோ ரறிய தான்வாழ்ந் திருந்தனராம் பெண்ணார் தமக்குப் பேர்பெரியத் தற்சொரூபம் கண்ணான மாயவரும் காட்டி மிகவாழ்ந்தார் வாழ்ந்திருக்கும் நாளயிலே மங்கை தெய்வ மாதர்களில் ஏந்திழையில் சிலர்கள் இளங்குழலி பெற்றனராம் பாலராண் பெண்ணும் பாவையர்கள் பெற்றுமிகக் கோலமுடன் வாழ்ந்திருந்தார் கூண்டரிய செல்வமோடு பாக்கியங்கள் ரெம்பப் பவிசு குறையாமல் நோக்கியல்பாய் மாதர் நுண்ணிமையாய் வாழ்ந்திருந்தார் நாரா யணர்க்கு நல்லமுது தான்படைத்து காரணரு மமுது கலந்துமிக வுண்டிருந்தார்

அகிலம் பதினேழு

divider
கூடி யிருந்து குலாவி மிகவாழ நாடி மகிழ்ந்து நாரணருந் தேவியுமாய் வாழ்ந்திருக்கும் நாளை மங்கை பகவதியாள் சார்ந்த குழலாள் தையல்நல்லாள் தோழியர்கள் இருந்து மிகவாழ்ந்த இரணவொளி மண்டபத்தில் திருந்து பகவதியைத் தேவியர்கள் காணாமல் காணாமல் தேடிக் கானகங்க ளும்பார்த்து வாணாள் மறுகி வந்தாரே நற்பதியில் பதியில் பகவதியைப் பண்பாகப் பார்த்தவர்கள் விதியிதுவோ தாயே வெயிலுகந்த மாதாவே நீயிருந் தப்பதிதான் நிதானம்போ தாதெனவோ நீயுமிந் தப்பதியை நினைத்துவந்த வாறேது அப்போ பகவதியாள் அவர்கள் தமைநோக்கி இப்போ நமக்கு எழுத்தின் படியாலே நடந்திருக்குப் பெண்ணே நவிலக்கூ டாதினிமேல் கடந்த பொருள்காணும் கன்னியிவர் கண்டீரே தலையில் விதியெனவே சாற்றினாள் தோழியுடன் மலையு தெளிந்து மாதே யென்தாய்மாரே எங்களுக்குத் தாயே இனியாரு நல்லதுணை சங்கடங்கள் தீரச் சாற்றுமெங்கள் மாதாவே 20 மாதே யென்தோழியரே மன்னருக்கு மென்றனக்கும் தீதேது மில்லாத் தேசத் திருப்பதியில் நின்றுபணி செய்து நிறைவாக நில்லுமöன்று அன்றந்தத் தோழியர்க்கு அருளி விடைகொடுக்க விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில் சடைவில்லா தேமகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார் நன்றாக நாரணரும் நாடும்மட வார்களுமாய் ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில் பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே கற்றைக் குழலார் கனமான தேவியரை ஏக மறிய இசைந்த மணம்புரிந்து வாகாய்ப் பரனும் மகிழ்ந்திருந்தா ரம்மானை இனியிந்த இவ்வுகத்தில் யாமனுப்புங் கோலமதைத் தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி நடத்தும் நருட்கள் நல்லன்ன மீகிறதை இடத்தில் கொடுவந்து ஈயுங்க ளென்றுமிகச் சொல்லிநாம் கூட சுவாமி மிகஇருந்து நல்லமக்க ளோடு நாம்கூடி வாழவென்று ஆரா தனைச்சொரூபம் அடக்கி னாருள்மனதுள் ஊரா னதிற்பிச்சை உங்களுட மூப்பாலே இடஞாய மில்லை என்னிடத்தில் கொண்டுவந்து இடநாமுங் கூடி இருந்துதர்ம மேற்றிடலாம் என்றுரைக்க நருட்கள் எல்லோருஞ் சம்மதித்து கொண்டுவந் திட்டார் கூடிருந்து நாரணரும் மாதர் மக்களொடு மாயன் மனமகிழ்ந்து தாதர் இருந்து சாப்பிட்டா ரம்மானை

அய்யா இணத்தாங்கல்களுக்கு எழுந்தருளல்

கூடி யிருந்து குலாவி யமுதேற்றுப் பாடி மகிழ்ந்து பரமன்வரும் நாளையிலே பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான்பார்த்து மன்னும் பெரிய மக்கள்மக்கள் மாதர்களே உங்களுட வீட்டில் உற்ற விருந்தருந்த மங்களமா யென்றனக்கு மாவிருப்ப மாயிருக்கு நான்வந்து தென்பேரால் நாட்டுமிணத் தாங்கல்களை தான்வந்து பார்க்கச் சந்தோச மாயிருக்கு என்றுரைக்க நாதன் இசைந்தகுலச் சான்றோர்கள் நன்றுநன் றெங்கள் நாரா யணக்குருவே எப்போ நீர்வந்து இரட்சிப்பீ ரென்றுமிகத் தற்பரனே நாங்கள் சடைத்து முகங்கோடி மலைகாணாப் பயிர்போல் வாடி யிருந்தோமையா பிழையா னதுபொறுத்துப் பிள்ளைகளை யாண்டுகொள்ளும் ஆண்டுகொள்ளு மையா ஆதி மகாபரனே பூண்டுகொண் டோமுமது பொற்பாதம் நாங்களெனத் தொழுது வணங்கி சுவாமிவர வேணுமென்று முழுது மவர்மனையில் முகூர்த்தமுறை பந்தலிட்டுப் பந்தலிட்டுப் நல்ல பரிமேற் கட்டிகட்டி சந்த முடனே தலைவாழையும் நிறுத்தி அம்மைமா ரவர்க்கு அரங்கு மிகவகுத்துச் செம்மையுடன் மாயன் சிறந்திருக்க மேடையிட்டுக் கட்டிமேற் கட்டியெனக் கனிபல துங்கொணர்ந்து வெட்டி யிராமிச்சி மிகுத்தபன்னீர் சந்தனமும் வாடைக் கமகமென மலர்பிச்சித் தார்தூக்கி மேடை யலங்கரித்து விதானம்ச பலதணிந்து அய்யாவுக் கமுது ஆனக் கனிவகையும் மெய்யானத் தாய்மார்க்கு வேண்டுகின்ற தீன்வகையும் கூடவந தநருட்குக் கோப்புபல சேகரித்து வாட விடாமல் வல்லபல தீனதுவும் மேளத் தொனியும் வெடிவாணக் கோப்புடனே காளடம் மானம் கடிய சிறப்புடனே அய்யானை நன்றாய் ஆனபரி மேலேற்றி வையாளி கொண்டு மாதாவைத் தொட்டில்வைத்து ஆடல்பா டலுடனே அரம்பைக் குரவையுடன் நாடதிய நாரணர்க்கு நல்ல விருந்தெனவே சான்றோ ரவர்கள் தாங்கூட்டி தங்களுட மீண்டேவார் மனையில் விருந்து மிகக்கொடுத்து நாரணர்க்குச் சான்றோர் நல்ல சுருளும்வைத்துக் காரணர்க்கு நல்ல கனத்தபட்டு கள்கொடுத்து அம்மைமா ரவர்க்கு அதிகப்பட்டுச் சேலைகளும் செம்மை யுடன்கொடுத்துச் செய்வார் விருந்தெனவே விருந்து கொடுத்து மேலதிய நற்சிறப்பாய்த் திருந்து மவர்பதிக்குத் திரும்பக்கொண் டேவிடுவார் இப்படியே மாயவரும் ஏற்றசான் றோர்களுட மைப்புடைய வீடோறும் மாயன் பதிதோறும் விருந்து மருந்தி வேதா கமம்போலே பொருந்து மிகனை புரிந்து மிகமகிழ்ந்து

பூமடந்தையம்மை திருக்கல்யாணம்

இன்ன மொருபெண் ஏற்ற மடந்தையரை நன்னகரி மெய்க்க நாமணங்கள் செய்யவென்று கேட்டுப் பரிசமிட்டுக் கிளர்ந்த முகூர்த்தமிட்டு நாட்டு நருளறிய நாரிமின்னாள் தானிருக்கும் ஊரிலவர் சென்று உற்றமங்க ளம்புரிந்து பாரி லகமகிழப் பதியில்வந்து தானிருந்தார் பதிதனிலே வந்து பாவித் தகமகிழ்ந்து விதியால் பெரிய விருதுக் கொடிகள்கட்டிச் சொத்தாஸ்தி வஸ்து தொகையெண்ண மில்லாமல் வத்தாஸ்தி பேரில் மனது மிகநாடி நிலங்கரைகள் சுற்றி நிறைபயிர்கள் தன்னிலைவாய் தலம்புகழும் நாதன் தனதுள் ளகமகிழ்ந்து பொன்னான பெண்களுக்குப் பொசிப்பும்பல வஸ்துக்களும் கண்ணான மாயன் கையார வேகொடுத்து நடத்திப் பெண்ணாரை நல்ல வொருங்காக இடத்தி லிருத்தி இகனை புரிகையிலே எம்பெருமாள் நாட்டு இகனை நிறைவேற்றிப் பொன்பதியில் நாளேழும் புரிந்து திருநாளும் நடத்தித் திருமால் நாட்டுக்கணக் கும்பார்த்துத் தடத்தின் வழியாய்த் தானிருந் தாராய்ந்து வந்தநாள் வந்து வையகத்துச் சோதனைகள் இந்தநாள் வரைக்கும் இருந்துநாம் பார்த்ததிலே மிச்சமெந்தச் சாதியென்று மேலோர் மிகஅறிந்து அச்சமில்லாச் சாதி ஆதிச்சான் றோர்களையும் விலைபோட்டு ஆளடிமை மேவிக்கொள்ள வேணுமென்று மலையாம லெம்பெருமாள் மனதிலுற்றுச் சான்றோரை உயிரறிந்து நல்ல விலைகூறி ஆளடிமை மெயிதறிந்து நாதன் முழுதடிமை கொண்டனராம் கொண்ட அடிமை குலச்சாதி யானோரை அண்ட மறிய ஆகந்தெளிந் தெடுத்துச் சேர்த்துவைத்துக் கொண்டார் சிவஞானப் பொக்கணத்துள் காத்தந்தப் பெண்களுடக் கற்பறிய வேணுமென்று பெற்றுவந்தத் தீர்ப்பின் பிரமாணத் தின்படியே சித்துவொன்று செய்யச் சிந்தைதனி லுற்றனராம் உற்று மனதில் உபாய மதுவாக வத்து வகைபேரில் மகாநேட்ட மாயிருந்து பொன்னு பணங்காசு பெரிய நிலமதிலும் தன்னுள் நினைவாய்த் தானிருந்தா ரம்மானை

அய்யா வைகுண்டம் எழுந்தருளல்

இப்படி இவர்தான் பாரில் எண்ணிய கரும மெல்லாம் ஒப்புடன் முடித்துத் தன்னால் ஊணிய தெல்லாந் தோண வைப்பபுடன் யாமங் கூறி மனுக்களைத் தெளித்து ஏற்று இப்புவி விட்டுக் குண்டம் ஏகிட மனதி லுற்றார் ஏகிட மனதி லுற்று இருக்கின்ற உபாயந் தன்னை வாகிட மிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர் தாகிடச் சீசன் மார்கள் தங்களு மறியா வண்ணம் கோகிடக் குண்டஞ் செல்லக் குருவையும் நாட்ட மானார் மனதினி லுற்று மாயன் மாதர்கள் மக்க ளோடு தனதுள மகிழ்ந்து கூடித் தயவுட னிருக்கும் போது என்துடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில் தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே தேடியே யிருக்கும் போதுத் தேவியர் மக்கள் காண நாடியே சொரூபங் கொண்டு நான்வந்து நடுக்கள் கேட்பேன் பேடிகள் நினைத்தி டாமல் பேசின நூற்போல் கண்டால் வாடியே மலையா வண்ணம் வாழ்தர்மப் புவியில் வாழ்வோம் என்றவர் சிரித்துக் கொண்டு இருந்ததைக் கவனி யாமல் விண்டவர் நளியாய்ப் பேசி விடுத்ததை மக்கள் சான்றோர் என்றைக்கும் ஆள்வா ரென்று இருந்தன ரவர்க ளெல்லாம் குண்டத்தை மனதி லெண்ணிக் குருவையும் நாட்ட மானார் குருவே யெனக்கு ரருளிக் குறித்த ஆண்டு இதுவரைக்கும் ஒருசொல் மொழியே குறையாமல் உகத்துத் தீர்ப்புக் கூறிக்கலி கருக யாம மிகவுரைத்துக் கைக்குள் ளெடுத்தென் மக்களையும் வருகக் குண்ட மனதிலுற்றேன் வந்தே கூட்டிக் கொடுபோவீர் ஆதியே யென்றன் அப்பு அனந்தகுரு சோதியே யென்றன் சொந்தத் திருவுளமே இந்நாள் வரைக்கும் இவ்வுலகில் பேதயிரென்று அந்நா ளுரைத்த அப்புநா ராயணரே இனியா னுமது இலங்கும் பதியில்வர முனியா னவற்கு முற்ற விடையருளும் ஆண்டாச்சு லக்கு அடுத்திருக்கு தையாவே வேண்டா முலகம் மேலுலக மேயழையும் அங்கழையு மையா ஆதிமுனி யென்றனையும் தங்க இனிமாட்டேன் தரிப்பிட மங்கேயல்லால் என்று வருந்தி இவரிருக்கும் நாளையிலே மன்று தனையாளும் மாயத் திருமாலும் வரங்கொடுத்த நாளும் வைத்தலக் கும்பார்த்துப் பரமிருந்து தேர்ந்து பாலன் தனைவருத்த வேணுமென் றீசுரரும் வேதத் திருமாலும் கண்ணு மகனைக் கடிய விமானமதில் ஏற்றிவைத்து மாமுனிவர் இருபுறமுஞ் சூழ்ந்துவரச் சாத்திரியோர் ஞான சற்குருவைத் தானனுப்பி வைகுண்ட வீட்டை வானோ ரலங்கரிக்க மெய்கொண்ட நாதன் விளம்பினார் மேலுகில் வானோர்க ளெல்லாம் வைகுண்ட வீடதையும் தானமுட னெல்லாம் சணமே யலங்கரித்தார் சற்குரு வான சடாமுனி யிங்குவந்து மெய்க்குரு வான வீர விசயனுக்குச் நல்லதூ னென்று நவின்றவரை யும்புகழ்ந்து செல்ல அரைமணிக்கு சென்றிங்கே நில்லுமென மாதர் மனைமறந்து வாழ்வை மிகமறந்து தாத ரூண்மறந்து சடல வுடைமறந்து நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து செம்மைக் குருவாய் செம்மிமூ லமடக்கி மூல மதிலடக்கி உடலூற்றைத் தானிறக்கிக் காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து நிற்கும் நினைவை நினைவி லறிந்துவைத்து நடக்கும் படியான நல்மொழிக ளுமுரைத்து உடற்குள் குறியாய் ஒத்துமிக வாழுமென்று சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோ டேசேர்த்து இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமெனப் பதறாமல் நீங்கள் பண்பா யொருப்போலே சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய் இருந்துமிக வாழும் என்றுநாமங் கொடுத்துத் திருந்துபுகழ் மாயன் சிறந்தவோ ராயிரத்து ஓரிருபத் தாறாம் ஓங்கு மிடபமதில் சீரியல்பா யான தேதி யிருபத்தொன்றில் பூருவ பட்சம் பூச நட்சேத்திரத்தில் வாறுடைய சோம வாரம் பொழுதூர்ந்து பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில் மெய்கொண்ட சான்றோர் மேலாசை யுள்ளிருத்திக் கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ வைகுண்ட மேக வழிகொண்டா ரம்மானை வைகுண்ட மானார் வாய்த்த விமானமோடு வான லோகத்தார் மலர்மாரி தாந்தூவ விமான மதிலேறி மேலோக மீதில்வரத் தேவாதி யெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர மூவாதி யெல்லாம் முகமலர்ந்து தாமிருக்கத் தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில்வந்தார் வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவ ரிஷிமாரும் நந்தன் பெருமான் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி எந்தன்பிரனே யெங்களுக்கு இரங்கியெ மையாட் கொண்டவரே சிந்த ரெவரு மிகப்போற்றத் திருமால் மகனைக்கண் டாவினரே கண்டே மகனை மிகஆவி கமல முகத்தோ டுடனணைத்துப் பண்டே செகலில் மகரமதுள் பண்பா யிருத்திய ருளிவைத்த நன்றோர் மொழியுங் குறையாமல் நடத்திக் கணக்கின் பிரகாரம் இன்றே யெழுந் திங் கேகிவந்த இளமான் கன்றென் றாவினரே ஆவி மகனை அன்போ டுறவணைத்துத் தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதெனத் தாமுனிந்து மகன்மேல் தயவாகத் தாயாரும் அன்பு மிகக்கூர்ந்து அருமைமக னையாவி இன்புருக நன்றாய் இருந்தாள்காண் லட்சுமியும் சந்தோ சமாக சங்கரருந் தான்மகிழ்ந்து வந்தாயோ என்று மகிழ்ந்துகொண்டா ரம்மானை நான்முனிவனும் வேத நல்லதெய் வேந்திரனும் தாமு மிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம் சரசு பதிமாதும் தாயீசொரி யாளும் பரசுரா மன்முதலாய்ப் பண்பாய் மகிழ்ந்திருந்தார் கயிலை யுகமும் கமண்டல மேழ்புவியும் அகிலமது அறிய ஆனார்வை குண்டமென எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன் முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக ஈரே ழுலகும் இவர்செய்த நற்றவம்போல் ஆரேதுஞ் செய்ய அடங்கா திவர்தவந்தான் பிறவிநா சக்கலியன் பொல்லாத வையகத்தில் திறவி தனிலிருந்து செய்துதவ மேற்றுவரோ கண்டாற் பவஞ்சூடும் கலியனுட வையகத்தில் தண்டரள மானதவம் தாக்கிநிறை வேற்றுவரோ கலிதொடரு முன்னே கனகதுவா பரயுகத்தில் சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர் பதறி நடுங்கிப் படாதினிமே லென்றுசொல்லிக் குதறி மலைந்து கொடுவான மாமுகடும் கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத் தப்பிவர யிவரும் சடையாம லவ்வுக்ததில் முப்பிறவி யுந்தியிலும் உதித்துக் குதித்தவராய் அவ்வுகத்துக் குள்ளே ஆண்டுமூ வாறுவரை செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடிப் பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில் மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும் சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும் இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ் சூடமால் சிறந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார் பெரிது பெரிதெனவே பெரிய முனிவோரும் அரிது அரிதெனவே அகமகிழ்ந்து கொண்டாடிக் மன்றாடுங் கயிலை வானவரும் போற்றிநிற்கப்

சான்றோர் கோவில் அமைத்தல்

பூமிதனில் மக்கள் பெரியகுலச் சான்றோர்கள் சாமியுட தேவி சுற்றமட மாதர்களும் அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க வைகுண்ட மேக வழிகொண்டார் நம்மளையா என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா நடந்தார் தானல்லால் ஞாயம்வே றில்லையென்று மாதத் திருநாளும் வாரமற வாதபடி நாதன் தனக்கு நாமள்செய் வோமெனவே கோவிலது வைத்துக் கூண்டதிரு நாள்நடத்திச் சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ போற்றிநிற்க நாதனுட தேவி நாயகிமா ரெல்லோரும் சீதமண வாளருட சீர்பாத முண்டெனவே துயரமதாய் வாடி சிவனே செயலெனவே இயல்புதரு வீரெனவே இருந்தார் தவமுறைபோல் நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார் இப்படியே அன்பர் ஏந்திழைமா ரெல்லோரும் முப்படியே சொன்ன முறையெனவே யிங்கிருக்க அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும் மைப்போ லினிய மகனைமிக முன்னிறுத்திக் கூண்ட மணியே கோகுலமே கற்பகமே ஆண்ட மணியே அருளுமெந்தன் கண்மணியே என்றன் மணியே என்னாத ஓவியமே உன்றனைநான் பெற்று உற்ற கலியுகத்தில் இருத்தி தவமும் ஏற்றமுறை யும்நடத்தி வருத்தி நருளை மகாசோ தனைப்பார்த்துத் களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரைத் தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும் இருந்துநீ யங்கே இகனை நடத்தினதைப் பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார் அய்யரே கோவே அப்புவே நீர்கேளும் பொய்யர்வாழ் கலியில் புரிந்துத் தவசாக ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து வாறுமுன் னீரும் வாரியிலே வந்திருந்துக் கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள் தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே நித்தந் திருநாளும் நேரிழைமா ருள்ளதையும் புத்திரரை யுஞ்சேர்த்துப் பெண்களையு மாலையிட்டு மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து மகவீந்துக் கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய ஆடிக் களித்து யாம மிகக்கூறி நல்லோரை யெல்லாம் நாடித் தெளித்துமிக வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன் ஆஸ்தி பலதும் ஆயளைமார் மக்களையும் கோத்திர முங்கண்டேன் கூறிவைத்த லக்கில்வந்தேன் அந்தச் சிறப்போடு அங்கிருந்தே னானாக்கால் இந்தவை குண்டம் யான்வந்து காண்பேனோ என்று குருமகனார் இசைந்தவுடன் நாரணரும் அன்று அயைச்சிருந்த ஆனமுனி தங்களையும் இருபேரை யும்வருத்தி இவர்மொழிந்த வார்த்தையதில் ஒருமொழிதா னாகிடினும் உலைவதிங்க ளுண்டோசொல் தவறாமல் சொல்வீர் தப்பிதங்க ளுண்டானால் பதறாமல் சொல்வீர் பரம்பெரிய மாமுனியே எனக்கறியா வண்ணம் யார்செய்வார் மாமுனியே தனக்கறிய நீங்கள் சாற்றுவீ ருள்ளபடி என்று மகாகுருவும் இயம்ப முனிவோரும் நின்று வாய்புதைத்து நெடியோன் பதம்பூண்டு

கலைமுனி, ஞானமுனி சாட்சியம்

கண்ணுக்குள் மணியாய் நின்ற காரணக் குருவே ஞான விண்ணுக்கு ளெவர்க்கும் ஞான வெளிச்சுட ரான மூர்த்தி ஒண்ணுக்கு ளொண்ணாய்நின்று உலகீரே ழனைத்துங்காக்கும் அண்ணுக்குங் கடந்த சோதி அறிவுள மறியா தேதோ எறும்புகடை யானைமுதல் பேதா பேதம் எண்பத்து நான்குயிர்க்கு மேக மாக உறும்பொருளாய் நின்றகுரு நீயே யல்லால் உலகமதி லாருளதோ வுடைய மாலே செறும்பொருளா முமதுமக னங்கே வந்து செய்தவசு முறையதிலும் நடத்தை மேலும் தறும்போருள்போ லெங்கள்மன மறிய வொன்றும் தப்பிதங்க ளில்லையெனத் தாழ்ந்து நின்றார் தப்பிதங்க ளில்லையையா தவத்துக் காதி தண்மைமிகுக் குணமுடைய தர்ம சீலன் உப்பரிகை மீதிருந்து அரசே யாள உன்புவிக்கு ஆசையல்லா லுலகி லில்லை மைப்பிதுக்க மானதொரு குழலா ரோடும் மக்களொடும் வாழ்வோடும் வாழ்ந்த உள்ளம் நற்பிதுக்க மானகுரு நாட்ட மல்லால் நானிலத்துள் ளாசையில்லை நாங்கள் கண்டோம் நாங்கள்மிகக் கண்டோமிவ ருள்ளம் போலே நாடுபதி னாலதுலுந் தவத்தோர் பார்த்தால் காங்கரிது எங்களுட கருணை நாதா கலியுகத்தை வேரறுத்த கடவுள் பாதம் ஒங்கஅவ ரடியிணையைப் பணிந்து நாளும் ஊழியங்கள் செய்தவர்க்கு உவந்து நிற்கப் பாங்கருளிச் செய்துமிக ஆண்டு கொள்ளும் பரமகுரு நாதனெனப் பணிந்து நின்றார். நின்றவரை முகம்நோக்கி மாயன் தானும் நிலவரங்க ளுள்ளதெல்லாம் நினக்குள் ளாச்சு இன்றிவரை நீங்கள்கொண்டு நமது குண்டத்(து) ஏகபதி வாசல்தெரு எல்லாங் காட்டிக் கொண்டுஅந்தத் தையிலமதில் மூழ்க்கிப் பின்னும் கூட்டிக்கொண்டு வாவெனவே கூற வானோர் டுண்டுபல மேளமொடு தாளத் தோடு உற்றரத மீதில்வைத்து உம்பர் சென்றார் சென்றவர்கள் நாரணரின் குண்ட மானச் சிறப்பையெல்லாங் காட்டிமிகத் தெளிந்த சந்த தன்றமலர் வாழ்தங்கப் பதத்தில் மூழ்க்கித் தண்டிகையின் மீதிருத்தித் தயவாய் வானோர் கொண்டவர்கள் மாயனுட பதத்தில் விட்டுக் குலாவியந்த வானோர்கள் கும்பிட டேற்ற மன்றலணி மாயவரு மீசர் தானும் வைகுண்டமா முனியெனவே வழங்கி னாரே வழங்கியந்த மாயவரும் வானோர் தம்மை வரவழைத்து நீங்கள்மகா மேர்வு சென்று இளங்குருமா னானகுரு வைந்த ராசர் இன்றுபுவி யீரேழு மடக்கி யாளப் பழங்குருநூல் முறைபோலே பாரில் தோன்றிப் பதியாள வந்தாரெனப் பதிப்பீ ரென்று வழங்கமிக மறையோர்கள் மேர்விற் சென்று மாயனுரை தவறாமல் வகுத்தார் தாமே வகுத்திடவே முன்னுரைத்த முறையோ லுள்ள மகாபெரிய கிரீடமு மவர்க்குச் சூட்டிப் பகுத்துடைய செங்கோலும் பரம னார்தன் பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும் தொகுத்திடப்பொன் னீராளத் துகிலு மீந்து துதிசிங்கா சனமீதில் தூக்கி வைத்து மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற மறையவரு மீசுரரும் வரமே யீந்தார்

அய்யா சான்றோர்க்கு இரங்கல்

ஈந்திடச் சிங்கா சனத்தில் இருந்தவ ரேதோ சொல்வார் கூர்ந்திட எனக்கு இங்கே குணமெல்லாம் நலம தாகச் சார்ந்திட மருளிச் செய்தீர் தற்பரா வொப்பில் லானே ஓர்ந்திட எனக்கு அங்கே உகந்தவ ருண்டே முன்னம் ஆடையும் பொன்னுங் காசும் அன்னமும் பாலு முந்தன் நீடிய உதவி யாலே நினக்கவ ரிதுநாள் மட்டும் வாடியே முகங் கோடாமல் மனத்தய வதனா லீந்து தேடியே மக்கள் தம்டமச் சிந்தையில் நினைக்கு தென்றார் ஐயரே இதுநாள் மட்டும் அவரெனக் களித்த செல்வம் வையகமே தரியா தென்றன் வாயினா லுரைக்கப் போமோ மெய்யெல்லா மவர்கள் பேரில் மேனியு முருகு தையா செய்யனே யவர்க ளென்றன் திருப்பதம் வணங்கச் செய்வாய் திருப்பதம் வணங்கச் செய்வாய் என்றெனத் தெளிந்த ஞானி கருவதி லுதித்த சான்றோர் சாதியில் கௌவை யாகிக் குருபதம் வணக்கஞ் செய்து கூறிய மொழியைக் கேட்டு மருவணி துளசி பூணும் மாயனு மகிழ்ந்து சொல்வார் கைகண்ட மணியே யென்றன் காரணக் குலமே கன்றே வைகுண்ட மணியே யுன்றன் மனதலைந் திருக்க வேண்டாம் மெய்கொண்ட மணிக ளான மேன்மக்கள் சான்றோ ரெல்லாம் பொய்கொண்டக் கலியை விட்டுன் பொற்பதம் பெறுவர் கண்டாய் கலியை யெரிக்கத் தவசிருந்த கருத்தை யறிந்து உன்னிடத்தில் வலிய வந்துன் பதம்வணங்கி மனதுக் கேற்க நின்றவரும் பொலிய உனக்கு அமுதுடன் புடவை பலது மீந்தவரும் ஒலியத் தான தர்மமதும் உகந்தே யளித்தோர் மிகவாழ்வார் இரக்கும் படிபோல் வடிவெடுத்து இருந்து கலியை முடிக்கஅங்கே உரைக்கு மொழியைக் கேட்டுனக்கு உதவி புரிந்த உத்தமரும் கரைக்கும் படியே யமுதளித்துக் கைக்குள் ளேவல் புரிந்தவரும் மறைக்குங் குருவே யென்னாணை வந்தே சேர்வா ருன்பாதம் உடுக்கத் துணிக ளில்லாமல் உலக மதிலே யெளியவனாய் முடுக்க மதுவே யில்லாமல் முடியும் விரித்துப் பேயனைப்போல் கடுக்கக் கலியை யெரிப்பதற்குக் கவிழ்ந்து சிறைநீ யங்கிருக்க அடுக்க உதவி செய்தவர்கள் அவரே யுனக்கு மகவாமே ஆமே யவர்க ளல்லாமல் அதிக மகனே நீயிருந்த ஓமே யறியா வண்ணமுந்தான் உலகி லுன்னைப் பழித்தவர்கள் சாமே தீயில் தாங்கிடந்து சடமே நரகுக் குள்ளாகி வேமே யுன்றன் மேலாணை விறுமா பதத்தி னாணையிதே ஆணை மகனே அசையாதே கண்மணியே சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத் தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய் வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம் அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும்

பொய் வேசம்

பெலங்க ளதுபார்க்கப் பொய்வேச மொன்றனுப்பி மகனே நீசொன்ன மாநூல் முறைப்படியே உகமீதே யார்தான் உகந்திருக்கிறா ரெனவே பார்த்துவர வோர்சொரூபம் படைத்து அனுப்புகிறேன் ஏற்றந்தச் சாதிக்கு இன்னமீ ராறுகலை அடுக்கும் வரைநீ அவர்பேரில் நாட்டமதாய் முடுக்க முடனிந்த உற்றசிங் காசனத்தில் தவம்போ லிருந்து தானாளு குண்டமதில் ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல் நாளு வரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ அனுப்புகின்ற பொய்ச்சொரூபம் ஆங்கார மற்றவுடன் மனுப்புகழ நாமள் வையகத்தின் மீதிறங்கி நிச்சித்து வைத்த நினைவா னதின்படியே வச்சிருந்த நற்பதியில் வாழலாங் கண்மணியே என்றரைத்து மாகலியில் ஏற்றபொய் வேசமதாய் குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப வந்தங்கு குதித்ததுகாண் வையகத்தி லம்மானை நந்த னானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான் முந்தச் சுவாமிகட்டு முன்னுதித்து வந்தேனென்பான் செந்தழல்போல் நின்றிடுவான் சிட்டுப்போ லேபறப்பான் கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான் பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான் தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான் மார்க்கம் பலதணிவான் வைகுண்ட மென்றிடுவான் கடலில் நடப்பேனென்பான் கனலி லிருப்பேனென்பான் மடவாரை யெல்லாம் மாலை யிடுவேனென்பான் இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள் செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க சூட்ச மநோகம் சொல்லொணா வித்தையதாம் தூட்ச மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும் இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய்

நல்லவை முழித்தல்

சிவனு முமையாளும் செய்யத் திருமாலும் தவமுனி வர்களும் சரசுபதி மாதுமையம் நான்முகனும் வேத நல்ல மறையோரும் தான்முனிந் தாகமத்தின் தன்மை யதின்படியே தொடுத்த கலியன்று தோன்றி குதித்தவரைக் கொடுத்தகணக் கின்படியே கொல்லக் கலிதனையும் வானமது குழவி மண்பூமி யம்மியெனத் தானமது நிரப்பாய்த் தன்னா லிருந்திடவும் உண்டான தெல்லாம் உடன்கரிந்து நிறீடவும் அண்ட ருலகம்வரை அசைந்து முழித்தடவும் மாயவரு மீசர் வைகுண்ட மாமணியும் தாய்தமர்க ளானச் சத்தி திருவுடனே வைகுண்ட ரான மகனை நடுநிறுத்தி மெய்குண்டத் தேவர் மிகுகூல மாகிவர முத்திச் செங்கோலும் முழிப்புச்சங் கும்பிரம்பும் பத்தியுள்ள நாரணர்தான் பாலனுட கைக்கொடுத்து ஆகாய மாக அவர்கள்மிக வந்துநிற்க வாகாக நாரணரும் மகனை முகம்நோக்கி நல்ல மகனே நாடுந் தவத்தோனே செல்ல மகனே திருபெற்ற கண்மணியே உநத்னக்கு ஏற்ற உற்ற மனிதர்களும் சந்தமுள்ளத் தேவியரும் தனதுகந்த புற்பூடும் ஆகின்ற பட்சிகளும் ஆன மிருகமதும் பாகுசெறி விருட்சம் பண்பான நற்பதியும் யாதாக முன்னே யாமமிட்ட நூற்படியே நீதான் வருகவென நினைத்துவிடும் என்மகனே நினைத்தார் வைகுண்டர் நினைவின் படிபோலே மனத்தயவு கூர்ந்து மலமலென நல்மனுவோர் முழித்தார் வைகுண்டர் மொய்குழலார் மக்களுமே களித்தே யிருந்த கருத்தின் படியாலே பட்சி மிருகம் பலமிருகச் செந்துக்களும் அச்சுதர்க கேற்ற ஆதி விருட்சங்களும் புதுப்பூமி புதுநிலவு புதுவானம் புதுவாயு குருபூமி யானக் கூண்டதாயகப் பொற்பதியும் பொன்பதியும் நற்றெருவம் பெரியதெப்ப வாவிகளும் அன்பதிய நல்மனுவும் அனுகூல மாயுதித்தார் எம்பெருமாள் முன்னே யாம முரைத்தபடி வம்பரெல்லா மாண்டார் மனதுகந்தோர் தாமுழித்தார் தன்ம யுகத்துக்குத் தானேற்ற வஸ்துக்களும் நன்மையுடன் தன்னால் நாடி மிகக்குதித்தார் நல்ல யுகத்தர்ம நாடு மிகக்குதித்தால் வல்லவை குண்டமதாய் வந்தவுடன் வாருமெனச் சொல்லி யயைச்சிருத்த சுத்த மிருகமதும் நல்ல மனுவோரும் நற்பறவை யானதுவும் விருட்ச மதுவும் மேலுகந்த வஸ்துக்களும் வாருமெனச்ö சான்ன வகையெல்லா மேமுழித்தார் ஆருமிக வொவ்வாத அரியோ னகமகிழ்ந்து சீருகந்த நாதன் திருமால்சந் தோசமதால் ஆகாத்த தெல்லாம் ஆழிதனை வருத்தி வாகா யரித்து வன்னரகில் தள்ளிமிகச் சுத்த யுகத்தைச் சுத்தி வருத்துமென்று கற்றைக் கங்கையாட்குக் கரியோன் விடைகொடுத்தார் விடைவேண்டி வாரி விமலன் மொழிந்தபடிக் கடல்வாரி செய்து கமலயுகஞ்சுத்திபண்ணிக் கர்த்தனரி நாரணரைக் கடலுமிகத் தெண்டனிட்டு முத்தனரி நாதன் முன்னுரைத்த நீசனெனக்

நடுத்தீர்ப்பு

குறோணி அவனுயிரைக் கொண்டுவந்து முன்னிறுத்திச் சுறோணிதப் பாவி சொல்லடா உத்தரங்கள் ஏழு பிறவி இதுவரையுஞ் செய்துவுன்னை வாழுநீ யென்று வரமருளிப் பார்த்தேனே இக்கலியில் நானும் இரப்பனைப்போல் வந்திருந்து மிக்க உலகறிய வெறிப்பேயை யுமெரித்துத் தண்ணீரால் மானிடர்க்கு சகலநோய் தான்தீர்த்துப் புண்ணியமாய்த் தருமம் புரிந்து மிகவருளிக் காணிக்கை கைக்கூலி காவடி யும்நிறுத்தி ஆணிக்க மாக அம்புவியில் யாவரையும் ஒருதலத்தில் விட்டு உற்றபுத்தி சொன்னேனே இருபுத்தி யால்நீயும் என்னைப் பிடித்தடித்தாய் கடடியென்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே அட்டிசெய்ய வில்லையல்லோ ஆண்டியாய் நானிருந்து பண்டார மாகப் பார்மீதி லன்பரிடம் நன்றாகப் பிச்சை நான்வேண்டி யேகுடித்துத் தர்மமா யல்லோ சனங்களுக்கு ஞாயமுண்டோ வர்மமா யென்னை வந்தடிக்க ஞாயமுண்டோ அல்லாமல் முன்னே அரனிடத்தி லாணையிட்டு எல்லா மினிமேல் இராச்சியத்தில் யாதொருவர் பண்டார மென்று பாரறிய வந்தவரை அண்டே னவரை அட்டிமிகச் செய்யேனென்று ஆண்டிகளை நானும் அட்டிமிகச் செய்ததுண்டால் கூண்டிறந்து போவோம் கொடிப்பிதி ரானதெல்லாம் சேனைத் தளமிழந்து செல்வமது தானிழந்து ஏனைக் குழலோடே என்கிளைக ளெல்லோரும் தன்னா லிறந்து சளநரகம் போய்விடுவோம் முன்னாள் நீசொல்லி மொழிந்தாணை யின்படியே பண்டாரந் தன்னைப் பதைக்க விடாதபடி அண்டாமல் நீயும் அடித்ததினால் ஞாயமென்ன சொல்லடா நீதான் சொன்னமுறைப் படியே கல்லடா நீதான் கவிழ்ந்துநிற்கும் ஞாயமென்ன பாவிநீ யேழ்பிறவி பார்மீதில் தோன்றியதில் ஆவி யறிய அனுப்போலும் நன்மையது செய்ததுண்டோ சொல்லு செவியுனக்குக் கேட்கலையோ மைதரிய யிப்பிறவி மிகுஇரப்பன் போல்நானும் எளிய குலத்தில் எகாபரனே தஞ்சமெனச் சுழிமுனையை முத்தி சோமனருள் உள்ளிருத்தி உடுக்கத் துணிகளற்று உண்ணவூண் தானுமற்று படுக்க இடமுமற்றுப் பரமார்த்த மாயிருந்து சாதிபதி னெட்டதுக்கும் யாம முறைப்படியே நீதியுடன் தண்ணீரால் நொம்பலங்கள் நீக்கிவைத்தேன் நீயறிந்துங் கண்டும் நீணிலத்தோர் தாமறிய வாயிலிடும் வெற்றிலைக்கு மனுவோர் தடவுகின்ற சுண்ணாம் பானாலும் தொட்டுநீ தந்தாயோ எண்ணாமல் நீயும் என்னை மிகப்பழித்துப் பாவிநீ என்னைப் பரிசுகெடத் தானடித்து மேவிநா னிட்டுருந்த வெற்றிசுரக் கூடதையும் உடைத்துத் தகர்த்தாயே உற்றகந்தைக் காவியையும் மடத்தனமாய் நீயும் வலித்துக் கிழித்தாயே தோளிலிடும் பொக்கணத்தைத் தூக்கியென்னைக் கீழ்ப்போட்டுத் தூளிபட வுதைத்துத் துண்டுதுண்டாய்க் கீறினையே ஐயோ நீசெய்த அநியாயஞ் சொல்லவென்றால் வைய மீரேழும் வழிந்து நிரம்பிடுமே பத்தினியாள் பெற்ற பாலதியச் சான்றோர்கள் மெத்த அவர்நன்றாய் விளங்கிருக்கணுஞ் சிவனே ஆடை யில்லாமல் அலமாந் திருக்கையிலே நாடதிக மான நல்லபட்டு நீராளம் தங்கச் சரிகைத் தலைப்பாக் குல்லாவுடனே மங்களமா யென்னை வந்தெடுத்துத் தானுடுத்திப் பாலும் பழமும் பருந்தேனும் சர்க்கரையும் மேலும் நவநிதியம் வேண்டும் பலகாரம் அன்னங்காய் சொர்ணம் அன்பாகக் கொண்டுவந்துப் பொன்னப்ப நாரணரே பெற்றவரே வாயி லெடுத்திட்டு வளமாக என்றனக்குச் சாயத் தலையணையும் சரிகைத்தொட்டில் மெத்தைகளும் பாதங்கீழ்க் கொள்ளாமல் பாலதியச் சான்றோர்கள் ஈத லிரக்கமுடன் எடுத்தென்னைத் தோளில்வைத்துப் போற்றி மகிழ்ந்து பூமெத்தை மேலிருத்தி ஏற்றிப் பலகாலும் என்சொல் மிகக்கேட்டுத் தாங்கி யிருந்த சான்றோர்க ளின்பெருமை நாங்க ளுரைக்க நாடுமிகத் தாங்காதே என்னென்ன பவிசு எமக்கவர்கள் தாமீந்து பொன்னம் பலமீதில் புகழ்ந்துமிக வாழ்வாரே பாவிநீ யென்னைப் பரிசுகெடத் தானடித்து ஏவிநீ விட்ட ஏவலா ளிப்போதெங்கே ஆணுவங்க ளெங்கேஉன் ஆனைப் படைகளெங்கே பூணுகின்ற தங்கப் பொன்னா பரணமெங்கே விஸ்தார மெங்கேநீ வீற்றிருக்கு மேடையெங்கே சுற்றார் கிளைகளெங்கே தோகைமயி லார்களெங்கே குதிரைத் தளங்களெங்கே கோட்டையெங்கே வாசலெங்கே சதுரா யணிவகுத்தத் தாண்டும் படைகளெங்கே தேரெங்கே யுன்றன் சிங்கா சனங்களெங்கே ஊரெங்கே யுன்றன் ஒழுங்குதளச் சேனையெங்கே மாடமெங்கே கூடமெங்கே மணிமேடை யாரமெங்கே தோடமெங்கே யுன்றன் தோழரெங்கே சூரமெங்கே ஆயுதங்க ளெங்கேவுன் அம்புதடிக் காரரெங்கே வாயுரங்க ளெங்கேவுன் வாயில்காப் போர்களெங்கே துட்டமெங்கே யட்டியெங்கே துரைத்தனங்க ளானதெங்கே பட்டமகங் காரமெங்கே பருங்கிள்ளாக் கானதெங்கே மாடெங்கே நீதான் வளர்த்த மிகமெங்கே வேடிக்கை யெங்கேநீ விதித்த கணக்குமெங்கே ஓடி யுலாவும் உற்றசா ரட்டுமெங்கே வண்டியெங்கே யுன்றன் வாழ்வெங்கே மாட்சியெங்கே சண்டிப் பயலேவுன் தாடாண்மை யெங்கேசொல் இத்தனையுந் தோற்று இப்போ நரகமதில் சத்திறந்து போகவுன் தலையில் விதியாச்சே உன்விதியாங் நீயும் உயிரழிந்தா யல்லாது என்னதி காரத்தால் ஆக்கினைகள் செய்கிறேனோ உன்னால் நீமாள ஊழிவிதி யானதல்லால் தன்னாலே தான்கெட்டுத் தான்போவா ரென்றபடி உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி ஒருபிறவி தன்னிலுன்னை உயிரழிக்கக் கூடாதே கருவருளும் நாதன் கற்பினைக்கே ராதெனவே பிறவியே ழுன்னைப் பெரும்புவியி லேபடைத்துத் திறவிப் பொருளோன் சிந்தை மிகஅறிய உகத்துக் குகங்கள் உத்தமனாய் நான்பிறந்து மகத்துவமா யுன்றன் மனதைமிகப் பார்த்தேன் எட்போலே தர்மம் ஈத லிரக்கமுடன் நட்பேதுங் கண்டிலனே நன்றகெட்ட மாபாவி ஏழு பிறவியிலும் என்பேரு சொல்வோரைக் கோளுசெய் தவரைக் கோட்டிக்கொண் டேயடித்துச் சிறைக்கா வல்தன்னில் திட்ட விலங்கில்வைத்து அறையான துகொடுத்து அட்டிமிகச் செய்ததல்லால் இரக்க முடன்தயவு இல்லையே உன்னிடத்தில் அரக்கர் குடும்பம் ஆனதிலா லுன்னுடைய மனதிரக்க மாகாது மாபாவி நீகேளு முன்னாள் குறோணி உதித்துவந்த மூன்றுகமும் தன்னாலே நீபிறந்து தாண்டி யதுகளித்துப் பின்னாள் பிறந்தாய்ப் பெருங்கிறே தாயுகத்தில் அந்நாளில் நீங்கள் அண்ணனென்றும் தம்பியெனும் பிறந்தீர் படைகள் பெருத்தசனக் கூட்டமுடன் சிறந்த மதிலும்பெரிய செல்வமா யாண்டிருந்தீர் ஆண்டிருக் கும்போது ஆங்காரந் தான்மீறித் தாண்டி பதமறந்து தானவரை யும்பிடித்துத் தெய்வமட வார்களையும் சிறையில் மிகப்போட்டு மெய்வரம்பு விட்டு மேலோகத் தாரையெல்லாம் ஊழியங்கள் கொள்ள உனக்கு மனதாகி நாளி லவரை நட்டிமிக அட்டிசெய்து வம்புசெய்து நீயும் வானலோ கம்வரையும் அம்புவி யெங்கும் உன்னநியாய மேமீறி ஈரே ழுலகும் இராமா ராமாவெனவே பாரேழு தேசம் பண்பாய் முறையமிட முறையமிட்ட சத்தம் உடைய பரனறிந்து இறையவரும் நம்மிடத்தில் இந்தஅநி யாயமதை மாற்றிவைக்க வென்று மலரோ னெனையனுப்பப் பார்த்துன்னை நானும் பழையவர முந்தேர்ந்து ஆயுதத்தா லம்பால் அஞ்சு முகத்தாலும் மாயும் படியே வகையில்லை யென்றுசொல்லி ஆறு முகமாய் ஆனபுகழ் சத்திதனை வீறுடனே நல்ல வேலாயுத மெனவே எடுத்தே சொரூபம் யானுனக்கு நல்லபுத்தி விடுத்தே யுரைக்க மிகுதூத னையனுப்பிச் சொல்லியுங் கேளாமல் சூரப் படைகூட்டிக் கொல்லுவே னென்று கூண்டப் படையோடு சண்டைக்கு நீயும் சமைந்துவந்தா யென்னோடு கண்டே யுனைநான் கருணைபோல் புத்திசொன்னேன் தேவர்களை விட்டு தெய்வமட வாரைவிட்டு மூவர்களை நெஞ்சில்வைத்து உகமாளு என்றேனே அப்போது நீயும் ஆக்கிரமந் தன்னாலே இப்போது பேயாண்டி யார்கேட்பா ருன்பேச்சை பிச்சைக்காரா வுன்சொல் பேருலக மாளுகின்ற செஞ்செல்வள ராசனுக்குச் செல்லாது போடாயென்றாய் என்னோ டேபோர்க்கு எதிராக வந்தாயென்றால் உன்னோ டேயுள்ள உற்ற திறத்தாலே சண்டைக்கு வாடா தாட்டாண்மைப் பார்ப்போமென்றாய் விண்டதெல்லாம் பார்த்து வேலா யுதமெடுத்து அப்போது வேலால் அறுத்தேனா னுன்சிரசை முப்போது உள்ள முழுக்கிளைக ளத்தனையும் சேரக் குலமறுத்து சேனையெல் லாமழித்துக் கோட்டை யழித்துன் குவாலத்தைத் தானழித்துக் கேட்டேனா னுன்னோடு கெறுவிதமே னென்றுரைத்தேன் சத்தி வேலாலே சத்தியென்னைச் சங்கரித்தாள் புத்திகெட்ட ஆண்டி போதுமோ என்னையெல் என்றாயே பாவி ஏற்றயுக மன்றழித்து அன்றே யுனையும் அதிலோர் பிறவிசெய்தேன் அந்நா ளுன்பேர்தான் அதிக இரணியனாய் துன்ஞாய மாய்நீ தோன்றி முடுக்கமதாய் அரிநமோ வென்ற அட்சரத்தையு மாற்றி மதியாம லுன்பேரை வளங்கினா யவ்வுகத்தில் ஆதி சிவமறிந்து அசுரா வுனையறுக்க மாதிரிபோ லென்னை வகுத்தாரே யுன்மகவாய் மகவா யுனக்கு மாய வுருவெடுத்து உகமே ழறிய உதித்து வளருகையில் பள்ளியிலே சென்று படிக்கின்ற நாளையிலே தெள்ளிமையச யுன்பேரைச் செய்பென்றான் வாத்தியானும் உடனே நான்மாறி ஒருஅசுரன் பேரதையும் தடமே லுரைத்தால் தருணமது காத்திடுமோ படைத்த குருவின் பருநாமஞ் சொன்னதுண்டால் சடத்தை மிகக்காக்கத் தருண முதவிசெய்வார் ஆனதாற் பெரிய அரிநமோ அல்லாது மானமில்லாப் பாவி மாபாவிச் சூரனுட ஏற்ற பேரான இரணிய நமாவெனவே சாற்றக் கூடாது தானிதுவே சொன்னவுடன் வாத்தி யுன்னோடு வந்துவளங் கூறிடவே பார்த்தென்னை நீயும் பற்கடித்துச் சொல்லெனவே இறுக்கி நெருக்க இசையாமல் நான்மாறி உறுக்கிப் பெரியோன் உற்ற அரி யோன்பேரைச் சொல்லவே நீயும் சொன்னஅரி யெங்கேஎன்றாய் வல்லப் பொருளான மாய அரியோனும் எங்கெங் குமாகி எவ்வுயிர்க்கும் தானாகி அங்கெங் குமாகி அளவுக் களவாகி நிரந்தரமா யெங்கும் நிறைந்த சொரூபமதாய்ப் பரப்பிரம்மமாய் நிற்பார் பாரஅரி யென்றேனே கோணி நீவாடி குருவென்ற உன்னரிதான் தூணிலு முண்டோசொல் என்றே எனைப்பார்த்துக் கேட்கநா னுண்டெனவே கிறுங்காமல் சொல்லிடவே வாடகணையால் நீயும் வாயில்நடை தன்னில்நிற்கும் தூண்பேரில் வெட்டச் சிங்கமாய் நான்குதித்து வீண்கொண்டப் பாவுயுனை வெய்யோ னடைவதிலே இடைநடையில் வைத்து என்ற னொருநகத்தால் குடல்நெளியக் கீறிக் கொன்றேனா னுன்னையுமே உயிர்நெகிழு முன்னே உன்னுடைய கண்முன்னின்று செய்த யுத்தத் திறன்சொன்ன அப்போது உன்னாலே யென்னை உயிரழிக்க ஏலாது முன்னா லுன்னகத்தில் உற்றமலைப் பத்ததனைச் சேர்த்துப் பதித்துச் செய்ய நகமாக்கிக் கீற்றுநீ செய்தாய் கெறுவிதமா யல்லாது ஏலாது உன்னாலென்று இயம்பவுட னான்மாறி மேலாகப் பின்னும் விளம்பினதை நீகேளு பத்து மலையைப் பருந்தலையா யுனக்கு எத்திசைகள் மெய்க்க ஏற்றதிகக் கைத்திறமும் கைத்திறமும் வில்திறமும் கணையாளி வாள்திறமும் புத்திரருங் கூடப் பிறப்போர்கள் தந்திறமும் மெத்தப் பவிசும் வேண்டும் படையோடே கொற்றவனா யுன்னைக் குவலயத்தி லேயருளி உன்னிடுக்கத் தாலே ஒருராம பாணமதால் கொன்னுன்னை யன்றின்று கூறுமொழி கேட்பேனான் என்றே யுனக்கு இருந்தவுயி ருமழித்து அன்றே கிறதா யுகமு மழித்துமிகப் பின்னுந் திரேதா பெரும்புவி யில்நீயும் மன்ன னிராவணனாய் பாவிநீ ராவணனாய் மற்றும் நிகரொவ்வா வாய்த்ததம்பி தங்களொடும் சேனைப் படையுடனே செல்வரோடு நீபிறந்து வானலோ கம்வரைக்கும் மாபாவி யாண்டனையே ஆண்டிருந்து மல்லாமல் ஆதிசீதா லட்சுமியை மாண்டிறந்து போங்காலம் மாபாவி நீயவளைக் கொண்டுபோ யன்னுடையக் கோட்டையதுள் வைத்தனையே மன்றுதனில் நானும் மாதைவிடு வென்றுசொல்லி வேண்டுகின்ற புத்தி விதவிதமாய்ச் சொன்னேனே கூண்டுன்றன் தம்பி கும்பன் விபீஷணனும் நாரா யணனுடைய நல்லசீதா லட்சமியை ஆராலே கூடும் அருஞ்சிறையில் வைத்திருக்கப் பாவிநீ வம்பால் பழிக்கிரையாய்ப் போகாதே கூவுமொழி சீதைதனை கோட்டைவிட் டனுப்பிவிடு மாதை விடாதே வம்புசெய்தா யானாக்கால் பாதகா வுன்னுடைய பவிசெல்லாம் போகுமெனச் சொன்னதம்பி மாரைச் சொல்லால் மிகத்துரத்திச் சின்னஞ் சிறுவன் தசரதனார் பாலனுடப் பெண்ணவளாஞ் சீதையெனும் போகச்சொல் லென்றனையே மண்ணாள வேணுமென்றால் வணங்கிப் பணியென்றும் அல்லாதே போனால் அலக்கழி வாகுமென எல்லாம் பெரிதாய் என்னோ டுரைத்தாயே பார்த்தால் சிறுவன் பைங்கிளியாள் தன்புருஷன் காற்றா னதிற்பறக்கும் கடிய துரும்பெனக்கு அவனுடைய பெண்ணாம் ஆதிசீதா லட்சுமியாம் இவளுடையப் பேரால் இராச்சியங்கே டாயிடுமாம் ஆமோடா நீங்கள் அரக்கர் குலமோடா போமோடா என்றன் பூமுகத்தில் நில்லாதே என்றே யெனையும் இழப்ப மிகப்பேசி அன்றே யவர்பேச்சை அல்லவென்று தட்டிவிட்டாய் அப்போ தவர்கள் அன்பாக என்னுடைய செப்போடு வொத்தத் திறமெல்லாஞ் சொல்லிடவே சின்னக் குழந்தையென்றுஞ் சீதையொரு பெண்ணெனவும் மன்னவனே யுன்மனதில் வைத்துமிகக் கொள்ளாதே நாட்டுக் குடைய நாரணரே ராமனென்றும் கூட்டுக் கிளியானக் கோதைசீதா லட்சுமியாள் முட்டாளா வுன்றன் முழுநீசப் புத்தியினால் அட்டாள பூமி அடக்கியர சாளுகின்ற பகுத்தைக் குலையாத பழிக்கிரையாய்ப் போகாதே தொகுத்த வுரைபோலே சீதைதனை விட்டுவிடு என்றுரைத்தார் பின்னும் இருவ ருன்தம்பியர்கள் அன்று வுனக்கு அதிகக்கோப முண்டாகி என்னுடைய கண்முன் இப்போது நீங்கள்நின்றால் உன்னிருபேர் தங்கள் உற்றச் சிரசதையும் அறுத்து வதைப்பேன் வனமதிலே போயிடுங்கோ மறுத்து உரையாமல் வனமதிலே போயிடுங்கோ என்றாயே நீயும் இருவரையு மப்போது அன்றே யவர்கள் அயர்ந்து மிகவிருக்க அப்போது என்னுடைய ஆதிசீதா லட்சுமியை நற்போ டுயர்ந்த நாயகியை நான்தேடி அனுமன் தனையும் அங்கே அனுப்பிவைத்துத் தனுவான வாளி தார்குழற்குத் தானீந்து உன்கோட்டை வாசலிலே உடனேநான் வந்துநின்று என்கூட்டி லான ஏற்றசீதா லட்சுமியை விடுநீ யென்றேனே வீணாய் கேளாமல் படுவ தறியாமல் படையெடுத்தா யென்னோடு அப்போதுன் தம்பி ஆன விபீஷ்ணனும் நற்போடு என்னை வந்துமிக நவ்வியவன் பொல்லாத பாவியுடன் பிறந்ததோ சங்கழித்து எல்லாம் பொறுத்து எனையாண்டு கொள்ளுமென்றான் நல்லதுதா னென்று நானவனை யுமேற்றுப் பொல்லாத பாவியென் பெண்ணைவிடு என்றேனே பாவிநீ கேளாமல் படையெடுத்து வந்தனையே தாவிநீ விட்டச் சரங்களெல் லாந்தடுத்து என்கை யினாலே எடுத்து வொருபாணம் சங்கையுட னெய்து தலையறுத்தே னுன்றனையும் உன்னா லுன்படைகள் உயிரழிந்து மாண்டபின்பு முன்னா ளுரைத்த மொழிகேட்டே னுன்னோடு அப்போது பாவி அதற்கேது நீயுரைத்தாய் இப்போது என்னுடைய ஏற்றதம்பி தானொருவன் உன்னோடு சேர்ந்து உயிர்ப்பெலங்கள் தானுரைத்துச் சொன்னதா லென்னுடைய சிரசறுத்தா யல்லாது ஏலுமோ ராமா இழப்பம்பே சாதேயென்றாய் மாலும்நா னப்போ மகாகோப மாய்வெகுண்டு சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று மட்டிப் பயலே மாறிப்பின் னேதுரைத்தேன் உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப் படுத்தியல்லோ கொன்றாய்நீ யென்று கூறினா யின்னமுனை இன்னம் பிறவி ஏற்றதுரி யோதனனாய் துவாபர யுகத்தில் தோன்ற உனையருளிப் பவரா யுனக்குப் பக்கத் துணையாக ஒருநூறு பேராய் உலகில்மிக நீதோன்றி இருபேர்க்கும் நான்பொதுவாய் இருந்து வுனைவதைத்து இன்றுரைத்தப் பேச்சு யானன்று கேட்பேனென அன்று உனதுடைய அன்னசுற்றம் வேரறுத்து உன்னுயி ரைமழித்து உற்றயுக முமழித்து என்னுடைய லட்சுமியை யான்மீட்டு என்னுள்வைத்து உற்ற திரேதா யுகமழித் துன்றனையும் சுத்ததுவா பரயுகத்தை தொல்புவியில் தோணவைத்தேன் பிறந்தாய்ப் புவியில் பிறப்பொரு நூறுங்கூட அறந்தான் பெரிய ஐவர்களு மங்குதித்தார் அப்படியே நீபிறந்து ஆளுகின்ற நாளையிலே முப்படியே நானும் உகத்தில்கோ பாலனெனப் பாலனென வுதித்து பாண்டவர்க ளோடிருந்து தூலமொன்று வீமனுக்குச் சொல்லியுனைச் சங்கரித்தேன் சங்கரித்து உன்னைச் சகுனி யிழுக்கையிலே பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிகக்கேட்டேன் அப்போது நீயும் அகமகிழ்ந்து கொள்ளாமல் இப்போது வீமன் எனைக்கொன்றா னல்லாது ஏலுமோ போடா இடையா எனவுரைத்தாய் மேலும்வந் தயுகத்தில் மேட்டிமையா யுன்னையிப்போ தன்னால் பிறக்கவைத்து தன்னா ழிவையென்று சொன்னே னானுன்னைச் சொன்ன மொழிப்படியே உன்னால் குதித்து உற்ற கலியனென இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில் பார்மீதில் நானும் பரதேசிப் போலிருந்து போரேது மில்லாமல் பொறுதி யுடனிருக்கக் கர்ம வயசுனக்குக் காலஞ் சரியாகி வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே

கலி முடிவு

முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும் மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத் தத்துவமும் எல்லாம் நீயிப்போ என்முன் னெடுத்துவைத்துப் பொல்லாத வனேநகரம் புக்கிடுநீ யென்றனராம் மாறி யுரைக்க வாய்மொழிக ளில்லாமல் ஊறிக் கலியன் உடக்கடித்து வைத்தனனே எல்லா வரமும்வைத்து என்றன் முடியும்வைத்து பொல்லாப்பு மானதொருப் பொய்கள வுமுருட்டும் தந்திர மாஞாலத் தத்துவங்க ளானதுவும் அந்திர மதான அன்னீத வஞ்சனையும் மாய்கை பலதும் வளக்கோர வாரமதும் சாய்கை பலதும் சர்வபொல்லாப் பானதெல்லாம் என்னோடு கூட யானு மதுகூட வன்னகரம் புக்கிடுவோம் என்றுவரம் வைத்தனனே வைக்க அவனுடைய மாய்மால மாய்கையதும் பொய்க்கலிய னுயிரைப் பொதிந்துத் திரையாக ஆயிரத்திரு நூறு அணியாய்ப் பவஞ்சூடித் தீயிரத்த மான தீரா தருநரகில் சுற்றி யெடுத்துத் தூக்கிக்கொண் டேயவளை இத்தனைநா ளும்நம்மை இரட்சித்த இராசனென்று மாய்க்கையெல் லாங்கூடி வளைந்தவ னைத்தூக்கிப் பேயலகை வாழும் புழுக்குழிக் குள்ளாக முக்கி நிமிர்ந்து மிதக்காமல் மாய்கையெல்லாம் தாக்கி யிருக்கத் தடதடெனச் சேடனது நிரந்ததை மூடி நிரத்தியதே யம்மானை பரந்தந்த சேடன் பாரைநிரப் பாக்கியபின்

தர்ம யுகம்

உற்ற வைகுண்டர் உறுசங் கூதினரே வெற்றியாய்ச் சங்கு விரைவாக ஊதிடவே எத்திசை யிரேழும் இந்தசங் கோசைமிக கற்பு நெறியானக் கடிய பலவகையும் நல்லோர்க ளான நாடு மனுவோரும் நல்பூமி நல்விருட்சம் நல்மிருக மூர்வனமும் கீழ்மேல் நடுவுங் கிரணமண்ட பமூன்றில் நாள்மேல் பெரிய நல்லவகை யானதெல்லாம் தன்ம முதல்நீதம் தவசு நிலைமைமுதல் நன்மை பலதும் நாடிமிக வந்ததுவாம் எல்லாம் வைகுண்டர் இட்டசத்த மீதில்வந்து நல்லாகக் கண்டு நாரணரைத் தான்போற்றி வைகுண்ட சுவாமி வரவேணு மென்றுசொல்லி மெய்கொண்ட ஞான மிக்கத தவம்புரிந்தால் வந்துசந்த மொன்றில் வரவழைப்போ மென்றுசொன்னச் செந்துயிர்க் காக்கும் சிவகுண்டம் வந்தீரோ தன்ம வைகுண்ட சுவாமிவந்தா ரென்றுசொல்லி நன்மை பலசெந்தும் நன்னதிகப் பட்சிகளும் பசுமைக் குணமான பலமிருக வூர்வனமும் கசுவிரக்க மானக் கற்றாவின் தன்னினமும் நால்வேத நீதம் நாடுகின்ற சாஸ்திரமும் சில்வாடை பிச்சி செந்தா மரைமலரும் தங்கநவ ரத்தினமும் சமுத்திரத்து நல்வகையும் கங்கைக் கண்ணாளும் கமலப்பூ வாணிமுதல் தர்ம மதும்போற்றி சுவாமி யெனத்தொழுமாம் முழித்த மனுக்களுக்கும் மொய்குழலார் தங்களுக்கும் களித்தே விழிஞானக் கண்ணுமிகஅருளி நல்ல மனுக்களுக்கு நாலுவர முங்கொடுத்துச் செல்ல மனுக்கள் தேகமது பொன்னிறமாய் கல்வித் தமிழ்ஞானக் கலைக்கியா னமுதல் நல்விச் சிறப்பாய் நாடியவர்க் கீந்து தெய்வ மடவார் வரவழைத் தேழ்பேர்க்கும் பெற்ற மதலையெல்லாம் பிரமாண மாய்த்தெரிந்து தத்தியா யேழ்பேர்க்கும் தரந்தரமாய்த் தானீந்து வைகை தவிலிறந்த மக்கள்வரை நாரணரும் தையலவ ரேழ்பேர்க்கும் தான்தெரிந் தீந்தனரே ஏழுபேர்க் குமதலை இனமினமாய்த் தான்கொடுத்து வாழுங்கோ புவியில் வயதுபதி னாறெனவே எல்லோரும் நன்றாய் இருந்து வொருஇனமாய் நல்லோராய்ச் சாகாமல் நீடூழி காலமெல்லாம் ஆணுபெண் ணுடனே அதிகப்பல பாக்கியமும் காணக்காண நீங்கள் கௌவையற்று வாழுமென்றார் பட்சி பறவை பலசீவ செந்துகட்கும் அச்சமில்லாப் புவியில் அல்லல்வினை யில்லாமல் பெற்றுப் பெருகிப் பிதிரெல்லா மோரினம்போல் ஒத்து மிகக்கூடி ஒருதலத்து நீர்குடித்து வாழ்ந்திருங்கோ தர்ம வையகத்தி லென்றனராம் சார்ந்திருங்கோ வென்று தாமன் விடைகொடுத்தார் நல்லபூச வாச நளிர்விருட்ச மானதுக்கும் அல்ல லகற்றி அமர்ந்துமிக வாழுமென்று தில்லையா டும்பெருமாள் சொன்னா ரதுகளுக்கு புற்பூடுங் கூடிப் பொருந்திமிக வாழுமென்று நற்பூ டதற்கு நவின்று விடைகொடுத்தார் அசையாமல் வானம் அதுநேர் நிலவுடனே பிசகான தில்லாமல் பொழுதுமிகச் சாயாமல் நேராக வாழுமென்று நெடியோன் விடைகொடுத்தார் வருணனுக்கும் நல்ல வாக்கு மிகக்கொடுத்துத் தருண மதுபார்த்து சாற்றியிரு என்றுரைத்தார் வாயு வதற்கு மரைபோல் வழங்கெனவே வீசு புகழ்நாதன் விடைகொடுத்தா ரம்மானை நீதமது மூன்றும் நிலையாக நில்லுமென்று சீதக் குருநாதன் சொன்னா ரதுகளுக்கு மானுவ தர்ம வரம்பு தவறாமல் நானுப தேசம் நவின்றதுபோல் நில்லுமென்றார் பூமகள் வாணி பொருந்திக் கலைபுரிந்து சீர்முக தர்மச் சீமையி லும்வாழ்ந்து மகிழ்ந்திரு மென்று மாய னருள்புரிந்தார் குவிந்து மலர்மகளும் கொண்டாடிக் கொண்டிருந்தாள் கங்கை முதலாய்க் கனகரத்தி னாதிகளும் சங்கையுட னீங்கள் தன்னால் துலங்கிமிக வாழுவீ ரென்று வரமு மிகக்கொடுத்து என்னென்ன பாக்கியங்கள் எல்லா மிகத்தழைத்துப் பொன்னம் பலம்போல் பொருந்திமிக வாழுமென்று நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார் வல்ல புவிக்கு வாழ்வுவர முங்கொடுத்து நல்ல வைகுண்டர் நாரா யணர்மகற்கு வல்ல மகற்கு வாய்த்தமுடி யுஞ்சூடிச் செல்ல கலியாணம் செய்யவே ணுமெனவே வைகுண்ட ரான வாய்த்தகுரு நாதனுக்கு மெய்குண்ட ரான விமலக்குரு நாதனுக்கு நாதக் குருவான நாரா யணமணிக்கு சீதமங்கை மார்கள் தேவிதெய்ட கன்னியரை கன்னியரை நன்றாய்க் கலியாண மும்புரிந்து மன்ன ரவரவர்க்கும் மாலை யுடன்புரிந்து பொன்னம் பலர்க்கும் பெரிய பொருளதுக்கும் தன்னம் பெரிய சதாபிரம னானவர்க்கும் நாதன்மார்க் கெல்லாம் நல்ல மணம்புரிந்து மாதவர்க ளான வாய்த்ததே வாதிகட்கும் ஆதவ நாதன் அரிகேச வன்தனக்கும் இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடிச் செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங் கொருப்போலே சரசு பதிமாது தண்டரள சுந்தரியும் விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும் வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும் ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலா ரேழ்பேரும் வள்ளி தெய்வாணை வாயீசொரி யுடனே தெள்ளிமையா யுள்ளத் தேவி பராபரையும் இந்தமா தர்கள் வந்தபோ திலே யாகியத் தெய்வமா தர்கள் முந்தநாங் களு மீன்றபா லரை முற்றுமா தவம்போல வளர்த் திடும் சிந்தர்மா மணி தெய்வநா யகி தேவி காளி வராகி சுந்தரி இந்த மங்கள மானதிற் கண்டிலேம் öங்கள் நாயகா என்றவர் போற்றினார் போற்றுமா தரைப் பார்த்துநா தனும் போத மாமென வரமிது கூறுவார் சாற்றுமா தரே தைய லேழ்வரே சந்த மாகிய அந்தரி யானவள் பார்த்துன் மைந்தரைக் காத்திடா மலே பாலரண் டுயி ரிப்படி யானதால் ஏற்றுக் கௌவையாய் வீற்றிருக் கிறாள் எண்ணந் தீர்த்தவள் தன்னை யழைக்கிறேன் பெண்ணேகே ளுன்றன் பிள்ளைரண்டு தன்னுயிரைக் கள்ளக் கவுசலமாய்க் கரிகாலச் சோழனவன் கொன்னதினாற் காளி கூண்ட மனமிடைந்து என்னிடத்தில் வந்து இவ்வளமை யுமுரைத்துப் பாலர் முழித்துப் பரம்பெரிய வைகுண்டரும் சீலமுள்ள தர்மச் சீமையர சாளுகையில் வருவே னதுமட்டும் வடவா முகமதிலே குருவே துணையெனவே குவிந்திருப்பே னென்றிருந்தாள் இப்போ தவட்கு இங்குவர ஞாயமுண்டு நற்போடு வொத்த நல்லபர காளியைத்தான் அழைக்கிறே னென்று ஆதி நினைக்கலுற்றார் பிழைக்கிறே னென்று பெரியகுல மாகாளி உடன்வந்து நாரணரை உவந்து பதங்குவித்துத் திடன்வந்து நின்று சிவனை யடிதொழுது பாலரெல்லா முன்றன் பாதமது சேர்ந்தாரென்று மாலவரே யென்றன் மனது மகிழ்ந்துதையா நாரணரு மெச்சி நன்றா யகமகிழ்ந்து காரணம தாகக் களிகூர்ந் தினிதாக வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும் கைகண்ட நல்ல கலியாண முமுகித்து மணிவை குண்டருக்கு மாமகுட முஞ்சூட்டி அணியா பரணம் அநேக மெடுத்தணிந்து தங்கக் குல்லாவம் தளிருநிறச் சட்டையிட்டுப் பெண்கள் குரவையிடப் பொன்மா லையுஞ்சூடிப் பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு நன்னீர்க ளாடி நாரணக் கண்மணிக்கு ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டமுடன் கோல மடவார்கள் குக்குளித்து நீராடிப் பட்டுப் பணிகள் பரிமளங்க ளும்புரிந்து கட்டு முறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய் தேவர்களு மூவர்களும் திசைவென்ற மன்னர்களும் மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும் நான்முகனும் வேத நல்ல மறையோரும் வானுகமு மண்ணகமும் மன்னகமு மொன்றெனவே எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன் நல்லோர்க ளெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள் தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள் மருப்புகழுஞ் சிங்கா சனத்தில் மகிழ்ந்திருக்க போவோ மெனவே பெரியவை குண்டரையும் கோவேங் கிரிபோல் அருவைரத மீதேற்றி தேவாதி யெல்லாம் சிவசிவா போற்றியெனச் சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத் தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர மெய்வதிந்த சான்றோர் மொகுமொகென வேகூடிக் கட்டியங்கள் கூறிக் கனகப்பொடி யுந்தூவிக் கெட்டிகெட்டி யென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர வாரி சங்கூத வாயு மலர்தூவ நாரி வருணன் நல்லந்தி மலர்தூவ இந்தக் கொலுவாய் எழுந்துரத மீதேறி சிந்தர் மகிழச் சிவமுந் திருமாலும் கூட ரதமீதில் கூண்டங் கினிதிருந்து லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு நேராக வந்து நெடியோன் பதிதவிலே சீராய்ப் பதிமுடுகச் செகலதுவே தானீங்கி அமைத்து அலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும் சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும் மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும் குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்க ளுந்தோன்ற வாரியது நீங்கி வைத்தலக்கில் போயிடவே சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றிச் சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம் யாம முறையாய் அங்கே குதித்திடுமாம் என்னென்ன யாமம் ஏலமே யிட்டதெல்லாம் பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால் நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல் குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார்

பட்டாபிஷேகம்

இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி முப்பத்தி ரண்டறத்தால் முகித்தசிங் காசனத்தில் செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும் ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்தசிங் காசனத்தில் மறுமஞ்ஞ ரெதிரி வையகத்தி லில்லாமல் விறுமஞ்ஞ ரான வெற்றிவை குண்டருமே சிங்கா சனமிருந்து தெய்வச்செங் கோல்நடத்தி பொங்கா ரமான புவிதர்ம ராச்சியத்தில் ஆளுவா ரென்ற ஆகம நூற்படியே ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி வாழவே ணுமெனவே வாய்த்தசிங் காசனத்தில் ஆளவை குண்டர் அவரிருந்தார் பொன்மாதே

அய்யா அருள்வாக்கு

ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார் மக்களே நீங்க ளெல்லாம் வாழ்பொன்னம் பதியிற் சென்று முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர் வாழுவீர் தாழ்வில் லாமல் மக்களுங் கிளைகள் கொஞ்சி நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து ஆளுமே யுங்கள் தம்மை அன்புட னலையா வண்ணம் உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால் தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர் என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன் பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித் தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர் மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல் நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார் மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல் பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார் தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும் மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும் எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும் செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும் சிங்கார மாகத் தேன்போல் மரைவீச சான்றோர்க ளேவல் தமதுள் பணிமாறக் கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக் கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து பாவித்து நித்தம் பரமவை குண்டரையும் சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும் ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும் நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச் சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள் கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார் ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம் பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார் தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும் பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர் நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார் ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம் கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும் தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம் மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர் பருதியு மதியெனப் பவந்து சேவனர் கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர் அருதியு மலர்மகள் அணிந்து பூவினர் கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர் பொன்முக வருளது பொதுமி யாவியே அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு இன்முக மதிலு மிருந்து லாவியே பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர் முதமுக வானவர் மூன்றென வொன்றினர் சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர் உதவென மனமு முவந்து லாவியே நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர் சீரணி யுமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ காரணக் கன்னி யானக் கமலப்பூ மாதும் வாழ பூமாது வானபக வதியும் வாழ பொன்மாது சரசுபதி புரிந்து வாழ நாமாது வானபூ மடந்தை வாழ நாகரிகத் தேவியர்கள் நலமாய் வாழ போர்மாது வானமா காளி வாழ பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ சிவவைந்த ராசருமே சிறந்து வாழ மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி மாயனுட முகம்நோக்கி மாது தானும் தீதகலும் நாயகமே சிறந்த மாலே தேசமதி லுமக்கெதிரித் தோன்றிற் றென்று நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும் நிந்தனைகள் படுவதெனக் கறியச் சொல்வீர் ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும் இத்தனையு மெடுத்துரைக்க இசைவாள் பின்னும் பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றிப் பொன்மானே யெனதுடைய தேனே கண்ணே இன்னுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும் எழுபிறவி செய்தவனை யிசைந்து பார்த்தும் நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம் ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர் பின்னுமுமக் கெதிரியின்ன முண்டோ சொல்லும் பெரியகுரு வெனப்பணிந்து போற்றி னாளே போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின் பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன் சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக் கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக் கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும் வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ மாதேநீ கேளுயீ ரேளு பூமி மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள் சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச் செகவீர சாலமத னேக முண்டு பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும் பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர் வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம் இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம் மனுவோரு முனிவோரும் வான லோக மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார் இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம் பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன் மாயனுரை மனமதிலே மாது கேட்டு மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள் தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத் திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே நாயநெறி காணாத அடிமை போல நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி ஆயருமை நாயடியா ளின்று கண்டேன் அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே என்றாதி யிருகையால் மாதை யாவிப் புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப் பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை வையகத்து மனுவோர்க ளறிய மாயன் தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித் தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன் நாதனருள் மறவாத இராம கிருஷ்ண நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச் செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே வாறான கதைவகுத்த நாதன் வாழ வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ வீறான தெய்வசத்தி மடவார் வாழ வீரமுக லட்சமியும் விரைந்து வாழ நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர் நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர் ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம் திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத் திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர் எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம் நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம்

அய்யா உண்டு

divider